.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 7 January 2014

அவசரப்படாதே.! கொஞ்சம் பொறுமையா இரு.!




*ஒரு வீட்டில் அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

" இதோ பாருங்க.......... உங்களுக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா. "
" என்ன சொல்றே?
நம்ம பொண்ணுக்கு வயசாகிகிட்டே போகுது. காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டாமா?

அவசரப்படாதே. கொஞ்சம் பொறுமையா இரு. நானும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். ஒருத்தனும் சரியாய் வரலை. கொஞ்சமாவது கண்ணுக்கு லெச்சணமா, பார்க்கிறதுக்கு அழகா, சுயமாய் சம்பாதிக்கிற ஒரு பையன் கிடைக்க வேண்டாமா.

எங்க அப்பா இப்படியெல்லாம் பார்த்திருந்தா எனக்கு கல்யாணமே ஆகி இருக்காது.

கணவர் கப் சிப் ............. ஆகிறார். இந்த நேரத்தில் மகள் உள்ளே வருகிறாள். அவள் பின்னாடியே ஒரு இளைஞன்.
அப்பா...
என்னம்மா... யார் இந்த பையன்
இவர்தாம்பா அவர்
அவர் ...ன்னா
அதுதான் ஏற்கனவே சொல்லி இருக்கேனே. அவர்தான் இவர். இவரைத்தான் கல்யாணம் செய்துக்க விரும்புறேன்.

அப்படியா வாப்பா..உட்கார்.
உட்கார்ந்தான்.
உன் கிட்டே சில கேள்விகள் கேட்கலாமா
தாராளாமாய் கேளுங்க. அதுக்காகத்தானே வந்து இருக்கேன்.

இப்போ நீ என்ன செய்துகிட்டு இருக்கே
கடவுளை பற்றி ஆராச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்.

அப்படின்னா... உன் எதிர்காலம் பற்றி என்ன திட்டம் போட்டு வச்சு இருக்கே ?
கடவுள் எல்லாத்தையும் கவனித்து கொள்வார்.

சரி உனக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தை பிறக்குது. அப்பறம் என்ன செய்வே
அதையும் கடவுள் கவனிச்சுக்குவார்.

சரி போயிட்டு வா .... அவன் நம்பிக்கையோடு புறப்பட்டு போனான்.

அவன் போன பிறகு அம்மா கேட்டாள்.... பையன் எப்படி?

அப்பா சொன்னார். இவனிடம் பணமும் இல்லை. வேலையும் இல்லை. ஆனால் என்னை மட்டும் கடவுளாக நினைத்து கொண்டிருக்கிறான்.

விசா வாங்க வழிகாட்டும் ஈசியான இணையதளம்!




வெளிநாட்டு பயணங்களை திட்டமிடும் போது எழக்கூடிய முக்கிய கேள்வி , விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை. முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணபிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை.

 ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொறுத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது. குறிப்பிட்ட சில நாடுகள் சில நாடுகளுக்கு மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைகள் பல இருக்கின்றன.இந்த தகவல்களை எல்லாம் இணையத்தில் அங்கும் இங்கும் அல்லாடாமல், ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் விசாமேப்பர்.காம்
(http://www.visamapper.com/ ) இணையதளம் அமைந்துள்ளது.

எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் விசா இல்லாமால் செல்லலாம், எந்த எந்த நாடுகளுக்கு எல்லாம் அங்கே போய் சாவகாசமாக விசா வாங்கலாம் போன்ற தகவல்களை இந்த தளம் தருகிறது. அதுவும் எப்படி, அதிகம் தேடாமல் எடுத்த எடுப்பிலேயே தெரிந்து கொள்ளும் வகையில் அழகாக உலக வரைப்படத்தின் மீது விசா விவரங்களை புரிய வைக்கிறது. இந்த தளத்தில் தோன்றும் உலக வரைபடத்தில் நாடுகள் பல்வேறு வண்ணங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அந்த வண்ணங்களுக்கான அர்த்தம் அருகே உள்ள கட்டங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இண்ட வண்ணங்களை வைத்தே குறிப்பிட்ட ஒரு நாட்டின் விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு பச்சை வண்ணத்தில் மின்னும் நாடுகளுக்கு அங்கே போய் விசா பெறலாம். மெரூன் நிறம் என்றால் முன்னதாகவே விசா பெற வேண்டும். வெளீர் பச்சை என்றால் விசாவே வேண்டாம். மஞசள் வண்ணம் என்றால் அன்லைனில் விண்ணபிக்கலாம். சிவப்பு என்றால் விசாவே கிடையாது.

