.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 20 September 2013

புழுக்களை அழிக்கும் ஒட்டுண்ணி!


தென்னை சாகுபடியில் ஏற்படும் மகசூல் குறைவிற்கு பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பொதுவாக, தென்னை மரங்களை கருந்தலைப்புழு, காண்டாமிருக வண்டு, சிவப்பு கூன்வண்டு, மரப்பட்டைத் துளைப்பான் என 14-க்கும் மேற்பட்ட பூச்சியினங்கள் தாக்குகின்றன. இவற்றில் கருந்தலைப் புழுக்கள் அதிக சேதத்தை விளைவிக்கின்றன. தென்னையின் அனைத்து வயதுடைய மரங்களையும் இந்தப் புழுக்கள் தாக்குகின்றன. வருடம் முழுக்க இதன் தாக்குதல் இருந்தாலும், கோடைக்கலங்களில் தாக்குதல் அதிகமாக இருக்கும்.



தென்னைமரக் கொண்டையின் கீழ்ப்புற இலைப்பரப்பில், காய்ந்த திட்டுக்கள் காணப்படுவது கருந்தலைப்புழு தாக்குதலின் அறிகுறிகளாகும். கருந்தலைப் புழுக்கள், தென்னை ஓலைகளின் அடிப்பரப்பில் நூலாம்படையினை உருவாக்கி, அதனுள் இருந்துகொண்டே, பச்சையத்தைச் சுரண்டி உண்ணும். மரத்தின் கொண்டை மேற்பகுதியில் உள்ள 3-4 ஓலைகளைத் தவிர, மற்ற ஓலைகள் அனைத்தும் காய்ந்து போய்விடும்.  அதிகமாகத் தாக்கப்பட்ட மரங்கள், எரிந்து தீய்ந்து போனது போன்று காட்சியளிக்கும். இதனால், தென்னை மரங்களில் ஒளிச்சேர்க்கை தடைப்பட்டு, மகசூல் குறைந்து விடுகிறது. தகுந்த நேரத்தில் கவனிக்காமல் விட்டால்,  நாளடைவில் மரம் பட்டுப்போய் விடும்.




பொதுவாக, கருந்தலைப் புழுக்களை அழிக்க, ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது வழக்கம். இதனால், மண் வளம் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், மண்புழு, நத்தை, ஊசித்தட்டான் போன்ற நன்மை தரும் பூச்சியினங்களும் அழிந்து விடுகின்றன.




கருந்தலைப் புழுக்களை அழிக்க, பிரிக்கானிட் எனும் ஒட்டுண்ணிகளைக் கண்டுபிடித்துள்ளது, கோவை மாவட்டம் ஆழியார் நகரில் உள்ள, தென்னை ஆராய்ச்சி நிலையம். இது குறித்து, தென்னை ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர் முனைவர். ந.ஷோபா கூறியதாவது:




சேமிப்புக் கிடங்குகளில் உள்ள அரிசி, நெல் மணிகளைச் சாப்பிட்டு உயிர் வாழும் புழுக்களைச் சேகரித்து, அதைப் பல்வேறு நிலைகளுக்கு உட்படுத்தி, அதிலிருந்து பிரிக்கானிட் ஒட்டுண்ணிகளை உருவாக்கி, தென்னை விவசாயிகளுக்கு விற்பனை செய்கிறோம். பழுப்பு நிறத்தில் காணப்படும் இந்த ஒட்டுண்ணிகள், மனிதனை துன்புறுத்தாது. பிரிக்கானிட் ஒட்டுண்ணிகளை, 21 நாட்களுக்கு ஒருமுறை, ஏக்கருக்கு 2,100 ஒட்டுண்ணிகள் வீதம் (ஒரு மரத்திற்கு 30 ஒட்டுண்ணிகள்) தென்னந்தோப்புகளில் புழக்கத்தில் விட்டு, கருந்தலைப்புழுவின் தாக்கத்தைக் கணிசமாகக் கட்டுப்படுத்தலாம்.




