.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label மாணவர் சாதனை!. Show all posts
Showing posts with label மாணவர் சாதனை!. Show all posts

Saturday 18 January 2014

செல்போனில் புயல் அறிகுறி:வி.ஐ.டி.மாணவர்களின் லேட்டஸ்ட் சாதனை!



புயல் உள்ளிட்ட பேரழிவுகள் ஏற்பட்டு அதிலிருந்து மீள்வதற்கான நிவாரண பணிகள் மேற்கொள்வதற்கு பதிலாக புயல் ஏற்படுவதற்கான அறிகுறிகளை உடனடியாக அறிந்து கொள்வதற்கான புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளில் வி.ஐ.டி. பல்கலைக் கழகத்தில் பி.டெக். கணினி அறிவியல் தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்கள் விவேக் வித்யாசாகரன் மற்றும் சந்தீப் சுப்பிரமணியன் ஆகியோர் ஈடுபட்டனர்.

வி.ஐ.டி. இயந்திரவியல் மற்றும் கட்டிட அறிவியல் பள்ளி பேராசிரியர் சத்யஜித் கோஷ் வழிகாட்டுதலுடன் ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட அவர்கள் செல்போன் மென்பொருள் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் செல்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 929 மில்லியனிலிருந்து 2014–ம் ஆண்டில் 1.15 பில்லியன் அளவிற்கு உயரும் வாய்ப்பு உள்ளது.

செல்போன் மற்றும் இண்டர்நெட் மூலமாக புயல் போன்ற பேரழிவுகள் ஏற்படுவதற்கான அறிகுறிகளை ...............

தொடர்ந்து இங்கே படிக்கலாம்....

Sunday 5 January 2014

யார் முட்டாள்..?



அமெரிக்க பாடசாலை ஒன்றில் எட்டரைவயது சிறுவனை "இவன் அடிமுட்டாள். பாடசாலையில் இருந்தால் மற்றமாணவர்களையும் கெடுத்து விடுவான். இனி இவனுக்கு பாடசாலையில் அனுமதி இல்லை." என்று ஒர் கடிதம் எழுதி அந்த சிறுவனின் சட்டைப்பையில் வைத்து ஆசிரியர்களால் விரட்டப்பட்டது. தாயார் கவலை கொண்டாலும் தைரியமாக வீட்டில் வைத்து பாடங்களை கற்று கொடுத்தார். தாய்யின் கல்வியிலே வளர்ந்த சிறுவன்.., பின்னாளில் ஆராட்சிகளில் ஈடுபட்டார்.

இன்றும் அக்டோபர் 21ம் திகதி மாலை 9:59க்கு வீதி பயணவிளக்குகளை தவிர மிகுதி மின்சார விளக்குகள் அனைத்தையும்அணைத்து ஓருநிமிடம்அமெரிக்காவை இருளாக்கி விட்டு மீண்டும் ஒளிரவிட்டு தொலைக்காட்சி, வானொலியில் அறிவிப்பார்கள் இப்படி.., "எடிசன் பிறந்திருக்கா விட்டால் உலகம் இப்படிதான் இருளாக இருந்து இருக்கும்..!"

மேலே கூறிய அந்த முட்டாள் சிறுவன் தான் பின்னாலில் விஞ்ஞானிகளின் தந்தை என போற்றப்படும் தாமஸ் அல்வா எடிசன் ஆவார். இப்போ சொல்லுங்கள்..! அந்த ஆசிரியர் கூறியது போல் எடிசன் முட்டாளா..?ஆகவே யாரும் இங்கு முட்டாள் இல்லை.. நீங்களும் அடுத்தவர் அபிப்பிராயத்தில் வாழ்வதை விட்டு விடுங்கள். உங்களை நீங்களே நிர்ணயபடுத்துங்கள். உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொர் வைரம் இருக்கிறது. அதை பட்டை தீட்டுங்கள்.

Saturday 30 November 2013

முதன் முறையாக குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ. 1 கோடி வென்ற பெண்!


 அமிதாப் பச்சன் நடத்தும் கௌன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் பிரோஸ் பாத்திமா என்ற பெண் ரூ. 1 கோடி வென்றுள்ளார்.

இந்தியில் கௌன் பனேகா குரோர்பதி என்ற பெயரில் கோடீஸ்வரன் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதன் 7வது சீசன் தற்போது நடந்து வருகிறது, இதனை இந்தி நடிகர் அமிதாப் பச்சன் நடத்துகிறார்.

இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள சன்சார்பூரைச் சேர்ந்த பிரோஸ் பாத்திமா(வயது 22) கலந்து கொண்டு ரூ.1 கோடி வென்றார்.

இந்த சீசனில் ரூ.1 கோடி வென்ற முதல் பெண் பாத்திமா தான்.

பாத்திமாவின் தந்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார், இதனால் அவர் தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தினார்.

ஆனால் தனது தங்கையின் கல்லூரி படிப்பு பாதிக்காமல் அவர் பார்த்துக் கொண்டார்.

அவரது தந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டபோது அவருக்கு சிகிச்சை அளிக்க வாங்கிய ரூ.12 லட்சம் கடனை அடைக்க முடியாமல் பாத்திமா, அவரது தாய் மற்றும் தங்கை தவித்தனர். இந்நிலையில் இந்த பரிசுத் தொகை கிடைத்துள்ளது.

இதுகுறித்து பாத்திமா கூறுகையில், அமிதாப் பச்சன்ஜி வந்து கட்டிப்பிடிக்கும் வரையில் நான் ரூ.1 கோடி வென்றுவிட்டேன் என்று என்னால் நம்ப முடியவில்லை.

எங்களுக்கு உள்ள கடனை அடைக்க இந்த பணம் உதவும். மீதி பணத்தை வைத்து எங்கள் நிலத்தில் விவசாயம் செய்யத் தேவையான உபகரணங்களை வாங்குவேன்.

முன்பு எங்கள் நிலத்தை பறிக்க பலர் முயன்றனர், ஆனால் தற்போது நான் பரிசுத் தொகையை வென்ற பிறகு மேடம் என்று என்னை அழைக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Friday 29 November 2013

மலாலா – பிரிட்டனின் செல்வாக்குமிக்க ஆசியர்!

nov 28 -malala_yousafzai_

மலாலா மீது எந்நேரத்திலும் தாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று தலிபான் பயங்கரவாதிகள் மிரட்டியதற்கு பதிலடியாக, பயங்கரவாதிகளால், எனது உடலைத் தான் சிதைக்க முடியுமே தவிர, எனது கனவுகளை ஒருபோதும் சிதைக்க முடியாது என்று தெரிவித்த
மலாலா யூசுப்சையை, பிரிட்டனின் செல்வாக்குமிக்க ஆசியர் என்று லண்டனிலிருந்து வெளிவரும் வார இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.

பெண் கல்வியை வலியுறுத்தி பிரசாரம் செய்து வந்த பாகிஸ்தான் சிறுமி மலாலா மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் சர்வதேச நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனையில் மலாலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் உடல்நலம் தேறியுள்ளார். சர்வதேச நாடுகள், மலாலாவை பாராட்டி பல விருதுகள் வழங்கி வரும் நிலையில், அண்மையில் லண்டனில் நடைபெற்ற கராவி குஜராத்-2 என்ற கூட்டத்தில் தைரியத்திற்காக வழங்கப்படும் ஹேமர் விருதுக்கு, மலாலாவும் அவருடன் சுடப்பட்ட மற்ற இரு சிறுமிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் பிரிட்டனை சேர்ந்த வாரப் பத்திரிக்கை ஒன்று பிரிட்டனில் செல்வாக்கு மிக்க 101 பேரின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மலாலா யூசப்சாய் செல்வாக்கு மிக்க முதல் ஆசியராக உள்ளார் என்று தெரிவித்துள்ளது.

இவருக்கு அடுத்தபடியாக, லேபர் கட்சியின் எம்.பி.யும், பாராளுமன்ற விவகாரக்குழு தலைவருமான கீத் வாஸ் இரண்டாவது செல்வாக்கு மிக்க ஆசியராக உள்ளார். ஒருமுறை பிரிட்டனின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த லட்சுமி மிட்டல் இப்போது இந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார் .

Thursday 28 November 2013

ஒளியின் வேகத்திற்கு இயங்க கூடிய நானோ 3 டி கேமிரா!

 nov 28 -nano car

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் (எம்.ஐ.டி.) ஆய்வாளர்கள் நவீன நானோ கேமிரா ஒன்றை வடிவமைத்துள்ளனர். இது ஒளியின் வேகத்திற்கு இயங்க கூடிய திறன் பெற்றது.இந்த தொழில்நுட்பத்தில் தற்போது சில கருவிகள் பயன்பாட்டில் இருந்தாலும், மழை, பனி அல்லது ஒளி ஊடுருவும் பொருட்கள் ஆகியவற்றையும் எளிதில் படம் பிடிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டு உள்ளது என்பது விசேஷ தகவல்.

டிஸ்கவரி சேனலில் ஒளியின் வேகத்தில் மனிதன் பயணிக்க முடிந்தால் என்ன நிகழும் என்பாதை அவ்வப்போது ஒளிபரப்புகிறார்ர்கள். அது ஒவ்வொரு முறையும் மிகவும் வியப்பாகவே இருகிறது. ஒளியின் வேகத்தில் பறக்க கூடிய ஒரு விண்கலத்தில் நாம் பயனிப்பதக் கொள்வோம். பூமியிலிருந்து கிளம்பி பால்மா வீதிகளில் சுற்றிவிட்டு 2௦ வாரங்கள் கழித்து மீண்டும் பூமிக்கு திரும்பி வருகிறோம்.பூமியில் மிகப் பெரிய மாற்றங்களை நீங்கள் உணரலாம். உங்கள் உறவினர்களை காண இயலாது,நீங்கள் பார்த்த இடம், பழகின மக்கள் இப்படி எல்லாமே மாறிப் போயிருக்கும். ஏனெனில் ஒளியின் வேகத்தில் நீங்கள் பயணித்த இரண்டு வாரப் பயணமானது பூமியில் 250 வருடங்களாகியிருக்கும். ஒளியின் வேகத்தில் நீங்கள் பயணிக்கும்பொழுது காலமே மெதுவாகத்தான் நகருமாம்.

இந்த ஒளியின் வேகத்திற்கு இயங்க கூடிய திறன் பெற்ற நவீன நானோ கேமிரா ஒன்றை வடிவமைத்துள்ளனர் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் (எம்.ஐ.டி.) ஆய்வாளர்கள்.இதன் விலை 500 டாலர்(நம்மூர் மதிப்பில் சுமார் 32 ஆயிரம்(ஆகும்.இதில் சிற்பம்சமாக கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கையாக அதனை கண்டுபிடிக்கும் கருவியாகவும் பயன்படுத்தலாம் என்பதுதான்,
அத்துடன் மருத்துவ பயன்பாட்டிற்கும் மற்றும் கேம்ஸ்களில் பயன்படும் கருவிகளின் துல்லியத்தை அதிகரிக்கவும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்படுகிறது. 3டி கேமிரா வகையை சேர்ந்த இதனை எம்.ஐ.டி. ஆய்வாளர்களுடன் இணைந்து இந்திய ஆராய்ச்சியாளர்களும் வடிவமைத்துள்ளனர்.

