.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 10 November 2013

எப்போதும் நிலைக்கும் வேலைகள் எவை!

இருபதாம் நூற்றாண்டு முடிந்து அடுத்த நூற்றாண்டில் நுழைந்த பின்னர் தகவல் தொழில் நுட்ப துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் உலகையே தலைகீழாக புரட்டி போட்டுள்ளன. ஏற்கனவே வெற்றிகரமாக செயல்பட்டு வந்த பல்வேறு துறைகள் அறிவியல் தொழில் நுட்ப மற்றும் சமூக காரணங்களுக்காக இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டன.

உதாரணமாக வீடியோ காசட் தொழிலை சொல்லலாம். ஆக இந்த மாற்றங்களின் வீச்சு அதிகரிக்கும் போது பல்வேறு வேலை இழப்பு இருந்தாலும், புதிய புதிய துறைகளின் தோற்றமும், ஏற்கனவே இருக்கும் குறிப்பிட்ட தொழில்களில் அசுர வளர்ச்சியும் இருக்கத்தான் செய்கிறது. இந்தியாவைப் பொறுத்த வரை ஒரு ஊழியர் ஒரே நிறுவனத்தில் பணி புரியும் காலம் சராசரியாக 5 ஆண்டுகளாக உள்ளது.

இது இனியும் குறைவதற்கான வாய்ப்புகள்தான் உள்ளன. தொழிலின் தன்மையே மாறும் நிலையில் இதன் தாக்கம் அதிகரிக்கும் என்ற போதும் ஒரே துறையில் பணியில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மாற்றங்கள் எவ்வளவு வந்தாலும், சந்தைப் பொருளாதார சிக்கல்களை தாண்டி சில வேலை வாய்ப்புகளுக்கு என்றென்றும் கிராக்கி இருக்கும் என்று இத்துறை சார்ந்த வல்லுனர்கள் கருதுகிறார்கள். அப்படிப்பட்ட சில வேலைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

 பினான்சியல் பிளானர்:

நம்மில் பலராலும் நமது நிதி தொடர்பான பணிகளை முழுமையாக நாமே செய்து கொள்வதில் சிரமங்கள் உள்ளன. எவ்வளவு வருவாய் உள்ளது, எவ்வளவு சொத்துக்கள் மற்றும் கடன் உள்ளது, எவ்வளவை சேமிக்க வேண்டும், எவ்வளவை வரியாக செலுத்த வேண்டும், எவ்வளவு இன்ஸ்யூரன்ஸ் எடுக்க வேண்டும் என்பது போன்ற நமது வாழ்க்கைக்கு அத்தியாவசியமாய் இருக்கும் நிதி குறித்த முடிவுகளை உரிய திட்டமிடலுடனும், தெளிவுடனும், சரியாகவும் செய்பவரே பினான்சியல் பிளானர் எனப்படும் நிதித் திட்டமிடுபவர் ஆவார். இது காலத்தால் அழிக்க முடியாத ஒரு வேலை என்று கூறப்படுகிறது.


எழுத்தாளர்:

எழுத்தாளர் என்பது கேட்பதற்கு எளிதாக இருப்பது போல் வாழ்வதற்கு அவ்வளவு எளிதானதல்ல. எழுதுவதற்கான விருப்பம் மட்டும் இருப்பதே ஒரு வெற்றிகரமான எழுத்தாளரை உருவாக்குவதில்லை. முழுமையான அர்ப்பணிப்பு, விருப்பு மற்றும் வேட்கை, மறுதலிப்புகளை பக்குவமாக ஏற்கும் தன்மை, விமர்சனங்களைத் தாங்குதல் போன்ற பல்வேறு குணங்களின் தொகுப்பாக இந்த பணி இருக்கிறது. எவ்வளவுதான் இடர்பாடுகள் வந்தாலும் அவற்றை ஏற்று எதிர் நடை போடும் எழுத்தாளர்களே சிறந்த வெற்றியாளர்களாக இருக்கிறார்கள். டெக்னிகல் ரைட்டர், கண்டெண்ட் ரைட்டர், ஆதர், கோஸ்ட் ரைட்டர் போன்ற பல்வேறு எழுத்தாளர் பணிகள் காலத்துக்கு ஏற்றபடி மாறினாலும் எழுத்தாளர்களுக்கான கிராக்கி எப்போதுமே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

