.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 6 January 2014

இந்தியாவில் இனி இரண்டு 'Time Zone': வடகிழக்கு மாநிலங்களுக்கு தனி "மணி நேரம்"!



அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தற்போது பின்பற்றப்படும் "மணி நேரம்" நடைமுறைக்குப் பதிலாக முன்பு கடைபிடித்த பழைய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது.

இதன்மூலம் டெல்லி, சென்னையில் காலை 8 மணி என்றால் அஸ்ஸாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் 9 மணியாக இருக்கும்.

அட்சரேகைகள்-தீர்க்க ரேகைகள்:


பூமியின் பரப்பில் குறுக்கும், நெடுக்குமாக கற்பனைக் கோடுகள் வரையப்படுகின்றன. பூமியை குறுக்காக பிரிக்கும் கோடுகள் அட்சரேகைகள் (Latitudes) எனப்படுகின்றன. பூமியை நீளவாக்கில் பிரிக்கும் கோடுகள் தீர்க்க ரேகைகள் (Longitudes ) எனப்படுகின்றன.

டெல்லியை விட 1 மணி நேரம்:

இந்த தீர்க்க ரேகைகளை வைத்தே ஒரு இடத்தின் நேரம் தீர்மானிக்கப்படுகிறது. கிரீன்வீச் மீன் டைம் 12 ஆக இருந்தால் டெல்லியில் நேரம் 5.30 மணி. ஆனால், இந்தியாவில் இரு தீர்க்க ரேகைகள் செல்கின்றன. இதன்படி வட கிழக்கு மாநிலங்களின் நேரம் டெல்லியை விட 1 மணி நேரம் அதிகமாக இருக்க வேண்டும்.

அர்த்தமில்லாத வாதம் பேசி..

ஆனால், டெல்லி ஆட்சியாளர்கள் இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தாங்களாகவே கூறிக் கொண்டு, டெல்லியில் 5 மணி என்றால் அஸ்ஸாமிலும் 5 மணி தான் என்று அர்த்தமில்லாத வாதம் பேசி அதையே வட கிழக்கு மக்களின் தலையிலும் கட்டினர். இதனால், டெல்லியில் சூரிய உதயம் ஆவதற்கு முன்பே அஸ்ஸாமில் சூரிய உதயம் ஆகிவிடுகிறது. அங்கு சூரிய அஸ்தமானம் ஆகி ஒரு மணி நேரத்துக்குப் பின்பே டெல்லியில் சூரிய அஸ்தமானம் நடக்கிறது

அஸ்ஸாம்....

அதாவது அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் சூரிய உதயம் என்பது அதிகாலை 4 அல்லது 5 மணிக்கே வந்துவிடும். அதேபோல் மாலைப் பொழுது என்பது 4 அல்லது 5 மணிக்கு முடிந்து இருளாகிவிடும். தற்போது இந்தியாவின் பிறபகுதிகளில் இருப்பதைப் போல அதாவது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் பணி நேரம் கடைபிடிக்கப்படுவதால் பொதுவாக பகல் பொழுதில் வேலை நேரம் குறைவாகவும் இரவு சற்று கூடுதல் வேலை நேரமாகவும் இருந்து வருகிறது.

தேயிலைத் தோட்டங்கள்..

ஆனால் அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டங்களில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுவதில்லை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 150 ஆண்டுகாலத்துக்கு முன்னர் பகல் பொழுதை அதிகம் பயன்படுத்தும் வகையிலான மணி நேர முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதுதான் தற்போதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உற்பத்தித் திறன் குறைகிறது...


அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் இந்திய மணி நேர நடைமுறைப்படுத்துவதால் பகல் நேர வேலை மிகவும் குறைவாக இருக்கிறது. இதனால் பணி மற்றும் உற்பத்தித் திறன் குறைகிறது என்பது பொதுவான ஆதங்கம். ஆனாலும் டெல்லியின் 9 மணி முதல் 5 மணி வரையிலான அதே நேரம் தான் வட கிழக்கு மக்களின் அலுவலக, பள்ளி நேரமாக உள்ளது. இதன்மூலம் அந்தப் பகுதி மக்களின் அடிப்படை உரிமையையைக் கூட டெல்லி அதிகார வர்க்கம் மதிக்காமல் இருந்து வந்தது.

தருண் கோகோய்:

இது குறித்து கருத்து தெரிவித்த அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகய், அஸ்ஸாமின் தேயிலை தோட்டங்களில் பின்பற்றப்படுகிற நடைமுறைதான் வடகிழக்கு மாநிலங்களுக்குப் பொருந்தும். அப்போதுதான் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். இதனால் தேயிலைத் தோட்டங்களில் பின்பற்றப்படும் நேர முறையையே நாங்களும் பயன்படுத்த முடிவு செய்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். இப்படி நேரம் மாற்றி அமைக்கப்பட்டால் அஸ்ஸாமில் காலை 6 அல்லது 7 மணி முதல் மாலை 4 அல்லது 5 மணி வரை வேலை நேரம் இருக்கும். ஆக இந்தியாவின் இதர பகுதிகளில் ஒரு நேர முறையும் வடகிழக்கில் ஒரு நேர முறையும் கடைபிடிக்கப்படும்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top