.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 1 December 2013

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்!

 

உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?


அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.


அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.


அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.


ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான். ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.


ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான், அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.


அடிபட்டுக் கிடக்கிறான் செட்டி, அவனை அழைத்து வா, பணம் பாக்கி என்கிறான் பட்டி.


ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?


இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்


இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்.


இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.


இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?


உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது.


உதடு மன்றாடப் போய் உள்ளிருந்த பல்லும் போனாற் போல.


உபாயத்தால் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா?


பசித்தவன் எதையும் தின்பான். பகைத்தவன் எதையும் சொல்வான்.


 ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி


கடுங்காற்று மழை கூட்டும். கடும் சினேகம் பகை கூட்டும்.


வீட்டு வாசலில் காவேரி, முழுக மாட்டாளாம் மூதேவி.


குண்டு பட்டு சாகாதவன் வண்டு கடித்துச் செத்தானாம்


பண்ணிய பாவத்தைப் பட்டுத் தான் தொலைக்க வேண்டும்.


காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.


தலைக்குத் தலை அம்பலம். உலைக்கு அரிசி இல்லை.


நீரிலும் நனைய மாட்டான். நெருப்பிலும் வேக மாட்டான்.


அசை போட்டுத் தின்பது மாடு; அசையாமல் தின்பது வீடு.


ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கச் சொன்னால் நொண்டிக்குப் கோபம்.


அஞ்சு காசுக்குக் குதிரையும் வேணும். அது ஆற்றைக் கடந்து பாயவும் வேணும்.


அறுவடைக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.


மேய்த்தால் கழுதை மேய்ப்பேன். இல்லா விட்டால் பரதேசி ஆவேன்.


அன்ன நடை நடக்கப் போய் தன்னடையும் கெட்டுப் போச்சு.


குதிரை செத்ததும் இல்லாமல் குழி தோண்ட மூணு பணம்.


எண்ணம் எல்லாம் பொய், எமன் ஓலை மெய்.


என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருகிறாய்?


கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப் பாட்டா?


எள் எண்ணெய்க்குக் காய்கிறது. எலிப் புழுக்கை எதற்குக் காய்கிறது?


கோழி களவு போனதற்கு ஆடு வெட்டியா பொங்கல் இடுவார்கள்?


பூனைக்குப் பயந்து புலியிடம் போகலாமா?


சத்திரத்து சோத்துக்கு தாத்தய்யங்கார் உத்தரவு எதற்கு?


வேகாத சோத்துக்கு விருந்தாளி இரண்டு பேர்.


தானாகக் கெடுத்தது பாதி; தம்பிரான் கெடுத்தது பாதி.


தலைவலியும் தரித்திரமும் தனக்கு வந்தால் தெரியும்.


பறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.


உடையவன் பாராத வேலை உருப்படாது.


தூங்குகிற மணியக்காரனை எழுப்பினால் பழைய கந்தாயம் கேட்டானாம்.


எடுக்கிறது எருமைச்சாணி, படுக்கிறது பஞ்சு மெத்தை


ஆசை தீர அனுபவித்தவனும் இல்லை, அள்ளிக்கொடுத்து கெட்டவனும் இல்லை.


இன்றைக்கு என்பதும், நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்


அஞ்சினவனைக் குஞ்சும் விரட்டும்.


தாய் அறியாத சூல் இல்லை. மனம் அறியாத பொய் இல்லை.


வைத்தியன் பிள்ளை மருந்தினால் சாகும்.


ஆயிரம் காக்கையை ஓட்ட ஒரு கல் போதும்.


காற்றில்லாமல் தூசு பறக்காது.


காவடிப்பாரம் சுமப்பவனுக்குத் தான் தெரியும்.


எகிறி எகிறி குதித்தாலும் எட்டு பத்தாகாது.


சாட்டை அடியும் சவுக்கடியும் தாங்கலாம்
மூட்டைக் கடியும் முணுமுணுப்பும் ஆகாது.


பனி பெய்து குளம் நிரம்பாது.


பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.


நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டி சுமப்பது புல் சுமையே.


பொன்குடத்திற்குப் பொட்டு தேவையில்லை.


