.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 26 November 2013

தமிழர்களால் கைவிடப்பட்டவை!



அம்மி :

குழவி கொண்டு மிளகாய், தேங்காய் முதலியவற்றைச் சமையலுக்கு ஏற்றவாறு அரைக்கப் பயன்படுத்தும் நீள்சதுரக் கல்.

அண்டா :

அகன்ற வாயும் அதே அளவிலான அடிப்பாகமும் உடைய பெரிய பாத்திரம்.

அடுக்குப்பானை:

ஒன்றின் மேல் ஒன்றாக (கீழே பெரியதிலிருந்து மேலே சிறியது வரை) வைக்கப்பட்ட பானைகளின் தொகுப்பு. இதில் உப்பு, புளி, தானியங்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்பர்.

ஆட்டுக்கல் :

வட்ட அல்லது சதுர வடிவக் கல்லின் நடுவே குழியும், குழியில் பொருந்தி நின்று சுழலக்கூடிய குழவியும் உடைய மாவு அரைக்கும் சாதனம்.

அங்குஸ்தான்:

தைக்கும்போது கையில் ஊசி குத்தாமல் இருக்க நடுவிரல் நுனியில் அணியும் உலோக உறை.

ஒட்டியாணம்:

பெண்கள் இடுப்பைச் சுற்றி ஆடையின் மேல் அணிந்து கொள்ளும் பொன்னால் அல்லது வெள்ளிப் பட்டையால் செய்யப்பட்ட ஒருவகை ஆபரணம்.

எந்திரம் :

(அரிசி, உளுந்து முதலிய தானியங்களை அரைக்கவோ உடைக்கவோ பயன்படுத்தப்படும்) கீழ்க்கல்லில் நடுவில் உள்ள முளையில் சுற்றும்படியாக மேல்கல் பொருத்தப்பட்ட வட்டவடிவச் சாதனம். இதைத் திரிகல், திரிகை, இயந்திரம் என்றும் கூறுவர்.

உரல் :

வட்ட வடிவ மேற்பரப்பின் நடுவில் கிண்ணம் போன்று குழியுடையதும் குறுகிய இடைப் பகுதியை உடையதும் தானியங்களைக் குத்த அல்லது இடிக்கப் பயன்படுத்துவதுமான கல்லால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட சாதனம்.

உறி:

(வீடுகளில் பால், தயிர், வெண்ணெய் முதலிய பொருள்களை வைத்திருக்கும் பானைகளைத் தாங்கி இருக்கும்) உத்தரத்திலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும் கயிறு அல்லது சங்கிலியால் ஆன கூம்புவடிவ அமைப்பு.

குஞ்சம் - குஞ்சலம்:

(பெரும்பாலும் பெண்களின் சடையில் இணைத்துத் தொங்கவிடப்படும்) கயிற்றில் இணைக்கப்பட்ட நூல் கொத்து அல்லது துணிப்பந்து போன்ற அலங்காரப் பொருள்.

கோகர்ணம்:

(ரசம், மோர் முதலியவற்றை ஊற்றப் பயன்படும் விதத்தில்) ஒரு பக்கத்தில் மூக்கு போன்ற திறப்பை உடைய ஒருவகைப் பாத்திரம்.

கொடியடுப்பு:

ஒரு பெரிய அடுப்பும் அதிலிருந்து கிடைக்கும் வெப்பத்தைப் பயன்படுத்தும் வகையில் இணைக்கப்பட்ட சிறிய அடுப்பும் கொண்ட அமைப்பு.

சுளகு :

வாய்ப்பகுதி குறுகளாகவும் கீழ்ப்பகுதி அகலமாகவும் இருக்கும்படி ஓலை முதலியவற்றால் பின்னப்பட்ட (தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும், முறத்தைவிடச் சற்று நீளமான) ஒரு சாதனம்.

தாவணி:

(இளம் பெண்கள் அணியும்) ஒரு சுற்றே வரக்கூடிய அளவுக்கு இருக்கும் சேலையின் பாதி நீளத்திற்கும் குறைவான ஆடை.

