.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 10 October 2013

வியாழனை விட எட்டு மடங்கு பெரிதான கோள் கண்டுபிடிப்பு!


பால்வெளியில் வியாழனை விடவும் மிகப் பெரிய கோள் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
பால்வெளி அண்டத்தில் நடைபெறும் மாற்றங்கள் குறித்தும், கோள்கள் உருவான விதம் குறித்தும் விண்வெளி ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.


அத்துடன் வானவெளியில் நடைபெறும் மாற்றங்கள் குறித்து இவர்கள் தகவல் தெரிவிப்பது வழக்கம்.


வால் நட்சத்திரங்களின் தோற்றம், அவற்றின் பயணம் போன்ற பல தகவல்களை ஆய்வாளர்கள் தந்துள்ளனர்.


வானவெளியில் கோள்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது, முதன் முதலாக கடந்த 2011ம் ஆண்டு புளூட்டோவுக்கு அப்பால் ஒரு கோள் இருப்பது தெரிந்தது.


தொடர்ந்து இதைப்பற்றிய ஆய்வில் ஈடுபட்டபோது, ஜப்பான், நியூசிலாந்து, போலந்து மற்றும் இஸ்ரேல் போன்ற பல நாடுகளிலிருந்தும் இந்த கோள் தென்பட்டது.


இதையடுத்து புதிய கோள் இருப்பதை உறுதி செய்ய ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டனர்.


இதன் பயனாக பூமியிலிருந்து 25 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் வியாழன் கோளைவிட எட்டு மடங்கு பெரிய கோள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.


ஆய்வாளர்கள் இதுகுறித்து கூறுகையில், வான்வெளியில் புதிய கோள் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.


இக்கோளானது “எம்.ஓ.- ஏ.2011 - பி.எல்.ஜி. – 322” என பெயரிடப்பட்டு உள்ளது. இதன் சுற்று வட்டப்பாதை குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.


டெக்ஸ்டாப் கணனிகளுக்கான யூடியூப் அப்பிளிக்கேஷன்!





இணைய உலாவிகளைப் பயன்படுத்தாது டெக்ஸ்டாப் கணனிகளில் யூடியூப் வீடியோக்களை பார்வையிடுவதற்கு Minitube எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வரையறையற்ற வீடியோக்களை பார்வையிடும் வசதியைக் கொண்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன் மூலம் புதிய முறையில் வீடியோக்களை பார்வையிடக்கூடியதாகவும் காணப்படுகின்றது. 


அத்துடன் பார்வையிட வேண்டிய வீடியோக்களுக்கான சொற்களை டைப் செய்வதன் மூலம் விரைவாக வீடியோக்களை பெறக்கூடியதாகவும் இருக்கின்றது. 


இதன் உதவியுடன் 1080p வரையான HD வீடியோக்களை பார்வையிட முடியும். 


தரவிறக்கச் சுட்டி





50 விதமான மருத்துவ குணங்கள் நிறைந்த வெங்காயம்!



வெங்காயத்தை ஆங்கிலத்தில் ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.


வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது.


சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.


வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.


பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.


வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்:


1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.


2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.


3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.


4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.


5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.


6. வெங்காயத்தைச் சுட்டு சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.


7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.


8. வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.


9. வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.


10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.


11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.


12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.


13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவ மறைந்துவிடும்.


14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.


15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.


16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.


17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.


18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.


19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.


20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.


21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.


22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.


23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.


24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.


25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.


26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.


27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.


28. ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.


29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.


30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.


31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.


32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு மருத்துவரிடம் செல்லலாம்.


33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.


34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.


35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.


36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.


37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.


38. காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.


39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.


40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.


41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.


42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.


43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.


44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்.


45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.


46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.


47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.


48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.


49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்.


50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

தமிழர்கள் வரலாறு ! - காவிரிப்பூம்பட்டினம்!

                                                        
காவிரிப்பூம்பட்டினம்



தமிழகத்தில் 99 % ஊர்களின் பெயர் காரனப்பெயராகவே அமைந்துள்ளது அதன் படியே சோழநாட்டின் காவிரியாறு கடலிலுடன் கலக்கின்ற புகார்முகத்தில் இருந்த காரணத்தினால் 'புகார்' என்றும், 'பூம்புகார்' என்று அழைக்கப்பட்ட இந்நகர் அக்காலகட்டத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச வணிகத்திற்கும் பெயர்போன் துறைமுகநகர். மேலும் கடற்கரை நகரத்தைப் பட்டினமென அழைப்பது பழந்தமிழ் வழக்கு. காவிரியின் கழிமுகத்தில் உருவான நகரமென்பதால் 'காவிரிப்பூம்பட்டினமென்றும்' அழைக்கப்பட்டது.


