.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 30 November 2013

கிராமத்து அஜித் வர்றார்... - இயக்குநர் சிவா

 

என்னை எல்லோரும் 'சிறுத்தை' சிவான்னு சொல்றாங்கன்னு எனக்கே தெரியாது. நாலு மாசத்துக்கு முன்னாடிதான் தெரியும். என்னோட பெயரை மக்கள் மறக்கமால் இருந்தா போதும். எப்படிக் கூப்பிட்டா என்ன..?’ என்று அடக்கமாகப் பேசுகிறார் அஜித்தை வைத்து 'வீரம்' படத்தை இயக்கிவருறார் சிவா.

வீரம் எந்த மாதிரியான படம்? 

வீரம் முழுக்க முழுக்க ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர். குடும்பத்துல சின்னக் குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் வந்து பார்க்குற ஜாலியான படமாக இருக்கும். அதே சமயத்துல ஆக்ஷனும் இருக்கும்.

அஜித் என்ன மாதிரியான கேரக்டர் பண்ணியிருக்கார்?


அஜித் இதுக்கு முன்னாடி இந்த மாதிரிக் கேரக்டர்ல பண்ணியிருக்கார். ஆனால் முழுப்படமும் பண்ணியதில்லை. கமர்ஷியல் படத்துல முழுக்க ஆக்ஷன் ஹீரோவா பட்டையக் கிளப்பியிருக்கார். வீரம் படத்தோட ஸ்பெஷல், அஜித் படம் முழுக்கவே, பட்டையக் கிளப்பியிருக்கார், முழுக்க வேட்டி சட்டைல தான் நடிச்சிருக்கார். அஜித் இந்த மாதிரி ஒரு கிராமத்துக் கதைல, இதுக்கு முன்னாடி நடிக்கல. அது தான் வீரம் ஸ்பெஷல்.

கதையைக் கேட்டுட்டு அஜித் என்ன சொன்னார்?

முதல் முறையா அஜித்தை சந்திச்சு, எந்த மாதிரி கதை பண்ணலாம் அப்படின்னு பேசிட்டு இருந்தோம். அப்போ அஜித் சார், ஸ்டைலிஷான படங்கள் எல்லாம் பண்ணிட்டார். நாம் ஏதாவது புதுசா பண்ணலாம்னு கிராமத்துக் கதைய படமா பண்ணலாம்னு ரெண்டு பேரும் சேர்ந்து முடிவு பண்ணினோம்.

மண்ணின் மனத்தோடு படம் பண்றோம் அப்படிங்கிறதுல ரெண்டு பெருமே தெளிவாக இருந்தோம். தமிழ்நாட்டில இருக்கிற சிட்டி மக்கள்ல இருந்து கிராமத்து மக்கள் வரைக்கும் ரீச்சாகிற மாதிரியான ஒரு கதை இது. அனைத்து தரப்பு மக்களையும் இந்தப் படம் கவரும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

முதல் முறையா அஜித்தை எங்க சந்திச்சீங்க?

அஜித்தை வைச்சு படம் பண்ணனும் அப்படிங்கிறது எனது நீண்ட நாள் ஆசை. சிறுத்தை முடிச்ச உடனே, உங்களோட நீண்ட நாள் ஆசை என்னன்னு கேட்டாங்க. நான் ஹாலிவுட் படம் பண்ணனும்னு சொன்னேன். ஹாலிவுட் படம் பண்ணா யாரை இங்கிருந்து ஹீரோவா வைச்சு பண்ணுவீங்கனு கேட்டாங்க. உடனே என்னோட ஒரே சாய்ஸ் அஜித்தான்னு சொன்னேன். எனக்கு மனசுல தோணுச்சு, சொன்னேன். அந்த ஆசை உடனே நிறைவேறும்னு நான் எதிர்பார்க்கல.

ஒருநாள் அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா கால் பண்ணினார். அஜித் சார் உங்களோட சேர்ந்து படம் பண்ணனும்னு ஆசைப்படுறார்னு சொன்னார். என்னால நம்பவே முடியல. அவரே அஜித் நம்பரையும் கொடுத்தார். நான் போன் பண்ணி அஜித்கிட்ட பேசினேன். என்னால நம்பவே முடியல.