தொடி:

பெண்கள் தோளை அடுத்த கைப் பகுதியில் அணிந்து கொள்ளும் பிடித்தாற்போல் (அழுத்தம்) இருக்கும் அணி வகை.

நடைவண்டி:

(குழந்தை நடைபழகுவதற்காக) நின்று நடப்பதற்கு ஏற்றவகையில் மரச் சட்டத்தை உடைய மூன்று சிறிய சக்கரங்களைக் கொண்ட விளையாட்டுச் சாதனம்.

பஞ்சமுக வாத்தியம்:

கோயில்களில் பூஜையின் போது வாசிக்கப்படுவதும் ஐந்து தட்டும் பரப்புகளைத் தனித்தனியாகக் கொண்டிருப்பதுமான, பெரிய குடம் போன்ற ஒரு தாள வாத்தியக் கருவி.

பாக்குவெட்டி:

பாக்கு வெட்டுவதற்குப் பயன்படும்) சற்றுத் தட்டையான அடிப்பகுதியையும் வெட்டுவதற்கு ஏற்ற கூர்மை உடைய மேற்பகுதியையும் கொண்ட சாதனம்.

பிரிமணை :

(பானை போன்றவை உருண்டுவிடாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் அடியில் வைக்கும்) பிரிகளைக் (வைக்கோல்) கொண்டு வளையம் போல பின்னப்பட்ட சாதனம்.

புல்லாக்கு:

மூக்கு நுனியில் துவாரங்களுக்கு இடையில் தொங்கவிடப்படும் பெண்களின் அணி வகைகளுள் ஒன்று.

முறம்:

(தானியங்களைப் புடைப்பதற்குப் பயன்படும்) நுனிப்பகுதி சற்று அகலமாக இருக்கும்படி மெல்லிய மூங்கில் பிளாச்சு முதலியவற்றால் பின்னப்பட்ட தடித்த விளிம்புடைய சாதனம்.

மரப்பாச்சி:


பெண் குழந்தைகளுக்கான, மனித உருவம் செதுக்கப்பட்ட மரப் பொம்மை.

லோட்டா:

நீர் குடிப்பதற்கான நீள் உருண்டை வடிவக் குவளை.

அரிக்கன் விளக்கு :

காற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு.

அடிகுழாய்:

கைப்பிடியைப் பிடித்து அடிப்பதன் மூலம் நிலத்தின் அடியிலிருந்து நீரை வெளியே கொண்டுவரப் பயன்படும் குழாய்.

கூஜா :


(குடிப்பதற்கான நீர், பால் முதலியவற்றை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தும்) புடைத்த நடுப்பகுதியும் சிறிய வாய்ப் பகுதியும் அதற்கேற்ற மூடியும் கொண்ட கலன்.

மின் சாதனங்கள் வந்துவிட்ட பிறகு இத்தகைய நம் தமிழர் பண்பாட்டுப் பொருள்கள் எல்லாம் இப்பொழுது அழிந்துகொண்டே வருகின்றன. முக்கால்வாசி புழக்கத்தில் இல்லை என்றே கூறலாம். 

அவற்றையெல்லாம் சேமித்து, பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு என்பதை நினைவில் நிறுத்துவோம்.

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!


அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!


வசதியாகத்தான் இருக்கிறது மகனே…

நீ கொண்டு வந்து சேர்த்த முதியோர் இல்லம்.

பொறுப்பாய் என்னை ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ வெளியேறிய போது,

முன்பு நானும்

 இது போல் உன்னை வகுப்பறையில் விட்டு விட்டு என் முதுகுக்குப் பின்னால் நீ கதறக் கதறக் கண்ணீரை மறைத்தபடி புறப்பட்ட காட்சி ஞாபகத்தில் எழுகிறது!


முதல் தரமிக்க இந்த இல்லத்தை தேடித் திரிந்து நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட அன்று உனக்காக நானும் பொருத்தமான பள்ளி எதுவென்றே ஓடி அலைந்ததை ஒப்பீடு செய்கிறேன்!


