.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 31 December 2013

கவனித்து கனிவாக பேசுங்கள். நட்பும், மகிழ்ச்சியும் நாளும் பெருகும்!



உறவை உருவாக்குவதாக இருக்கட்டும், உறவை கெடுப்பதாக இருக்கட்டும் சின்னச்சின்ன வார்த்தைகள் தான் காரணமாக இருக்கும். ஆக ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேச வேண்டியது அவசியமாகிறது.


அரட்டை அடிப்பது என்றால் நமக்குள் இயல்பாகவே ஆனந்தம் ஊற்றெடுக்கிறது.


தினமும் புதிய புதிய மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. பணி செய்யும் இடம், நடந்து செல்லும் வழி, பயணம் என ஒவ்வொரு சூழலிலும் பலவிதமான மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கிறது. அலுவலகங்களிலோ ஆணும், பெண்ணும் இணைந்து செயல்பட வேண்டி இருக்கிறது. அப்படி இருக்கும்போது உறவுகள் நீடிக்கவும், உறவுகள் பெருகவும் மென்மையான சின்னச்சின்ன பேச்சுக்கள் அவசியமாகின்றன.


நல்ல முறையில் படித்து, நாகரீகமாக உடை அணிந்து செல்வோர்கூட புதிய மனிதர்களிடம் பேசவும், பழகவும் கூச்சப் படுவது உண்டு. கவுரவக் குறைச்சலாக எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். பேச்சு கொடுப்பதும், பேசி ஞானத்தை, நட்பை வளர்த்துக் கொள்வதும் நிச்சயமாக ஒரு கலைதான்.


பணிச்சூழலோ, பொது இடமோ கனிவுடன் பேசுபவர்களுக்கு தனி மதிப்பு கிடைக்கும். இதற்கு முதலில் கூச்சத்தை விட்டொழிக்க வேண்டும். புதிய மனிதர்களை சந்திப்பதாக இருந்தால், நான் இங்கு உங்களை அடிக்கடி பார்க்கிறேனே, என் பெயர்... என்று அறிமுகத்துடன் பேச்சைத் தொடங்கலாம். உங்களை சந்தித்ததில் பெருமிதம் கொள்கிறேன், இன்று என்ன சிறப்பு? என்று ஆரம்பிக்கலாம். அலுவலகத்தில் பேசத்தொடங்கும் போது, நீங்கள் எந்தப் பிரிவில் வேலை செய்கிறீர்கள், எங்கிருந்து வருகிறீர்கள், பயண நேரம் எவ்வளவு? என்று பேச்சுக் கொடுக்கலாம்.


குழுவாக இருக்கும்போது கூச்சப்பட்டு எதுவுமே பேசாமல் இருக்கக்கூடாது. சாதாரணமாக இருந்தாலும் ஒரு சில கேள்விகளை கேட்கலாம். அது மற்றவர்கள் உங்களை கவனிக்க வைக்கும். பழகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். அதுபோல உங்களிடம் யாராவது பேச்சுக் கொடுத்தாலும், `ஒன்றுமில்லை' என்று ஒரு வார்த்தையில் பேச்சை முடித்துக் கொள்ளாதீர்கள்.


புதியவர்களுடன் பழக ஆரம்பிக்கும்போது நம்பிக்கை இல்லா தன்மையுடன், அல்லது வேண்டா வெறுப்பாக பேசுவதாக எண்ணிக் கொண்டு சிடுசிடுப்பாகவும், சில விஷயங்களில் பிடிவாதமும் காட்டுவது உங்களைப் பற்றிய தவறான தோற்றத்தை உருவாக்கி விடக்கூடும். அது பின்னால் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தலாம். மென்மையாகப் பேசுங்கள். நான் சொல்வது உண்மை என்று நம்ப வைக்கும் முயற்சியில் ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கொண்டு இருக்காதீர்கள்.


