.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 5 January 2014

இண்டர்நெட் அதிகமாக பயன்படுத்துபவர்கள் அடிமையாகும் அறிகுறிகள்



இண்டர்நெட் அதிகமாக பயன்படுத்தும் இளம் வயதினர் அடிமையாகும் அறிகுறிகள் வெளிப்படுத்துபவராக இருப்பார் என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உட்பட, விஞ்ஞானிகளும் கண்டறிந்துள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மிசோரி பல்கலைக்கழகம், டியூக் பல்கலைக்கழக மருத்துவ மையம் மற்றும் மூளை அறிவியல் டியூக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், இண்டர்நெட் பயன்படுத்துபவர்கள் அடிமையாகும் நடவடிக்கைகளை ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளனர்.

இந்தியாவின் சென்னையில் நடந்த அட்வான்ஸ்ட் நெட்வொர்க்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் சர்வதேச மாநாட்டில் மின்சார மற்றும் மின்னணு பொறியியல் கல்வி நிறுவனம் (IEEE) இரண்டு மாதங்களில் 69 கல்லூரி மாணவர்கள் இன்டர்நெட் பயன்பாடு கண்காணிக்கப்பட்டு டிசம்பர் 18-ம் தேதி ஆராய்ச்சி வழங்கியுள்ளனர். அதில் சில வகையான இன்டர்நெட் பயன்பாடு மற்றும் ஈர்த்த நடத்தைகள் ஆகிய இரண்டுக்கும் இடையே ஒரு தொடர்பு ஏற்படுத்துதலை வெளிப்படுத்தியுள்ளது.

ஆய்வு ஆரம்பத்தில், 69 மாணவர்கள் இண்டர்நெட் தொடர்பான பிரச்சினை அளவு (IRPS) என்று அழைக்கப்படும் 20 கேள்வி கணக்கெடுப்பு நிறைவு செய்துள்ளனர். இன்ட்ரோவெர்ஷன், திரும்ப பெற, அடங்கா ஆசை, சகிப்புத்தன்மை மற்றும் எதிர்மறை வாழ்க்கை விளைவுகள் போன்ற அடிமையாகும் பண்புகளை அடையாளம் காண்பதற்காக இந்த அளவு உருவாக்கப்பட்டது.

இதில் விளையாட்டு, சாட்டிங், ஃபைல் டவுன்லோட், இமெயில், ப்ரவ்சிங் மற்றும் சமூக வலைப்பின்னல் (Facebook மற்றும் Twitter) உட்பட பல பிரிவுகளாக இண்டர்நெட் பயன்பாடு பிரிக்கப்பட்டுள்ளது. மொத்த IRPS மதிப்பெண்களில் விளையாட்டு, சாட்டிங் மற்றும் ப்ரவ்சிங் அதிகபட்ச தொடர்புகள் வைக்கப்பட்டுள்ளது, மற்றும் மின்னஞ்சல், சமூக வலைப்பின்னல் மிகக்குறைந்த தொடர்புகள் வைக்கப்பட்டுள்ளது.

உறவை பரிசோதிக்காலாகாது...?




உணவால் அல்ல ஊக்கத்தால் ஊட்டம் பெருகிறது குழந்தை

உணவிலும் வார்த்தையிலும் செலவிலும் சிக்கனமாக இரு

உணவின்றி கூட ஒருவன் இருப்பான் ஓசையின்றி இருக்கமாட்டான்

உணவு இயற்கை கொடுக்கும் உங்களுக்கு தொழில் இங்கு அன்பு செய்தலே

உணவு இலையிலிருந்தால் விருப்பு தரையிலிருந்தால் அறுவெறுப்பு

உணவு உடை உத்தமம் சத்யம் என்பது அதற்கு சரியான வழிகள்

உணவு உண்ணாமல் யாராலும் சிந்திக்க முடியாது

உணவு உறவு உறக்கத்துக்கு அடிமையாகதவன் செயலே வெற்றி பெறும்

உணவு உறவு உறக்கம் தள்ளிப் போட்ட இளைஞன் அறிஞன் ஆனான்

உணவு ஒய்வு அமைதி ஆனந்தம் இவையே சிறந்த மருந்துகள்

உணவு பரிசோதிக்கப்படலாம் உறவை பரிசோதிக்காலாகாது

உணவு வேக காத்திராதவர் வேகாத சோறை உண்ணுகிறார்

உணவு,உடை,உறை கொடுத்தாலும் இனிய சொல்லுக்கு ஈடாகாதே

உணவை குறைத்து உழைப்பை அதிகரித்தால் நோய் வராது

உணவை சுவையாக்கும் உன்னத பொருள் பசியின்றி வேறில்லை

உணவைப் பார்த்தால் உறவைக் கூப்பிடும் கண்ணியவான்கள் காகங்கள்

இட்லி, தோசை மாவில் பயங்கர கலப்படம்..!



