.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 29 December 2013

2013ல் இறைவன் அழைத்துக் கொண்ட கலைஞர்கள்...?





 2013ம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகனுக்கு சோகமான ஆண்டாகவே இருந்து. தமிழ் சினிமாவை தனது சிறப்பான பங்களிப்பால் அலங்கரித்த பல ஜாம்பவான்களை இறைவன் தன்னகத்தே அழைத்துக் கொண்டான். அவர்களில் சில முக்கியமானவர்கள் பற்றி இங்கே நினைவு கூர்வோம்...


ராஜசுலோச்சனா:


கருப்பு வெள்ளை சினிமா காலத்தின் கனவு கன்னி. எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்குமே பொருத்தமான ஜோடியாக கருதப்பட்டவர். இந்திய மொழிகளில் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அரசிளங்குமரி, குலேபகாவலி, ராஜாராணி, சேரன் செங்குட்டுவன், ரங்கோன்ராதா, தாய் மகளுக்கு கட்டியதாலி, நல்லவன் வாழ்வான் போன்றவை அவர் நடித்த முக்கிய படங்கள். நாட்டியத்தின் பல பரிமாணங்களை கண்டவர். தனது 75வது வயதில் அவர் மரணிக்கும் வரை நாட்டியம் கற்றுக் கொடுத்தார். ஆடவும் செய்தார். அமெரிக்க குடியுரிமை பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெயரும் இவருக்கு உண்டு.


பி.பி.ஸ்ரீனிவாஸ்:


தனது வெண்கல குரலால் தமிழ் சினிமாவை கட்டிப்போட்டவர். ஜாதகம் படத்தில் அறிமுகமாகி பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஸ்ரீனிவாஸ் ஒரு சாப்பாட்டு பிரியர் கம் பேனா பிரியர். அவரது பாக்கெட்டில் எப்போதும் பத்து பேனாக்கள் இருக்கும். நல்ல ஓட்டல்களாக தேடிபிடித்து போய் சாப்பிடும் வழக்கம் உள்ளவர். இன்றைய செம்மொழி பூங்கா முன்பு ட்ரைவ் இன் உட்லண்ட்சாக இருந்தபோது அதுதான் அவருக்கு பிடித்த இடம். இரண்டு லட்சம் கவிதைகளை எழுதி வைத்துள்ளார். 8 மொழிகளில் அவருக்கு பேசவும், எழுதவும் தெரியும். காலங்களில் கரைந்த இந்த வசந்தம். எப்போதும் மணம் வீசிக்கொண்டே இருக்கும்.


டி.கே.ராமமூர்த்தி:

திருச்சியை சேர்ந்த டி.கே.ராமமூர்த்தி ஒரு வயலின் வித்வான். எம்.எஸ்.விசுவநாதனுடன் இணைந்து 700 படங்களுக்குமேல் இசை அமைத்தார். பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து தனியாக 20 படங்கள் வரை இசை அமைத்தார். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தார். டி.கே.ராமமூர்த்திக்கு 11 குழந்தைகள் அதில் 7 பெண்கள். 89வது வயதில் மரணம் அடைந்தார். விஸ்வநாதன்&ராமமூர்த்தி இரட்டையர்கள் திரையிசை சரித்திரத்தில் சாதித்த சாதனைகளை இன்றுவரைய எவராலும் முறியடிக்க முடியவில்லை.


டி.எம்.சவுந்தராஜன்:

எம்.ஜி.ஆர் அரசியலிலும், சிவாஜி நடிப்பிலும் சிகரத்தை தொட தன் குரல் கொடுத்து உதவியர் டி.எம்.சவுந்தர்ராஜன். சவுராஷ்டிரத்தை தாய்மொழியாக கொண்டவரின் நாடி நடிப்புகளில் ஓடியது தமிழிசை. 100 சதவிகிதம் ஆண்மைகுரல் கொண்ட ஒரே பாடகர். 1950 முதல் 1980 வரை தன் கம்பீரகுரலால் தமிழ் மக்களை கட்டிப்போட்டவர். திரையிசையிலும், பக்தி இசையிலும் தனக்கென தனி பாணி அமைத்தவர். ஒரு தேர்ந்த நடிகராகவும் தன்னை நிரூபித்தவர். அவரது இழப்பு திரையிசை உலகின் ஈடுசெய்ய முடியாத இழப்பு. உலகில் காற்று இருக்கும் வரை சவுந்தர்ராஜனின் கானம் அதில் கலந்திருக்கும்.


வாலி:

திருவரங்கம் டி.எஸ்.ரங்கராஜன் என்கிற வாலி திரையிசையின் ஜாலி கவிஞன் 5 தலைமுறை ஹீரோக்களுக்கு ஓப்பனிங் சாங் எழுதியவர், அகில இந்திய வானொலியில் பணியாற்றத் தொடங்கி தன் தமிழால் அகிலத்தையே வென்றவர். ஆயிரம் படங்களில் 15 ஆயிரம் பாடல்கள் வாலியின் வாலிப வரிகளால் உருவானது. திரைப்பாடல்களோடு காலத்தால் அழியாத இலக்கியங்களையும் படைத்தார். பார்த்தாலே பரவசம், ஹே ராம். சத்யா, பொய்கால்குதிரை படங்களில் நடித்தார். வடமாலை என்ற படத்தை இயக்கினார். வாலியை இழந்த திரையிசை உலகம் தாலியை இழந்த தாரகையாக தவிக்கிறது.