ஒளிப்பதிவாளர் சிவா, இயக்குநர் சிவாவாக மாறக் காரணம் என்ன?

நான் 6ஆம் வகுப்பு படிக்கிறப்போ இருந்தே இயக்குநராகணும் அப்படிங்கிறது என்னோட ஆசையா இருந்துச்சு. நான் டிகிரி படிக்கல. அதனால இயக்குநர் படிப்பு பண்ண முடியாம போச்சு. உடனே ஒளிப்பதிவாளர் படிப்பு படிச்சேன். ஒளிப்பதிவாளரா படங்கள் பண்ணினாலும், நாம இயக்குநராகணும் அப்படிங்கிறது எனக்குள்ள இருந்த விஷயம்தான்.என்னோட இயக்குநர் பாதைக்கு ஒளிப்பதிவு உதவியா இருந்துச்சு.

தெலுங்குப் படங்கள், தமிழ்ப் படங்கள் என்ன வித்தியாசம் பார்க்குறீங்க?

தென்னிந்தியப் படங்கள் எல்லாமே ஒண்ணுதான். தமிழ், தெலுங்கு அப்படினு பிரிக்க முடியாது. இரண்டு மொழி படங்கள் பார்த்தீங்கன்னா, ஒரே எமோஷன்தான் இருக்கும். எனக்கு இரண்டு மொழிகளிலுமே தெரியும். ரெண்டிலுமே கதை எழுதுவேன், ஹீரோஸ்கிட்ட கதை சொல்லும்போது ஈஸியா இருக்கும். அதனால எனக்கு பெரிய வித்தியாசம் ஒண்ணும் தெரியல.

தமன்னா எப்படி தமிழ்ப் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினாங்க?
சிறுத்தை படம் முடிச்சவுடனே, நீங்க அடுத்த படம் பண்ணும் போது, ஹீரோயினா எப்போ கூப்பிட்டாலும் நான் ரெடின்னு சொன்னாங்க. வீரம் முடிவான உடனே, யார் ஹீரோயின்னு பேச்சு வந்துச்சு. அப்போ அஜித் - தமன்னா இதுவரைக்கும் ஒண்ணா படங்கள் பண்ணியதில்லை.

உடனே தமன்னாவிற்கு போன் பண்ணி, உங்க தேதிகள் வேணும், அஜித் சாருக்கு ஜோடி அப்படினு மட்டும் தான் சொன்னேன். எப்போனு கேட்டாங்க. நேரா ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துட்டாங்க. இதுவரைக்கும் படத்தோட கதை என்னனு கேட்கல. என் மேல அவ்வளவு நம்பிக்கை வைச்சுருக்காங்க.

தொடர்ச்சியாக மாஸ் மசாலா படங்கள் இயக்கிட்டு இருக்கீங்க...

மாஸ் மசாலா படங்கள் பண்றது தான் ரொம்ப கஷ்டம். பொதுவான ஆடியன்ஸுக்காக படம் எடுக்கிறோம். இதில் பணக்காரங்க, ஏழை, புத்திசாலி... இப்படி பலதரப்பட்ட மக்கள் இருப்பாங்க. இவங்க எல்லாருமே தியேட்டருக்கு வந்து படம் பார்த்து சூப்பர்னு சொல்லணும். அப்பத்தான் படம் சக்சஸ். பணம் போடுற தயாரிப்பாளர், ஹீரோ, தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், படம் பார்க்க வர்ற மக்கள் இப்படி எல்லாரையும் திருப்திப்படுத்துறது ரொம்ப கஷ்டம். எல்லாமே கரெக்டா இருந்தா, ஜாக்பாட்தான்.

வீரம் படத்துல ரொம்ப கஷ்டப்பட்டு படமாக்கிய காட்சின்னு ஏதாவது இருக்கா?

படம் பெரிய பட்ஜெட். மொத்தம் 28 ஆர்ட்டிஸ்ட் இருக்காங்க. எல்லாருமே பெரிய ஆர்டிஸ்ட். அப்போ எல்லாருக்குமே ஒரு பயம் இருக்கும். ஆனா, அந்த பயம் எல்லாத்தையும் போக்கியவர் அஜித்.’