தென்னிந்தியர்களின் உணவில் இட்லிக்கு எப்போதுமே முக்கிய இடம். பண்டிகை நாளில் தயாரிக்கப்படும் உணவாக இருந்து, கிரைண்டர் வருகைக்கு பிறகு அன்றாட உணவாகி விட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இட்லி, தோசை மாவை விலைக்கு விற்கும் பழக்கம் விரிவடைந்துக் கொண்டே போகிறது. இட்லி, தோசை மாவு விற்கப்படுவதால் ஒரு புறம் பெண்களின் வேலைச்சுமை குறைகிறது. மறுபுறம் வீட்டில் இருந்தபடியே பணம் ஈட்டும் தொழிலாக மாவு விற்பனை நடைபெறுகிறது.

சிறிய மளிகைக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. அரை கிலோ பாக்கெட் மாவு ரூ.30. பாக்கெட்டுகளில் விற்கப்படும் மாவுகளில் தயாரிக்கப்பட்ட தேதி, எத்தனை நாள் வரை பயன்படுத்தலாம்.

தயாரிக்கப்பட்ட இடம், தரம், சேர்க்கப்பட்டுள்ள அரிசி, உளுந்து விகிதம் என அனைத்தும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரிக்கப்படும் மாவு தரமான உளுந்து, அரிசி, அரைக்கப்படும் கிரைண்டர், பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும் என நிபந்தனை. ஆனால், இந்த நிபந்தனைகளை பின்பற்றுகிறார்களா என்பது கேள்விக்குறியே. இம்மாவில் ஆமணக்கு விதை, ஆப்ப சோடா, ஈஸ்ட், படிகாரம், பிளீச்சிங் பவுடர், ஒயிட் கெமிக்கல்ஸ் போன்றவை கலப்படம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

இவ்வாறு கலப்படம் மற்றும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு தண்ணீரால் பரவும் நோய்கள், வயிற்று வலி உட்பட பல்வேறு பாதிப்புகள் வருகின்றன என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். குடிசை தொழில் போல் பெருகி வரும் மாவு விற்பனை தொழிலை முறைப்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்தி சுகாதாரமான முறையில் தரமான மாவு பொது மக்களுக்கு கிடைக்க அதிகாரிகள் முயற்சிக்கவேண்டும்.

மதுரை மருத்துவக்கல்லூரி ஓய்வு பெற்ற நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில் ‘இட்லி, தோசை மாவு தரமான அரிசி, உளுந்து கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு விற்கப்படும் போது யாருக்கும், எவ்வித பாதிப்பும் கிடையாது. மாவு தயாரிக்க நல்ல தண்ணீர் அல்லது மினரல் வாட்டர் பயன்படுத்தப்படுவது அவசியம்.

மாவு தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து 7 நாட்கள் வரை தான் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த முடியும். அதற்கு மேல் கெட்டுப் போய் விடும். இம்மாதிரியான சூழலில் மாவு தயாரிக்கும் அனைவரும் தரமான அரிசி, உளுந்துகளை பயன்படுத்துகிறார்கள் என சொல்ல முடியாது. கடைகளில் மக்கி போன, பூஞ்சை படர்ந்த அரிசி, உளுந்து போன்றவை மாவு தயாரிப்பவர்களுக்காக மிகவும் குறைவான விலையில் விற்கப்படுகிறது.

எடுத்துக்காட்டாக ஒரு கிலோ இட்லி அரிசி ரூ.35 என்றால் காலாவதியான அரிசி கிலோ ரூ.5 முதல் ரூ.10க்கு கிடைக்கிறது. அதே போல் உளுந்து கிலோ ரூ.70 என்றால் இந்த உளுந்து அதிகபட்சம் கிலோ ரூ.20 தான். தற்போது கிடைக்கும் விலையில்லா அரிசியைக் கொண்டு குறைவான செலவில் அதிக லாபம் ஈட்டலாம். மாவு வெண்மையாக, பஞ்சு போல் இருப்பதற்காக சிறிதளவு சுண்ணாம்பு, பிளீச்சிங் லிக்குவிட் போன்றவை பயன்படுத்தப்படுகிறது. அரைத்தவுடன் புளிப்பதற்கு ஈஸ்ட் பயன்படுத்தப்படுகிறது.