இந்த தொழில்நுட்பத்தில் தற்போது சில கருவிகள் பயன்பாட்டில் இருந்தாலும், மழை, பனி அல்லது ஒளி ஊடுருவும் பொருட்கள் ஆகியவற்றையும் எளிதில் படம் பிடிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டு உள்ள இந்த கேமிரா டைம் ஆப் பிளைட் தொழில்நுட்பம் அடிப்படையில் உருவாக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஒளி அலைகள் ஒரு சமதள பரப்பில் பட்டு பின் அது சென்சாருக்கு திரும்பி வருவதை அடிப்படையாக கொண்டு பொருள் அமைந்திருக்கும் இடம் கணக்கிடப்படுகிறது.

ஒளியின் வேகம் தெரியுமென்பதால் அதனடிப்படையில் ஒளி அலை பயணம் செய்து மற்றும் அது பொருளில் பட்டு திரும்பி வருவதை கேமிரா எளிதில் கணக்கிடுகிறது. இந்த கேமிராவை எம்.ஐ.டி.யின் ஆய்வாளர்கள் ரஸ்கார் என்பவர் தலைமையில் உருவாக்கியுள்ளனர்.

Tuesday 26 November 2013

மாணவர்களும் மன ஆற்றலும்!

இயற்கை சமுதாயம், மனம் என்ற முக்கோணத்துக்குள் வாழ்ந்து வரும் மனித வாழ்வில் மகிழ்ச்சியான பருவம் மாணவப் பருவம்.

பொதுவாகவே குழந்தைகள் மனதில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களால் எதிர்மறை எண்ணங்கள் (Negative Thoughts) சிறுவயது முதலே ஆழ்மனதில் பதிந்து விடுகின்றன. அதனால், பள்ளி இறுதி மற்றும் கல்லூரி செல்லும் பருவத்தில் இலக்குகளை நிர்ணயிக்க, அவற்றை அடைய மிகவும் சிரமப்படுகின்றனர்.

‘Critical Mass Theory’ யின்படி கைதவறி ஓடை நீரில் விழுந்த கிழங்கை, எடுத்துத் தின்ற குரங்கு பெற்ற சுவை மண்ணில்லாமல் இருந்ததால், மகிழ்ச்சி தர, அந்த எண்ணம் பல நூறு மைல்களுக்கு அப்பால் வசித்த குரங்கு கட்கும் உள்ளுணர்வாய் சென்றடைந்ததை நாம் அறிவோம். அதுபோல் பெரும்பாலும் பெற்றோர் விருப்பப்படி எதிர்கால படிப்பைத் தேர்வு செய்கிறோம்.

விரும்பியது கிடைக்காவிட்டால் கிடைத்தை விரும்பு என்பதற்கேற்ப, தேர்வு செய்த பாடத்திட்டத்தில் ஆர்வம் கொண்டு, திட்டமிட்டு, முழுமன ஈடுபாட்டுடன் செயல்பட்டால் வெற்றி கனிகள் நம் கரங்களில் தவழுவதை எவராலும் தடுக்க முடியாது. அதற்கு சில குறிப்புகள்:

மனம் ஒரு மகத்தான சக்தி மிக்கது.

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியத்
திண்ணிய ராகப் பெறின்


என்றார் வள்ளுவர்.

‘நல்ல எண்ணங்களே நல்ல விளைவுகளைத் தரும். நமது எண்ணங்களே நம் வாழ்க்கையை நடத்துகின்றன. உன்னை நம்பு என்றார் எமர்சன் என்ற அறிஞர்.

உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் நீ வாழலாம் என்றொரு பாடல் உள்ளது.

தன்னையறிந்தின்ப முற வெந்நிலாவே
ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெந்நிலவா

என்றார் வள்ளலார்.

ஆகவே, அடிப்படையில் எவர் ஒருவர் நெப்போலியனைப் போல் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்து வைத்துள்ளாரோ அவரால் இலக்கினை சுலபமாக அடைய முடியும்.

Arise, Awake And Stop not till the goal is reached

என்ற விவேகானந்தர் குரலை என்றும் நினைவில் கொண்டால், தொய்வின்றி இலக்கை விரைவில் அடைய முடியும்.

நேரம் உயிரை விட மேலானது ஏனெனில் உயிருக்கு அழிவில்லை. உடலை விட்டு சென்று விடுகிறது.

ஆனால், சென்றநேரம் திரும்பக் கிடைக்காது. நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்துபவர்கட்கு வானத்தையே கையகப் படுத்தும் திறமை வந்து விடும்.

முழுமன ஈடுபாடு மிகவும் அவசியம். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது கவனம் சிதறாமல் கவனித்து மனதில் பதிய வைத்தல் மிகவும் பயனுடையது.

அந்தப் பதிவுகளை 24 மணி நேரம் / ஒரு வாரம் / ஒரு மாதம் / மூன்று மாதம் / ஒரு வருடம் என ஐந்து முறை நினைவுக்குக்கொண்டு வந்தால் என்றும் மறவாமல் ஆழ்மனதில் இருக்கும். தேவைப்படும் போது வெளிமனதுக்கு கொண்டு வந்து விடலாம்.

நம் மூளை வினாடிக்கு 14 முதல் 40 முறை சுழலுகிறது. இதை EEG என்ற கருவி மூலம் கண்டு பிடிக்கலாம். நமது மூளை / மன அலைச்சுழல் எந்த வேகத்தில் இருக்கும் போது பதிகிறதோ அதே அலை இயக்கம் வரும்போது தான் திரும்ப நினைவுக்குக் கொண்டு வர முடியும். அமைதியான மன நிலையில் பதிவானவைகள் பதட்டப்படும்போது நினைவுக்கு வராது. எனவே 14க்கும் கீழ் மன அலைச்சுழல் வேகத்தைக் கொண்டு வந்துவிட்டால் மனம் நம் வயப்படும்.

அதற்கு எளிய பயிற்சி

உடல் தளர்வுறும் போது
மனம் தளர்வுறுகிறது
மனம் தளர்வுறும் போது
மூளையின் அலைச்சுழல் வேகம் குறைகிறது
மூளையின் அலைச்சுழல் வேகம் குறையும் போது
வலது மூளை வேலை செய்கிறது
அப்போது இறைநிலையுடன்
பிரபஞ்சத்துடன் தொடர்பு ஏற்படுகிறது.

அந்நிலையில் நாம் எண்ணும் எண்ணங்களை பேசும் பேச்சுக்கள், செய்யும் செயல்கள் முழுமையான பலன்களைத் தருகிறது.

உடல் தளர்வுப் பயிற்சி

தளர்வாக அமர்ந்து கொண்டு, கைகளைக் கோர்த்து, கண்களை மூடி லேசாக மூச்சு விடவும். நெற்றி தசைகள், குழப்பம், மன இறுக்கத்தின் இருப்பிடம்; கன்னங்கள், தோள்பட்டைகள், உணர்ச்சிகளின் இருப்பிடம்; தாடைகள், புஜங்கள், கோபத்தின் இருப்பிடம்; பின் கழுத்து கவலை வருத்தங்களின் இருப்பிடம்.

இந்த உறுப்புக்களைத் தளர்வுறச் செய்தால் தொடர்புடைய உணர்வுகளும் நீங்குகிறது. கீழ்க்கண்டவாறு வரிசைப்படி தளர்வுறச் செய்யும்.

நெற்றி தசை, கண்கள், கன்னம், நாக்கு, தாடை, கழுத்து, பின்கழுத்து, தோள் பட்டைகள், புஜங்கள், கைகள், விரல்கள் மார்புப் பகுதி, வயிற்றுப் பகுதி, இடுப்புப் பகுதி, தொடை, முழங்கால், பாதம்.

தளர்வுற்றபின், தேவையான இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிரோட்டம் சீராகப் பாய்ந்து நிரம்புவதாய் பாவித்து, பின் படிப்பதில் ஈடுபட்டால் பாடம் கவனித்தால் முழுப் பலன் கிடைக்கிறது. தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறமுடியும்.

Monday 25 November 2013

உழைக்காமல் இருப் பவர்களால் உயர முடியாது - குட்டிக்கதைகள்!

மகிழ்ச்சி என்பது விளைவு என நினைப்பதால்தான், நாம் திரும்பிப் பார்க்கும்போது அதிக நாட்கள் இன்பமாக இருந் ததுபோலத் தோன்றுவதில்லை. மகிழ்ச்சி என்பது ஒவ்வொரு நிகழ்விலும் அடங்கியிருக்கிறது!

அதிக மதிப்பெண்ணுக்காக இல்லாமல், படிப்பதே மகிழ்ச்சி தருவதாக ஆக வேண்டும்; சம்பளம் மட்டுமின்றி, பணிபுரிவதே ஆனந்தம் தருவதாக அமைய வேண்டும்! இரவு என்பது இல்லையெனில், விடியலில் பறவைகளின் இசை காதுகளில் விழ வாய்ப்பில்லை. நுணுக்கமான பணியைச் செய்து முடித்து, காலாற நடந்து, குளிர்ந்த காற்றைச் சுவாசித்து மகிழ... அதில் கிடைக்கும் ஆனந்தத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

இப்படிச் சின்னச் சின்ன நிகழ்வுகளிலும் அடங்கியிருக்கும் மகிழ்ச்சியைத் தவறவிடுபவர்கள், பெரிய இன்பம் வந்தாலும் அதை நுகரமுடியாமல் நுரைதள்ளிவிடுவார்கள். பசிக்காமல் சாப்பிட்டு, உழைக்காமல் ஓய்வெ டுத்து, கீழே விழ பயந்து, முயற்சி எடுக்க மறந்து, பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்ந்து, த்ரில் ஏற்படுத்தும் தருணங்களை இழந்தவர் கள், கடைசி கட்டத்தில் வருத்தப்படுவார்கள். 

அடுத்தவர்களது அளவுகோல்களில் நமது மகிழ்ச்சியை அளப்பது அவசியமில்லை; அடுத்தவர்களுக்கு நிரூபிப்பதற்காக நாம் இன்புற்றிருக்க வேண்டிய தேவையும் இல்லை. மகிழ்ச்சியை மின்னலாக எண்ணி, அதை அசைபோட்டுத் திருப்தியடைவார்கள் சிலர். கடந்த காலம் மட்டுமே நிம்மதியானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருந்ததாக எண்ணிப் பழங்கதைகள் பேசித் திரிவார்கள் சிலர். மகிழ்ச்சி என்பது இறந்தகால ஏக்கமும் அல்ல; எதிர்காலக் கனவும் அல்ல. அது, நிகழ்கால நிதர்சனம்!

