.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 5 November 2013

மரணத்தைப் பரப்பும் “சூப்பர் பக்’ கிருமிகள்!

நலவாழ்வில் ஒரு தலையாய பிரச்னை, எதிர்ப்பு மருந்துகளுக்கு (ஆண்டிபயாட்டிக்) கட்டுப்படாத தொற்றுநோய்ப் பெருக்கத்தால் ஏற்படும் உயிர் பலிகள் உலகத்தில் ஆண்டுதோறும் உயர்ந்து செல்வது. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 30,000 மனிதர்கள் இறப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காரணம், எதிர்ப்பு மருந்து உற்பத்தியில் புதிய ஆய்வுகளோ, புதிய கண்டுபிடிப்புகளோ, புதிய முதலீடுகளோ அவ்வளவாக இல்லை.



                nov 5 - health


ஐ.நா. உலக நலவாழ்வு அமைப்பு ஏற்கெனவே இதுகுறித்த எச்சரிக்கையில், “கூட்டு நோய் எதிர்ப்பு மருந்துகளால்கூட வெல்ல முடியாத சூப்பர் பக் பாக்டீரியா நோய்க்கிருமிகளின் ஆதிக்கம் ஓங்கியுள்ளதால், சூப்பர் பக் பாக்டீரியாவை அழிக்கக் கூடிய புதிய நோய் எதிர்ப்பு மருந்துகள் பற்றிய கண்டுபிடிப்புகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டிய தலையாய பொறுப்பு வடக்கு நாடுகளுக்கு உள்ளது…’ என்று கூறியுள்ளது.


ஆண்டிபயாட்டிக் மருந்துகளின் முக்கிய பயன் நோய்க்கிருமிகளை அழிப்பதுதான். அவை முற்றிலும் அழியாமல் இருந்தாலும் நமது உடலில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் மூலம் ஓரளவு பரிகாரம் கிடைக்கிறது. அழியாமல் எஞ்சியுள்ள “சூப்பர் பக்’ என்று கூறப்படும் பாக்டீரியா கிருமிகள் மீண்டும் பன்மடங்கு பலத்துடன் வளர்ந்து எந்த எதிர்ப்பு மருந்துகளுக்கும் கட்டுப்படாமல் மனித மரணத்தை உறுதிப்படுத்தி வருகிறது.


ஐ.டி.எஸ்.ஏ. என்று சொல்லப்படும் அமெரிக்க தொற்றுநோய் எதிர்ப்பு சமூகம் வெளியிட்டுள்ள 2013 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 2009-க்குப் பின் இரண்டே இரண்டு நோய் எதிர்ப்பு மருந்துகளை மட்டும் வெளியிட அமெரிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாம், ஏழு நோய் எதிர்ப்பு மருந்துகளின் பயன்பாட்டுக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லையாம். அவை ஒப்புதல் பெற்று பயன்பாட்டுக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம். உலகிலேயே மிகப்பெரிய 12 பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் ஒருகாலத்தில் நோய் எதிர்ப்பு மருந்து ஆராய்ச்சியிலும் உற்பத்தியிலும் முழுமூச்சாக ஈடுபட்டிருந்தன. இன்று காலம் மாறிவிட்டது. நோய் எதிர்ப்பு மருந்து உற்பத்தியில் லாபம் இல்லை.


இன்று நான்கு மருந்து நிறுவனங்கள் மட்டுமே நோய் எதிர்ப்பு மருந்துகளின் ஆராய்ச்சியிலும் உற்பத்தியிலும் ஓரளவுக்கு கவனம் செலுத்தியுள்ளன. அவையாவன: கிளஸ்கோ ஸ்மித் கிளென், பிஃப்சர், ஆஸ்ட்ரா செனகா, மெர்க்.
என்ன காரணத்தினால் மாபெரும் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் நோய் எதிர்ப்பு மருந்து உற்பத்தியில் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்ற கேள்விக்கு ஹெலன் பவுச்சர் – ஐ.டி.எஸ்.ஏ. வெளியீட்டாளர் பதில் கூறுகையில், “நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் பொது மருத்துவப் பயன் என்பதால் அவற்றுக்கு விலை அதிகம் நிர்ணயிக்க முடியாது.