மாவு தயாரிக்கும் அனைவரும் இம்மாதிரியான முறைகளையே பின்பற்றுகின்றனர் என்று சொல்ல இயலாது. பெரும்பாலானவர்கள் குறிப்பாக வீடுகளில் மாவு தயாரிப்பவர்கள் சுகாதாரமான முறைகளை பின்பற்றுவது கடினம்.  மினரல் வாட்டரை மாவு தயாரிக்கும் அனைவருமே பயன்படுத்துவதற்கான வாய்ப்பு குறைவு. தயாரிக்கப்படும் கிரைண்டர், இடம் சுகாதாரமான முறையில் இருக்கிறதா? என்பதும் கேள்விக்குறியே. இவ்வாறு தயாரிக்கப்படும் மாவுகளை உண்ணும் போது  உடனடியாக 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதிக்கும். கொஞ்சம், கொஞ்சமாக எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும்.

சரியான முறையில் அரிசி, உளுந்து கழுவப்படாமல் இருந்தால் நீரில் பரவும் நோய்களான டைப்பாய்டு, காலரா, போன்றவை வர வாய்ப்புள்ளது. இதனையே தொடர்ந்து பயன்படுத்தும் போது தோல் சம்மந்தமான வியாதிகள், குடல் பாதிப்புகள், உணவு விஷமாதல்(புட் பாய்சன்) ஏற்படும். செறிமான கோளாறு, அடிக்கடி வயிறு வலி, வயிறு எரிச்சல் வரும். பிளாஸ்டிக் பைகளில் பேக்கிங் செய்யப்பட்டு குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படுவதாலும் பாதிப்புகள் ஏற்படலாம். வெளியில் மாவு வாங்குவதை தவிர்ப்பதன் மூலமே இம்மாதிரியான நோய்களை தடுக்க இயலும்‘ என்றார்.

மாவு விற்பனை மூலம் அதிக லாபம்

வீடுகளில் மாவு விற்பனை செய்யும் சாந்தி கூறியதாவது: ‘ஒரு படி ரேஷன் அரிசிக்கு, கால் கிலோ ரேஷன் உளுந்து பயன்படுத்துவோம். ஒரு டீஸ்பூன் வெந்தயம் போடுவோம். ரேஷன் அரிசி இலவசமாக கிடைக்கிறது. ரேஷன் உளுந்து ஒரு கிலோ ரூ.30 தான். அப்போது கால் கிலோ உளுந்து ரூ.7.50. இதனை அரைக்க ஒரு யூனிட் கரன்ட் தான் செலவாகும். ஆக மொத்தம் ஒரு படி மாவு அரைக்க தயாரிப்பு செலவு ரூ.10 தான். மாவு பஞ்சு போல் சாப்ட்டாக வருவதற்கு கொஞ்சம் ஆப்ப சோடா சேர்த்துக்கலாம். ரேசன் பச்சரிசி பாதி, ரேஷன் புழுங்கல் அரிசி பாதி சேர்த்தால் மாவு வெள்ளையா தான் இருக்கும். நல்லா கழுவிட்டா வாடையே இருக்காது. இந்த மாவை ஒரு கப் ரூ.20க்கு 5 பேருக்கு விற்கலாம். ஒரு நாளைக்கு எப்படியும் 5 படி அரைச்சு விற்போம். இதனால் குறைந்தது ரூ.400 லாபமாக கிடைக்கும்‘ என்றார்.

