.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 8 November 2013

வடிவேலு - வாழ்க்கை வரலாறு!

தமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர். ‘ப்ரண்ட்ஸ்’, ‘வின்னர்’, ‘சச்சின்’, ‘சந்திரமுகி’, ‘மருதமலை’, ‘கிரி’, ‘தலைநகரம்’, ‘இங்கிலிஷ்காரன்’, ‘காதலன்’, ‘ராஜகுமாரன்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘பாரதி கண்ணம்மா’, ‘பாட்டாளி’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘மாயி’, ‘சுந்தரா ட்ராவல்ஸ்’, ‘கிரி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘கருப்பசாமி குத்தகைகாரர்’, ‘போக்கிரி’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘வெடிகுண்டு முருகேசன்’ போன்ற எண்ணற்றத் திரைப்படங்கள் இவரின் நகைச்சுவை நடிப்பிற்கு சான்றுகளாகும். நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த அற்புதக் கலைஞன். ‘வீச்சருவா வீராசாமி’, ‘சூனா பானா’, ‘வைபரேஷன் வடிவேலு’, ‘செட்டப் செல்லப்பா’, ‘தீப்பொறி திருமுகம்’, ‘நாய் சேகர்’, ‘ஸ்நேக் பாபு’, ‘படித்துறை பாண்டி’, ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’, ‘பாடி சோடா’, ‘கந்துவட்டி கருப்பு’, ‘வண்டு முருகன்’, ‘அலாட் ஆறுமுகம்’, ‘ஸ்டையில் பாண்டி’ போன்ற பல கதாபாத்திரங்களின் மூலம், எத்தனையோ படங்களில் நகைச்சுவை நடிப்பின் உச்சத்தைத் தொட்டவர்.


தமது  நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல், நகைச்சுவைகளைக் கையாளும் அற்புதக் கலைஞன். ஒரு சில படங்களின் பெயர்கள் கூட தெரியாமல் இருக்கும், ஆனால் இவர் நகைச்சுவை மட்டும் நினைவில் இருக்கும் படங்கள் நிறைய உண்டு எனலாம். அடுத்தவர்களை சந்தோசப்படுத்தி, சிரிக்க வைப்பதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவுமில்லை எனக் கூறலாம். அத்தகைய அற்புதமான கலையை தமது உடல் அசைவுகளாலும், முகபாவனைகளாலும், நகைச்சுவை வசனங்களாலும், சிரிப்பு என்னும் மேடையில் அரங்கேற்றி, ஆறு வயது குழந்தைகள் முதல் அறுபது வயது பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்ட வைகைப்புயல் வடிவேலு அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: அக்டோபர் 10, 1960

பிறப்பிடம்: மதுரை, தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: நடிகர் மற்றும் பின்னணிப் பாடகர்

நாட்டுரிமை: இந்தியன்




பிறப்பு 

வைகைப் புயல் வடிவேலு அவர்கள், 1960  ஆம் ஆண்டு அக்டோபர் 10  ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரையில், தந்தையார் நடராச பிள்ளைக்கும், தாயார் வைத்தீஸ்வரிக்கும் மகனாகப் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை


பள்ளியில் படித்த அனுபவம் என்பது இவருக்கு கிடையாது. ஆனால், நண்பர்களுடன் இணைந்து சின்ன சின்ன நாடகங்களை அவ்வப்பொழுது மேடையில் அரங்கேற்றுவது வழக்கம். அத்தகைய நாடகக் கதைகளிலும் சரி, மேடையிலும் சரி இவர்தான் நகைச்சுவை கதாநாயகன். ஒரு காலகட்டத்தில் இவருடைய தந்தை இறந்து விடவே குடும்பம் மிகவும் வறுமைக்குள்ளானது. அந்த தருணத்தில் ராஜ்கிரண் அவர்கள், ஒருமுறை அவருடைய ஊருக்கு சென்ற பொழுது எதிர்பாராத விதமாக அவருடைய அறிமுகம் கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் சென்னைக்கு வந்து சேர்ந்த வைகைப் புயல் அவர்கள், ராஜ்கிரணின் அலுவலகம் மற்றும் வீடு என அவருக்கு தேவையான எல்லா வேலைகளையும் பார்த்து வந்தார்.

தமிழ் சினிமாவில் வைகைப் புயலின் ஆரம்பம்
1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில், ராஜ்கிரண் தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு பெற்ற இவர், ஒரு பாடலையும் பாடியிருப்பார். ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் மூலம் திரையில் தோன்றிய இவர், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும், பாடகனாகவும் தன்னுடைய பெயரைத் தமிழ் சினிமாவில் பதிவு செய்தார். அதன் பிறகு, மற்றுமொரு தயாரிப்பாளர் நடராஜன் மூலம், 1992 ஆம் ஆண்டு ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் ‘சின்னகவுண்டர்’ என்ற படத்தில் கதாநாயகன் விஜயகாந்த் அவர்களுக்குக் குடை பிடிக்கிற பண்ணையாள் கதாபாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு, ஆர்.வி. உதயகுமார் அவர்களால் பிரபு, கார்த்திக், கமல் என அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்த கதாநாயகர்களின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது.

