.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 28 November 2013

நிம்மதி...!

நிறைவு,நிம்மதி இவையிரண்டையும் தேடியே எல்லோர் வாழ்க்கையும் இயங்குகிறது. சிலருக்கு அனைத்தும் இருந்தும் நிம்மதியும் மன நிறைவும் இருக்காது. ஏன்? நாம் எடுக்கும் எல்லா முடுவுகளுமே சரியானதாக அமைவதில்லை. அதேபோல் நம் வாழ்க்கை குறித்தும்,லட்சியம் குறித்தும் எடுக்கும் முடுவுகளும் சரியானதாக தான் இருக்கவேண்டும் என்பதல்ல. சில நேரங்களில் நாம் விரும்புபவை,நேசிப்பவை கூட நமக்குத் தடையாக இருக்கலாம்.

வாழ்க்கைப் பாதை என்றும் பூந்த்தோட்டமாக தான் இருக்க வேண்டும் என்பதல்ல. முட்களும் குழிகளும் நிரம்பியதாகவும் இருக்கலாம். வாழ்வில் எப்போதும் கவனம் தேவை. அந்த கவனம்,நிதானம் மட்டுமே உன் வாழ்க்கை மலர் போல பூக்க உதவும். நாம் என்ன வேண்டுமானாலும் நம் வாழ்வு குறித்து திர்மானிக்கலாம். ஆனால்,அந்த முடிவே தவறாகக் கூடாது. முடிவெடுத்த வாழ்க்கை முழுமையை வருவது நம் கையில் தான் உள்ளது. பல நேரங்களில் நம்மை பற்றி,நம் தோல்வியை பற்றி,நம் குறை பற்றி,நம் இயலாமை பற்றியே மனம் சிந்திக்கிறது.

வாழ்வில் தொடர்ந்து முன்னேற,நிறைவுகளையும் அடிக்கடி நினைவுக் கூற வேண்டும். இது வரை நடந்தவையே இன்று நடப்பதற்கு பாடம். ஆனால்,எல்லா விசயங்களும் ஒரே தடவையில் மனதில் பதிந்து விடுவதில்லை. கற்றுக்கொள்ளும் ஆர்வம்,நம்முள் நம்மை பரிசிலிக்கும் போதுள்ள இவையே எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள தோன்றும். அதுவே நாளைய விளைவு.

ஒருவர் மன நிம்மதியை அடைய சில வழிகள்:

- தன் உணர்ச்சிகளை புரிந்துக் கொள்வது.

- தன் சூழலை முழுமையை பார்ப்பது.

- மாற்று வழிகள் வாழ்வில் உண்டா என்று தேடுவது.

- வாழ்வின் பாதையை முடிவெடுப்பது.

- திறமைகளை வளர்ப்பது.

- ஒவ்வொரு கால கட்டத்திலும் விளைவுகளை பார்ப்பது.

"கனவு மெய்ப்படவேண்டும்,காரியமாவது விரைவில் வேண்டும்,தரணியிலே பெருமை வேண்டும்"என்று பாரதி கூறியது போல,நம்மை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். இதை எல்லாம் செய்தாலே நிம்மதி வரும்.

விடா முயற்சி..!


"எப்போதும் தோற்காதவர்கள் யாரெனில், எப்போதும் முயற்சி செய்யாதவர்களே" - இந்தக் கருத்தைப் பற்றி பார்ப்போம்.

என்னிடம் ஒரு வெற்றியாளரைக் காண்பியுங்கள் 'ஒரே இரவில் வெற்றி' என்பது எவ்வளவு போலியானது என்று நான் காண்பிக்கிறேன்.  ஒவ்வொரு வெற்றியாளனும் தோற்க துணிந்தால்தான் வெற்றி பெறுகிறான்.  பின்வரும் சம்பவங்களைக் கவனியுங்கள்.

இரண்டாம் உலகிப்போரின்போது டொயோட்டோ மோட்டார் கார்ப்பரேஷனில் பொறியாளர் வேலைக்கு நடந்த இன்டர்வியூவில் சொயிசிரோ தேறவில்லை.  ஆனாலும் அவர்நம்பிக்கை இழக்கவில்லை.  ஹோண்டா நிறுவனத்தை ஆரம்பித்தார்.