ஆக, இந்த வரைபடத்தை பார்த்தே ஒருவர் பயணம் செய்ய உள்ள நாட்டிறகான விசா முறை என்ன என அறிந்து கொள்ளலாம். இந்த வரைபடத்தில் மேலும் ஒரு சிறப்பம்சம் , நீங்கள் தேடக்கூட வேண்டாம், அதுவாகவே விவரங்களை காட்டுகிறது என்பது தான்.

அதாவது இந்த தளத்தில் நுழைந்ததுமே ,பயனாளி எந்த நாட்டின் குடிமகன் என புரிந்து கொண்டு அந்த நாட்டுக்கான விசா நடைமுறையை வரைபடமாக காட்டுகிறது. உதாரணத்திற்கு இந்தியாவில் இருந்து பயன்படுத்தும் போது ,இந்தியாவுக்கான இடம் குடியிருக்கும் நாடு என காட்டப்படுகிறது. இந்தியர்களுக்கு மற்ற நாடுகள் எப்படி விசா தருகின்றன என்பது வண்ணங்களாக காட்டப்படுகிறது. ஆக, பயனாளி வேறு நாட்டில் இருந்து அணுகும் போது அவரது நாட்டுக்கான விசா வரைபடம் தோன்றும். அற்புதம் தான் இல்லையா?

அதே நேரத்தில் வரைபடத்தின் மீது உள்ள, ’நான் இந்த நாட்டு குடிமகன்’ என குறிக்கும் கட்டத்தில் ஒருவர் தனக்கான நாட்டை தேர்வு செய்து பார்த்தால் அந்த நாட்டுக்கான உலக விசா நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதியில் பல்வேறு நாடுகளை கிளிக் செய்து பார்த்தால் எந்த எந்த நாடுகள் எந்த எந்த நாடுகளுக்கு விசா சலுகை அளிக்கின்றன என்ற தகவலையும் தெரிந்து கொள்ளலாம். உலக அரசியலை அறிவதற்கான சின்ன ஆய்வாகவும் இது அமையும். உலக அரசியல் யாதார்த்ததையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விசா பற்றி அறிய விரும்புகிறவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும். ஆனால் ஒன்று இது ஒரு வழிகாட்டி தளமே. இதில் உள்ள விவரங்களை அதிகாரபூர்வமானதாக கொள்வதற்கில்லை. தகவலை எளிதாக தெரிந்து கொண்டு அதனை அதிகார்பூர்வ தளங்களின் வாயிலாக உறுதி செய்து கொள்வது நல்லது. மேலும் இந்த தளத்திலேயே, விடுபட்டிருக்கும் நாட்டை சேர்கக அல்லது பிழையான தகவலை சரி செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதே போலவே விசாமேப்.நெட்
(http://www.visamap.net/) எனும் இணையதளமும் விசா தொடர்பான தகவல்களை வரைபடம் மூலம் தருகிறது. விசா தகவல்களோடு தூதரக அலுலகங்கள் எங்கே உள்ளன போன்ற தகவல்களையும் அளிக்கிறது. விசா நோக்கில் பிரபலமான நாடுகளின் பட்டியலும் இருக்கிறது. ஐபோனுக்கான செயலி வடிவமும் இருக்கிறது. ஆனால் இந்த தளமும் வழிகாட்டி நோக்கிலானது தான். இதில் உள்ள தகவல்கள் உறுதி செய்து கொள்ளப்பட வேண்டும்.

பெண்கள் ரயிலில் பாதுகாப்பு குறித்து புகார் தெரிவிக்க தனி இ-மெயில்!