வெற்றிப் பயணம்

‘சின்னகவுண்டர்’ திரைப்படத்தினை தொடர்ந்து ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘இளவரசன்’, ‘சிங்காரவேலன்’, ‘தேவர் மகன்’, ‘காத்திருக்க நேரமில்லை’, ‘கிழக்கு சீமையிலே’, ‘நிலக்குயில்’, ‘மகாராசன்’ என ஒரே வருடத்தில் பல படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், குறுகிய காலத்திற்குள் அந்த காலகட்டத்தில் அசைக்க முடியாத நகைச்சுவை அரசர்களாக விளங்கிக்கொண்டிருந்த கவுண்டமணி மற்றும் செந்தில் இணையுடன், மூன்றாவது நகைச்சுவை நடிகராக வலம்வந்தார். தொடக்கத்தில் இவர் நடித்த, ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம், காதலன்’, ‘ராசகுமாரன்’, ‘வாட்ச்மேன் ‘பொங்கலோ பொங்கல்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘முத்து’, ‘நந்தவனத் தேரு’, ‘ஆணழகன்’, ‘காதல் தேசம்’, ‘சுந்தரப் புருஷன், ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘கங்கா கௌரி’, ‘பாரதி கண்ணம்மா’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘முதல்வன்’, ‘வண்ணத்தமிழ் பாட்டு’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பாட்டாளி’, போன்ற திரைப்படங்கள் இவர் ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுத்தந்தது.

ஒரு காலகட்டத்திற்குப் பிறகு, பல வெற்றி படங்களில் முக்கிய அங்கமாக விளங்கிய இவர், 2000 ஆம் ஆண்டு சேரனின் இயக்கத்தில் வெளிவந்த ‘வெற்றிக் கொடிக்கட்டு’ திரைப்படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள், தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் கைத்தட்டலைப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து  2001 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் அவருக்கு மேலும் புகழைத் தேடித்தந்தது. தொடர்து தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் சேர்ந்து, பல திரைப்படங்களில் நடித்த அவரின் திரைப்பட வாழ்வில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வின்னர்’ திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அத்திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து நகைச்சுவை காட்சிகளும், சிறியவர் முதல் பெரியவர் வரை என அனைவரையும் ரசிக்கவைத்தது. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற ஒன்றை அமைத்து ‘கைப்புள்ள’ என்ற கதாபாத்திரத்தில் அவர் செய்த நகைச்சுவைகள் உண்மையிலேயே நகைச்சுவையின் உச்சத்திற்கு கொண்டுசென்றது எனலாம். நினைத்துப்பார்த்தாலே சிரிப்பு வரும் அளவிற்கு உடல் அசைவு, உடை, முக பாவனை, வசனங்கள் என அனைத்திலும் முத்திரைப் பதித்திருப்பார்.

கதாநாயகர்களை விட ஒரு நகைச்சுவை நடிகருக்கு முகபாவனையும், உடல் மொழியும் மிக முக்கியமாகும். இவ்விரண்டையும் தமது நகைச்சுவையில் வெகு இயல்பாக வெளிபடுத்தி ரசிகர்களை சிரிப்பு என்னும் மலையில் நனையவைத்தார்.

கதாநாயகனாக

1991 ஆம் ஆண்டு தொடங்கி 2005 வரை பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துவந்த இவர், 2006 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் தயாரிப்பில் சிம்புதேவனின் இயக்கத்தில் வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்தார். இதில் இவர் ஏற்று நடித்த இரண்டு கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வரலாற்று பின்னணியை கதையாக கொண்டு முழு நீள நகைச்சுவை திரைப்படமாக உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுத் தந்தது. அதன் பிறகு, 2008 ஆம் ஆண்டு தம்பி ராமையா இயக்கத்தில் ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து மேலும் சிறப்பு பெற்றார்.

வைகைப் புயல் வடிவேலுவின் நகைச்சுவை பற்றி


கலைகளில் சிறப்பு மிக்கவையாக கருதப்படுவது நகைச்சுவை! ஒருவனை எளிதில் அழவோ, கோபப்படவோ வைத்துவிடலாம். ஆனால் சிரிக்க வைப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. அத்தகைய கடினமான பணியை தன்னுடைய நகைச்சுவை பேச்சிலும், உடல் அசைவிலும், முக பாவனையிலும் வெகு இயல்பாக தனது நகைச்சுவையில் அற்புதமாக வெளிப்படுத்தி, ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மெய்மறக்கச் செய்தவர். மேலும், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கட்டிப்போட்டவர். இவரின் வசனங்களை மக்கள் நிஜ வாழ்வில் பயன்படுத்தி மிக மோசமான தருணங்களைக் கூட நகைச்சுவையாகி கொள்ளும் அளவிற்கு மாபெரும் தாக்கத்தினை மக்களிடையே ஏற்படுத்தியது. குறிப்பாக கதாநாயகர்கள் பஞ்ச் டையலாக் பேசுவார்கள், ஆனால் வடிவேலுவின் நகைச்வையில் உதிர்ந்த அத்தனை வார்த்தைகளும் பஞ்ச டையலாக்கைத் தாண்டி வரவேற்பை பெற்றது எனலாம். மேலும், சொல்லாப்போனால் ஒவ்வொரு குழந்தைக்கும் இவர் பேசிய நகைச்சுவை வசனங்கள் அத்துப்படி. இதை விட ஒரு நடிகனுக்கு வேறு என்ன விருது பெருமை சேர்க்க முடியும்.

