.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 22 September 2013

மானும்..ஓநாயும் (நீதிக்கதை)!


 
 
 
ஒரு ஊரில் மான் கூட்டம் ஒன்று வசித்து வந்தன.அவற்றுள் ஒரு சின்ன மான் மிகவும் புத்திசாலியாய் இருந்தது.
 


அதே நேரம் தன் புத்திசாலித்தனத்தைக் கண்டு மற்ற மான்களிடம் சற்று கர்வமாகவே நடந்துவந்தது.
 


ஒரு நாள் எல்லா மான்களும் மேய்ச்சல் முடிந்து திரும்புகையில் இருட்ட ஆரம்பித்தது..ஆனால் அப்போதும் அந்த 


சின்ன மான் திரும்ப வரவில்லை..


'இருட்டில் எந்தமிருகமாவது வந்து உன்னை அடித்து உண்டு விடும்'என்று வயதான மான் ஒன்று அறிவுரை கூறியும்


சின்ன மான் கேட்கவில்லை..'சரி' என மற்ற அனைத்து மான்களும் திரும்பின..


அந்த நேரம் அங்கு வந்த ஒரு ஓநாய் ஒன்று சின்ன மான் தனியாய் இருப்பதைப் பார்த்து ...அதை கொன்று உண்ண விரும்பியது..


உடன் சின்ன மான் புத்திசாலித்தனமாக' என்னை நீ உண்பதில் எனக்கு ஆட்சேபணையில்லை..ஆனால் அதற்கு முன் உன் இனிய குரலில்


பாட்டு ஒன்று கேட்க ஆசை'என்றது.


ஓநாயும் சின்ன மானின் கடைசி விருப்பத்தை கேட்டுவிட்டு போகட்டும் என்ற எண்ணத்தில் தன் கொடூரக்குரலால் பாட ஆரம்பித்தது.


அதன் குரல் கேட்ட வேட்டைக்காரர்கள் சிலர் அங்கு ஓடி வந்து ஓநாயை கொன்றனர்.


சின்ன மான் உயிர் தப்பியது.


கர்வம் இல்லாமல் ...மூத்த மான் சொன்ன அறிவுரையை கேட்டிருந்தால் சின்ன மானுக்கு இந்த நெருக்கடி வந்திருக்காது.


ஓநாயும் தன் கொடூரக்குரலை பற்றி புரிந்துகொண்டு பாடாமல் இருந்திருந்தால் இறந்திருக்காது.

ஓவியப் போட்டி: ரூ.1 லட்சம் பரிசு!!




மத்திய மின்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பீரோ ஆஃப் எனர்ஜி எபிசியின்சி (BEE) நிறுவனம், 4 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்காக இந்திய அளவில் ஓவியப்போட்டியை நடத்துகிறது. இப்போட்டி இருபிரிவாக நடத்தப்பட இருக்கிறது. இருபிரிவிலும் முதலிடம் பிடிக்கும் மாணவருக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.

ஏ - பிரிவுக்கான (4, 5, 6-ஆம் வகுப்பு) தலைப்பு: 1. Save money - Practice energy conservation, 2. Save electricity, illuminate every home, 3. Save one unit a day, keep power cut away.

பி - பிரிவுக்கான (7,8,9-ஆம் வகுப்பு) தலைப்பு: 1. Energy conservation - A vision of the future,  2. Energy conservation is the foundation of energy security, 3. Energy efficiency is a journey not destination.

இப்போட்டிகள் மூன்று கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக, பள்ளி மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் இந்த ஓவியப்போட்டி நடைபெறும். இப்போட்டியை ஒவ்வொரு பள்ளியின் தலைமையாசிரியரோ அல்லது முதல்வரோ நடத்துவார். இந்தப் போட்டிகள் அக்டோபர் 7-ஆம் தேதிக்கு முன்பாகவே அப்பள்ளிகளில் நடத்தி முடிக்கப்படும். பள்ளிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பவர்கள், மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். மாநிலத் தலைநகரில் இந்த இரண்டாம் கட்டப் போட்டி நடைபெறும். இப்போட்டி நவம்பர் 12-ஆம் தேதி இரண்டு பிரிவினருக்கும் தனித்தனியே நடைபெறும்.

மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள் அனைவரும் அகில இந்திய அளவில் நடைபெறும் ஓவியப் போட்டிக்குத் தகுதி பெற்றவர்கள் ஆவர். இவர்கள் அனைவருக்கும் வரும் டிசம்பர் மாதம்  12-ஆம் தேதி, தில்லியில் இறுதிப்போட்டி நடைபெறும்.