கவர்ச்சியாக இல்லை என்று டிவென்டியெத் செஞ்சுரி ஃபாக்ஸ் நிறுவனத்தால் அவர் நிராகரிக்கப்படார். பல ஆண்டுகள் கழித்து மர்லின் மன்றோ எல்லோரும் நேசிக்கும் ஹாலிவுட் நடிகையாக விளங்கப்போகிறார் என்று ஃபாக்ஸுக்குத் தெரியவில்லை.
அவருடைய இசை ஆசிரியர் 'இசையமைப்பாளராக நீ ஜெயிக்க முடியாது' என்று கூறினார். பித்தோவனின் இசை இன்றும் வாழ்கிறது.

இவர்கள் அனைவருமே உலகத்துக்கு ஒரு விஷயத்தை நிரூபித்தார்கள்.  உங்கள் மீது நம்பிக்கை இருந்தால், உலகம் என்னதான் சொன்னாலும், உங்களால் முடியும் என்று நம்புகிற விஷயத்தைத் தொடர்ந்துவிடா முயற்சியோடு செய்தால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.  வெற்றிகரமான மனிதர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு என்பது பலமில்லாதது அல்ல.  அறிவில்லாதது அல்ல, ஆனால் விடாமுயற்சி இன்மைதான்.

உங்களுக்கு நிறைய வேட்கை இருக்கலாம்.  ஒவ்வொரு முறையும் மிகச் சிறப்பாக செயல்படலாம்.  ஆனால் நீண்ட காலத்தில் இதற்கு எந்த மதிப்பும் இல்லை. ஒவ்வொரு முறையும் முடிந்த அளவுக்கு சின்சியராகச் செயல்படுவதே முக்கியம்.  அப்போதுதான் நீங்கள் மிக நன்றாகத் தீட்டப்பட்ட வைரமாக இருக்க முடியும்.  தீட்டப்படுவது என்பதற்கு அர்த்தம், கடின உழைப்பு.

வெற்றி மனப்பான்மை!

வாழ்வின் எந்தவொரு கணத்திலும் நாம் தோல்வியடைய விரும்புவதில்லை. எந்தவொரு போட்டியிலும் வெற்றியைப் பெறுவதற்கும், எந்தவொரு இடத்திலும் முதலாவதாக, உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவதற்கும், முன்னேறுவதற்கும் நாம் விரும்புகிறோம். இது தவறான எண்ணமல்ல. தான் ஒரு திறமை மிகுந்தவனாக ஆகவேண்டும், தன்னால் முடிந்த அளவு வாழ்வில் உயர்ந்த இடத்துக்கு வரவேண்டும் என்ற இலட்சியத்தோடு முயற்சி செய்வது மிகவும் நல்ல விடயம். இவ்வாறாக முன்னேற வேண்டுமென்ற மனப்பான்மையே மனதில் வெற்றிக்கான விதைகளைத் தூவி விடுகிறது. பதவிகளில் உயர்ந்த அந்தஸ்தினை நோக்கி, போட்டிகளில் வெற்றிகளை நோக்கி எனப்பல எதிர்பார்ப்புக்கள் மனதில் வேர்விடத் தொடங்குகின்றன. இதில் தவறேதுமில்லை. வாழ்க்கையினை முன்னேற்றகரமான பாதையில் திருப்புவதற்கான ஒரு உந்து சக்தியாக இவ் எதிர்பார்ப்புக்கள் ஆகிவிடுகின்றன. அது போல எப்பொழுதும் சோர்ந்திருக்கும் மனங்களுக்கு 'வெற்றி பெற வேண்டும்' என்ற எண்ணம் மகிழ்வையும், வாழ்க்கை குறித்தான திருப்தியையும் அளிக்கக் கூடியது.

