.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 5 November 2013

உலக செஸ் சாம்பியன் போட்டி: தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா!



இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் நார்வே வீரர் கார்ல்ஸென் ஆகியோர் இடையிலான உலக செஸ் சாம்பியன் போட்டி சென்னையில் வரும் 9-ம் தேதி தொடங்குகிறது.


முன்னதாக, செஸ் சாம்பியன் போட்டியை முதல்வர் ஜெயலலிதா வரும் 7 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். போட்டி தொடக்க விழா சென்னை ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் மாலை 4 மணியளவில் தொடங்குகிறது. இந்த தொடக்க விழாவை ஒட்டி, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.


உலக செஸ் சாம்பியன் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஐந்து நட்சத்திர தனியார் ஹோட்டலான ஹயாத் ரெஜன்சியில் நடைபெறுகிறது. இதற்கென ஹோட்டலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனி அறையில் அவர்கள் இருவரும் விளையாடுவதை கண்ணாடித் தடுப்புகளின் வழியாக பார்ப்பதற்கென ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


சுமார் 400 பேர் வரை போட்டியை பார்க்கலாம் எனக் கூறப்படுகிறது. வரும் 28ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டி 12 சுற்றுகள் கொண்டதாக இருக்கும்.


மிகவும் இளம் வயதுக்காரர்: நார்வே நாட்டின் செஸ் வீரர் கார்ல்ஸெனின் வயது 22. அவர் தன்னை விட 21 வயது அதிகமுள்ள ஆனந்தை எதிர்த்து விளையாடுகிறார். இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக கார்ல்ஸென், திங்கள்கிழமை மாலை சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


போட்டிக்கான பரிசுத் தொகையாக ரூ.14 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியை நடத்துவதற்காக தமிழக அரசு ரூ.29 கோடியை வழங்கியுள்ளது. போட்டியில் பங்கேற்பதற்காக விஸ்வநாதன் ஆனந்த், தனது குடும்பத்தினருடன் கடந்த வெள்ளிக்கிழமை முதலே சென்னையில் முகாமிட்டுள்ளார். இந்தப் போட்டி சென்னை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்லேடன் பற்றி தகவல் கொடுத்தேன்! வெகுமதி தர மறுக்கிறது அமெரிக்கா!

 


 சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த இடம் பற்றி ரகசிய தகவல் அளித்தேன். ஆனால் சொன்னபடி ரூ.150 கோடி வெகுமதி தர அமெரிக்கா மறுக்கிறது என அமெரிக்காவை சேர்ந்த ரத்தினக்கல் வியாபாரி டாம் லீ குறை கூறியுள்ளார்.


அமெரிக்காவின் சிகாகோ பகுதியை சேர்ந்த ரத்தினக்கல் வியாபாரி டாம் லீ(63). இவர் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து ரத்தினக்கல் வியாபாரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டுள்ளார்.


இதனால் அவரது குடும்பத்தினருடன் டாம் லீக்கு நெருக்கம். அப்போது பாகிஸ்தான் வியாபாரியின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர், டாம் லீயிடம் கடந்த 2003ம் ஆண்டு ஒரு ரகசிய தகவலை கூறியிருக்கிறார். ‘‘உங்க அமெரிக்கா வலை வீசி தேடும், ஒசாமா பின்லேடன், எங்கிருக்கிறார் தெரியுமா?’’ என கேட்டுள்ளார் அந்த நபர். ‘‘பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என கூறுகிறார்கள்.


ஆனால் அவரது மறைவிடத்தை அமெரிக்க உளவுத்துறை எப்.பி.ஐ.யால் துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை’’ என்றார் டாம் லீ.  ‘‘இங்குதான் பக்கத்தில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் வசிக்கிறார். அவரையும், அவரது குடும்பத்தினரையும் பெஷாவரிலிருந்து அபோதாபாத்துக்கு பாதுகாப்புடன் அழைத்துச் சென்றதே நான் தான். நான் உங்க எப்.பி.ஐ.,விட பெரிய உளவாளி’’ என பெருமையாக கூறியுள்ளார் அந்த நபர்.