அவர் நடித்த சில திரைப்படங்கள்

‘என் ராசாவின் மனசிலே’, ‘சின்னகவுண்டர்’, ‘எல்லாமே என் ராசாதான்’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘அரண்மனை கிளி’, ‘கோகுலம்’, ‘காதலன்’, ‘ராசகுமாரன்’, ‘பவித்ரா’, ‘பொங்கலோ பொங்கல்’, ‘பசும்பொன்’, ‘செல்லக்கண்ணு’, ‘சின்னமணி’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘முத்து’, ‘நந்தவனத் தேரு’, ‘ஆணழகன்’, ‘காதல் தேசம்’, ‘சுந்தரப்புருஷன்’, ‘மிஸ்டர் ரோமியோ’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘கங்கா கௌரி’, ‘அட்ராசக்க அட்ராசக்க’, ‘மாயா’, ‘பாரதி கண்ணம்மா’, ‘ரட்சகன்’, ‘இனியவளே’, ‘ஜாலி’, ‘காதலா காதலா’, ‘நிலவே முகம் காட்டு’, ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘முதல்வன்’, ‘மனைவிக்கு மரியாதை’, ‘வல்லரசு’, ‘வண்ணத்தமிழ் பாட்டு’, ‘கந்தா கடம்பா கதிர்வேலா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’, ‘பாட்டாளி’, ‘மகளிருக்காக’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘பிரண்ட்ஸ்’, ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘எங்களுக்கும் காலம் வரும்’, ‘மாயி’, ‘என் புருஷன் குழந்தை மாதிரி’, ‘லூட்டி’, ‘தவசி’, ‘காமராசு’, ‘அரசு’, ‘சுந்தரா ட்ராவல்ஸ்’, ‘பகவதி’, ‘நைனா’, ‘வசீகரா’, ‘வின்னர்’, ‘ஏய்’, ‘கிரி’, ‘தாஸ்’, ‘குண்டக்க மண்டக்க’, ‘சந்திரமுகி’, ‘சச்சின்’, ‘சாணக்கியா’, ‘இங்கிலிஷ்காரன்’, ‘லண்டன்’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘திமிரு’, ‘கோவை பிரதர்ஸ்’, ‘தலை நகரம்’, ‘ரெண்டு’, ‘ஆர்யா’, ‘கருப்பசாமி குத்தகைகாரர்’, ‘சீனா தானா 001’, ‘மருதமலை’, ‘போக்கிரி’, ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’, ‘குசேலன்’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘வில்லு’, ‘வெடிகுண்டு முருகேசன்’, ‘அழகர் மழை’, ‘ஆதவன்’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘தில்லாலங்கடி’, ‘நகரம்’, ‘காவலன்’, ‘மம்முட்டியன்’, ‘மறுபடியும் ஒரு காதல்’.

அவர் பாடிய சில பாடல்கள்


‘எட்டணா இருந்தா’ (எல்லாமே என் ராசாதான்), ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’ (வெற்றி கொடுக் கட்டு), ‘ஊனம் ஊனம்’ (பொற்காலம்), ‘போடா போடா புண்ணாக்கு’ (என் ராசாவின் மனசிலே), ‘வாடி பொட்ட புள்ள வெளியே’ (காலம் மாறிபோச்சு), ‘ஆடிவா பாடி வா’ (இம்சை அரசன் 23ஆம் புலிகேசி), ‘கட்டுனா அவளை கட்டுனும்டா’ (ஜெயசூர்யா), ‘விக்கலு விக்கலு’ (பகவதி), ‘ஏக் தோ தீனுடா’ (கூடி வாழ்ந்தால் கோடி நன்மை), ‘மதுரக்கார விவேக்கு’ (லூட்டி), ‘நாலு அடி ஆறு’ (என் புருஷன் குழந்தை மாதிரி).

விருதுகள்:


•‘காலம் மாறிப்போச்சு’, ‘வெற்றிக்கொடிகட்டு’, ‘தவசி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘காத்தவராயன்’ போன்ற திரைப்படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு அரசு மாநில விருது’ வழங்கப்பட்டது.
•‘சந்திரமுகி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ போன்ற திரைப்படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்பேர்’ விருது.
•‘மருதமலை’, ‘ஆதவன்’ போன்ற திரைப்படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘விஜய் விருது’.

அரசியல்

சுமார் இருபது ஆண்டுகளாக சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், 2011 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-விற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஆனால் தேர்தலில் தி.மு.க கட்சி தோல்வியை தழுவியதால், மாபெரும் சிக்கலுக்குள்ளான வடிவேலு அவர்கள், தேர்தல் முடிவுக்கு பிறகு, சுமார் 20 மாதங்களுக்கும் மேல் சினிமாக்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார்.

மீண்டும் சினிமாவில்

அவர் திரையுலகை விட்டு நீங்கி இருந்த இரண்டு ஆண்டு காலம், தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கும் மாபெரும் இழப்பை ஏற்படுத்தியது எனலாம். குறிப்பாக, தமிழ் சினிமா ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது திரையில் தோன்றுவார் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ‘ஜகஜால புஜபல தெனாலிராமன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். வைகைப்புயல் வடிவேலு அவர்கள், மீண்டும் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் நகைச்சுவை வசனங்கள்