இவ் வெற்றி குறித்தான எண்ணம் மனதில் தோன்றும்போதே நாம் இன்னொன்றையும் மனதின் மூலையில் இருத்த வேண்டும். அதாவது இவ் எதிர்பார்ப்புக்கள் எல்லாமே எந்தத் தடங்கலுமின்றி நாம் நினைத்தவாறே இலகுவாக ஈடேறாமலிருக்கவும் வாய்ப்புக்களிருக்கின்றன என்பதனையும் மனதில் இருத்த வேண்டும். நமது வாழ்வின் எந்தவொரு போட்டியிலும், முயற்சிகளிலும் முதலாவது, இரண்டாவது என வகைப்படுத்தப்படும் போது எல்லாவற்றிலுமே முதலாவதாக வரும் சாத்தியங்கள் குறைவு. இவ்வாறாகச் சில தோல்விகளைத் தழுவ நேரிடுவதை நமது எதிர்பார்ப்புக்கள் ஈடேறவில்லை எனவும் கொள்ளலாம். ஆனால் எதிர்பார்ப்புக்கள் ஈடேறாமல் போவதற்கு போட்டிகள் மட்டுமே அவசியமென்றும் சொல்லமுடியாது. யாருடனும், எந்தப் போட்டியும் இல்லாதவிடத்தும், தனது மனதில் வேர்விட்ட எதிர்பார்ப்பொன்று ஈடேறாவிட்டால் அவர் மனதளவில் கோழையானவனாக மாறி உயிரற்ற மனநிலைக்கு மாறிவிடக் கூடும்.

ஆகவே போட்டி என்ற ஒன்று இருந்தாலோ, இல்லாவிட்டாலோ தனது எதிர்பார்ப்புக்கள் ஈடேறா விட்டால் அல்லது, தமது இலட்சியத்தை அடைய முடியாமல் போனால் பலர் நிராசையோடு மனதளவில் உடைந்து போகின்றனர். தொலைக்காட்சிகளில், போட்டி நிகழ்ச்சிகளில் பார்த்திருப்பீர்கள். வெற்றியை அறிவிக்கும் போது துள்ளிக் குதிக்கும் அதே வேளை தோல்வியை அறிவிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் சிலர் தாங்க முடியாமல் அழுகின்றனர். சிலர் கோபப்பட்டு நடுவர் குழுவினை அநீதம் விளைவித்ததாகத் திட்டுகின்றனர். இப்படியாக மனதில் ஆசையோடு எதிர்பார்த்த ஒன்று கிட்டாமல் போனால் அதற்கான நமது வெளிப்பாடுகள்தான் நமது மன உறுதியினைப் பற்றி வெளியே சொல்கின்றன

உங்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் ஏதேனும் இருக்கின்றதா? போட்டியொன்றில் முதலாவதாக வரமுடியவில்லையென்று, வாழ்வில் ஆவலாக எதிர்பார்த்த ஒன்று கிட்டாமல் போனதென்று சோர்ந்து போய் தைரியமிழந்த அல்லது அதிகமாகக் கோபப்பட்ட சந்தர்ப்பங்கள் உங்கள் வாழ்வில் ஏதேனும் உண்டா? சாதாரண மனிதர்களான எமக்கு இது போன்ற உணர்வுகள் ஏற்படுவது இயல்புதான் எனினும் நமது மனதின் மகிழ்ச்சியை நாமே கொன்று விடுவதைப் போன்ற இவ் உணர்வுகள் மிகத் தீங்கானவை. மிகவும் கோழைத்தனமானவை. 'வெற்றி' என்றால் என்னவென்று அறிந்த மனங்கள் இதுபோல தோல்விகளில் பெரிதாக ஆர்ப்பரிப்பதில்லை. உடைந்து போவதுமில்லை.