இத்தகவலை டாம் லீ உடனடியாக அமெரிக்க சுங்கத்துறை அதிகாரிகளுக்கும், எப்.பி.ஐ.க்கும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவினர் அபோதாபாத்தில் உள்ள பின்லேடன் வீட்டுக்குள் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி பின்லேடனை சுட்டுக் கொன்றனர். இது டாம் லீக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. 8 ஆண்டுக்கு முன் நாம் எப்.பி.ஐ.க்கு கூறிய ரகசிய தகவல் மிகச் சரியாக இருந்துள்ளதே. இதற்கு அரசிடம் இருந்து நிச்சயம் வெகுமதியும், பாராட்டும் கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருந்தார். பின் லேடன் கொல்லப்பட்ட பிறகும் எப்.பி.ஐ.யிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.


எப்.பி.ஐ டைரக்டருக்கு இது தொடர்பாக பல முறை டாம் லீ கடிதம் எழுதினார். ‘‘நான்தான் பின்லேடன் இருப்பிடம் குறித்து 2003ம் ஆண்டு தகவல் தெரிவித்தேன். எனக்குத்தான் 25 மில்லியன் டாலர் (ரூ.154 கோடி) வெகுமதியை அளிக்க வேண்டும்’’ என டாம் லீ கோரியிருந்தார். எதுவும் பலனளிக்கவில்லை.


சட்டப்படி வெகுமதியை கேட்டுப் பெற டாம் லீ முடிவு செய்தார். இதற்காக சிகாகோவை சேர்ந்த ‘லோவி அண்ட் லோவி’ என்ற சட்ட நிறுவனத்தின் உதவியை நாடினார். அவர்கள் இது தொடர்பாக எப்.பி.ஐ டைரக்டர் ஜேம்ஸ் காமிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினர். இதற்கும் எப்.பி.ஐ பதில் அளிக்கவில்லை. இதனால் சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் எப்.பி.ஐ குறித்து டாம் லீ புகார் கூறியுள்ளார்.


பின்லேடன் மறைவிடம் குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ‘‘அபோதாபாத்தில் இருந்த பின்லேடன் வீடு 2005ம் ஆண்டு வரை கட்டப்படவில்லை. 2011ம் ஆண்டு ஏப்ரலில்  பின்லேடன் அங்கு குடியேறியிருக்கலாம் என பாகிஸ் தான் அதிகாரிகள் தெரிவித்தனர்’’ என்கின்றனர்.


எக்ஸ்ட்ரா தகவல்


கடிதம் கொண்டு சென்ற நபர் மூலமாகவும், பின்லேடன் குடும்பத்துக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மூலமாகவும் பின்லேடன் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் முதலில் தகவல்கள் வெளியாயின.

வடக்கு ஆஸ்திரேலியா கடலில் கூன்முதுகு கொண்ட புதிய வகை டால்பின் கண்டுபிடிப்பு!



வடக்கு ஆஸ்திரேலியா கடலில் புதிய வகையான கூன்முதுகு கொண்ட டால்பின் மீன் இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


இந்த டால்பின் மீன் இனத்துக்கு அதிகாரபூர்வமான பெயர் எதுவும் இதுவரை வைக்கப்படவில்லை.


பசிபிக் மற்றும் இந்திய சமுத்திரங்களில் வாழும் நூற்றுக்கணக்கான கூன்முதுகு மீன் இனங்களையும் மீன்களின் மண்டையோடுகள் மற்றும் திசுக்களையும் விஞ்ஞானிகள் ஆய்வுசெய்துவருகின்றனர்.


இந்த ஆய்வுகளின் முடிவிலேயே இந்த டால்பின் மீன் இனத்துக்கு பெயர்வைக்க விஞ்ஞானிகள் எண்ணியுள்ளனர்.


இந்த மீன் இனங்களுக்கு முதுகில் உள்ள துடுப்பு போன்ற சிறகுக்கு கீழே கூன் விழுந்திருக்கும்.


 இதுவரை கண்டறியப்பட்டுள்ள மூன்று டால்பின் இனங்களில் இரண்டு இனங்கள் மீன்பிடி நடவடிக்கைகளாலும் வாழ்விடங்களில் ஏற்பட்டுள்ள மாறுதல்களாலும் அழிவடையும் அபாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆர்யபட்டா டூ மங்கல்யான்!