சோழர்களின் ஒரு தலைநகரமாகவும், இதையும் சேர்த்து இந்தியாவின் சில பகுதிகள், இலங்கை, பர்மா, மாலத்தீவு, கம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பகுதிகளையும் சோழர்கள் ஆண்டார்கள் என்பதற்கு வரலாற்று சான்றுகள் உள்ளன.



                           


சிலப்பதிகாரத்தின் 'இந்திரவிழவு எடுத்த காதையில்' ஆசிரியர் இளங்கோ புகார் நகர்,     'மருவூர்ப் பாக்கம்',      'பட்டினப்பாக்கம்',      'நாளங்காடி' என மூன்று முக்கிய பகுதிகளாக விளங்கியதையும், அப்பகுதியில் காணப்பட்ட மக்களின் தொழில்கள, வீதிப்பெயர்கள் பற்றியெல்லாம் விரிவாகவே எடுத்துரைப்பார்.

மருவூர்பாக்கம்:

           இது கடலோரம் அமைந்த அழகிய நகர் இங்கு மாட மாளிகைகள் நிறைந்து காணப்பட்டது. இங்கு கடல் வழி வியாபாரிகள், வெளிநாட்டவர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். இந்த ஊரை சுற்றி மீனவர்கள், தறி நெய்பவர்கள், பானை, தானியங்கள், தங்க வைர வியாபாரிகள் பலர் வாழ்ந்துள்ளனர்.

பட்டினப்பாக்கம்:

            இது கடற்கரைக்கு மேற்கே அமைந்த நகரமாகும், இங்கு அரச குடும்பம், உயர் அதிகாரிகள், வியாபாரிகள், நடன, கட்டிட கலைர்கள், மருத்துவர் வாழ்ந்துள்ளனர். 

கி.பி.2ஆம் நூற்றாண்டளவில் வணிகர்கள் உரோமாபுரியிலிருந்தும் (யவனர்கள்), சாவகத்திலிருந்தும் ( இன்றைய இந்தோனேசியா), வட இந்தியாவிலிருந்தும், ஈழத்திலிருந்தும் இங்கு வந்து வணிகம் செய்தார்கள். சோழ வணிகர்கள் இங்கிருந்து சாவகம், காழகம் (இன்றைய பர்மா), ஈழம் போன்ற நாடுகளுக்கு இத்துறைமுகத்திலிருந்து புறப்பட்டு வாணிகம் செய்தார்கள்.




 


வேற்று நாடுகளிலிருந்தெல்லாம் மக்கள் புலபெயர்ந்து வந்து இப்புகார் நகரில் வாழ்ந்ததை சிலம்பின் 'கடல் ஆடும் காதையில்' வரும் 'கலந்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்' என்னும் வரிகள் புலப்படுத்துகின்றன.


இளங்கோவின் 'சிலப்பதிகாரத்திலும்' , மேலும் பல புறநானூற்றுச் செய்யுள்களிலும் புகார் பட்டினம் பற்றிய செய்திகள் கிடக்கின்றன. உதாரணமாக சிலப்பதிகாரத்தின் 'இந்திரவிழவு எடுத்த காதை', 'கடல் ஆடு காதை' போன்ற பகுதிகளில் புகார் பற்றியும், அந்நகர அமைப்பு பற்றியும், அங்கு வாழ்ந்த மக்கள் பற்றியும் தகவல்கள் காணப்படுகின்றன. இத்துறைமுகத்திற்கு வந்து குவிந்த பொருட்கள் பற்றிப் பட்டினப்பாலை பின்வருமாறு கூறும்:



"நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்துங் குணகடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் .... ஈழத் துணவும் காழகத் தாக்கமும் அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்" (பட்டினப்பாலை 185-193).
 
மேற்படி செய்யுள் வரிகளில் பல உண்மைகள் தெரிய வருகின்றன. குதிரைகள் கடல்வழியாகக் கொண்டு வரப்பட்டன ('நீரின் வந்த நிமிர்பரிப் புரவி). 'காலின் வந்த' என்பது காற்றின் உதவியினால் வந்த எனப் பொருள்படும். 'காலின் வந்த கருங்குறி மூடை' என்பது பருவக் காற்றின் உதவியினால் வந்த கப்பல்களில் கரிய மிளகு மூட்டைகள் கொண்டுவரப்பட்டன என்பதைக் குறிக்கும். 