தேசிய மின்சக்தி சேமிப்பு தினமான டிசம்பர் 14-ஆம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகையையும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்குவார்.

பள்ளி அளவிலான போட்டியில் தேர்ச்சி பெற்று மாநில அளவில் போட்டியில் கலந்துகொள்பவர்கள் அனைவருக்கும் பங்கேற்புப் சான்றிதழ் கிடைக்கும். இரண்டு பிரிவுகளிலும், மாநில அளவில் முதலிடம் பிடிப்பவருக்கு ரூ.10 ஆயிரமும், இரண்டாமிடம் பிடிப்பவருக்கு ரூ.8 ஆயிரமும், மூன்றாமிடம் பிடிப்பவருக்கு ரூ.5 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 10 பேருக்கு தலா ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

ஏ பிரிவில், தேசிய அளவில் முதலிடம் பிடிப்பவருக்கு ரூ.1 லட்சமும், இரண்டாமிடம் பிடிக்கும் 4 பேருக்கு தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாமிடம் பிடிக்கும் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 20 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

பி பிரிவில், தேசிய அளவில் முதலிடம் பிடிப்பவருக்கு ரூ. 1 லட்சமும், இரண்டாமிடம் பிடிக்கும் 2 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரமும், மூன்றாமிடம் பிடிக்கும் 3 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரமும், ஆறுதல் பரிசாக 6 பேருக்கு தலா ரூ. 10 ஆயிரமும் வழங்கப்படும்.

தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் பேக், கைக் கடிகாரம், பங்கேற்புச் சான்றிதழ்களும் வழங்கப்படும். மாநில அளவிலான போட்டிகளுக்கு வந்து செல்லும் மாணவர்களுக்கும், அவருடன் வரும் பெற்றோர்களுக்கும் போக்குவரத்துச் செலவு வழங்கப்படும்.

விவரங்களுக்கு:www.emt-india.net/ncec2013/NCEC2013.htm
 

தமிழ் திரையுலகம் பயணிக்கும் பாதை சரியில்லையே!


ஒரு படைப்பாளி கவிஞனாக இருந்தால் – அவனது கவிதைகள் அறவயப் பட்டவையாக, ஆளுமை மிக்கவையாக, அறச்சீற்றம் கொண்டவையாக, அழகியல் உள்ளவையாக, சமூக அக்கறை நிறைந்தவையாக இருக்கும்பட்சத்தில் அவை வரவேற்கப்படுகின்றன; பின்பற்றப்படுவதற்கும், மேற்கோள்கள் காட்டப்படுவதற்கும் உரியவையாகி, நினைவுகளிலும் நூலகங்களிலும் பாதுகாக்கப்படுகின்றன.


ஒரு படைப்பாளி சிற்பியாக இருந்தால் – அவனது சிற்பங்கள் செய்நேர்த்தி மிக்கவையாக, செய்திகளைச் சொல்பவையாக, படைத்தவனின் கடுமையான உழைப்பாற்றலைப் பிரதிபலிப்பவையாக இருக்கும்பட்சத்தில் அவை ரசிக்கப்படுகின்றன, விலைகொடுத்து வாங்கப்படுகின்றன, கோயில்களில் நிலை நிறுத்தப்பட்டு வணங்கப்படுகின்றன.


ஒரு படைப்பாளி பெருங்கதை புனைபவனாக இருந்தால் – அவனது கதாபாத்திரங்கள் அறம் உரைப்பவையாக, மானுட வாழ்வியலை உணர்த்துபவையாக இருந்தால், அவை உயிருள்ள பாத்திரங்களாகவே உணரப்பட்டு உதாரணபுருஷர்களாக்கப்படுகின்றன. அவ்வகையில்தான் என்றைக்கோ எழுதப்பட்ட பல்வேறு வகையான இதிகாசங்களின் கதாபாத்திரங்கள் இன்றைக்கும் நம்முடன் உணர்வுபூர்வமாக உறவாடிக் கொண்டிருக்கின்றன.


sep 22 - cinema


நாவல் இலக்கிய உலகில் கதை மாந்தர்களாக வார்க்கப்பட்ட குறிஞ்சி மலர் “அரவிந்தன்’, பொன்னியின் செல்வன் “வந்தியத்தேவன்’, புத்துயிர்ப்பு “நெஹ்லூதவ்’ போன்ற பல உன்னத கதாபாத்திரங்களை நாம் பட்டியலிட முடியும். போற்றிப் பின்பற்ற மட்டுமல்ல, எவரும் பின்பற்றக் கூடாத எச்சரிக்கைகளாகவும் சில கதாபாத்திரங்கள் வார்க்கப்படுவது உண்டு.