உங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லும்போது ஓரிரு வார்த்தைகளில் முடித்துக் கொள்ளாமலும், நீண்ட லெக்சரும் கொடுக்காமல் சுருக்கமாக தெளிவாக சொல்லுங்கள். அதாவது ஒருவர் உங்களிடம் `உங்கள் பொழுதுபோக்கு என்ன?' என்று கேட்டால், `நான் புத்தகங்கள் படிப்பேன்' என்று முடித்து விடாதீர்கள். `நான் புத்தகங்களை விரும்பி படிப்பேன். நாவல்கள், கவிதைகள், தலைவர்களின் சுயவரலாறுகளை எனக்கு மிகவும் பிடிக்கும்` என்று சொல்லுங்கள்.


அப்படி இருந்தால் தான் அவர் நீங்கள் தாகூரின் கவிதைகளை வாசித்திருக்கிறீர்களா, பாரதியின் கவிதைகளை படித்திருக்கிறீர்களா? என்பதுபோல தொடரவும், அவரும் உங்களைப் போன்ற விருப்பம் உடையவராக இருந்தால் உங்களுக்கிடையே நெருங்கிய நட்பு மலரவும் உறுதுணையாக இருக்கும்.


நிகோலஸ் போத்மேன் என்பவர் தன் நூலில், மக்களில் 90 சதவீதத்தினர் மற்றவர் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கவனிப்பதில்லை. ஆனால் அவர்கள் செய்வதையும், எப்போது என்ன செய்வார்கள் என்பதையும் கவனிக்கிறார்கள்' என்கிறார். எனவே ஒருவரது உடல் அசைவுகளும், செய்கைகளும் பேச்சுத் திறமைக்கு மிக முக்கியமானது. நீங்கள் கருத்துச் செறிவுடன் பேசும்போது அங்க அசைவிலும் கவனம் செலுத்துங்கள்.


ஒருவருடன் பேசும்போது அவருக்கு பக்கவாட்டில் நின்றோ அமர்ந்தோ பேசுவதை தவிர்த்து விடுங்கள். நேருக்கு நேராக இருந்து கண்களைப் பார்த்தபடி பேசுங்கள். அப்போதுதான் உங்கள் பேச்சின் பிரதிபலனை உணர முடியும்.


பேச்சினை எப்போது நிறுத்த வேண்டும் என்பதுவும் பேச்சுத்திறமையில் குறிப்பிடத்தக்க விஷயம். வளவளவென்று பேசிக் கொண்டிருந்தால் கேட்பவருக்கு சலிப்பு வந்துவிடும். கேட்டுக் கொண்டிருப்பவர் உங்கள் பேச்சை விரும்புகிறாரா என்பதை சில விஷயங்களை வைத்து கணித்து விடலாம். `ஓ அப்படியா, நன்றாக இருக்கிறது? தொடர்ந்து சொல்லுங்கள்' என்றால் அவர் விருப்பத்துடன் கேட்கிறார் என்று பொருள். சரி..., அப்படியா..., சரி வேற... என்று கூறினால் அவருக்கு உங்கள் பேச்சில் விருப்பமில்லை என்று அர்த்தம்.


அவர் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு இருப்பதும், கை, மூக்கு, தலையை சொரிந்து கொண்டு இருந்தாலும், நடக்கும்போது கால்களை தரையில் உரசியபடி நடந்து வந்தாலும் உங்கள் பேச்சில் நாட்டமில்லை என்று பொருள்.


எனவே கவனித்து கனிவாக பேசுங்கள். நட்பும், மகிழ்ச்சியும் நாளும் பெருகும்!

தனுஷிற்குக் குரல் கொடுக்கவிருக்கும் அமிதாப்...!!




ராஜ்னா படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாகி, அறிமுகப்படத்திலேயே வசூலையும், ரசிகர்களையும் கோடிகளில் அள்ளிய தனுஷ் தனது இரண்டாவது ஹிந்திப் படத்தில் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாக நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.