‘ஐயா! நா ஒரு காமெடி பீசுங்க’, ‘இப்பவே கண்ண கட்டுதே’, ‘ஏன்டா! இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு’, ‘என்ன! சின்ன புள்ளத் தனமா இருக்கு’, ‘வேணாம்..வேணாம்! வலிக்குது… அழுதுடுவேன்’, ‘இது தெரியாம போச்சே’, ‘மாப்பு வெச்சிட்டாங்கையா ஆப்பு’, ‘ஏன்! நல்லாத்தானே போயிட்டிருக்கு’, ‘போவோம்! என்ன பண்ணிடுவாங்க’, ‘முடியல’, ‘என்னைய வெச்சி காமடி கீமடி பண்ணலையே?’, ‘நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்!!’, ‘ஆஹா ஒரு குருப்பா தான்யா அலையறாங்க’, ‘க க க போ…’, ‘ஆணியே புடுங்க வேண்டாம்’, ‘பட் எனக்கு அந்த டீலிங் புடிச்சிருக்கு’, ‘என்னா வில்லத்தனம்’, ‘பில்டிங் ஸ்ட்ராங்கா பேஷ்மட்டம் வீக்கு’, ‘எதையுமே பிளான் பண்ணாம பண்ணக்கூடாது’, ‘ஓபனிங் நல்லாதான் இருக்கு ஆனா பினிஷிங் சரியில்லையே’, ‘ரிஸ்க் எடுக்கிதெல்லாம்தான் எனக்கு ரஸ்க்கு சாப்பிடற மாதிரி’, ‘ஒரு சிறிய புறாவுக்கு போறா! பெரிய அக்கபோராகவா இருக்கு’, ‘நா ரௌடி நா ரௌடி! நா ஜெயிலுக்குப் போறேன் நா ஜெயிலுக்குப் போறேன்’, ‘சண்டையில கிழியாத சட்ட எங்கிருக்கு’, ‘வட போச்சே’, ‘தம்பி டீ இன்னும் வரல’, ‘உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டாங்களே’, ‘அவ்வ்வ்வ்வ்’, ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா’, ‘ரொம்ப நல்லவன்டா’, ‘இந்த கோட்டை தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வரமாட்டேன்’, ‘பேச்சு பேச்சாதான் இருக்கணும்’, ‘ஆரம்பிச்சிட்டாங்கயா ஆரம்பிச்சிட்டாங்க’, ‘ஒரு ஆணையும் புடுங்க வேணாம்’, ‘ரைட்டு விடு’, ‘எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது’, எனப் பல நகைச்சுவை வசனங்கள் அனைத்து தரப்பு ரசிகர்களிடையை மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம்.

என்.எஸ் கிருஷ்ணன், சந்திரபாபு, சுருளிராஜன், டி.எஸ் பாலையா, வி. கே. ராமசாமி,  நாகேஷ் எனத் தொடங்கி கவுண்டமணி, செந்தில், விவேக், சந்தானம் எனப் பல நகைச்சுவை நடிகர்களைத் தமிழ் திரைப்படக் களம் சந்தித்துள்ளது. ஒவ்வொருவரும், ஒவ்வொரு காலகட்டத்தில் சிறப்பு பெற்ற நகைச்சுவையாளர்கள், ஆனால் சமகாலத்தில் அனைவரையும் கவர்ந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு என்றால் யாராலும் மறுக்க இயலாது.

சுற்றினால் .........கவிதை!


புவி சுற்றினால்
காலத்தின் ஓட்டம்!
-
சூரியன் சுற்றினால்
பகலிரவு மாற்றம்!
-
காற்று சுற்றினால்
சூறாவளித் தோற்றம்!
-
தலை சுற்றினால்
மனிதருக்கு மயக்கம்!
-
பூக்களைச் சுற்றினால்
மணத்தின் ஈர்ப்பு!
-
பேட்டையைச் சுற்றினால்
பயங்கரப் பேர்வழி!
-
நாட்டைசு சுற்றினால்
நாளைய தலைவன்!
-
எண்களைச் சுற்றினால்
பேசலாம் தொலைபேசி!
-
வீணாகச் சுற்றினால்
உயர்வேது நீ யோசி!

சமூக வலைப்பின்னல் தளங்களின் வரலாறு!

பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் இளம் தலைமுறையிடம் பிரபலமாக இருப்பதோடு சமூக ஊடகங்களாக உருவெடுத்துள்ளன. பேஸ்புக் இல்லாமல் நான் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பலரும் இந்த சேவைக்கு அடிமையாகி இருக்கின்றனர். பேஸ்புக் பதிவுகள் இன்று ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை கூட நிரனயிக்கின்றன. செய்தி சார்ந்த விவாதத்தை உருவாக்குகின்றன. பேஸ்புக்கிற்கு நிகராக கூகுலின் ஜிபிளஸ் சேவையும் பிரபலமாகி இருக்கிறது. சமீபத்தில் ஜிபிளஸ் தினசரி நூறு கோடி லாக் இன் எனும் மைல் கல்லை தொட்டிருக்கிறது.

இந்த சமூக வலைப்பின்னல் தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதும் நடந்து வந்தாலும் இவை தகவல் பகிர்வில் புரட்சியை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது. சாமான்யர்களின் கைகளில் ஊடகத்தை இந்த வலைப்பின்னல் தளங்கள் கொண்டு வந்திருக்கின்றன. இவை எதிர்காலத்தில் எந்த வகையான தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்தும் என்று வியப்புடனும் கவலையுடனும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

பேஸ்புக் போன்ற தளங்கள் நவீன வாழ்க்கையில் செலுத்தும் ஆதிக்கம் ஒரு புறம் இருக்கட்டும், இந்த சமூக வலைப்பின்னல் தளங்கள் எப்படி உருவாயின என்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா?

