.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label தமிழனின் வரலாறு !. Show all posts
Showing posts with label தமிழனின் வரலாறு !. Show all posts

Sunday 1 December 2013

பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்!



1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.

2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.

3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.

4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)

5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.

6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.

7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.

8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.

9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.

10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.

11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.

12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.

13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆய்வுகளின் நம்பகத் தன்மை:
1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.

6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.

7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.

ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:


1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.

8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்!

 

உயிரோடு ஒரு முத்தம் தராதவள், செத்தால் உடன்கட்டை ஏறுவாளா?


அய்யாசாமிக்குக் கல்யாணம், அவரவர் வீட்டில் சாப்பாடு.


அவனே இவனே என்பதை விட சிவனே சிவனே என்பது நல்லது.


அன்பான சினேகிதனை ஆபத்தில் அறி.


ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான். ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது.


ஆயிரம் உடையான் அமர்ந்திருப்பான், அரைப்பணம் உடையான் ஆடி விழுவான்.


அடிபட்டுக் கிடக்கிறான் செட்டி, அவனை அழைத்து வா, பணம் பாக்கி என்கிறான் பட்டி.


ஆனை மேல் போகிறவனை சுண்ணாம்பு கேட்டால் கிடைக்குமா?


இந்த எலும்பைக் கடிப்பானேன், சொந்தப்பல்லுப் போவானேன்


இந்தக் கூழுக்கா இத்தனை திருநாமம்.


இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது.


இடுகிறவள் தன்னவள் ஆனால் முதல் பந்தியில் உண்டால் என்ன, கடைப் பந்தியில் உண்டால் என்ன?


உண்டு கொழுத்த நண்டு வளையில் தங்காது.


உதடு மன்றாடப் போய் உள்ளிருந்த பல்லும் போனாற் போல.


உபாயத்தால் ஆகிறது பராக்கிரமத்தால் ஆகுமா?


பசித்தவன் எதையும் தின்பான். பகைத்தவன் எதையும் சொல்வான்.


 ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி


கடுங்காற்று மழை கூட்டும். கடும் சினேகம் பகை கூட்டும்.


வீட்டு வாசலில் காவேரி, முழுக மாட்டாளாம் மூதேவி.


குண்டு பட்டு சாகாதவன் வண்டு கடித்துச் செத்தானாம்


பண்ணிய பாவத்தைப் பட்டுத் தான் தொலைக்க வேண்டும்.


காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.


தலைக்குத் தலை அம்பலம். உலைக்கு அரிசி இல்லை.


நீரிலும் நனைய மாட்டான். நெருப்பிலும் வேக மாட்டான்.


அசை போட்டுத் தின்பது மாடு; அசையாமல் தின்பது வீடு.


ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கச் சொன்னால் நொண்டிக்குப் கோபம்.


அஞ்சு காசுக்குக் குதிரையும் வேணும். அது ஆற்றைக் கடந்து பாயவும் வேணும்.


அறுவடைக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.


மேய்த்தால் கழுதை மேய்ப்பேன். இல்லா விட்டால் பரதேசி ஆவேன்.


அன்ன நடை நடக்கப் போய் தன்னடையும் கெட்டுப் போச்சு.


குதிரை செத்ததும் இல்லாமல் குழி தோண்ட மூணு பணம்.


எண்ணம் எல்லாம் பொய், எமன் ஓலை மெய்.


என் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உன் வீட்டுக்கு வந்தால் என்ன தருகிறாய்?


கீரைத் தண்டு பிடுங்க ஏலேலப் பாட்டா?


எள் எண்ணெய்க்குக் காய்கிறது. எலிப் புழுக்கை எதற்குக் காய்கிறது?


கோழி களவு போனதற்கு ஆடு வெட்டியா பொங்கல் இடுவார்கள்?


பூனைக்குப் பயந்து புலியிடம் போகலாமா?


சத்திரத்து சோத்துக்கு தாத்தய்யங்கார் உத்தரவு எதற்கு?


வேகாத சோத்துக்கு விருந்தாளி இரண்டு பேர்.


தானாகக் கெடுத்தது பாதி; தம்பிரான் கெடுத்தது பாதி.


தலைவலியும் தரித்திரமும் தனக்கு வந்தால் தெரியும்.


பறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.


உடையவன் பாராத வேலை உருப்படாது.


தூங்குகிற மணியக்காரனை எழுப்பினால் பழைய கந்தாயம் கேட்டானாம்.


எடுக்கிறது எருமைச்சாணி, படுக்கிறது பஞ்சு மெத்தை


ஆசை தீர அனுபவித்தவனும் இல்லை, அள்ளிக்கொடுத்து கெட்டவனும் இல்லை.


இன்றைக்கு என்பதும், நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்


அஞ்சினவனைக் குஞ்சும் விரட்டும்.


தாய் அறியாத சூல் இல்லை. மனம் அறியாத பொய் இல்லை.


வைத்தியன் பிள்ளை மருந்தினால் சாகும்.


ஆயிரம் காக்கையை ஓட்ட ஒரு கல் போதும்.


காற்றில்லாமல் தூசு பறக்காது.


காவடிப்பாரம் சுமப்பவனுக்குத் தான் தெரியும்.


எகிறி எகிறி குதித்தாலும் எட்டு பத்தாகாது.


சாட்டை அடியும் சவுக்கடியும் தாங்கலாம்
மூட்டைக் கடியும் முணுமுணுப்பும் ஆகாது.


பனி பெய்து குளம் நிரம்பாது.


பாடுபட்டுக் குத்தினாலும் பதரில் அரிசி இருக்காது.


நாட்டுக்கு நல்ல துரை வந்தாலும் தோட்டி சுமப்பது புல் சுமையே.


பொன்குடத்திற்குப் பொட்டு தேவையில்லை.


இழவுக்கு வந்தவளா தாலி அறுப்பாள்?


மூன்று செவிக்கு எட்டின செய்தி மூடுமந்திரம் ஆகாது.


    காலம் போகும் வார்த்தை நிற்கும். கப்பல் போகும் துறை நிற்கும். (துறை=துறைமுகம்)
 

  அறிந்தவன் என்று கும்பிட்டால் அடிமை என்று சொல்லுவதா?


    ஆற்றிலே நின்று அரகரா என்றாலும் சோற்றிலே இருக்கார் சொக்கலிங்கம்.


    சுடுகாடு போன பிணம் வீடு திரும்பாது.


    இட்டது எல்லாம் பயிராகாது. பெற்றது எல்லாம் பிள்ளையாகாது.


    வாய் நல்லதானால் ஊர் நல்லது.


    கேடு வரும் பின்னே. மதி கெட்டு வரும் முன்னே.


    காரியம் பெரிதேயன்றி வீரியம் பெரியதல்ல.


    மயிர் சுட்டுக் கரியாகாது.


    ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்காது.


    விசாரம் முற்றினால் வியாதி. (விசாரம்=கவலை)


    திரு உண்டானால் திறமையும் உண்டாகும். (திரு=செல்வம்)


    பல்லக்கு ஏற பாக்கியம் உண்டு; உந்தி ஏற சீவன் இல்லை. (சீவன்=உடல் சக்தி)


    ஆசை இருக்குது தாசில் பண்ண; அம்சம் இருக்குது கழுதை மேய்க்க.


    ஞானிக்கு இல்லை நாளும் கிழமையும்.


    ஆற்று மணலில் கிடந்து புரண்டாலும் ஒட்டுகிறது தான் ஒட்டும்.


    தலையை சிரைப்பதால் தலையெழுத்து மாறாது.


    அரண்மனைக் கோழிமுட்டை அம்மியையும் உடைக்கும்.


    அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்.


    தின்னப் படை உண்டு; வெல்லப் படை இல்லை.


    எட்டினால் சிண்டைப் பிடி; எட்டாவிட்டால் காலைப் பிடி.


வாழைப்பழம் கொண்டு வந்தவள் வாசலிலே. வாய் கொண்டு வந்தவள் வீட்டுக்குள்ளே.


    சாமி காட்டுமே தவிர ஊட்டாது.


    அறப்படித்தவன் அங்காடி போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.


    இளமையில் கல்வி, சிலையில் எழுத்து.


    உலக்கைப் பூசைக்கு அசையாதவள் திருப்பாட்டுக்கு அசைய மாட்டாள்.


    கொண்டவன் தூற்றினால் கண்டவன் தூற்றுவான்.


    தெய்வம் பாதி திறமை பாதி.


    தளுக்கும் மினுக்கும் தாம்பத்தியம் ஆகாது.


    ஆங்காரத்தினால் அழிந்தவர்கள் ஆயிரம் பேர்.


    சனப்பலம் இருந்தால் மனப்பலம் வரும்.


    தாய் இல்லாத போது தகப்பன் தாயாதி.


    அரசன் குடுமியையும் அம்பட்டன் பிடிப்பான்.


    மனசாட்சியை விட மறுசாட்சி வேண்டாம்.


    கடல் வற்றிக் கருவாடு தின்ன ஆசைப்பட்டு குடல் வற்றி செத்ததாம் கொக்கு.


    கூத்தாடி கிழக்கே பார்ப்பான். கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.


    பாராத உடைமையும் பாழ், கேளாத கல்வியும் பாழ்.


    குயவனுக்குப் பல நாள் வேலை, தடியனுக்கு ஒரு நிமிட வேலை.


    பெண்ணின் கோணல் பொன்னில் நிமிரும்.


    அரைக்காசுக்குப் போன வெட்கம் ஆயிரம் கொடுத்தாலும் திரும்பாது.


    எழுதிப் பாராதவன் கணக்கு கழுதை மேய்ந்த களம்.


    அரையிலே புண்ணும் அண்டையிலே கடனும் ஆகாது.


    முடியுள்ள சீமாட்டி எப்படியும் முடிப்பாள்.


    கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.

    அக்காள் இருந்தால் மச்சான் உறவு.


முரட்டுத்தனத்துக்கு முதல் தாம்பூலம்.

தமிழர்கள் நாம் நம்மைப்பற்றி என்ன ஆராய்ச்சி செய்துள்ளோம்?


தமிழரின் பெருமை தெரியவேண்டும் என்றால்.தமிழகத்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்று ஆணையிட வேண்டும் 

11500 வருடங்களுக்கு முன்பே இருந்த தமிழ் கடற்கரை நகரம்!!

பூம்புகார் – காவேரிப் பூம்பட்டினம். பண்டைக்கால சோழர்களின் தலைநகரம். இந்த நகரம் பற்றி தமிழ் பாடம் படிக்கும்போது கடலால் அழிந்துபோன நகரம் என்று மட்டும்சொல்லி முடித்துவிடுவார்கள். இந்த நகரம் எப்படி இருந்தது, ஏன் அழிந்தது, மக்கள் வாழ்க்கை முறை எப்படியிருந்தது என்ற உண்மைகளை அறிந்தால் உலக நாகரீங்களுக்கெல்லாம், ஏன் உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடி நாம்தான் என்ற உண்மை வெளிப்படும்.

சோழர்களின் தலைநகமான பூம்புகார் தமிழகத்தின் தற்போதைய நாகை அருகே 11500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்தே இந்நகரம் இருந்ததாக ஆய்வில் தெரியவருகிறது. மிகப்பெரிய துறைமுகமாகவும், உலக வர்த்தகத்திற்கான சந்தையாகவும் இருந்திருகிறது. சிலப்பதிகாரம், பட்டினப்பாலை, மணிமேகலை உள்ளிட்ட நூல்களில் இந்நகரம் பற்றி போற்றுகின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் கடல்கோளால் (சுனாமி) இந்நகரம் அழிந்துபோனது.இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி நிலையம் பணப்பற்றாக்குறையால் இந்நகரம் பற்றி ஆராய்வதை நிறுத்திவிட்டது. திட்டமிட்டு நிறுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.

பூம்புகார் நகரத்தையும், குஜராத்தின் கடற்கரையில் (மும்பைக்கு மேற்கே) இருந்த துவாரக நகரத்தையும் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்த இங்கிலாந்துக்காரர் கிரகாம் ஹன்காக் (Graham Hancock) ஒரு வீடியோவை (Underworld: Flooded Kingdoms Of The Ice Age) வெளியிட்டார். அதில் கடலுக்கடியில் இந்நகரம் இருந்த இடத்தில் இன்னும் கற்களாலான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச்சுவர், பாத்திரங்கள், குதிரைவடிவ பொம்மைகள், காணப்படுகின்றன. இந்த ஆராய்ச்சி முடிவுகளெல்லாம் வெளியானது 2002ல். இன்றுவரை அதுபற்றியெல்லாம் யாரும் கவலைப்படவில்லை.

தமிழர்கள் நாம் நம்மைப்பற்றி என்ன ஆராய்ச்சி செய்துள்ளோம்? இனியாவது தமிழக அரசு இந்த ஆராய்ச்சியை முன்னெடுக்குமா?

புதுச்சேரி அருகே ஆழ்கடலில் புதையுண்டிருக்கும் சங்கத் தமிழ் சரித்திரம்!


சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களைத் தகுந்த உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்வேன். அப்படி ஒருமுறை சென்றபோது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு ‘அரவிந்த் வால்’ என்று பெயரிட்டேன்” என்றார்.

இந்த விவரங்கள் ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தை நடத்திவரும் ஒரிசா பாலுவின் கவனத்துக்குச் சென்றது. அவர் சில மாதங்களாக அங்கு கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அந்தச் சுவரில் இருந்து மண்ணையோ கல்லையோ பெயர்க்காமல் மேற்பார்வை ஆய்வுகளை செய்தார். அதில்தான் இது அழிந்துபோன சங்ககால தமிழ் துறைமுகமான எயிற்பட்டினம் என்பது தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து அவர் நம்மிடம் பேசினார்.

‘தமிழர்கள் கடல் வழியாக உலக மக்களை எப்படி இணைத்தார்கள் என்பதையும் தமிழர் மற்றும் தமிழின் கலாச்சார தொன்மைகளையும் இதுபோன்ற ஆய்வுகள் மூலம் உலகுக்கு நிரூபிக்கலாம்.