ரயில் நிலையங்களிலும், ஓடும் ரயிலிலும் பயணிகளுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் புகார் தெரிவிக்க பிரத்யேக இணையதளத்தைத் தொடங்கியுள்ளது ரயில்வே பாதுகாப்புப் படை.அத்துடன் பயணிகள் தங்கள் குறை களை ஹெல்ப் லைன்களிலும் (90031 61710, 044-25353999) தெரிவிக்கலாம்.மேலும் முக்கியமான 20 ரயில் நிலையங்களில் புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரை – தாம்பரம், சென்னை கடற்கரை – வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் – அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கங்களில் தற்போது இரவு நேரத்தில் 96 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. அப்போது பெரும்பாலும் போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் பெண்களை கேலி செய்வது, செயின் பறிப்பு போன்ற அசம்பாவிதங்கள் நடப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து இரவுநேர மின்சார ரயில்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை, சென்ட்ரல், மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ், எழும்பூர், மேற்கு மாம்பலம், தாம்பரம், பரங்கிமலை, திருவள் ளூர், அரக்கோணம், கும்மிடிப் பூண்டி, எண்ணூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

பயணிகளுக்கு குறிப்பாக பெண் களுக்கு ஏதாவது அசெளகரியம் ஏற்பட்டால் புகார் தெரிவிக்க rpfsakthipadai@gmail.com என்ற இ-மெயில் முகவரியை ரயில்வே பாதுகாப்புப் படை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முதுநிலை கோட்ட ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் எஸ்.ஆர்.காந்தி,”பயணிகள் குறிப்பாக பெண் பயணிகளின் குறைகளைப் போக்க முக்கியமான 20 ரயில் நிலையங்களில் ஆலோசனைப் பெட்டிகளை வைத்துள்ளோம். அது போல தனி மின்னஞ்சல் முக வரியை ஏற்படுத்தியுள்ளோம்.

புறநகர் மின்சார ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணம் செய்யும்போது திருநங்கைகள் தொந்தரவு, பாலியல் துன்புறுத் தல், கேலி, கிண்டல் போன்ற பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மட்டுமல்லாமல் ரயில் பெட்டி களை சுத்தம் செய்யாததால் குப்பைகள் அதிகமாக இருப்பது, மின்விசிறிகள் ஓடாமலும், மின்விளக்குகள் எரியாமலும் இருப்பது குறித்து புகார் கொடுக்கலாம்.

புகார் மற்றும் ஆலோசனைப் பெட்டிகளை சம்பந்தப்பட்ட ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் தினமும் திறந்து பார்த்து அதிலுள்ள மனுக்களை எங்கள் அலுவலகத்துக்கு அனுப்பு வார். பாதுகாப்பு தொடர்பான புகார் என்றால், விரைவில் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடப்படும்.

ரயில்வேயின் மற்ற துறை கள் தொடர்பான புகாராக இருந் தால், உரிய துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப் படும். நடவடிக்கை எடுத்த பிறகு அதுபற்றி புகார்தாரருக்கும் தெரிவிக்கப்படும்

இந்தப் பெயர்கள் எப்படி வந்தன.?



சஹாரா:

“சஹாரா’ என்னும் சொல்லுக்கு அரேபிய மொழியில் “பாலைவனம்’ என்று பொருள்.


“ஆரஞ்ச்’ வந்த வழி:

வடமொழியில் “நருகுங்கோ’ (NAGRUNGO) ஆக இருந்து இந்துஸ்தானியில் “நாருங்கோ’ ஆகி உருதுவில் நாரஞ்சாகி, இத்தாலியில் “ஆரஞ்சியா’வாகி ஆங்கிலத்தில் “ஆரஞ்ச்’ ஆகிவிட்டது இந்த ORANGE.


தாய் + தந்தை:

தாய், தந்தை என்ற பெயர்களுக்குக் காரணம் என்ன தெரியுமா? குழந்தையைத் தாவி எடுத்துத் தழுவுதலால் “தாய்’ என்று பெயர் வந்தது. அதேபோல குழந்தையைத் தந்த தலைவன் தந்தை. தந்த + ஐ இரண்டும் சேர்ந்தது “தந்தை’ ஆனது.