இணையத்தை தொடர்ந்து பின்பற்றி வருபவர்களுக்கு கூட இந்த தளங்கள் திடிரென எங்கிருந்து முளைத்தன என்பது போல நினைக்கத்தோன்றலாம். ஆனால் சமூக வலைப்பின்னல் தளங்கள் திடிரென தோன்றிவிடவில்லை. அவற்றுகென ஒரு வரலாறு இருக்கிறது.

ஆறுகோணங்களில் ஆரம்பம்.

ஆறுமுகம் தெரியும்.ஆறு கோணங்கள் தெரியுமா? இந்த ஆறு கோணங்களில் (SixDegrees.com  )  இருந்து தான் வலைப்பின்னல் யுகம் ஆரம்பமாகிறது . 1997ல் இந்த தளம் அமைகப்பட்டது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த தளம் மூடப்பட்டுவிட்டது என்றாலும் இது துவக்கி வைத்த சமூக வலைப்பின்னல் யுகத்திற்கான அடித்தளமாக இது அமைந்திருக்கிறது.

ஆறு கோண வேறுபாடு என்று மிகவும் பிரபலமான சமூக கோட்பாடு ஒன்று உண்டு. உலகில் உள்ள எவருமே இன்னொருவரிடம் இருந்து ஆறு மட்டங்களில் தான் வேறுபட்டவர் என்னும் கருத்து தான் இதன் அடிப்படை. அதாவது உலகில் உள்ள எந்த மனிதரும் வேறு எந்த மனிதருடனும் ஆறு அடிகளில் தொடர்பு கொண்டு விடலாம்.  எங்கோ அமெரிக்கா அல்லது ஆப்பிரிக்காவில் உள்ள அறிமுகம் இல்லாவதர் கூட உங்களுடன் தொடர்பு கொண்டவராக இருக்கலாம்.  அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அவருக்கும் உங்களுக்குமான ஆறு தொடர்புகளை கண்டுபிடிப்பது தான் என்று இந்த கோட்பாடு சொல்கிறது.

இந்த கருத்து முதலில் குழப்பத்தை தரலாம். ஆனால் இதன் பின்னே இருக்கும் உறவு சங்கிலி தொடர்பு முறையை தெரிந்து கொண்டால் எளிதாக புரிந்து கொள்ளலாம். உங்களுக்கு ஒருவரை தெரிந்திருக்கலாம். அவருக்கு தெரிந்திருக்கும் ஒருவர் உங்களுக்கும் தெரிந்தவர் தானே. அவருக்கு தெரிந்த இன்னொருவரையும் அவர் மூலமாக நீங்கள் அறிமுகம் செய்து கொள்ளலாம் தானே. இப்படி ஒவ்வொரு தொடர்பாக கண்டுபடித்தால் ஆறே அடியில் யாருடன் வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு விடலாம்.

இந்த கோட்பாட்டை வைத்து பலவிட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நாடகம் திரைப்படம் போன்றவையும் எடுக்கப்பட்டன.

 இணைய யுகத்தில் இந்த கோட்பாட்டிற்கு உயிர் கொடுப்பதற்காக 1997ல் சிக்ஸ் டிகிரிஸ் .காம் இணையதளம் அமைக்கப்பட்டது. இந்த தளம் உறுப்பினர்கள் தங்கள் உறவிவர்கள் ,நண்பர்களை எல்லாம் பட்டியலிட வைத்து ஒவ்வொருவரும் ஒருவரிடம் இருந்த எத்தனை கட்டங்களில் வேறுப்பட்டிருக்கின்றனர் என்று பார்க்க வைத்தது.
பிறந்தது பிரண்ட்ஸ்டர்.

சிக்ஸ்டிகிரிஸ் தளம் 2001ல் மூடப்பட்டு விட ,2002 ல் இதே கருத்தாக்கத்தின் அடிப்படையில் பிர்ண்ட்ஸ்டர் தளம் உருவாக்கப்பட்டது. கண்டா நாட்டை சேர்ந்த ஜோனாதன் ஆபிரகாம் எனும் வாலிபர் இந்த தளத்தை அமைத்தார். ஆறு கோணங்கள் கோட்பாட்டை நட்பின் அடிப்படையில் இந்த தளம் முன் வைத்தது. அதாவது உங்கள் நண்பரின் நண்பர் உங்களுக்கும் நண்பர் தானே. இப்படி நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் என்று நட்பு வட்டத்தை விரிவாக்கி கொள்ள இந்த சேவை வழி செய்தது.

நண்பர்கள் மூலம் புதிய நண்பர்களை தேடிக்கொள்ள வழி செய்யும் இந்த கருத்தாக்கம் புதுமையாக இருந்ததால் இணையவாசிகளை கவர்ந்து மிகவும் பிரபலமானது. அப்போதே பத்து லட்சம் உறுப்பினர்களுக்கு மேல் ஈர்த்து பரபர்ப்ப ஏற்படுத்தியது.

வந்தது பேஸ்புக்.

பிரண்ட்ஸ்டர் கருத்தாக்கம் சுவாரஸ்யமானதாக இருந்ததே தவிர அதனால் என்ன பயன் என்று தெரியாமல் இருந்தது. நண்பரகள் மூலம் மேலு புதிய நண்பர்களை பெற்று நட்பு வலையை பெரிதாக்கி கொண்டே செல்வதால் என்ன பயன் என்னும் கேள்விக்கு இந்த தளத்தில் பதில் இல்லை.