செவ்வாய் கிரகத்துக்கு இந்திய பயணம் இன்று தொடங்குகிறது



 இந்தியா 450 கோடி ரூபாய் செலவில் உருவாக்கிய ’மங்கல்யான்’ விண்கலம் பி.எஸ்.எல்.வி,சி25 ராக்கெட் மூலம் செவ்வாய் கிரகத்தை நோக்கி இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன.

அது மனிதன் வாழ தகுதியான கிரகம் என்ற தகவலால் ஆர்வம் அதிகரித்தது. அமெரிக்க தனியார் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள கலத்தில் மாதக்கணக்கில் பயணம் செய்து  செவ்வாயில் குடியேற பலர் அட்வான்ஸ் புக் செய்துள்ளனர். இவர்களில் சில ஆயிரம் பேர் இந்தியர்கள்.


இந்நிலையில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பும் இந்திய முயற்சி இன்று  நிறைவேற உள்ளது. மங்கல்யான் என்ற விண்கலத்தை  ரூ.450 கோடி செலவில் இந்திய விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா, மனிதர்கள் வாழமுடியுமா போன்ற தகவல்களை இந்த ராக்கெட் ஆராயும். இதற்காக இந்த விண்கலத்தில் பல்வேறு கருவிகள் இடம் பெற்றுள்ளன. இது பி.எஸ்.எல்.வி,சி25 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.38 மணிக்கு ஏவப்படுகிறது.  இதற்கான ‘கவுன்ட் டவுன்’ நேற்று முன்தினம் காலை 6.08 மணிக்கு தொடங்கியது.

இந்த ராக்கெட் 44 நிமிடங்களில் 17 ஆயிரத்து 415 கிலோமீட்டர் பயணித்து, பூமியின் நீள் வட்டபாதை யில் நிலை நிறுத்தப்படும். டிசம்பர் 1ம் தேதி நள்ளிரவு தாண்டி 12.42 மணிக்கு செவ்வாய் நோக்கி மங்கல்யான் விண்கலம் செலுத்தப்படும். 300 நாட்கள் பயணித்து 2014  செப்டம்பர் 24ம் தேதி  செவ்வாய் கிரகத்துக்கான சுற்று  பாதை யில் நிலை நிறுத்தப்படும்.

ஆர்யபட்டா டூ மங்கல்யான்

* 1975 ஏப்ரல் 19ம் தேதி ‘ஆர்யபட்டா’ என்ற முதல் செயற்கை கோளை விண்ணில் செலுத்தியது. ஆனால் அது சோவியத் யூனியனில் இருந்து ஏவப்பட்டது.

* இரண்டாவதாக பாஸ்கரா என்ற செயற்கை கோள்  1979 ஜூன் 7ம் தேதி மீண்டும் அங்கிருந்து ஏவப்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட்  10ம் தேதி  ஆர்டிபி என்ற புதிய செயற்கைகோளை இந்திய மண்ணில் இருந்து ஏவியது.

* இதுவரை 67 செயற்கைகோளை இந்தியா ஏவியுள்ளது. இவற்றில் 25 ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்டன. இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட ஆர்டிபி உட்பட 7 செயற்கைகோள்கள் இலக்கை எட்டவில்லை. 4 முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

* மாணவர்கள் தயாரித்த 4 செயற்கைகோளையும்,  ஜெர்மனி, கொரியா,  பெல்ஜியம், இந்தோனேசியா, இத்தாலி, இஸ்ரேல், கனடா, ஜப்பான், துருக்கி,  சுவிட்சர்லாந்து, அல்ஜீரியா, சிங்கப்பூர், பிரான்ஸ், ஆஸ்திரியா, டென்மார்க், இங்கிலாந்து நாடுகளுக்காக 35 செயற்கை கோள்களையும் இந்தியா ஏவியுள்ளது.

புன்னகை – நல்லன எல்லாம் தரும்.!