மேற்கண்ட சுவரை ஆய்வு செய்ததில் சுவரின் ஒரு பகுதி அரிக்கமேடு முகத்து வாரம் வரையிலும் அடுத்தப் பகுதி புதுச்சேரியின் எல்லையில் இருக்கும் நரம்பை வரை செல்கிறது. அதை ஒட்டி மரக்கலங்கள் சென்று வரும் வகையிலான ஒரு கால்வாய் இருந்ததற்கான தரவுகளும் கிடைத்துள்ளன. அதன்படி இந்த மதில் சுவர் ஒரு கோட்டையின் சுவராக அல்லது கடல் நீர் தடுப்புச்சுவராக இருக்கலாம்.

ஒரிசா பாலு ஏற்கெனவே குமரிக்கடலில் 130 கி.மீ. வரை 100 மீட்டர் ஆழம் வரை தேடியதில் கன்னியாகுமரியில் இருந்து 54 கி.மீ. தொலைவில் கடலின் 40 மீட்டர் ஆழத்தில் 22 கி.மீ. அகலமும் 44 கி.மீ. நீளமும் கொண்ட அழிந்துபோன ஒரு தீவு நகரம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அந்த நகரத்தை கிரேக்கர்கள் ‘மரிக்கனா’என்று குறிப்பிட்டுள்ளனர். தவிர, பூம்புகார் கடலில் 21 கி.மீ. வரை 65 இடங்களில் அழிந்துபோன நகர இடிபாடுகளையும் கண்டுபிடித்தவர். தவிர அரிக்கமேடு ஆய்விலும் இவரது பங்கு அதிகம்.

புவியியல் ஆய்வுகளின்படி இந்த இடம் வங்கக் கடல் விழுங்கிய சங்க கால நகரமான எயிற்பட்டினம். அதற்கான ஆதாரங்கள் சங்க இலக்கியமான எட்டுத் தொகையின் பாடல்களில் இருக்கிறது. இந்த தகவல்களைக் கொண்டு தமிழக தொல்லியல் துறையும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகமும் இந்திய கடல் சார் தொல்லியல் துறையும் தகுந்த ஆய்வுகளை மேற்கொண்டு, இந்தப் பகுதியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவிர, இந்த சுவருக்கு 10 ஆயிரம் ஆண்டுகள் தொடங்கி 25 ஆயிரம் ஆண்டுகள் வயது இருக்க வேண்டும். அது உறுதிப்படுத்தப்பட்டால் உலகின் முதல் கட்டடக் கலை தமிழர்களுக்குச் சொந்தமானது என்பதும் நிருபிக்கப்படும்” என்றார்.

எயிற்பட்டினத்தைப் பற்றி சங்க இலக்கியத்தின் எட்டுத் தொகையின் சிறுபாணாற்றுப்படை நூலில் பாடல் இருக்கிறது. அப்போது எயிற்பட்டனத்தை ஆண்ட ஒய்மானாட்டு நல்லியக்கோடனை, சங்கப்புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் புகழ்ந்து அந்தப் பாடலை எழுதியிருக்கிறார். அந்த பாடலில் ‘மதிலொடு பெயரியப் பட்டினம்’என்று இந்த ஊரை குறிப்பிடுகிறது.

மதில் என்னும் சொல்லுக்கு ‘எயில்’என்றும் பெயர் உண்டு. அதனால், அவ்வூர் எயிற்பட்டினம் ஆயிற்று. அக்காலத்தில் பிரபலமான துறைமுக நகரமாக விளங்கிய இவ்வூருக்கு சீனர்களும் கிரேக்கர்களும் வந்து வணிகம் செய்திருக்கின்றனர். கிரேக்கர்கள் இந்த ஊரை ‘சோபட்மா’என்று குறிப்பிட்டுள்ளனர். ‘சோ’என்னும் சொல் மதிலைக் குறிக்கிறது.

நத்தத்தனாரின் சங்க இலக்கியப் பாடலில் நெய்தல் நகரமான எயிற்பட்டினத்தில் ஒட்டகங்கள் தூங்குவதுபோன்ற பெரிய மரக்கலங்கள் எயிற்பட்டினத்தில் இருந்து சீறியாழ்பாணன் வரை இருந்ததாகவும் வரிசையாக நின்றதாகவும், எயிற்பட்டினத்தில் அன்னப்பறவைகள் வடிவத்தில் தாழம்பூக்கள் பூத்ததாகவும் அங்கு சுவையான சுட்ட மீனும் பழம்பேடு (பழச்சாற்று கள்) கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆராய்ச்சிகள் முறையாக செய்தால் இந்தியாவின் வரலாற்றை தமிழகத்தில் இருந்து தொடங்க வேண்டி வரலாம்..!

Saturday 30 November 2013

பெரியார் கடவுளுக்கு எதிரியா?

பெரியார் ஒரு நாத்தீகர். கடவுளின் எதிரி. ஆன்மீகவாதிகளுக்கு எதிரி என பெரியாரையும் அவரது போராட்டங்களையும் பற்றியும் வருகிற பரப்புரைகள் நாம் அறிந்தவை. பெரியார் கடவுளுக்கு எதிரியா? இந்த கேள்விக்கு பெரியார் கருத்துக்களை அவரது சுயமரியாதை போராட்டத்தோடு இணைத்து பார்த்தால் மட்டுமே உண்மையை உணரமுடியும். சுயமரியாதை போராட்டமும் பெரியார் மதங்களை பற்றி கொண்டிருந்த பார்வையும் ஒன்றோடொன்று இணைந்தவை.

பெரியார் ஆச்சாரமான ஆத்தீக குடும்பத்தில் பிறந்தவர். அவரது குடும்பத்தினர் பராமரிக்கும் கோவில் ஒன்று இருந்தது. இளவயதில் காசியில் 'இந்து சமய' மடங்களுக்கு சென்று சிறிதுகாலம் துறவறம் பூண்டவர். பெரியார் மதம் மீது ஆழ்ந்த பற்று கொண்டிருந்தாரா? "எனது வாழ்நாளில் என்றைக்காவது சாதி-மதத்தையோ உணமையாக நம்பியிருந்தேனா என்று இன்னும் யோசிக்கின்றேன்....எப்போதிலிருந்து இவற்றில் எனக்கு நம்பிக்கையில்லை என்றும் யோசித்து பார்த்திருக்கின்றேன், கண்டுபிடிக்கமுடியவில்லை." அவரே சொல்கிறார் (நவமணி 1939 ஆண்டு மலர்).


1929, பிப்ரவரி 17-18 தேதியில் செங்கற்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் தான் மதத்தை பின்பற்றக்கூடாதென தீர்மானிக்கப்பட்டது. "(இந்துமதம்)பிறவியினால் உயர்வு, தாழ்வு கற்பிக்கிறது, வருணாசிரம முறையைத் தோற்றுவித்து வளர்க்கிறது" என அந்த மாநாட்டு தீர்மானம் பெரியார் மேற்பார்வையில் நிறைவேற்றப்பட்டது. 'இந்து மதம்' ஆன்மீக தத்துவத்துடன் இயங்குவதோடு தனது பணியை முடித்துக்கொள்ளவில்லை. அதன் இயக்கமும், தாக்கமும் சமூக வாழ்வில் பல கேடுகளை விளைவித்தன. குறிப்பிட்ட சாதியினர் அனைத்து வளங்களையும், வாய்ப்புகளையும் அனுபவிக்க, பெரும்பான்மை மக்கள் அவர்களுக்காக உழைக்க வேண்டிய நிலை. அடிமைப்படுத்தப்பட்ட மக்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பலவித சாத்திரங்கள், மூடப்பழக்கங்கள் உருவாக்கப்பட்டன. அதனால் தான் பெரியார் மதத்தை பொருள்முதல்வாத செல்வாக்கு அடிப்படையில் அணுகினார்.


மனித இனத்தை வகைப்படுத்த ஒருகாலத்தில் சில நெறிகள் அவசியமாயிற்று. அன்றைய காலம் வேறுமாதிரியான சமூக, அரசியல், பொருளாதார சூழலில் மனித சமுதாயம் குழுக்களாக இருந்தது. அன்று இருந்த சமூகத்தில் இன்று இருப்பது போன்ற மக்கள் அமைப்பு முறைகளும், சட்டங்களும் இல்லை. மனித இனத்தை கட்டுப்படுத்த ஒவ்வொரு மனிதகுழுக்களும் நெறிகளை தனக்கென உருவாக்கியது. உருவாக்கப்பட்ட நெறிமுறைகள் எந்த வகை மக்கள் ஆதிக்கம் அதிகம் இருந்ததோ அவர்களுக்கு ஆதரவாகவே அமைக்கப்பட்டன. அவற்றை அனைவரும் கடைபிடிக்க வைப்பதற்காக இயற்கையை இணைத்து வழிப்பாட்டு முறைகள் தோன்றலாயிற்று. அதனால் தான் பாகன் வழிபாட்டுமுறையில் இயற்கையை, தனது அறிவுக்கு எட்டாதவற்றை, மனிதன் எதை பார்த்து பயப்பட்டானோ அவற்றை என எல்லாவற்றையும் வழிபட்டு வந்தனர்.


கிரேக்கம், ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா என எங்கும் இந்த வழிபாடுகள் விதவிதமாக இருந்துள்ளன. அந்த நிலையை கடந்து மனித சமுதாயம் இன்று அமைப்பு முறையிலும், சட்டங்களின் அடிப்படையிலும் வளர்ச்சியடைந்துள்ளது. இன்றைய காலத்திற்கு ஏற்ப மதத்தின் அணுகுமுறையில், தத்துவங்களில், நெறிமுறைகளில், நம்பிக்கைகளில் மாற்றம் அவசியமானது. ஒரு காலத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்பது மனித சமுதாயத்தை முன்னேற்றப் பாதைக்கு செல்ல அனுமதிக்காத பழமைவாதமாக தான் இருக்க இயலும். முன்னர் பூமி தட்டையானது என்று கிறிஸ்தவ மத நம்பிக்கையாக இருந்தது. இந்து மதத்திலும் பூமியை பாயாக சுருட்டிய புராணக்கதைகளை பார்க்கிறோம். பூமி தட்டையல்ல, உருண்டை வடிவமானது என நிரூபித்தான் ஒரு அறிவியலாளன். மதவாதிகள் அவனை கடுமையாக எதிர்த்தனர். இவை அனைத்தும் கடந்த காலங்களில் இருந்த நம்பிக்கை. கடைசியில் என்ன ஆயிற்று? பூமி உருண்டை என்பதை அறிவியலும், கிறிஸ்தவம் உட்பட அனைத்து மதங்களும் இன்று ஏற்றுக்கொண்டுள்ளன. கத்தோலிக்க மதத்தலைவர் போப் இதற்காக மன்னிப்பும் கேட்டார்.


"காலநிலைக்கும், சமுதாயநிலைக்கும் அறிவு முதிர்ச்சிக்கும் ஏற்றபடி முறைகள் வகுக்கப்படவேண்டியவை தவிர, ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் பொருத்தமென்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லையென்பது தான் பொருள்" என்றார் பெரியார். மதத்தின் பழைய கருத்துக்களை இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றி மறுமலர்ச்சி ஏற்படுத்த கலகம் செய்தவர் பெரியார். அறிவியலில் எப்படி ஒரு ஆய்வாளரின் கண்டுபிடிப்பை இன்னொருவரது ஆய்வு முடிவுகள் பொய்யென நிரூபித்தால் ஏற்றுக்கொள்ளுவார்களோ அதே அறிவியல் பார்வையை பெரியார் மதத்திற்கும் வைத்தார். ஒரு காலத்தில் எழுதப்பட்ட, சொல்லப்பட்ட தத்துவங்கள், கதைகள், புராணங்கள், சாத்திரங்கள் நடப்பு காலத்திற்கு பொருந்துமா என மதங்களை பரிசீலனை செய்து மாற்றங்களை உள்வாங்குவது ஒவ்வொரு காலத்திலும் அவசியம். இதை தான் ஆங்கிலத்தில் contexualising என்பார்கள். மதவாதிகளுக்கு மாற்றங்களை உள்வாங்கும் திறந்த மனது, எதிர்கருத்துக்களை ஏற்கும் பக்குவம் ஆகியவை அவசியம்.


 இல்லையென்றால் மதம் உட்பட அனைத்து சமூக நிறுவனங்களும் அடிமைத்தனத்தின் சின்னமாக தான் விளங்கும். ஒரு காலத்தில் குழந்தை திருமணங்கள், விதவைகளுக்கு திருமண மறுப்பு, உடன்கட்டை ஏற்றிக் கொல்லுதல் என இருந்தவை இன்றைய சமுதாயம் ஏற்றுக்கொண்டுள்ளதா? இன்றைய மனித உரிமை அடிப்படையில் இவை அனைத்தும் குற்றங்கள். இப்படியான ஒரு வளர்ச்சி நிலைக்கு நாம் முன்னேற பல போராட்டங்கள் காரணமாக இருந்தன. பெரியாரும் இப்படியான ஒரு போராட்டத்தையே ஏற்படுத்தி எதிர்கருத்தை உருவாக்கினார். போராட்டம் செய்பவர்களை கண்டிப்பது மட்டும் தான் குறிக்கோளாக இருந்தால் போராட்டங்களின் காரணம் இருந்துகொண்டே இருக்கும். 'இந்து மதவாதிகள்' இந்த தவறை தான் செய்கிறார்கள். இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். பிரச்சனைகளின் அடிப்படை காரணிகளை கண்டு அவற்றை மாற்றினால் மதத்தில் மட்டுமல்ல மனங்களிலும் மறுமலர்ச்சி ஏற்படும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.


என்கிற குறளில் இதை தான் வள்ளுவர் ஆழ்ந்த பொருளுடன் கூறுகிறார்.

இதற்கு உதாரணமாக ஹாங்காங்கில் நடந்த ஒரு விடயத்தை இங்கு பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

ஹாங்காங்கில் எந்த பகுதியில் சென்றாலும் விளையாட்டு மைதானம், உள் விளையாட்டு அரங்கங்கள், பூங்கா, நூலகம் என பொழுதுபோக்கு இடங்கள் நிறைந்து காணப்படும். மேற்கு உலக நாடுகளில் கூட இந்த வசதி குறைவு. இதற்கு பின்னால் 1970களில் மாணவர்களும், இளைய தலைமுறையும் உருவாக்கிய போராட்ட சூழல் காரணம். அன்றைய அரசு பிரச்சனையின் காரணத்தை ஆய்வு செய்தபோது பொழுதுபோக்கு இல்லாமல் மனஇறுக்கத்துடன் இளைய தலைமுறையினர் இருப்பதை கண்டுபிடித்தது. பிறகென்ன ஊரெல்லாம் பொழுதுபோக்கு வசதியை உருவாக்கியது அரசு. அதன் பின்னர் பிரச்சனையும் ஓய்ந்தது. இன்று ஹாங்காங்கில் வேலையில்லாமை பற்றி அப்படியான ஆய்வுகள் இல்லை என்பது வேறு விடயம். அன்று போராடிய இளைஞர்களை அடித்து நொறுக்கியிருந்தால், இன்றைய ஹாங்காங் வேறுமாதிரியாக இருந்திருக்கும்.

