.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 10 November 2013

அடி இறக்கம் எனப்படும் கருப்பை தளர்வின் அறிகுறி!

தற்போதைய மாறி வரும் பழக்க வழக்கங்களால், அடி இறக்கம் என்று பெண்களால் கூறப்படும் கருப்பை தளர்வு பல பெண்களுக்கு ஏற்படுகிறது.

இது பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. அதற்கான அறிகுறிகள் என்னவென்று பார்த்தால்...

இடுப்பு வலி, பின்புறம் இடுப்பில் கை வைத்து நின்றால் சற்று எளிதாக இருப்பது.

ஏதோ சதைப் போன்று கீழ்ப்பாகத்தில் இடிப்பது.

எப்போதும் வெள்ளைப் போக்கு அதிகமாக இருப்பது.

பெண்ணுறுப்பில் உலர்ந்த தன்மை

அடிக்கடி ஏற்படும் அரிப்பு, அதனால் ஏற்படும் புண்

சிலருக்கு இரும்பினால், தும்மினால், முக்கினால் கருப்பை இறங்குவது போன்ற உணர்வு

அடிக்கடி சீறுநீர் வெளியேற்றம்

சிறுநீரை அடக்க முடியாத நிலை.

தன்னை அறியாமல் சிரித்தால் கூட சிறுநீர் வெளியேறும் நிலை

மலச்சிக்கல் போன்ற உணர்வு. அடிக்கடி மலம் கழிக்கத் தோன்றுவது போன்றவை கருப்பை இறக்கத்தின் அறிகுறிகளாக இருக்கலாம்.

இவற்றில் ஒரு சிலவோ, பல அறிகுறிகளோ இருப்பின், அவர்கள் மருத்துவரை அணுகி உரிய பயிற்சிகளைமேற்கொள்வது நல்லது.

தாய்ப்பால் அதிகம் சுரக்க வேண்டுமா?

 

தாய்ப்பால் அதிகம் சுரக்க எந்த வகையான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் என்று குழம்புவது இயல்பு. குழந்தை பிறந்த பின்பு குழந்தைகளுக்கு வழங்கப்படும் முதல் உணவு மற்றும் முக்கிய உணவாக இருப்பது தாய்ப்பால். குறைந்தது 6 மாதக் காலமாவது கண்டிப்பாக தாய்பாலை  கொடுக்க வேண்டும். இதுதான் குழந்தைகளுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி. இதை விட சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை எனலாம்.

சிலருக்கு தாய்ப்பால் குறைவாக சுரக்கும். மனஅழுத்தம், தூக்கமின்மை, சத்துள்ள ஆகாரம் உட்கொள்ளாதது, உடல் வறட்சி என்று பல காரணங்கள் இருக்கும்.  தாய் என்ன சாப்பிடுகிறாரோ அதுதான் குழந்தைக்குச் சத்தாக சென்று சேரும். அதனால்  தாய்மார்கள் குழந்தைகளுக்காகவாவது சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு பொருட்கள் ஒரே சமயத்தில் எடுத்துக் கொள்ளலாமல் இடைவெளி விட்டு விட்டு எடுத்து கொள்வது நல்லது.

சில உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்வதின் மூலம் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். வாருங்கள் பார்க்கலாம்.

* தினமும் முட்டை, மீண் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம். அசைவம் சாப்பிடதவர்கள் காய்கறிகள், பழங்கள் அதிகம் உணவில் எடுத்து கொள்ளலாம்.

*  பாதாம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாம்.

* அஸ்வகந்தி இலைத் துளிர்களைப் பறித்து எண்ணெயில் வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் பால் சுரக்கும்.

*  பச்சை வேர்கடலை மென்று சாப்பிடலாம்.

* ஆலம் விழுது, துளிர் விதை இவ்விரண்டையும் எடுத்து மைய அரைத்து, 5 கிராம் எடுத்து பசும்பாலில் கலந்து  காலையில் மட்டும் உட்கொண்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.

*  ஆல்வல்லி கிழங்கு வேக வைக்காமல் பச்சையாக மென்று தின்னலாம்.

* பப்பாளிக் காய்யை தோல் நீக்கி கடலைப் பருப்புடன் சேர்த்துக் கூட்டாகச் சமைத்துண்டால் பால் பெருகும்.