மகிழ்ச்சி ஓர் உணர்வு! அதை நேர்வழியில் அடையும்போதுதான் நீடித்து நிற்கும். உழைக்காமல் கிடைக்கும் பணமும், தகுதியின்றிக் கிடைக்கும் புகழும் சிறு காற்றின் சலனத்துக்கே தாக்குப்பிடிக்காமல் தடுமாறி விழுந்துவிடும். 'எனில், குறுக்கு வழிகளே வாழ்வில் தேவையில்லையா?' என்று சிலர் கேட்கலாம். ஒரே யரு விதிவிலக்கு உண்டு. நம்மை வீழ்த்த எவரேனும் குறுக்கு வழியைக் கையாண்டால், அந்த வியூகத்தைத் தவிர்க்க, வேறு வழி இல்லாத பட்சத்தில் சில குறுக்குவழிகளையும் தந்திரங்களையும் கையாளலாம். அதனால்தான் மகா பாரதத்தில், சில சந்தர்ப்பங்களில் ஸ்ரீகிருஷ்ணரும் தந்திரங்களைக் கையாண்டார்.

ஆனால், அவை அனைத்தும் போர் நியதிகளுக்கு உட்பட்டவையே! ரதத்தைப் பெருவிரலால் அழுத்தியதும், மெழுகாலான பீமனின் சிலையைச் செய்து திருதராஷ்டிரன் முன் நிறுத்தி யதும் அதனால்தான்!

கிழக்கு நாடுகளில், குறுக்குவழியைக் குயுக்தியாக முறியடிப்பது குறித்து ஒரு கதை உண்டு. 

படைபலம் மிகுந்த ஜாதுகார் எனும் மன்னனை வீழ்த்த விரும் பினான் ரத்னபுரியில் இருந்த சமத்கார் என்ற தந்திரசாலி. ஆனால், ரத்னபுரியின் படைத் தளபதியோ, ஒரு சாதாரண ஆசாமியான சமத்காரின் உதவி பெற்று ஜாதுகாரை வீழ்த்துவதா என நினைத்து வாளாவிருந்தான். சமத்கார் பலமுறை முயற்சித்தும், தன்னைச் சந்தித்துப் பேசக்கூட அனுமதி வழங்கவில்லை தளபதி.  இதனால் சமத்கார் எரிச்சலுற்றான்.

அவன், தளபதியின் வலக்கரமாக திகழும் விமல்கீர்த்தி எனும் வீரனைச் சந்தித்து, ''உன் தளபதி புத்திசாலியாக இருக்கலாம். ஆனால், அவரால் ஜாது காரை ஒருபோதும் வீழ்த்தமுடியாது' என்றான். நிச்சயம் இந்தத் தகவல் தளபதியின் காதுக்குப் போகும் என்று சமத்காருக்குத் தெரியும். அதன்படியே நடந்தது. விமல்கீர்த்தி சொன்ன தகவலைக் கேட்டுக் கொதித்துப் போன தளபதி, சமத்காரை அவமானப்படுத்த வேண்டுமென முடிவு செய்தான்.

மறுநாள், படைத்தலைவர்களைக் கொண்டு ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தான். சமத்காரையும் வரவழைத் தான். அவனிடம், 'கடற்போரில் சக்தி வாய்ந்த படை ஆயுதம் எது?' என்று தளபதி கேட்க, ''அம்புகள்'' என்றான் சமத்கார்.

''உண்மைதான்! எங்களிடம் அம்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. ஜாதுகாருடன் மோத பத்தாயிரம் அம்புகளாவது தேவை. பத்து நாட்களுக்குள் அவற்றைச் செய்து தர உன்னால் முடியுமா?'' என்று கேட்டான் தளபதி.

உடனே, ''பத்து நாட்கள் அதிகம்! மூன்றே நாட்களில் முடித்துத் தருகிறேன்'' என்றான் சமத்கார்.

இதைக் கேட்ட தளபதி, ''நகைச்சுவையான உறுதிமொழிகளுக்குப் படைக்களத்தில் இடம் இல்லை'' என்று கோபமும் கேலியுமாகச் சொல்ல, ''உங்களிடம் விதூஷகம் செய்ய முடியுமா? மூன்றே நாட்களில் அம்புகளைத் தயார் செய்து தரவில்லையெனில், என்ன தண்டனை தந்தாலும் ஏற்கிறேன்'' என்றான் சமத்கார்.

அதையடுத்து, 'சமத்காருக்கு அம்பு தயாரிக்கும் மூலப் பொருட்களைப் போதிய அளவுக்குத் தரவேண்டாம்; அம்பு செய்பவர்கள் தொழிலில் வேகம் காட்டவேண்டாம்' என்று ரகசிய ஆணையிட்டான் தளபதி.

சமத்கார் கலங்கவில்லை. விமல்கீர்த் தியை அழைத்து, ''20 படகுகள் வேண்டும். அவற்றில் வைக்கோல் அடைத்து, கறுப்புத் துணியால் தைக்கப்பட்ட 50 மனித உரு வங்களைச் செய்து வைக்கவேண்டும். தவிர, ஒவ்வொரு படகுக்கும் 30 பேர் தேவை. இந்தத் திட்டம் தளபதிக்குத் தெரி யக்கூடாது'' என்று கேட்டுக்கொண்டான்.

மூன்றாம் நாள், 20 படகுகளும் வலு வான கயிற்றால் கட்டப்பட்டு, ஜாதுகாரின் படை முகாமுக்குப் பக்கத்திலிருந்த நதிக் கரையின் உட்பகுதியில் வரிசையாக நிறுத் தப்பட்டன. கடுமையான மூடுபனியில், அவற்றில் என்ன இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அந்தப் படகுகள் மெள்ள நகர்ந்து, படைமுகாமுக்குத் தெரிகிற தூரத்தில் வந்ததும், ஒவ்வொரு படகிலுமிருந்த 30 பேரையும், போர்முரசு கொட்ட உத்தரவிட்டான் சமத்கார். உடனே அவர்கள், 'எதிரிகள் தங்கள் கப்பல்களில் வந்து தாக்கினால் என்ன செய் வது?'' என்று பதைபதைக்க, 'இந்த மூடு பனியில் அப்படியரு முட்டாள்தனத்தை ஜாதுகார் செய்ய முற்படமாட்டான்' என்றான் சமத்கார் உறுதியாக.

போர்முழக்கத்தைக் கேட்டதும், தங்கள் முகாம் மீது பயங்கர தாக்குதலை எதிர் பார்த்த ஜாதுகார், கரையில் இருந்தபடியே படகுகளை நோக்கி அம்புகள் எய்து தாக்குதல் நடத்துமாறு தன் சிப்பாய்களுக்குக் கட்டளை இட்டான். அதேநேரம், தனது படகுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக முகாமை நோக்கி முன்னேறும்படி பணித் தான் சமத்கார். போர் முழக்கத்துடன் மெள்ள அவனது படகுகள் முன்னேற, எதிர்த்திசையில் இருந்து அம்புமாரிப் பொழிந்துகொண்டு இருந்தது.

நள்ளிரவில் பனி விலகத் தொடங்கியதும், கரைக்குத் திரும்பும்படி படகுகளுக்கு ஆணையிட்டான் சமத்கார். அவனது திட்டம் நிறைவேறியது. ஒவ்வொரு படகிலும் இருந்த வைக்கோல் மனிதர்களின் உடம்பில் ஆயிரக் கணக்கான அம்புகள்! மறுநாள், 20,000-க்கும் மேற்பட்ட அம்புகளைத் தளபதியிடம் கொடுத்தான் சமத்கார்.

பின்னர் விமல்கீர்த்தி சமத்காரிடம், ''நேற்று கடுமை யான மூடுபனி இருக்கும் என்பதை எப்படி கணித்தாய்?'' என வியப்புடன் கேட்டான். ''பூகோளத்தையும் வானியலையும் அறியாதவன் தளபதியாக இருக்க முடியாது. நேற்று மூடுபனி கடுமையாக இருக்கும் என்பதை மூன்று நாட்களுக்கு முன்பே கணித்துவிட்டேன். உங்கள் தளபதி போதுமான ஒத்துழைப்பு தர மாட்டார் என்று எனக்குத் தெரியும். எனது முயற்சியில் நான் தோற்று அவமானப்படவேண்டும் என்பதே அவரது நோக்கம். எனவே, அவரது தந்திரத்தை வெல்ல, நானும் தந்திர முயற்சியைக் கையாண்டேன். போட்டி என்று வந்துவிட்டால், அடுத்தவர்களது தந்திரத்தைவிட, நமது தந்திரத்தைத் தூக்கிப்பிடிப்பது அவசியம்!'' என்றான் சமத்கார்.

கடைசியில், தளபதி தனது முக்கிய ஆலோசகராக சமத்காரை நியமித்து, ஜாதுகாரை வீழ்த்தினான்.

வேறு வழியில்லாத நிலையில் பயன்படுத்தப்பட வேண்டிய ஆயுதமே தந்திரம். ஆனால், அதையே நம்பிக்கொண்டு, 'வினாத்தாள் வெளியாகிவிடும்' என்று எதிர்பார்க்கும் மாணவனைப்போல உழைக்காமல் இருப் பவர்களால் உயர முடியாது. சின்ன வயதிலிருந்தே உழைப் பின் இனிமையை நாம் சொல்லிக் கொடுக்க மறந்துவிட் டோம். நமது பாடத் திட்டத்தில் வியர்வைக்கு வெகு மதி இல்லாமல் போய்விட்டது. 'உடலுழைப்பு முக்கி யம் என்பதால், அது வகுப்பறையில் சொல்லித் தரப் படவேண்டும்' என மகாத்மா காந்தி வலியுறுத்திய உயர்நெறியை நாம் காற்றில் பறக்க விட்டுவிட்டோம்.

மனனம் செய்வது மட்டுமே கல்வி என மாணவர்கள் நினைக்கத் துவங்கிவிட்டனர். மரம் நட்டு வளர்க்கவோ, நீரூற்றி மகிழவோ, பாதை அமைத்துப் பழகவோ மாண வர்களுக்குச் சற்றும் இடம் தராத கல்வி முறையே இன்று அனுசரிக்கப்படுகிறது. கான்கிரீட் காடுகளாக வளர்ந்த பள்ளிக்கூடங்களின் இடுப்பில், இவற்றுக்கெல்லாம் இடமும் இல்லை. பல பள்ளிகளில் ஓடி விளையாடவே இடம் இல்லையே!

தனித்து இயங்கும் வகையில் சுயச் சார்புடன் வளர் கிற குழந்தைகளே எதிர்காலத்தில் தாக்குப் பிடிக்க முடியும். எவர் தயவுமின்றி, தங்கள் வாழ்வை தாங் களே நிர்வகிக்கும் திறன் பெற்றவர்களால் மட்டுமே வாழ்வில் எப்போதும் இன்புற்றிருக்க முடியும். 

கண்ணாடியில் பிம்பமாய் திருக்குறள்! மாணவர் சாதனை!