புகார் வந்தால் நடவடிக்கை உறுதி

மதுரை மாவட்ட உணவு மற்றும் மருந்தியல் பாதுகாப்பு நிர்வாக அலுவலர் டாக்டர் சுகுணா கூறியதாவது: ‘மதுரை மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரம் பேர் உணவு பொருட்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதில் 8 ஆயிரம் பேர் இட்லி, தோசை மாவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடைகளில் பாக்கெட் செய்து இட்லி தோசை மாவு விற்பனை செய்பவர்கள் எங்களிடம் பதிவு செய்துள்ளனர். அவர்களின் தயாரிப்பு இடம், தயாரிப்பு முறை, பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தையும் ஆய்வு செய்து உரிமம் வழங்கியிருக்கிறோம். வீடுகளில் மாவு தயாரிப்பவர்களையும் எங்களிடம் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறோம். ஆனால் யாரும் முன்வருவது இல்லை. மேலும், சுகாதாரமான முறையில் எவ்வாறு மாவு தயாரிக்க வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.  புகார் பெறப்பட்டால் மாவு ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டு, கலப்படம், சுகாதாரமின்மை கண்டறியப்பட்டால் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச்சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்றார்.

3 வருடம் சிறை தண்டனை உண்டு

நுகர்வோர் கண்காணிப்பகத்தின் தலைவர் வக்கீல் பிறவிப்பெருமாள் கூறுகையில், கலப்பட தடைச் சட்டம் மற்றும் உணவுப்பொருள் தர நிர்ணயம் சட்டப்படி புகாருக்குள்ளான உணவுப்பொருளின் மாதிரி எடுக்க வேண்டும். 14 நாட்களுக்கு பகுப்பாய்வு செய்து அதன் முடிவை உணவு பாதுகாப்பு ஆணையருக்கு கொடுக்க வேண்டும். ஆய்வு முடிவின் அடிப்படையில் இருவிதமான சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்தால் மாஜிஸ்திரேட் கோர்ட் மூலம் வழக்கு நடைபெறும். இதில் 3 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும். அடுத்த நிலையில் டிஆர்ஓ கோர்ட் மூலம் வழக்கு நடத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும். அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கலப்பட தடுப்பு பிரிவிற்கு என தனியாக நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

எகிறும் பெட்ரோல், டீசல் விலை மாற்று எரிபொருளாக எத்தனால் வருமா?



ஆண்டுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்வையே அதிர்ச்சியோடு பார்த்தவர்களுக்கு இப்போது வழக்கமாகி விட்டது. குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு ஊடகங்களில் பிரதான செய்தியாக இடம் பிடிக்கிறது. அன்றாடம் வேலைக்கு செல்ல இரு சக்கர வாகனம் அல்லது கார் பயன்படுத்துபவர்களாக இருந்தால் எரிபொருளுக்கென தனியாக பட்ஜெட் போட்டு முன் கூட்டியே சேமிக்க பழகி விட்டனர். மற்ற பொருட்களின் விலைவாசி உயர்வுக்கும் அடிப்படை காரணமாக டீசல் விலை உயர்வு அமைந்து விடுகிறது.

கடந்த 2010ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.47.93க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ.74.74க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப உள்நாட்டில் விலையை உயர்த்திக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இதை சாதகமாக பயன்படுத்தி ஒரு ஆண்டுக்குள் 9 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. ஒருபுறம் எதிர்க்கட்சிகள், பல மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை கடமையாக கொண்டுள்ளனர்.

ஆனால் இதற்கான மாற்று திட்டங்களில் பலர் கவனம் செலுத்துவதில்லை என்பது தான் உண்மை. மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை நீக்கினால் ஓரளவு குறைந்த விலைக்கு பெட்ரோல் வாங்க முடியும். ஆனால் வரியை குறைப்பதோ அல்லது நீக்குவதோ சாத்தியமில்லாதது. கோவாவில் மட்டும் விற்பனை வரி குறைக்கப்பட்டது. இனி வரும் ஆண்டுகளிலும் பெட்ரோல், டீசல் விலையேற்றம் தவிர்க்கமுடியாதது. இதற்கு மாற்று தீர்வு எத்தனால் பயன்பாட்டை அதிகரிப்பது மட்டும் தான். இந்தாண்டின் துவக்கத்தில் சர்க்கரை ஆலைகளில் 5 சதவீதம் மட்டும் எத்தனால் எரிபொருள் உற்பத்திக்கு மத்திய அரசு அனுமதியளித்தது.

இதை மேலும் ஊக்குவிக்கவேண்டும். எத்தனாலை தவிர வேறு எதுவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டம் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்காது. எத்தனால் தயாராவது எப்படி: கரும்பு சாறுடன் சாக்ரோமைசிஸ் செர்வேசியே என்ற ஈஸ்ட் சேர்க்கப்படுகிறது. இந்த நுண்ணுயிரி தான் எத்தனால் தயாரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. மொலாசஸிஸ் இருந்து 97 சதவீதம் தூய எத்தனால் தயாரிக்கப்படுகிறது. எத்தனால் பயன்பாடு மூலம் கார்பன் டை ஆக்ஸைடின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. 