மேலும், பிரிக்கானிட் ஒட்டுண்ணிகள், கருந்தழைப் புழுக்களைக் கொன்று, அதன் மீது 15-20 முட்டையிடுகின்றன. அதிலிருந்து வெளியேறும் புழுக்கள், 7-11 நாட்களில் ஒட்டுண்ணியாக மாறிவிடுகின்றன. நாளடைவில் தோப்பில் ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கை அதிகரித்து, கருந்தலைப் புழுக்களின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்து விடும்.




100 பிரிக்கானிக் ஒட்டுண்ணிகள் கொண்ட ஒரு பாக்கெட்,  50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒட்டுண்ணிகள் தேவைப்படும் விவசாயிகள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்" என்கிறார்.



தொடர்புக்கு: 04253 288722


குடிநீர் கொடுக்கும் வாட்டர் ஏ.டி.எம்கள்! - கலக்கும் சுரேஷ் எம்.பி.!


ஒரு ரூபாய் நாணயம் செலுத்தினால் பத்து லிட்டர் குடிநீர் கொடுக்கும் வாட்டர் ஏ.டி.எம்கள் பெங்களூரு அருகே அமைக்கப்பட்டுள்ளன.



ஏ.டி.எம்மில் பணம் கிடைக்கும், தண்ணீர் கிடைக்குமா? கிடைக்கிறது. பெங்களூரு அருகே அமைக்கப்பட்டுள்ள வாட்டர் ஏ.டி.எம்மில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கிறது. ஒரு ரூபாய்க்கு பத்து லிட்டர் குடிநீர் இந்த ஏ.டி.எம்மில் வழங்கப்படுகின்றது.



பெங்களூரு அருகே உள்ள கனகபுரா பகுதியில்தான் இந்த வாட்டர் ஏ.டி.எம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் இப்பகுதியில் உள்ள பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சாதாரணமாக சந்தையில் 20 லிட்டர் குடிநீர் 40 ரூபாய் முதல் 50 ருபாய் விற்கப்படுகின்றது. ஆனால் இங்குள்ள மெஷினில் ஒரு ரூபாய் நாணயத்தைச் செலுத்தினால்  அடுத்த ஒரு நிமிஷத்தில் 10 லிட்டர் குடிநீர் கேனில் நிரம்பியிருக்கும்.



இங்கு ஒருவருக்கு தண்ணீர் கிடைத்தது, இன்னொருவருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்னும் பிரச்சினைக்கே இடம் இல்லை. குடிநீருக்காக வரும் அனைத்து மக்களுக்கும் நிச்சயம் இங்கு தண்ணீர் உண்டு.



பாதுகாக்கப்பட்ட பத்து லிட்டர் குடிநீர் ஒரு ரூபாய்க்கும், இருபது லிட்டர் குடிநீர் இரண்டு ரூபாய்க்கும் வாட்டர் ஏ.டி.எம்களில் வழங்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் தற்போது 33 வாட்டர் ஏ.டி.எம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் தலா 13 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன.



கனகபுரா நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியாளராக நின்றுள்ளார் சுரேஷ். தன்னை வெற்றிபெறச் செய்தால் வாட்டர் ஏ.டி.எம்கள் அமைக்கப்படும் என்று மக்களுக்கு வாக்குறுதியை அளித்தார். மக்களும் அவரை நம்பி ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்திருக்கிறார்கள்.



சுரேஷ் எம்.பி.யான பிறகு கொடுத்த வாக்குறுதியை தற்போது மக்களுக்காக நிறைவேற்றியுள்ளார். மக்களும் தற்போது நிம்மதியாக குறைந்த விலையில் வாட்டர் ஏ.டி.எம்களில் குடிதண்ணீர் பிடித்துக்கொண்டு சந்தோஷமாக வீடு திரும்புகின்றனர்.



