.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 8 December 2013

ஒத்த பழமொழிகள்!

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.


· முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை.


· அடி மேல் அடி வைத்தால் அம்மியும் தகரும்.


· கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.


· எறும்பூரக் கல்லும் தேயும்.



தூக்கணாங் குருவி கூட்டைப் பார்த்திருப்பீர்கள்.அது ஒரு மரத்திலோ,செடியிலோ அல்லது கிணற்றிலோ தொங்கிக்கொண்டிருக்கும்.அதை அந்த குருவி எப்படி கட்டுகிறது? காற்று அடிக்கும்போது கூடு ஆடும்.ஆனால் விழுந்துவிடாது.அவ்வளவு பலமாக


எப்படி அந்த தூக்கணாங் குருவி கட்டுகிறது?


அது ஒவ்வொரு புல்லாக எடுத்துவந்து மிகவும் நுணுக்கமாக கட்டும்.சிறு பிழை ஏற்பட்டால் கூட அந்த கூடு கீழே விழுந்துவிடும்.மீண்டும் மீண்டும் அந்த கூடு கீழே விழுந்தாலும் குருவி தன் முயற்சியை கைவிடுவதில்லை.அதுவும் மீண்டும் மீண்டும் புற்களை எடுத்து வந்து கூடை கட்ட ஆரம்பிக்கும்.இறுதியில் ஒரு உறுதியான கூடு கிடைக்கும்.


தூக்கணாங் குருவி கூடு


அதை விடுங்கள்.ஒரு பாறையில் விழுந்த ஆல மரத்தின் விதை எப்படி பறையையே பிளந்து,செடியாக முளைத்து பின் மரமாகிறது? அதன் முயற்சிதான் அதன் வாழ்க்கைக்கு துவக்கத்தை தருகிறது.


முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்:



முயற்சி என்னும் தாரக மந்திரத்தை நாள்தோறும் உபயோகிப்பவர்களுக்கு வாழ்கையில் எந்த கஷ்டங்களும் இல்லை என்பதை இந்த பழமொழி அறிவுறுத்துகிறது.


முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை:


‘மனிதனால் முடியாதது ஒன்றும் இல்லை’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.இங்கு 'முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை' என்று இருக்கிறது.அதாவது மனிதன் என்பதே முயற்சியின் மொத்த உருவம் என்பதை இந்த இரண்டு பழமொழிகளையும் ஒப்பிடும்போது தெரிந்துகொள்ளலாம்.


அடி மேல் அடி வைத்தால் அம்மியும் தகரும்:


ஒரு அம்மியை உடைப்பது என்பது கடினமான வேலை.அதனைக் கூட நாம் சுத்தியலால் அடி மேல் அடி அடித்தால் அது தகரும்,அதாவது உடையும்.அதேபோல் நாமும் பலமுறை முயற்சி செய்தால் ஒரு செயலை வெற்றிகரமாக முடிக்கலாம்.


கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்:


நம்பிக்கையோடு முயற்சி செய்பவர்களால் கல்லையேக் கரைக்க முடியும் என்னும்போது மனிதனால் முடியாதது வேறு ஏதேனும் உண்டோ?


எறும்பூரக் கல்லும் தேயும்:


எறும்புகள் சாரை சாரையாக ஒரு கல்லின் மீதோ அல்லது சுவற்றின் மீதோ செல்லும்போது அவை சென்ற தடம் தெளிவாக தெரியும்.காரணம் அந்த இடம் தேய்ந்து இருக்கும்.எறும்புகள் மறைமுகமாக நமக்கு முயற்சியின் தத்துவத்தை உணர்த்துகின்றன.சாதாரண எறும்புகளே கல்லையே தேய்க்கும்போது மனிதர்கள் முயன்றால் மலையையே சாய்க்கலாம்.
அதனால் வாழ்க்கையில் தோல்விகளை கண்டு துவளாமல் வெற்றியை அடையும்வரை முயலுங்கள்.

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது நன்றி...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top