 ஆனால் அதே கவனத்தை உயிர் காக்கும் மருந்து உற்பத்தியில் செலுத்தினால் அதிக லாபம் பெறலாம்’ என்கிறார். உயிர் காக்கும் மருந்து என்பது புற்றுநோய், இதயநோய் போன்ற நோய்களுக்கான மருந்துகளாகும். உதாரணமாக ஆஸ்திரேலியாவில் கடந்த 12 ஆண்டுகளில் மருந்து கண்டுபிடிப்பு ஆராய்ச்சியில் 1.4 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் செலவிடப்பட்டு சுமார் 10,000 அணு உயிர்கள் (மாலிக்யூல்ஸ்) கண்டுபிடிக்கப்பட்டன. 2010-இல் பயன்பாட்டுக்கு ஒப்புதல் பெறப்பட்ட மருந்துகளில் சுமார் 3000 மருந்துகள் வெளிவர உள்ளன. அவற்றில் 800 புற்றுநோய் மருந்துகள், 250 இதயநோய் மருந்துகள். இவை தவிர 83 புதிய மருந்துகள் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியுள்ள ஆண்டிபயாடிக்குகள் ஆகும். இதுதான் உலக நிலை.


மருந்து உற்பத்தித் தொழிலில் இந்தியாவின் பங்கு உயர்வானதே. உலகில் தொழில்ரீதியாக மூன்றாவது பெரிய நாடாகத் திகழும் இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனத் தொழில் மதிப்பு சுமார் 21 பில்லியன் டாலர். மதிப்பு அடிப்படையில் 14-ஆவது இடம். வளர்ச்சி 13 சதவீதம். பன்னாட்டு நிறுவனங்களின் பிடிப்பில் இந்திய மருத்துவத் தொழில் வளர்ச்சி பெறுகிறது.


கடந்த ஏப்ரலில் நோவார்ட்டிஸ் என்ற அமெரிக்க நிறுவன வழக்கில், தில்லி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, மருந்து உற்பத்தியில் பன்னாட்டு நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளைக்கு ஒரு உதாரணம். ரத்தப் புற்றுநோய்க்குரிய மருந்து கிளீவி என்ற பெயரிலும் கிளைவி என்ற பெயரிலும் விற்கப்படும். அடிப்படை மருந்தான இமாடினிப் மெசிலேட் மருந்துக்கு அமெரிக்காவில் காப்புரிமை பெற்று இந்திய விற்பனைக்கு ஒப்புதல் பெற்ற ஆண்டு 2002. அன்று முதல் மேற்படி மருந்துகள் ஒரு நபருக்கு ஒரு மாதம் 2500 டாலர் (ரூ.15,000) என்ற அளவில் விற்கப்பட்டன. எனினும் அதே ஆண்டு அதே மருந்தை மாற்றுப் பாதுகாப்பு செய்முறை அடிப்படையில் ஏற்கெனவே காப்புரிமை செய்யப்பட்ட இமாடினி மெசிலேட்டை நாட்கோ என்ற இந்திய நிறுவனம் 10 மடங்கு குறைந்த விலைக்கு (250 டாலர்) விற்பனை செய்தது.


நாட்கோவைப் பின்பற்றி, வேறு பல ஜெனரிக் மருந்து நிறுவனங்கள் (காப்புரிமை செய்யப்பட்ட மருந்தை மாற்றுச் செய்முறையில் தயாரித்து விற்கும் நிறுவனங்கள்) குறைந்த விலைக்கு விற்றன. நோவார்ட்டின் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தபோது இந்திய ஜெனரிக் நிறுவனங்கள் சார்பில் புற்றுநோயாளிகள் நுகர்வோர் சங்கமும் வழக்கு போட்டது. நன்கறியப்பட்ட மருத்துவப் பொருளை ஊர்மாற்றிப் பேர்மாற்றி உருமாற்றிக் கருமாற்றிப் புதிதாகப் பெயர் சூட்டி காப்புரிமை பெறுவதை டிரிப்ஸ் (அறிவார்ந்த சொத்துரிமைச் சட்டம்) ஷரத்துக்கள் ஏற்காது என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் நோவார்ட்டிஸ் கேஸ் தோற்றுப் போனது.


எனினும் ரத்தப் புற்றநோய்க்குரிய மருந்தின் ஒரு மாதச் செலவு 150 டாலருக்குள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று வழங்கப்பட்ட தீர்ப்பின்படி நாட்கோ மேலும் விலையைக் குறைத்தது. நோவார்டிஸ் நிறுவனமும் மருந்து விலையைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தை உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது.