நூற்றுக்கணக்கான ஆண்டுகளைக் கடந்தும், இன்றைய தேவையை மனதில் வைத்து எழுதியதுபோல, இளமை ததும்பும் திருக்குறளை, சாதனை முயற்சியாகப் பலரும், பலவிதங்களில் சோதித்துப் பார்த்து விட்டனர். 3 வயது சிறுவன் அனைத்து திருக்குறளையும் மனப்பாடமாகக் கூறுகிறான். அரிசியில் ஒரு திருக்குறளை எழுதுகிறார் என அடிக்கடி திருக்குறளை வைத்து சாதனை செய்யும் திறமைசாலிகள் ஆங்காங்கே உருவெடுத்த வண்ணமே உள்ளனர்.

இதே திருக்குறளை, கோவை கற்பகம் மேலாண்மைக் கல்லூரி மாணவர் எம்.மணி, சற்று வித்தியாசமாகப் பதிவு செய்துள்ளார். மனதின் எண்ணங்களை கண்ணாடியாய் காட்டுவது திருக்குறள் என்றால், இவர் எழுதிய திருக்குறள்களோ, கண்ணாடி இருந்தால் மட்டுமே படிக்க முடியும்.

இதென்ன புது முயற்சி என்று கேட்டால், 1330 குறள்களையும் தலைகீழாய், அதாவது கண்ணாடியின் பிம்பங்களாக வடித்துள்ளார் இந்த இளைஞர். இது சாதாரணமாகச் செய்துவிட முடியாத காரியம். ஒரு சிறிய உதாரணம், நமது பெயரை அல்லது ஒரு எழுத்தைத் தலைகீழாய் எழுத முடியுமா என்ற சோதனை செய்தால், பல காகிதங்கள் கிழிக்க வேண்டியிருக்கும்.

ஒரு எழுத்து தலைகீழாய் அதாவது பிம்பமாக எப்படி இருக்கும் என யோசித்துப் பார்த்தாலே குழப்பம் வந்துவிடும். தட்டுத்தடுமாறி ஒரு எழுத்தை எழுதி முடித்தாலும் அது அலங்கோலமாக, குறிப்பிட்ட அளவில் அமைந்துவிடாது. ஆனால் இவரது இன்னொரு முயற்சி என்னவென்றால் ஒரு திருக்குறளுக்கான இடத்தை 5 சென்டிமீட்டர் (நீளம்) X அரை சென்டிமீட்டருக்குள் (அகலம்) அடக்கி விட்டார். ஒரு முழு சார்ட் காகிதத்தில் கால்பாகம் மீதமிருக்கையிலேயே, அத்தனை திருக்குறளையும் எழுதி முடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல். 1330 குறள்களுக்கும் இவர் எடுத்துக்கொண்டது 10 மணி நேரம் மட்டுமே. இளமைத் திருக்குறளுக்கு தலைகீழாய் புது வடிவம் கொடுத்துள்ள மணியிடம் இதுகுறித்து பேசினோம்.

‘எனது சொந்த ஊர் சேலம் அடுத்த ஆத்தூர். தந்தை முத்துச்சாமி, தாயார் மலர்க்கொடி, கூலி வேலை செய்து வருகின்றனர். சிறுவயது முதலே வித்தியாசன முயற்சிகளை அடிக்கடி மேற்கொள்ளும் பழக்கம் வந்தது. திருக்குறள் வாசிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததால் 10-ம் வகுப்பு படிக்கும்போது, அத்தனை குறள்களையும் நேராக எழுதினேன். பின்பு, தலைகீழாய் எழுத பயிற்சி எடுத்தேன். இப்போது, இப்படியும் வேகமாக எழுதக் கற்றுக்கொண்டேன்’ என்கிறார்.

தனது தமிழ் ஆர்வத்தால் ஏற்பட்ட முயற்சி, பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு, இன்று இவருக்குக் கைகூடியிருக்கிறது. இதை சாதனைக்காகவும், விளம்பரத்துக்காகவும் செய்யவில்லை. விழிப்புணர்வு ஏற்படுத்த பயன்படுத்தப் போவதாகக் கூறுகிறார்.

தற்போது ஆத்திச்சூடியை இந்த முறையில் எழுதி வருகிறார். கிரிக்கெட் நாயகன் சச்சினின் வரலாறும், இவரது கையால் தலைகீழாக்கப்பட இருக்கிறதாம்.

இவரது முயற்சியை ஊக்குவித்துவரும் துறை இயக்குநர் சந்திரசேகர் கூறியதாவது: சமீபத்தில் தேசிய கீதத்தை ஒருவர் தலைகீழாய் எழுதியது குறித்து நாளிதழில் செய்தி வந்தபோதுதான், மணியின் திறமை குறித்து நாங்கள் அறிந்தோம். கல்லூரி சார்பில், மேலும் ஊக்குவித்து, அடுத்த கட்டத்துக்கும் இதனைக் கொண்டு செல்வோம் என்றார்.

தமிழ் எழுத்தை நேராக எழுதவே பலரும் படாதபாடுபடும் இந்தக் காலத்தில், தமிழை நேசித்து, அதனைப் புதுவிதமாய் சுவாசிக்கும் இவரது முயற்சி வரவேற்கப்பட வேண்டியது.

Sunday 24 November 2013

செல்போனிலுள்ள எண்களைக் கொண்டு தமிழில் தட்டச்சு – புதுகை தமிழர் சாதனை!

தற்போதும் கூ ட சில செல்போன் நிறுவனங்கள் தமிழில் குறுந்தகவல் அனுப்பும் வசதியைச் செய்திருந்தாலும் அதைப் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது. இதற்குத் தீர்வு காணும் வகையில் செல்போனில் உள்ள எண் விசைப் பலகையிலேயே தமிழில் தட்டச்சு செய்யும் புதிய முறையை புதுக்கோட்டையைச் சேர்ந்த டி. வாசுதேவன் வடிவமைத்துள்ளார்.

nov 24 - tamil.keyboard

புதுகோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வாசுதேவன் என்பவர் தனது உறவினருடன் சேர்ந்து கடந்த 2008 ஆம் ஆண்டு கைபேசியில் எளிதாக தமிழ் எழுத்துகளை டைப் செய்வதற்கான மென்பொருளை உருவாக்கினார். இதையடுத்து, வெறும் எண்களாலேயே கணினி விசைப்பலகை மற்றும் கைபேசியில் தமிழில் தகவல்களை பாரிமாறி கொள்ளும் மென்பொருளுக்கான காப்புரிமையையும் பெற்றார்.

விரைவில் இந்த சேவையை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறியுள்ள வாசுதேவன், http://www.easytype.in/ என்ற இணையதளம் மூலம் வரும் ஜனவரி 20-ம் தேதி வரை மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தமிழ் உட்பட மொத்தம் 16 மொழிகளில் பூஜ்யம் முதல் ஒன்பது வரையிலான நியூமரிக் வடிவில்தான் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் தெரிவித்தார்.

தற்போது அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், இந்த மென்பொருளை அதிக செலவில் உருவாக்கியுள்ளதாகவும், இந்த முயற்சிக்கு அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார் வாசுதேவன்.

சர்வதேச ஓபன் சதுரங்கம்: தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன்!

 

தமிழக அரசின் ஆதரவுடன் சென்னை கிராண்ட்மாஸ்டர் சர்வதேச ஓபன் சதுரங்க (செஸ்) போட்டித் தொடர் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. 26 கிராண்ட்மாஸ்டர்கள், 33 சர்வதேச மாஸ்டர்கள் உள்பட 118 வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் நேற்று கடைசி சுற்றான 11-வது சுற்று நடந்தது.

இதன் முடிவில் இந்திய வீரர் வி.ஆர். அரவிந்த் சிதம்பரம் 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். கடைசி சுற்றில் சக நாட்டவர் விஷ்ணு பிரசன்னாவுடன் டிரா செய்த 14 வயதான அரவிந்த் சிதம்பரம் மதுரையை சேர்ந்தவர்.

தற்போது சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். இந்த போட்டியில் 6 கிராண்ட் மாஸ்டர்களுடன் மோதிய இவர் கஜகஸ்தான், ஆர்மேனியா உள்பட 4 கிராண்ட் மாஸ்டர்களை வீழ்த்தியது சிறப்பு அம்சமாகும்.

இது போன்ற சர்வதேச கிராண்ட் மாஸ்டர் போட்டிகளில் 14 வயது மாணவர் பட்டம் வெல்வது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அரவிந்த் சிதம்பரம் ஏற்கனவே 11, 13 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் தேசிய அளவில் பட்டம் வென்றிருக்கிறார். அவருக்கு ரூ.2 லட்சம் பரிசாக கிடைத்தது.

உக்ரைன் வீரர் நேவ்ரோவ் வாலோரி, இந்தியாவின் எஸ்.பி.சேதுராமன் தலா 8.5 புள்ளிகளுடன் 2&வது இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு வருவாய் நிர்வாகத்துறையின் கூடுதல் செயலாளர் ஸ்ரீதர் பரிசுகளை வழங்கினார். விழாவில் சர்வதேச நடுவர்கள் அனந்த ராமன், திருக்காளத்தி, தமிழ்நாடு சதுரங்க சங்க செயலாளர் ஹரிஹரன், போட்டி ஒருங்கிணைப்பாளர் பால் ஆரோக்கியராஜ், போட்டியின் முதன்மை நடுவர் எப்ரேம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Saturday 23 November 2013

ஐநாவும் என்னை அழைத்தது... சுவர்ணலட்சுமி சாதனை!

 

சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.

மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் கவர்ந்தார்.

சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிதுரைக்கண்ணு- லட்சுமி தேவி தம்பதியின் ஒரே மகள் சுவர்ணலட்சுமி.


சுவர்ணலட்சுமிக்கு பிறவியிலே கண்பார்வை இல்லை. இவருக்கு பார்வைவேண்டி பலவித முயற்சிகள் எடுத்த பெற்றோர் அந்த முயற்சிகள் தந்த தோல்வியினால் துவண்டு போகவில்லை, காரணம் தாங்கள் துவண்டு போனால் அது தங்களது மகளை பாதிக்கும் என்பதால் மகளின் விருப்பம், அவரது முன்னேற்றத்திற்காக தங்களது வாழ்க்கை ஒதுக்கவும், சுவர்ணலட்சுமியின் வளர்ச்சியை செதுக்கவும் செய்தனர்.

சுவர்ணலட்சுமி சென்னையில் உள்ள பார்வையற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வெண்ட் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பிரமாதமாக படித்து வருகிறார் தற்போது அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.

 பாட்டு பாடுவது, கீபோர்டு வாசிப்பது, நீந்துவது, சதுரங்கம் விளையாடுவது என்று எதையும் விட்டு விடாமல் எதிலும் சோடை போகாமல் வளர்ந்து வந்த சுவர்ணலட்சுமிக்கு பள்ளியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பார்லிமெண்ட் அமைப்பின் தகவல் தொடர்புதுறை அமைச்சர் பதவி கிடைத்தது.

