.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 7 December 2013

அறிவுரை - யானை பாகனுக்கு....



கோடை வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க கேரளத்தில் பாகன்களின் மரணமும் அதிகரிக்கிறது. தனியார் தொலைக்காட்சிகளில் இதைப் பார்த்தவர்களுக்கு விலங்கு கொடூரமாகத் தெரியலாம்.


யானைகளின் தும்பிக்கை ஆசிர்வாதத்திற்கு, பயத்தையும் மீறி தலைகுனிபவர் பலர். பாகன்களுக்கு அது ஒரு பணவேட்டை. சூடாறுமுன் யானையின் சாணத்தை மிதித்தால் காய்ச்சல் வராது என்பது கேரளத்தவரின் நம்பிக்கை. யானை முடியை உடலோடு தொடுமாறு கட்டிக்கொண்டால், பேய் பிசாசு அண்டாது; ஐஸ்வர்யம் பொங்கும் என்பது ஐதீகம்.


கேரள மாநிலத்திலேயே அதிகப்படியான யானைகள் உள்ளன. எனவேதான் யானைச் செய்திகளும் அம்மாநிலத்தில் இருந்து அதிகம் வருகின்றன. அம்மாநிலக் கலாசாரப் பாரம்பரியத்தில் யானைகளுக்கு சிறப்பிடமுண்டு. பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் யானை எழுன்னுளிப்பு கட்டாயமானதாகும். பல யானைகள் நகையழகு பரிவாரத்துடன் பட்டங்கட்டி கஜகம்பீரத்துடன் தலையாட்டி நிற்பது கண்கொள்ளாக்காட்சி. யானை ஒன்றுக்கு ஒருநாள் வாடகை குறைந்தது ரூ. 5000.


யானை ஏன் பாகனைக் கொல்கிறது? யானைகளைப் புரிந்து நடக்க யானை ரசிகனாகிய மனிதனுக்குத் தெரியவில்லை என்பதே முதல் காரணம். இன்று யானைகளுக்குக் காட்டிலும் நாட்டிலும் பாதுகாப்பு இல்லை. யானை ஒரு காட்டுவிலங்கு. அடிக்கும் அச்சுறுத்தலுக்கும் பயந்தே அது சில காரியங்களைச் செய்கிறது. மற்ற விலங்குகளைவிட சற்று அதிகமாகவே யானைகள் மனித கொடூரத்துக்கு உள்ளாக்கப்படுகின்றன.


ஒரு யானைக்கு இரண்டு பாகன்கள் உண்டு. யானைகளை நல்லவர்களாக்குவதும் கொலை வெறியர்களாக்குவதும் பாகன்களையும் பாகன்களின் செயல்களையும் பொறுத்தே அமைகிறது. ஒரு நல்ல பாகன் எப்போதும் யானையின் நல்ல நண்பனாகவும் இருப்பார். யானைக்கும் இது புரிந்து அது திருப்தி தெரிவிக்கும். சம்பவங்கள் எதிர்மறையானால் விளைவும் எதிர்மறையாகவே இருக்கும். முதற்பாகனாக வருவதற்கு முன், இரண்டாம் பாகனாக இருந்து 5 ஆண்டுகள் தீவிர அனுபவம் பெற்றிருக்க வேண்டும். யானையைத் தொடாதவர்களும் யானைகளின் மனோபாவம் புரியாதவர்களும் தொழிலுக்காகப் பாகன்களாக மாறிவரும்போது, செய்கைகள் கொடூரங்களாக மாறி மனித ஓலங்கள் டி.வி. காட்சிகளில் தெரிய ஆரம்பிக்கின்றன.


தலைவர்கள் வருகையின்போது கொளுத்தும் வெயிலில் பள்ளிக்குழந்தைகள் வரவேற்க நிற்கும் ஒருநாள் காட்சி நம்மிடம் பல கண்டனங்களைப் பெறுகிறது. வெப்பத்தைக் கிரகிக்கும் கருப்புத்தோலையுடைய, மென்மையான பாதங்கொண்ட யானையைப் பலமணி நேரம், பல நாள்கள் தார் இளகும் சாலையில் நிற்கவைப்பதும் கொண்டுபோவதும், கொடூரம் இல்லையா? வனங்களுக்குள் குளுமையான சூழ்நிலையில் உலாவியும் குட்டைகளுக்குள் உருண்டு புரண்டும் சுகம் அனுபவித்த யானைகளை மனிதனின் சுய தேவைக்காக அடக்குமுறையில் அல்லலுறச் செய்வது நியாயந்தானா?


வெறிநாய் என்பது போல யானைக்கும் மதம்பிடித்தல் மனிதனுக்குக் கிலியை ஏற்படுத்துவதாகும். மதச்சுரப்பி என்பது யானைகளுக்கே உரியது. விஞ்ஞானத்தின்படி யானையின் தலையில் இருபுறமும் காதிற்கும் கண்ணிற்குமிடையே மதச்சுரப்பி அமைந்துள்ளது. வெளிப்புறத்தில் சிறுகீறல் போன்று இது காட்சியளிக்கும். இது செயல்படும் நாள்களில் அப்பகுதியைச் சுற்றி நீர்வீக்கம் ஏற்பட்டு பசைபோன்ற கருப்புத்திரவம் அதிலிருந்து வழியத் தொடங்கும். இம்மதக்காலத்தின் பராமரிப்பு முறையைப் பொறுத்தே மனித உயிர், குறிப்பாக பாகனின் உயிர்ப்பாதுகாப்பு அமைகிறது.
மதநீர் 15 நாள்கள் முதல் 90 நாள்கள் வரை ஒழுகுகிறது. கீழ்ப்படியாமை, தப்பித்து ஓடும் பழக்கம், மனிதருடன் பகை, எதையும் அழிக்கும் மனோபாவம் போன்றவை மதக்காலச் செயல்கள்.