ஷூட்டிங் ஸ்பாட்ல இயக்குநர், ஒளிப்பதிவாளர், லைட் மேன் இப்படி எல்லாருக்குமே ஒரே நோக்கம் படம் நல்லா வரணும். இந்த நோக்கத்திற்கு காரணம் அஜித் மட்டுமே. ஏன்னா எங்க எல்லார்கிட்டயும் ரொம்ப அன்பா பேசுவாரு, பழகுவாரு. படத்துல நாலு தம்பிகளுக்கு மட்டும், அண்ணனா இல்ல. எங்க மொத்த யூனிட்டுக்கே அண்ணன் அஜித்.

இடைவேளை அப்போ ஒரு ரயில்ல வைச்சு சண்டைக் காட்சி இருக்கும். அதுல ரொம்ப சிரமப்பட்டு எடுத்தோம். 100 கி.மீ. வேகத்துல போற ரயில்ல வைச்சு எட்டு நாள் ஷூட் பண்ணினோம்.

அஜித் ரசிகர்களுக்கு 'வீரம்' ஸ்பெஷல் என்ன?

இது வரைக்கும் பார்க்காத அஜித்தை பார்ப்பீங்க. எல்லாருமே சொல்றது தானே நினைப்பாங்க. முதல் முறையாக அஜித் இறங்கியடிச்சிருக்கார். நாங்க பொங்கல் வெளியீடு அப்படினு அஜித் டான்ஸ் ஆடுற மாதிரி ஒரு போஸ்டர் வெளியிட்டோம் பார்த்தீங்களா. அதே மாதிரி தான் படமும். சும்மா புகுந்து விளையாடிருக்கார் மனுஷன். சிவா, நான் இந்த மாதிரி டயலாக் எல்லாம் பேசி நடிச்சதில்லை. எனக்கே புதுசாயிருக்கு அப்படினு சொல்வார். அவரே புதுசாயிருக்குனு சொல்றப்போ, பாக்குற ரசிகர்களுக்கும் புதுசாதானே இருக்கும்.

‘மித்’ என்பதற்கு இணையான தமிழ்ச் சொல் எது?

 

முகநூல் எனத் தமிழ் எழுத்தாளர்களால் வழங்கப்படும் ஃபேஸ்புக்கில் தமிழ் சார்ந்த விவாதங்கள் அடிக்கடி நடப்பதுண்டு. முகநூலில் பெரும்பாலும் வேடிக்கை பார்ப்பவனாகவே பங்குபெறும் எனக்கு ஒரு சில விஷயங்களில் மட்டும் நேரடியாகப் பங்குபெறுவதற்கான உந்துதல் ஏற்படும். மொழி சார்ந்த விவாதங்கள் அவற்றில் ஒன்று. ஒருநாள் காலையில் தொன்மம் என்னும் சொல் குறித்துக் கவிஞர் பெருந்தேவி போட்டிருந்த பதிவு என் கவனத்தைக் கவர்ந்தது.

“ ‘மித்’(myth) என்கிற சொல்லுக்கு இணையான வார்த்தை தமிழில் இல்லை / உருவாக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்” என்று தொடங்கும் அந்தப் பதிவைச் சற்றே சுருக்கி இங்கே தருகிறேன்.

“தொன்மம் என்கிற மொழிபெயர்ப்பில் நிச்சயம் பிரச்சினை இருக்கிறது. ‘தொல்’, அது சுட்டும் பழமை, வரலாற்றுக்கும் ‘மித்’துக்குமான இடைவெளியை அழித்து, இரண்டையும் ஒன்றாக்கிவிடக்கூடிய தவறான, அபாயமான சாத்தியத்தை வலுப்படுத்துகிறது. ‘பழமை’ என்ற சுட்டுதல், ஒருவகையில் மரபுபோன்ற அதன் அதிகாரப் பிடிமானத்தைக் குறித்தாலும்கூட, ‘பழமை’ என்கிற கருத்தாக்கம் ‘இன்றைக்கு’ சமூக, பண்பாட்டு அறிவுப்புலத்தில் கொண்டிருக்கும் பொருண்மையான மதிப்பை அதிலிருந்து அந்நியப்படுத்திவிடுகிறது. மேலும், காலப்போக்கில் ‘மித்’தின் சொல்லாடலில் நேர்ந்திருக்கக்கூடிய மாற்றங்களைக் கணக்கில்கொள்ள மறுக்கிறது. ‘புனைவு’ என்று மொழிபெயர்க்கலாம். ஆனால், அந்த மொழிபெயர்ப்பு தட்டையாக, ‘மித்’கொள்ளும் பண்பாட்டு, சமூகத் தள அதிகார இயங்கியல் பரிமாணத்தைக் குறைத்துவிடுகிறது” என்றார் பெருந்தேவி.