இந்த இடத்தில் குழந்தைகள் பாராளுமன்றம் பற்றி ஒரு சில வார்த்தை
 இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளை மட்டுமேவைத்து அமைக்கப்பட்டதுதான் இந்த குழந்தைகள் பாராளுமன்றம். தமிழகத்தில் எட்வின் என்பவரால் 1993ல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டு, சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 15,000 குழந்தைகள் பாராளுமன்றங்கள் உள்ளன. சமூக ஆர்வலர்களின் மூலம் நடத்தப்படும் இந்தப் பாராளுமன்றங்களில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் வரை அனைவரும் பள்ளி மாணவர்களே, இதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சூரியசந்திரன்.

குழந்தை திருமணம், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, தங்களது பிரச்னைகளைத் தாங்களே பேசித் தீர்வுகாண்பது என இந்தப் பாராளுமன்றங்களின் பணிகள் மகத்தானவை. இதன் மூலம் மாணவர்கள், தங்களது பள்ளிப் பருவத்திலேயே தன்னம்பிக்கையையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த பாராளுமன்றத்தில் வெட்டி பேச்சு கிடையாது, வேட்டி கிழியும் அபாயமும் கிடையாது, வெளிநடப்பும் கிடையாது எல்லா பேச்சும் அளவானவை, ஆரோக்கியமானவை, குழந்தைகள் உரிமையை நிலைநாட்டுபவை, அவர்களது வளர்ச்சிக்கு வழிகாணுபவை.


ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அந்தந்தப் பகுதிகளில் தேர்வு செய்யப்படும் அமைச்சர்கள் அடங்கிய பாராளுமன்றங்களின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். அதில் சிறப்பாகப் பேசியவர்கள், செயல்பட்டவர்கள் மாநில அளவிலான பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகவல் தொடர்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சுவர்ணலட்சுமிக்கு இயல்பாகவே சமூக சேவை எண்ணம் உண்டு. இதன் காரணமாக கடலூரில் தானே புயல் தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்டு 30 ஆயிரம் ரூபாயை சேகரித்து நேரடியாக சம்பவ இடத்திற்கு போய் பாதிக்கப்பட்ட மக்களிடம் அந்த நிதியை வழங்கினார்.

அதன்பிறகு அனைவருக்கும் தொண்டு செய்யும் எண்ணம் வரவேண்டும் என்பதற்காக ஒருவருக்கு ஒரு ரூபாய் என்ற திட்டத்தை கொண்டு வந்து அந்த ஒரு ரூபாயும் பள்ளி குழந்தைகள்தான் தரவேண்டும் என்று சொல்லி ஏழாயிரம் ரூபாயை ஏழாயிரம் பேரிடம் இருந்து வசூல் செய்தார். இந்த பணத்தை கொண்டு இரண்டு குழந்தைகளின் படிப்பு கட்டணத்தை கட்டியதுடன் சிலருக்கு சீருடையும் வாங்கிக் கொடுத்தார்.


இந்த நிலையில் அடுத்து நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் சுவர்ணலட்சுமி நிதி அமைச்சராக தேர்வானார் இவரது பேச்சு செயல்பாடு காரணமாக அடுத்து நடந்த மாநில அளவிலான கூட்டத்தில் குழந்தைகள் பாராளுமன்ற பிரதமராக தேர்வானார்.

இந்த நிலையில் ஐநாவின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி பேச அனுமதிக்கப்பட்டார், இவரது சிறப்பான பேச்சு காரணமாக அமெரிக்கா போய் திரும்பி சில மாதங்களிலேயே திரும்பவும் ஐநா அழைக்கப்பட்டு மீண்டும் போய் பேசிவிட்டு வந்தார்.

இப்படி ஒரு முறைக்கு இருமுறை ஐநா போய்வந்த சுவர்ணலட்சுமிக்கு இங்குள்ள பல்வேறு அமைப்புகள் பாராட்டு விழா நடத்திவருகின்றன.
ஆரம்பத்தில் என்னிடம் பல விடயங்களில் பயம், தயக்கம், பார்வை இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. சில்ரன்’ஸ் பார்லிமென்டில் சேர்ந்த பிறகு, தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்தன.

‘எந்தச் செயலையும் பளுவாக நினைக்காமல், புதிய கண்ணோட்டத்துடன் அணுகினால் ஜெயிக்கலாம்’ என்பதைக் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தின் போதும் எந்த மாதிரியான பிரச்னைகள் விவாதத்துக்கு வரும், அதற்கு எப்படிப் பட்ட தீர்வைச் சொன்னால் சரியாக இருக்கும்னு ஒரு முன் தயாரிப்போடு இருப்பேன்.

இந்த திட்டமிட்ட உழைப்பு என்னை தற்போது இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த பாராட்டுக்கள் என்னை இன்னும் சமூகத்திற்கு உழைக்க தூண்டுகிறது. எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகி இன்னும் நிறைய உழைக்க என்னை நான் தயார் செய்து கொண்டு வருகிறேன்.

நம்மை வாழவிடாமல் தடுப்பதற்கு நாட்டில் ஆயிரம் காரணங்கள் இருக்கும் ஆனால் வாழவைக்க ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் அந்த காரணத்தை பிடித்துக்கொண்டு நாமும் வளர வேண்டும், நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்க்க வேண்டும். பயமும், தயக்கமும்தான் நமது லட்சியப் பயணத்திற்கான தடைக்கற்கள்.

முதலில் அந்த தடைக்கற்களை தகர்த்து எறியுங்கள் என்று முழங்கும் சுவர்ணலட்சுமியை வாழ்த்த விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9025241999.

(சுவர்ணலட்சுமி பள்ளிக்கு போயிருந்தால் அவரது தாயார் லட்சுமிதேவி பேசுவார்)

எதிர் நீச்சல் எளிது!


நடிகைகள் மட்டுமின்றி, நடிகர்களும் தமது வாரிசு களை சினிமாவில் களமிறக்கும் காலமிது. நடிகர் ‘தலைவாசல்’ விஜய்யும் அப்படி நினைத்திருந்தால் இன்று நாம் ஒரு உலக சாதனையாளரை இழந்திருப்போம். யெஸ்... தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீணா, உலகமே கவனிக்கும் இடத்தில் இருக்கும் நீச்சல் சாம்பியன்! செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிற ஜெயவீணாவுக்கு ஒவ்வொரு விடியலிலும் வெற்றி! 2012 டிசம்பரில் இஸ்தான்புல்லில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பாக பங்குகொண்ட இளவயது சாதனையாளர் என்பது இவரது லேட்டஸ்ட் அடையாளம்! ‘‘எங்கண்ணா ஜெயவந்த், ஸ்விம்மிங் ப்ராக்டீஸ் பண்ணப் போகும்போது நானும் வேடிக்கைப் பார்க்கப் போவேனாம்.

எனக்கு ரெண்டரை வயசிருக்கும்... ‘அண்ணாகூட நானும் ஸ்விம் பண்ணணும், இறக்கி விடுங்க’ன்னு அடம் பிடிச்சேனாம். அண்ணா ப்ராக்டீஸ் பண்ணினது பெரிய நீச்சல் குளம். 6 அடி, 9 அடி ஆழமிருக்கும். அதுக்குப் பக்கத்துல குழந்தைங்களுக்கான சின்ன நீச்சல் குளம் ஒண்ணு இருக்கும். அதுல என்னை இறக்கி விட்டிருக்காங்க. நான் ‘முடியாது, அண்ணன் இருக்கிற நீச்சல் குளம்தான் வேணும்’னு அடம் பிடிச்சேனாம். எங்களைக் கூட்டிட்டுப் போன எங்க தாத்தா, அவுட்டோர் ஷூட்டிங்ல இருந்த எங்கப்பாக்கு போன் பண்ணி விஷயத்தைச் சொல்லியிருக்கார்.

‘ரொம்ப அடம் பண்றான்னா, பெரிய ஸ்விம்மிங் பூல்லயே இறக்கி விட்டுட்டு பக்கத்துலயே நின்னுப் பார்த்துக்கோங்க... ஒருவாட்டி தண்ணி குடிச்சான்னா, அந்த பயத்துல மறுபடி அந்தப் பக்கமே போக மாட்டா’ன்னு சொல்லிருக்கார் அப்பா. ‘தண்ணி குடிப்பேன்’னு நினைச்சு என்னை இறக்கி விட்டா, நானோ, ஸ்விம் பண்ணி மேலே வந்தேனாம். அந்த நிமிஷத்துலேருந்தே ஆரம்பிச்சது என்னோட நீச்சல் பயணம்...’’ - சாகசக் கதையை சாதாரணமாகச் சொல்கிற ஜெயவீணாவுக்கு முதல் போட்டியே வெற்றியை வசப்படுத்தியிருக்கிறது!

‘‘2008ல சென்னையில நடந்த மாநில போட்டியில ஜெயிச்சதுதான் முதல் வெற்றி. மெடல் வாங்கினப்ப, அது என்ன, ஏதுன்னுகூட எனக்குப் புரியலை... அதுக்கப்புறம் நேஷனல்ஸுக்கு செலக்ட் ஆகி மெடல் வாங்கினேன். 2011ல ராஞ்சியில நடந்த நேஷனல்ஸ்ல 5 மெடல் வாங்கினேன். நேஷனல்ஸ்ல அவ்ளோ சின்ன வயசுல (12 வயது) மெடல் வாங்கினதுக்காக ‘யங்கெஸ்ட் ஸ்விம்மர்’ என்ற பெருமையும் பாராட்டும் எனக்குக் கிடைச்சது’’ என்கிற ஜெயவீணா, படிப்பிலும் சுட்டி. விசில் அடித்தபடியே பாடல் பாடுவதிலும் நிபுணி.

‘‘ஸ்விம்மிங் ப்ராக்டீஸுக்கு போக மிச்சமாகிற ஒவ்வொரு நிமிஷத்தையும் படிக்க உபயோகப்படுத்திக்குவேன். ஸ்போர்ட்ஸ் மெடிசின் படிக்கணுங்கிறதுதான் என்னோட லட்சியம்’’ என்கிறவர், 2016ல் நடக்கவுள்ள ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்று பதக்கங்களையும் பெருமையையும் தட்டிவர இப்போதிலிருந்தே பயிற்சிகளை ஆரம்பித்திருக்கிறார்!

Thursday 21 November 2013

விவசாயத்தின் மீதான அக்கறை - பள்ளி மாணவனின் கண்டுபிடிப்பு..!


காரைக்கால் பள்ளி மாணவன் வடிமைத்துள்ள சூரிய ஒளி மருந்து தெளிப்பான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

வயல்களில் கைகளை கொண்டு இயக்கும் ஸ்பிரேயர்கள் பயன்படுத்துவதால் விவசாயிகளுக்கு சோர்வு ஏற்படுகிறது. பெட்ரோல் ஸ்பிரேயர்கள் பயன்படுத்தினால் விரைவாக மருந்து தெளிக்க வேண்டும். இரைச்சல், அதிகமாக இருக்கும்.