இந்த பதிலோடு வந்து சேர்ந்த தளம் தான் பேஸ்புக். முதலில் அமெரிக்க கல்லூரி மாணவர்களுக்கான சேவையாக அறிமுகமான பேஸ்புக், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் மூலமாக ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்தி கொண்டு சகல விதமான கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என வழிகாட்டி வலைப்பின்னல் யுகத்திற்கு வித்திட்டது. 2004 ம் ஆண்டு அமெரிக்காவின் ஹாவர்டு பலகலை மாணவர்களுக்காக என்று உருவாக்கப்பட்ட இந்த சேவையை மார்க் ஜக்கர்பர்க் உருவாக்கினார். பின்னர் மற்ற கல்லூரிகளுக்கும் விரிவாகி அமெரிக்காவுக்கு வெளியேவும் அறிமுகமாயிற்று.

இன்று ஸ்டேடஸ் அப்டேட் மூலம் நண்பர்களின் நடவடிக்கைகளை அறிந்து கொள்வதும், அவர்கள் மூலமாகவே புதியவர்களின் அறிமுகத்தை பெறுவதும் சர்வ சக்ஜமாக இருக்கிறது. நண்பர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்பது மட்டும் அல்லாமல் ,திரைப்பட விமர்சனம், சமூக கண்ணோட்டம் , செய்திகள் விளையாட்டு தகவல்கள் பரிந்துரைகள் என் எல்லா வகையான தகவல்களுக் பேஸ்புக் மூலம் சாத்தியமாகிறது. இளைஞர்கள் மட்டும் அல்லாமல் திரைபப்ட நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் ,எழுத்தாளர்கள் என பலரும் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர்.

மைஸ்பேஸ் முதலில்.

பேஸ்புக்கிற்கு பிறகு மேலும் பல சமூக வலைப்பின்னல் தளங்கள் அறிமுகமாகி உள்ளன. கூகுல் ஜிபிளஸ் சேவையை அறிமுகம் செய்தூள்ளது. ஆனால் பேஸ்புக்கிற்கு முன்னரே மைஸ்பேஸ் வலைப்பின்னல் சேவையாக அறிமுகமாகி பிரபலமானது பலருக்கு தெரியாது. 2003 ம் ஆண்டு துவக்கப்பட்ட மைஸ்பேஸ் அமெரிக்கர்கள் மட்தியில் பிரபலமாக இருந்தது. பிரதானமாக இசை சார்த பகிர்வுக்கு பயன்பட்ட இந்த சேவை இசை கலைஞர்கள் ரசிகர்களை நேரடியாக தொடர்பு கொள்ளவும் வழி செயதது. ஆனால் பேஸ்புக் அலையில் மைஸ்பேஸ் பிந்தங்கிவிட்டது. ஏறக்குறைய இதே காலத்தில் கூகுலின் ஆர்குட் வலைப்பின்னல் சேவையும் பிரபலமாக இருந்தது.

மைஸ்பேசுக்கு முன்பாகவே லின்க்ட் இன் வலைப்பின்னல் சேவை அறிமுகமானது. 2001 ல் அறிமுகமான இந்த சேவை முற்றிலும் தொழில் முறையிலானது. வேலையில் இருப்பவர்கள் அல்லது வேலை தேடுபவர்கள் தங்கள் துறையில் உள்ளவர்களோடு தொழில் முறையில் தொடர்பு கொள்ள இந்த தளம் கைகொடுத்தது. இன்றளவும் தொழில் முறையிலான உறவை வளர்த்து கொள்ள லின்க்ட் இன் சேவையே பிரபலமாக இருக்கிறது.

என்றாலும் இவை எல்லாவற்றின் அடிப்படை ஆறு கோணங்கள் கோபாடு தான். இந்த கோட்பாட்டில் இருந்து உருவான நண்பர்களின் நண்பர்கள் கருத்தாக்கமே இன்றைய சமூக வலைப்பின்னல் யுகத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது.

வாழ்வை மாற்றும் 10 வாக்கியங்கள்

அடுத்து வரும் வாக்கியங்கள் வாசிக்க மட்டுமல்ல. யோசிப்பதற்காகவும் கூட. அவற்றைப் புரிந்து கொண்டால் பார்வை விரியும். பார்வை விரிந்தால் பாதை தெரியும்.


1.பணிவு

பணிவு எப்போதும் தோற்றதில்லை; பயம் ஒருபோதும் வென்றதில்லை


2.கல்வி

தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்; வெற்றியின் போது அதை நினைவில் வைத்துக் கொள்


3.படைப்பு

காற்றால் நிரம்பிய வானத்திலும் கல்லாய் இறுகிய பாறையிலும் எதுவும் விளைவதில்லை


4.படிப்பு

யோசிக்க வைக்காத புத்தகம் உபயோகமில்லாத காகிதம்


5.தேடல்:

பேணி வளர்க்க வேண்டிய உறவுகள் மூன்று

உங்களுக்கும் மனதிற்குமான உறவு;

உங்களுக்கும் உலகிற்குமான உறவு;

உங்களுக்கும் கடவுளுக்குமான உறவு


6..இலக்கு

நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருப்பவர்கள் நிலவை ரசிக்கத் தவறிவிடுகிறார்கள்


7.முயற்சி

பனி பெய்து குடம் நிரம்பாது. கோஷங்கள் மட்டுமே லட்சியங்களை வென்றெடுக்காது


8.சாதனை

மைல் கற்கள் பயணிப்பதில்லை சாதனைகளைக் கடப்பதுவே சாதனை


9. எதிர்காலம்

எதிர்காலத்தை நம்புங்கள்; எறும்புகள் கூட சேமிக்கின்றன


10.நாளை

நாளை என்பது இன்று துவங்குகிறது.