பெட்ரோல், டீசலில் லிட்டருக்கு 25 சதவீதம் முதல் 85 சதவீதம் வரை எத்தனாலை கலந்து பயன்படுத்தலாம். அதிகபட்சம் ரூ.30க்கு ஒரு லிட்டர் எத்தனாலை வாங்க முடியும். இந்தியாவில் தற்போது தயாரிக்கப்படும் கார் இஞ்சின்களில் 25 சதவீதம் எத்தனாலை பயன்படுத்தும் வகையிலே வடிவமைக்கப்படுகிறது. இந்தியாவில் சாத்தியமா?: இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் விருதகிரி கூறியதாவது: இந்தியாவில் கரும்பு உற்பத்தி அதிகம். தமிழகத்தில் 2.5 லட்சம் ஏக்கரில் கரும்பு சாகுபடி நடக்கிறது.

சர்க்கரை ஆலைகளில் 20 ஆயிரம்  விவசாயிகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். தமிழக அரசு மொத்தம் 9 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு எத்தனால் தயாரிக்க அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அங்கு தயாரிக்கப்படும் எத்தனாலை தமிழக டாஸ்மாக் கடைகளுக்கு தேவையான எரிசாராயமாக தயாரித்து தரக் கூறி ஆலைகளை அரசு நிர்பந்திக்கிறது. மாற்று எரிபொருளாக எத்தனாலை பயன்படுத்த அரசுக்கு விருப்பம் இல்லை. 313 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. சர்க்கரைக்கு பதிலாக எத்தனால் தயாரிக்கலாம்.

ஒரு கிலோ சர்க்கரைக்கு பதிலாக 11 லிட்டர் எத்தனால் தயாரிக்கலாம். தற்போது 5 சதவீத எத்தனாலுக்கு மத்திய அரசு அனுமதி அளிப்பதாக கூறி உள்ளது. அனுமதி கொடுப்பதன் மூலம் எத்தனாலில் எந்த தீங்கான விஷயங்களும் இல்லை என்பது புலனாகிறது. லட்சக்கணக்கான கரும்பு விவசாயிகளின் நிலையை உணர்ந்து பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக முழுவதுமாக எத்தனாலை மாற்று எரிபொருளாக அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆண்டுக்கு ஒருமுறை கரும்புக்கு கொள்முதல் விலையை நிர்ணயம் செய்வதில் மத்திய மாநில அரசுகளிடையே வேறுபாடு உள்ளது. சில மாநிலங்களில் அரசு நடத்தி வரும் சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகளுக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைக்கவும், சர்க்கரை ஆலைகள் தொய்வின்றி இயங்குவதற்கும் எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிப்பது சாதகமாக அமையும்.

அமெரிக்கா, பிரேசில் முன்னிலை


அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள், சுற்றுசூழலையும், உயர்ந்து வரும் பெட்ரோல் விலையையும் கருத்தில் கொண்டு அதிக அளவில் எத்தனாலை மாற்று எரிபொருளாக பயன்படுத்தி வருகின்றன. ஐரோப்பிய நாடுகளும் எத்தனால் பயன்பாட்டிற்கு மாறி வருகின்றன. அமெரிக்காவில் சோளம் அதிகமாக விளைவதால் சோளத்தில் இருந்தும், பிரேசிலில் கரும்பில் இருந்தும் எத்தனால் தயாரிக்கப்படுகிறது. பிரேசிலில் 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எத்தனால் உபயோகத்தில் உள்ளது. தற்போது பிரேசிலில் 85 சதவீதம் எத்தனால் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் கனடா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்தி வருகின்றன.

பிரபலங்களின் பியூட்டி சீக்ரெட்ஸ்!