ஏதாவதொரு சந்தர்ப்பத்தில், ஒரு போட்டியில் வெற்றிபெற முடியாமல் போனதென்பது தோல்விக்கான முழு அர்த்தமல்ல என்பதனை மனதிலிருத்துங்கள். வெற்றி மனப்பான்மையோடு, ஒரு எதிர்பார்ப்போடு தைரியமாக அப் போட்டியில் கலந்து கொண்டீர்களே, அதுதான் வெற்றி. உங்களிடம் இருக்கும் திறமை மற்றும் மற்றப் போட்டியாளர்களின் திறமை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதற்காக போட்டிகள் நிகழ்த்தப்படுகின்றன எனக் கொண்டாலும் வெற்றி, தோல்வி இரண்டையும் எதிர்கொள்ளும் மனப்பான்மையே உங்கள் உண்மையான திறமையை வெளிக்காட்டுகிறது. வெற்றியில் பெரிதாக ஆர்ப்பரிக்காமலும், தோல்வியில் முழுதாக உடைந்து போகாமலும் இரண்டையும் அமைதியாக, சமமாக எதிர்கொள்வதே உண்மையான வெற்றியெனப்படுகிறது.

ஆனால் நாம் காணும் இன்றைய சமூகத்தில் அநேகமான போட்டிகளில் அடுத்தவர்களைத் தோல்விக்குள்ளாக்கி, அவர்களைக் கீழே அல்லது பின்னால் தள்ளிவிட்டு தான் மட்டும் எல்லா விதத்திலும் எல்லா இடங்களிலும் உயர்ந்த இடத்துக்குச் செல்லவேண்டும் என்ற மனப்பான்மையே மிகைத்திருக்கிறது. அதுவல்ல வெற்றி. அதுவல்ல உண்மையான முன்னேற்றம். ஒருவர் வெற்றியாளராக, இன்னொருவரைத் தோற்கடிக்க வேண்டுமென்பதில்லை. உண்மையான வெற்றியாளரெனப்படுபவர் இன்னொருவரைத் தோல்விக்குள்ளாக்கி, முதலாவதாக வருபவர் அல்லர். தான் பெற்ற வெற்றி, தனது திறமையை உணர்ந்து அவற்றை இன்னும் வளரச் செய்தபடி எந்தவொரு தேவையற்ற வீணான எதிர்பார்ப்புக்களுமின்றி மன உறுதியோடு, தன்னம்பிக்கையோடு, இலட்சியத்தோடு முன்னே செல்லும் மனிதனே உண்மையான வெற்றியாளர் எனப்படுகிறார்.

உலகின் எல்லா மனிதர்களுக்கும் தமக்கென்று ஏதாவதொரு தனித் திறமையாவது இருக்கும். அத் திறமையை மேலும் மேலும் கூர் தீட்டி வளர்த்துக் கொள்வதே வெற்றி மனப்பான்மை எனப்படுகிறது. அதுவல்லாமல் தன்னுடன் போட்டியிட்டுத் தோற்ற ஒருவரிடம் 'எனது திறமை, உனது திறமையை விடவும் அதிகமாக உள்ளது' எனச் சொல்லிக் காட்டுவது அல்ல. அடுத்த போட்டியின் போது இக்கருத்து மாறுபடக் கூடும். இன்றைய வாழ்வில் பலர் போட்டிகளில் வெற்றிபெறக் கூடும். தமது இலட்சியங்களை ஈடேற்றிக்கொள்ளக் கூடும். தமது திறமைகளை வெளிக்காட்டுவதில் பெரும் மகிழ்ச்சி அடையக் கூடும். ஆனால் பெரும்பாலாக இவ் வெற்றிகளைப் பெறுபவர்கள் தமது திறமையைக் குறித்தல்லாமல் அடுத்தவரைத் தோற்கடித்தது குறித்தே மகிழ்ச்சியடைகின்றனர். இது உண்மையில் தோல்வி மனப்பான்மையே தவிர வெற்றிமனப்பான்மை அல்ல.

ஆகவே, ஒரு சந்தர்ப்பத்துப் போட்டியில் வெற்றி பெறுவதை மட்டுமே வாழ்வின் இலக்கெனக் கொள்ளாமல் முழு வாழ்வையும் தமது திறமைகளால் வெற்றிகொள்வதே வாழ்வின் உண்மையான வெற்றியெனக் கொள்ள வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தோல்வியைத் தழுவ நேரும் பட்சத்தில் அதற்காக மனமுடைந்து சோர்ந்து போகக் கூடாது. எதிர்பார்ப்பு ஈடேறவில்லையென துயரப்பட்டு மனமுடைந்து போகக் கூடாது.