'வடமலைப் பிறந்த பொன்னும் மணியும்' என்னும் வரிகள் இமயமலைப் புறத்தில் கிடைத்த பொன்னும் மணியும் கங்கையாற்றின் முகத்துவாரத்தின் வழியாகக் கடல்மூலம் வந்ததையும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பக்கத்திலிருந்து சந்தனமும் ('குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்') , அகிலும், தென்னாடான பாண்டிநாட்டுக் கடல்களிலிருந்து முத்துக்களும் ('தென்கடல் முத்து'), கிழக்குக் கடல் வழியாக சாவகத்திலிருந்து பவழமும் ('குணகடல் துகிர்'), கங்கைக்கரை ஊர்களிலிருந்து உள்ளூரிலிருந்து மற்றும் வெளியூர்களான ஈழம் , காழகம் ஆகியவற்றிலிருந்து பல்வேறு பொருட்களும் ('கங்கை வாரியும் காவிரிப் பயனும் .... ஈழத் துணவும் காழகத் தாக்கமும்') இவ்விதம் உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தகம் சிறந்து விளங்கும் நகராகப் புகார் விளங்கியதை அறிய முடிகிறது.


உறையூர் முதுகண்ணனின் சோழன் நலங்கிள்ளியைப் புகழ்ந்து பாடும் புறநானூற்றுச் செய்யுளில் வரும் 'கூம்பொடு மீப்பாய் கலையாது மிசைப்பரந் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங்கலம்' வரிகள் ஆழமாகவும் கலமாகவும் பல கப்பல்கள் தங்குவதற்கேற்ற வகையில் அமைந்திருந்த புகார் பற்றிக் கூறும்.



மேலும் மருவூர்ப்பாக்கத்தின் சுற்றுப்புறங்களிலும், பட்டினப்பாக்கத்தின் அயலிலும் வீரம் மிக்க மறவர்கள் படைக்கலங்களுடன் விளங்கியதை "மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும் பட்டின மருங்கின் படைகெழு மாக்களும் " ((இந்திரவிழவு ஊர் எடுத்த காதை; 76-77).



இது தவிர நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைநாட்டுப் பொருட்டு ஐவகையான மன்றங்களும்


1.வெள்ளிடை மன்றம்,


2.இலஞ்சி மன்றம்,


3.பூத சதுக்கம்,


4.நெடுங்கல் நின்ற மன்றம்


5.பாவை மன்றம், பட்டினப்பாக்கத்தில் இருந்ததையும் சிலம்பு விவரிக்கிறது .


மேலும் காவிரிப்பூம்பட்டினத்தில்


1.மலர்வனம்,


2.உய்யாவனம்,


3.சம்பாதி வனம்,


4.சுவேர வனம் மற்றும்


5.உவ வனம் ஆகிய ஐவகை வனங்களும் இருந்ததாக மணிமேகலை இல் உள்ளது . அத்துடன் நகரில்


சிவன், திருமால், பலராமன், இந்திரன், முருகன், சூரியன், சந்திரன்,அருக தேவன் ஆகியோருக்குக் கோட்டங்கள் (கோயில்கள்) அமைந்திருந்ததை சிலம்பு பின்வருமாறு கூறும்:



"அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம் புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில் உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேல்கோட்டம் வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம் நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும் " (கனாத்திரம் உரைத்த காதை; 9-13).


இதுதவிர நகரில் ஏழு புத்த விகாரங்களுமிருந்ததை மணிமேகலை, சிலப்பதிகாரம் ஆகியன கூறும் (சிலம்பு, 'நாடு காண் காதை'; 14: 'இந்திர விகாரம் ஏழுடன் போகி'; மணிமேகலை; 'இந்திர விகாரம் என எழில் பெற்று').



ஸ்தபதி வை.கணபதியின் 'நகரமைப்புக் கலை' ஆய்வுக் கட்டுரையினை ஆதாரமாக வைத்து நா.பார்த்தசாரதி தனது 'பழந்தமிழர் கட்டடக்கலையும் நகரமைப்பும்' நூலில் பின்வருமாறு குறிப்பிடுவார்: "மயமதம் கூறும் நகரமைப்புக் கலை இலக்கணப்படி மொத்தச் சுற்றளவில் 20இல் ஒரு பாகம் 'குடும்ப பூமி' என்ற பெயரில் குடியிருப்புக்களுக்கும், பிற பகுதிகள் தோட்டங்கள், நீர் நிலைகள், இளமரக்காக்கள் ஆகியவற்றுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.