* துளசி இலைகளைப் புட்டு போல் அவித்துக் கசக்கி பிழிந்துச் சாற்றை தினமும் ஒரு ஸ்பூன் அளவு குடித்து வர தாய்ப்பால்  அதிகரிக்கும். இதயமும் பலமடையும்.

* உணவில் பூண்டு, உளுந்து, பெருங்காயம், வெந்தயம், செவ்வாழைப் பழம், உருளைக் கிழங்கு  பயன்படுத்தப் பால் பெருகும்.

*  வெட்டிவேர் சர்பத் அருந்த தாய்ப்பால் பெருகும்.

கர்பிணிகளுக்கு அவசியமாகும் பல் ஆரோக்கியம்!

 

கர்ப்ப கால ஆரோக்கியம் என்பது ஒரு தாயின் ஆரோக்கியத்தை மட்டும் அல்லாமல், அவள் வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியத்தையும் சார்ந்த விஷயமாக இருப்பதால் அதற்கு அதீத கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

முதலில், கர்ப்பமுற்றிருப்பதாக ஒரு பெண்ணுக்குத் தெரிய வந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று உரிய பரிசோதனை செய்து அதனை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மருத்துவர் பரிந்துரைக்கும் சோதனைகளை செய்து கொள்வதும், அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்வதும் அவசியம்.

இது இல்லாமல், ஒரு சில விஷயங்களை கர்பிணிகள் கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும்.

அதாவது, சில மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு முதலில் பல் சோதனை செய்து, ஏதேனும் பிரச்னை இருந்தால், உடனடியாக சிகிச்சை அளிப்பது வழக்கம்.

கர்ப்பிணிகளுக்கும், பல் பிரச்னைக்கும் என்ன சம்பந்தம் என்று பலரும் குழம்புவார்கள். ஆனால் உண்மையில் நிறைய சம்பந்தம் உண்டு. கர்ப்ப காலத்தின் போது ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக சிலருக்கு பற்களில் பிரச்னைகள் தோன்ற வாய்ப்பு உள்ளது.

மேலும், ஏற்கனவே பல் சொத்தை இருந்தால் அதனால் வளரும் சிசுவுக்கும் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. பல் சொத்தையில் இருந்து கிருமிகள் எச்சில் வழியாக உணவில் கலந்து அதனால் வயிற்றில் வளரும் சிசுவை பாதிக்கலாம்.

எனவே தான் கர்ப்பிணிகளுக்கு பல் சோதனையும், சிகிச்சையும் அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

கர்ப்பிணிக்கு பற்களில் ஏதேனும் பிரச்னை இருந்தால் உடனடியாக அவர் பல் மருத்துவரிடம் சென்று, கர்ப்பமுற்றிருப்பதை முதலில் தெரிவித்துவிட்டு, பல்லுக்கு சிகிச்சை பெறுவது அவசியம்.

இதில்லாமல், ஹார்மோன் மாற்றங்களால் சிலருக்கு ஈறு அழற்சி கர்ப்ப காலத்தில் தோன்றுவதும் உண்டு. இது பொதுவாக கர்ப்ப காலத்தின் 2 அல்லது 3வது மாதத்தில் தொடங்கி, 8வது  மாதத்தில் தீவிரமாகி, 9வது மாதம் குறைய ஆரம்பிக்கும். ஈறுகளில் அழற்சி, வீக்கம், ரத்தம் வடிதல் போன்றவை இதன் அறிகுறிகள். சிலருக்கு வீங்கிய ஈறு திசுக்களில் கட்டிகளைப் போன்றும் உருவாகும். ஆனால், அவற்றில் வலியிருக்காது. எனினும், பிரசவத்துக்குப் பிறகு இதன் பாதிப்பு குறையும். சிகிச்சை எடுத்துக் கொண்டால் பூரண குணம் அடையலாம்.

பற்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்திருப்பின், ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகும் கர்ப்பிணிகள் பல் தேய்க்க வேண்டும்.

மேலும், கால்சியம் அதிகம் நிறைந்த உணவு பொருட்களான பால், தயிர் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

மசக்கை காரணமாக அடிக்கடி வாந்தி எடுக்கும் கர்ப்பிணிகள், ஒவ்வொரு முறையும் வாந்தி எடுத்த பிறகு பற்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

முகம் கழுவுதலில் செய்யும் தவறுகள்!

 

பெண்களுக்கு அழகு என்றாலே அதில் பிரதானம் முக அழகுதான். எனவே, முகத்தை பராமரிக்க பல விதங்களில் முயற்சிப்பர். ஆனால், சில சின்ன சின்ன கவனக்குறைவுகளால் முக அழகு குறையலாம்.