எல்லோருக்குமே அவ்வப்போது சில எதிர்பார்ப்புக்கள் ஈடேறாமல் போவது இயற்கை. ஆனால் அதற்காக நகரும் வாழ்க்கையை நிறுத்தி வைக்க முடியாது. அவ்வாறாக எதிர்பார்ப்பு ஈடேறாச் சமயங்களில் தம்மை வெளிக்காட்டிக் கொள்ளாத வாழ்த்தொன்று உங்களை வந்தடைந்ததாக எண்ணிக் கொள்ளுங்கள். 'அன்று நான் தோற்றுப்போனது நல்லதுதான்' எனப் பின் வரும் காலங்களில் நீங்களே சொல்லக் கூடுமான அளவுக்கு வெற்றியை அவ் வாழ்த்துக்கள் சுமந்து வந்திருக்கும்

எனவே 'தோல்வியடைந்து விட்டோம்' என்ற சோர்வு மனநிலையை முழுவதுமாக மனதிலிருந்து அகற்றி, தொடர்ந்த எதிர்பார்ப்புக்களை இல்லாமலாக்காது 'என்னைத் தோற்கடிக்க நான் விடமாட்டேன்' என்ற தன்னம்பிக்கையோடும் உறுதியோடும் உங்கள் பாதங்களை முன்வையுங்கள். அடுத்தவரை விழச் செய்வதல்ல, தான் விழாமல் முன்னேறுவதே உண்மையான வெற்றி என உணருங்கள்.அவ் உணர்விருக்கும் நீங்களே வெற்றிமனப்பான்மை கொண்ட உண்மையான வெற்றியாளர்.

காய்ச்சலின் அளவை கண்டறியும் வெப்பமானியை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

 

உங்களுக்குக் காய்ச்சல் வந்தபோது வாயில் ஒரு கருவியைவைத்து வெப்பநிலையை அளவிட்டிருப்பார்களே... அதுதான் வெப்பமானி (Thermometer). தெர்மாமீட்டர் என்பது வெப்பத்தை அளக்கும் கருவி. அதனால், அதற்கு வெப்பமானி என்று பெயர். காய்ச்சலைப் பார்க்கப் பயன்படுத்து கிளினிக்கல் தெர்மாமீட்டர் (Clinical Thermometer). ஜெர்மன் மருத்துவர் கார்ல் உன்டர்லிச் 1868-ல் 'காய்ச்சல் என்பது ஒரு நோயல்ல; நோயின் அறிகுறி என்ற தன் ஆய்வை வெளியிட்டார். அவர், உடல் வெப்பநிலைக்கும் பலவித நோய்களுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தார். வெப்பமானியை உருவாக்கியதும் கார்ல் உன்டர்லிச்தான்.


வெப்பமானியைக் கையில் வைத்துக்கொண்டு (ஜாக்கிரதை... கீழே விழுந்துவிடப்போகிறது) உற்றுப்பாருங்கள். என்ன தெரிகிறது? ஒரு முனையில் சற்றே குறுகலாக, பளபளவென்று தெரிகிறதே அதுதான் பாதரசம் (Mercury). மீதமிருக்கிற பகுதியை நன்கு பாருங்கள். நாம் கையில் வைத்துக்கொண்டு பார்க்கிற கண்ணாடிக் குழாய்... அதன்மேல் கோடு கோடாகப் போட்டு, ஏதோ சில எண்கள் தெரியும். இதற்கும் உள்ளே இன்னொரு மிகச்சிறிய குழாயும் இருக்கும்.

வெப்பத்தினால் பாதரசம் விரிவடையும். அப்படி விரிவடையும் பாதரசம், சிறிய இரண்டாவது குழாயில், வெப்பத்தின் அளவுக்குத் தக்கவாறு ஏறும். வெளியில் இருக்கும் கோடுகளும் எண்களும் வெப்பத்தின் அளவைக் குறிப்பவை. எந்த அளவுக்குப் பாதரசம் ஏறுகிறதோ, அந்த இடத்தில் என்ன கோடு, எண் என்பதைப் பார்த்து, அந்த அளவு வெப்பம் என்று கணிக்கப்படுகிறது.