"மனிதத்தன்மையைத் தடைப்படுத்துவதற்கு மதங்களின் பெயரால் ஏற்பட்டுள்ள பழக்கவழக்கங்களே காரணமாயிருப்பதால்,

அப்படிப்பட்ட எல்லா மதங்களும் மறைந்து போக வேண்டுமென்றும், மதங்கள் ஒழியும் வரை மனிதர்களுக்குள் சகோதரத்துவம் வளராதென்றும் இம்மாநாடு கருதுகிறது." என்கிறது 1931 விருதுநகர் சுயமரியாதை மாநாட்டு தீர்மானம். "நமது நாட்டைப் பொறுத்தமட்டில் 'பிறவிப்படியும் தொழில்படியும்' ஒழிந்த நிலைதான் சமதர்மநிலை என்று சொல்லப்படுவதாகும்." பெரியாரும், சுயமரியாதைக்காரர்களும் மதத்தை எதிர்க்க அடிப்படை காரணம் என்ன என்பது இந்த தீர்மானத்தில் விளங்குகிறது.

இந்தியா முழுவதும் இன்று பரவியுள்ள மதவெறியை பார்க்கும் போது, "இந்திய நாட்டில் தோன்றியுள்ள மத வேற்றுமைகளும், பகைகளும் அழிய வேண்டுமானால், அறிவுள்ள இந்தியர்கள் முதலில் மத உணர்ச்சியைப் புறக்கணிக்க வேண்டுமென்று முடிவு செய்கிறது" என்கிற 1931 விருதுநகர் சுயமரியாதை மாநாட்டு தீர்மானம் எவ்வளவு பொருத்தமானது என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. ஆன்மீகம் என்பதும் மதம் என்பதும் வேறுபட்டவை. மதம் என்பது நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்பின் பின்னால் அது சொல்லக்கூடிய அனைத்தையும் ஏற்ற சார்ந்திருப்பு. தான் சார்ந்துள்ளது தான் உண்மை, அது தான் வேதம், அது தான் இறைநெறி, அது தான் சொர்க்கத்திற்கு வழி என வியாபார நிறுவங்களைப் போல சண்டையிடும் நிலை மதம் சார்ந்தது.

ஆன்மீகம் என்பது அறநெறியை போதிப்பது என்கிறார்கள் ஆன்மீகவாதிகள். அய்யனாரை வழிபட்டாலும், அல்லாவை தொழுதாலும், கிருஸ்ணனை கும்பிட்டாலும், இயேவை வேண்டினாலும், புத்தனை ஏற்றுக்கொண்டாலும், சுயமரியாதை மீது பற்றுகொண்டு மனிதநேயமாக இருந்தாலும் நாம் மனிதர்கள் ஒரு இனம் என்னும் ஆழமான எண்ணமே அறநெறியாக இருக்க இயலும். போட்டி போட்டு ஒருவரை ஒருவர் தாக்குவதும், தடுப்பதும், ஆதிக்கம் செலுத்துவதும் ஆன்மீகத்தில் எந்த வகை? இந்த வெறி மதம் சார்ந்தது தானே தவிர அறநெறியோ ஆன்மீகமோ அல்ல. அறநெறியாளர்களாக இருந்தால் இவ்வகை செயல்களை செய்யமாட்டார்கள். இப்படிப்பட்ட செயல்கள் நடக்கும் காலங்களில் பெரியார் போன்ற போராட்டக்காரர்கள் சமுதாயத்திற்கு அவசியம் தேவை. அவர்கள் உருவாக்குகிற போராட்டங்கள் என்னும் காலக்கண்ணாடியை பார்த்தாவது நாம் திருந்தியிருக்கிறோமா? இது போராட்டக்காரனின் குற்றமல்ல. மதக் கலவரக்காரர்களின் குற்றம்.

இந்து மதத்தின் வர்ணாஸ்ரம சாதி அடிமைத்தனத்தையும், அறிவுக்கு ஒவ்வாத மூடப்பழக்கங்களையும் எதிர்த்ததே பெரியாருடைய கொள்கை. பெரும்பான்மை தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை இந்து மதத்தின் சாதி ஆதிக்க வேதங்கள் நாயை விட கேவலமாக நடத்தியதை உடைக்கவே பெரியாரின் கட்டளைகள் "கடவுள் இல்லை. கடவுள் இல்லவே இல்லை. கடவுளை கற்பித்தவன் முட்டாள். கடவுளைப் பரப்புபவன் அயோக்கியன். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி" என உச்சமாக அமைந்தது. இந்துமத புராணத்தில் சிக்கி அடிமைப்பட்டு கிடந்தவர்களிடம் தட்டியெழுப்ப விடுத்த அறைக்கூவல் தான் இது. இந்த அறைக்கூவல் பிராமணீய ஆதிக்கத்தில் கற்பிக்கப்பட்ட கடவுளை கட்டுடைப்பதாகவே அமைந்தது. பெரியார் நேரிய, உயரிய சுயமரியாதையுடன் நடத்தும் வழியை ஏற்க தயாராகவே இருந்தார்.

"உருவமற்ற கடவுளை, யாரையும் ஒன்று போல் சிருஷ்டிக்கும் கடவுளை, காசு, பணம், செலவு செய்யாமல் வணங்கக்கூடிய கடவுளை, மூடநம்பிக்கைக்கு இடமில்லாத தன்மையில் யாரும் வணங்கலாம்"

(சுயமரியாதை போராட்டத்தின் உச்சத்தில் பெரியார் 1948ல் சொன்னவை இவை) என்னும் அவரது கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன.

இந்த அடிப்படையில் தான் 1954ல் உலக பௌத்த சங்கத்தலைவரான டாக்டர் மல்லை சேகரா போன்ற அறிஞர்களை அழைத்து பௌத்த சங்கங்களை 'இந்து மதம்' அழித்தது பற்றிய பிரச்சாரங்களை மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக 'புத்த பெருமாள் விழா' கொண்டாடப்பட்டது. 1954 டிசம்பர் 3ல் மனைவி மணியம்மையாருடன் பர்மாவிற்கு சென்று உலக பௌத்த மாநாட்டில் கலந்துகொண்டார். பௌத்த கொள்கைகளால் பெரியார் கவரப்பட்டிருந்த போதும் பௌத்த சமயத்தில் இணையவில்லை. பௌத்த சமயத்தில் புத்தரையும் பிற தெய்வங்களையும் தெய்வமாக மாற்றி வழிபடும் முறையும், பௌத்த மடங்களில் உருவாகியிருந்த மூடநம்பிக்கைகளும் சடங்குகளும் தான் அதற்கான அடிப்படை காரணம். இந்து சமயத்தை சார்ந்த ஆதிக்க சாதியினரின் தாக்கம் பௌத்த நெறியில் ஊடுருவியதன் விளைவு இந்து மத அடையாளங்கள் பௌத்த நெறியிலும் புகுத்தப்பட்டு மதமாக்கப்பட்டது. புத்தருக்கும், பிள்ளையாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 ஆனால் தாய்லாந்து போன்ற நாடுகளில் பௌத்த விகாரைகளில் பிள்ளையார் வழிபாட்டை காணலாம். இந்த வழிபாட்டு முறைகள் மன்னர் காலங்களிலும் அதன் பின்னருமே புகுத்தப்பட்டவை. அதனால் தான் அண்ணல் அம்பேத்கார் பௌத்தமதத்திற்கு மாறிய வேளை பெரியாரை அழைத்தபோதும் அன்பாக மறுத்து அண்ணலுக்கு தனது ஆதரவை வழங்கினார். இந்த ஆதரவு வர்ணாஸ்ரம சாதி அடிமைத்தனத்தை விட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விடுதலை என்ற பார்வையில் அமைந்தது.

பெரியார் இராமாயணத்தை வெறுத்தது, பிள்ளையார் சிலையை உடைத்தவை போன்ற செயல்கள் ஆரிய ஆதிக்கத்தை எதிர்க்கும் விதமாக தான் அமைந்தன. அதனால் தான் ஆரிய கடவுள்களையும், அடையாளங்களையும் கடுமையாக எதிர்த்தார். இந்த போராட்டங்கள் சுதந்திரப் போராட்டத்தில் அன்னிய நாட்டு பொருட்களை எரித்து சுதேசி இயக்கம் உருவானது போன்று அந்த காலகட்டத்தில் அமைந்த ஒரு போராட்ட முறை. பெரியார் எந்த வழிபாட்டுத்தலங்களிலும் அத்துமீறி குழப்பம் ஏற்படுத்தவில்லை.ஆதிக்க சாதியினரால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கோவிலில் வழிபடும் உரிமை மறுக்கப்பட்டதால் தான் வைக்கம் கோவில் நுழைவுப் போராட்டத்தை பெரியார் தலைமையேற்று நடத்தினார்.

Wednesday 27 November 2013

இலங்கைத்தமிழரின் திருமணம்!

இலங்கைத் தமிழர்களிடையே காணப்படும் திருமண முறை பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி உள்ளது. தமிழ்ப் பண்பாட்டில் திருமணம் என்பது நிரந்தரமானது. அது ஆயிரங்காலத்துப் பயிர் என்று கூறப்பட்டு திருமணத்தின் முன் பல்வேறு விஷயங்கள் நுணுக்கமாக ஆராயப் படுகின்றன. திருமணம் பேசுவதற்கு முன் சாதி, சமயம், அந்தஸ்து ஆகியன ஒன்றாகவுள்ளனவா என்பது பார்க்கப்படும்.

ஏனெனில் ஒரே சூழலில் வாழ்ந்தவர்களுக்கு ஒருவருடன் ஒருவர் ஒத்துப் போவது எளிது என்று கருதப்படுகிறது. இதனால் இவற்றில் மாறுபாடுள்ளவர்கள் அதாவது சாதி, சமய, அந்தஸ்து வேறுபாடுகள் கொண்டவர்கள் காதல் வசப்படும் போது அது பெரும்பாலும் முற்றாகவே பெற்றோராலும் சமூகத்தாலும் நிராகரிக்கப்படுகிறது. இந்த மூன்றுடன் குணநலம், குடும்பப் பின்னணி, சாதகப் பொருத்தம், சீதனம் என்பனவற்றின் பொருத்தத்திலேயே திருமணம் தீர்மானிக்கப்படும்.

ஆணுக்கு தொழில், குணம், சுமாரான அழகு என்பன முக்கியமாகக் கவனிக்கப்பட பெண்ணுக்கு வயது, அழகு, குணம், கல்வி, சீதனம் என்பன முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுகின்றன. ஒரு காலத்தில் ஒரு பெண் திருமணம் செய்வதற்கு A B C D E F என்பன முக்கியமாகத் தேவை என்றும் அப்போது தான் ஆண் G என்று அதாவது good என்று சொல்லி தாலியைக் கட்டுவான் என்றும் வேடிக்கையாகச் சொல்லப்பட்டதுண்டு. அதாவது A-Age, B-Beauty, C-Caste, D-Dowry, E-Education, F-Family status.

இலங்கையில்  திருமண உறுதிப்பபாட்டுக்குப் நிரந்தர வருமானம் முக்கியமாகக் கருதப்பட்டதால் ஆரம்பத்தில் அரச பதவி பெற்றவர்களை நாடி பெண்ணைப் பெற்றவர்கள் ஓடினர். கோழி மேய்த்தாலும் கோறணமேந்தில் மேய்ப்பவருக்குப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பதே ஒரு காலத்தில் நியதியாக இருந்தது. தொழில் அடிப்படைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் தொழில் பெறுவது சுலபமாகவும், பெற்ற தொழில் நிரந்தரமானதாகவும் இருந்ததால் திருமணச் சந்தையில் அவர்கள் முன்னிடத்தை வகித்தார்கள்.

அவர்களில் ஒருவரைத் தங்கள் பெண்ணுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்கு பலர் பண அடிப்படையில் போட்டி போட்டார்கள். அதிக பணம் கொடுக்க வல்லவர்கள் ஒரு வைத்திய கலாநிதியையோ அல்லது பொறியியலாளரையோ பெற்றனர். இதனால் படித்து நல்ல தொழில் பெற்ற இளைஞர்களது பெற்றோர் பெண்ணைப் பெற்றவர்களைத் தம் விருப்பபடி ஆட்டிப்படைக்கும் ஆற்றல் பெற்றிருந்தனர்.

மகனைப் படிப்பித்த பணத்தை மட்டுமின்றித் தாம் பெற்ற பெண்களுக்கு வழங்கவுள்ள சீதனப் பணத்தையும் பெண்ணைப் பெற்றவரிடமிருந்து சிலர் கறந்து விடுவார்கள். இதனால் யாழ்ப்பாணத்தில் ஒரு காலத்தில், பணமும் தொழில் அடிப்படையில் கல்வி கற்ற ஆண்பிள்ளைகளும் இல்லாதவர்கள் தமது பெண்களுக்குத் திருமணம் செய்யப் பெரிதும் சிரமப்பட்டனர்.

ஆயினும் பின்னர் நாட்டு நிலையால் பலதரப்பட்ட நிலைகளில் உள்ள இளைஞர்களும் லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி, கனடா என்று போகத் தொடங்கியதும் நிலமையில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. எல்லா நிலைகளிலும் பணம் புழங்கத் தொடங்கியதும் தமது பெண்களுக்குப் பெருமளவு சீதனம் கொடுத்துத் திருமணம் செய்து கொடுக்கப் பலரால் முடிந்தது.

