.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 22 October 2013

ஓட ஓட.. ஓட ஓட தூரம் குறையலையா?

இன்று உலகம் பரபரப்பாகிவிட்டது. எந்த நேரமும் பதற்றம், மனச் சோர்வு, எரிச்சல், அவசரம் என ஒரே கவலையாகவே மாறிவிட்டது. காரணம் அந்த அளவுக்கு வேகமாக வாழ்க்கை ஓடுகிறது. ரயில் வண்டி போல தொடர் ஓட்டத்தை ஓடிக்கொண்டிருக்கிறோம். இப்படி ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையில் நாம் பலவற்றை இழந்திருக்கிறோம்.


21 - edit yoga_


குறிப்பாக நட்பு, உறவு வட்டாரங்களைப் பெருமளவில் இழந்துள்ளோம். வாழ்க்கையில் நாம் சந்தித்த மனிதர்களில் எத்தனை பேர் நண்பர்கள் என்பதை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா? இல்லை. காரணம், அத்தனை சுலபத்தில் காலம் ஓடிவிடுவதும், தொடர்புகள் துண்டித்திருப்பதும்தான்.


சுமார் 30 ஆண்டுகள் பின்னோக்கி பார்த்தோமேயானால் நம்மோடு பழகியவர்கள், சந்தித்தவர்கள் என பெரிய பட்டியலே இருக்கும். ஆனால் அவர்கள் பற்றிய நினைவுகளை அத்துடன் மூட்டைகட்டி வைத்திருப்போம்.
ஆபத்தில் உதவியவர்கள், முக்கியத் தருணங்களில் சந்தித்தவர்கள் அனைவரையும் மறந்து விட்டோம். தொடர்புகள் துண்டித்ததற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. ஆனால் அதை மீண்டும் புதுப்பிப்பதும் இயலாத காரியமாகிவிடுகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். இதற்கெல்லாம் என்ன காரணம்? மனதை ஒருமைப்படுத்தும் தன்மை கிடையாது. எப்போதும் எதையாவது நினைத்து மனம் அலைபாய்வதுதான்.


இதன் விளைவு மன அழுத்தம், மன உளைச்சல். அதற்கு நாம் இடம் அளிக்கக் கூடாது. “இயற்கை ஒரு கதவை சாத்தினால் மறு கதவைத் திறக்கும்’ என்பதுபோல மனதை அமைதியாக்கினாலே நாம் ஆரோக்கியமாகவும், தெளிவாகவும் வாழக் கற்றுக்கொள்ளலாம்.


இன்று அடிக்கடி நடைபெற்றுவரும் பாலியல் குற்றங்களைப் பார்த்தால் அனைத்துமே திட்டமிடாத மன உந்தலில்தான் நடக்கின்றன என்று தெரியும். போதை, ஒரே சம்பவத்தைத் திரும்பத் திரும்ப நினைத்து ஏங்குதல் போன்றவை அவர்களுக்குள் தவறுசெய்யத் தூண்டுகின்றன.
இறுதியில், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மன நோயாளிகளாகவே மாறியிருப்பதைக் காண முடிகிறது. இதற்கெல்லாம் காரணம் நமது வாழ்க்கை நெறிமுறைகள் தடம் மாறிச் செல்வதுதான்.


விலகிச் செல்லும் பாதையில் பயணிப்பதற்குக் காரணம் தவறான வழிகாட்டல்தான். இதெல்லாம் தெரிந்துதான் நம் முன்னோர் சில வழிமுறைகளை வகுத்து வைத்திருக்கின்றனர். அவை தியானம், யோகம் என அழைக்கப்படுகிறது.


யோகக் கலையில் லட்சக்கணக்கான அம்சங்கள் இருக்கின்றன. அவற்றை முறையாகக் கற்று அனுபவத்தின் அடிப்படையில் 100 வகையான யோகங்களை மட்டுமே நாம் பயன்பாட்டில் வைத்திருக்கிறோம்.
இவைதான் அடிப்படை யோகக் கலை. இதை முறையாகக் கற்றாலே வாழ்க்கையில் உடலளவிலும், மனதளவிலும் மிளிர முடியும். ஆற்றலைப் பயனுள்ள வகையில் செலவழித்தாலே போதுமானது. வீணாகப் பயப்படுதல், சினங்கொள்ளல் போன்றவை தேவையற்றவை. இதைத் தடுக்க நாம் முறையான சில பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.


வாழ்க்கைக்கு எது தேவை என்பதை நாமே திட்டமிட்டுச் செயல்படுத்த முடியும். உடனடியாகப் பலன்தரும் செயல்களைத் திட்டமிட்டு வேலைகளைச் சுருக்கி, பிரணாயாமம், தியானம் போன்றவற்றைக் கடமையாக்கிக் கொண்டால் வாழ்க்கைக்குத் தேவையான சக்திகளை நாம் பெற முடியும்.
தினசரிச் செயல்பாட்டில் இதுபோன்ற அம்சங்களை நாம் முறையாகப் பின்பற்றினால் மிகத் தெளிவான முடிவை மேற்கொள்ளும் பக்குவம் ஏற்பட்டுவிடும். கவலை, கோபம், காமம், குரோதம் என பல்வேறு செயல்களைக் கட்டுப்படுத்த இன்றைய காலகட்டத்தில் அமைதியான பிரார்த்தனை தேவைப்படுகிறது. அதைத் தேர்வு செய்து பின்பற்றினாலே கவலை மறைந்துவிடும்.

0 comments:

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top