இப்படிப்பட்ட சூழ்நிலையில் 110ஆவது நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில், மருந்து உற்பத்தி மற்றும் விற்பனையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலைப்பாடு முற்றிலும் சரியே. அண்மையில் வெளிவந்த இந்த அறிக்கை, இப்போது இந்தியாவில் இயங்கி வரும் பன்னாட்டு மருந்து நிறுவனங்களில் மேலும் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதை தடை செய்ய வேண்டுமென்று மிகவும் வெளிப்படையாகவே எடுத்துரைத்துள்ளது. இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்கள் பெரும்பாலும் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆகும்.


இத்தகைய நிறுவனங்களை பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் டாலர் பலத்தால் கபளீகரம் செய்யத் துடிப்பதெல்லாம் சுயலாபத்திற்கும், வருமானத்திற்கும்தானே தவிர மக்களின் நலனுக்காக அல்ல.
1970களில் இந்தியாவில் 85 சதவீத மருந்துகளை பன்னாட்டு நிறுவனங்களே உற்பத்தி செய்தன. 15 சதவீதம் மட்டுமே தேசிய நிறுவன உற்பத்தி. 1990களில் நிலைமை மாறியது. இந்தியக் காப்புரிமைச் சட்டம் 1970 உதவியால் இந்திய தேசிய மருத்துவ நிறுவனங்களின் உற்பத்தியும் விற்பனையும் ஏற்றுமதியும் உயர்ந்து மருந்து உற்பத்தியில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியாவை உயர்த்தியுள்ளது. இந்திய நிறுவனங்கள் மக்கள் நலனை மனதில் வைத்து, நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி மிகவும் கட்டுப்பாடான விலையில் வழங்குகிறது.


இந்திய தேசிய நலனுக்கு எதிராக கி.பி. 2000 முதல் கடந்த ஆண்டு வரை சுமார் 4392 மில்லியன் டாலர் அந்நிய முதலீடுகள் இந்திய மருத்துவ நிறுவனப் பங்குகளாக வந்துள்ளன. 2010-13 ஆண்டுகளில் 18678.11 கோடி அந்நிய முதலீட்டில் 3 சதவீதம் மட்டுமே மருந்து ஆராய்ச்சி – வளர்ச்சிக்குச் செலவாகியுள்ளது. ஆகவே, அந்நிய நாட்டு மருத்துவ நிறுவனங்களின் இலக்கு தேசிய நிறுவன வளர்ச்சியை சீர்குலைப்பதுதான் என்று தெளிவாகிறது.


 எனினும், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியக் காப்புரிமைச் சட்டத்தின் பயனால் இந்திய மருத்துவ நிறுவனங்கள் கண்டுபிடித்த அணு உயிரிகள் (மாலிக்யூல்ஸ்) சுமார் 80 பில்லியன் டாலர் மதிப்புள்ளவை காப்புரிமையாக்கப்பட்டதால், பன்னாட்டு நிறுவனங்களுடன் சமபலத்துடன் போட்டியில் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் நலவாழ்வுத் துறை மருத்துவக் கழகங்களின் யோசனைகளையும், 110ஆவது நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையையும் புறந்தள்ளிவிட்ட இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், மைலான் – அஜிலா ஸ்பெஷாலிட்டி ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கி பன்னாட்டு மருந்து நிறுவன ஏகபோகங்களின் கைப்பாவையாக மாறி இந்திய தேசிய மருத்துவ நிறுவன வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார்.


இன்றைய தலையாய தேவை தொற்றுநோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளின் வழங்கல்தான். தொற்றுநோய் எதிர்ப்பில் புதிய கண்டுபிடிப்புகளின் தேவை புறக்கணிக்கப்பட்டால் மரணத்தைப் பரப்பும் “சூப்பர் பக்’ கிருமிகளால் பொது மருத்துவமனைகளில் தொற்றுநோய்ச் சாவுகள் மேலும் மேலும் உயரலாம். இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தும் ஆற்றல் இந்திய மருத்துவ விஞ்ஞானிகளிடம் உண்டு. பொதுத் துறையில் ஹிந்துஸ்தான் ஆண்டி பயாட்டிக்ஸ் நிறுவனம் “சூப்பர் பக்’ பாக்டீரியாக்களைக் கொல்லும் ஆய்வில் ஈடுபட்டு புதிய கண்டுபிடிப்புகளைச் செய்து இந்தியத் தேவையை மட்டுமல்ல. உலகத் தேவையையே நிறைவேற்றும் காலம் விரைவில் வரவேண்டும்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top