இதற்குக் கருத்துத் தெரிவித்திருந்த ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன், “மிதோஸ் என்பதையும் வைத்துப் பார்க்கலாம். இதற்கு ஆக்யானம் என்னும் சொல்லும் ஒப்புமைக்கு வரும். ‘தொன்மம்’ சரியில்லைதான். ஏனெனில், நவீன கால ‘மித்’கள் நமக்கு நிறைய இருக்கின்றன” என்று குறிப்பிட்டிருந்தார். “ஆக்யானம், சம்ஸ்கிருதத்தில் இருக்கலாம். தமிழில் நான் தேடுகிறேன்” என்று பெருந்தேவி பதிலிட்டிருந்தார். “மாயை என்று சொல்லலாமா?” என்று ராம்ஜி யாஹூ என்பவர் கேட்டிருந்தார்.

“‘மித்’ என்பதற்கு யதார்த்தத்தை மீறிய, மரபுவழிவந்த, தொல்கதை (traditional, ancient story) என்று அர்த்தம் கொள்கிறேன். அப்படியென்றால், அதற்கு ஈடான சொல்லாக ‘புராணம்’ என்பது சரியாக வரலாம் என விக்கி பக்கம் சொல்கிறது” என்று ஜ்யோவ்ராம் சுந்தர் கூறினார். “மொழிபெயர்க்கும்போது முழுமையான ஒப்புதல் இல்லாமல் நான் பயன்படுத்துகிற சொற்களில் இந்த ‘தொன்ம’மும் ஒன்று” என்பது மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமியின் வாக்குமூலம். “ ‘மித்’ என்பதை ‘புனைவில் பொதியப்பட்ட உண்மை’ என்பதாக எடுத்துக்கொள்கிறேன்” என அகநாழிகை பொன். வாசுதேவன் குறிப்பிட்டார்.

“காதை என்ற ஒரு சொல் இருக்கிறது. அதற்குக் கதை என்ற பொருள் இருந்தாலும், நவீன ‘மித்’களை நவீன காதைகள் என்று சொல்லலாம் (modern myths then can be called)” என்று வெங்கடேஷ் சக்கரவர்த்தி குறிப்பிட்டார். இவற்றுக்கு எதிர்வினையாற்றிய பெருந்தேவி, “தமிழ் எழுத்துச் சூழலில் ‘தொன்மம்’ என்கிற மொழிபெயர்ப்பு எப்போதிலிருந்து புழக்கத்தில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆவல். கதிர்மகாதேவனின் ‘தொன்மம்’புத்தகத்தைப் படித்திருக்கிறேன். அதில் இச்சொல்லின் வரலாறு பற்றிக் குறிப்பிட்டிருப்பதாக ஞாபகத்தில் இல்லை. நண்பர் பொ.வேலுசாமி அவர்களுக்கு இவ்வார்த்தையின் பயன்பாடு குறித்துத் தெரிந்திருக்கலாம் என நினைக்கிறேன்” எனக் கூறினார்.

இந்த உரையாடலில் நானும் கலந்துகொண்டேன். எதிர்பார்த்ததைவிடவும் சற்றே நீளமாகிவிட்ட அந்தப் பதிவை இங்கே தருகிறேன்:

“தவறான கருத்து என்னும் பொருளில் மித் பயன்படுத்தப்படும்போது மாயை அல்லது பொய் என்னும் எளிய சொற்களே போதும். ஆனால், புராணிகப் படிமங்கள், கருத்தாக்கங்கள், நம்பிக்கைகளைக் குறிப்பிடும்போது, புராணிகம் என்னும் சொல் பொருத்தமாக இருக்கும். இந்துப் புராணிகம், கிரேக்கப் புராணிகம் என்று இந்தச் சொல்லாக்கத்தைப் பல பின்புலங்களிலும் பயன்படுத்தலாம். இங்கே இதிகாசங்களையும் புராணங்களாகவே கொள்ள வேண்டும். புராண, இதிகாச எல்லைகளுக்கு அப்பாற்பட்டு மக்களின் பொது/ஆழ்மன வெளியில் ஊறிப்போன புராணிகப் படிமங்கள், கருத்தாக்கங்கள், நம்பிக்கைகளைக் குறிப்பிடும்போதும் இச்சொல்லைப் பயன்படுத்தலாம்.