தவறான சோப்புகளைப் பயன்படுத்துதல்..

பொதுவாக பெண்கள் அவர்களது சருமத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டும். எண்ணெய் சருமம், வறண்ட சருமம் என தெரிந்து அதற்கேற்ற சோப்பு அல்லது முகம் கழுவும் க்ரீம்களை பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாமல், வறண்ட சருமம் கொண்டவர்கள், எண்ணெய் பசை சருமத்துக்கு ஏற்ற சோப்புகளைப் பயன்படுத்தினால், சருமம் மேலும் வறண்டு போய்விடும். அதிலும், அதிக ரசாயனம் கலந்த சோப்புகளைப் பயன்படுத்தக் கூடாது.

அடிக்கடி முகம் கழுவக் கூடாது

பொதுவாகவே ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை முகம் கழுவலாம். அதற்கு மேலும் முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதாக நினைத்து முகம் கழுவினால், அது சருமத்தை பாதிக்கும். எனவே, வீட்டில் இருக்கும் போது அல்லது அலுவலகத்துக்கு செல்லும் போதும், அலுவலகத்தை அடைந்த பிறகு, இடைவேளையில் என அடிக்கடி முகம் கருவினால் சருமம் வறண்டு போகும்.

சருமத்துக்கும் ஓய்வு கொடுங்கள்

எப்போதும் முகத்துக்கு மேக்கப் போட்டு வைத்திருந்தாலும், இரவில் படுக்கச் செல்வதற்கு முன்பு, ஈரப் பஞ்சினால் முகத்தில் உள்ள அனைத்து மேக்கப் பூச்சுக்களையும் சுத்தமாக துடைத்து எடுத்துவிடுங்கள். இதனால், சருமத்துக்கு சிறிது ஓய்வு கிடைக்கும்.

வெதுவெதுப்பான தண்ணீர்

முகத்தை கழுவும் போது குளிர்ந்த நீரை விட, வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்துங்கள். இதனால், உங்கள் முகத்தில் உள்ள நுண்ணிய துவாரங்கள் திறந்துகொள்ளும். இதனால், அதில் அடைந்துள்ள அழுக்கு மற்றும் மேக்கப் சாதனங்களின் துகள்கள், முகத்தை கழுவும் போது வெளியேறிவிடும். அதே சமயம் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால், நுண்ணிய துளைகள் மூடிக் கொள்ளும். எனவே, முகத்தில் அழுக்கை அகற்றும் வகையில் கழுவ வேண்டும் என்றால் வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தலாம்.

காய்கறி தோல்

வீட்டில் பயன்படுத்தும் சில காய்கறிகளின் தோல், தக்காளி, கோதுமை மாவு, அரிசி போன்றவற்றை முகத்தில் போட்டு தேய்த்து முகத்தை கழுவுவதன் மூலம், சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றலாம். சோப்பு போட்டு கழுவுவதை விட, இந்த முறை நல்ல பலனை தரும்.

உப்பு  தன்மை அல்லது கடின நீரைக் கொண்டு முகம் கழுவ வேண்டாம். இது முக சருமத்தின் தன்மையையே மாற்றிவிடும். அதுபோலவே, மிகவும் கடினமான துணிகளை வைத்து முகத்தை துடைக்கக் கூடாது. மிருதுவான துணிகளைக் கொண்டு முகத்தை ஒற்றி எடுப்பதே நலம்.

அதேப்போல, ஒருவர் பயன்படுத்திய டவலை மற்றொருவர் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். அதனால் பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. சுத்தமாக நன்கு துவைத்து காயவைத்த டவல்களைப் பயன்படுத்துங்கள்.

புதிதாக எந்த க்ரீமையோ அல்லது சோப்பையோ பயன்படுத்தும் போது அதில் உள்ள முக்கியக் குறிப்புகளை படித்துப் பாருங்கள்.

மாய்சுரைஸர்கள் பயன்படுத்துவது நல்லது. மாஸ்சுரைஸர்களைப் பயன்படுத்தும் போது அவை நன்கு சருமத்தில் பரவி காயும் வரை காத்திருந்து பிறகு மேக்கப் சாதனங்களை பயன்படுத்துங்கள்.