உதகமண்டலம்:

தோடர்கள் மலைப்பகுதிகளில் வாழ்கிறார்கள். இவர்கள் குடிசைகள் இருக்கும் பகுதிகளுக்கு “மந்து’ என்று பெயர். உதகையில் இவர்கள் குடிசைகள் இருக்கின்றன. இதற்கு “உத மந்து’ என்று பெயர். இதனால்தான் இந்தப் பகுதிக்கு “உதகமண்ட்’ என்றும் “உதக மண்டலம்’ என்றும் பெயர் வந்தது.


காகிதம்:

“காகிதம்’ என்பது தமிழ்ச் சொல் அல்ல. அரபுச் சொல். “காகஸ்’ என்ற அரபுச் சொல்தான் தமிழில் “காகிதம்’ என்று வழங்கப்படுகின்றது.


திங்கள்:

திங்கள் என்றால் “சந்திரன்’. வானத்தில் தோன்றி, வளர்ந்து, தேய்ந்து, மறையும்வரை உள்ள கால அளவே “திங்கள்’ அல்லது “மாதம்’ ஆகும்.


கிருதா:

“கிருதா’ என்ற சொல் “கிர்தா’ என்ற உருதுச் சொல்லிலிருந்து வந்தது.


சர்க்கரை:

சர்க்கரை என்ற சொல் “சொர சொரப்பு’ என்று வழங்குவதால் சர்க்கரை. இது “ஜர்ஜரா’ என்ற வடசொல்லின் திரிபு.


டொபாக்கோ (புகையிலை):

ஊதல், உண்ணல், உறிஞ்சல் ஆகிய மூன்றுக்கும் பயன்படுவது புகையிலை. இந்த இலைக்கு டொபாக்கோ என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? இந்த இலையைப் போட்டு சிவப்பிந்தியர்கள் புகை பிடிப்பதை வால்டர் ராலே என்பவர் முதன்முதலாகப் பார்த்து அறிந்துகொண்டார். இந்த இலைகளைச் சுருட்டி வாயில் வைத்துப் புகைத்தால் அந்தப் புகையை இழுப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை சிவப்பிந்தியர்கள்தான் முதன் முதலாகக் கண்டுபிடித்தனர்.

 இலைகளை அம்மாதிரி சுருட்டுவதை அவர்கள் தங்கள் மொழியில் “டோபாகோ’ என்று அழைத்தனர். அதுவே நாளடைவில் டொபாக்கோ என்று மருவி விட்டது.


பஞ்சாங்கம்:

கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம் – இவைகள் அடங்கியதுதான் “பஞ்சாங்கம்’. பஞ்ச் என்றால் ஐந்து. அங்கம் -பங்கு வகிப்பது; இடம்பெறுவது.

முதலில் சொன்ன ஐந்தும் அங்கம் வகிப்பதால் “பஞ்சாங்கம்’ என்று பெயர் வந்தது.

ஆலமரம்:

ஆலமரத்துக்கு ஆங்கிலத்தில் “பன்யன்’ என்று பெயர். பனியன் என்னும் சில வியாபாரிகள் பாரசீக வளைகுடாவில் “பந்ரா அப்பாஸ்’ என்னும் துறைமுகத்துக்கு அருகில் இருந்த ஒரு ஆலமரத்தின் அடியில் கோயில் கட்டி வழிபட்டு வந்தார்கள் என்றும்,
அதனால் அந்த மரத்துக்கு பன்யன் என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள்

பூப்பு நீராட்டு - ஒரு வரலாற்று பார்வை....!



புதிய உலகத்தில்
பெரியமனுசியாய்
கடமைகளுடன்
கால்தடம் பதிக்கிறாய்.
வா.
பெருமையுடனும்
மரியாதையுடனும்
வலிமை பொங்க
நடந்து வா.
இன்று முதல்
நீ -
நம் மக்களின் தாய்.
நம் தேசத்தின் தாய்.



பெண்ணின் பூப்படைதலைப் பெருமையுடன் பாடும் அப்பச்சி (Apache) இனக்குழு மக்களின் பாடல் இது.