“ஒரு சொல் கலைச்சொல்லாகத் தொழிற்படும் போது, அது அச்சொல்லின் வேர்ச்சொல் மற்றும் நேரடிப் பொருளின் எல்லைகளைத் தாண்டிய பொருளைத் தரக்கூடியது என்பது தெரிந்ததுதானே. எனவே, புராணிகம் என்னும் சொல்லாக்கம் மித் என்னும் சொல்லுக்கு நெருக்கமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

“இச்சொல் வடமொழிச் சொல் என்பதை வைத்து இதைத் தவிர்க்க வேண்டியதில்லை. தொனி, நவ, தரிசனம் என்பன போன்ற பல வடமொழிச் சொற்கள் தமிழ் இலக்கியச் சொல்லாடல்களில் இயல்பாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. தமிழில்தான் வேண்டும் என்றால், தொன்மம் என்னும் சொல்லைப் பயன்படுத்தலாம். புராணிக என்பதும் தொல் என்பதும் பழைய என்று பொருள்படும் சொற்களே. தொன்மம் என்னும் சொல்லின் போதாமைகள் பற்றி நீங்கள் சொன்னது சரிதான். ஆனால், ‘மித்’என்னும் சொல்லுக்கு ‘தொன்மம்’தான் தமிழில் இணைச்சொல் என்று முடிவுசெய்து பயன்படுத்தத் தொடங்கிவிட்டால், அந்தப் பயன்பாடே அச்சொல்லின் வலிமையைக் காலப்போக்கில் கூட்டிவிடும். சொல்லின் பொருள் என்பது முற்றிலும் புறவயமானது அல்லவே. காலம், இடம், பண்பாடு ஆகிய காரணிகளால் கட்டுப்படுத்தப்பட்டும் விஸ்தரிக்கப்பட்டும் உருக்கொள்ளும்/ உருமாறும் சங்கதிதானே. பொருள் என்பது மிகுதியும் பொருள்கொள்ளுதல் என்பதாகவே உள்ளது. விவாதங்களில் ஒருவர் என்ன சொல்கிறார் என்பதைவிட, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே முக்கியம். பொருளுக்கும் பொருள்கொள்ளுதலுக்கும் இடையே உள்ள தொடர்பை இதன் மூலம் அறியலாம்.”

இதற்குப் பதிலளித்த பெருந்தேவி, “உங்கள் கூற்றில் அர்த்தமிருக்கிறது என்றாலும் ‘ஆதர்சமான’ வாசகர்/உரையாடுபவர் குழுமத்தை நீங்கள் எண்ணத்தில் கொண்டு பேசுவதாகத் தோன்றுகிறது. ஏற்கெனவே ‘மித்’என்பதும் ‘வரலாறு’என்பதும் ஒன்றையொன்று ‘அபாயகரமாக’பதிலீடுசெய்து உயிர், உடைமை விரயங்களை, வன்முறையை ஏற்படுத்தும் சூழலில், தொன்மம் என்கிற மொழிபெயர்ப்பு இத்தகைய பதிலீடுகளின் சாத்தியத்தை இன்னும் வலுப்படுத்தும் என்பதே என் புரிதல்” என்று கூறினார்.

அதற்குப் பதிலளித்த நான், “செட் தோசை 30 ரூபாய் என்று சொல்லும்போது, செட் என்னும் சொல் எதைக் குறிக்கிறது என்பது சராசரி வாடிக்கையாளருக்குப் புரியவே செய்கிறது. மைசூர்பாகுக்கும் மைசூருக்கும் தொடர்பில்லை என்பதையும் அவர் புரிந்துகொள்கிறார். எனவே, கலைச்சொல்லாக்கத்தில் சொல்லின் நேர்ப்பொருள் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. அவற்றின் வாசகர்கள் குறித்து நாம் சில அனுமானங்களைக் கொள்ளத்தான் வேண்டும்.