முகத்துக்கு பயன்படுத்தும் அனைத்துப் பொருட்களும் இயற்கையான இயற்கைப் பொருட்களால் ஆனவையாக இருப்பதாக பார்த்து வாங்குங்கள்.

முகத்தை சுத்தப்படுத்த வென்று பிரத்யேகமாக உள்ள இயற்கை எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துங்கள். இது சருமத்தில் உள்ள நுண்ணிய துகள்களில் உள்ள அழுக்குகளை அகற்ற உதவும்.

எப்போதும் நிலைக்கும் வேலைகள் எவை!

இருபதாம் நூற்றாண்டு முடிந்து அடுத்த நூற்றாண்டில் நுழைந்த பின்னர் தகவல் தொழில் நுட்ப துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் உலகையே தலைகீழாக புரட்டி போட்டுள்ளன. ஏற்கனவே வெற்றிகரமாக செயல்பட்டு வந்த பல்வேறு துறைகள் அறிவியல் தொழில் நுட்ப மற்றும் சமூக காரணங்களுக்காக இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டன.

உதாரணமாக வீடியோ காசட் தொழிலை சொல்லலாம். ஆக இந்த மாற்றங்களின் வீச்சு அதிகரிக்கும் போது பல்வேறு வேலை இழப்பு இருந்தாலும், புதிய புதிய துறைகளின் தோற்றமும், ஏற்கனவே இருக்கும் குறிப்பிட்ட தொழில்களில் அசுர வளர்ச்சியும் இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவைப் பொறுத்த வரை ஒரு ஊழியர் ஒரே நிறுவனத்தில் பணி புரியும் காலம் சராசரியாக 5 ஆண்டுகளாக உள்ளது.

இது இனியும் குறைவதற்கான வாய்ப்புகள்தான் உள்ளன. தொழிலின் தன்மையே மாறும் நிலையில் இதன் தாக்கம் அதிகரிக்கும் என்ற போதும் ஒரே துறையில் பணியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மாற்றங்கள் எவ்வளவு வந்தாலும், சந்தைப் பொருளாதார சிக்கல்களை தாண்டி சில வேலை வாய்ப்புகளுக்கு என்றென்றும் கிராக்கி இருக்கும் என்று இத்துறை சார்ந்த வல்லுனர்கள் கருதுகிறார்கள். அப்படிப்பட்ட சில வேலைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

 பினான்சியல் பிளானர்:

நம்மில் பலராலும் நமது நிதி தொடர்பான பணிகளை முழுமையாக நாமே செய்து கொள்வதில் சிரமங்கள் உள்ளன. எவ்வளவு வருவாய் உள்ளது, எவ்வளவு சொத்துக்கள் மற்றும் கடன் உள்ளது, எவ்வளவை சேமிக்க வேண்டும், எவ்வளவை வரியாக செலுத்த வேண்டும், எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பது போன்ற நமது வாழ்க்கைக்கு அத்தியாவசியமாய் இருக்கும் நிதி குறித்த முடிவுகளை உரிய திட்டமிடலுடனும், தெளிவுடனும், சரியாகவும் செய்பவரே பினான்சியல் பிளானர் எனப்படும் நிதித் திட்டமிடுபவர் ஆவார். இது காலத்தால் அழிக்க முடியாத ஒரு வேலை என்று கூறப்படுகிறது.


எழுத்தாளர்:

எழுத்தாளர் என்பது கேட்பதற்கு எளிதாக இருப்பது போல் வாழ்வதற்கு அவ்வளவு எளிதானதல்ல. எழுதுவதற்கான விருப்பம் மட்டும் இருப்பதே ஒரு வெற்றிகரமான எழுத்தாளரை உருவாக்குவதில்லை. முழுமையான அர்ப்பணிப்பு, விருப்பு மற்றும் வேட்கை, மறுதலிப்புகளை பக்குவமாக ஏற்கும் தன்மை, விமர்சனங்களைத் தாங்குதல் போன்ற பல்வேறு குணங்களின் தொகுப்பாக இந்த பணி இருக்கிறது. எவ்வளவுதான் இடர்பாடுகள் வந்தாலும் அவற்றை ஏற்று எதிர் நடை போடும் எழுத்தாளர்களே சிறந்த வெற்றியாளர்களாக இருக்கிறார்கள். டெக்னிகல் ரைட்டர், கண்டெண்ட் ரைட்டர், ஆதர், கோஸ்ட் ரைட்டர் போன்ற பல்வேறு எழுத்தாளர் பணிகள் காலத்துக்கு ஏற்றபடி மாறினாலும் எழுத்தாளர்களுக்கான கிராக்கி எப்போதுமே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