சராசரியாக யானைகளுக்கு 20-25 வயதின் போதே மதம்பிடித்தல் உண்டாகிறது. தொடர்ந்து 60-65 வயது வரை ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ இது ஏற்படுகிறது. ஆசிய யானைகளில் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலங்களிலேயே மதம் அதிகமாக ஏற்படுகிறது. காட்டுயானையிலும் நாட்டுயானையிலும் மதம் ஏற்படும். மதத்தின் உச்சநிலையை அடைந்த யானை யாரையும் அருகில்வர அனுமதிக்காது. தீவனம் உண்ணாது. கையில் கிட்டிய எதையும் எடுத்து எதிரில் நிற்பவரை நோக்கி எறியும். மனிதனைப் பொறுத்தமட்டில் மதக்காலமும் மற்ற காலமும் ஒரேகணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதாலேயே உயிருக்கும் உடைமைக்கும் இழப்பு ஏற்படுகிறது.


மதங்கொண்ட யானையின் உடலில் குளுமையை ஏற்படுத்த வேண்டும். குளிப்பாட்டியும் குடிநீர் அளித்தும் வரவேண்டும். வெயி#ல் கொண்டு செல்லக்கூடாது. வேலையில் ஈடுபடுத்தக்கூடாது. கட்டியிட்டு ஓய்வுகொடுத்து மூன்றுமாதம் பாரமரிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக விழா மற்றும் பண்டிகைக் காலங்களும் யானைகளுக்கு மதம்பிடிக்கும் காலமும் டிசம்பர் முதல் ஏப்ரலுக்குள்ளேயே அடங்குகின்றன. நாளொன்றுக்கு ரூ. 5000 நட்டம் வீதம் 3 மாதத்துக்கு ரூ. 4.5 லட்சம் எனக் கணக்குப் பார்க்கக்கூடாது. ரூ. 10 லட்சம், 15 லட்சம் எனக்கொடுத்து யானை வாங்கி வளர்ப்போருக்கு இந்நட்டம் பெரியதாக இருந்தாலும் மதம்கொண்ட யானையால் ஏற்படும் உயிருக்கும் உடைமைக்குமான இழப்பு அதைவிட அதிகமல்லவா!

காட்டில் விரும்பியவற்றை ருசித்து உண்டு, இளைப்பாறிய யானைகளுக்கு நாட்டில் அவை செய்யும் வேலையைக் கருத்திற்கொண்டு அரைவயிறு நிறையும் அளவுக்குக்கூட உணவு அளிக்கப்படுவதில்லை. பாகனே இதற்குக் காரணமென அறிவுக் கூர்மை உள்ள யானைகள் சினங்கொள்கின்றன. பாகனின் நிலைமையோ இதைவிட மோசம். நிரந்தரத் தொழிலோ, காப்பீடு வசதியோ இல்லை. இறுதியில் யானையின் சினம் பாகனின் கொலையில் முடிகிறது.


யானைச்சாவுகளையும் யானைகளின் மூலமான மனித மரணங்களையும் எவ்வாறு தவிர்ப்பது? வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் முதல் பிரிவில் சேர்க்கப்பட்ட விலங்கு யானையாகும். யானையைத் தொந்தரவு செய்தால் 6 ஆண்டு கடுங்காவல் தண்டனையுண்டு. இச்சட்டத்தின்படி வெயிலில் அலைக்கழித்தல், பட்டினி போடுதல், காயமேற்படுத்துதல் போன்றவற்றை ஏற்படுத்துவோர் குற்றவாளிகளாவர்.


யானை வளர்ப்பில் முறையான அக்கறையுடையோரையும் பயிற்சி பெற்றோரையும் மட்டுமே பாகன்களாக ஆக்கவேண்டும். பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் யானைகளை உபயோகப்படுத்துமுன் அவற்றின் உடல்நிலை குறித்து கால்நடைமருத்துவரின் நலச்சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்படவேண்டும். யானைகளுக்கு மதம் பிடித்துள்ளதா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள இது உதவும். யானைகளைத் தொடர்ச்சியாக மூன்று மணி நேரத்துக்கு நடத்திச் செல்லக் கூடாது. நாள் ஒன்றுக்கு 30 கிலோ மீட்டருக்கு அதிகமாக நடத்திக் கொண்டு செல்லக்கூடாது. தினமும் குளிப்பாட்ட வேண்டும். பாகனுக்குக் காப்பீட்டு வசதியை யானை உரிமையாளர் செய்ய வேண்டும்.


யானை காட்டுவிலங்குதான். மனிதனின் சில சுய தேவைகளுக்கும் கொடூரங்களுக்கும் பயந்தே பல காரியங்களைச் செய்கிறது. உசுப்பேற்றிவிட்டால், யானைக்கல்ல, மனிதனுக்கே அடிசறுக்கும் என்பதை உணரவேண்டும்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top