.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 20 September 2013

வீரமிகு செஞ்சிக்கோட்டை - சுற்றுலாத்தலங்கள்!


   வீரமிகு செஞ்சிக்கோட்டை
 

 
வீரமிகு செஞ்சிக்கோட்டை.
 
தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு, கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி. விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த ஊர் , சென்னையில் இருந்து 160 கிமீ  தொலைவில் அமைந்துள்ள யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது.
மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது.

பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்கள் பாதுஷாபாத் என்றார்கள்  ,சோழர்கள் சிங்கபுர நாடு என்று கொண்டாடினார்கள் 
இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை.
பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது.
 
செஞ்சிக் கோட்டையை, 13ம் நூற்றாண்டில் கோனார் வம்சத்தினர் கட்ட துவங்கினர். அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை பலம் பொருந்திய கோட்டையாக மாற்றினர். குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர்.
 
செஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில் ஆராய்ந்தால்.. கி.மு. முதல் கி.பி 6 முதல்இங்கு ஜைனர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
அதன்பிறகு, பல்லவர் காலத்தில் கிபி 600முதல் 900 முதல் சிங்கபுரத்தில் ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சிக்குத் தெற்கே பனமலைப் பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது. அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது. இந்த இடம் செஞ்சியில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கி.பி.580 முதல் 630 வரை விசித்ரசித்தன் என அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆளுகையில் செஞ்சி இருந்தது. மேலும் செஞ்சி கிழக்கு பகுதியில் காணப்படும் கல்வெட்டுகள், செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாகச் சொல்கிறது. தொடக்கத்தில், சோழர் ஆட்சிக்காலத்தில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறிய கோட்டை ஒன்று இங்கே இருந்தது. 1014-1190 களில், செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
 
இங்கிருந்த சிறிய நகரமான செஞ்சியைப் பாதுகாப்பதற்காக, விஜயநகரப் பேரரசுக் காலத்தில், 13 ஆம் நூற்றாண்டில் விரிவாக்கப்பட்டது. அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை வலிமை பொருந்திய கோட்டையாக மாற்றினர். 13 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. குறிப்பாக, விஜயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர் என்கிறது கல் வெட்டுக்குறிப்பு.  அதுமட்டுமல்ல தமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமையிடமாகவும் செஞ்சி விளங்கியதாக கல்வெட்டு செய்தி தெரிவிக்கின்றது
 
புராணப்படி பார்த்தால் செஞ்சி வந்ததிற்கான தெய்வீக தகவல் நம்மை ஆச்சர்யமூட்டுகின்றது
அனுமன் பர்வத மலையை இலங்கைக்கு தன் கையால் தூக்கிச் சென்றபோது அதிலிருந்து பிரிந்து விழுந்த சிறிய பகுதிதான் சிரஞ்சீவி மலை என்றும், அதுதான் காலப்போக்கில் செஞ்சி என்று மாறியதாகவும் புராணக்கதை  சொல்கின்றது
.
தேசிங்குராஜாவும் செஞ்சிக் கோட்டையும் 
 
ஷாஆலம் வாங்கிய ஒரு புதிய முரட்டு குதிரையை யாராலும் அடக்க முடியவில்லை அதனால் குதிரை ஓட்டுவதில் வல்லவர் ஆன சொரூப்சிங்கை தில்லிக்கு வர சொன்னார் சுல்தான், அவருக்கு துணையாக 18 வயதே ஆன ராஜாதேசிங்கும் சென்றான். தந்தையால் குதிரையை அடக்க இயலவில்லை எனவே தனக்கொரு  வாய்ப்பளிக்கும்படி   தேசிங்கு சுல்தானிடம் முறை இட்டான், வாய்ப்பளிக்கப்பட்டது .அனைவரும் வியக்கும் வண்ணம் அக்குதிரையை அடக்கி சவாரி செய்து எல்லோரையும் ஆச்சர்யமூட்டினான்
அக்குதிரையின் பெயர் பரிகாரி. தேசிங்கின் வீரத்தைப் பாராட்டி அக்குதிரையையே பரிசளித்தார்  சுல்தான். அது மட்டும் அல்ல.. இன்னொரு ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த தளபதி தனது மகளையும் தேசிங்கிற்கு மணமுடித்து வைத்தார். தேசிங்கின் மனைவி பெயர் ராணிபாய். இவர் பெயரால் உருவான ஊர்தான் ராணிப்பேட்டை..
செஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிங்கவரம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி ஆலயம் மிகப்பழமை வாய்ந்தது. அந்த ஆலயத்தில் பள்ளிக்கொண்டிருக்கும்
ஸ்ரீ அரங்கன் தான் தேசிங்கு ராஜாவின் தெய்வம், எந்த வேலைச்செய்தாலும் இந்த அரங்கனிடம் சொல்லிவிட்டு தான் செய்வாராம். அதேப் போன்று எந்தப்போருக்குச்சென்றாலும்  அரங்கனிடம் உத்தரவு பெற்ற பின்பு தான் போருக்கு புறப்படுவாராம் ஒரு முறை ஆர்க்காடு நவாப்பின் படைகளுடன் போரிட நேர்ந்தபோது... தன் குல தெய்வமான இந்த ஸ்ரீஅரங்கநாதரிடம் அனுமதி கேட்டாராம். அதற்கு ஸ்ரீஅரங்கன், "இன்று போருக்குச் செல்ல வேண்டாம். நாளை செல்" என்று கூறினாராம். தேசிங்கோ, "எதிரியின் படைகள் எல்லையை அடைந்துவிட்டது அதனால் ... முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன். இன்றே செல்லட்டுமா?" என்று கேட்டாராம். இதைக் கேட்ட அரங்கன் தலையைத் திருப்பிக் கொண்டதாகக் கூறுகிறார்கள். இப்போதும் ஸ்ரீரங்கநாதர், முகம் திரும்பிய நிலையில் இருப்பதைக் காணும் போது இது உண்மை சம்பவமே என்பது புலப்படும்
 

செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது. 240 மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ள அகழியினால் காப்புச் செய்யப்பட்டிருந்தது. இது எட்டு மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் என்பவற்றைக் கொண்டிருந்தது. இந்த அரணுக்குள் ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஒன்றும் இருந்தது. இக் கோட்டைக்கான அரணாக இயற்கையாக அமைந்த கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி ஆகிய குன்றுகள் இருந்தன. இடையேயிருந்த வெளிகள் 20 மீட்டர்கள் அகலம் கொண்ட சுவர்களினால் மூடப்பட்டிருந்தன..
 
செஞ்சிக் கோட்டையில் உள்ள கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள் போன்றவை, தென்னிந்திய மன்னர்களுக்கு கட்டடக் கலையில் இருந்த ஆற்றலை வெளிப்படுத்துகிறது.

கோட்டையுள் அமைந்துள்ள கல்யாண மண்டபம் பிரமிப்பூட்டும் விதத்தில் அமைந்துள்ளது வெளியார் படையெடுப்பை முறியடிப்பதற்கு உகந்த இடமொன்றாகக் கருதியே இவ்விடத்தில் இக்கோட்டை கட்டப்பட்டது. மராட்டியர்களிடம் இருந்த இக் கோட்டையை பீஜப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக் கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாஜி இதனை மேலும் பலப்படுத்தினார்.
 
ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாஜியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராஜாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை. இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராஜாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சிறிதுகாலம் இதனை ஹைதர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தான் என்கிறது கல்வெட்டு செய்தி
 
பல்வேறு படையெடுப்புகளை முறியடித்து காலத்தாலும் அழிக்கமுடியாத பொக்கிஷமாக காட்சி தருகிறது செஞ்சிக்கோட்டை. கடைசி மன்னராக செஞ்சிக்கோட்டையை ஆண்ட ராஜா தேசிங்கு வாழ்ந்த இடம், போரிட்ட இடம், மரணம் தழுவிய இடம், தேசிங்கின் மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறிய இடம் என பார்த்து பரவசம் அடையும் வண்ணம் உள்ளது.
வியப்பில் ஆழ்த்தும் கட்டட கலைக்கு எடுத்தக்காட்டாக கலைநயத்துடன் கல்லில் கட்டப்பட்ட கம்பீரமான கட்டுமானத்தை கண்டு வியப்படையாதவர்களே இல்லை.
தேசிங்குராஜன் ஆட்சி செய்த 17-ம் நூற்றாண்டின் வரலாற்றின் காலத்திற்கே நம்மை அழைத்து செல்லும் இடமாக விளங்கி வருகிறது இந்த செஞ்சிக் கோட்டை.
கோட்டையைப் பார்த்து விட்டு வெளியே வந்த பின்பு தான் நாம் மீண்டும் இந்த நூற்றாண்டுக்கு திரும்பிவந்த உணர்வு ஏற்படும்

ராஜா கோட்டையின் கீழே பார்க்க வேண்டிய இடங்கள்
 
சிவன் கோயில், அம்மன் ஆலயம், வேலூர் வாயில், சாதத்துல்லாகான் மசூதி, பாண்டிச்சேரி வாயில், வெங்கடரமணர் ஆலயம், சுழலும் பீரங்கிமேடை, உளி வளிக்கும் கல் பட்டறை, கல்யாண மஹால், முகமதுகான் மசூதி, அரண்மணை வளாகம், பணியாளர்கள் தங்கும் அறை, கல்யாண மஹால், குதிரை லாயம், யானைக்குளம், ஆயுதக் கிடங்கு, உடற்பயிற்சி அரங்கம், வெடி மருந்துக் கிடங்கு, நெல் களஞ்சியம், வேணுகோபாலசுவாமி கோயில், ஜும்மா மசூதியின் கலை பாணி, தேசிங்குராஜன் உடல் எரியூட்டப்பட்ட இடம், ஏழு கன்னிமார் கோயில், சர்க்கரை குளம், செட்டிக்குளம், ஆஞ்சநேயர் கோயில், மரணக்கிணறு ஆகியவை பார்க்க வேண்டிய முக்கிய இடங்களாகும்.

இந்த விடுமுறையை பயனுள்ளதாக மாற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க செஞ்சிக்கோட்டை கொத்தலங்களைப் பார்த்து, வரலாற்றை நேரில் பார்த்த அனுபவத்தை பெற்றிடுங்கள் .
இந்திய தொல்லியல்துறையின் முழு கட்டுப்பாட்டின்கீழ் உள்ள செஞ்சிக் கோட்டையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் சிலவற்றை செய்து பராமரித்து வருகிறது.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top