கம்ப்யூட்டர் புரொகிராமர்:

பொருளாதார மந்த நிலை, பொருளாதார வளர்ச்சி நிலை என்ற இரண்டு நிலைகளிலும் பெரிதும் தேடப்படும் பணிகளில் ஒன்றாக கம்ப்யூட்டர் புரொகிராமர் பதவி இருந்து வந்துள்ளது. நிறுவனங்கள் மற்றும் வணிக அரங்கின் செயல்பாடுகளில் கம்ப்யூட்டர் உள்ளவரை பொருளாதார நிலை எப்படி இருந்தாலும் கம்ப்யூட்டர் புரொகிராமர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கத்தான் செய்யும் என்பது இத்துறை சார்ந்த வல்லுனர்கள் கருத்தாகும்.

ஆசிரியர்:

மனிதர்களுக்குத் தெரியாத விஷயங்கள் இருக்கும் வரை அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. எனவே தெளிவுபடுத்தும் பணியான ஆசிரியர் வேலைக்கு உலகம் உள்ளவரை நிச்சயமான தேவைகள் இருக்கும் என்பதே வல்லுனர்கள் கருத்தாகும். இந்தப் பணியும் பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கங்களின் தாக்குதல்களிலிருந்து விடுபட்டு நிரந்தர தேவைக்குரியதாக உள்ளது.

கெமிக்கல் இன்ஜினியர்:

கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்கள் அந்த துறை மட்டுமன்றி மருத்துவம், எரிதி, தொழில் நுட்பம், காஸ்மெடிக்ஸ், பானங்கள் மற்றும் உணவுப் பதார்த்தங்கள் போன்ற மாறுபட்ட துறைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இத்துறை அதிகம் விரும்பப்படாத துறையாக தற்சமயம் தெரிந்தாலும் சிறந்த ஊதிய விகிதங்கள், ஸ்திரத்தன்மை, வேலைவாய்ப்பு சாத்தியங்கள் ஆகியவற்றால் நிலையான ஒரு பதவியாக மாறும் என்று கணிக்கப்படுகிறது.

சமையற்கலை வல்லுனர்:

நல்ல உணவை உண்பதற்காக பசியோடு காத்திருப்பவர்கள் இருக்கும் வரை சமையற்கலைக்கு அழிவே இல்லை. உலகின் பெரும்பான்மையானோர் உண்பதில் காட்டும் ஆர்வத்தை அவற்றை சமைப்பதில் காட்டுவதில்லை. உணவை சமைப்பதற்கான பொறுமை மற்றும் விருப்பமும் பெரும்பான்மையானவர்களிடம் இருப்பதில்லை. எனவேதான் சமையற்கலை என்பது எக்காலத்திலும் அழிக்க முடியாத மற்றும் சிறந்த வாய்ப்புகளை உள்ளடக்கிய பணியாக கணிக்கப்படுகிறது.

கணிதவியலாளர்:

பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்த மனிதனுடன் சேர்ந்தே வளர்ந்து வந்ததுதான் கணிதவியல் துறையாகும். கணிதத்தின் வளர்ச்சியே மனித சமூகத்தின் வளர்ச்சியாக மாறியது என்பதும் வரலாறு காட்டும் உண்மையாகும். வெறும் கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்குதல் என்பனவற்றைத் தாண்டிய விரிவான கணித வளர்ச்சிக்கு காலத்தால் அழிவில்லை.

மருந்தியலாளர்:

உடல் நிலை குறித்த ஆராய்ச்சி தேவைப்படும் போது எல்லாம் ஓய்வுடன் சில முக்கிய மருந்துகளும் மனிதனுக்கு தேவைப்படுகின்றன. ஊட்டச் சத்து, விட்டமின்கள், ஆன்டிபயாடிக், வலி மருந்து போன்ற பல்வேறு வகையிலான மருந்துப் பொருட்களை நோயுறும் காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மருத்துவம் இருக்கும் வரை மருந்து பொருட்களும் இருக்கும் என்பதில் சந்தேகத்துக்கே இடமில்லை. அதே போல் மனிதன் இருக்கும் வரை நோயுறுவதும் நிச்சயம் என்பதால் காலத்தால் அழியாத மற்றுமொரு துறையாக இந்தத் துறை கணிக்கப்படுகிறது. 

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top