கம்ப்யூட்டர் புரொகிராமர்:

பொருளாதார மந்த நிலை, பொருளாதார வளர்ச்சி நிலை என்ற இரண்டு நிலைகளிலும் பெரிதும் தேடப்படும் பணிகளில் ஒன்றாக கம்ப்யூட்டர் புரொகிராமர் பதவி இருந்து வந்துள்ளது. நிறுவனங்கள் மற்றும் வணிக அரங்கின் செயல்பாடுகளில் கம்ப்யூட்டர் உள்ளவரை பொருளாதார நிலை எப்படி இருந்தாலும் கம்ப்யூட்டர் புரொகிராமர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கத்தான் செய்யும் என்பது இத்துறை சார்ந்த வல்லுனர்கள் கருத்தாகும்.

ஆசிரியர்:

மனிதர்களுக்குத் தெரியாத விஷயங்கள் இருக்கும் வரை அவற்றைத் தெளிவுபடுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. எனவே தெளிவுபடுத்தும் பணியான ஆசிரியர் வேலைக்கு உலகம் உள்ளவரை நிச்சயமான தேவைகள் இருக்கும் என்பதே வல்லுனர்கள் கருத்தாகும். இந்தப் பணியும் பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கங்களின் தாக்குதல்களிலிருந்து விடுபட்டு நிரந்தர தேவைக்குரியதாக உள்ளது.

கெமிக்கல் இன்ஜினியர்:

கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்கள் அந்த துறை மட்டுமன்றி மருத்துவம், எரிதி, தொழில் நுட்பம், காஸ்மெடிக்ஸ், பானங்கள் மற்றும் உணவுப் பதார்த்தங்கள் போன்ற மாறுபட்ட துறைகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இத்துறை அதிகம் விரும்பப்படாத துறையாக தற்சமயம் தெரிந்தாலும் சிறந்த ஊதிய விகிதங்கள், ஸ்திரத்தன்மை, வேலைவாய்ப்பு சாத்தியங்கள் ஆகியவற்றால் நிலையான ஒரு பதவியாக மாறும் என்று கணிக்கப்படுகிறது.

சமையற்கலை வல்லுனர்:

நல்ல உணவை உண்பதற்காக பசியோடு காத்திருப்பவர்கள் இருக்கும் வரை சமையற்கலைக்கு அழிவே இல்லை. உலகின் பெரும்பான்மையானோர் உண்பதில் காட்டும் ஆர்வத்தை அவற்றை சமைப்பதில் காட்டுவதில்லை. உணவை சமைப்பதற்கான பொறுமை மற்றும் விருப்பமும் பெரும்பான்மையானவர்களிடம் இருப்பதில்லை. எனவேதான் சமையற்கலை என்பது எக்காலத்திலும் அழிக்க முடியாத மற்றும் சிறந்த வாய்ப்புகளை உள்ளடக்கிய பணியாக கணிக்கப்படுகிறது.

கணிதவியலாளர்:

பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்த மனிதனுடன் சேர்ந்தே வளர்ந்து வந்ததுதான் கணிதவியல் துறையாகும். கணிதத்தின் வளர்ச்சியே மனித சமூகத்தின் வளர்ச்சியாக மாறியது என்பதும் வரலாறு காட்டும் உண்மையாகும். வெறும் கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்குதல் என்பனவற்றைத் தாண்டிய விரிவான கணித வளர்ச்சிக்கு காலத்தால் அழிவில்லை.

மருந்தியலாளர்:

உடல் நிலை குறித்த ஆராய்ச்சி தேவைப்படும் போது எல்லாம் ஓய்வுடன் சில முக்கிய மருந்துகளும் மனிதனுக்கு தேவைப்படுகின்றன. ஊட்டச் சத்து, விட்டமின்கள், ஆன்டிபயாடிக், வலி மருந்து போன்ற பல்வேறு வகையிலான மருந்துப் பொருட்களை நோயுறும் காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மருத்துவம் இருக்கும் வரை மருந்து பொருட்களும் இருக்கும் என்பதில் சந்தேகத்துக்கே இடமில்லை. அதே போல் மனிதன் இருக்கும் வரை நோயுறுவதும் நிச்சயம் என்பதால் காலத்தால் அழியாத மற்றுமொரு துறையாக இந்தத் துறை கணிக்கப்படுகிறது. 

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top