சினிமா நட்சத்திரங்களின் அழகு ரகசியங்களைத் தெரிந்து கொள்வதில் சாமானிய மக்களுக்கு எப்போதும் ஒரு ஆர்வம் உண்டு. அழகுசாதனப் பொருள்களுக்கான விளம்பரங்களில், முன் எப்போதையும் விட, கடந்த சில வருடங்களில் நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதன் பின்னணியும் அதுவே. ஆஸ்தான நடிகையோ, நடிகரோ உபயோகிக்கிற அனைத்தையும் தானும் உபயோகித்தால் அவர்களைப் போலவே மாறிவிடலாம் என நம்புகிற  மனிதர்கள் நம்மிடையே பலர் உண்டு. அதெல்லாம் விளம்பர உத்தி என்பதை அறியாத அப்பாவிகள் அவர்கள்!

நடிகர், நடிகைகள் என்ன வேற்று கிரகத்திலிருந்து பூமிக்கு வந்தவர்களா என்ன? அவர்களும் நம்மைப் போல மனிதர்கள்தானே? முதுமையும் தள்ளாமையும் அவர்களுக்கும் உண்டு. அவர்களுக்கும் முடி கொட்டும். நரைக்கும். வழுக்கை விழும். சருமத்தில் சுருக்கங்கள் வரும். அழகு மெல்ல விடைபெறும். சாதாரண மக்களுக்கும் பிரபலங்களுக்கும் ஒரே ஒரு விஷயத்தில்தான் வித்தியாசம். அழகை ஆராதிப்பதிலும், கட்டிக் காப்பதிலும் அவர்கள் காட்டுகிற அக்கறை. அது நம்மிடம் மிஸ்ஸிங். அதனால்தான் நமக்கு சீக்கிரமே வரும் முதுமை, அவர்களுக்கெல்லாம் தாமதமாகிறது.
அழகைப் பேண பிரபலங்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்? அழகுக்கலை நிபுணர் மேனகா பேசுகிறார்...

தலைக்கு...

* பிரபலங்கள், சாமானிய மனிதர்களைப்போல, நரைத்த முடியுடனும் வழுக்கைத் தலையுடனும் வெளியில் தலை காட்ட முடியாது. அதை மறைக்கும் டெக்னிக்குகளை பின்பற்றியே ஆக வேண்டும். நடிகைகளைப் பொறுத்த வரை முடியை ரொம்பவும் நீளமாகவோ, ரொம்பவும் குட்டையாகவோ வைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். மீடியம் நீளமுள்ள, அதாவது, தோள்பட்டை அளவுக்கு வைத்துக் கொள்வார்கள். அப்போதுதான் அவர்களால் எப்படிப்பட்ட ஹேர் ஸ்டைலுக்குள்ளும் பொருந்திப் போக முடியும்.

* வெஸ்டர்ன் லுக்கோ... ட்ரெடிஷனல் லுக்கோ... எதுவும் அவர்களுக்குப் பிரச்னையே இல்லை. எப்படிப்பட்ட ஸ்டைலுக்கும் ஹேர் அட்டாச்மென்ட்டுகள் கிடைக்கின்றன இன்று. கிளிப் உடன் கூடிய அவற்றை அப்படியே ஒரிஜினல் கூந்தலில் பொருத்திக்கொள்ள வேண்டியதுதான். கலரிங், அயர்னிங், பெர்மிங் என எதை வேண்டுமானாலும், அந்த செயற்கை அட்டாச்மென்ட்டின் மேல் செய்து கொள்ளலாம். கூந்தலுக்கு 1 சதவிகிதம்கூட பாதிப்பே இருக்காது. வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்கு அவர்கள் ஒரிஜனல் கூந்தலில் செய்து கொண்டது மாதிரியே தெரியும்!

* நரையை மறைப்பதிலும் நட்சத்திரங்கள் ரொம்பவே கவனமாக இருப்பார்கள். ஒரு இன்ச் கூட நரை முடி வெளியே தெரியாமலிருக்க வேண்டும் என்கிற ஜாக்கிரதை உணர்வில் வாரம் ஒரு முறை கூந்தலுக்கு டச் அப் செய்கிறவர்களும் உண்டு. இன்னும் சொல்லப் போனால், சம்பந்தப்பட்ட நடிகருக்கோ, நடிகைக்கோ வெள்ளை முடி இருப்பது, அவர்களது வாழ்க்கைத்துணைக்குக் கூட தெரியாமலிருக்கலாம். எக்கா ரணம் கொண்டும், தரக் குறைவான ‘டை’யே  அவர்கள் உபயோகிக்கவே மாட்டார்கள். அமோனியா கலக்காத வாட்டர் பேஸ்டு ஹேர் கலரிங்கை மட்டுமே உபயோகிப்பார்கள்.

