.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 26 October 2013

ரோஜாவில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படுத்துவது எப்படி?

மலர்களின் அரசி என அழைக்கப்படும் ரோஜா வீட்டுத் தோட்டங்களிலும், பசுமைக்குடில்களிலும் மட்டுமல்லாது கொய் மலராகவும் பணப் பயிராகவும் பயிரிடப்பட்டு வருகிறது.


இத்தகைய ரோஜாவில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்குதலால் மகசூல் இழப்பைத் தடுக்க தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமானது.
ரோஜாவை பல்வேறு வகையான பூச்சிகள் தாக்கினாலும் சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவிணி மற்றும் இலைப்பேன் ஆகியவை மட்டுமே மகசூலை குறைப்பதில் முக்கிய காரணியாக உள்ளன.


இலைப் பேன்: இளம் மற்றும் வளர்ச்சியடைந்த இலைப்பேன்கள், இலைகள் மற்றும் பூ மொட்டுகளில் அடியில் இருந்து கொண்டு இலைகளைச் சுரண்டி பின்னர் சாற்றை உறிஞ்சுகின்றன. பாதிக்கப்பட்ட இலைகளின் மேல்பரப்பில் வெண்ணிற கோடுகள் காணப்படும். மேலும், அதிகமான தாக்குதலுக்கு உள்ளான இலைகள் வளர்ச்சி குன்றி காணப்படும். இலைப் பேன்கள் தாக்குதலுக்கான பூவிதழ்களின் ஓரம் காய்ந்தது போன்ற தோற்றமளிக்கும். இப் பூச்சியின் தாக்குதல் அதிகமாகும்போது பூவிதழ்கள் உதிர்ந்து விடும். இளம் பூச்சியானது சிவப்பு நிறத்திலும், வளர்ச்சியடைந்த பூச்சிகள் கருப்பு கலந்த பழுப்பு நிறத்திலும் காணப்படும்.


அசுவிணி : இளம் மற்றும் வளர்ச்சியடைந்த பூச்சிகள் இளந்தளிர் மற்றும் பூ மொட்டுகளில் கூட்டமாக இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சும். இதனால் பாதிக்கப்பட்ட இளந்தளிர் மற்றும் இலைகள் சுருண்டும், சிறுத்தும் காணப்படும். பூ மொட்டுகளின் வளர்ச்சி குறைந்து காணப்படும். மேலும், தாக்கப்பட்ட பூக்களின் இதழ்கள் வெளிறிய நிறத்தில் காணப்படும். அதிகமான தாக்குதலுக்கு உள்ளான மொட்டுகள் விரிவடையாமலேயே உதிர்ந்து விடுகின்றன. இளம் பூச்சிகள் வெளிறிய பச்சை நிறத்திலும், வளர்ந்த பூச்சிகள் கருப்பு கலந்த பச்சை நிறத்திலும் காணப்படும்.


சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த தாக்கப்பட்ட இளந்தளிர்கள், இலைகள் மற்றும் பூ மொட்டுகளை வெட்டி அழித்துவிட வேண்டும். தாவர பூச்சிக் கொல்லியான வேப்பெண்ணெய் 3 சதவீத கரைசலைத் தெளித்து இலைப்பேன், அசுவிணியைக் கட்டுப்படுத்தலாம். இல்லையெனில் டைமீத்தோயேட் 30 இசி 2.5 மி.லி அல்லது மீதைல் மெட்டான் 2 மி.லி. மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.


சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாகும்போது இமிடோகுளோபிரிட் 0.3 மி.லி. என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும் என திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் கு. இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top