இதற்கு மாற்றாக சூரிய ஒளி பூச்சி கொல்லி மருந்து தெளிப்பானை காரைக்கால் கீழக்காசாகுடி ஆத்மாலயா பள்ளி 8ம் வகுப்பு மாணவன் முகேஷ் நாராயணன் (வயது 13) வடிமைத்துள்ளார். முதல்வர் ரங்கசாமியை நேற்று சந்தித்து செயல்விளக்கம் காண்பித்தார்.

இது குறித்து பள்ளி மாணவன் முகேஷ் நாராயணன் கூறியதாவது:

இந்த புதிய வகை ஸ்பிரேயரில் சோலர் பேனல், டி.சி., மோட்டார், டேங்க், நாசில், பேட்டரி, சுவிட்ச் போர்டு, மொபைல் போன் சார்ஜர், புல் வெட்டி, மின்சார பல்புகளுடன் ஒருங்கிணைந்து உருவாக்கப் பட்டுள்ளது. இவை அனைத்தும் முற்றிலும் சூரிய ஒளியில் இயங்கும்.விவசாயிகளுக்கு தலைகவசம் போல் செயல்படும் சூரிய ஒளி தகட்டில் இருந்து கிடைக்கும் மின்சாரம் உற்பத்தியாகி பேட்டரியில் சேமிக்கப்படும்.டி.சி.,மோட்டார், மருந்து சேமிப்பு கலனில் இருந்து, மருந்து மிகவும் எளிதாக பயிர்கள் மேல் தெளிக்கும். இதனை மற்ற வகை ஸ்பிரேயர்கள் போல் வேகமாக இயக்க வேண்டிய அவசியம் இல்லை. வேகத்தை மாற்றியமைத்துகொள்ளலாம். தேவையற்ற சப்தமும் வராது. இதில் உள்ள லெட் விளக்குகளை வீடுகளுக்கு மின் விளக்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். 3 கிலோ எடை கொண்ட சூரிய ஒளி மருந்து தெளிப்பான் உருவாக்க 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே தேவைப்பட்டது' என்றார்.

விவசாயத்தின் மீது அக்கறை கொண்டு இதை கண்டுபிடித்த இவரை (இளம் தலைமுறையை) வாழ்த்துவோம் !!!

Sunday 17 November 2013

தொடாமலே மின்சாதனங்களை இயக்கும் நவீன சுவிட்ச்!


கையால் தொடாமலேயே மின்சாதனங்களை இயங்கச் செய்யும் புதுமையான சுவிட்சை கண்டுபிடித்துள்ளார் கிராமத்து பொறியாளர் ஹரிராம்சந்தர். இவர் வடிவமைத்துள்ள இந்த டச்லெஸ் சுவிட்ச், இன்பிரா ரெட் (அகச்சிவப்பு கதிர்) தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.

இளம் பொறியாளர்

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அம்பலவாணபுரத்தைச் சேர்ந்த இளம் பொறியாளர் ஹரிராம்சந்தர். 23 வயதாகும் இந்த பி.டெக். (எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன்) பட்டதாரிக்கு பள்ளியில் படிக்கின்ற காலம்தொட்டே விஞ்ஞானத்தின் மீது ஓர் ஈர்ப்பு. இத்தனைக்கும் அவரது பெற்றோர் ஒன்றும் படித்தவர்கள் கிடையாது. அவரது மறைந்த தந்தை முருகன், சாதாரண மில் தொழிலாளிதான். தாயார் முத்துலட்சுமி வீட்டை கவனித்து வருகிறார்.

“விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” என்பதற்கேற்ப பள்ளியில் படிக்கின்ற காலத்திலேயே சிறு சிறு அறிவியல் சாதனங்களை வடிவமைக்க தொடங்கினார். பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் கலந்துகொண்டு மாநில அளவில் 2-ம் இடத்தையும் வென்றார். பிளஸ்-2 படித்தபோது செல்போன் ரீ சார்ஜ் கூப்பன் முறையில் மின்சாரத்தை பயன்படுத்தக் கூடிய புதுமையான கார்டை கண்டுபிடித்து சாதனை படைத்தார்.

முயற்சிகள் தோற்பதில்லை

அறிவியல் மீதான அவரது தாகம் பள்ளிப் படிப்புடன் தணிந்து போய்விடவில்லை. சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் பி.டெக். (எலெக்ட்ரிக்கல் மற்றும் இன்ஸ்ட்ரூ மென்டேஷன்) சேர்ந்தபோது ஆர்வம் இன்னும் அதிகரிக்க அதற்கான சரியான தளமும் அவருக்கு அங்கு கிடைத்தது.

பேராசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஆதரவு காரணமாக முழு ஆய்வு முயற்சியில் இறங்கினார் ஹரிராம்சந்தர். அவர் சிந்திய வியர்வைக்கு வெற்றிகிடைக்காமல் இல்லை. இரண்டாம் ஆண்டு படித்தபோது, தண்டவாளத்தில் விரிசலை கண்டுபிடிக்கும் நவீன கருவியை உருவாக்கினார். தண்டவாளத்தில் எங்கேயாவது விரிசல் இருந்தால் ரயிலின் டிரைவருக்கும், தகவல் மையத்துக்கும் எச்சரிக்கை அனுப்பக் கூடியது இந்த நவீன சாதனம்.

டச்லெஸ் சுவிட்ச்

இப்படியே புதுப்புது அறிவியல் சாதனங்களை உருவாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்த அவரது பார்வை சுவிட்ச் பக்கம் திரும்பி யது. அறிவியல் சாதனங்களும் புதிய பரிமாணம் பெற வேண்டும் என்பது இவரது அடிப்படைச் சிந்தனை. ஈரக்கையோடு மின்விளக்கு, மின்விசிறி, மிக்சி போன்ற மின் சாதனங்களுக்கான சுவிட்ச்களை போடும் போது சில நேரம் ஷாக் அடிக்கலாம்.

சுவிட்ச் மீது கை படாமல் அதை இயக்கினால் என்ன? ஹரிராம்சந்தரின் மனதில் சிந்தனை பிறக்க, அந்த சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்கும் முயற்சியில் இறங்கினார். முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது. கையால் தொடாமலேயே மின் சாதனங்களை இயக்கும் நவீன சுவிட்சை (டச்லெஸ் சுவிட்ச்) கண்டுபிடித்திருக்கிறார். இது குறித்து இளம் விஞ்ஞானி ஹரிராம்சந்தர் கூறியதாவது:

புதிய தொழில்நுட்பம்

இன்பிரா-ரெட் எனப்படும் அகச்சிவப்பு கதிர் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது இந்த சாதனம். இந்த சுவிட்சின் மேல்புறம் 2 செ.மீ. அல்லது 5 செ.மீ. தூரத்தில் இரு விரல்களை காட்டினால் போதும். சுவிட்ச் ஆன் ஆகிவிடும்.

சுவிட்சில் பொருத்தப்பட்டுள்ள டிரான்ஸ்மிட்டரில் இருந்து வெளிவரும் அகச்சிவப்பு கதிர்கள் விரல் பகுதி வரை வந்து பின்னர் கீழே திரும்பும். அதை அங்கு உள்ள ரிசீவர் பெற்றுக்கொண்டு சுவிட்சை இயக்கிவிடும். பயோ-மெட்ரிக் போன்று முன்கூட்டியே விரல் பதிவை பதிவுசெய்யத் தேவையில்லை. யாருடைய விரல்களைக் காட்டினாலும் சுவிட்ச் இயங்கும்.

200 ரூபாய்க்கு வாங்கலாம்

ஈரக்கையோடு சுவிட்சை போடும்போது நேரிடும் மின்சார ஷாக் பற்றிய அச்சம் இனி தேவையில்லை. சாதாரணமாக நாம் பார்க்கும் சுவிட்ச் வடிவங்கள் என்றில்லாமல் விருப்பமான ஓர் உருவமாக வடிவமைத்தும் பயன்படுத்தலாம்.

சாதாரண சுவிட்சுகளுடன் ஒப்பிடும்போது இது மிகக்குறைந்த அளவே மின்சாரத்தை எடுக்கும். தற்போது இது போன்ற சுவிட்சுகள் சந்தையில் ரூ.6 ஆயிரம் அளவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. நான் கண்டுபிடித்துள்ள டச்லெஸ் சுவிட்சை வெறும் ரூ.200-க்கு விற்க முடியும். சுவிட்ச் தயாரிப்பு துறையில் இந்த புதிய சுவிட்ச் ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.

தொடரும் ஆராய்ச்சிகள்

இந்த நவீன சுவிட்சை வணிக ரீதியில் தயாரிப்பதற்கு ரூ.1 கோடி செலவில் தொழிற்சாலை அமைக்க சென்னையைச் சேர்ந்த சரோஜ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் ஹரிராம்சந்தர் மகிழ்ச்சி பொங்க கூறினார். தற்போது அவர் மதுரவாயல் டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக பணிபுரிந்து வருகிறார்.

பூமி வெப்பமாவதை தடுக்கும் தொழில்நுட்பம், மனதின் எண்ண ஓட்டத்தை கொண்டு பொருட்களை இயங்கச் செய்வது (மைன்ட்ஆபரேடிங் சிஸ்டம்), தண்ணீர் தேவையுள்ள தாவரங்கள் செல்போனில் அழைக்கும் தேர்டுசென்ஸ் ஆப் பிளானெட், கழுத்து உடையாமல் தடுக்கக்கூடிய அட்வான்ஸ்டு புல்லட்புரூப் ஹெல்மெட் என விரிந்து கொண்டிருக்கிறது ஹரிராம்சந்தரின் ஆராய்ச்சிகள். சமூக பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக தீர்வு காண வேண்டும். ஆப்பிள், கூகுள் போன்று மிகப்பெரிய நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பது இவரின் லட்சியம்.

Saturday 16 November 2013

நெரிசலில் சிக்காது ஆம்புலன்ஸ் - மாணவர் கண்டுபிடிப்பு!

போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள பகுதிகளில் ஆம்புலன்ஸ் எளிதாகச் செல்ல தொழில்நுட்பம் ஒன்று பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது


கண்டுபிடிப்பின் பெயர் : Emergency Traffic Clearing Remote Control kit

கண்டுபிடிப்பாளர்களின் பெயர் : லோகேஸ்வரன், விஷ்ணுதாஸ், விகாஷ், ஜவகர்

பள்ளியின் பெயர் : ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காரமடை

கண்டுபிடிப்பின் பயன் : ஆம்புலன்ஸ் டிரைவர் தன் கையில் உள்ள ரிமோட்டை பயன்படுத்தி போக்குவரத்திற்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சிக்னலை மாற்றமுடியும்



உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நபரை ஏற்றிச்  செல்லும் ஆம்புலன்ஸ் வாகனம், குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையை விரைவாகச் சென்று அடைந்திட, எமர்ஜென்ஸி டிராஃபிக் கிளியரிங் ரிமோட் கண்ட்ரோல் சிஸ்டம் (Emergency Traffic clearing Remote control Kit) என்கிற கருவியை உருவாக்கியுள்ளனர் காரமடை, ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள்.  இந்தக் கருவி  RF waves என்னும் பண்பலை கொண்டு இயங்குகிறது.