பெண் பூப்படைதல் என்பது பல்வேறு இனக்குழு மக்களின் வாழ்க்கையில் கொண்டாட்டத்திற்குரிய சடங்காகவே இருந்து வந்துள்ளது. பூப்பு என்பது தீட்டு, விலக்கு, தீண்டத்தாகதது என்று எதிர்மறையாக நோக்கப்படவில்லை. பூப்பு என்ற சொல் தொடர்ச்சியாக வண்டு நுகர்தல், பிஞ்சு, காய், கனி, என்ற பிம்பங்களை மட்டுமே உருவாக்கி அதன் வழி இனவிருத்திக்கு காரணமான நேர்மறைச் செயலாகவே கருதப்பட்டது. ஆரிய இனப்பண்பாட்டின் தாக்கமும் வைதீகமும் ஆண் சமுதாயமும் கலந்து பெண்ணை அடிமைப்படுத்த முனைந்த காலத்தில் தான் பூப்பு என்ற செயல் "தீட்டாகிப்" போனது.

மனித வரலாற்றில் இனவிருத்தியின் நிலமாக இருந்தப் பெண்ணின் ஆளுமையைக் கண்டு வியந்து அச்சம் கொண்டு அவள் தலைமையை ஏற்றுக்கொண்ட இனக்குழு வாழ்க்கையில் பெண் தெய்வ வழிபாடே இருந்தது என்பதும் இன்றும் சிவப்பு நிறமும் நெற்றியில் இடப்படும் குங்குமச் சிவப்பும் ரத்தப் பலியிடலும் ஆகிய சடங்குகளின் காரணத்தை ஆராயப் புகுந்தால் பூப்பு என்ற சடங்கின் வேர்களை அடையாளம் காண முடியும். நிலமும் நிலம் சார்ந்த மருதமும் இனக்குழு வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களில் குறிப்பிடத்தக்கது.

பெண் -இல்லாள் என்றும் மனைமாட்சி என்றும் மாற்றம் பெற்ற காலம். பூப்பு பெண்ணின் ஆளுமையாக இருந்தது மறைந்து இனவிருத்திக்கான அடையாளமாக மட்டுமே சுருங்கிய காலம்.

ஆண் -பூப்படைதல் சடங்கு

ஆணுக்கான சடங்குகள் அனைத்தும் போர், வேளாண்மை, அரசாட்சி என்று சமூக ஆள்வினைக்கான சடங்குகளாகவும் பெண்ணுக்கான சடங்குகள் அனைத்தும் பாலியல் உடல் சார்ந்தும் அவ்வுடல் பாலுறவு, மகப்பேறு என்று இனவிருத்தி சார்ந்தும் அமைந்ததாக காணப்படுகின்றன. அருந்தா இனக்குழு வாழ்க்கையில் ஆண் பூப்படைதல் சடங்கு கொண்டாடப்பட்டதைக் காணலாம். அதுவரை ஆடையின்றி அலைந்த ஆண்மகன் வயதுக்கு வந்துவிட்டான் என்பதை அறிவிக்கவும் கொண்டாடவும் அவன் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் சடங்கு இது. அக்குழுவின் வயதான முதியவர் இச்சடங்கை நிகழ்த்துவார்.

தன் தலையால் ஆண்மகனின் தலையை மோதி ரத்தம் சிந்த வைப்பார். எறும்பு கடிக்கும் குழிக்குள் அவனை தள்ளி உணவின்றி சில நாட்கள் வைப்பார்கள். வீரமும் வலி பொறுத்தலும் போர் வாழ்க்கையில் ஆணுக்கான அம்சங்களாக இருப்பதால் இச்சடங்கை ஆணின் "மறுபிறப்பு" என்று சொல்கிறார்கள்.