கிளினிக்கல் தெர்மாமீட்டரில் 95 முதல் 110 வரை என்று இருக்கும். இதற்கு அர்த்தம் 95 டிகிரி F முதல் 110 டிகிரி F என்பது. டிகிரி என்பது பாகையைக் குறிக்கும். F என்பது Fahrenheit. சிலவற்றில் இதற்குப் பதிலாக 35 டிகிரி C முதல் 43.5 டிகிரி C வரை குறித்திருக்கும். C என்பது Celsius. அது என்ன, Fahrenheit அல்லது Celsius..? இவை அளவை முறைகள்.

ஃபாரன்ஹீட் அளவு முறையில் தண்ணீரின் உறை (freezing point) நிலை 32 டிகிரி F, தண்ணீரின் கொதிநிலை (boiling point) 212 டிகிரி F ஆகும். உடலின் சாதாரண வெப்பநிலை 98.6 டிகிரி F, இதுவே செல்சியஸ், அளவு முறையில், தண்ணீரின் உறை நிலை 0 டிகிரி C ; கொதிநிலை 100 டிகிரி C; உடலின் சாதாரண வெப்பநிலை 37 டிகிரி C. கேப்ரியல் டேனியல் ஃபாரன்ஹீட் என்ற ஜெர்மானியர் 1724-ம் ஆண்டு தான் அமைத்த வெப்பமானியில் தண்ணீர் பனிக்கட்டியாகும் வெப்பத்தை 32 டிகிரி என்றும், உடலின் வெப்ப அளவை 96 டிகிரி என்றும் நிர்ணயித்தார். இதுவே ஃபாரன்ஹீட் அளவையாகும்.

வெப்பமானியில் ஏன் பாதரசம் பயன்படுத்தப்படுகிறது?

பாதரசம் திரவநிலையில் உள்ள உலோகம். அதனுடைய கொதிநிலை 357 டிகிரி C. அதனால், பிரச்னை இல்லாமல் பயன்படுத்தலாம். தண்ணீரைப் பயன்படுத்துகிறோம் என்று வைத்துக்கொள்வோம். 100 டிகிரி C வெப்பநிலையில் தண்ணீர் கொதித்துவிடும். அதைத் தாண்டி வெப்பம் ஏறினால், சரியாக அளவு காட்டாது.

பாதரசம் எந்த வெப்ப நிலையிலும் (357 டிகிரி C) வரை ஒரே மாதிரியாக விரிவடையும். அதனால், அளவிடுவது எளிது. கண்ணாடிக் குழாயில் பார்ப்பதற்குப் பளிச்சென்று பாதரசம் தெரியும்.

ஏன் கிளினிக்கல் தெர்மா மீட்டரில் 95 டிகிரி F - 110 டிகிரி F அல்லது 35 டிகிரி C - 45.5. டிகிரி C வரையான அளவுகள்தான் உள்ளன?

உடலின் சாதாரண வெப்ப நிலை 98.6 டிகிரி F அல்லது 37 டிகிரி C. காய்ச்சல் ஏற்பட்டால், 104 டிகிரி F அல்லது 105 டிகிரி F (40 டிகிரி C / 40.5 டிகிரி C) வரைதான் அதிகபட்சம் வெப்பம் ஏறும். அதற்குள்ளாகவே பலவித அறிகுறிகள் தோன்றிவிடும். அதையும்விட (சில குறிப்பிட்ட காலங்களில்) வெப்பம் அதிகமானால்கூட 110 டிகிரி F-க்கு மேல் ஏறாது. எனவே, உடல் வெப்பத்தை அளக்கப் பயன்படும் கிளினிக்கல் தெர்மா மீட்டரில் அதற்குமேல் தேவையில்லை.

