.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday 31 December 2013

சூர்யாவுடன் கூட்டணி அமைக்கும் சூரி!



சூர்யா நடிக்கும் புதிய படத்தில் சூரி நடிக்கிறாராம்.


சிங்கம் 2 வெற்றிக்குப் பிறகு சூர்யா, லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.


சூர்யா-சமந்தா முதன் முறையாக இணையும் படம் இது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்தப் படம் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் காமெடி நடிகர் சூரி, லிங்குசாமி படத்தில் நடிக்கவுள்ளாராம். சூர்யா-சூரி நடிக்கும் காட்சிகள் வருகிற 2014 ஆம் ஆண்டில் தொடங்கவுள்ளன.


சூரி இந்த ஆண்டில் தயாரிப்பாளர்களின் விருப்பத் தேர்வாக மாறியிருக்கிறார். ஜில்லா படத்தில் விஜய்யுடன் நடித்திருக்கும இவர் அதைத்தொடர்ந்து மற்றொரு மாஸ் ஹீரோவான சூர்யாவின் படத்திலும் நடிக்கவுள்ளார்.

முன்னேற்றத் தடைகள் மூன்று...




முன்னேற மூன்றே சொற்கள், மூன்றே பண்புகள் ஆகிய தீர்மானமான முடிவு, இடைவிடாத பெருமுயற்சி, கடின உழைப்பு எனும் இவை எப்படி ஒரு சாதனையாளருக்கு முதன்மையாகத் தேவையோ அப்படித் தேவையில்லாத, விட்டுவிட வேண்டிய, எதிர் மறையான மூன்று பண்புகளும் உள்ளன. அந்த மூன்று பண்புகளை, மூன்று தடைகளை நீக்கிவிட்டால் நம் முன்னேற்றம் உறுதியாகிவிடுகிறது, விளைவு படுத்தப்படுகின்றது. முடிவு நல்லதாக அமைகின்றது.

இவை நம்மிடையே உள்ளவை

இந்த மூன்று பண்புகளும் நம்மிடையே உள்ளவைதாம். முன்னர் சொன்ன மூன்று பண்புகளையும் முடிவு, முயற்சி, உழைப்பு ஆகிய மூன்றையும் நாம் வருந்தி வருத்திப்பெறவேண்டும். ஆனால் நம் முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கின்ற இந்த மூன்று பண்புகளையும் நாம் நாம் நம்மிடமிருந்து விட்டுவிட்டால் போதும், நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கின்ற இந்தப் பண்புகளை உதறி எறிந்துவிட்டால் போதும். நாம் வெற்றி கண்டுவிடலாம்.

நாவடக்கம் என்பார்களே

நாவடக்கம் என்று கேள்விப்பட்டிருப்போம். நாவை அடக்குதல் என்பது பிறர் மனம்புண்படும்படி பேசாதிருத்தல்; வேண்டாத விவாதிதங்களில் ஈடுபடாதிருத்தல், வீணான கேளிக்கைப் பேச்சில் ஈடுபடாதிருத்த் ஆகிய மூன்றையும் விட்டு விடுவது தான். அப்படிப் பேச நேரும்போது நாவை அடக்கிவிடுவதுதான் நாவடக்கம் என்பது.

துன்பங்களுக்கு அடிப்படை

நம் முன்னோர்கள் நாவடக்கம் என்று சொன்னதை, இன்றைய அறிவியல் அறிஞர்கள், மூன்றாகப் பகுத்து மக்கள் மனங்கொள்ளும் வகையில், சமுதாயத்தில் உள்ள நடைமுறைக்கு ஏற்ற வகையில் எடுத்துரைத்துள்ளார்கள். நுணுகி நுணுகி ஆராய்ந்த பார்த்தால் நமக்கு ஏன் பலருக்கும் வருகின்ற துன்பங்களின் பெரும் பகுதி இவற்றின் வழியாகத்தான் வருகின்றன. என்பதை அறிந்துகொள்ளலாம் தவளை தன் வாயினால் கெட்டுவிடுகிறது என்று கிராமங்களில் பழமொழியாகச் சொல்வார்கள். தவளை மனிதர்கள் ஒரு காலும் மனிதர்கள் ஒரு காலும் முன்னேற முடியாது.