ஆண் பூப்படைதல் சடங்கை "பிணை அறுத்தல்" - க்யா மோட்டு டி செலி (kia motu te sele - to snap the tie) என்றும் பெண் பூப்படைதல் சடங்கை "பாவாடை அணிதல்" ( hakatiti - titi skirt) என்றும் மேற்கத்திய நாடுகளின் இனக்குழு மக்களின் சடங்குகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

பல்வேறு நாடுகளில் பூப்பு சடங்குகள்:


பெண் கருத்தரிக்கும் தகுதியை அடைந்துவிட்டாள் என்பதற்கான உடற்கூறு அறிகுறியை பூப்படைதல் என்று சொல்வர். பெண்ணுக்கு முதலாவதாக நேரும் இந்தப் பூப்படைதல் நிகழ்ந்த பிறகே அவளுக்குப் பாலியல் சுகம் உண்டாகிறது என்பதில்லை. தனி நபரின் உடல் வளர்ச்சியைப் பொறுத்து பெண்ணின் பூப்புக்கு முன்போ பின்போ அத்தகைய சுகத்தை அவள் உணரலாம். எனவே பூப்பு எனில் பெண் கருத்தரிக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டாள் என்ற அளவில்தான் பொருள் கொள்ள வேண்டும். பெண் பூப்படைதல் சடங்கு பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

ரஷ்யாவில் பெண் பூப்படைந்த உடன் அவள் தாய் பெண்ணின் முகத்தில் ஓங்கி அறைவிடுவாளாம். அவள் அடித்த அடியில் பெண்ணின் கன்னங்கள் சிவந்துவிடுவதை நல்ல அறிகுறியாக நினைக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.

நேபாளத்தில் பெண் பூப்படைந்தவுடன் அவளை ஒரு இருட்டறையில் அடைத்து வைக்கிறார்கள். வெளியில் வரவோ சூரிய ஒளியைப் பார்க்கவோ கூடாது. அதன் பின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவள் திருமணத்திற்கு தகுதியுடையவளாகிவிட்டாள் என்பதை உணர்த்தும் வகையில் அவளுக்கும் சூரிய பகவானுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும்.

ஆப்பிரிக்கா சுலு (Zulu) இனத்தில் பெண் பூப்படைந்த நாளில் ஆடு பலியிடுதல் நடக்கும். அந்தப் பெண் அவள் ஒத்தப் பெண்களுடன் காலையில் எழுந்து நதியில் நீராடி வந்தப் பின் அவள் உடல் எங்கும் சிவந்த களிமண்ணைப் பூசுவார்கள். பூப்படைந்த அந்த நாட்களில் சில உணவுகளை அவள் விலக்க வேண்டும். வயதானவர்களும் அவளைப் போல ஏற்கனவே பூப்படைந்தப் பெண்களும் பூப்படைந்தப் பெண்ணின் உடல் மாற்றங்களையும் வாழ்க்கை முறையையும் சொல்லிக் கொடுப்பார்கள்

ஜப்பானில் பெண்ணின் பெருமைக்குரிய சடங்காக பூப்படைதல் நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். விருந்துக்கு அழைக்கும் போது விருந்துக்கான காரணத்தைச் சொல்வதில்லை. சிவந்த அரிசியும் பீன்ஸ்சும் நிறைந்த பெரிய தட்டை பூப்படைந்தப் பெண்ணின் முன்னால் வைத்திருப்பதன் மூலம் விருந்துக்கும் கொண்டாட்டத்திற்குமான காரணம் சொல்லப்படும்.

இந்தியாவிலும் பெண் பூப்படைதல் சடங்கு எல்லா இன மக்களிடமும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இச்சடங்கு இன்றும் கொண்டாடப்படுகிறது. "பூப்பு நன்னீராட்டல்" என்று இச்சடங்கை கொண்டாடும் வழக்கம் இன்றும் தமிழர்கள் வாழ்வில் இடம் பெற்றுள்ளது. இச்சடங்கு குறித்த பதிவுகளை தமிழ்த் திரைப்படங்கள் அளவுக்கு யாரும் பதிவு செய்திருக்க முடியாது! தாய்மாமன் உரிமையிலிருந்து பூப்படைந்தவுடன் பாலியல் உணர்வு ஏற்படுவதாக காட்டப்படும் காட்சிகள் வரை உண்மை, பொய் அனைத்தையும் பூப்பு நன்னீராட்டில் கலந்து காட்டிய பெருமை நம் தமிழ்த் திரைப்படங்களுக்கே உண்டு.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top