சாலையில் உள்ள ஆட்டோமெட்டிக் சிக்னல்களில் ஒரு RF Trasnmitter பொருத்தி விடவேண்டும். அந்த RF Transmitter  ரிசீவரிடமிருந்து வரும் கட்டளைகளை ஏற்று செயல்படும் வகையில் கம்ப்யூட்டர் உதவியுடன் சிக்னல் கருவியின் செயல்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.


ஆம்புலன்ஸில் உள்ள ரிமோட் கருவியில் ஸ்விட்சுகளும் இருக்கும். ஆம்புலன்ஸை ஓட்டி வரும் டிரைவர், 500 மீட்டர் தொலைவில் வரும்போதே ரிமோட்டை அழுத்தினால் போதும். அதிலுள்ள RF Transmitter  மூலமாக கட்டளைகள் அனுப்பப்படும். அப்போது  சிக்னலில் பொருத்தியுள்ள RF waves  பெறப்பட்டு, ஆம்புலன்ஸ் வரும் பாதையில் கீரின் சிக்னலாகவும் மற்ற பாதையில் உள்ள  சிக்னல்கள் ரெட் சிக்னலாகவும் ஒளிர ஆரம்பித்து விடும்" என்கிறார், மாணவர் லோகேஸ்வரன்.


சிக்னல் விளக்கிற்கு 500 மீட்டர் தொலைவிற்கு முன்பே டிரைவர் இதை இயக்க முடியும். சிக்னலின் முன் நின்றிருக்கும் மற்ற வாகனங்கள் சிக்னலை உணர்ந்துகொண்டு இயங்கிட போதிய அவகாசம் கிடைக்கும்" என்கிறார்கள் இந்த மாணவர்கள்.


மத்திய அரசின் தொழில்நுட்ப விருதான,  ‘INSPIRE’  விருது இக்கண்டுபிடிப்புக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Thursday 14 November 2013

குறைந்த செலவில் நிறைந்த மின்சாரம் - படிக்காத மேதையின் பலே கண்டுபிடிப்பு!

குறைந்த செலவில் நிறைந்த மின்சாரம் - படிக்காத மேதையின் பலே கண்டுபிடிப்பு!

“படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு.. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு..’ என்ற கண்ணதாசனின் காப்பிய வரிகளுக்கு கச்சிதமான உதாரணம் சுப்பிரமணியம்!

சுப்பிரமணியத்தின் சொந்த ஊர், ஈரோடு மாவட்டம் சென்னிமலை. குடும்பச் சூழலால் பத்தாம் வகுப்புக்கு மேல் தாண்ட முடியாத சுப்பிரமணியம் இப்போது, தனியார் கல்லூரியின் தற்காலிக ஊழியர். ஆனால், இவரது சாதனைப் பட்டியல், பெரிய சைன்டிஸ்ட் ரேஞ்சுக்கு நீள்கிறது.

மெட்ரிக் முறையில் இயங்கும் கடிகாரம், செலவைக் குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் புதிய பெட்ரோல் இயந்திரம், தினசரி, மாத காலண்டர்களைப் போல வார காலண்டர், சாண எரிவாயு உற்பத்தியில் புதிய தொழில்நுட்பம், தமிழ் எழுத்து சீர்திருத்தத்துக்கான முயற்சி… என பல கண்டுபிடிப்புகளால் மிரட்டுகிறார் மனிதர்!

இதுமட்டுமா, சிலந்தி வலை சிக்கலில் எனது நாடு, டீசல், இந்தியா - உலக நாடுகள் பல்வகை ஒப்பீடு உள்ளிட்ட நூல்களையும் சுப்பிரமணியம் எழுதியுள்ளார். இதில், 'சிலந்திவலை சிக்கலில் எனது நாடு' என்ற நூலை, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் வைக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளது சிறப்பிலும் சிறப்பு.

 "படிப்பு கம்மினாலும், புதுசா எந்தத் தகவல் கிடைச்சாலும் மறக்காம நோட்டுல குறிச்சு வைச்சிக்குவேன். அதைத் தொகுத்துத்தான் நூல்களா எழுதிருக்கேன். எட்டு மாசத்துக்கு முந்தித்தான் இப்ப நான் இருக்கிற வேலையில சேர்ந்தேன். அதுக்கு முந்தி கம்ப்யூட்டரை தொட்டுக்கூட பார்த்ததில்லை" என்று தன்னை வெளிச்சம் போட்டுக் கொள்ளும் சுப்பிரமணியம், கடந்த, 2000-ம் ஆண்டில், தமிழக அரசின், புதிய கண்டு பிடிப்புக்கான அறிவியல் ஆய்வாளர் விருது பெற்றவர்.

இந்த, 'வில்லேஜ் விஞ்ஞானி'யின் தற்போதைய கண்டுபிடிப்பு நவீன காற்றாலை

 மின் உற்பத்தி இயந்திரம். அதுகுறித்து பேசியவர், ’’நம்ம மாநிலத்தில இருக்கிற காற்றாலைகள், வருஷத்துக்கு, 4 மாசம்தான் வேலை செஞ்சு, கரன்ட் உற்பத்தி பண்ணுது. அதுவும், வேகமா காத்து அடிக்கிற தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கம்பம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் மாதிரியான ஊர்கள்ளதான் இந்த காற்றலைகளையும் அமைக்க முடியுது. இதுக்கான செலவும் அதிகம்.

ஆனா, நான் கண்டுபிடிச்சிருக்கிற மெஷின் லேசா காத்தடிச்சாலும் ஓடி கரன்ட் உற்பத்தியாகும். காத்து உராய்வு மூலமா, பெரிய ரெக்கைகள் சுத்தி, அது வழியா கரன்ட் உற்பத்தி பண்ணுறாங்க. இதுக்கு பதிலா, காத்து நேரடியா ரெக்கைகளை தள்ளினால், முழு சக்தி கிடைக்கும்; மின்சார உற்பத்தியும் அதிகரிக்கும்னு நினைச்சேன். அதைத்தான் இப்ப செஞ்சிருக்கேன்.

இப்ப இருக்கிற செங்குத்தான பெரிய ரெக்கைகளைக் கொண்ட காற்றாலைகள் மணிக்கு, 12 கி.மீ. வேகத்தில் காத்து வீசினாத்தான், மின்சார உற்பத்தி செய்யும். வருஷத்துல நாலு மாசம்தான், இந்த வேகத்தில் காத்து வீசும்ங்கிறதால, அப்ப மட்டுமே, மின் உற்பத்தி செய்யமுடியும். ஆனா, நான் வடிவமைச்சிருக்கிற காற்றாலையில மணிக்கு, 6 கி.மீ., வேகத்தில் காற்று வீசினாலே மின் உற்பத்தி செய்யமுடியும். அப்படிப் பார்த்தா வருஷத்துல 8 மாசம் மின் உற்பத்தி செய்ய முடியும்.

தற்போதுள்ள காற்றாலை இயந்திரங்களை, 300 மீட்டர் இடைவெளியில் தான் நிறுவமுடியும். என்னுடைய இயந்திரத்தை அருகருகே அமைக்க முடியும். காற்று எந்த திசையில் இருந்து வீசினாலும் மின் உற்பத்தி செய்யமுடியும். முதலில் சின்னதாக ஒரு மாடல் செய்து பார்த்தேன். அதில் வெற்றி கிடைத்ததால், அடுத்ததாய், நான்கு இறக்கைகளுடன் சற்று பெரிய அளவில் வடிவமைத்துள்ளேன். இதனை, 20 இறக்கைகள் வரை அதிகரித்தால், அதற்கு ஏற்ப மின் உற்பத்தியும் அதிகரிக்கும்’’ என்றார்.

கோவை, 'கொடிசியா'வில், புதிய கண்டுபிடிப்புகளுக்காக நடந்த கண்காட்சியில் இவரது கண்டுபிடிப்புக்கு ஏக வரவேற்பாம். பெருமையோடு இதை நம்மிடம் சொன்ன சுப்பிரமணியம், "இரண்டு இறக்கை கொண்ட காற்றாலை இயந்திரத்தை செய்ய, 60 ஆயிரம் ரூபாய் செலவானது. எனவே, எனது இயந்திரத்தை தனித்தனியாக அமைப்பது நடைமுறை சாத்தியமில்லை. அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது, செலவு குறையும்.

ராணுவத்தில் பணியாற்றும் முருகசாமி, எனது கண்டுபிடிப்பை ஊக்குவிக்க 35 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்து இந்த இயந்திரத்தை உருவாக்க உதவினார். எட்டு மாதங்கள் பாடுபட்டு இந்த இந்திரத்தை செய்து முடித்திருக்கிறேன். எனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பம் செய்திருக்கின்றேன். அரசு எனக்கு நிதி ஆதாரம்

 வழங்கினால் தொழிற்சாலை தொடங்கி இந்த காற்றாலை இயந்திரங்களை அதிக எண்ணிக்கையில் தயாரித்துக் கொடுக்கத் தயாராய் இருக்கிறேன்’’ என்று சொன்னார்.

இவரது நவீன இயந்திரத்தைக் கொண்டு மணிக்கு, 6 கி.மீ. வேகத்தில் காற்று அடிக்குமானால் ஒரு நாளில் 4 யூனிட் வரை மின் உற்பத்தி செய்ய முடியுமாம். இறக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால், மின் உற்பத்தியின் அளவை அதிகரிக்க முடியும். சாதாரணமாக வீட்டின் மாடியில் இதனை பொருத்திவிட்டால், எட்டு மாதத்துக்கு மின்சாரம் தடையின்றி பெறமுடியும்.

ஆயிரக்கணக்கில் கோடிகளை கொட்டி அணு உலைகளை அமைத்து மின்சாரம் தேடும் ஆட்சியாளர்கள் தனது எளிய கண்டுபிடிப்பை அங்கீகரிக்கத் தயங்குவதாக ஆதங்கப்படுகிறார் சுப்பிரமணியம், ‘’அதற்காக நான் சோர்ந்துட மாட்டேன் சார்.. எடிசனையே அவர் ஆயுசு இருக்கும் வரைக்கும் இந்த உலகம் கண்டுக்கல. அதேமாதிரி, என்னையும் ஒருநாள் இந்த உலகம் கண்டுக்கும். அதுவரைக்கும் நாட்டுக்கு

 தேவையான நல்ல விஷயங்கள் எதையாவது கண்டுபிடிச்சுக்கிட்டே இருப்பேன் சார்’’ நம்பிக்கை துளிர்க்கச் சொன்னார் சுப்பிரமணியம்.





இந்தியப் பெண்களுக்கு வானமே எல்லை – கூகுள் முகப்பில் இடம் பெற்ற இந்திய மாணவியின் ஓவியம்!