அந்தவகையில் கோடிக்கணக்கான மக்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் தற்போதைய தமிழ்த் திரைப்படங்களின் பாத்திர வார்ப்புகளில் மிகப்பெரியதொரு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. இன்றைய திரைப்படங்களின் கதாநாயகர்களாக படைக்கப்படுவோரில் பெரும்பாலானவர்கள் குதர்க்கவாதம் செய்கிறார்கள். கூச்சம் எதுவுமற்று குழுவாகச் சேர்ந்து மது குடிக்கிறார்கள். பேசிக்கொண்டே சிகரெட்டைப் பற்றவைத்து, புகைப்பது என்பது வாழ்வியலோடு இரண்டறக் கலந்திருக்க வேண்டிய இயல்பான நடைமுறையென்று மறைமுகமாக உணர்த்துகிறார்கள். பெற்றோருக்கும் குடும்ப உறவுகளுக்கும் எவ்வகையிலும் கட்டுப்பட மறுக்கிறார்கள். அவர்கள் கல்லூரிகளில் படிப்பதாகக் காட்டப்பட்டால், அங்கு படிப்பது ஒன்றைத்தவிர மற்ற எல்லாவற்றையும் செய்கிறார்கள். குறிப்பாக, பெண்களை விரட்டி விரட்டிக் காதலிக்கிறார்கள். தங்களது ஆசிரியர்கள் உள்பட அனைவரையும் கேலி செய்கிறார்கள்.



எதைச் செய்தேனும் “எடுபட்டு’ விடவேண்டும், “பெருவெற்றி’ பெற வேண்டும் என்கிற வணிக வலுக்கட்டாயமே தமிழ்த் திரையின் படைப்பாளிகளை இப்படியான கதாபாத்திரங்களை படைக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இளவயது ஆண்களையும், பெண்களையும், மாணவ மாணவிகளையும் ஈர்த்து, திரையரங்கில் அவர்களைக் கைதட்டவைத்துப் பெருங்குரலில் சிரிக்கவும் வைத்துவிட்டால் நமது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிடும் என்கிற படைப்பாளிகளின் மனோ நிலையே இன்றைய “திரை’யின் கதாபாத்திர வார்ப்புகள் பெருவீழ்ச்சியடைந்ததற்கான முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.


நமது சமூகத்தில் பிள்ளைகள் பதின்மவயதை அடையும்வரை அவர்களால் பெற்றோர்களுக்கு எத்தகைய சமூக இடர்பாடுகளும் நேர்வதில்லை. அதற்குப்பிறகு அதாவது பதிமூன்று வயது தொடங்கி ஏறக்குறைய இருபத்தைந்து வயதுவரை பெற்றோர்களுக்கு ஒவ்வாதவர்களாக மாறுகின்றனர். இன்று மிக எளிதாக வசப்பட்டு விட்ட அலைபேசி, இணையம், முகநூல் போன்ற தகவல் தொடர்பு ஊடக வசதிகள் இன்றைய பிள்ளைகளை, அவர்களது பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறவுகளோடு பேச விருப்பமற்றவர்களாக மாற்றிவிட்டன. அவர்களின் எதிர்கால வாழ்க்கை நலமாக அமைய வேண்டும் என்று கவலையுற்று கருத்து தெரிவிக்கிற, அல்லது கண்டிப்பு காட்டுகிற குடும்ப உறவுகளை, தங்கள் மகிழ்ச்சிக்கு எதிரானவர்களாகக் கருதத் தொடங்கியுள்ளனர்.


இன்றைய நமது பிள்ளைகள், பெற்றோர்களின் கருத்துகளுக்கும், கண்டிப்புகளுக்கும், அதற்கு முற்றிலும் எதிரான திரைக் கதாநாயகர்களின் தூண்டுதல்களுக்கும் இடையில் அகப்பட்டு அல்லற்படுகின்றனர்.



