.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 1 January 2014

இல்லத் தரசிகளுக்கு....




இல்லத் தரசிகளுக்கு....

பெண்கள் பொதுவாக சமையலில் வெளுத்து வாங்குவார்கள். அவங்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை. இருந்தாலும் அவர்களின் சமையலுக்கு உதவதற்காக குட்டிக் குட்டி டிப்ஸ். பல பேருக்குத் தெரிஞ்சதும் இருக்கலாம், தெரியாததும் இருக்கலாம். உங்களுக்குத் தேவையான டிப்ஸை எடுத்துக்கோங்க.. குடும்பத்தாரின் பாராட்டை அள்ளிக்கோங்க!

* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில்உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.

 * மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது. வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி, அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.

 * தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

 * வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இரு புறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப் பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.

 * தோசைக்கு ஊற வைக்கும்போது 1 கிலோவிற்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊற வைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.

  * சமைத்த சாதம் மிஞ்சிப் போய் விட்டால், அதைப் போல் இரண்டு பங்கு தண்ணீ­ரைக் கொதிக்க வைத்து, அதில் பழைய சாதத்தைக் கொட்டி, ஒரு கொதி வந்ததும் இறக்கி வடித்து விடவும். பின்னர் மறுபடியும் 5 நிமிடம் வடித்த சாதத்தை அடுப்பில் வைத்து இறக்கினால் நீர்ப்பசை அகன்று புதிதாகச் சமைத்ததைப் போல் இருக்கும்.

  * வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பினால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்குக் கெடாமல் இருக்கும்.

  * காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

  * குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீ ஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

  * நன்றாகக் காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்துத் தண்­ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள். கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.

  * சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்

   * வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

 * பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

  * வீட்டிலேயே கேக் செய்யும் பேது, பேகிங் ஓவன் தட்டில் சரியாக எண்ணெய் அல்லது நெய் தடவியிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே பேக் செய்யத் தொடங்குங்கள்.

  * தேங்காயை சரிபாதியாக உடைக்க தண்­ரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

  * இனிப்புகள் தயாரிக்கும்போது சர்க்கரைக்குப் பதில் வெல்லம் அல்லது தேன் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினால் சுவை கூடுதலாக இருக்கும்.

  * வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.

  * ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.

  * கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.

  * வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் கண்ணீ­ர் வராது.

  * பச்சை மிளகாய் ஒரு மாத காலத்திற்கு மேலாக கெடாமல் இருக்க ஒரு காகிதக் கவரில் சிறிய துளையிட்டு கவரில் பச்சை மிளகாய்களை அதில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

  * ஒரு பாத்திரத்தில் தண்­ர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும் பிறகு இதில் முட்டையை போடவும் முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.

  * இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

  * காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 23 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

  * கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.

  * தண்­ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.

  * முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

  * உருளைக் கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.

தோல்வி என்றால்.....?



தோல்வி என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருள் அல்ல:நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்று பொருள்.


தோல்வி என்றால்,நீங்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல: சில பாடங்கள் கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்.


தோல்வி என்றால் நீங்கள் அவமானப்பட்டு விட்டதாகப் பொருள் இல்லை:முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் உள்ளது என்று பொருள்.


தோல்வி என்றால் உங்களிடம் சரக்கு இல்லை என்று பொருள் அல்ல:வேறு உத்திகளைக் கையாள வேண்டிய அவசியத்தை உணர்ந்து விட்டீர்கள் என்று பொருள்.


தோல்வி என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாகப் பொருள் இல்லை:மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பொருள்.


தோல்வி என்றால் விட்டு விட வேண்டும் என்று பொருள் அல்ல:இன்னும் செம்மையாக உழைக்க வேண்டும் என்று பொருள்.


தோல்வி என்றால் உங்களால் அடைய முடியாது என்று பொருள் அல்ல: அடையக் கொஞ்சம் தாமதமாகலாம் என்று பொருள்.


தோல்வி என்றால் கடவுள் உங்களைக் கை விட்டு விட்டார் என்று பொருள் இல்லை:உங்களுக்கு வேறு நல்ல எதிர் காலத்தை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறார் என்று பொருள்.

மகளிர் பெண்களே இப்படி சமாளியுங்க…!




மகளிர் பெண்களே இப்படி சமாளியுங்க…!

`உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி’ என்று பழமொழி சொல்வார்கள். பெண்களுக்கு இந்த சொலவடை நிச்சயம் பொருந்தும்.