“என்னைப் பொறுத்தவரை புராணிகம் என்னும் சொல்லும் தொன்மம் என்னும் சொல்லும் நீங்கள் எழுப்பும் பெரும்பாலான கேள்விகளின் சோதனைகளைக் கடந்து நிற்கின்றன என்றே தோன்றுகிறது” என்று குறிப்பிட்டேன்.

முகநூல் உரையாடல் இத்துடன் தற்காலிகமாக முடிவுபெற்றது.

விடியும் முன் - பகுப்பாய்வு விமர்சனம்!

 

ஒரு பெண்ணும், ஒரு சிறுமியும் நான்கு சமூக விரோதிகளிடமிருந்து தப்பிப்பதற்குப் போராடும் நிகழ்வே ‘விடியும் முன்’.

பாலியல் தொழிலாளியாக ரேகா என்கிற காதாபாத்திரத்தில் பூஜா நடித்திருக்கிறார். பாலாவின் ‘நான் கடவுள்’ படத்திற்குப் பின் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். சில ஆண்டுகளுக்குப் பின் நடிப்பதால் காமெடி, கமெர்ஷியல், பெரிய இயக்குநர், பாப்புலர் நடிகர் இப்படி வணிகக் காரணங்களை முன்னிறுத்தி நடிக்காமல் ஒரு வலுவான கதாபாத்திரத்தை சுமக்கும் வாய்ப்பை ஏற்றதிலும், அதைச் சிறப்புடன் வெளிப்படுத்தியதிலும் பூஜா மிளிர்கிறார்.

12 வயதுச் சிறுமி நந்தினியை (மாளவிகா) மிகவும் ஆபத்தான சூழலில் இருந்து மீட்டுக்கொண்டு ரேகா (பூஜா) ரயிலில் புறப்படும் சூழலில் கதை நகர்கிறது. அவர்களைத் தேடிப் பிடித்தே ஆகவேண்டும் என்கிற நிர்ப்பந்தத்திற்குள் சிக்கிக்கொள்கிறார், புரோக்கரான சிங்காரம். அதற்கு லங்கன் என்ற ரவுடியின் உதவியை நாடுகிறார். லங்கனுக்குப் பணம், சிங்காரத்திற்கு அந்தச் சிறுமி என்று ஆரம்பிக்கும் தேடுதல், யாருடைய கட்டளைக்காக, தேவைக்காக என்கிற சஸ்பென்ஸ் முடிச்சுகளுடன் நகர்கிறது. லங்கன், சிங்காரம் ஆகியோருக்குப் பின்னணியில் இருப்பவர்கள் சின்னையா என்ற இளைஞனும் துரைசிங்கம் என்ற தாதாவும். எப்படியாவது இந்தச் சிறுமியைக் காப்பாற்றியே ஆக வேண்டும் என்று போராடும் காட்சிகளில் பூஜா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பூஜா, சிறுமி மாளவிகாவை முதல் தடவை பார்த்துவிட்டு தன்னுடன் அழைத்து வரும்போது ‘உன் பெயர் என்ன?’ என்று கேட்கும்போது, சிறுமி மாளவிகா, சாலையோரச் சுவரில் நந்தினி என்று எழுதிய விளம்பரப் பெயரைப் பார்த்து, தன்னுடைய பெயர் ‘நந்தினி’ என்று சொல்லும் காட்சியும், படத்தின் முடிவில், ‘‘என் நிஜப் பெயர் நந்தினியில்லை!’’ என்று சிறுமி சொல்லும்போது, ‘‘இருக்கட்டும் உனக்கு அந்தப் பெயரே அழகா இருக்கு!’’ என்று பூஜா கூறும் காட்சியிலும் புதிதாக ஒரு வாழ்க்கையை அமைத்து க்கொள்ளத் தயாராகும் உணர்வை அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

பாலியல் தொழிலாளியான ஒரு பெண்ணையும், அந்தப் பாலியல் தொழிலின் சூழலுக்குள் சிக்கிக்கொள்ளாமல் காப்பாற்றப்பட வேண்டிய ஒரு சிறுமியையும் சுற்றிக் கதையை அமைத்த இயக்குநர் பாலாஜி கே. குமாரையும், அதனைக் காட்சிப்படுத்திய கேமராமேன் சிவகுமார் விஜயனையும் பாராட்டலாம்.