எதை எதை எடுத்துச் சொன்னால் இளையோரும் மாணவரும் உடனடியாக கேட்டுக்கொள்வார்களோ அதை மட்டுமே சொல்ல வேண்டும் என்பதிலும்,
 எதை எதை எடுத்துக் காட்டினால் அவர்கள் பரவசப்பெருக்கடைந்து பார்ப்பார்களோ அதை மட்டுமே காட்ட வேண்டும் என்பதிலும், யார் யாரை தங்களுக்கு ஒவ்வாதவர்களாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களைக் குறிவைத்துக் கேலி செய்கிற வேலையை மட்டுமே செய்யவேண்டும் என்பதிலும் இன்றைய நமது திரைப்படைப்பாளிகள் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். போக்கிரித்தனங்கள் நிறைந்தவனாக, பொறுப்பற்றவனாக, குடிகாரனாக, உழைப்பதற்கு விருப்பமற்றவனாக, தனக்கு எவ்வகையிலும் பொருந்தாத தெருச்சண்டைகளில் பலரோடு மோதி வெல்பவனாக, வலிய வலியச் சென்று காதலிப்பவனாக சித்திரிக்கப்படுகிற ஒரு திரைப்பாத்திரம், அதுபோன்ற உணர்வுப் போக்குடைய இளைஞர்களுக்கான வலிமையான மறைமுக அங்கீகாரமின்றி, வேறு என்ன?


தங்களது பிள்ளைகள் நன்றாகப் படிக்கவேண்டும், படிப்புக்கேற்ற வேலைகளைப் பெற்று அவர்களின் வாழ்வு நலமாக அமையவேண்டும் என்பதுதான் நமது சமூகத்தில் பிள்ளைகளைப் பெற்ற அனைவரும் காண்கின்ற பெருங்கனவாகும். ஆனால், அவர்களது கனவுகளுக்கு முற்றிலும் முரணான குணக்கூறுகளைக் கொண்டவர்களைத்தான் அவர்களது பிள்ளைகள் திரையரங்குகளில் கதாநாயகன்களின் வடிவில் பார்த்து ரசித்துப் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கசக்கின்ற ஒரு நிஜமாகும்.


குடும்பம் எனும் அமைப்பும் விதம் விதமான பணிப் பயிற்சி நிறுவனங்களும் கல்வி நிறுவனங்களும் சேர்ந்து பெரும் பொருள்செலவில் ஆண்டுக்கணக்கில் திட்டமிட்டு வடிவமைத்து உருவாக்கிவரும் இளைய சமுதாயச் சக்திகளை, அவர்களுக்கு வெளியே இருக்கிற ஓர் ஊடகம் ஒரே நாளில் மாற்றிவிடுகிறது. மது அருந்தக் கூடாது என்பதை எழுத்துகளின் வாயிலாகவும், வார்த்தைகளின் வாயிலாகவும் வலியுறுத்தி வாழ்நாள் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கும் சமூகவியலாளர்கள், மது அருந்தும் காட்சிகளை விதம்விதமான கோணங்களில் வண்ணமயமாக ஒளி ஒலி காட்சிகளாகக் காட்டுகிறவர்களிடம் பரிதாபமாகத் தோற்று விடுகின்றனர்.



மது, புகை, வெட்டுக்குத்து வன்முறை, போக்கிரிக் கலாசாரம், பொத்தாம் பொதுவான பொறுப்பற்ற பகடித்தனங்கள் போன்ற அனைத்துக் கூறுகளுக்குமான மறைமுகமான விளம்பரப் பொதுமேடையாகவும் அவற்றையெல்லாம் உரத்த குரலில் அங்கீகரிக்கும் நிறுவனமாகவும் இன்றைய நமது தமிழ்த்திரை மாற்றப்பட்டுவிட்டது. இந்தக் கூறுகளோடு காதல் கவர்ச்சி போதையையும் போதுமான அளவுக்குக் கலந்து தந்து அது தன் வணிகத்தைப் பாதுகாத்துக் கொள்கிறது. திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாக மட்டுமே பார்த்துவிட்டு அவற்றில் இருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு சுயத்தோடு விளங்குகிறவர்களாக நமது பெரும்பான்மை மக்கள் இல்லை.



ஓர் இளைஞன் நல்ல தகுதிகள் ஏதுமற்றவனாக இருந்தாலும்கூட அவன் தான் சந்திக்கும் பெண்ணை விரட்டி விரட்டிக் காதலிக்கும் தகுதியை மட்டும் உடையவனாக இருக்கிறான் என்பதே கடந்த சில ஆண்டுகளாக நமது தமிழ்த்திரையுலகம் தமது கதாபாத்திரங்களின் வாயிலாக முன்வைக்கும் ஆணித்தரமான கருத்தாக இருக்கிறது.