* சரி... திடீரென ஒரு ஃபங்ஷன்... அல்லது போட்டோ ஷூட்... கலரிங் செய்யவோ, பார்லர் போகவே நேரமில்லை... நரையையும் மறைத்தாக வேண்டும்... என்ன செய்வது? ‘டை ஸ்டிக்’ என ஒன்று இருக்கிறது. கருப்பு நிறத்தில் லிப்ஸ்டிக் மாதிரி இருக்கும்... அதை நரை உள்ள இடங்களில் டச் அப் செய்து கொண்டால் போதும்.

கண்களுக்கு...

கேமரா வெளிச்சமும், கண்ட நேரத்து வேலையும் அவர்களின் கண்களையும் பதம் பார்க்கும். அதிலிருந்து விடுபட கண்களுக்கான மசாஜ் செய்து கொள்வார்கள். நடிகைகளுக்கு கண்களின் கவர்ச்சி மிக முக்கியம். முகத்தில் மேக்கப்பே இல்லாவிட்டாலும், கண்களுக்கு மட்டும் மேக்கப் செய்துகொள்ள விரும்புவார்கள். கண் இமைகளை நீளமாகக் காட்ட, ஐ லேஷ் எக்ஸ்டென்ஷன்ஸ் இப்போது பிரபலமாகி வருகிறது. கூந்தல் இல்லாதவர்கள் ஹேர் எக்ஸ்டென்ஷன் செய்து நீளமான முடியிருப்பது போலக் காட்டிக் கொள்வது போல, இது கண் இமைகளுக்கானது. ஒருமுறை செய்து கொண்டால் ஒன்றரை மாதம் வரை அப்படியே இருக்கும்.

நகங்களுக்கு...

நடிகைகளின் கைகளை கவனித்தீர்களானால், நகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்கலாம். அவர்களது நகங்கள் நீளமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். நெயில் ஆர்ட் செய்து கொள்வதை விரும்புவார்கள். அதில் என்னவெல்லாம் லேட்டஸ்ட்டோ அதையெல்லாம் முயற்சி செய்து பார்ப்பார்கள். நகங்களே இல்லாவிட்டாலும் நோ பிராப்ளம். செயற்கையாக ஒட்டிக்கொள்ளக் கூடிய ஜெல் மற்றும் அக்ரிலிக் நகங்கள் கிடைக்கின்றன. ஏற்கனவே உள்ள நகங்களின் மேல் இவற்றை ஒட்டிக் கொண்டு விட்டால் போதும், வித்தியாசம் தெரியாது!

வாக்கிங்...

நடிகைகள் உபயோகிக்கிற எல்லா அழகுசாதனங்களுமே ஸ்பெஷல் வகையறாதான். அதில் வாக்சும் ஒன்று. சாதாரணப் பெண்கள் உபயோகிக்கிற ஹாட் வாக்ஸ், கோல்ட் வாக்ஸெல்லாம் இவர்களுக்குப் பிடிக்காது. ஃப்ரூட் வாக்ஸ் என ஒன்று வந்திருக்கிறது. விதம் விதமான வாசனைகள் கொண்ட இதை உபயோகிக்கும் போது, மறுபடி முடி வளர நேரம் பிடிக்கும். ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்புதான் இதை உபயோகிப்பார்கள். முகத்துக்குக் கூட இந்த வாக்ஸ் உபயோகிக்கிற நடிகைகள் இருக்கிறார்கள். இதில் வாக்ஸ் செய்வதற்கு முன் உபயோகிக்கக் கூடிய ப்ரீ லோஷனும், வாக்ஸ் செய்த பிறகு உபயோகிக்கக்    கூடிய லோஷனும் இருப்பதால், சருமமும் அழகாக மின்னும்.

உடைகள் மற்றும் நகைகள்...

ஆள் பாதி, ஆடை பாதி என்பது நடிகைகள் விஷயத்தில் மிகச் சரி. எந்த நடிகையாவது அவர்களுக்குப் பொருந்தாத உடை அணிந்து பார்த்திருக்கிறீர்களா? தைத்துப் போட்டார்களா? போட்டுக் கொண்ட பின் தைத்தார்களா எனக் கேட்க வைக்கிற அளவுக்கு அத்தனை கச்சிதமாக உடை அணிவார்கள்.