பிறர் பற்றிக் கருத்துரை வழங்குதல்

ஒவ்வொருவரைப் பற்றியும் ஒவ்வொருவருக்கும் ஒரு கணிப்பு. அவரது நடை முறைகள் பற்றிய ஒரு முடிவு இருக்கவே செய்கின்றது, ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் இருக்கிறார்கள். அல்லது ஒரு அலுவலகத்தில் 40 பேர் வேலை செய்கிறார்கள் என்றால் ஒவ்வொருவருக்கும் தன்னைத்தவிர மற்ற 36 பேரைப் பற்றிய கருத்தை, முடிவை வைத்தே இருக்கிறார்கள். நல்ல, பாராட்டக் கூடிய முடிவாக, கருத்தாக இருக்குமானால், அதுவும் தேவை நேர்ந்தால் மட்டுமே சொல்லலாம். இல்லாவிட்டால் சொல்லாமல் இருந்து விடுவதே நல்லது. தேவை இல்லாத இடத்தில், பேசாமல் இருப்பதே அறிவுடமை. மாறாக குறையான கருத்துக்களைத் தெரிவிக்க நேர்ந்து விடுவதால் அது உண்மையாக இருந்தாலும் கூட அவர் நமக்கு பகைவர் ஆகி விடுகிறார். ஒவ்வொருவரைப் பற்றிய குறைகளை வெளிப்படுத்துவோமானால் 39 பேரும் நமக்கு பகைவர்கள் ஆவதைத் தவிர வேறு வழியில்லை. நம்மைச் சுற்றிலும் பகைமைதான் மிஞ்சும்.

பல அரசியல் வீழ்ச்சிக்குக் காரணமே இப்படிக் கருத்துத் தெரிவிப்பதுதான். இவர் குறையில்லாதவராக இருந்து கருத்துத் தெரிவித்தால்கூட உலகம் ஏற்றுக்கொள்ளும். ஆனால் ஆயிரம் குறைகளை வைத்துக்கொண்டு மற்றவர்களைப் பற்றிக் கருத்துத் தெரிவித்தால் யார் ஏற்றுக் கொள்வார்கள்? அதேபோல் தொழில் செய்யும் இடங்களில், குடும்பத்தில், உறவினர்களிடையில், ஏன் நாம் பழுகின்ற, பணி புரிகின்ற அனைத்து இடங்களிலும் நாம் இவ்விதம் கருத்துத் தெரிவிப்பதால் துன்பத்தை நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம். விலைக்கு வாங்கிக் கொள்கிறோம்.

ஒரு மாதம் சோதனை முயற்சியாக யாரைப்பற்றியும் கருத்துத் தெரிவிப்பதில்லை என்ற முடிவோடு நடந்து பாருங்கள். துன்பங்கள் குறையும். பிறகு துன்பங்கள் இல்லாமலேயே போகும். யாராவது வற்புறுத்திக்கேட்டால் கூட மன்னிக்கவும் என்று பதில் சொல்லிவிடுங்கள். (No Comments) என்று முடிவு செய்து கொண்டே உங்கள் அன்றாடச் செயலைத் தொடங்குங்கள். ஏதேனும் கருத்துத் தெரிவிக்கும் அவசியம் நேர்ந்தால் பிறர் மனம் புண்படாத வகையில் சொல்லுங்கள்.

வீண் விவாதங்களில் ஈடுபடுதல் (Arguments)


கருத்துத் தெரிவித்தல் வேறு, விவாதித்தல் வேறு. தான் எடுத்துக் கொண்ட கொள்கை சரியா? தவறா? என்றே கருதாமல் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பது போலப் பேசுகின்றவர்கள் உலகம் அறவே வெறுத்து ஒதுக்கி விடுகின்றது. அத்தகையவர்களைக் கண்டால் உலகம் ஒதுங்கிக் கொள்கிறது. அவர்களுக்கு எவ்வித பங்களிப்பையும் கொடுக்க நல்லவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். நாளடைவில் இத்தகைய “விவாதிகள்” (augumenters) இருந்தும் கூட வாழ்வில் எந்தத் துறையிலும் முன்னேற முடியாமல் தடைப்பட்டுப் போய்விடுகிறார்கள்.

வீண் அரட்டை (Gossip)

அதேபோல் எப்பொழுதும் பேசிப்பேசியே பொழுதைக் கழிப்பவர்கள் இருக்கிறார்கள். மணிக்கணக்காகப் பேசுவார்கள். கூட்டம் போட்டு பேசுவார்கள். ஒரு பயனும் இருக்காது. இத்தகையவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்குத் தாங்களே தடைவிதித்துக் கொள்கிறார்கள். இந்த வீண் அரட்டைகளால் கருத்து வேறுபாடுகள் தோன்றி, விவாதங்களில் ஈடுபட்டு ஒருவரைப் பற்றி ஒருவர் கருத்துக்கள் தெரிவித்து, வெளிப்படையாகச் சொல்லவோமானால் திட்டித் தீர்த்து சுற்றிலும் பகையை வளர்த்துக் கொள்வார்கள்.