தேர்தல் நேரத்தில் கொடுக்கப்படும் வாக்குறுதி காற்றில் பறக்க விடப்படும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில், வாக்குறுதியை நிறைவேற்றி அனைத்து அரசியல்வாதிகளையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்திருக்கிறார் சுரேஷ்.


உங்கள் பணம் உங்களுக்கு வந்து சேர...



அக்டோபர் மாதத்திலிருந்து  உங்கள் சிலிண்டருக்கான  மானியத்தை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பெறுவதற்கான வழிகாட்டல்கள் இங்கே...



ஒரு சிலிண்டர் சமையல் எரிவாயுவிற்கு பெட்ரோலிய நிறுவனங்கள் விதித்துள்ள விலை (சென்னையில்) 930 ரூபாய். அதை இப்போது நாம் 398 ரூபாய் செலுத்தி வாங்கி வருகிறோம். துண்டு விழும் 532 ரூபாயை அரசு, பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மானியமாக அளித்து வருகிறது.  ஆனால் வரவிருக்கும் அக்டோபர் மாதத்திலிருந்து நீங்கள் விற்பனையாளரிடம் முழுத் தொகையையும் கொடுத்துத்தான் சிலிண்டரை வாங்க முடியும். இதுவரை பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம் இனி நேரடியாக உங்களிடமே கொடுக்கப்படும். ஆனால் அது உங்கள் கையில் ரொக்கமாகக் கொடுக்கப்பட மாட்டாது. உங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.


அதைப் பெற இரண்டு விஷயங்கள் முக்கியமாகத் தேவை. 1. ஆதார் எண். 2. வங்கிக் கணக்கு.


இந்தத் திட்டம் முதற்கட்டமாக அக்டோபர் 1 முதல் அரியலூர் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட இருக்கிறது. பின் படிப்படியாக தமிழகத்தின் 25 மாவட்டங்களில் நான்கு கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.


எந்தெந்த மாவட்டங்களில் எப்போது?
அக்டோபர் 2013      -     அரியலூர்


நவம்பர் 2013   -    திருச்சி, மதுரை, புதுகோட்டை, நாகப்பட்டினம்.


டிசம்பர் 2013  -    கடலூர், பெரம்பலூர், கரூர், சேலம், தர்மபுரி, ஈரோடு.


ஜனவரி 2014 -  தஞ்சாவூர், திண்டுக்கல், திருவாரூர், நாமக்கல், வேலூர், இராமநாதபுரம், விழுப்புரம், தேனி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி.



தேதி அறிவிக்கப்படாத மாவட்டங்கள்
சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கோவை , திருப்பூர், நீலகிரி, விருதுநகர், சிவகங்கை.


இத்திட்டத்தின்கீழ் மானியம் பெற என்ன செய்ய வேண்டும்?


1.மானியத்தைப் பெற முதலில் உங்களுக்கு ஆதார் எண் இருக்க வேண்டும். இதுவரை ஆதார் எண்ணிற்கு நீங்கள் விண்ணப்பிக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தையோ,அருகிலுள்ள ஆதார் பதிவு மையங்களையோ தொடர்புகொள்ளுங்கள்.


ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்து இன்னும் எண் கிடைக்கப்பெறாதவர்கள், https://eaadhaar.uidai.gov.in/eDetails.aspx  இத்தளத்திற்குச் சென்று பின்கோடு, தேதி, என்ரோல்மெண்ட் நம்பர் ஆகிய விவரங்களைப் பதிவிட்டால் உங்களுக்கான ஆதார் எண் வந்துவிடும் அல்லது விண்ணப்பத்தின் நிலை என்னவென்று அறிந்துகொள்ளலாம் அல்லது 1800 300 1947 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விவரங்கள் அறியலாம்.


2.வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். யார் பெயரில் எரிவாயு இணைப்பு உள்ளதோ அவர்கள் பெயரில் அந்த  வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். இதுவரை வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் புதிதாக கணக்கு துவக்கிக்கொள்ள வேண்டும்.