பெரும்பாலான நடிகைகள் பொது நிகழ்ச்சிகளிலும், சாதாரண நேரத்திலும் நகைகள் அணிய மாட்டார்கள். கழுத்தில் சின்னதாக ஒரு சங்கிலி கூட இருக்காது. தொடர்ந்து நகைகள் அணிவதுகூட சருமத்தில் சில அடையாளங்களைப் பதிக்கும். ஷூட்டிங்கின் போதும், பிரமாண்ட நிகழ்ச்சியின் போதும் மட்டும்தான் அவர்கள் நகைகள் அணிவார்கள்.

அழகு சம்பந்தப்பட்ட பிரச்னைகளை மறைக்கிற டெக்னிக்குகள் இவையெல்லாம். அதை வைத்து நடிகைகள் எல்லாம் அவலட்சணமானவர்கள் என்றும், இப்படித்தான் ஏமாற்று வேலைகளைச் செய்து, அவர்களது குறைகளை மறைத்து, அழகாகக் காட்டிக் கொள்கிறார்கள் என்றும் அவசரப்பட்டு நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம். அழகைத் தக்க வைத்துக் கொள்வதில் அவர்களது அக்கறை நம்மையெல்லாம் பிரமிக்க வைக்கும். அப்படி என்ன செய்வார்கள் என்கிறீர்களா?

கூந்தலோ, சருமமோ அதற்கான சிகிச்சைகளை முறையாக எடுத்துக் கொள்வார்கள். வாரம் 2 முறை கூந்தலுக்கான ஹேர் பாலிஷிங்கும், 4 வாரங்களுக்கு ஒரு முறை ஹேர் கட்டும், வாரம் ஒரு முறை ஹேர் ஸ்பாவும் செய்து கொள்வார்கள். கூந்தல் வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஷாம்பு, கண்டிஷனர் மற்றும் சீரம்தான் உபயோகிப்பார்கள். வாரம் ஒரு முறை கூந்தலுக்கு மசாஜ் செய்து கொள்வார்கள். கூந்தலை அடர்த்தியாகக் காட்டக் கூடிய ‘வால்யூம் ட்ரீட்மென்ட்’ செய்து கொள்வார்கள்.

மிகச்சிறந்த மேக்கப் சாதனங்களை மட்டுமே உபயோகிப்பார்கள். அவை எஸ்.பி.எஃப் உள்ளதும், வாட்டர் பேஸ்டுமானதாக இருக்கும். மேக்கப் முடித்த பிறகு ஒருவித ஸ்பிரேவை அடித்துக்கொண்டால், பல மணி நேரத்துக்கு மேக்கப் அப்படியே இருக்கும்.

மேக்கப் செய்து கொள்வதில் எடுத்துக் கொள்கிற அக்கறையை, மேக்கப்பை நீக்குவதிலும் எடுத்துக் கொள்வார்கள். சரும அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் மேக்கப்பை முறையாக சுத்தப் படுத்த வேண்டியது மிக முக்கியம். எத்தனை தாமதமாக ஷூட்டிங் முடித்துத் திரும்பினாலும், மேக்கப்பை நீக்கி 100 சதவிகிதம் சுத்தமான பிறகுதான் தூங்கச் செல்வார்கள். கூந்தலுக்கும் அப்படித்தான். தவறாமல் நைட் கிரீம் உபயோகிப்பார்கள். வாரம் தவறாமல் ஃபேஷியலும், பாடி பாலிஷும் செய்து கொள்வார்கள். எங்கே வெளியில் சென்றாலும், உடல் முழுவதற்குமான சன் பிளாக் உபயோகிப்பார்கள்.

எல்லாவற்றையும் விட முக்கியம்... அவர்களது சாப்பாடு. நிறைய காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள் சேர்த்துக் கொள்வார்கள். தூக்கத்தை
விட்டுக் கொடுக்க மாட்டார்கள். தவறாமல் உடற்பயிற்சி செய்வார்கள்.

கைகளுக்கும், கால்களுக்கும் ஸ்பா மெனிக்யூர் மற்றும் ஸ்பா பெடிக்யூர் செய்து கொள்வார்கள். டென்ஷனை விரட்ட ரெஃப்ளெக்சாலஜி செய்து கொள்வார்கள். என்னதான் வேலை இருந்தாலும் ஓய்வைத் தியாகம் செய்ய மாட்டார்கள்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top