புதிதாக மணம் முடித்து கணவர் வீட்டில் காலெடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் `கடி’கள், ஏச்சு பேச்சுகள் அவர்களின் மனதை ரொம்பவே துடிக்க வைத்து விடும். அப்படிப்பட்ட நிலைமையை எப்படி சமாளிப்பது? இங்கே சில ஐடியாக்கள்…

`இந்த வீட்ல நான்தான் எல்லா வேலையும் பார்க்க வேண்டி இருக்குது. வேலைக்குப் போனா வீட்டு வேலையை பார்க்கக்கூடாதா? பார்த்தா குறைஞ்சு போகுமோ’ – வேலைக்குப் போகும் மருமகளை, ஏதோ சிங்காரித்து சினிமாவுக்கு சென்று வருவதைப்போல நினைத்து இப்படிப் பேசும் மாமியார்கள் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலை நீங்கள் சந்தித்தால், “நான் தினமும் ஆபீஸ் போய்விட்டு, இத்தனை மணிக்குத்தான் திரும்புவேன், நான் வந்தபிறகு இந்தெந்த வேலைகளை கவனித்துக் கொள்கிறேன்” என்று முன்கூட்டியே சொல்லிவிடுங்கள்.

`உங்கப்பா நல்லா இருக்கும்போதே உனக்கு வேணுங்கறதை கேட்டு வாங்கிட்டு வந்துடு, பின்னாடி உங்க அண்ணன்கள்கிட்டே எதிர்பார்த்துகிட்டு நிக்க முடியாது பாரு…”

இந்த வார்த்தைச் சாட்டைக்கு இப்படி பதிலளியுங்கள்..”எனக்கு என்ன செய்யணும்னு எங்க அப்பா அம்மாவுக்குத் தெரியும். நான் போய் கேட்க வேண்டியதில்லை, கேட்கவும் மாட்டேன். எனக்கு தேவைன்னு தெரிஞ்சா அவங்களே தேடி வந்து செய்வாங்க”

“உன் பெண்டாட்டி வரவர என்னை மதிக்கிறதே இல்லை. நான் சொன்னா காதிலேயே வாங்காமப் போறா, ஆபிசிற்கு ரொம்ப குலுக்கி மினுக்கிப் போறா?”

இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பத்திலேயே உங்களின் உண்மை நிலையை கணவரிடம் விளக்கி விடுவதுதான் சிறந்த வழி. மாமியாரின் கோபத்துக்கான காரணத்தை தெரிந்து பேசித் தீர்க்க முடியுமா? என்றும் முயற்சி செய்யுங்கள்.

“இவள் காசை கன்னாபின்னான்னு செலவழிச்சு கரியாக்குறா. திடீர்ன்னு ஆயிரம், ரெண்டாயிரத்துக்கு புதுப்புடவை எடுத்துக்கிறா, நகைநட்டு வாங்கி குவிக்கிறா, என் மகன் பாவம் வாயில்லாப்பூச்சி, எதையும் கேட்கறதில்லை.”எல்லோர் வீட்டு மாமியார்களும் கூறும் பொதுவான `கம்ப்ளெயிண்ட்’ இது…

“சிக்கனம் தேவைதான். அதுக் காக டிரஸ்ஸில் சிக்கனம் பிடிக்கலாமா? தேவைக்குத்தான் வாங்கி இருக்கிறேன்” என்று சொல்லுங்கள். அடுத்து விசேஷ நாட்களில் மாமியார், நாத்தனாருக்கும் (கடமைக்காக அல்லாமல் அன்புடன்) ஒரு புடவை எடுத்துக் கொடுங்கள். பிரச்சினை வந்தவழி தெரியாமல் ஓடிப் போய்விடும்.

“பெரிய ஆபீசர் வீட்ல இருந்து வந்தவளே பாத்திரம் கழுவுறா, எல்லா வேலையும் பாக்குறா? இவளுக்கென்ன? மூத்த மருமகள் கேட்ட அடுத்த மாசமே என் மகனுக்காக பைக் வாங்கி தந்துட்டா..! உன்கிட்ட கேட்டாலும் கிடைக்குமா, உங்கப்பா நெலமைதான் ஊருக்கே தெரியுமே?

`இப்படிப் பேசுவது சுத்தமாகப் பிடிக்கவில்லை’ என்பதை கணவரிடம் நேரடியாகச் சொல்லி விடுங்கள். அதன்பிறகு ஓரளவாவது இந்த மாதிரி ஒப்பீடு குறையும்.

எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் `எங்கம்மாவை அப்படிப் பேசாதே’ என்று சொல்ல வாரிசு வளரும் வரை நீங்களாகத்தான் சமாளிக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் புதுப்பெண்களே!