இதுவரையில் ஒரு முறையேனும் என் முகம் பார்க்க நீ வராமல் போனாலும்


என் பராமரிப்பிற்கான மாதத் தொகையை மறக்காமல்  அனுப்பி வைப்பதற்காக மனம் மகிழ்ச்சியடைகிறது.


நீ விடுதியில் தங்கிப் படித்த காலத்தில்


 உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல்


 இருந்தாலும் படிப்பை நினைத்து உன்னை சந்திக்க மறுத்ததன் எதிர்வினையே இதுவென்று இப்போது அறிகிறேன்!





இளம் வயதினில் நீ சிறுகச் சிறுக சேமித்த அனுபவத்தை என் முதுமைப் பருவத்தில் மொத்தமாக எனக்கே செலவு செய்கிறாய் ஆயினும்…


உனக்கும் எனக்கும் ஒரு சிறு வேறுபாடு.




நான் கற்றுக்கொடுத்தேன் உனக்கு…


வாழ்க்கை இதுதானென்று!



நீ கற்றுக் கொடுக்கிறாய் எனக்கு… 



உறவுகள் இதுதானென்று!

ஒருவேளை இப்படி இருக்குமோ ?

ஆசைதான் துன்பத்திற்கு காரணம் ஆதலால்
 ஆசையை ஒழிக்க வேண்டும் - புத்தர்

 எந்த எந்த ஆசைகளை ஒழிக்க வேண்டும் ?

உலகில் ஆசைகளை அழித்தவன் ஒருவன் மட்டுமே

 - அவனுக்கு பெயர் சடலம்

 ஆம் உயிரில்லா உடலில் மட்டும் தான் ஆசை இல்லை.

»» ஆசைகளை ஒழிக்கவேண்டும் என்பதே ஒரு ஆசை
»» உணவு உண்பதே உயிர்வாழ வேண்டும் என்ற ஆசையில்
»» உழைப்பதே குடும்பத்தை காக்கும் ஆசையில்
»» பாசம் வைப்பது பாசம் கிடைக்கும் எனும் ஆசையில்

 இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் ஆசை உள்ளது .

 ## வைக்கவேண்டிய ஆசைகள்

»» பெற்றோரை காக்க ஆசைப்படு
»» வறியோர்க்கு வழங்க ஆசைப்படு
»» சிறியோரை சீர்படுத்த ஆசைப்படு
»» மழலையுடன் விளையாட ஆசைப்படு
»» உன் மேல் நீ ஆசைப்படு

 இப்படி ஆசைப்படவேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது.
கண்டிப்பாக இவை நமக்கு ஆசை தேவை.
இவை மேல் நீ ஆசைப்பட்டால் மகிழ்ச்சி உன்னுடன் வாழ ஆசைப்படும்.

## வைக்ககூடாத ஆசைகள்

»» பிறர் மனைவி மேல் ஆசை
»» பிறர் பொருள் மேல் ஆசை
»» தகுதிக்கு மேல் பொருள் வாங்கும் ஆசை
»» மது, மாது, போதை, பேதை மேல் ஆசை.
»» இயற்கைக்கு புறம்பான செயல்களில் ஆசை

 ஒருவேளை புத்தர் கூறியது நல்லவைகளை ஆசைப்படு , தீயவைகளை ஆசைப்படாதே என்று இருக்குமோ?

விஜய் சேதுபதியுடன் ஒரு 'ரேபிட் ஃபயர்’ ரவுண்ட்...


''உங்க வெயிட் எவ்வளவு?'' 

''ரொம்ப வருஷமா, 85 கிலோ!''

''பொக்கிஷம்?'' 

''என் அப்பாவின் சில புகைப்படங்கள். அப்புறம் 'தென்மேற்குப் பருவக்காற்று’ படம் வெளியான சமயம், என்னைப் பாராட்டி ஒரு சின்னக் குறிப்பு விகடன்ல வந்தது. அதை என் தங்கச்சி லேமினேட் பண்ணிக் கொடுத்தாங்க!''

''மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கும் சினிமா?'' 

''முள்ளும் மலரும்''

''இப்போ பர்ஸ்ல எவ்வளவு பணம் வெச்சிருக்கீங்க?''
 
(எண்ணிப் பார்த்துச் சொல்கிறார்) ''250 ரூபா!''

''உங்க உயிர்த் தோழன்?'' 

''சூர்யா... என் பயங்கர தோஸ்த். ஆனா, ப்ளஸ் ஒன் படிக்கும்போது இறந்துட்டான். ப்ச்... அவன் ஞாபகமாத்தான் என் மகனுக்கு 'சூர்யா’னு பேர் வெச்சேன்!''
 

''இப்போ என்ன கார் வெச்சிருக்கீங்க?'' 

''செகண்ட்ஹேண்ட்ல வாங்கின லேன்சர் கார்!''

''சென்னையில் பிடிச்ச ஸ்பாட்?'' 

''சாலிகிராமம் பஸ் ஸ்டாண்ட் பக்கம் ஒரு டீக்கடை. அங்கே கிடைக்கிற இஞ்சி டீக்கு நான் அடிமை!''

''அடிக்கடி நினைத்து மகிழும் பாராட்டு?'' 

''அமெரிக்காவில் இருந்து ஒரு வி.ஐ.பி. என்னைப் பார்க்க வந்தார். என்னை மாதிரியே பேசி நடிச்சுக் காமிச்சார். அவர் பெயர் யதுனன், வயசு ரெண்டு!''

''உங்கள் பலம்?'' 

''நான் நடிக்கும் படங்களின் கதையை நானே முழுசா, சீன் பை சீன், ஒவ்வொரு வசனமும் கேட்டு அப்புறம் முடிவெடுக்கிறது!''

''உங்கள் பலவீனம்?'' 

''நான் ஒரு சூப்பர் சோம்பேறி!''

''தமிழ் சினிமாவில் பிடித்த பன்ச் வசனம்?''

'' 'மகாதேவி’ படத்துல 'மணந்தால் மகாதேவி... இல்லையேல் மரணதேவி’னு பி.எஸ்.வீரப்பா சொல்றது. அப்புறம், 'முள்ளும் மலரும்’ படத்தில் ரஜினி சொல்ற 'கெட்ட பய சார் இந்தக் காளி’!''

"தோரணம்" பற்றிய அறிய தகவல்.!

 

தோரணம் தமிழர்கள் நிகழ்வுகளைக் குறிக்கும் பண்பாட்டு அடையாளமாக செய்யும் ஒரு அலங்கார அமைப்பாகும். இதை தென்னங் குருத்தோலை என்பவற்றால் செய்வார்கள். இவற்றில் செய்யப்படும் மடிப்புக் கட்டமைப்பு குருவிகள் எனப்படும். சிலவேளைகளில் தோரணத்துடன் மாவிலைகளையும் சேர்த்துக் கட்டுவர். இது மாவிலை தோரணம் எனப்படும்.

தோரணங்கள் பொதுவாக இரண்டு வகைகளாக வகுக்கப்படும்.

1. மங்கள தோரணம்.

2. அமங்கள தோரணம்


மங்கள தோரணம்:

மாவிலை தோரணம், சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலான மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படுபவை மங்கள தோரணங்கள் எனப்படும்.

இவை நான்கு குருவிகளைக் கொண்டதாகக் காணப்படும். 

குருவிகளின் தலை மேல் நோக்கியும் வால் கீழ் நோக்கியும் இருக்கவேண்டும்.

அமங்கள தோரணம்:

மரணவீடு முதலான அமங்கள நிகழ்வுகளில் கட்டுவது அமங்கள தோரணம் எனப்படும்.

 இது மூன்று குருவிகளைக் கொண்டிருக்கும். 

குருவிகளின் தலை கீழ் நோக்கியும் வால் மேல்நோக்கியும் இருக்கவேண்டும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top