இந்தியாவைப் போலன்றி யாழ்ப்பாணப் பாரம்பரியத்தில் ஒரு குடும்பச் சொத்தும் வீடும் மகளுக்கு வழங்கப்படுவதே வழக்கம். இதற்கு அடிப்படையில் ஒரு காரணம் உண்டு. பெற்றோர் வயது முதிர்வடையும் போது மகளுடன் வாழச் செல்வது வழக்கம். அவர்கள் வழங்கிய வீட்டாலும் சொத்தாலும் எதுவித மனப்பாதிப்புகளுமமின்றி அவர்கள் உரிமையுடன் அங்கு வாழ முடிந்தது. இந்த நல்ல முறை காலப்போக்கில் மாப்பிள்ளை பகுதியினரின் பேராசையால் பெண்ணைப் பெற்றவரிடம் அதிக பணத்தைப் பலவந்தமாகக் கேட்கும் சீதன முறைக்கு வித்திட்டது எனலாம்.

அடுத்ததாக ஜாதகம் பார்த்தல். ஜாதகம் பார்த்தலே திருமணப் பேச்சில் முதலாவது கட்டமாகக் கருதப்படுகிறது. சாத்திரிகள் ஜாதகப் பொருத்தம் சம்பந்தமாகக் கூறுவது வேத வாக்காகக் கொள்ளப்படுகிறது. சாத்திரத்தைத் தொழிலாகக் கொண்ட பலருக்குப் பெரும்பாலும் திருமணப் பொருத்தம் பார்த்தலே பிரதான வருவாய்க்கு வழி வகுப்பதாக உள்ளது. யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களில் பெரும்பான்மையானவை ஜாதகப் பொருத்தம் பார்க்கப்பட்ட பின்னரே நடைபெறுகின்றன.

திருமணம் செய்யப்படவுள்ள ஆணோ பெண்ணைப் பற்றி வெறும் கேள்வியறிவின் மூலம் முற்றாக அறிந்து கொள்ள முடியாத நிலையில் ஜாதக ரீதியாக பெறப்படும் சில தகவல்கள் சரியான முடிவை எடுக்க உதவுவதாக நம்பப்படுகிறது. சிலர் எண் பொருத்தமும் பார்ப்பதுண்டு. ஜாதக, எண் பொருத்தங்களில் உண்மை உண்டோ இல்லையோ, அதிகமாக வந்துள்ள சாதகக் குறிப்புகளில் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கேற்ப எண்ணிக்கையை வரையறுப்பதற்கும், அதிகம் விருப்பமில்லாத குடும்பங்களில் இருந்து வந்த சம்பந்தங்களை ஒதுக்குவதற்கும் இப் பொருத்தம் பார்த்தல் பலருக்கு உதவியது எனலாம்.

முந்திய காலத்தில் பெண்களுக்குத் தமக்கு வரவுள்ள கணவனைத் திருமணத்தின் முன் பார்ப்பதற்கும் அவனைப் படித்திருக்கிறதா இல்லையா என்று கூறுவதற்கும் சுதந்திரம் வழங்கப்படவில்லை. ஆயினும் பெண்கள் அதிக அளவில் படித்துப் பட்டங்கள் பெற ஆரம்பித்த பின்னர் பெற்றோர் ஓரளவில் அவர்கள் விருப்பத்திற்கும் மதிப்பளிக்க ஆரம்பித்தனர். ஆயினும் சீதன முறையால் பெண்கள் இந்தச் சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை. தங்களிடம் உள்ள பொருளாதார வளத்திற்கேற்ப வரும் சம்பந்தங்களில் ஒன்றைத் தம் பெண் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்குப் பெற்றோர் ஆளாகினர்.

பெண்ணின் படிப்புக் கூடக்கூட திருமண விஷயத்தில் அவளது சுதந்திரம் குறையலாயிற்று. படித்த பெண்ணுக்குரிய ஒரு படித்த ஆணைத் தேடுவதற்குப் பெற்றோர் அதிக விலை கொடுக்கவேண்டி இருந்தது. ஏனெனில் படித்துப் பட்டம் பெற்ற ஆணுக்குக் கலியாணச் சந்தையில் பெறுமதி அதிகமாகவிருந்தது. படித்த பெண்களுக்கு ஏற்ற வகையில் அதிக சீதனம் கொடுத்து ஒரு படித்த இளைஞனைத் தேடிப்பிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. இதன் காரணமாகச் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த படித்த பெண்களின் திருமணம் பெற்றோருக்கு அதிக பிரச்சினைக்கு உரியதொன்றாயிற்று.

இவை இப்படி ஒருபுறம் இருக்க இந்த கல்யாண முறைகளில் பல மாறுதல்களை எம்மக்கள்  கொஞ்சம்  கொஞ்சமாக  கொண்டுவர தொடங்கிவிட்டனர்.

 பெரும்பாலும் புலம்பெயர்ந்த பின் மிகவும் அதிகளவு மாற்றங்களைக் கொண்டது எனலாம். வேற்று இன மக்களின் குறிப்பாக வட இந்திய மக்களின் முறைகளில் நாட்டம் கொண்டு ஒவ்வொருவரும் தமக்கு விரும்பிய படி சிறு சிறு மாற்றங்களை ஏற்படுத்தினர்.

குறிப்பாக மணமகளின் குஜராத் சேலைகட்டும் முறை, மணமகனின் குருதார் உடை என்பனவற்றிலிருந்து அனைத்துமே மாற்றங்கள் பெறத்தொடங்கிவிட்டது.

இதைவிட வேறு ஊர் சம்பந்தம் ஏற்படும் போது, அவர்களும் ஆளாளுக்கு இது எங்கள் முறை, இது எங்கள் பழக்கம் என்று வாதிட, புதிதாய் சில மாற்றங்கள் தோன்றத்தொடங்கியும் விட்டன.

பல்வேறு கிரியைகளைக் கொண்டு நீண்ட நேரமாகச் செய்யப்பட்டு வந்த சடங்கு இன்று  குறுகிய   நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய வகையில் சுருக்கப்பட்டுள்ளது.

பிள்ளையார் பூசை, காப்புக் கட்டுதல், மணப்பெண்ணை அவளது பெற்றோர் மணமகனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தல், மணமகன் மணமகளுக்குப் புடவை முதலியவற்றைப் பரிசளித்தல், தெய்வம், சபையோர், அக்கினி சாட்சியாகத் தாலி கட்டுதல், அக்கினியை வலம் வருதல், அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், மாலை மாற்றுதல், பெரியோரிடம் ஆசி பெறுதல் ஆகியன இந்துத் தமிழரது திருமணங்களில் முக்கிய கட்டங்களாகக் கருதப்படுகின்றன. இந்த அடிப்படைக் கிரியைகளை விட வேறும் பல அம்சங்கள் காலத்திற்கும் வசதிக்கும் இடத்திற்கும் ஏற்றவாறு சேர்க்கப் பட்டும், நீக்கப்பட்டும் விட்டது.

இந்து சமயத்தின் படி திருமணம் என்பது ஒரு ஆணையும் பெண்ணையும் உள்ளத்தாலும் உடலாலும் ஒன்றுபட வைத்தலாகும். திருமணத்தின் பின் அவர்கள் உள்ளத்தால் ஒன்றுபட வேண்டும். கணவனைப் பிரிந்து வாழும் மனைவி நீர் இல்லாத நீரோடையையும் ஆன்மா இல்லாத உடலையும் போன்றவள் என்கிறது இராமாயணம்.

சிலப்பதிகாரத்திலே கோவலன் கண்ணகி திருமணத்திலேயே முதன் முதல் மணமக்கள் தீ வலம் வருதல் குறிப்பிடப்படுகிறது. இந்த வடநாட்டு முறை அந்தக் காலத்திலேயே தமிழ் நாட்டில் அறிமுகமாயிற்று. அக் காலத்திலிருந்து தீயை வலம் வரும் முறை தமிழரது திருமணங்களில் இடம் பெறலாயிற்று. ஆயினும் தீயை வலம் வருவதன் எண்ணிக்கை இடத்திற்கு இடம் வேறுபடுகிறது. இலங்கைத் தமிழ் இந்துக்களின் திருமணங்களில் பொதுவாக மூன்று தடவைகள் வலம் வரும் முறையே காணப்படுகிறது.

இந்து சமய மரபின் படி மணமக்கள் ஏழு தடவைகள் தீயை வலம் வருதல் வேண்டும் என்று கூறப்படுகிறது. முதல் நான்கு தடவைகளும் மணமகள் முன் செல்ல மணமகன் பின் தொடர்வான். அப்போது மணமகள் தனது கணவனிடம் ஏழு வேண்டுகோள்களை விடுப்பாள் என்று கூறப்படுகிறது.

    * 1. எந்த நேரத்திலாவது நீங்கள் சமயக் கிரியைகளில் கலந்து கொள்ளவோ அல்லது யாத்திரை செல்லவோ வேண்டியிருப்பின் அதற்கு முன் எனது விருப்பத்தைக் கேட்டு எனது சம்மதத்தைப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
  
 * 2. எந்த நேரத்திலாவது நீங்கள் பிதுர்களை வழிபட விரும்பினால் என்னையும் அதில் இணைந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    * 3. எந்த நேரத்திலாவது எனது பெற்றோர் அவமானம், வறுமை, நோய் ஆகியவற்றை எதிர்கொள்ள நேரும் போது நீங்கள் எனது கணவன் என்ற முறையில் அவர்களது துன்பத்தை நீக்க உதவ வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

    * 4. எந்த நேரத்திலாவது நீங்கள் எங்கள் சமூகத்திற்கு சேவை செய்வதற்கோ அல்லது கோயில் கட்டுவதற்கோ அல்லது சமய சேவை செய்வதற்கோ விரும்பினால் அந்தச் செயற்பாடுகளில் உங்களுடன் இணைந்து கொள்வதற்கு நான் அனுமதிக்கப்பட வேண்டும்.

    * 5. எந்த நேரத்திலாவது நீங்கள் மகிழ்ச்சிக்காகவோ அல்லது வேலை விஷயமாகவோ வீட்டை விட்டு வெளியூர் அல்லது வெளிநாடு போக நேரிட்டால் வீட்டில் எமது நலன்கள் பாதுகாக்கப்படும் என்ற உறுதி மொழியை உங்களிடமிருந்து பெற விரும்புகிறேன். அத்துடன் அவ்வாறு போவதன் முன்னர் எனது சம்மதத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

    * 6. எந்த நேரத்திலாவது நீங்கள் கொடையளிக்க, பொருள்களையோ பணத்தையோ கொடுக்க வாங்க விரும்பினால் அதற்கு முன்னர் எனது சம்மதத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்,

    * 7. எங்களது வயது முதிர முதிர உங்கள் அன்பும் விருப்பமும் வளர்ந்து முதிர வேண்டும் என்று இப்போது நான் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

மணமகளின் இவ்வேழு கோரிக்கைகளுக்கும் மணமகன் சம்மதம் தெரிவித்த பின்னர் அவன் வழிநடத்த மணமகள் தொடர இருவரும் தீயை வலம் வருவார்கள்.
   
அப்போது மணமகன் மணமகளுக்கு ஐந்து கோரிக்கைகளை முன் வைப்பான்.


    * 1. எங்கள் குடும்பத்தின் கௌரவமான பெயருக்கு ஓரு போதும் களங்கம் ஏற்படாத வகையில் நீ வீட்டிலும் சமூகத்திலும் நடந்து கொள்ள வேண்டும்.
   

* 2. நான் வீட்டில் இல்லாத நேரங்களில் எங்கள் வீட்டுக்கு வரும்
விருந்தாளிகள் தங்குவதற்கு வசதிகள் செய்து கொடுத்து, எங்கள் தர்மத்தின் படியும், வழிமுறைகளின் படியும், சமுகத்தில் எங்களுக்குள்ள அந்தஸ்த்தின் படியும் நீ அவர்களை உபசரிக்க வேண்டும்.
  

 * 3. எப்போதாவது எங்கள் இருவரிடையேயும் முரண்பாடுகள் தோன்றினால் நீ அவற்றை ஒருபோதும் மனதில் வைத்திருக்கக்கூடாது. ஏனெனில் அவ்வாறான வேறுபாடுகள் ஒவ்வொரு வீட்டிலும் வருவது இயல்பாகும். அவ்வாறான வேறுபாடுகள் எழும் நேரத்தில் நீ வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.நீ அவ்வாறு வெளியேறுவது சமுகத்தில் எனக்கு அவமானத்தையும் அவதூறையும் கொண்டு வரும். அவ்வாறான அவமானமும் அவதூறும் வீட்டின் ஒருமைப்பாட்டைக் குலைக்கும். அத்துடன் அது எமக்குள் பிரிவினையை ஏற்படுத்தும். கணவன் மனைவி பிரிதல் என்பது எமது தர்மத்தின் விதிமுறைக்கும் எமது முன்னோரின் குடும்ப வரலாற்றுக்கும் ஒவ்வாதது.
 

  * 4. நீ வீட்டு வேலைகளை நேரம் தவறாது அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் தினமும் செய்யவேண்டும். அவ்வாறாயின் அது என்னை அசௌகரிகங்களுக்கு உள்ளாக்காது. நீ எங்கள் வீட்டின் தெய்வமாவாய்.
   

* 5. இன்று கடவுளின் அருளால் நான் சௌகரிகமான ஒரு வீட்டில் உன்னுடன் வாழலாம் என்று நம்புகிறேன். ஆனால் துன்பங்கள் எமக்கு வருமாயின் விருப்பத்துடனும் நம்பிக்கையுடனும் நீ என்னுடன் வாழவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். என்னுடைய துன்பம் உன்னுடையதுமாகும். என்னுடைய வசதியின்மை உன்னுடையதுமாகும். என்னுடைய ஏழ்மை உன்னுடையதும் ஆகும். நான் உன்னில் அன்புகொள்ளவும், உன்னை வாஞ்சையுடன் போற்றவும், உனது நன்மைக்காக உழைக்கவும் உறுதி பூண்டுள்ளதைப் போல நீயும் உறுதி பூண வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன். எப்போதாவது நோயின் காரணமாக உனது நலன்களுக்காக என்னால் உழைக்க முடியாமற் போனால் அப்போது நீ எனக்கு உதவ வேண்டும்.