3.ஆதார் எண், வங்கிக் கணக்கு இரண்டும் இருப்பவர்கள் இரண்டு படிவங்களை நிரப்ப வேண்டும். ஒன்று வங்கிக்கு (படிவம் எண் 1) மற்றொன்று சிலிண்டர் விநியோகஸ்தருக்கு (படிவம் 2.)


வங்கிக்கான படிவங்களை வங்கிக் கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம்.. அல்லது . http://www.petroleum.nic.in/dbtl/bankacc.pdf என்ற தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


படிவம் 2ல் உங்கள் ஆதார் அட்டையை குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் வைத்து போட்டோ காப்பி எடுத்துக் கொள்ள வேண்டும். போட்டோ காப்பி எடுத்த படிவத்தில் மற்ற விவரங்களை நிரப்பி, கடைசியாக காஸ் சிலிண்டர் வாங்கிய பில்லை இணைத்து விநியோகஸ்தரிடம் அளிக்க வேண்டும்.


விநியோகஸ்தருக்கான படிவத்தை அவர்களிடமே பெற்றுக்கொள்ளலாம் அல்லது http://www.petroleum.nic.in/dbtl/leaflet.pdf என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து ஏஜென்சியில் கொடுக்கலாம்.

கால அவகாசம்

ஆதார் எண் இல்லாதவர்கள் நேரடி மானியம் தொடங்கப்பட்டு மூன்று மாதங்கள் வரை மானிய விலையில் சிலிண்டரை பெற்றுக்கொள்ளலாம். இம்மூன்று மாதங்களுக்குள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடனும், எரிவாயு இணைப்புடனும் இணைத்துவிட வேண்டும். கால அவகாசம் முடிந்த பிறகும் ஆதார் எண்ணை இணைக்காத பட்சத்தில் சந்தை விலையிலேயே சிலிண்டர் விநியோகிக்கப்படும். எப்போது ஆதார் எண்ணைக் குறிப்பிடுகிறார்களோ அப்போதிலிருந்து மானியத் தொகையை வங்கிக் கணக்கில் பெற்றுக் கொள்ளலாம்.


மானியம் எவ்வளவு?


இத்திட்டத்தின்படி அனைத்து சான்றுகளும் சரிபார்க்கப்பட்ட பின் முதல் தவணையாக 435 ரூபாய் நமது வங்கிக் கணக்கில் வரவாகும். பின்னர் முதல் சிலிண்டர் பெறும்போது சந்தை நிலவரத்திற்கேற்ப மீதித் தொகையைக் கொடுத்து சிலிண்டர் பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் அடுத்த சிலிண்டர் புக் செய்து வினியோகிக்கப்பட்டு 6 நாட்களுக்குள் நமது வங்கிக் கணக்கிற்கு அப்போதைய சந்தை நிலவரத்தின்படி 420 ரூபாயைக் கழித்துவிட்டு மீதித் தொகையை நமது கணக்கில் அரசு செலுத்திவிடும். ஆண்டுக்கு 9 சிலிண்டர் மட்டுமே மானியத்தில் பெறலாம்.


மேலதிக விரங்களை  http://www.petroleum.nic.in/dbtl என்ற இணையத்திலோ 1800 2333 555 என்ற வாடிக்கையாளர் சேவை மையத்திலோ பெறலாம்.
 
 

பழுத்த இலையும் பள்ளமும்! - (நீதிக்கதை)



ஒரு பெரிய மரம் ஒன்று இருந்தது..அம்மரத்தின் வேரருகே ஒரு பள்ளம் ஒன்றும் இருந்தது..


இலையுதிர் காலம் வந்தது...



மரத்தில் இருந்த இலைகள் பழுத்து கீழே விழ ஆரம்பித்தன.



அப்போது ஒரு பழுத்த இலை கீழே பள்ளத்தில் விழுந்தது...