ஒன்றுக்கொன்று தொடர்புடைய இந்த மூன்று தன்மைகளும் உள்ளவர்கள் தங்கள் வளர்ச்சிக்குத் தங்களே தடைவிதித்துக் கொள்கிறார்கள். நீங்களே எண்ணிப்பாருங்கள். இந்த மூன்று குணங்களும் எந்த அளவு இருக்கிறது என்று கணியுங்கள். இதற்கு ஒரே வழி கூடுமானவரை வாய் திறவாதிருத்தல்தான்; இதனால் நன்மைகள் அதிகம். பிறர் உதவியின்றி நீங்களே செய்யக்கூடிய இந்தக் காரியத்தை நீங்கள் ஏன் செய்யக்கூடாது தினம் எழுந்திருக்கும்போதே ஒரு முறை நினைவு கூறுங்கள் (No Comments, No argumensts, No gossip) இதுவும் ஒரு வகையில் இறைவழிபாடுதான்.

உங்களை காதுகளை கொடுங்கள்

மாறாக பிறர் சொல்லுகின்ற நல்ல கருத்துக்களைக் காது கொடுத்துக் கேளுங்கள். அனுபவமும் அறிவும், பண்பும் நிறைந்த மனிதர்கள் சொல்லுகின்ற கருத்துக்கள் நம்மைச் சிந்திக்கச் செய்யும். தீமைகளிலிருந்து விலகச்செய்யும். நன்மைகளை நாடி நடக்கச் செய்யும், அதனால்தான் அறிஞர்கள் நல்லவர்களின் அறிவுரையைக் கேளுங்கள் என்று கூறியுள்ளார்கள். நாம் நம் காதுகளைக் கொடுப்போம்.

பெருமை தந்த தருணங்கள் 2013...!




சாதனைகளும் சோதனைகளும் நிறைந்ததே வாழ்க்கை. 2013ஆம் ஆண்டில் பெண்ணுலகம் எத்தனையோ இன்னல்களைச் சந்தித்தாலும் கல்லிடைப் பூக்களாகச் சில சாதனைகளும் மலரத்தான் செய்தன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு.

நான் மலாலா 

பாகிஸ்தானில் பெண் கல்விக்காக சாவின் விளிம்பு வரை சென்று வந்த மலாலா யூசப் ஸாய் என்ற சிறுமி நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். தலிபானின் கோரப் பிடிகளில் தத்தளித்த ஸ்வாட் பள்ளத்தாக்கிலிருந்து வருபவள் இச்சிறுமி. அப்பகுதியில் இருக்கும் பெண்களுக்குக் கல்வி வேண்டி பிரச்சாரத்தை மேற்கொண்டதற்காக தலிபானால் சுடப்பட்டார். அமைதிக்கான நோபல் பரிசுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார்.

பொறுப்பான மாணவி 


சிலி நாட்டின் மாணவப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய கமிலா வல்லேஜோ, அந்நாட்டின் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாணவர்கள் பேருந்துகளில் தொங்கிக்கொண்டு பொறுப்பற்றுச் சுற்றி திரிபவர்கள் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ள நேரத்தில், சிலியின் மாணவ சமுதாயப் பெண் பிரதிநிதி ஒருவர் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது பெண்களுக்கும் மாணவர் களுக்கும் பெருமையான விஷயம்.

வாய்மை வென்றது 

டெல்லி மாணவி பாலியல் வன்முறைக் குள்ளாக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்தது. 2012ஆம் ஆண்டு டெல்லி யில் நடந்த 634ஆவது பாலியல் வன்முறையைத் தொடர்ந்து நாடெங்கும் எழுந்த போராட்ட அலைகளும் அதன் பின் நடந்த விரிவான முற்போக்கான விவாதங்களும் வரவேற்கத்தக்கவை. பாதிக்கப்பட்ட பெண்ணையே பாலியல் குற்றத்துக்குப் பொறுப்பாக்கும் போக்கி லிருந்து விலக, இந்த விவாதங்கள் உதவின. இந்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்களுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தூக்கு தண்டனை சரியா, தவறா என்ற விவாதம் ஒரு புறமி ருக்க இத்தனை விரைவாகத் தீர்ப்பு கிடைத்தது பாலியல் வன்முறையைத் தீவிரமாகக் கையாள வேண்டும் என்ற அணுகுமுறையை உணர்த்துவதாக உள்ளது.