மணமகள் இக்கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட பின்னர் அவள் மணமகனின் இடதுபுறத்தில் இடமெடுத்து நிற்பாள். இங்கே குறிப்பிடப்பட்ட 12 கோரிக்கைகளும் இல்லறம் இனிதாக நடைபெறுவதற்காக உருவாக்கப்பட்டவை. இவற்றுள் சில இக்காலத்துக்கு பொருத்தமற்றவையாக காணப்பட்ட போதும் பல காலத்தைக் கடந்து எக்காலத்துக்கும் பொருத்தமானவையாகவே காணப்படுகின்றன. கணவன் மனைவி ஆகிய இருவரும் காரியங்கள் அனைத்திலும் மனம் ஒத்து முடிவு செய்ய வேண்டும் என்பதையும் இருவரும் குடும்ப நலனுக்காக ஒத்துழைக்க வேண்டும் என்பதையும் இக் கோரிக்கைகள் காட்டி நிற்கின்றன.

கிறீஸ்தவ திருமணங்களிலும் மணமக்கள் இவ்வாறான வாக்குறுதிகளைப் பரிமாறிக் கொள்கின்றனர்.


      இந்நாளிலிருந்து நான் உன்னை எனது மனைவியாக அல்லது கணவனாக ஏற்று, நல்லதிலும் கெட்டதிலும், செல்வத்திலும் வறுமையிலும், நோயிலும் ஆரோக்கியத்திலும், சுகத்திலும் துக்கத்திலும் ஒன்றாக வாழ்ந்து உன்னில் அன்பு பாராட்டி மரணம் எம்மைப் பிரிக்கும் வரை உனது நம்பிக்கைக்கு உரிய வகையில் வாழ்வேன் என்று உறுதி கூறுகிறேன்.

என்று மணமக்கள் திருமணத்தன்று உறுதி கொள்கின்றனர். கஷ்டம் வரும் போது ஒருவரையொருவர் தேற்றுதலும், உயரிய இலக்குகளை அடைய ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துதலும், ஒருவர் அழும் போது மற்றவர் அழுவதும் சிரிக்கும் போது சிரித்தலும் எப்போதும் ஒழிவுமறைவின்றி ஒருவருக்கொருவர் உண்மையாயிருத்தலும் இந்த உறுதி மொழிகளில் பொதிந்துள்ளன. சுருக்கமாகச் சொல்வதானால் வாழ்விலும் தாழ்விலும் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே அவற்றின் சாராம்சம். எல்லாத் திருமண வாக்குறுதிகளும் மனமொத்த நீண்ட இல்லற வாழ்வையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன.

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் சீர்திருத்தக் கலியாணங்கள் சில இடம்பெற்றன. திமுக செல்வாக்கினால் இம்முறை ஏற்பட்டு இருக்காலாம். இந்துக் கலியாணங்களை நடத்தும் பிராமணக் குருக்களும் அவர் நடத்தும் கிரியைகளுமின்றி பெரியவர் ஒருவர் தாலியை எடுத்துக் கொடுக்க அதை மணமகன் மணமகளது கழுத்தில் அணிவிப்பதும் பின் மணமக்கள் மாலை மாற்றிக் கொள்வதும் அவர்களை திருமணத்துக்கு வந்தோர் வாழ்த்துவதுமே இத் திருமண முறையின் முக்கிய அம்சங்களாகும்.

திருமண வீடுகளில் வழமையாகக் கேட்கும் வாழ்த்துகளில் ஒன்று பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்பதாகும். அப் பதினாறு பேறுகளும் என்னென்ன என்பது பலருக்கும் தெரியாது. அது பதினாறு பிள்ளைகள் என்று கொள்ளப்பட்டு அதனோடு தொடர்பாக சுவையான கேலியும் சிரிப்பும் திருமண வீடுகளில் எழுவதுண்டு. அது ரசனைக்குரியதாக இருந்த போதும் அந்தப் பதினாறு பேறுகளும் என்ன என்று இன்று தெரிந்து கொள்வோம்.

நம் முன்னோர்கள் இல்லறம் மகிழ்ச்சிகரமாக அமைவதற்கு வேண்டிய பதினாறு விஷயங்களை அந்த வாழ்த்தில் பொதிந்து வைத்துள்ளனர். புகழ், கல்வி, உடல் வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லுழ்(a favourable destiny), நுகர்ச்சி(enjoyment), அறிவு,(wisdom) அழகு, பெருமை, இளமை, துணிவு (courage), நோயின்மை (perfect health), நீண்ட வாழ்நாள்.

இந்திய மண்ணில் பிறந்த முக்கிய சமயங்களுள் சமணம் பௌத்தம் ஆகிய இரண்டும் துறவினால் மட்டுமே ஒருவர் இறுதி நிலையை அடைய முடியும் என்று கூற, இந்து சமயம் மனித மனதில் எழும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இல்லற இன்பத்தை முறைப்படி அனுபவித்துப் படிப்படியாக வாழ்க்கை நிலைகளைக் கடந்து இறுதியிலேயே வாழ்வைத் துறத்தல் பற்றிக் குறிப்பிடுகிறது. மனித உணர்வில் காமம் முக்கிய உணர்வு என்பதை ஏற்றுக் கொண்டதால் மட்டுமன்று இல்லறத்தை அது ஏற்றுக் கொண்டது.

சிற்றின்பத்தைக் கட்டுப்பாடான முறையில் அனுபவிப்பதுடன் பல வித தர்மங்களைச் செய்ய இல்லறம் வழிவகுப்பதாலேயே அதனை ஒரு தர்மமாக அது ஏற்றுக்கொண்டது. தெய்வம், இறந்த முன்னோர், பிற மனிதர், விலங்குகள் ஆகியவற்றுக்கு மனிதன் தனது சேவையைச் செய்ய இந்த இல்லறம் வழிவகுக்கிறது. தனது குடும்பத்துடன் சமுகத்திற்குச் செய்ய வேண்டிய சேவையையும் இது உள்ளடக்குகிறது.

திருமணநாளில் மணமகனும் மணமகளும் எடுத்துக் கொள்ளும் தீர்மானங்கள் இவற்றையே குறிக்கின்றன. அத்துடன் தங்கள் சந்ததி வளர்வதற்கு குழந்தைகளைப் பெறுவதும், அவர்களுக்கு வழிகாட்டி முறைப்படி தங்கள் குடும்பப் பெறுமதிகளையும் பண்பாட்டினையும் அவர்கள் தொடர்ந்து பேணுவதை உறுதி செய்வதும் இல்லறத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.

திருமணத்துடன் ஆரம்பமாகும் இல்லறம் ஒருவருக்கு மனித இனத்தை நேசிப்பதற்கான அடிப்படைப் பயிற்சியை வழங்குகிறது. கணவன் மனைவியிடையே ஏற்படும் அன்பு குழந்தைகளில் விரிவடைந்து சமுகம், மனித இனம் என்று விசாலிக்க இல்லறம் உரிய பயிற்சியை வழங்குகிறது. இதனாலேயே இல்லறம் எல்லா தர்மங்களுக்கும் அடிப்படையாக அமைகிறது. கணவனுக்கும் மனைவிக்குமிடையே கருத்தொருமித்த நீடித்த அன்பு ஏற்பட்டாலேயே இவையனைத்தும் சாத்தியமாகும்.

இதனாலேயே இந்து சமயத்தில் திருமணம் என்பது வாழ்வின் முக்கிய கட்டமாகக் கருதப்பட்டது, இன்றும் கருதப்படுகிறது. அதன் காரணமாகவே அந்த உறவு மிக நீண்ட கால உறவாகக் கருதப்பட்டு வாழ்க்கைத் துணையைத் தெரிவு செய்வதற்குப் பல முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நினைத்தவுடன் வந்து நினைத்தவுடன் பிரிந்து போகக்கூடிய உறவாக அது கருதப்படவில்லை.

அது நிரந்தரமானதாக, அதே சமயம் சுமுகமாக ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அன்புடன் வாழக்கூடிய ஒன்றாகக் கருதப்பட்டது. திருமணம் என்பது இரு மனங்களை மட்டுமன்றி இரு குடும்பங்களை ஒன்றுபடுத்தக்கூடிய வகையில் அமைவதால் அதன் உறுதிப்பாடு நன்கு நிலை நிறுத்தப்படுகிறது.

திருமணத்தின் அடிப்படைக்கரு அப்படியே இருக்கும் பட்சத்தில் சில சின்னச் சின்ன  மாற்றங்கள் ஏற்படுவதை யாரும் பெரிதாக அலட்டிக்கொண்ட மாதிரியும் தெரியவில்லை.

Monday 25 November 2013

கண்ணாடியில் பிம்பமாய் திருக்குறள்! மாணவர் சாதனை!


நூற்றுக்கணக்கான ஆண்டுகளைக் கடந்தும், இன்றைய தேவையை மனதில் வைத்து எழுதியதுபோல, இளமை ததும்பும் திருக்குறளை, சாதனை முயற்சியாகப் பலரும், பலவிதங்களில் சோதித்துப் பார்த்து விட்டனர். 3 வயது சிறுவன் அனைத்து திருக்குறளையும் மனப்பாடமாகக் கூறுகிறான். அரிசியில் ஒரு திருக்குறளை எழுதுகிறார் என அடிக்கடி திருக்குறளை வைத்து சாதனை செய்யும் திறமைசாலிகள் ஆங்காங்கே உருவெடுத்த வண்ணமே உள்ளனர்.

இதே திருக்குறளை, கோவை கற்பகம் மேலாண்மைக் கல்லூரி மாணவர் எம்.மணி, சற்று வித்தியாசமாகப் பதிவு செய்துள்ளார். மனதின் எண்ணங்களை கண்ணாடியாய் காட்டுவது திருக்குறள் என்றால், இவர் எழுதிய திருக்குறள்களோ, கண்ணாடி இருந்தால் மட்டுமே படிக்க முடியும்.

இதென்ன புது முயற்சி என்று கேட்டால், 1330 குறள்களையும் தலைகீழாய், அதாவது கண்ணாடியின் பிம்பங்களாக வடித்துள்ளார் இந்த இளைஞர். இது சாதாரணமாகச் செய்துவிட முடியாத காரியம். ஒரு சிறிய உதாரணம், நமது பெயரை அல்லது ஒரு எழுத்தைத் தலைகீழாய் எழுத முடியுமா என்ற சோதனை செய்தால், பல காகிதங்கள் கிழிக்க வேண்டியிருக்கும்.

ஒரு எழுத்து தலைகீழாய் அதாவது பிம்பமாக எப்படி இருக்கும் என யோசித்துப் பார்த்தாலே குழப்பம் வந்துவிடும். தட்டுத்தடுமாறி ஒரு எழுத்தை எழுதி முடித்தாலும் அது அலங்கோலமாக, குறிப்பிட்ட அளவில் அமைந்துவிடாது. ஆனால் இவரது இன்னொரு முயற்சி என்னவென்றால் ஒரு திருக்குறளுக்கான இடத்தை 5 சென்டிமீட்டர் (நீளம்) X அரை சென்டிமீட்டருக்குள் (அகலம்) அடக்கி விட்டார். ஒரு முழு சார்ட் காகிதத்தில் கால்பாகம் மீதமிருக்கையிலேயே, அத்தனை திருக்குறளையும் எழுதி முடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல். 1330 குறள்களுக்கும் இவர் எடுத்துக்கொண்டது 10 மணி நேரம் மட்டுமே. இளமைத் திருக்குறளுக்கு தலைகீழாய் புது வடிவம் கொடுத்துள்ள மணியிடம் இதுகுறித்து பேசினோம்.

‘எனது சொந்த ஊர் சேலம் அடுத்த ஆத்தூர். தந்தை முத்துச்சாமி, தாயார் மலர்க்கொடி, கூலி வேலை செய்து வருகின்றனர். சிறுவயது முதலே வித்தியாசன முயற்சிகளை அடிக்கடி மேற்கொள்ளும் பழக்கம் வந்தது. திருக்குறள் வாசிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததால் 10-ம் வகுப்பு படிக்கும்போது, அத்தனை குறள்களையும் நேராக எழுதினேன். பின்பு, தலைகீழாய் எழுத பயிற்சி எடுத்தேன். இப்போது, இப்படியும் வேகமாக எழுதக் கற்றுக்கொண்டேன்’ என்கிறார்.

தனது தமிழ் ஆர்வத்தால் ஏற்பட்ட முயற்சி, பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு, இன்று இவருக்குக் கைகூடியிருக்கிறது. இதை சாதனைக்காகவும், விளம்பரத்துக்காகவும் செய்யவில்லை. விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தப் போவதாகக் கூறுகிறார்.

தற்போது ஆத்திச்சூடியை இந்த முறையில் எழுதி வருகிறார். கிரிக்கெட் நாயகன் சச்சினின் வரலாறும், இவரது கையால் தலைகீழாக்கப்பட இருக்கிறதாம்.

இவரது முயற்சியை ஊக்குவித்துவரும் துறை இயக்குநர் சந்திரசேகர் கூறியதாவது: சமீபத்தில் தேசிய கீதத்தை ஒருவர் தலைகீழாய் எழுதியது குறித்து நாளிதழில் செய்தி வந்தபோதுதான், மணியின் திறமை குறித்து நாங்கள் அறிந்தோம். கல்லூரி சார்பில், மேலும் ஊக்குவித்து, அடுத்த கட்டத்துக்கும் இதனைக் கொண்டு செல்வோம் என்றார்.

தமிழ் எழுத்தை நேராக எழுதவே பலரும் படாதபாடுபடும் இந்தக் காலத்தில், தமிழை நேசித்து, அதனைப் புதுவிதமாய் சுவாசிக்கும் இவரது முயற்சி வரவேற்கப்பட வேண்டியது.

வள்ளுவர் வாக்கு!

யானென தன்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்


உடலை 'யான்' எனவும், பொருள்களை 'எனது' எனவும் நினைக்கின்ற மயக்கத்தை அறுத்துவிடுகிறவன் வானோர்க்கும் உயர்ந்த உலகம் சேர்வான்.


விளக்கம்: வாழ்வியல் சுகங்கள் மீதும் இந்த உடல் மற்றும் உயிர் மீதும் அதீத ஆசைகளைக் கொண்டிருந்தால் அவற்றை விட்டு மீள முடியாது. இறப்பிற்கு பின்னும் ஆத்மா இந்த பூலோக ஆசைகள் மீதே சஞ்சரித்துக் கிடக்கும். பிறகு நிம்மதியான பிரபஞ்சத்தோடு கலக்க முடியாமல் மீண்டும் விட்டுப் போன இடத்தைத் தேடி ஆத்மா வந்தடையும். இது ஆத்மா சாந்தியடையும் நிலையினைக் கெடுத்துவிடும்.


