.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 2 December 2013

41 நாட்களில் நிறைவடைந்த லிம்கா சாதனை படம்!

 

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண் குழந்தைகள் நடித்ததன் மூலம் ´என்ன சத்தம் இந்த நேரம்’ படம் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

தமிழில் புதிய முயற்சி என பலராலும் பாராட்டை பெற்ற ‘ஆரோகணம்’ படத்தை தயாரித்த ‘ஏ.வி.ஏ.புரொடக்ஷன்ஸ்’ ஏ.வி.அனூப் மீண்டும் பெரும் பொருட்செலவு செய்ய, ‘அலையன்ஸ் பிக்சர்ஸ்’ புரொடக்ஷன் கிருஷ்ணா பலராமராஜா நிர்வாக தயாரிப்பில் உருவாகியிருக்கிற படம் ‘என்ன சத்தம் இந்த நேரம்’. இந்த படத்துக்கு கதை,திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் குருரமேஷ்.

பல வெற்றிப்படங்களை இயக்கி இயக்குனராக மட்டும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும்‘ஜெயம்’ராஜா இந்த படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

இயக்குனர் ஜெயம் ராஜாவை நடிகராக்கியது எப்படி என இயக்குனர் குருரமேஷிடம் கேட்டபோது, ‘‘என்ன சத்தம் இந்த நேரம்’படத்தின் கதையே முழுக்க முழுக்க காமெடி த்ரில்லர் கதைதான். குழந்தைகளையும் அவர்கள் மூலம் பெரியவர்களையும் கவர்கிற அளவுக்கு கதையிருக்கும்.

சாதாரணமாக வீட்டில் ஒரு குழந்தை வைத்திருக்கிறவர்களே அந்த குழந்தையை வளர்ப்பதற்கு போராடுவார்கள்… அதே குடும்பத்தில் இரட்டை குழந்தைகளோ,இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளோ இருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்,அவர்கள் தினமும் சந்திக்கிற நிகழ்வுகள்தான் இந்த படத்தின் கதை. அதுவும் ஒரே நாளில் காலையில் தொடங்கி மாலையில் முடிகிற சம்பவங்கள்தான் ‘என்ன சத்தம் இந்த நேரம்’ படம்.

படத்தின் சிறப்பம்சமே ஒரே பிரசவத்தில் பிறந்த 4பெண் குழந்தைகள் நடித்திருப்பதுதான். இந்த குழந்தைகளின் அப்பாவாகதான் இயக்குனர் ஜெயம்ராஜா நடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் நடிப்பதற்கு அணுகியபோது நடிக்க விருப்பம் இல்லை என மறுத்து விட்டார். பின்னர் கதையை கேட்டதும் நடிப்பதற்கு சம்மதம் சொன்னார்.

கதைப்படி ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளை தேடி வந்தோம் 6 மாசங்கள் தேடியதன் பலன் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் சென்னையிலேயே வசிக்கிறார்கள் என்பது தெரிந்தது. அவர்களை தேடிப்பிடித்து நடிக்க வைத்திருக்கிறோம்.

உலக சினிமா வரலாற்றில் இதுபோன்று ஒரே பிரசவத்தில் பிறந்த 4பெண் குழந்தைகள் ஒரு படத்தில் இணைந்து நடித்ததில்லை. இந்த பெருமையை இந்த படம்தான் பெற்றிருக்கிறது. இந்தியாவில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது. இந்திய சினிமாவில் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற ஒரே படம் ‘என்ன சத்தம் இந்த நேரம்தான்’.

சென்னை, ஐதராபாத் போன்ற இடங்களில் சுமார் 41 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி படத்தை முடித்திருக்கிறோம்.

நிதின்சத்யா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். மாளவிகா வேல்ஸ் ஹீரோயினாக அறிமுகப்படுத்துகிறோம். சிங்கப்பூரைச் சேர்ந்த தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் புரவலன் தமிழில் அறிமுகம் ஆகிறார். ஜான் வசனம் எழுத சஞ்சய் லோகநாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

மனோபாலா, சிவசங்கர் மாஸ்டர், சுவாமிநாதன், வையாபுரி, இமான் அண்ணாச்சி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்’’ என்கிறார் இயக்குனர் குருரமேஷ். படம் டிசம்பரில் திரைக்கு வருகிறது.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top