வலுவான சட்டம் 

16 ஆண்டுகளுக் காலப் போராட் டத்திற்குப் பிறகு பணியிடங்களில் பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டம் பிப்ரவரி 26ஆம் தேதி இயற்றப்பட்டது. ராஜஸ்தானில் பன்வாரி தேவி என்றப் பெண் குழந்தை திருமணத்துக்கு, எதிராகப் பிரச்சாரம் செய்தவர். வேலை பார்த்த இடத்தில் அவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். இதன் விளைவாக ஏற்பட்ட போராட்டங் களின் முடிவில் கிடைத்துதான் விசாகா தீர்ப்பு. அந்தத் தீர்ப்பில் உள்ள விதிமுறைகளின்படி சட்டம் இயற்றப்பட்டது.

பெண்களுக்கான வங்கி 

முதல் முறையாகப் பெண்களுக்கு தனி வங்கி திறக்கப்பட்டது. பெண்களுக்குப் பிரத்யேகமான திட்டங்கள் கொண்ட மத்திய அரசின் மஹிளா வங்கியின் கிளைகள் சென்னை உட்பட ஏழு நகரங்களில் திறக்கப்பட்டன. பெண்கள் கடனுக்காக வங்கியை அணுகும்போது அவர்களின் தேவையையும் நிலையையும் புரிந்துகொள்ளும் வகையில் இந்த வங்கிகள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடரும் வேலைவாய்ப்பு 

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் அதிக அளவில் பெண்களைப் பணியமர்த்திய இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு. ஆண்கள் குடிப்பது அல்லது வேலை தேடி நகரத்தை நோக்கிச் செல்வது போன்றவை இதற்க்கு காரணங்களாகக் கூறப்பட்டாலும் வேலைக்குச் சென்று தங்கள் வருமானத்தைத் தாங்களே ஈட்டும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது.

நோபல் பெண் 

கனடாவைச் சேர்ந்த 82 வயதான ஆலி மன்ரோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த அவர், இளம் வயதிலிருந்தே எழுதி வருகிறார். அவரது கதைகள் சாதாரண மனிதனின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளைப் பதிவு செய்பவை.

எழுத்துக்கு மரியாதை 


தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாகவும் பின்காலனிய எழுத்தாளராகவும் இருக்கும் 80 வயதான காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவக், பத்ம பூஷன் விருதைப் பெற்றார். இவரது, ‘ஒடுக்கப்பட்டவரால் (subaltern) பேச முடியுமா?’ என்ற கட்டுரையும் பிரெஞ்சு எழுத்தாளர் தெரிதாவின் ‘ஆப் கிராமட்டாலஜி’ நூலின் மொழியாக்கமும் மிகவும் பிரபலமானவை.

விளையாட்டிலும் முன்னணி 

இந்த ஆண்டு விளையாட்டுத் துறையில் பல பெண்கள் சாதனை படைத்துள்ளனர். பலரின் முயற்சிகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. ஆண்களுக்கு என்று கருதக்கூடிய விளையாட்டுகளிலும் பெண்கள் சாதித்திருப்பது பெருமைக்குரியதாக அமைகிறது. ஹாக்கியில் முதல் முறையாகப் பெண்கள் ஜூனியர் அணி ஜெர்மனியில் நடந்த உலகக் கோப்பையில் பதக்கம் வென்றது. இங்கிலாந்தை எதிர்த்து வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்திய அணிக்குத் தலைமை தாங்கியவர் சுஷிலா சானு. பிகன் சாய், பூனம் ராணி, நவ்னீத் கௌர் உள்ளிட்டோர் அந்த அணியில் இடம் பெற்றிருந்தனர்.

ஒலிம்பிக் குத்துச் சண்டையில் பதக்கம் வென்ற ஒரே இந்தியப் பெண் என்ற பெருமையைக் கொண்ட மேரி கோமுக்கு இந்தியாவின் மூன்றாவது பெரிய சிவிலியன் விருதான பத்ம பூஷன் வழங்கப்பட்டது.

வளர்ந்துவரும் பாட்மின்டன் வீராங்கனையான பி.வி. சிந்து உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண். விளையாட்டு துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான அர்ஜுனா விருது ஆகஸ்ட் மாதம் இவருக்கு வழங்கப்பட்டது.