அவ்வாறு உடல், பொருள்கள் மீது எனது என்று பற்று வைக்காமல் நான் என்பது ஆத்மா தான். உடலும் பொருளும் நாம் வாழ உதவும் ஒரு கருவியே என்று மனதார நினைத்துக் கொண்டால், இறப்பிற்குப் பின்னும் ஆத்மா வாழ்ந்து வந்த பொருள்கள் மீது ஆர்வம் கொள்ளாது கற்ப்பனைக் கெட்டாத இந்த பரந்த பிரபஞ்சத்தில் சஞ்சாரித்து அதனுடன் கலந்துவிடும்.


இந்த பக்குவம் ஒரே நாளில் வந்து விடாது. தினம் தினம் நாம் ஆத்மா என்பதை யார் ஒரு முறையேனும் தியானிக்கிறார்களோ அவர்களுக்கு மெல்ல மெல்ல கைகூடும். இன்பமும் துன்பமும் ஒன்றாகும். ஆத்மா சமநிலை அடையும். காலம் கடந்த பின் எந்த தடுமாற்றமும் இல்லாமல் நிம்மதியான மேலுலகம் அடைவார்கள்.


இதையே வள்ளுவர் இரண்டடிகளில் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்.



ஒரு ஜென் குருவிடம் ஞானம் பெற்று வந்த சீடன் ஒருவனுக்கு தேகாபிமானம் மட்டும் குறையவே இல்லை. உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் ஆசையும் கூடவே பயணித்தது.


உயிர் மீது கொள்ளும் ஆசை உடலைக் காக்கச் சொல்லும். உடல் மீது கொள்ளும் ஆசை அதனைக்காக்கும் பொருட்டு பொருளீட்ட வைக்கும். பொருளீட்டத் துவங்கினால் அதற்கு எல்லையே இல்லாமல் போகும். விரும்பியதை அடைய முற்படுவதிலேயே பவகாரியங்களும் தோன்றிவிடுகிறது. இத்தகைய ஆசைகள் முடிவற்றவை. எனவே பற்றுதல் அற்று இரு என்று சீடனுக்கு எவ்வளவோ போதித்தும் அவன் கேட்கவில்லை. சரியான தருணம் வரும் போது அவனுக்கு உணர்த்தலாம் என்று குரு காத்திருந்தார்.


ஒரு முறை குருவும் சீடர்களும் கடுமையான குளிர் பிரதேசத்திற்குச் சென்றார்கள். அங்கே வெட்ட வெளியில் சீடர்களை அமரவைத்தார் குரு. நேரம் செல்லச் செல்ல குளிர் அதிகமாகிக் கொண்டே இருந்தது.


எல்லோரும் அமைதியாக இருந்த நிலையில், தேகத்தின் மீது பற்றுதல் கொண்ட சீடன் கேட்டான் "குருவே, குளிர் இன்னும் அதிகமானால் என்ன செய்ய?"


குரு கூறினார் "கைகளை தேய்த்து முகத்தில் ஒற்றிக்கொள்"


"குருவே! குளிர் அதை விட அதிகம் என்றால்?"


"ஒரு கம்பளி எடுத்து போர்த்திக் கொள்?"


"கம்பளி போர்த்தியும் தாங்க முடியாத குளிர் என்றால்"


"நெருப்பை மூட்டி கதகதப்பாய் இரு"


"குருவே! நெருப்புக்கும் அடங்காத குளிர் என்றால்?"


"உறைந்து போ!" என்றார் குரு.


உணர்ந்து கொண்டான் சீடன். உடலைப் போர்த்தியிருந்த மொத்த ஆடைகளைகளையும் களைந்து பனியில் அமரலானான்.7D78Q8UZUG6X

'கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசன்' - கதையுடன் விளக்கம்!

தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற பழமொழி இது. இப் பழமொழியின் தாக்கம் பெண்களிடையே மிகுதி என்றால் அது மிகையாகாது. இந்தப் பழமொழியின் தவறான பொருள் விளக்கத்தால் நேர்ந்த விளைவுதான் இது. இந்தத் தவறுக்குக் காரணம் ஒரே ஒரு எழுத்துப் பிழைதான். அந்தப் பிழை என்ன என்று அறிந்து கொள்ளும் முன்னர் இப்பழமொழிக்கு தற்போது கூறப்படும் பொருள் என்ன என்று காண்போம்.

'கல்நெஞ்சன் (முரடன்) ஆக இருந்தாலும் அவன் உன் கணவனே; புல்நெஞ்சன் (கெட்டவன்) ஆக இருந்தாலும் அவன் உன் புருசனே'


ஆண்-பெண் இணைந்து வாழ்க்கை நடத்தும் இல்லறத்தில் மணமான ஒரு பெண் தனது கணவனை எந்தெந்த வகைகளில் எல்லாம் அனுசரித்துப் போக வேண்டும் என்று அப்பெண்ணுக்கு அறிவுரை கூறுவதாக இந்தப் பழமொழியின் பொருள் உள்ளது. இதனால் இல்லறத்தில் இருந்து ஆணும் பெண்ணும் பிரிந்து செல்லாமல் ஒன்றாக வாழும் ஒரு நன்மை உண்டெனினும் தீமைகளே அதிகமாக விளைகின்றன. இல்லறத்தில் ஆணின் கையே எப்போதும் ஓங்கி இருக்கவும் பெண்ணின் கை எப்போதும் தாழ்ந்து இருக்கவுமாக ஒரு தவறான சமுதாய வழிநடத்தலுக்கு இக்கருத்து வழிவகுத்து விட்டது. இதனால் பாதிப்படைந்த குடும்பங்கள் மிகப் பல. இவ்வளவு கீழான பொருளில் ஒரு பழமொழி ஏன் நடைமுறையில் இருக்க வேண்டும்?. இது தவறான வழிநடத்தலுக்கு வழிவகுக்கும் என்று அறிந்தும் இதை இப்பொருளில் உலவ விட்டது யாருடைய குற்றம்?. விடைதெரியாத கேள்விகள் இவை.

ஒரு காட்டை எரித்துச் சாம்பலாக்குவதற்கு ஒரு சின்னத் தீப்பொறி போதுமானதைப் போல ஒரே ஒரு எழுத்துப் பிழை போதுமே ஒரு சமுதாயத்தையே மாற்றி அமைப்பதற்கு. அவ்வாறே இந்தப் பழமொழியில் ஒரே ஒரு எழுத்து தவறாக எழுதப்பட்டதன் விளைவு இதில் உள்ள சொற்களுக்குத் தவறான பொருட்களைக் கொள்ளச் செய்து பழமொழியின் நோக்கத்தையே சிதைத்து விட்டது. உண்மையில் இந்தப் பழமொழியினைக் கூறியவர் ஒரு சித்தராகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் சித்தர்கள் மட்டுமே எந்தப் பொருளையும் நேரடியாகக் கூறாமல் மறைமுகமாக உணர்த்துவர். நாம் ஒரு பொருளைக் குறிக்க ஒரு சொல்லைப் பயன்படுத்தினால் அவர்கள் அதே சொல்லை வேறு பொருளைக் குறிக்க பயன்படுத்துவர். இந்தப் பொருள் வேறுபாடுகளைக் காணும் முன்னர் ஒரு சிறுகதையினைப் பார்ப்போம்.

ஒரு ஊரில் ஒரு கொக்கு இருந்தது. அது ஒரு குறிப்பிட்ட பாறாங்கல்லின் மேல் அமர்ந்து இளைப்பாறிய பின் மலம் கழித்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. இவ்வாறு நாள்தோறும் தன்னை அசிங்கப் படுத்துவதைப் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த கல் ஒருநாள் பொறுமை இழந்து கொக்கிடம் கேட்டது 'ஏன் நாள்தோறும் என்மேல் வந்து அமர்ந்து என்னை அசிங்கப் படுத்துகிறாய்?. நான் உனக்கென்ன கெடுதல் செய்தேன்?. சிவனே என்று நான் ஒரு ஓரமாகத்தானே இருக்கிறேன். நீ வேண்டும் என்றே என்னைத் தேடிவந்து என் மேல் அமர்ந்து இளைப்பாறுவதுடன் அசிங்கம் வேறு செய்துவிட்டுப் போகிறாயே? இது ஏன்? உனக்கு இவ்வாறு நடந்து கொள்வதில் குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா?'. அதற்கு கொக்கு இறுமாப்புடன் பதில் சொன்னது 'நீ இயக்கம் இல்லாமல் ஒரே இடத்தில் கிடக்கிறாய். உன்னால் ஒரு பயனும் இல்லை. நான் அங்கிங்கென தன்னிச்சையாய் பறந்து திரிபவன். உன்னை விட உயர்ந்தவன் என்பதால் இதை நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்' அதைக் கேட்ட கல் கடகட என்று சிரித்தது.

பின்னர் சொன்னது 'அட முட்டாள் கொக்கே! நான் இயக்கமே இல்லாமல் கிடந்தாலும் இறைவனது திருமேனி ஆகும் தகுதி பெற்றவன். எப்போதுமே பறந்து கொண்டிருந்தாலும் உனக்கு அந்தத் தகுதி இல்லை. நீ எத்துணை முறை என்னை மாசுபடுத்தினாலும் மழைநீரால் கழுவப்பட்டு மீண்டும் பொலிவுடன் நிற்பவன் நான். அகத்திலும் புறத்திலும் எப்போதும் அழுக்குகளைச் சுமந்துகொண்டு திரிபவன் நீ. எனவே நான்தான் சிவம் ஆகிய இறைவன். நீ அந்த சிவத்திற்குக் கட்டுண்ட ஆன்மா என்பதை மறவாதே. நீ இயங்கிக் கொண்டிருக்கும் வரையில் தான் ஆன்மா. உன் இயக்கம் நின்று விட்டால் என்னைப் போல சிவம் ஆகி விடுவாய். இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் என்னை ஏளனம் செய்யமாட்டாய்' கல் சொன்ன பதிலைக் கேட்டு மெய் உணர்வு பெற்ற கொக்கு கல்லை வணங்கி விட்டு சென்றது.

இந்தக் கதை உணர்த்தும் கருத்து என்ன?. இயங்காமல் இருந்தாலும் கல்தான் இறைவன் ஆகிய தலைவன்; இயங்கிக் கொண்டே இருந்தாலும் பறவை ஒரு ஆன்மாவே ஆகும். ஆன்மா அடிக்கடி சிவத்தில் தங்கி இளைப்பாறிவிட்டுச் செல்வதுடன் என்றும் சிவத்திற்கு கட்டுப்பட்டது என்னும் உயரிய ஆன்மீகக் கருத்தை உணர்த்துவதற்காக உருவாக்கப் பட்டதுதான் இந்தப் பழமொழி. இனி சரியான பழமொழி இது தான்.


'கல் ஆனாலும் கணவன்; புள் ஆனாலும் புருசன்.'
(கணவன் = இறைவன்; தலைவன்; புள் = பறவை; புருசன் = ஆன்மா)

ஒளவையார் பெருமை - வரலாறு!


சிறப்பு

தமிழ்மொழியிலேயே முதன்முதலில் தோன்றிய நூலாக "அகத்தியம்" என்னும் நூலைச் சொல்வார்கள். அகத்தியரால் இயற்றப்பட்டு விநாயகரால் எழுதப்பட்ட நூல் என்று அருணகிரிநாதரால் திருப்புகழில் குறிப்பிடப்படுவது இந்நூல்தான். ஆனால் தற்சமயம் நம்மிடம் வழங்கும் தமிழ்நூல்களிலேயே மிகப்பழமையான நூல் தொல்காப்பியம். ஆகையால் இன்று நம்மிடம் இருக்கும் தமிழ்நூல்களில் காலத்தால் முதன்மையான நூல் தொல்காப்பியம். தமிழின் சிறப்புவாய்ந்த நூல்களில் திருக்குறþளே முதன்மை வகிக்கிறது. ஆனால் அனைத்து நூல்களுக்கும் இல்லாததொரு விசேஷ சிறப்பு ஒளவையின் நூலான "ஆத்திசூடி"க்கு உண்டு.

ஆத்திசூடிதான் எழுதப்படிக்க ஆரம்பிக்கும்போதே தமிழில் கற்கப்படும் முதல் நூல். தாய்ப்பாலுடன் தமிழ்ப்பால் கலந்து ஊட்டப்படுவது ஆத்திசூடிதான்.

தமிழ்ப்பாட்டி

"தமிழ்த்தாத்தா" என்று நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த உ.வே.சாமிநாதய்யரை அழைக்கிறோம். ஆனால் "தமிழ்ப்பாட்டி" என்று அழைக்கப்படுகின்ற பெருமையைப் பெற்ற ஒளவையோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே தோன்றிவிட்டாள்.

வரலாறு

ஒளவையின் வரலாறு, காலம் ஆகியவை இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. ஒளவையின் பெயரால் பல பாடல்களும், சில நூல்களும், சில கதைகளும் நிலவிவருகின்றன. அவற்றை வைத்துப்பார்க்கும்போது சுமார் ஆயிரத்தைன்னூறு ஆண்டுக் கால கட்டத்திற்குள் குறைந்தது மூன்று ஒளவையார்களாவது இருந்ததாகத் தோன்றும். அனைத்துக் கதைகளும் இணைக்கப்பட்டு, கதம்பமாக ஒரு வரலாறு பின்னப்பட்டு, அதுவே ஒளவையாரின் வாழ்க்கைச் சரிதமாக, செவிவழி மரபாகக் கூறப்பட்டு வருகிறது.