இவ்விதமாகப் புகழ்பெற்று விளங்கிய வாணிக நகரான பூம்புகார் கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புயல் காற்றடித்து வெள்ளப் பெருக்கெடுத்து நீரில் மூழ்கி விட்டதை மணிமேகலை குறிப்பிடுகிறது.




மணிமேகலையில் இந்த நகரின் அழிவு இவ்வாறு குறிப்பிடபடுகிறது. அதாவது வருடாவருடம் இந்திர விழா கொண்டாடும் சோழ மன்னன் அந்த ஆண்டு கொண்டாடததால் கடவுளின் கோபத்துக்கு ஆளாகி நகர் அழிந்ததாக குறிப்பிடுகிறது.



அங்கு கிடைக்கபெற்ற சில தொன்மையான பொருட்களை கொண்டு அங்கு "சிலபதிகார அருங்காட்சியகம்" ஒன்று தொடங்கப்பட்டு, நம் பண்டைய தமிழர்களின் கலாசாரம் இன்னும் பிரதிபலித்து கொண்டுள்ளது. இங்கு ஆராய்சிகள் மேற்கொள்ளபட்டால் இன்னும் பல வெளிவராத நம் பெருமைகள் வெளிவர வாய்ப்புள்ளது. தமிழர்கள் அனைவரும் அங்கு சென்று நம் வரலாற்றை காண வேண்டும்... தமிழர்கள் பற்றிய தேடல் மேலும் தொடரும்...




லைஃப் கொடுத்த டைப்ரைட்டருக்கு வயது முந்நூறு!

 


உலகின் கடைசி டைப்ரைட்டர் தொழிற்சாலையும் மூடப்பட்டது - அண்மையில் இந்தச் செய்தியை நாளிதழ்களில் பார்த்தபோது நெஞ்சுக்குள் ஏதோ ஒரு வலி! பேப்பரை சுருட்டி கேன்ட் பாரில் செருகிக் கொண்டு, சைக்கிள் மிதித்து டைப் கிளாஸிற்கு சென்ற காலத்தை மறக்க முடியுமா? டைப் செட்டானதோ இல்லையோ தோழர்கள் பலபேருக்கு அந்தக் காலத்தில் லைஃப் செட்டானது இங்குதானே ! 


ஹென்றி மில் 1714-ல், முதல் டைப்ரைட்டரை உருவாக்கினார். அதன்படி பார்த்தால் அடுத்த வருடம் டைப்ரைட்டருக்கு மூன்றாவது செஞ்சுரி முடிகிறது. நொடிக்கு நொடி நவீனமயம் நம்மை விழுங்கிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் 300 ஆண்டுகள் ஒரு இயந்திரம் தாக்குப்பிடித்திருக்கிறது என்றால் அதற்காக ஒரு விழாவே கொண்டாடலாம். மனிதனுக்கு குரங்கு எப்படி முன்னோடியோ அதுபோன்று…இன்று நாம் மடிவரை வந்துவிட்ட கம்ப்யூட்டர்களுக்கு டைப்ரைட்டர்கள் தான் மூலாதாரம்.


ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட டைப்ரைட்டர்களில் சிலிண்டர்கள் நட்டுக்குத்தலாக இருந்தன. இதனால், மேட்டரை டைப் செய்து பேப்பரை வெளியில் எடுத்துத்தான் மேட்டரை படிக்கமுடியும். முப்பதாண்டுகள் பழக்கத்துக்கு பிறகுதான், இப்போதுள்ள டைப்ரைட்டரை வடிவமைத்தார் ஹென்றி மில். 


கீ- போர்டும் முதலில் அல்ஃபபெட்டிக்கல் ஆர்டரில் தான் இருந்தது. பின்னர், ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் எழுத்துக்களை 'ஹோம் கீஸ்' என்றழைக்கப்படும் நடுவரிசைக்கு கொண்டுவந்தனர். அப்புறம் தான், டைப்ரைட்டர்கள் சரளமாக தடதடக்க ஆரம்பித்தன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ் 2-வுக்கு மேல் கல்வியை தொடர முடியாத ஏழைகளுக்கு டைப்ரைட்டிங் கோர்ஸ் ஒரு வரப்பிரசாதம். ஆனால், இப்போது? 