எந்த உயிரினத்திற்கும் இல்லாத அழகான முக வடிவமைப்பை இறைவன் மனித இனத்திற்கு அளித்துள்ளான். அந்த முகத்திற்கு மேலும் மெருகூட்டி பொலிவாக்க புன்னகை என்னும் நகையை அணிந்து கொள்ள வழி செய்துள்ளான். ஆனால், மனிதர்களிடையே காணப்படும் போட்டி, பொறாமை, உறவுகளிடையே காணப்படும் வெறுப்புணர்வு ஆகியவை அந்தப் புன்னகையை மனிதர்களிடமிருந்து காணாமல் போகச் செய்கிறது. ஓவியர் லியொனார்டோ டாவின்சியால் வரையப்பட்ட “மோனாலிசா’ ஓவியம் புன்னகையின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த ஓவியம்.




                    nov 5 - edit smile


எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் பெண்ணை “புன்னகை அரசி’ என்றும், ஆணை “புன்னகை மன்னன்’ என்றும் கூறி நாம் புன்னகைக்கு மகுடம் சூட்டி மகிழ்கிறோம்.


பெற்றோர்கள் பிள்ளைகளிடம் காட்டும் புன்னகை அவர்களின் எதிர்காலத்திற்கு அஸ்திவாரமாகிறது. பிள்ளைகள் பெற்றோர்களிடம் காட்டும் புன்னகை, வாழ்க்கையை அர்த்தமாக்குகிறது. மருத்துவர் நோயாளிகளிடம் காட்டும் புன்னகை நம்பிக்கைக் கீற்றாக அமைகிறது. வாடிக்கையாளர்களிடம் கடைக்காரர்கள் காட்டும் புன்னகை வியாபாரத்தை அதிகரிக்கிறது.


அதிகாரிகள் அலுவலர்களிடம் காட்டும் புன்னகை ஒற்றுமையை அளிக்கிறது. அரசியல் தலைவர்கள் மக்களிடம் காட்டும் புன்னகை ஜனநாயகத்திற்கு அடித்தளமாகிறது.


“புன்னகை எந்தப் பிரச்னையையும் நேராக்கும் வளைவுக் கோடு’ என்பார்கள். ஒரு நொடிப் பொழுதில் உள்ளத்தில் எழும் மகிழ் உணர்வு புன்னகையாக வெளிப்படுகிறது. நமது மகிழ்ச்சியை இயற்கையாக பிரதிபலிக்கும் ஒரு சக்தியாக புன்னகை விளங்குகிறது. புன்னகை நமது உடலையும் உள்ளத்தையும் இணைத்து மூளைக்குத் தகவல்களை அனுப்பி நம்மை சஞ்சலமற்ற மனதுடன் சந்தோஷத்துடன் இருக்க உதவுகிறது.


நமது மூளையின் புறப்பகுதியின் இடது பாகம் நமது சந்தோஷங்களைப் பதிவு செய்வதற்காகவே உள்ளது. தலைப் பகுதியிலுள்ள தசைகள் மூளையிலிருந்து வரும் சைகையை தாங்கி முகத்தில் உள்ள தசைகளை இயங்கச் செய்து உதட்டில் புன்னகையை தவழச் செய்து உடலை பரவசமாக்குகிறது. நாம் சோகமாக இருக்கும்போது, நாம் முன்பு செய்த நல்ல விஷயங்களை எண்ணிப் பார்த்து புன்னகைத்தால் அது நமது உடம்பில் பல மாற்றங்களை ஏற்படுத்தி மீண்டும் சந்தோஷத்தை ஏற்படுத்தும்.


நாம் சந்தோஷமாக இருக்கும்போது நமது உடம்பு நல்ல எண்ண அலைகளை வெளிப்படுத்தி மனதை தூய்மையாக்குகிறது. நாம் வீசும் ஒரு புன்முறுவல் மற்றவர்களையும் புன்னகைக்கச் செய்யும். அதாவது, நாம் சிரித்தால், நம்மைப் பார்த்து உலகம் சிரிக்கும் என்பார்கள். புன்னகை ஒரு தொற்று நோய். நம்மைச் சுற்றி வினோதமான, கோமாளித்தனமான நிகழ்வுகள் நடக்கும் போது நம்மால் புன்னகைக்காமல் இருக்க முடியாது. நமது நண்பர்களையோ உறவினர்களையோ சந்திக்கும்போது அவர்கள் வீசும் புன்னகையால் நம்மை அறியாமைலே நாம் புத்துணர்வு பெறுவோம். அதற்கு மாறாக முகத்தைச் சுளித்து, கடுமையான பார்வையைக் காட்டினாலோ அதனால் எதிர்வினைகள்தான் ஏற்படும்.