இழவுக்கு வந்தவளா தாலி அறுப்பாள்?


மூன்று செவிக்கு எட்டின செய்தி மூடுமந்திரம் ஆகாது.


    காலம் போகும் வார்த்தை நிற்கும். கப்பல் போகும் துறை நிற்கும். (துறை=துறைமுகம்)
 

  அறிந்தவன் என்று கும்பிட்டால் அடிமை என்று சொல்லுவதா?


    ஆற்றிலே நின்று அரகரா என்றாலும் சோற்றிலே இருக்கார் சொக்கலிங்கம்.


    சுடுகாடு போன பிணம் வீடு திரும்பாது.


    இட்டது எல்லாம் பயிராகாது. பெற்றது எல்லாம் பிள்ளையாகாது.


    வாய் நல்லதானால் ஊர் நல்லது.


    கேடு வரும் பின்னே. மதி கெட்டு வரும் முன்னே.


    காரியம் பெரிதேயன்றி வீரியம் பெரியதல்ல.


    மயிர் சுட்டுக் கரியாகாது.


    ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்காது.


    விசாரம் முற்றினால் வியாதி. (விசாரம்=கவலை)


    திரு உண்டானால் திறமையும் உண்டாகும். (திரு=செல்வம்)


    பல்லக்கு ஏற பாக்கியம் உண்டு; உந்தி ஏற சீவன் இல்லை. (சீவன்=உடல் சக்தி)


    ஆசை இருக்குது தாசில் பண்ண; அம்சம் இருக்குது கழுதை மேய்க்க.


    ஞானிக்கு இல்லை நாளும் கிழமையும்.


    ஆற்று மணலில் கிடந்து புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும்.


    தலையை சிரைப்பதால் தலையெழுத்து மாறாது.


    அரண்மனைக் கோழிமுட்டை அம்மியையும் உடைக்கும்.


    அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.


    தின்னப் படை உண்டு; வெல்லப் படை இல்லை.


    எட்டினால் சிண்டைப் பிடி; எட்டாவிட்டால் காலைப் பிடி.


வாழைப்பழம் கொண்டு வந்தவள் வாசலிலே. வாய் கொண்டு வந்தவள் வீட்டுக்குள்ளே.


    சாமி காட்டுமே தவிர ஊட்டாது.


    அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.


    இளமையில் கல்வி, சிலையில் எழுத்து.


    உலக்கைப் பூசைக்கு அசையாதவள் திருப்பாட்டுக்கு அசைய மாட்டாள்.


    கொண்டவன் தூற்றினால் கண்டவன் தூற்றுவான்.


    தெய்வம் பாதி திறமை பாதி.


    தளுக்கும் மினுக்கும் தாம்பத்தியம் ஆகாது.


    ஆங்காரத்தினால் அழிந்தவர்கள் ஆயிரம் பேர்.


    சனப்பலம் இருந்தால் மனப்பலம் வரும்.


    தாய் இல்லாத போது தகப்பன் தாயாதி.


    அரசன் குடுமியையும் அம்பட்டன் பிடிப்பான்.


    மனசாட்சியை விட மறுசாட்சி வேண்டாம்.


    கடல் வற்றிக் கருவாடு தின்ன ஆசைப்பட்டு குடல் வற்றி செத்ததாம் கொக்கு.


    கூத்தாடி கிழக்கே பார்ப்பான். கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.


    பாராத உடைமையும் பாழ், கேளாத கல்வியும் பாழ்.


    குயவனுக்குப் பல நாள் வேலை, தடியனுக்கு ஒரு நிமிட வேலை.


    பெண்ணின் கோணல் பொன்னில் நிமிரும்.


    அரைக்காசுக்குப் போன வெட்கம் ஆயிரம் கொடுத்தாலும் திரும்பாது.


    எழுதிப் பாராதவன் கணக்கு கழுதை மேய்ந்த களம்.


    அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகாது.


    முடியுள்ள சீமாட்டி எப்படியும் முடிப்பாள்.


    கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.

    அக்காள் இருந்தால் மச்சான் உறவு.


முரட்டுத்தனத்துக்கு முதல் தாம்பூலம்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top