சீனி கும் மற்றும் பா ஆகிய திரைப்படங்களின் மூலம் இந்தியாவின் நம்பிக்கை இயக்குனராகப் போற்றப்படும் இயக்குனர் பால்கி இயக்கத்தில் தனுஷ் மற்றும் கமல்ஹாசனின் இளையமகள் அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிப்பார்கள் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.


இப்படத்தில் தனுஷ் வாய் பேச முடியாத, அதே சமயம் சினிமாவில் பிரபல ஹீரோவாக ஆசைப்படும் ஒரு இளைஞனாக நடிக்கவிருப்பதாகவும், தனுஷிற்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் குரல் கொடுக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தனது ஹிந்தி அறிமுகப் படமான ராஜ்னா சாதனையை முறியடிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் சம்பளம்!




மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில்  மேனேஜ்மெண்ட் டிரெயினி பணியில் சேர  விரும்பும்  மெக்கானிக்கல், கெமிக்கல்  என்ஜினீயரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகளில் சேர தேர்வு செய்யப்படுபவர்களுக்கு  ஆண்டுக்கு ரூ.10 லட்சம் அளவுக்கு ஊதியம் கிடைக்கும்.

நாட்டில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகையுடன் முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிப்பதற்கு உதவும் தேர்வு கேட் (GATE). அண்மைக் காலமாக இந்த கேட் தேர்வின் மூலமாக பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களுக்கும் தகுதியுடைய மாணவர்கள் சேர்க்கப் படுகிறார்கள். அந்த வகையில், மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் (BPCL) மேனேஜ்மெண்ட் ட்ரெயினி பணிகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பணியில் சேர விரும்பும் மாணவர்கள் மெக்கானிக்கல், கெமிக்கல் என்ஜினீயரிங் பாடப்பிரிவுகளில் பிஇ, பிடெக், பிஎஸ்சி (என்ஜினீயரிங்) படிப்புகளைப் படித்திருக்க வேண்டும். பட்டப் படிப்பில் முதல் தடவையிலேயே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டுப் படிப்புகள் அல்லது அதற்கு மேல் காலவரையறை உள்ள படிப்புகளைப் படித்த மாணவர்கள் இந்தப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க முடியாது. என்ஜினீயரிங் படிப்புகளில் இறுதியாண்டு படித்து வரும் மாணவர்களும் இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

பொதுப் பிரிவு மற்றும் ஓபிசி  பிரிவினர் (கிரீமிலேயர் அல்லாதவர்கள்) பட்டப் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்  50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். இதில், அனைத்து செமஸ்டர்களின் சராசரி மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படும். சிஜிபிஏ, ஓஜிபிஏ, டிஜிபிஏ போன்ற கிரேடுகளில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தால், அதற்கு நிகரான மதிப்பெண்கள் எவ்வளவு என்பது குறிப்பிடப்பட வேண்டும்.

பொதுப் பிரிவு மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜூன் முதல் தேதி நிலவரப்படி, 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ஓபிசி (கிரீமிலேயர் அல்லாதவர்கள்) மாணவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 28. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 30. மாற்றுத் திறனாளிகளுக்கு (40 சதவீத உடற்குறைபாடு) வயது வரம்பில் 10 ஆண்டுகள் வரை விலக்கு அளிக்கப்படும். இதேபோல, முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பில் சலுகை உண்டு.

கேட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியுடைய மெக்கானிக்கல், கெமிக்கல் என்ஜினீயரிங் பட்டதாரிகள், குழு விவாதத்திற்கும் நேர்முகத் தேர்வுக்கும் அழைக்கப்படுவார்கள். அதையடுத்து, மேனேஜ்மெண்ட் டிரெயினி நிலையில் வேலையில் சேர தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை இருக்கும். இந்தப் பணியில் சேர தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தொடக்க நிலையிலேயே ஊதியம் மற்றும் இதர சலுகைகளைச் சேர்த்து ஆண்டுக்கு ரூ.10.5 லட்சம் கிடைக்கும். மாணவர்களுக்கு ஓராண்டு புரபேஷனரி காலம். அதன்பிறகு எக்ஸிகியூட்டிவ் ஆக நியமிக்கப்படுவர். 