நமது மனம் உற்சாகத்திலிருக்கும்போது, உதடு புன்னகைக்கிறது. புன்னகை மனத்தளர்ச்சியை ஏற்படுத்தும் ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைக்கிறது. நாம் புன்னகைக்கும்போது நமது உடம்பிலிருந்து எண்டார்பின், செரோடினின் போன்ற இயற்கையான வலி நிவாரணிகள் சுரக்கின்றன.


உடல்வலியைக் கட்டுபடுத்த இறைவன் நமக்கு அளித்த அருமருந்து புன்னகை. அது மன உளைச்சலையும் சோர்வையும் உடல்வலியையும் போக்கும். சிறு புன்னகைதான் பெரும் சிரிப்பை வரவழைக்கும். புன்னகை இல்லாமல் சிரிப்பில்லை. சந்தோஷ சிரிப்பு நம் உடல் நலனை சீராக்குவதுடன், ரத்த ஓட்டத்தையும் சீராக்கி, சீரான தூக்கத்தையும் அளிக்கும்.


எப்போதும் புன்முறுவல் பூத்தவாறு பிறருடன் அன்பாக பழகுபவருக்கு உடல்நலப் பாதிப்பு எப்போதும் ஏற்படுவதில்லை, அதிக அளவில் புன்முறுவல் பூத்து உற்சாகத்துடன் உழைப்பவர்கள் மற்றவர்களை விட ஏழு ஆண்டுகள் இளமையுடன் இருப்பார்கள் என தெரிவிக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.
நமது குறுநகை பிறருடைய கவனத்தை இழுக்கும் திறனுள்ளதாக அமையும். அதனால்தான் புகைப்படக் கலைஞர்கள் புகைப்படம் எடுக்கும்போது நம்மைப் புன்னகைக்கச் சொல்கிறார்கள்?


வேலைப் பளு காரணமாகவோ மன வருத்தம் ஏற்படும்போதோ, அல்லது பிறர் நம்மை வருந்துமாறு பேசினாலோ ஒரு சிறுநகை உதிர்த்தால் மனம் லேசாகி விடும். ஏதேனும் ஒன்றை எதிர்நோக்கியிருக்கும் பேராவல் ஏற்பட்டு அது கிடைக்காமல் போனால் மனம் விசாரம் கொள்ளாமல் இருக்கவும் புன்னகை உதவுகிறது. ஆபத்து வருமோ என்ற கவலையும் மனதிலிருந்து மறைகிறது. பிறரைக் கவர வேண்டுமானால் நமக்கு உயர்ரக ஆடைகளும், அலங்காரங்களும் தேவையில்லை. உதட்டில் புன்னகையை அணிந்தாலோ, அது முன்பின் தெரியாதவர்களையும், ஏன், எதிரியைக்கூட நண்பராக்கும் பாச வலையாகும்.


நாம் புதியதாக வேலை தேடிச் சென்றாலோ அல்லது பணி நிமித்தம் மற்றவர்களை பார்க்கச் போனாலோ நல்ல உடையுடன் சேர்த்து புன்னகையையும் அணிந்து செல்ல வேண்டும். நல்ல உடை மட்டும் ஒருவனைச் சிறந்தவனாகக் காட்டாது. சிடுசிடுப்பான முகத்துடன் உடை பகட்டாக இருந்தால் எந்தவிதமான பயனும் இல்லை. எனவே மற்றவர்கள் மனதில் நாம் பதிய வேண்டுமானால் அழகாக இயற்கையான முகிழ்நகையும் நம்முடன் இருக்க வேண்டும்.


புன்னகையை யாருக்கு வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வழங்கலாம். விலையில்லா புன்னகையால் விளையும் பலன்களோ விலைமதிப்பற்றவை. புன்னகை – நல்லன எல்லாம் தரும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top