                                              nov 14 - doodle_for_google_2013.

இணைய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ள கூகுள் நிறுவனம் விசேஷ நாட்களில் வெளியிட்டு வரும் Doodle-கள் தொடர்பாக ஆண்டுதோறும் சில போட்டிகளை நடத்தி வருகின்றது.குறிப்பாக சிறுவர்களுக்காக நடைபெற்று வரும் Doodle என்ற போட்டியானது இந்த முறை நடைபெறுவது 4-வது முறையாகும். இதில் இதில் GOOGLE- ன் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வடிவம் கொடுத்து சிறப்பாக வடிவமைக்கப்படும் Doodle – னை தனது சர்ச் தளத்தின் முகப்பு பக்கத்தில் பிரசுரிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தது.அத்துடன் இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கூகுள் 30,000 அமெரிக்க டாலர்களை பரிசுத் தொகையாக வழங்குவதுடன்.


வெற்றி பெறுபவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம் அல்லது கல்லூரிக்கு சுமார் 50,000 டாலர்கள் மதிப்புள்ள தொழில்நுட்ப வசதிகளையும் குகூள் நிறுவனம் ஏற்படுத்தித் தர போவதாகவும் அறிவித்து இருந்தது இந்நிலையில் இப்போட்டியில் புனாவைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி காயத்ரி கேதாராமன் வெற்றி பெற்றார். அவர் வடிவமைத்த சித்திரம்தான் இன்று கூகுள் இந்தியா முகப்புப் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.


இந்த சித்திரத்துக்கு “Sky’s the limit for Indian women”- இந்தியப் பெண்களுக்கு வானமே எல்லை என்று பெயரிட்டுள்ளார் காயத்ரி கேதாராமன்.GOOGLE- ன் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு வடிவம் கொடுத்துள்ள காயத்ரி, அதன் அர்த்தங்களையும் விளக்கியுள்ளார். பெண் நளினமானவள், அழகானவள், வீட்டிலும் அலுவலகத்திலும் தன் வேலையை சீராக சமன் செய்யக்கூடியவள், தாய்மையின் அடையாளம் என்பதை விளக்கும் வகையில் சித்திரத்தை வரைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


கூகுள் நடத்திய போட்டியில், நாடு முழுவதும் இருந்து 12 பேர் இறுதி பட்டியலில் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் வெற்றியாளரை நடிகை கிரொன் கேர் மற்றும் அரசியல் கார்ட்டூன் ஒவியர் அஜித் நினான் தேர்வு செய்தனர் என்பது அடிசினல் தகவல்.

Children’s Day: Pune student’s Doodle 4 Google winning entry on Google India homepage

**********************************************


The Children’s Day doodle on the Google India home page has been designed by a class 10 student from Pune. The doodle titled “Sky’s the limit for Indian women” has been designed by Gayatri Ketharaman for the fifth edition of Doodle 4 Google competition with the theme celebrating Indian women.

Pune girl wins 'Doodle4Google' contest!

A depiction using each letter of Google to portray various facets of Indian woman – graceful, elegant, adept at balancing work and home and go-getter - by a schoolgirl in Pune has been adjudged the national winner of Doodle4Google contest.




The doodle made by Pune's Gayatri Ketharaman, will go live on the Google (India) homepage on November 14, the National Children's Day.

Each letter of the doodle titled 'Sky's The Limit for Indian Women' depicts a trait of the Indian Woman. "She is graceful and elegant, adept at balancing work and home. She is a go-getter. She personifies motherhood. Even in the face of adversity, she is courageous," Google said.

Doodle4Google (D4G) is an annual competition from the Internet giant for students of 1-10 grade who are invited to design the Google Doodle to celebrate Children's Day.

Doodles are known as the decorative changes that are made to the Google logo to celebrate holidays, anniversaries, and the lives of famous artists and scientists.

The theme for this year's competition was 'Celebrating Indian Women', and the company received over 1.5 lakh entries, from more than 1,500 schools across 100 cities. The final 12 doodles were shortlisted and put up for online voting.

"Our National Jury Kirron Kher and Ajit Ninan along with the original doodler select the National Winner out of the 12 finalists," Google said.

Among other categories, the doodle made by Madhuram Vatsal of Lucknow, showing all forms of Indian women – a learner, a warrior, a goddess, a dancer, a scholar and a lover of jewellery -- was adjudged best in the category 1 (class 1-3).

The doodle titled 'Women Are Future, Empower Them Better' won in the category 2 (class 4-6), while the same on 'Indian Women Leading Our Country' won in the category 3(Class 7- 10).

All the finalists will receive a Google Goodie bag and an Acer C720 Chromebook.

"Doodle4Google is the perfect platform for the youth of India to showcase their talent on an international platform. It allows youngsters from not just the metros but from Tier II, III and even IV cities to participate, which is evident from the entries seen this year,"

Sunday 10 November 2013

“வைக்கோல் குக்கர்” எட்டாம் வகுப்பு மாணவர் ரிஷி சித்து சாதனை!

 vaikool

வைக்கோல் மூலம் வீட்டில் சமையல் எரிபொருளை மிச்சப்படுத்தலாம்” என்கிறார் கோபிச்செட்டிபாளையம், ஸ்ரீ நேஷனல் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் ரிஷி சித்து.

”எனக்கு அறிவியல் மீது ஆர்வம் அதிகம். அறிவியல் சம்பந்தமான புத்தகங்களை நிறையப் படிப்பேன். ‘அடிக்கடி பெட்ரோல், சிலிண்டர் விலையை ஏத்திடுறாங்க. குடும்பத்தை நடத்துறது பெரிய சவாலா இருக்கு’னு அப்பாவும் அம்மாவும்  பேசிக்குவாங்க. இதுக்கு நாம் ஏதாவது செய்யலாமேனு நினைச்சேன். அப்போ உருவானதுதான் இந்த வைக்கோல் குக்கர்” என்ற ரிஷி சித்து, அதன் செய்முறையை விளக்கினார்.

”சாதம் சமைக்க, பாத்திரத்தில் தண்ணியைக் கொதிக்கவெச்சு, அதில் அரிசியைப் போடுவோம். அது முழுமையா வேகும் வரை காஸ் அடுப்பு எரியும். அப்படி இல்லாமல், ஒரு கொதிவந்ததும் அந்தப் பாத்திரத்தை எடுத்து, வைக்கோல் நிரப்பப்பட்ட அட்டைப் பெட்டியில நடுவில் வைக்கணும். பிறகு, வைக்கோலை அடைச்சு செய்த ஒரு தலையணையால் மூடிடணும். வைக்கோல் என்பது திறன் குறைந்த ஒரு வெப்பக் கடத்தி. அதனால், அது வெப்பம் வெளியே போகாமல் பாதுகாக்கும். அந்த வெப்பத்தில் உள்ளே இருக்கும் அரிசி, நாம குக்கரில் சமைக்கும் நேரத்தில் வெந்துவிடும். இதனால், எரிபொருள் மிச்சம்’ என்றார் ரிஷி.

சாதம் மட்டுமல்ல; பருப்பு, சுண்டல் மற்றும் அனைத்து விதமான காய்கறிகளையும் இப்படி வைக்கோல் குக்கர் மூலம் வேகவைக்கலாம்.

”இதனால், நேரம் மற்றும் எரிபொருள் மிச்சப்படும்;  ஆரோக்கியமானதும்கூட. முழுக்க முழுக்க இயற்கை சார்ந்தது. குக்கரில் சமைக்கிறப்போ, கஞ்சி வெளியே போக வாய்ப்பு இல்லாததால் அரிசியோட கலந்துடுது… இது சர்க்கரை நோய்க்குக் காரணமாயிடுது. ஆனா, இந்த முறையில் நாம் கஞ்சியைத் தனியே வடிச்சுக்கலாம். சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் கட்டுப்படுத்தும்” என்கிறார்.

ரிஷி சித்துவின் இந்தக் கண்டுபிடிப்பு, டெல்லியில் நடைபெறும் பாலஸ்ரீ விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட 15 சிறந்த கண்டுபிடிப்புகளில்  ஒன்றாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

”விருது கிடைப்பதைவிட, இதைப் பார்த்து நூறு பேர் பயன்படுத்தினாலும் கணிசமான அளவு எரிபொருள் மிச்சப்படுமே. நாட்டுக்கு செய்யும் நல்ல விஷயமா அதை நினைக்கிறேன்” என்று ‘பெரிய மனுஷ’த் தோரணையில் பொதுநல அக்கறையுடன் சொல்கிறார் ரிஷி சித்து.

வாழ்த்துகள் சித்து!

Monday 4 November 2013

'ஓட்டுனர் சோர்வாக இருக்காரா’ எச்சரிக்கும் கருவி கண்டுபிடிப்பு!

ஓட்டுனர் சோர்வாக இருக்காரா’ எச்சரிக்கும் கருவி கண்டுபிடிப்பு எஸ்ஏ இன்ஜி. கல்லூரி மாணவர்கள் சாதனை


பூந்தமல்லி அருகே வீரராகவபுரத்தில் உள்ள எஸ்ஏ.பொறியியல் கல்லூரி மாணவர்கள் எஸ்.கார்த்திகேயன், சி.செந்தில்குமார், ஆர்.பிரபாகரன் ஆகியோர் விரிவுரையாளர் எச்.அன்வர் பாஷாவின் வழிகாட்டு தலின்படி முக அம்சங்களை கொண்டு ஓட்டுனரின் விழிப்புணர்வை கண்காணிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.


இந்த கருவி மூலம் கண் அசைவை கண்காணித்து கார் ஓட்டுனரின் அயர்வை கண்டறியலாம். கண்காணிப்பு கருவி சென்சார் தகவலை பெற்று, ஓட்டுனரின் அப்போதைய ஓட்டும் திறனை குறிக்கிறது. சென்சாரில் உள்ள வீடியோ ஓட்டுனரை படம் பிடிக்கிறது. ஓட்டுனரின் சோர்வு குறிப்பிட்ட எல்லையை தொடும்போது எச்சரிக்கை மணி அடிக்கிறது.


 tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


இத்தகைய செயல்பாடுகள் மூலம் காரின் சொந்தக்காரரை எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கை செய்து,  ஜிபிஎஸ் மூலம் கார் இருக்கும் இடத்தை கண்டறிய உதவுகிறது. அசதி அளவை கணிக்க வேறு புற காரணிகளான வண்டியின் நிலை, வானிலை, தகவல்களை கணிக்கலாம். எதிர்காலத்தில் நபருக்கு நபர் உடல்நலக்குறைவு மற்றும் சிக்னல் வேறுபாடுகளும் ஆய்வு செய்யப்படும். இந்த கருவியை கண்டுபிடித்த மாணவர்களை கல்லூரி தலைவர் டி.துரைசாமி, செயலாளர் டி.தசரதன், இயக்குனர் பா. வெங்கடேஷ்ராஜா, முதல்வர் சுயம்பழகன் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top