இந்தப் பணியில் சேர விரும்புபவர்கள் வருகிற பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் கேட் தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வுக்கான அறிவிப்பு குறித்த விவரங்கள் ஏற்கெனவே, ‘புதிய தலைமுறை கல்வி’ யில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இ-மெயில் முகவரி இருக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு உரிய தகவல்களை முன்னதாகவே வைத்திருக்க வேண்டும். மத்திய மாநில அரசுப் பணிகளிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் பணிகளில் இருந்தால் அவர்கள் தங்களது துறையிடமிருந்து ஆட்சேபணை இல்லை என்ற சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும். கேட் தேர்வு பதிவு எண்ணுடன் பாரத் பெட்ரோலிய நிறுவன இணையதளத்தில் தற்போது விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கக் கடைசி தேதி 31.01.2014.



ஏழைகளின் சத்துள்ள தாவர டானிக்.....??




பசலைக்கீரை போல் உடலுக்கு நன்மை செய்யும் சத்து உள்ள எளிய உணவு வேறு இல்லை எனலாம்
.

பசலைக் கீரை பொதுவாக மூன்று வகைப்படும். சிறு வெற்றிலை அளவில் செந்நிறமுடையதாக இருக்கும் இலைகளுடன் கொடியாகப் படரும் பசலை கொடிப்பசலை எனப்படுகிறது. இதை வீட்டுத் தோட்டத்திலும் தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம்.


தரைப் பசலையின் இலைகள் மிகவும் சிறுத்து இளஞ் சிவப்பாகவும், பச்சையாகவும் இருக்கும். இது தரையில் படரும்.


இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம்.


ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது. அதே சமயம் இதிலிருக்கும் ஆக்ஸாலிக் அமிலம் உடலில் இரும்பு, கால்சியம் சேராமல் தடுக்கிறது. இதனால் இதய நோயாளிகள் இந்தக் கீரையை அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது.


இந்தக் கீரையில் வைட்டமின் A B C சத்துகள் உள்ளன. சுண்ணாம்புச் சத்து, நார்ச் சத்து, இரும்புச் சத்து அடங்கியது. இது தாதுவைக் கெட்டிப்படுத்தும். மூளைக்கு சக்தி கொடுக்கும். உடல் வறட்சியை அகற்றும். உள் சூட்டைப் போக்கும். மருத்துவக் குணங்கள் இதில் மிக அதிகமாக உள்ளன. பச்சையம் கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது.


பசலைக் கீரை ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது. இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது.


இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறைத் தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த விருத்திக்கும் உதவுகிறது.


ஒரு கப் பசலைக் கீரையில் இருக்கும் உணவுச் சத்து: கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லி கிராம், விட்டமின் ஏ 6800 IU (இது ஒரு நாளைக்கு தேவைப்படும் அளவை விட ஒன்றரை மடங்கு அதிகம்), விட்டமின் சி 28 மி.கிராம், ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம்.


இலையை நன்றாக அரைத்து கொப்புளம், கழலை, வீக்கம் ஆகியவற்றின் மீது பற்றிட்டால் அவை குணமாகும். இலையை அரைத்து நெற்றியில் பற்று போட்டால் சூட்டினால் உண்டான தலைவலி நீங்கும். பசலைக் கீரை ஏழைகளின் சத்துள்ள தாவர டானிக்!

கணவன் மனைவியிடையே இருக்கும் உணர்வுபூர்வமான உறவு வலுவடைய..




கணவரோ மனைவியோ கவலையோடு இருந்தால் அவர்களின் சந்தர்ப்பத்தை புரிந்துகொண்டு தகுந்த முறையில் ஆதரவு அளிக்க வேண்டும். இதன் மூலமாக கணவன் மனைவியிடையே இருக்கும் உணர்வுபூர்வமான உறவு வலுவடையும்.