செல்பேசிக்கு வரும் வேண்டாத அழைப்புகளை நிறுத்துவது எப்படி?

நீங்கள் தொலைத்தொடர்பு  (BSNL / AIRTEL / AIRCEL and Etc) வாடிக்கையாளரா? உங்கள் செல்பேசிக்கு வரும் வேண்டாத குறுஞ்செய்திகளையும், அழைப்புகளையும் நிறுத்த வேண்டுமா? அப்படியெனில் இது உங்களுக்கான தகவல்தான்.


எந்த வேண்டாத அழைப்புகளையும் அல்லது குறுஞ்செய்திகளையும் செல்பேசிக்கு வராமல் தடுப்பதற்கு அல்லது நிறுத்துவதற்கு 1909 என்ற இலவசத் தொடர்பு எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தியோ அல்லது அழைப்போ செய்தால் போதும்.


வேண்டாத அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் என்பது என்ன?

நீங்கள் விரும்பாமலே உங்களுக்கு இடம் வாங்க விரும்புகிறீர்களா என்ற ரியல் எஸ்டேட் விளம்பரங்கள், லோன் வேண்டுமா என்ற தனியார் வங்கி விளம்பரங்கள் மற்றும் இன்ன பிற தொந்தரவுகள் தரும் அனைத்து துறை சார்ந்த அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள்.


நிறுத்துவதற்கான வழிமுறைகள்:

உங்களுக்கு வரும் விளம்பரத் தொடர்புகளை நிறுத்துவதற்கு இரண்டு வழிகள் உள்ளன.


1.முற்றிலுமாக நிறுத்துவது: எந்த விளம்பரங்களையும் அழைப்புகளாகவோ, குறுஞ்செய்திகளாகவோ ஏற்க விருப்பமில்லை அல்லது நிறுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் முற்றிலுமாக நிறுத்தும் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.


2.பகுதி மட்டும் நிறுத்துவது: பகுதியாக நிறுத்துவதெனில் கீழ்க்கண்டவற்றில் எவை தேவைப்படுகிறதோ அவற்றின் எண்ணை மட்டுமோ அல்லது ஒன்றை மட்டுமோ அல்லது இரண்டு, மூன்று பிரிவுகளையுமோ கூட தேர்ந்தெடுக்கவும்.


START 1 &  வங்கி / காப்பீடு / நிதி தொடர்பானவை

START 2 &   ரியல் எஸ்டேட் தொடர்பானவை

START 3 &   கல்வி தொடர்பானவை

START 4 &   உடல்நலம் தொடர்பானவை

START  5 &  நுகர்பொருட்கள் / ஆட்டோமொபைல் தொடர்பானவை

START 6 &  தொலைத்தொடர்பு / ஒளிபரப்பு / பொழுதுபோக்கு / ஐ.டி. தொடர்பானவை

START 7 &   சுற்றுலா தொடர்பானவை


எப்படி பதிவு செய்வது?

1909 என்ற எண்ணுக்கு அழைபேசியில் தெரிவிக்கவும் அல்லது குறுஞ்செய்தி அனுப்ப விரும்பினால் முழுமையாக நிறுத்துவதற்கு START 0 என்றும் ஒரு சில வகைகளை மட்டும் நிறுத்துவதற்கு அந்த வரிசை எண்ணைத் தவிர மற்றவற்றைக் குறிப்பிட்டு உதாரணமாக START  2,3 (ரியல் எஸ்டேட், கல்வி) டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.


இப்படி பதிவு செய்ததும் உங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் தனிப்பட்ட எண் (Unique Number ) ஒன்று குறுஞ்செய்தியில் வரும்.


எத்தனை நாட்களில் நிறுத்தப்படும்?

தேசிய வாடிக்கையாளர் விருப்பப் பதிவேட்டில் (‡National Customer Preference Register) பதிந்த ஒரு வாரத்திற்குள் உங்களது வேண்டுகோள் ஏற்கப்பட்டு வேண்டாத விளம்பர அழைப்புகள் நிறுத்தப்படும்.


ஏற்கெனவே (‡National Do Not Call Registry) NDN ‡இல் பதிவு செய்திருந்தால் மீண்டும் நீங்கள் குறுஞ்செய்தியோ, அழைப்போ செய்தால் அது முழுமையாக நிறுத்தப்படும் பிரிவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு முற்றிலும் நிறுத்தப்பட்டுவிடும் (‡NDNC  தான் தற்போது ‡NCPR  ஆக பெயர் மாற்றப்பட்டுள்ளது).


தொந்தரவுகள் தொடர்ந்தால்...