உலகின் எந்த நாட்டுத் திரையுலகமும் காதலைப் பிடித்துக்கொண்டு இதுபோன்ற ஆட்டங்களை ஆடுவதில்லை. சில கோயில்களில் பம்பையும் உடுக்கையும் சேர்ந்து பரவசம் மிகுந்த இசையை வேகவேகமாக எழுப்பி சன்னதம் வந்து ஆடும் சாமியாடிகளை உருவாக்குவது போல, நமது தமிழ்த் திரைப்படங்கள் காதல் உடுக்கையை வேக வேகமாக அடித்து அடித்து காதல் சாமியாடிகளை உருவாக்கி அவர்களை வெறி நடனமாடி வீதி உலா வரச் செய்கின்றன. வேதனை மிகுந்த இத்தகைய போக்குகளின் விளைவுகளைத்தான் நம் சமூகம் அனுபவித்து வருகிறது. பெற்றோரும் அனுபவித்து வருகின்றனர். ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டு கற்பனை செய்தால் நமது தமிழ்த் திரையுலகின் ஒளிப்பதிவுக் கருவிகள், ஒலிப்பதிவுக் கூடங்கள், பாடல் பதிவுக் கூடங்கள் என ஒவ்வொன்றும் காதல் உணர்வு ஊற்றெடுக்கப் பயன்படுத்தப்படும் உடுக்கைகளாகவே தெரிகின்றன.


சிந்திக்கிற – படிக்கிற, மக்கள் குறைவாகவும், பார்க்கிற – கேட்கிற மக்கள் பெருவாரியாகவும் இருக்கிற நமது சமூகத்தில், அதிலும் படிக்கிற மக்களே கூட பார்க்கிற – கேட்கிற கலாசாரத்திற்குத் தங்களைப் பழகிக்கொண்டுவிட்ட இன்றைய சூழலில் ஊடகங்களிலேயே பெரும் ஊடகமாக } குறிப்பாக அனைத்து ஊடகங்களுக்கும் தாய் ஊடகமாக } நிலைபெற்றுவிட்ட திரைப்படத்தின் சமூகப்பொறுப்பு எத்தகையது என்பது உள்ளார்ந்த அக்கறையோடும், தொலைநோக்கு பார்வைகளோடும் உணரப்படவில்லை. ஒரு அபத்தத்தை எழுதுவதும், பேசி நடிப்பதும், வடிவமைப்பதும் ஒரே ஒரு முறைதான் நடக்கிறது. ஆனால், அந்த அபத்தம் எத்தனை ஆயிரம் முறை மீண்டும் மீண்டும் வெளியாகி மக்கள் மனதில் திணிக்கப்பட்டு நிலைநிறுத்தப்படுகிறது என்பதை ஊடக உலகம் நினைத்துப் பார்ப்பதாகத் தெரியவில்லை.


செய்ய வேண்டியவற்றைச் செய்வதைக் காட்டிலும், செய்யக்கூடாதவற்றைச் செய்யாமல் இருப்பதுதான் மனிதகுலத்தின் உண்மையான வளர்ச்சிக்கு அடிகோலும். அந்த அடிப்படையில் பார்த்தால் இன்றைய நம் தமிழ்த் திரையுலகம் எதை எதைச் செய்து கொண்டிருக்கிறது, எதை எதைச் செய்யாமல் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். படைப்பாளிகளுக்கு இருக்கும் படைப்புரிமை என்பது சமூகத்தைப் பாழ்படுத்தும் உரிமையாக மாறலாகாது!

இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழர் கட்சி முன்னணி ஆட்சியை பிடித்தது!


இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண கவுன்சிலுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் அதிக இடங்களை கைப்பற்றி உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கு ஆட்சியை பிடித்தது.இதைத் தொடர்ந்து விக்னேஷ்வரன் வடக்கு மாகாண முதல்வர் ஆகிறார்.

sep 22 - srilanka. TAMIL

 


இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாண கவுன்சிலுக்கு, 25 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக இன்று தேர்தல் நடைபெற்றது. தனித்தமிழ் ஈழ நாடு கோரி நடத்திய போரின்போது, விடுதலைப்புலிகளின் மையப்பகுதியாக வடக்கு மாகாணம் திகழ்ந்தது. இந்த மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனினா ஆகிய மாவட்டங்கள் அடங்கி உள்ளன.
வடக்கு மாகாண கவுன்சிலில் மொத்தம் 36 உறுப்பினர்களை தேர்ந்து எடுப்பதற்கு நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. தேர்ந்து எடுக்கப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் உள்பட 2 ஆயிரம் பேர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர். இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலையில் இருந்தே மக்கள் நீண்ட வரிசையில் பொறுமையுடன் காத்திருந்து ஓட்டு போட்டனர். 