பூஜாவின் சொந்தக் குரல் சில இடங்களில் திணறினாலும் கேட்க நன்றாகவே இருக்கிறது. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சில நிமிடங்கள் வந்தாலும் பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். சின்னையாவாக வரும் வினோத் கிஷன் தான் படத்தின் நாயகன். அவர் திரையில் வரும் காட்சிகளும், அவர் தந்தையைக் கொன்றது சரியான முடிவுதான் என்பதைக் காட்டும் சில நிமிட ப்ளாஷ்பேக் காட்சியும் சிறப்பாக உள்ளன.

கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் இசை சில இடங்களில் பாடல் வரிகளைக் கேட்க விடவில்லை. எனினும் பின்னணி இசையில் தேறிவிட்டார். கலை, படத்தொகுப்பு, காட்சிப்படு த்தியிருக்கும் சூழல் எல்லாமும் சரியாக அமைந்திருக்கின்றன.

பெயருக்கேற்றபடி ஒரே ஒரு பொழுதில் எல்லாமே நடக்கின்றன என்பதால் விறுவிறுப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் கதை இது. அதற்கேற்பப் பல திருப்பங்களையும், அதற்கான காரணங்களையும், குறைவான கதாபாத்திரங்களையும் அடுத்த டுத்த நிகழ்வுகளையும் கொண்டு நகர்கிறது படம். என்றாலும் திரைக்கதையிலும் நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தியதிலும் இன்னும் சற்று வேகத்தைக் கூட்டியிரு க்கலாம். இந்த ஒரு விஷயத்தைத் தவிரப் பெரிய குறை எதுவும் இல்லை.

குழந்தைகள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்து பெரியவர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்ற செய்தியை, கதையம்சம் குன்றாமல் கொடுத்திருப்பது பாராட்டத்தக்க முயற்சி.

மதிப்பீடு:
 
விடியும் முன், ஆவணத் தன்மையைத் தவிர்த்த விழிப்புணர்வுப் படம்.

தந்தை பெரியார் பொன்மொழிகள்!



 மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.


பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி


 மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்


 விதியை நம்பி மதியை இழக்காதே.


மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.


மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.


பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.


பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.


பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.

வாழ்க்கையையின் நிதர்சனம் இதுதான்!

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார்.

பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை.

சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து,

 "என்னுடைய சாவு நெருங்கி விட்டது.

எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன.

அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக,

 "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது,

 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக,

 "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன.

என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து,

 "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம்.

ஆனால்,

இதற்கான காரணத்தை தாங்கள் எங்களுக்கு விளக்க வேண்டும்" என்று கேட்க,

அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள்.

மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது.

மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

மரணம் ஒரு நிதர்சனமான உண்மை .

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை யாரும் தன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது.

அது சவக்குழி வரை மட்டும்தான்..!

மனிதர்கள் வீணாக சொத்துக்கள்,செல்வங்கள் போன்றவற்றின் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் இந்த மாவீரன் அலெக்ஸாண்டர்,

சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக..

ஆம். நண்பர்களே,

நாமும் அப்படித்தான் நம்ம  தற்போது வாழ்ந்து வருகின்றோம்.

நம் வாழ்க்கையே எப்போதும் பணம்,பணம்,பணம்தான்.

சதா நாம் அனைவரும் அதன் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கின்றோம்.

நம் கவியரசு.கண்ணதாசன் அவர்களின் ஒருதிரைப்பாடல்.

அதை மறைந்த டி.எம்.எஸ்.அவர்கள் உயிரோட்டமாக பாடிஇருப்பார்.

 "வீடு வரை உறவு,
வீதி வரை மனைவி,
காடு வரை பிள்ளை,
கடைசி வரை யாரோ, என்று..


என்ன அருமை நண்பர்களே, உண்மைதானே...???

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top