‡NCPR இல் பதிந்து ஏழு நாட்களுக்குப் பிறகும் ஏதேனும் வேண்டாத விளம்பர அழைப்புகள் வந்தால் அந்த எண்ணைக் குறிப்பிட்டு அதைப் புகாராகப் பதிவு செய்யலாம். மூன்று நாட்களுக்குள் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும். வணிக நோக்கமில்லாத தகவல் ஏதேனும் வந்தால் அந்த நிறுவனத்தின் பெயர், தொலைபேசி எண், அழைப்பு வந்த தேதி, நேரம் (ரயில்வே நேரத்தைக் குறிப்பிட வேண்டும். மதியம் 4 மணி எனில் 16 என்று குறிப்பிடவேண்டும்) மற்றும் பேசிய விஷயத்தின் நோக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் புகாரளிக்கவும். புகாரளிப்பதற்கும் 1909 என்ற எண்ணையே இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம். புகாரைப் பெற்றதற்கான எண்ணையும் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இது சம்பந்தமான புகார்கள் ஏழு நாட்களில் தீர்க்கப்பட்டுவிடும்.


மீண்டும் விருப்பத் தேர்வுகளை மாற்ற இயலுமா?

நீங்கள் முன்னர் தேர்ந்தெடுத்த பிரிவினை மாற்ற வேண்டுமெனில் அதாவது இரண்டாவது பிரிவான கல்வி சம்பந்தப்பட்ட விளம்பரங்களை வேண்டாம் எனப் பதிவு செய்திருந்து மீண்டும் வேண்டும் என விரும்பினால் அதற்கும் வழி இருக்கிறது. முன்னர் பதிவு செய்து மூன்று மாதங்கள் முடிந்த பின்னர் மீண்டும் உங்களது குறுஞ்செய்தியை உறுதி செய்வார்கள். அதை மீண்டும் உறுதி செய்யலாம் அல்லது அதில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்தும் அனுப்பலாம். அதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் மீண்டும் புதிதாக பதிவு செய்ய அறிவுறுத்தப்படும்.


உங்கள் வேண்டுகோளை திரும்பப் பெற விரும்பினால் பதிவு செய்து மூன்று மாதங்களுக்குப் பின் மீண்டும் ஒரு குறுஞ்செய்தி ‡NCPR லிருந்து வரும். அதாவது உங்கள் வேண்டுகோள் 24 மணி நேரத்திற்குப் பின் திரும்பப் பெறப்பட்டுவிடும் என்று வரும். அதை உறுதி செய்யாமல் விட்டால் மீண்டும் வழங்குநர் வாடிக்கையாளர் விருப்பப் பதிவேட்டில் உங்கள் எண் சேர்க்கப்பட்டுவிடும் அல்லது STOP  என்று டைப் செய்து ஓர் இடைவெளி விட்டு தேவைப்படுகிற வரிசை எண்ணைக் கொடுத்தால் அதுகுறித்த அழைப்புகள் வரத் துவங்கும்.


கட்டணம்:

இந்த சேவையைப் பெறுவதற்கு எந்தவிதக் கட்டணமும் கிடையாது.


மற்ற சேவைகள் பாதிக்கப்படுமா?

உதாரணமாக ஏடிஎம்மிலிருந்து பணம் எடுத்ததும் தானியங்கி இயந்திரம் மூலம் செல்பேசிக்கு வரும் குறுஞ்செய்திகள் இதன் மூலம் தடுக்கப்படாது. அதேபோல ஆன்லைனில் பொருள் வாங்கும்போதோ, ஏதேனும் தளத்தில் பதிந்து கடவுச்சொல் சரிபார்த்தலுக்கோ, பேருந்து, ரயில் முன்பதிவுக்கான குறுந்தகவலோ வருவது இதன் மூலம் பாதிக்கப்படாது.


எப்படி இது சாத்தியம்?

எல்லா விளம்பரத் தொடர்புகளும் டிராயில் பதிவு செய்யப்பட்டிருக்கும். டிராயிடம் அனுமதி பெறாமல் விளம்பரங்கள் அழைப்பாகவோ, குறுஞ்செய்தியாகவோ வராது. இப்படி விளம்பரதாரர்கள் பதிவு செய்யும்போது டிராய்க்கு பணம் செலுத்தவேண்டும். அதனால் நீங்கள் வேண்டாம் என்றால் அதை நிறுத்தவும், வேண்டும் என்றால் தொடரவும் டிராய்க்கு சாத்தியமாகிறது.


எந்தெந்த விளம்பர நிறுவனங்கள் டிராயிடம் பதிவு செய்திருக்கின்றன என்பதை

http://www.nccptrai.gov.in/nccpregistrylistoftmstateanddistrict.misc?method=loadStates  என்ற தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.


மேலும் தகவலுக்கு:

பதிவு செய்வதற்கு, அழைப்புகளைத் தடுப்பதற்கு, விருப்பத்தைத் திரும்பப் பெறுவதற்கு, புகாரைப் பதிவு செய்வதற்கு அனைத்துக்கும் 1909 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும். பதிவு செய்யப்பட்ட குரலின் வழிகாட்டுதலின்படியோ  Interactive Voice Response System  (IVRS) அல்லது குறுஞ்செய்தியோ அனுப்பலாம்.


எப்படி புகாரைப் பதிவு செய்வது என்பதை கீழ்க்கண்ட தளத்திற்குச் சென்று தெரிந்துகொள்ளவும்.

http://www.nccptrai.gov.in/nccpregistry/How%20to%Register%20complaint.pdf?reqtrack=UcGCjkQNUmAwhxyUdaWZlieLC

மேலும் தகவலுக்கு http://www.nccptrai.gov.in/nccpregistry/  என்ற தளத்தைப் பார்க்கவும் அல்லது helplene@nccptrai.gov.in  என்ற மின்னஞ்சலிலோ 011-24305726, 011-23212032 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு  கொள்ளவும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top