.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 22 September 2013

ஓவியப் போட்டி: ரூ.1 லட்சம் பரிசு!!




மத்திய மின்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பீரோ ஆஃப் எனர்ஜி எபிசியின்சி (BEE) நிறுவனம், 4 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்காக இந்திய அளவில் ஓவியப்போட்டியை நடத்துகிறது. இப்போட்டி இருபிரிவாக நடத்தப்பட இருக்கிறது. இருபிரிவிலும் முதலிடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.

ஏ - பிரிவுக்கான (4, 5, 6-ஆம் வகுப்பு) தலைப்பு: 1. Save money - Practice energy conservation, 2. Save electricity, illuminate every home, 3. Save one unit a day, keep power cut away.

பி - பிரிவுக்கான (7,8,9-ஆம் வகுப்பு) தலைப்பு: 1. Energy conservation - A vision of the future,  2. Energy conservation is the foundation of energy security, 3. Energy efficiency is a journey not destination.

இப்போட்டிகள் மூன்று கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக, பள்ளி மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் இந்த ஓவியப்போட்டி நடைபெறும். இப்போட்டியை ஒவ்வொரு பள்ளியின் தலைமையாசிரியரோ அல்லது முதல்வரோ நடத்துவார். இந்தப் போட்டிகள் அக்டோபர் 7-ஆம் தேதிக்கு முன்பாகவே அப்பள்ளிகளில் நடத்தி முடிக்கப்படும். பள்ளிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பவர்கள், மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். மாநிலத் தலைநகரில் இந்த இரண்டாம் கட்டப் போட்டி நடைபெறும். இப்போட்டி நவம்பர் 12-ஆம் தேதி இரண்டு பிரிவினருக்கும் தனித்தனியே நடைபெறும்.

மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் அனைவரும் அகில இந்திய அளவில் நடைபெறும் ஓவியப் போட்டிக்குத் தகுதி பெற்றவர்கள் ஆவர். இவர்கள் அனைவருக்கும் வரும் டிசம்பர் மாதம்  12-ஆம் தேதி, தில்லியில் இறுதிப்போட்டி நடைபெறும்.

தேசிய மின்சக்தி சேமிப்பு தினமான டிசம்பர் 14-ஆம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகையையும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்குவார்.

பள்ளி அளவிலான போட்டியில் தேர்ச்சி பெற்று மாநில அளவில் போட்டியில் கலந்துகொள்பவர்கள் அனைவருக்கும் பங்கேற்புப் சான்றிதழ் கிடைக்கும். இரண்டு பிரிவுகளிலும், மாநில அளவில் முதலிடம் பிடிப்பவருக்கு ரூ.10 ஆயிரமும், இரண்டாமிடம் பிடிப்பவருக்கு ரூ.8 ஆயிரமும், மூன்றாமிடம் பிடிப்பவருக்கு ரூ.5 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 10 பேருக்கு தலா ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

ஏ பிரிவில், தேசிய அளவில் முதலிடம் பிடிப்பவருக்கு ரூ.1 லட்சமும், இரண்டாமிடம் பிடிக்கும் 4 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாமிடம் பிடிக்கும் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 20 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

பி பிரிவில், தேசிய அளவில் முதலிடம் பிடிப்பவருக்கு ரூ. 1 லட்சமும், இரண்டாமிடம் பிடிக்கும் 2 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரமும், மூன்றாமிடம் பிடிக்கும் 3 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 6 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரமும் வழங்கப்படும்.

தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் பேக், கைக் கடிகாரம், பங்கேற்புச் சான்றிதழ்களும் வழங்கப்படும். மாநில அளவிலான போட்டிகளுக்கு வந்து செல்லும் மாணவர்களுக்கும், அவருடன் வரும் பெற்றோர்களுக்கும் போக்குவரத்துச் செலவு வழங்கப்படும்.

விவரங்களுக்கு:www.emt-india.net/ncec2013/NCEC2013.htm
 

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top