அந்த இலை பள்ளத்தைப் பார்த்து ...என்னை உன் பள்ளத்தில் ஏற்றுக்கொள் இல்லாவிடில்...
அடிக்கும் காற்றில் நான் எங்கே போவேன் என தெரியாமல் அல்லாடுவேன் என்றது..




அந்த பழுத்த இலையால் தனக்கு என்ன லாபம் என்று கருதிய பள்ளம்"காப்பாற்ற முடியாது" என்று கூறி பழுத்த இலையை வெளியே தள்ளியது.



பெரும் காற்று அடிக்க இலை பறந்து எங்கோ சென்று விட்டது.



மற்றுமொரு நாள்..வேறொரு இலை பள்ளத்தில் விழுந்தது..மழை வேறு பெய்ய ஆரம்பித்தது..



உடனே பள்ளம்..      இலயைப் பார்த்து ..

'என்னை மூடிக்கொள்.. இல்லாவிடில் இந்த மழை நீர் என்னுள் நிரம்பி என்னை மூழ்கடித்துவிடும்..


மண் சரிந்து என்னை நீக்கிவிடும்' என்று கெஞ்சியது.

அதற்கு அந்த இலை

'அன்று என் சகோதர இலை உன்னை உதவி வேண்டிய போது நீ உதவவில்லை...
அதுவும் காற்றில் எங்கோ சென்று மறைந்துவிட்டது..
ஆனால் நீ உதவி கேட்கும்போது நான் உன்னைப்போல இருக்கமாட்டேன்'. 
என்று சொல்லிவிட்டு ..அந்த பள்ளத்தின் மேல்..அதை முழுவதுமாக மறைத்தது இலை.

மழை பெய்து ஓய ..பள்ளமும் காப்பாற்றப்பட்டது.பின் இலை பள்ளத்தைப்பார்த்து 'இனியும் உதவி என நம்மை நாடிவருபவருக்கு..
நம்மால் ஆன உதவியை செய்யவேண்டும் என்பதைக் கற்றுக்கொள்'என்றது.

நாமும் பிறருக்கு உதவி செய்வதை ஒரு குறிக்கோளாகக் கொள்ளவேண்டும்.

கமலின் 'உத்தம வில்லன்'


நடிகர் கமல்ஹாசன்


நடிகர் ரமேஷ் அரவிந்த்




’விஸ்வரூபம் 2’ படத்தினைத் தொடர்ந்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல். 


‘விஸ்வரூபம் 2’ படத்தினைத் தொடர்ந்து கமல் நடிக்கவிருக்கும் படத்தினை யார் தயாரிக்கிறார், இயக்குநர் யார் என்ற கேள்வி நிலவி வந்தது. தற்போது அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்கள்.


‘விஸ்வரூபம் 2’ படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்துமே படமாக்கப்பட்டு முடிந்துவிட்டன. 2 பாடல்களை மட்டுமே காட்சிப்படுத்த வேண்டும். ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு ’வாகை சூட வா’ கிப்ரான் இசையமைத்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது. 


இந்நிலையில், ‘விஸ்வரூபம் 2’ படத்தினைத் தொடர்ந்து கமல், லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்திற்கு கிரேஸி மோகன் வசனம் எழுத ஒப்பந்தமாகி இருக்கிறார்.


‘சதிலீவாவதி’, ’பஞ்ச தந்திரம்’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, ‘மன்மதன் அம்பு’ போன்ற படங்களில் கமலுடன் இணைந்து நடித்த, கமலுக்கு நெருங்கிய நண்பரான ரமேஷ் அரவிந்த் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். கன்னடத்தில் ‘சதிலீலாவதி’ படத்தின் ரீமேக்கை இவர் தான் இயக்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு ‘விஸ்வரூபம் 2’ படம் வெளியானவுடன் தொடங்கவிருக்கிறது.



’உத்தம வில்லன்’ படம் சமூகத்தில் தற்போது நடைபெறும் பிரச்சினையை, காமெடி கலந்து சொல்ல இருக்கிறார்களாம். விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.


 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top