வெற்றிக்கான நான்கு தூண்கள்





ஒரு கட்டிடத்திற்கு அல்லது மண்டபத்திற்கு, குறைந்தது எத்தனை தூண்கள் தேவை?

நான்கு.


வெற்றியெனும் மாளிகைக்கும் குறைந்தது நான்கு தூண்கள் தேவை.
என்னென்ன?


அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால்… ஆங்கில அகராதியைப் புரட்டியிருக்கிறீர்கள் அல்லவா? அதன்படி….


ஆக, நல்லவை எல்லாமே, கஷ்டத்திற்குப் பிறகுதான் வருகின்றன என்பதை ஆங்கில அகராதி சூசகமாய்ச் சொல்கிறது.


அதேபோல, வெற்றி நமக்கு வேண்டுமானால், நான்கு விஷயங்கள், முன்னதாக நமக்குத் தேவை. என்னென்ன?


முதல் தேவை:

பொறுமை


கஷ்டங்கள், பிரச்னைகள், குறை பாடுகள், அசௌகரியங்கள் இவைகளை சகித்துக் கொண்டு தாக்குப்பிடிக்கும் பொறுமை. Patience.



இரண்டாம் தேவை :

 சக்தி



பொறுமையோடு இருக்கிறேன் என்று கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கலாமா? கூடாதுதானே.


பொறுமை காக்கும் அதே நேரத்தில், நமது பலங்களையும் ஆற்றல்களையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்க வேண்டும். என்னென்ன பலங்கள்?


அறிவு பலம், மனோ பலம், ஆள் பலம், பண பலம் எல்லாம் தான்.
ஆம். இரண்டாவது தேவை, சக்தி( Power.)


மூன்றாம் தேவை :

 திட்டம்


வாழ்க்கையில் நமது லட்சியங்களை அடைவதற்கான, சரியான, தெளிவான, முழுமையான, நுட்பமான திட்டம். plan


நான்காம் தேவை :

விடாமுயற்சி


திட்டம் தயாராகிவிட்டால், சந்தேகமேயில்லாமல் அடுத்த தேவை முயற்சி, முயற்சி, முயற்சி, குறிப்பாக, தடங்கலுக்குத் தளராத விடாமுயற்சி, வெற்றியைத் தொடும்வரை, தொடர்ந்து செய்ய வேண்டிய விடாமுயற்சி Preseverance


இந்த நான்கையும் தான், வெற்றி மாளிகையில் நான்கு தூண்கள் (Pillars) என்று குறிப்பிடுகிறேன்.


ஆக 4Ps என்று சொல்லப்படும்,

PATIENCE

POWER

PLAN

PERSEVERANCE


என்ற நான்கு தூண்களும் உறுதியாக இருந்தால், வெற்றியின் விளைவாகிய செழுமை (Prosperity) எனும் மேற்கூரை, தானே வந்து சேர்ந்துவிடும்.

பலவீனங்களை பலமாக்குவோம்...?



 ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால் அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான்?
பல மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும் அவனைப் பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக்கொண்டார்.


பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். நாட்கள், வாரங்கள், மாதங்க ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான்


"குருவே.. ஜூடோ சாம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா? " என்றான்.


"இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்" என்றார் குரு.


குரு சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான். சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது !

முதல் போட்டி.


ஜூடோவில் எல்லா வகைகளும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது.

எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக பையன் வெற்றி பெற்றான்.


இரண்டாவது போட்டி.


அதிலும் அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்தான்.
அதிலும் கொஞ்சம் போராடி ஜெயித்து விட்டான்.


கடைசிப் போட்டி.



எதிரே இருப்பவன் பலமுறை சாம்பியன் பட்டம் பெற்றவன். ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். பையன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது.
முதல் சுற்றில் பையனை அடித்து வீழ்த்தினான் எதிராளி. பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா என்கின்றனர் போட்டி நடத்துபவர்கள்.

"வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்" என்றார் குரு.

இந்தப் பையனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான். பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். பையன் சாம்பியனானான்.


பார்வையாளர்களுக்கு ஆச்சரியம்.


அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை. அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான் "குருவே, நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன்? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே" என்றான்.


புன்னகைத்தபடியே குரு சொன்னார் "உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய்.

இரண்டாவது இந்த தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும்.

உனக்குத் தான் இடது கை கிடையாதே! உன்னுடைய பலவீனம்தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது!"

குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான்.  

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top