ஆதரவான வாழ்க்கை துணையே ஆரோக்கியமான திருமண வாழ்வின் சாரம். உங்கள் எண்ணங்களை புரிந்துகொண்டு கடினமான சந்தர்ப்பங்களில் உங்களை ஆதரித்து உங்களை உயர்த்தும் வாழ்க்கை துணை அமைந்துவிட்டால் உங்கள் திருமணம் அர்த்தமுள்ளதாக மாறிவிடும். இது ஒரு நல்ல குடும்பத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும்.

ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சில காரணங்களுக்காக நாம் சோகமோ வருத்தமோ அடைவதுண்டு. இந்த சுறுசுறுப்பான வாழ்க்கையில் நாம் நமது குடும்பத்தோடு செலவிட நேரம் இல்லை. இதனால், ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் குறையை தொடங்கி விட்டது.

வேலை சம்பந்தமான மன அழுத்தம் என்பது வேலைக்கு செல்லும் நபர்களிடையே அதிகமாக பார்க்கக்கூடிய பிரச்சனையாகும். உங்கள் கணவர் வேலை முடிந்து சோர்வாக வீட்டிற்கு வரும் போது ஒரு கப் காபி கொடுக்கலாம். எனினும், அவர் வருத்தமாகவோ கவலையாகவோ இருந்தால் கவனமாக கையாள வேண்டும்.

அந்த சமயத்தில் நீங்கள் அவருக்கு தேவையான உணர்வுபூர்வமான ஆதரவை அளிக்க வேண்டும். கடினமான சந்தர்ப்பங்களில் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இதை தான் அவரும் எதிர்பார்ப்பார். சில நேரங்களில் இந்த உணர்ச்சிமிக்க உறவுகள் பிரச்சனைகளை உண்டாக்கும். அதனால் கவனமாக இருக்க வேண்டும்.

அவரது மனநிலையையும் தன்மானத்தையும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு உங்கள் ஆதரவை தர வேண்டும். உங்கள் கணவர் வருத்தத்துடன் இருக்கும் சமயத்தில் நீங்கள் இதை செய்தால், பாராட்டுகளை பெறுவீர்கள். உங்கள் கணவர் வருத்தத்துடன் காணப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டிய முதல் காரியம் அவரோடு பேசுவதுதான்.

அவரது பிரச்சனைகளை கேட்டறிந்து அவருக்கு நீங்கள் எவ்வாறு உதவ முடியும் என்பதை கேட்க வேண்டும்.உங்கள் கணவருக்கு சில சொந்த எதிர்ப்பார்ப்புகள் இருக்கக் கூடும். சில குறிப்பிட்ட வழியில் அவருக்கு உங்கள் உதவி தேவைப்படலாம். நீங்கள் அவருக்கு எவ்வாறு உதவ வேண்டும் என்பதை கேட்டறியவேண்டும்.

சில நேரங்களில் நீங்கள் அவருக்கு உதவ நினைப்பார்கள். எனினும், அவருக்கு உங்களிடம் உதவி கேட்க தயக்கம் இருக்கும். அதனால் நீங்களாகவே அவரிடம் கேட்டறியலாம். உணர்ச்சிபூர்வமான கணவர்களை உங்கள் அன்பின் மூலம் கட்டுப்படுத்தலாம். பேசிதான் அவரை ஆதரிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

அவரை கட்டிகொண்டோ அல்லது வேறுவிதமாகவோ வெளிப்படுத்தி அவரை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம். இது அவருக்கு தேவைப்பட்டால் இந்த வழியில் ஆதரவு அளிக்கலாம். கட்டுதல் மூலமாக நீங்கள் எப்பொழுதுமே அவரோ இருப்பதை தெரிவிக்கும்.அதனால் இதனை முயற்சி செய்யுங்கள். இதன் மூலமாக உணர்ச்சிபூர்வமான கணவர்களை சிறந்த முறையில் கையாளலாம்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top