அவர் ஆதி பகவன் ஆகிய இருவருக்குப்பிறந்து, பிறந்தவுடனேயே பெற்றோராலால் கைவிடப்பட்டு, பாணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டதாக அவ்வரலாறு கூறும். அவர் கன்னிப்பருவத்திலேயே முதுமையையும் துறவறத்தையும் விநாயகபெருமானின் பேரருளால் பெற்றதாகவும் அது கூறும். அதிகமானிடம் நெருங்கிய நட்பு பூண்டு, அவரால் ஆதரிக்கப்பட்டு, அவரிடமிருந்து கருநெல்லிக்கனி ஒன்றைப்பெற்று, உண்டு, அதன்மூலம் அழியாத உடலையும் நீண்ட ஆயுளையும் பெற்றார்; அதிகனுக்காக தொண்டைமானிடம் தூது சென்றார்; தமிழகம் முழுமையையும் நடையிலேயே வலம் வந்திருக்கிறார்; பல மன்னர்களுக்கு ஆலோசனைகளும் புத்திமதியும் சொல்லியிருக்கிறார்; மிக்க மன உரம் மிக்கவர்; அஞ்சாமை, வைராக்கியம், ஈரம், இரக்கம், சொல்வன்மை, இறைவனின் திருவருள், அற்புத ஆற்றல்கள், சித்திகள் முதலியவை படைத்தவர்; எளிமையின் சின்னம்; ஏழையின் தோழி; பொன்னுக்கும் புகழுக்கும் பெரும்பான்மையான புலவர்கள் பாடி வரும்போது கூழுக்கும் பாடியவர்.

காதலில் தோல்வியடைந்த பேயொன்றைத் தன் ஆற்றலால் மீண்டும் "தமிழறியும் பெருமாள்" என்ற பெயரோடு பெரும்பண்டிதையாகப் பிறக்கச்செய்து, அந்தப்பிறவியில், இழந்த காதலை மீண்டும் பெறச்செய்தார். கம்பர், ஒட்டக்கூத்தர் ஆகியோருடன் போட்டியிட்டார். சங்கப்புலவர்களால் முதலில் புறக்கணிக்கப்பட்ட திருக்குறளுக்காக, சங்கப்புலவர்களை மீண்டும் கூட்டி, பொற்றாமரைத் திருக்குளத்தில் சங்கப்பலகையைத் தோன்றச்செய்து, அதன்மீது திருக்குறள் சுவடியை வைத்து, தாங்கச்செய்து, குறளின் சிறப்பை உணர்வித்து, அரங்கேற்றம் பெற உதவினார். பாரி வள்ளலின் இறப்புக்குப்பின்னர், அவரின் உயிர்த்தோழர் கபிலரின் மறைவுக்குப் பிறகு, பாரிமகளிரை திருக்கோவலூர் மலையமான் திருமுடிக்காரி மன்னனுக்கு மணமுடித்து வைத்தார்.

சுந்தரமூர்த்தி நயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை , குதிரை மீதேறிக்கொண்டு திருக்கயிலைக்குச்செல்லும்போது, விநாயகர் பூஜையைச்செய்து, விநாயகர் அகவலைபாடி, விநாயகப்பெருமானின் ஆற்றலால் அவர்களுக்கு முன்னரேயே உடலுடன் திருக்கயிலையை அடைந்தார். இவையெல்லாம் அந்த மரபுவழிக்கதைகளாலும் பாடல்களாலும் அறியப்படுபவை.

வரலாற்று ஆய்வு

ஆராய்ந்து பார்க்குமிடத்து மூன்று ஒளவையார்களாவது இருப்பது தெரியும்:
சங்க காலத்தில் உள்ள ஒளவையே பாணர் குலத்தில் உதித்த விறலி. பேரழகியாக விளங்கி, பெரும்புலமையுடனும் தைரியத்துடனும் விளங்கியவர்; இவர்தான் கபிலர், பரணர், பாரி, அதிகமான் ஆகியோர் காலத்தில் வாழ்ந்தவர்; அதிகமானுக்காக தூது சென்றவரும் இவர்தான். அதிகமான் தந்த கருநெல்லிக்கனியை உண்டு, நீண்ட காலம் உயிருடன் இருந்தவர்; பாரிமகளிருக்கு மணமுடித்து வைத்தவரும் இவர்தான். இவருடைய பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.

சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சங்ககாலம் முடிவடைந்தது. நீண்ட காலம் உயிருடன் இருக்கும் காயசித்தி ஆற்றலைக் கருநெல்லியின் மூலம் பெற்ற ஒளவை, பின்னர், சங்கம் மருவிய காலத்தில், திருக்குறளை அரங்கேற்றம் செய்ய உதவியிருக்கலாம். இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், யோகசாத்திரங்களில் கரை கண்டவராக ஒளவையார் காணப்படுகிறார். அப்போது இவர் விநாயக உபாசனையையும் செய்து வந்திருக்கிறார். விநாயக உபாசனை, குண்டலினி யோகம் ஆகியவற்றைத் தமிழகத்தில் பிரபலப்படுத்துவதில் இவர் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார். "ஒளவை குறள்" என்னும் சித்தர் நூலை எழுதியவரும் இவராக இருக்கலாம். சாகாக்கலையைப் பற்றி அந்நூலில் இவர் கூறியுள்ளார். எட்டாம் நூற்றாண்டில், சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தில் "விநாயகர் அகவலை"ப் பாடியவுடன் விநாயகரின் பேரருளால் தன் உடலுடன் திருக்கயிலையை அடைவதுடன் இந்த ஒளவையாரின் வரலாறு பூர்த்தியாகும்.

கம்பர், ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த இன்னொரு ஒளவையார், பல தனிப்பாடல்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்.

அதன்பின், சில நூற்றாண்டுகளுக்குப்பிறகு, வேறொரு ஒளவையார் இருந்திருக்கிறார்.

இவரோ அல்லது கம்பர் காலத்து ஒளவையாரோதான் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய நூல்களை இயற்றியவர். ஆனால் இவர்களில் கடைசி ஒளவையார்தான் மூதுரையையும் நல்வழியையும் ஆக்கியுள்ளார்.

நூல்களின் சிறப்பு

மிகப்பெரிய பெரிய நீதிநூல்கள் பலவற்றுள் காணப்படும் விஷயங்களின் சாரமாக அமைந்துள்ள அனைத்து நீதிகளையும் நீதிக்கருத்துக்களையும் "ஆத்திசூடி", கொன்றைவேந்தன்" ஆகிய நூல்களில் எளிய சொற்களால் அமைந்த, சிறிய வாக்கியங்களில் காணலாம். இளஞ்சிறார்கள் மிக எளிதாய்ப்படித்து, புரிந்து, மனனம் செய்துகொள்ளும்படி அமைந்தவை அவை. அத்தனை இளவயதில் மனனம் செய்யப்பட்டு விட்டதால், பசுமரத்தாணி போல் அவை மனதில் பதிந்துவிடுகின்றன. அவற்றைப் படித்த மனிதனின் அல்லது சொல்லக்கேட்ட மனிதனின் ஆழ்மனதின் மிக ஆழத்தில் பதிந்து விடுவதால் அந்த மனிதனின் சிந்தனை, செயல் யாவற்றிலும் அவை பிரதிபலிக்கும். சுருங்கச்சொன்னால், அந்த மனிதனின் மனச்சாட்சியை இந்த நீதி வாக்கியங்கள் உருவாக்கி, நிலை பெறவும் செய்கின்றன.

சமுதாயத்தின் எந்த மட்டத்தில் இருப்போரும் இவற்றையெல்லாம் நீதிகளாகக் கற்று, கேட்டு வந்த காலங்களில், தமிழ் சமுதாயத்தினிடத்தில் குற்றச்செயல்களின் விகிதம் இன்றை விட குறைவாகவே இருந்திருக்கின்றது.

"பதஞ்சலி யோகசூத்திர"த்தைப் போன்ற சூத்திரங்களின் வடிவில் இந்நூல்கள் அமைக்கப்பெற்றிருக்கின்றன.

இவற்றில் "ஆத்திசூடி" மிகச்சிறிய வாக்கியங்களாலும் "கொன்றைவேந்தன்" சற்றுப்பெரிய வாக்கியங்களாலும் ஆகியவை. "இன்னதைச்செய்" அல்லது "இன்னதைச் செய்யாதே", "இப்படிச்செய்தால் நல்லது", "இப்படியெல்லாம் செய்தால் தீமை" என்ற பாங்கில் அவை அமைந்திருக்கும்.

"ஆத்திசூடி" என்ற பெயர் "ஆத்திமாலையை அணிந்திருப்பவன்" என்ற பொருளைத் தரும். இந்த இடத்தில் இது விநாயகரைக் குறிக்கிறது.

"கொன்றைவேந்தன்" - சிவன்; அவனுடைய "செல்வன்" - விநாயகன். இந்த இரு பெயர்களுமே முறையே அந்த நூல்களின் கடவுள் வாழ்த்தின் முதல் இரு சொற்களாக அமைந்தவை.

ஆக, இரு நூல்களுமே தம்முள் கடவுள்வாழ்த்துப் பெற்ற கடவுள் நாயகனுடைய பெயரைத் தாங்கியே, காலத்தை வென்று நிற்கின்றன.

"மூதுரை" என்னும் நூல் வெண்பாக்களால் ஆகியது. இது நீதிகளைக்கூறுவதோடு அல்லாமல், உலக உண்மைகளையும், நடப்புகளையும், யதார்த்தங்களையும், விளக்குகின்றது. ஒவ்வொரு கருத்துக்கும் உவமை கூறும் நயம் படைத்தது. முப்பது வெண்பாக்கள் உடையது இந்நூல்.

"நல்வழி" என்னும் நூலும் வெண்பாக்களினால் ஆனதுதான். இதில் உலகியல் வாழ்வின் உண்மையையும், ஊழின் வலியையும், இறை நம்பிக்கையையும் வலியுறுத்துகிறார் ஒளவையார். நாற்பது பாடல்கள் கொண்டது இன்னூல்.

இவையே தமிழ்மொழியின் தலையாய நீதிநூல்கள்.


மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள சங்கத்தார் கோயிலில், தமிழ்ச் சங்கத்தின் தலைவர் "இறையனார்" என்னும் "திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுளின்" பக்கத்திலேயே அமர்ந்திருக்கும் பெருமையை ஒளவையார் பெற்றிருக்கிறார்.

Saturday 23 November 2013

ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்!

 
 கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் நகரம் 'ஏழைகளின் ஊட்டி' என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தில் அமைந்திருக்கும் ஹாசனாம்பா கோயிலின் காரணமாகவே இந்நகரத்துக்கு ஹாசன் என்று பெயர் வந்தது.

இக்கோயில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக திறந்துவிடப்படுகிறது.  அக்டோபர் 25-ஆம் தேதியிலிருந்து, 4-ஆம் தேதி வரை பக்தர்கள் ஹாசனாம்பா அம்மனை தரிசனம் செய்யலாம்.

எனினும் கோயில் 24-ஆம் தேதியே திறக்கப்பட்டாலும் 24 மற்றும் 5-ஆம் தேதிகளில் சடங்குகள் நடைபெறுவதால் அந்த நாட்களில் பொதுமக்களுக்கு கோயிலில் நுழைய அனுமதி இல்லை.

வினோத நம்பிக்கைகள்!

மாமியார்-மருமகள் கல்! : பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஹாசனாம்பா கோயிலுக்கு நாள் தவறாமல் வந்து வழிபட்டு கொண்டிருந்திருக்கிறாள் ஒரு பெண். ஒருநாள் அவளை தொடர்ந்து வந்த அவளின் மாமியார் ''வீட்டில் வேலை செய்யாமல் இங்கென்ன செய்கிறாய்'' என்று சொல்லி அப்பெண்ணை அடித்திருக்கிறாள். அப்போது அப்பெண் வலியால் சத்தமிடவே அம்மன் அவள் முன்பு பிரசன்னமாகி அவளை கல்லாக மாற்றிவிட்டாள் என்று சொல்லப்படுகிறது.

 ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்!


அந்த கல்தான் தற்போது மாமியார்-மருமகள் கல் என்ற பெயரில் கோயிலில் காணப்படுகிறது. இந்த கல் ஆண்டுதோறும் அரிசி அளவு அம்மன் விக்ரகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதாம். அதோடு இது நகர்ந்து நகர்ந்து அம்மன் விக்ரகத்தை அடைந்துவிட்டால் இந்த கலியுகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்!
 
திருடர்கள் கோயில் :

 ஹாசனாம்பா கோயிலில் ஒருமுறை அம்மன் ஆபரணங்களை திருடிச்செல்ல நான்கு திருடர்கள் வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அம்மன் அவர்களை கல்லாக போகுமாறு சபித்ததாக சொல்லப்படுகிறது. அந்த நால்வரின் கற்சிலைகள் தனிக்கோயிலாக 'திருடர்கள் கோயில்' என்ற பெயரில் ஹாசனாம்பா கோயில் வளாகத்தினுள்ளேயே அமைந்திருகிறது.

அணையா தீபம் :

ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் மூடப்படும் நாளான பலி பட்யாமி என்ற தினத்தில் (இந்த ஆண்டு - அக்டோபர் 5) கோயிலில் தீபம் ஏற்றப்படுகிறது. இந்த தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாக்கிழமை கோயில் திறக்கப்படும் நாள் வரை அணையாமல் எரிந்துகொண்டிருக்குமாம்.

கோயிலுக்குள் குழந்தை மாட்டிக்கொண்டால்?! :

கோயில் மூடப்படும் நாளில் தவறுதலாக குழந்தை ஏதும் உள்ளே மாட்டிக்கொண்டால் மீண்டும் கோயில் திறக்கப்படும் நாள் வரை அந்த குழந்தை உயிருக்கு ஆபத்தில்லாமல் நலமுடன் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

வாடா மலர்கள் :

ஹாசனாம்பா கோயில் மூடப்படும் இறுதி நாளில் அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்படும் பூக்கள், மாலையிடப்படும் பூக்கள் எல்லாம் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்குமென்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அதிசயத்தை பார்ப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் கோயில் திறக்கப்படும் நாளில் கோயிலுக்கு வருகிறார்கள்.

ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்!

வரலாறும், புராணமும்! ஹாசனாம்பா கோயில் 12-ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. இந்த கோயில் பாம்பு புத்து வடிவத்தில் கட்டப்பட்டிருப்பதொடு, கர்நாடக கட்டிடக்கலையின் சிறந்த உதாரணமாகவும் திகழ்கிறது. இது கட்டப்பட்ட பிறகே ஹாசன் நகரம் அப்பெயரை பெற்றதாக சொல்லப்படுகிறது.

