.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 7 December 2013

நட்பு ?

கூடிப் பழகுதலும், அடிக்கடி சந்தித்தலும், ஒருவரையொருவர் விசாரித்தலும் மட்டுமே நட்பாகிவிடாது. கூடிப் பழகாவிட்டாலும், மனதால், உணர்ச்சியால் ஒன்றுபடுவதே உண்மையான நட்பு என்கின்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.


மனித வாழ்க்கையில் காதலைவிட சிறந்தது எதுவென்றால் அம்மாவின் அன்பிற்க்கு அடுத்ததாக சிலவேளைகளில் அம்மாவின் அன்பைவிட சிறந்தது நட்பாகும்.


பாடசாலைக் காலத்தில் கிடைக்கும் நட்பு மிகவும் அலாதியானது. வாழ்க்கையின் எந்தக் கஸ்டங்களையும் அனுபவிக்காமல் அல்லது புரியாமல் அந்த பச்சிளம் வயதில் ஒருவருடன் ஒருவர் செல்லமாக சண்டைப்படுதல், கோபித்துக்கொண்டு சில நாட்கள் இருந்தாலும் அந்திம காலம் வரை பலருக்கு பாடசாலை நட்பே நீடித்திருக்கின்றது.


என் பாடசாலை நண்பர்கள் பலர் இன்றைக்கு புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளில் வசித்தாலும் தொலைபேசி மூலமும், இணைய அரட்டைகள் மூலமும் எங்கள் நட்புத் தொடர்கின்றது. நாம் பெரும்பாலும் எங்கள் கல்லூரி வீதி இனிய வாழ்க்கையை மீட்டிப்பார்ப்போம்.


இன்னொரு நட்பு வட்டம் ஊரில் உள்ள நண்பர்கள் இவர்களின் நட்பிற்க்கு பெரும்பாலும் வயது எல்லை இல்லை. என்னுடய வயதுப் பொடியள், என்னைவிட சற்று வயது கூடியவர்கள், குறைந்தவர்கள் என இந்த வட்டம் கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். ஊரில் நடக்கும் நல்லது, கெட்டதுகள், திருவிழாக்கள், கிரிக்கெட், காற்பந்து என இந்த வட்டத்துடன் அடித்த லூட்டிகள் பசுமையானவை. ஊரை விட்டு வெளியேறிய பின்னர் இவர்களின் தொடர்புகள் பெரிதாக இல்லாவிட்டாலும் மீண்டும் ஊரிற்குச் செல்லும் காலங்களில் பழையபடி சில நாட்கள் கும்மாளம் தான்.


அண்மைக் காலமாக இணையத்தினூடான நட்புகள் அதிகரித்துவந்துள்ளன. இதில் சிலரின் நட்புகள் நேரடியாகவும் சிலரின் நட்புகள் முகமறியாமலும் இருந்தாலும் நட்பு பாராட்டுவதில் எந்தக் குறைகளும் இல்லை.


பெண்களுடனான நட்பானது கொஞ்சம் வித்தியாசமானது. இது கத்தியில் நடப்பது போல் ஆபத்தானது. ஆனாலும் இலாவகமாக இந்த நட்பை நீடிப்பவர்கள் பலர் இருக்கின்றார்கள்.


வாழ்க்கையில் கஸ்டமான காலத்தில் கைகொடுப்பது பெரும்பாலும் நட்புத்தான். என்றைக்கும் நல்ல நண்பர்கள் கிடைத்தால் அதனைவிட பெரிய இன்பம் வேறில்லை.


"புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா
ந‌ட்பாங் கிழமை தரும்".

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top