உடலின் சராசரி வெப்பம் எல்லோருக்கும் 98.6 டிகிரி F தானா?

சிலருக்கு 98.4 டிகிரி F முதல் 99.4 டிகிரி F வரை இது வேறுபடலாம். இதனால் பிரச்னை ஒன்றுமில்லை. காய்ச்சல் இருக்கிறதா என்று பார்க்கும்போது, பெரியவர்களுக்கு வெப்பமானியை வாயில் வைப்பதைப் பார்த்திருக்கிறோம். நாக்குக்கு அடியில் வைத்தால், உடலின் சரியான வெப்ப நிலை (Core Temperature) கிடைக்கும்.

ஆனால் சிறிய குழந்தைகள், அதிகக் காய்ச்சலில் இருப்பவர்கள் - இவர்களால் நாக்குக்கு அடியில் சரியாக தெர்மா மீட்டரை வைத்துக்கொள்ள முடியாது. மேலும், வெப்பமானியைக் கடித்துவிட்டால் பாதரசம் வாய்க்குள் போய்விடும். எனவேதான், அக்குளில் வெப்பமானி வைக்கப்படும். அக்குள் வெப்ப நிலையோடு 1 டிகிரி F அல்லது அரை டிகிரி C கூட்டினால்தான், சரியான உடல் வெப்பநிலை கிடைக்கும். அக்குளில் வெப்பமானி காட்டுவது 99.6டிகிரி F என்றால், அப்போது உண்மையான உடல் வெப்பம் 100.6 டிகிரி F.

நண்பர்களே... பாதரசத்தில் செய்யப்பட்ட பழைய மாடல் தெர்மாமீட்டர்கள் மாறி, இப்போதெல்லாம் காய்ச்சலைக் கண்டுபிடிக்க, நிறம் மாறும் பிளாஸ்டிக் பட்டைகள் வந்துவிட்டன. கலர் கலர் பட்டைகள் - சாதாரணம் ஒரு கலர், காய்ச்சல் ஒரு கலர், அதிகக் காய்ச்சல் ஒரு கலர் - இப்படி வந்துவிட்டன. தற்போது டிஜிட்டல் தெர்மாமீட்டர்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவில் விற்பனையாகின்றன. உடல் வெப்பநிலை அளவை இது 'எலெக்ட்ரானிக் டிஸ்ப்ளேயில் எண்ணாகவே காட்டிவிடும்.

கலகலப்பு 2' படத்தில் ஸ்ரீதிவ்யா?

 

ஹீரோவாக நடித்துக்கொண்டு இருந்த சுந்தர்.சி மீண்டும் இயக்குநர் அடையாளத்தோடு களம் இறங்கிய படம் 'கலகலப்பு'.

விமல், அஞ்சலி, சிவா, ஓவியா நடித்த இப்படம் காமெடியில் அப்ளாஸ் அள்ளியது.சுந்தர்.சி காமெடிப் படம் எடுத்து மீண்டும் தன் இமேஜை உயர்த்திக்கொண்டார்.

இப்போது திகில் நிறைந்த பேய்ப் படமாக 'அரண்மனை' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர்,

இதற்கடுத்து 'கலகலப்பு 2' எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார் சுந்தர்.சி.

விமல், சிவா, ஓவியா என்று 'கலகலப்பு' படத்தில் நடித்தவர்களே இதிலும் நடிக்க இருக்கிறார்கள். அஞ்சலிக்குப் பதிலாக ஸ்ரீதிவ்யா நடிக்க வாய்ப்பு இருக்கிறதாம்.

ஸ்ரீதிவ்யா ஹோம்லி , கிளாமர் இரண்டுக்கும் செட்டாகிறார். காமெடியும் வொர்க் அவுட் ஆகிவிட்டால், தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தைப் பிடித்துவிடுவார் என்று சொல்லப்படுகிறது.

ஸ்ரீதிவ்யா இப்போது 'பென்சில்', 'ஈட்டி', 'காட்டு மல்லி', 'நகர்புறம்' ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால், 'கலகலப்பு 2' படத்தில் ஸ்ரீதிவ்யா நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top