பெரும்பாலான வாக்காளர்கள் நெற்றியில் விபூதி–குங்குமம் வைத்து ஓட்டுப்போட காத்து நின்றதை பார்க்க முடிந்தது. ‘‘தமிழர்களுக்கு சுதந்திரம் வேண்டும். எங்கள் சொந்த மண்ணை எங்களிடமே திருப்பித்தர வேண்டும். இங்கு நாங்கள் சுதந்திரமாக நடமாடும் உரிமை வேண்டும்’’ நல்லூர் வாக்குச்சாவடிக்கு ஓட்டுப்போட வந்திருந்த 4 குழந்தைகளின் தாயாரான கோபால சுதந்திரன் புஷ்பவல்லி நிருபர்களிடம் கூறினார். 


இந்நிலையில் மொத்தம் உள்ள 36 ‌இடங்களில் 28ல் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. ராஜபக்சேவின் ‌ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி கட்சிக்கு 7 இடங்கள் மட்டும் தான் கிடைத்தது. இலங்கை முஸ்லீம் கட்சி 1 இடத்தை பிடித்தது. தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து விக்னேஷ்வரன் வடக்கு மாகாண முதல்வர் ஆகிறார்.


Tamil party sweeps Sri Lanka’s regional vote

****************************************


 Sri Lanka’s main Tamil party has scored a landslide victory in the first semi-autonomous council elections in the island’s north after decades of ethnic war.The Tamil National Alliance (TNA) swept all five districts in the Northern Provincial Council which went to the polls on Saturday, the department of Elections results showed on Sunday.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த ஆன்லைனில் வசதி!



வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த தமிழக தேர்தல் கமிஷன் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக, ஆன்லைன் வசதியை பெற இனி இன்டர்நெட் மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவிலேயே இந்த வசதி முதன் முறையாக தமிழகத்தில் அமல் செய்யப்படுகிறது. இப்படி ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி ஏற்கெனவே உள்ளது. அனால் சொந்தமாக இன்டர்நெட் வசதி உள்ளவர்கள் மட்டுமே இதை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கம்ப்யூட்டர் வசதி இல்லாதவர்களுக்கு இன்டர்நெட் மையங்கள் மூலம் இனி பலன் கிடைக்கும். வாக்காளர் பெயர் சேர்க்க, திருத்த ஆன்லைன் வசதியை பெற வெப்சைட் முகவரி: www.elections.tn.gov.in


sep 22 - election comision
 



இது தொடர்பாக தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் “இந்தியாவில் முதல் முறையாக கம்ப்யூட்டர் மையங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்யும் வசதி தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 994 இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் மையங்களோடு தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னையில் மட்டும் 86 மையங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த மையங்கள் செயல்பட துவங்கும். தங்களது வீட்டில் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் வசதி இல்லாதவர்கள் இந்த மையங்களுக்கு சென்று, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். 



பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் ஆன்லைன் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அரசு அதிகாரிகள் நேரடியாக வீட்டுக்கு வந்து சோதனை செய்து 40 நாளில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடை யாள அட்டை வழங்குவார்கள். கம்ப்யூட்டர் மையங்களில் வாக்காளர் பெயர் சேர்க்கும் விண்ணப்பத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பி வைக்க ரூ.10 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். வாக்காளர் பெயர் பட்டியலை பிரிண்ட் அவுட் எடுத்து கொடுக்க ரூ.3 மட்டுமே பணம் வசூலிக்கப்படும். வாக்காளர்கள் பெயரை சேர்ப்பது குறித்து விண்ணப்பம் கொடுத்தவர்கள், அதுகுறித்த சந்தேகங்களை 1950 என்ற எண்ணில் தொலைபேசி எண்ணில் பேசி தெரிந்து கொள்ளலாம். 



மேலும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்காக சிறப்பு முகாம் வரும் 1ம் தேதி முதல் நடைபெறும். இங்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை பொதுமக்கள் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். ஏற்காடு எப்போது?: ‘ஏற்காடு தொகுதி எம்எல்ஏ பெருமாள் மரணம் அடைந்ததையொட்டி, ஜனவரி 16ம் தேதிக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையம்தான் தேர்தல் தேதி முடிவு செய்து அறிவிக்க வேண்டும்’ என்றார்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top