அதாவது அதற்கு முன்பு சிம்ஹாசனபுரி என்று அழைக்கப்பட்டு வந்த ஹாசன் நகரம் ஹாசனாம்பாவின் (சப்த கன்னியர்கள்) வருகைக்கு பிறகு ஹாசன் என்று அழைக்கப்படலாயிற்று. ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்! புராணக் கூற்றின் படி சப்த (ஏழு) கன்னியர்களான பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆகியோர் காசியிலிருந்து ஹாசன் நகரத்துக்கு வந்துள்ளனர். அதன் பின்னர் 3 கன்னியர் புத்து வடிவிலும், கெஞ்சம்மா என்ற பெயரில் கோட்டையாக ஒருவரும், தேவகரே என்ற குளத்தினடியில் மூன்று கிணறுகளாக 3 கன்னியர்களும் கோயில் மற்றும் அதைச் சுற்றிலும் தங்கி ஹாசன் நகர மக்களுக்கு அருள் பாலித்து வருவதாக நம்பப்படுகிறது.

ஹாசனாம்பா கோயில் திறப்பு!


 ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் தளவார் குடும்பத்தினர் கோயில் நுழைவாயிலில் கட்டப்பட்டிருக்கும் வாழை மரத்தை வெட்டிய பிறகு திறந்துவிடப்படுகிறது. ஆண்டின் 10 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும் அதிசய கோயில்! அதோடு ஹாசன் மாவட்ட கருவூலத்திலிருந்து எடுத்துவரப்படும் ஆபரணங்கள் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும்.

அதன்பிறகு அம்மன் நகைகள் 10 நாட்களின் முடிவில் மீண்டும் கருவூலத்துக்கே எடுத்துச்செல்லப்படுகின்றன. இந்த சமயங்களில் கோயிலில் பெருங்கூட்டம் காணப்படுவதால் சிறப்பு தரிசனம் செய்ய 250 ரூபாய்க்கு தனி வழி பக்தர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்படுகிறது. எப்படி அடைவது? ஹாசனாம்பா கோயில் ஹாசன் நகர மையத்திலேயே அமைந்திருக்கிறது. அதோடு பெங்களூரிலிருந்து 184 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹாசன் நகரத்துக்கு பெங்களூரிலிருந்து எண்ணற்ற அரசு பேருந்துகள் (KSRTC) இயக்கப்படுகின்றன.

பெங்களூர்-ஹாசன் பேருந்து அட்டவணை :

21:35, 21:59, 21:00, 11:05, 21:15, 14:05, 22:30, 23:00, 23:15, 21:15, 21:35, 21:06, 22:00, 05:00, 07:45, 06:30

ஹாசன்-பெங்களூர் பேருந்து அட்டவணை :


11:00, 20:30, 14:00, 22:01, 21:05, 22:29, 22:50, 22:45, 19:30, 07:00, 06:01, 06:31, 13:30, 10:30, 11:30

Friday 22 November 2013

நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா?

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே

WE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF
· தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்

· எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

· கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.

· புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.

· சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.

· பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

· நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.

· தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.

· ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

· அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டுவந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

· காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

· சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

· உடல் வலிமை பெறஊட்டசத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

· எங்களுக்கு வேண்டிய வீளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

· எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல, ஆனாலும் அவர்கள் பணம் பணம் என்று அதன் பின்னால் ஒடுபவர்கள் அல்லர். அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல

· அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம் அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள ஏலேய்ய்ய் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

· உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை

எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லைஉள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

· எங்களிடம் செல்போன் டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம் பெர்சனல் கம்பியூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்

· வேண்டும் பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

· எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமுகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமுக செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.

· உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை

· நாங்கள் எடுத்த புகைபடங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம் ஆனால் அதில் உள்ளவ்ர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

· இலவசம் பெறும் பிச்சைகாரர்களாக இருந்ததில்லை.

· இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா என்பதை இப்ப சொல்லுங்கள் .

Thursday 21 November 2013

காணாமல் போன விளையாட்டுகள்!

village games
அழிந்து போன கிராமத்து விளையாட்டுகளைத் தேடி ‘குங்குமம் தோழி’ மேற்கொண்ட பயணத்தில் கிடைத்த பொக்கிஷத்தை சென்ற இதழில்  பகிர்ந்தோம். அதன் தொடர்ச்சியாக இன்னும் சில அருமையான விளையாட்டுகள் இங்கே... ஆடுவோமே!

உப்புக்கோடு


உத்தி பிரித்தல் மூலம் 2 அணிகள் பிரிக்கப்படும். செவ்வக வடிவில் நீளமாக கோடு கிழிக்கப்படும். நடுவில் ஒரு கோடும், இடையில் ஓரு ஆள் நின்று  கைநீட்டி தொடமுடியாத அளவுக்கு இடைக்கோடுகளும் போட்டுக்கொள்வார்கள். தொடங்கும் அணியின் தலைவர் முதல் கோட்டில் நிற்பார்.  மற்றவர்கள் அடுத்தடுத்த கோட்டில் நிற்பார்கள். எதிரணியினர் இவர்கள் அனைவரையும் ஏமாற்றி கோட்டைக்கடந்து வெளியில் செல்ல வேண்டும்.  முதல்கோட்டில் இருப்பவருக்கு நடுக்கோட்டில் ஓடி எதிராளியை அவுட் செய்யவும் அதிகாரம் உண்டு. இவரது கவனத்தைத் திருப்ப, மற்றொரு  கட்டத்தில் நிற்பவர், நடுக்கோட்டில் கால்வைத்து தண்ணி தண்ணி என்று அழைப்பார். இவர் அவரைத் தொட ஓடவேண்டும். யாராவது ஒருவரைத்  தொட்டாலும் ஆட்டம் முடிந்துவிடும். முதலில் கோடுகளைக் கடந்து வெளியேறும் ஒருவர் கைப்பிடி மண்ணை அள்ளிக்கொண்டு, உப்பு என்று  சத்தமிட்டபடி ஒவ்வொரு கட்டத்திலும் நிற்கும் தம் அணியினரைத் தொட்டு திரும்பவும் கோட்டைக் கடந்து முகப்புக்கு வரவேண்டும். பரபரப்பான  விளையாட்டு!

மெல்ல வந்து கிள்ளிப்போ!

2 அணியினர் எதிரெதிரே அமர்ந்திருப்பார்கள். இரு அணித் தலைவர்களும் தங்கள் அணியினருக்கு ஒவ்வொரு பெயர் வைப்பார்கள். பழத்தின் பெயர்,  பூவின் பெயர், சினிமாவின் பெயர் என எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். பின்னர் எதிர் அணியில் உள்ள ஒருவரின் கண்களை  இறுக மூடிக்கொண்டு தம் அணிக்கு வைத்த ஒரு பெயரைச் சொல்லி அழைப்பார் (உதாரணத்துக்கு... ‘ரோஜாப்பூவே ரோஜாப்பூவே மெல்ல வந்து
கிள்ளிப்போ...’). ரோஜாப்பூ சத்தமில்லாமல் வந்து கிள்ளிவிட்டு சாதாரணமாக அமர்ந்துவிடும். பின், எல்லோரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க  என்று ஆணையிடுவார். எல்லோரும் கீழே குனிந்து கொள்வார்கள். அதன்பிறகு கண்களை திறந்து
விடுவார். இப்போது கிள்ளு வாங்கியவர் ரோஜாப்பூ யாரென கண்டுபிடிக்க வேண்டும்!

கள்ளன் வாரான்...  களவாணி வாரான்!

மொத்த பிள்ளைகளில் பெரியவர்களாக இருவர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள்தான் விளையாடப்போகும் வீரர்கள். மற்ற அனைவரும் ஒரே  வரிசையில் கீழே சம்மண மிட்டு அமர்ந்து கொள்வார்கள். எல்லோரும் கைகளை பின்னால் வைத்திருப்பார்கள். வீரர்களில் ஒருவர் முன்னால் நிற்பார்.  மற்றவர், கையில் ஒரு கல்லை எடுத்துக்கொண்டு,

‘காயே கடுப்பங்கா
கஞ்சி ஊத்தி நெல்லிக்கா
உப்பே புளியங்கா
ஊறவச்ச நெல்லிக்கா
கல்லன் வாரான் காரைக்குடி
கல்லை நீயும் கண்டுபிடி’

என்று பாடியபடி ஒவ்வொருவருடைய கையிலும் கல்லை வைப்பது போல பாவ்லா காட்டி யாராவது ஒருவரின் கையில் வைத்து விடுவார்.  வைத்தபின் எல்லாரும் தலையை வெட்டி நாய்க்குப் போடுங்க என்பார். எல்லோரும் குனிந்து கொள்ள, யாருடைய கையில் கல் இருக்கிறது என்பதை  எதிரில் நிற்பவர் கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் கல்லை வைத்தவருக்கு ஒரு மதிப்பெண்!

பூப்பறிக்க வருகிறோம்!


2 குழுவினர் எதிரெதிர் திசையில் நிற்பார்கள். ஒருவரோடு ஒருவர் கைகோர்த்தபடி எதிர் அணியினரை நோக்கி குதித்தபடி பாட்டு பாடி வருவார்கள்.  இரு அணியிலும் சமமான பிள்ளைகள் இருக்க வேண்டும். ‘பூப்பறிக்க வருகிறோம் வருகிறோம் எந்த மாதம் வருகிறீர் வருகிறீர் டிசம்பர் மாதம்  வருகிறோம் வருகிறோம் யாரைத் தேடி வருகிறீர் பூவைத் தேடி வருகிறோம் எந்தப் பூவை தேடுவீர் மல்லிகையை தேடுவோம்’ இப்படி பாடியதும்  ‘மல்லிகை’ என்று பெயர் வைத்த பெண்ணைப் பிடித்து இழுப்பார்கள். அந்த பெண் அந்தப் பக்கம் சென்றுவிடாமல் இந்த அணி இழுக்க, ஒரே  களேபரம்தான்!

கழங்கு

பெண்கள் வட்டமாக அமர்ந்து ஆடும் விளையாட்டு. வட்ட வடிவிலான 7 கூழாங்கற்கள். மேலே தூக்கிப்போட்டு கீழே இருப்பவற்றையும் சேர்த்து அள்ள  வேண்டும். ஒன்றான், இரண்டான், மூன்றான் என அள்ள வேண்டிய கற்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எல்லாவற்றையும் சரியாக  விளையாடியவர்கள் இறுதியில் பழம் வைப்பார்கள். ஒவ்வொரு காய் ஆடும்போதும் ஒவ்வொரு பாட்டு உண்டு!

ஒன்றான்: அலசல் அலசல் பாட்டிமா
தொட்டுட்டேன் தொடங்கிட்டேன்
தொட்டில் மஞ்சள் அரச்சிட்டேன்
அரச்ச மஞ்சளைப் பூசிட்டேன்
அம்மியிடுக்குல படுத்திட்டேன்
படுத்த பாயில சுருட்டிட்டேன்
ரெண்டான்: ஈரெண்டு எடுக்கவும்
இளந்தம் பழுக்கவும்
பழுத்து தின்னவும்
மூன்றான்: முக்குட்டு சிக்குட்டு
மூன்றாம் படிக்கட்டு
நான்காம்: நாக்கொத்தி செங்கொத்தி
நாகம் பழங்கொத்தி
அஞ்சான்: ஐப்பால் அரங்கு
பம்பாய் சிலுக்கு
ஆறாம்: ஆக்கூர் முறுக்கு
அள்ளிப்போட்டு நொறுக்கு
ஏழாம்: ஏழதாள எங்க நீ போற
எட்டாம் நம்பர் சேல

இப்படி, கொண்டாட்டமும் நட்புணர்வும் நம்பிக்கையும் தவழும் நூற்றுக்கணக்கான விளையாட்டுகள் நம் கிராமங்களில் உண்டு. பல்லாங்குழி, தாயம்,  நாடு பிடித்தல், ஆடுபுலியாட்டம், கொல கொலயா முந்திரிக்கா, டிக் டிக், கண்ணாமூச்சி, நாலுமூலை, ஊதுகாய், கிட்டிப்புள், பளிங்கி, நொண்டியாட்டம்,
ஐஸ்பால், பச்சகுதிரை, குளம்கரை, சின்னப்பானை-பெரியபானை, பரமபதம், கரகரவண்டி, கவன், ராஜா ராணி, பம்பரம் விடுதல், செதுக்கு சில்லு, கல்லா  மண்ணா, நூத்துக்குச்சி, பூப்பந்து எறிதல் என மூளைக்கும் உடலுக்கும் வேலை கொடுக்கும் விளையாட்டுகள் நிறைந்திருந்தன. இன்றுள்ள  பிள்ளைகளுக்கு இந்த விளையாட்டு அனுபவங்கள்
கிட்டுவதேயில்லை!

Wednesday 20 November 2013

"பரம்பரை "யின் உண்மையான பொருள்!

நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும்
 பொழுது, பரம்பரை பரம்பரையாய் இருக்கிறது
 என்று சொல்வதுண்டு...

பரம்பரை என்றால் என்ன? வழி வழியாக
 என்று சொல்லலாம் என்றாலும்,
 "தலைமுறை தலைமுறையாக"
என்பதே உண்மை பொருள் ஆகும்.

அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? ஆம்!..
பரன் + பரை = பரம்பரை
 நமக்கு அடுத்த தலைமுறைகள்:
நாம்
 மகன் + மகள்
 பெயரன் + பெயர்த்தி
 கொள்ளுப்பெயரன் + கொள்ளுப்பெயர்த் தி
 எள்ளுப்பெயரன் + எள்ளுப்பெயர்த்தி

 நமக்கு முந்தைய தலைமுறைகள்:

நாம் - முதல் தலைமுறை

 தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை

 பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை

 பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை

 ஓட்டன் + ஓட்டி -
ஐந்தாம் தலைமுறை

 சேயோன் + சேயோள் -
ஆறாம் தலைமுறை

 பரன் + பரை - ஏழாம் தலைமுறை

 ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள்
 என்று கொண்டால்,
ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..
ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..
 (கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)
ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன்
 பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக
 என்று பொருள் வரும்.
எனக்கு தெரிந்து, வேறெந்த மொழிகளிலும்
 இப்படி உறவு முறைகள் இல்லை..

இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..

உங்கள் நண்பர்களுக்கு தெரிய பகிரவும் !!

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top