அன்று ஹவுஸ் ஃபுல்லாய் இருந்த டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்கள் இன்று பழைய படங்கள் ஓடும் சினிமா கொட்டகைகள் கணக்காய் காத்தாடுகின்றன. பல ஊர்களில் இன்ஸ்டிடியூட்டுகள் மூடப்பட்டு கம்ப்யூட்டர் சென்டர்களாக மறு அவதாரம் எடுத்துவிட்டன. தனியார் நிறுவனங்களில் டைப்ரைட்டர்களை கம்ப்யூட்டர்கள் கபளீகரம் செய்துவிட்டன. ஒருசில அரசு அலுவலகங்களில் மட்டும் இன்னமும் கஷ்டப்பட்டு எழுத்துக்களை கக்கிக் கொண்டிருக்கின்றன டைப்ரைட்டர்கள் .இப்படியே போனால், அடுத்த சில ஆண்டுகளில் டைப்ரைட்டர்களை தொல்லியல் துறை சொந்தம் கொண்டாடி விடும் போலிருக்கிறது. 


டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் ஆசிரியர்களை கேட்டால், ‘’ஸ்ட்ரென்த் இல்லை, ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்கவில்லை’’ என்று டைப்ரைட்டரைவிட வேகமாக தடக்கிறார்கள். விடுமுறையை வீணடிக்க இந்தக் காலத்து குழந்தைகளுக்கு எத்தனையோ வழிகள் இருக்கையில் அவர்கள் எப்படி டைப் இன்ஸ்டிடியூட்களை தேடி வருவார்கள்? முன்பெல்லாம் எஸ்.எஸ்.எல்.சி. பாஸாகி இருந்தால் தான் தமிழ்நாடு அரசின் தட்டச்சு தேர்வுகளை எழுத முடியும். அப்புறம் எஸ்.எஸ்.எல்.சி. பெயிலானவர்களும் என்றாகி… இப்போது, 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே தமிழ்நாடு அரசின் ஜூனியர், சீனியர் தட்டச்சு தேர்வுகளை எழுதலாம் என்றாகிவிட்டது. அதிலும் ஒரு அதிரடி சலுகையாக 6-ம் வகுப்பு பாஸானவர்கள் தமிழ்நாடு அரசின் ஸ்பீடு டெஸ்ட் மட்டும் எழுதலாம், இரண்டாம் தாள் கிடையாது என்கிற அளவுக்கு டைப்ரைட்டிங் கிளாஸ்களுக்கு அடிமாட்டு ரேஞ்சுக்கு ஆள்பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். 


இத்தனை சலுகைகளை வாரித் தெளித்தாலும் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்களில் '’தட்தடா தட்தடா' என டைப் அடித்துக் கொண்டிருந்த தாவணி பெண்களைப் போல இப்போது டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்களும் அரிதாகி விட்டன. அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஓடிக் கொண்டிருக்கும் இன்ஸ்டிடியூட்களிலும் ஸ்ட்ரென்த் இல்லை. தமிழ்நாடு அரசின் தட்டச்சு தேர்வுகளால் மட்டுமே இன்ஸ்டிடியூட்டுகள் ஓரளவு தள்ளாட்டத்திலாவது ஓடிக் கொண்டிருக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளாக புதிய டைப்ரைட்டர்கள் விற்பனை இல்லை என்கிறார்கள். 


இன்ஸ்டிடியூட்டுகளில் இப்போது ஓடிக் கொண்டிருக்கும் டைப்ரைட்டர்கள் உள்ள வரை தான் தமிழ்நாடு அரசின் தட்டச்சு தேர்வுகளுக்கு செல்ல முடியும். பழுதாகும் டைப்ரைட்டர்களுக்கு இபோதே ஸ்பேர் பார்ட்ஸ்கள் கிடைக்கவில்லை. ஏற்கெனவே பழுதாகிக் கிடக்கும் டைப்ரைட்டர்களில் நல்ல நிலையில் உள்ள பாகங்களை எடுத்து, ஸ்பேராக பயன்படுத்தி வருகிறார்கள். இதுவும் இன்னும் எத்தனை நாளைக்கோ? 


டைப்ரைட்டர்களைப் பற்றிய ஆறுதலான ஒரு செய்தி!

 
அரசாங்க ரகசியங்கள் வெளியில் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு, ரஷ்ய அதிபரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அலுவலகப் பணிகளில் கம்ப்யூட்டர்கள் ஒழிக்கப்பட்டு, மீண்டும் தட்டச்சு எந்திரங்களை பயன்படுத்தும் முடிவை எடுத்திருக்கிறது ரஷ்யா. இதற்காக புதிதாக தட்டச்சு எந்திரங்களை வாங்குவதற்கான அரசாணையில் கடந்த ஜூலையில் கையெழுத்திட்டார் அதிபர் புட்டின்! 


 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top