லால்குடி ஜெயராமன்:

2013ம் ஆண்டு திரையிசை உலகத்துக்கு பெரும் இழப்புகளை தந்த ஆண்டு. அடுத்தடுத்து இசை ஜாம்பவன்கள் மறைந்த ஆண்-டு. லால்குடி ஜெயராமன் கர்நாடக இசை உலகின் சக்கரவர்த்தி. லால்குடி கோபால அய்யர் ஜெயராமன் என்பதின் சுருக்கம் லால்குடி ஜெயராமன். வயலின் வித்வான். பத்மஸ்ரீ உள்பட பல விருதுகளை குவித்தவர். மிகச் சில திரைப்படங்களுக்கே இசை அமைத்திருக்கிறார். 2010ம் ஆண்டு சிருங்காரம் என்ற தமிழ் படத்திற்கு இசை அமைத்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். அதன் தொடர்ச்சியா இன்னும் சில படங்களுக்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டிருந்தார். காலம் அதற்கு அனுமதிக்கவில்லை.


சுகுமாரி:

நாகர்கோவிலில் வசித்த பாரம்பரிய மலையாள நாயர் குடும்பத்தில் பிறந்தவர். கேரளாவிலிருந்து வந்து தமிழ் சினிமாவை அலங்கரித்த லலிதா, பத்மினி, ராகினியின் கசின் சிஸ்டர். தமிழ் படங்களில் குரூப் டான்சராக தன் வாழ்க்கையை துவக்கியவர் ஒர் இரவு படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். அதன் பிறகு தமிழிலும், மலையாளத்திலும் சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். பின்னர் காமெடி வேடங்களில் கலக்கினார். பின்னர் குணசித்திர வேடங்களில் நடித்தார். ஆயிரம் படங்களை தாண்டிய மலையாளத்து ஆச்சி இவர். 2011ம் ஆண்டு நம்ம கிராமம் என்ற தமிழ் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். அந்தப் படம் வருகிற ஜனவரி 3ந் தேதி ரிலீசாகிறது. 7வயது முதல் 72 வயதுவரை நடிப்பையே சுவாசித்து வாழ்ந்தவர் சுகுமாரி.


மஞ்சுளா:

சாந்தி நிலையம் படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி எம்.ஜி.ஆரின் ரிக்ஷாக்காரன் படத்தில் குப்பத்து பெண்ணாக ரவுசு பண்ணி சினிமாவை கலக்கியவர். எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ராமாராவ் நாகேஸ்வரராவ், ரஜினி, கமலஹாசன் என அத்தனை ஹீரோக்களுடனும் 100 படங்களுக்கு மேல் நடித்தவர். கடைசி காலத்தில்கூட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்தார். தனது 59வது வயதில் மரணம் அடைந்தார்.


மணிவண்ணன்:

கோவை சூலூரைச் சேர்ந்த எஸ்.மணிவண்ணன் ராஜகோபால் வசனகர்த்தாவாக தன் சினிமா வாழ்க்கையை துவக்கினார். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அனுபவம் பெற்று கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குனரானார். 50 படங்களை இயக்கினார். அதில் அமைதிப்படையும், அதில் வரும் அமாவாசை கேரக்டரும் மறக்க முடியாதவை. இதுதவிர 400 படங்களில் நடித்திருக்கிறார். நடிகர், எழுத்தாளர், பேச்சாளர், அரசியல்வாதி, இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட மணிவண்ணனின் இழப்பு சினிமா அறிவுஜீவிகள் உலகின் இழப்பு.


ராசு.மதுரவன்:

பூமகள் ஊர்வலம் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தவர். பத்து வருட இடைவெளிக்கு பிறகு பாண்டி இயக்கினார். கிராமத்து செண்டிமெண்டுகளை தனது களமாக கொண்டு மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக பாண்டி ஒலிபெருக்கி நிலையம் படங்களை இயக்கினார். கடைசியாக சொகு பேருந்து படத்தை முடிக்க காலம் இடம்கொடுக்கவில்லை.


ரகுராம்:

தமிழசினிமாவின் மாஸ்டர் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர். எம்.ஜி.ஆரின் டான்ஸ் மாஸ்டராக இருந்து ஏ.கே.சோப்ராவிடம் உதவியாளராக பணியாற்றி பின்பு டான்ஸ் மாஸ்டர் ஆனவர். 900 படங்களுக்குமேல் பணியாற்றியவர். கமலஹாசனின் ஆஸ்தான நடன இயக்குனர். சலங்கைஒலியில் இவர் அமைத்த நடனங்கள் இப்போதும் அவர் பெயரை சொல்லிக் கொண்டிருக்கின்றன. தசாவதாரம் உள்பட சில படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது மகள் காயத்ரியும், மனைவியுடம் டான்ஸ் மாஸ்டர்கள்தான். முதல்வர் ஜெயலலிதாவும் இவரும் ஒரே குருவிடம் ஒரே நேரத்தில் நடனம் பயின்றவர்கள்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top