அர்ஜுனா விருது 

இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீராங்கனை கவிதா சஹல், மூத்த ஸ்குவாஷ் வீரரும், ஸ்குவாஷ் விளையாட்டை ஒலிம்பிக்கில் இணைக்கப் பிரச்சாரம் செய்தவருமான ஜோஷ்னா சின்னப்பா, தேசிய துப்பாக்கிச் சூடுதல் சாம்பியன் பட்டத்தை எட்டு முறையும், ஜூனியர் பட்டத்தை ஏழு முறையும் வென்ற துப்பாக்கி சுடும் வீராங்கனை ராஜ்குமாரி ரத்தோர், காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை நேஹா ரதி உள்ளிட்டோருக்கு அர்ஜுனா விருது இந்த ஆண்டு வழங்கப்பட்டது.

முதல் பெண் இயக்குநர் 


தென் இந்திய சினிமா துறையின் முதல் பெண் இயக்குநர் டி.பி. ராஜலட்சுமியின் நினைவைப் போற்றும் விழா சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் கொண்டாடப்பட்டது.

அவர் 1936ஆம் ஆண்டில் ‘மிஸ் கமலா’ என்ற படத்தை இயக்கி, திரைக்கதை எழுதி, நடித்தும் இருக்கிறார். பெண்கள் நடிப்பதையே அங்கீகரிக்காத காலகட்டத்தில் தைரியமாகப் படத்தை இயக்கிய ராஜலட்சுமியின் துணிச்சல் பாராட்டத்தக்கது.

பெண் இயக்குநர்களின் எண்ணிக்கை இன்றுகூடக் கணிசமான அளவில் இல்லை என்பதை வைத்துப் பார்க்கும்போது, ராஜலட்சுமியின் சாதனையை உணர்ந்துகொள்ளலாம்.

கொண்டாடப்படும் 'என்றென்றும் புன்னகை' : சந்தோஷத்தில் படக்குழு!





டிசம்பர் 20ம் தேதி வெளியான படங்களுள் அஹ்மத் இயக்கத்தில் ஜீவா நடித்த 'என்றென்றும் புன்னகை' மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

ஜீவா, த்ரிஷா, வினய், சந்தானம் மற்றும் பலர் நடிப்பில் டிசம்பர் 20ம் தேதி வெளியான படம் 'என்றென்றும் புன்னகை'. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, அஹ்மத் இயக்கியிருந்தார். உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

டிசம்பர் 20ம் தேதி 'பிரியாணி' மற்றும் 'தலைமுறைகள்' படத்துடன் 'என்றென்றும் புன்னகை' வெளியானது. 'பிரியாணி' படத்திற்கு மிகப்பெரியளவில் விளம்பரங்கள் செய்யப்பட்டது. வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் என்பதால் முதல் வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்தது.

'பிரியாணி' படத்தோடு ஒப்பிடுகையில் 'என்றென்றும் புன்னகை' படத்திற்கு பெரியளவில் விளம்பரங்கள் செய்யப்படவில்லை. படத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. கண்டிப்பாக வெற்றி தான் என்று வெளியிட்டார்கள்.

முதல் வாரத்தில் கம்மியான அளவிற்கே கூட்டம் இருந்தது. ஆனால் படம் நன்றாக இருக்கிறது என்று விமர்சனங்கள் வர ஆரம்பித்ததால், கூட்டம் அதிகரித்தது.

இரண்டாம் வாரத்தை பொருத்தவரை, 'பிரியாணி' படத்தை விட மக்கள் கூட்டம் 'என்றென்றும் புன்னகை' படத்திற்கு அதிகரித்து இருக்கிறது. தற்போது பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. சென்னை மாயாஜால் திரையரங்கில், முதல் வாரத்தில் 14 காட்சிகள் திரையிடப்பட்ட 'என்றென்றும் புன்னகை', இரண்டாவது வாரத்தில் 28 காட்சிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஹாரிஸ் ஜெயராஜின் துள்ளலான இசை, சந்தானத்தின் காமெடி, ஜீவா, த்ரிஷா இடையேயான காதல் காட்சிகள் என இளைஞர்களின் புன்னகையாக மாறியிருக்கிறது 'என்றென்றும் புன்னகை'

நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?




நினைவாற்றல் பற்றி மனோதத்துவ நிபுணர்கள், மூளை ஆராய்ச்சியாளர்கள், கூறுகிற கருத்து பின்வருமாறு:


“நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.

நினைவாற்றல்நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன. அவை;


      1. தன்னம்பிக்கை
      2. ஆர்வம்
      3. செயல் ஊக்கம்
      4. விழிப்புணர்வு
      5. புரிந்துகொள்ளல்
      6. உடல் நலம்.


இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம்.

1. தன்னம்பிக்கை (Self Confidence)


“என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறது” என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். “நான் எப்படித்தான் இவற்றையெல்லாம் படித்து நினைவில் வைக்கப் போகிறேனோ, எனக்கு ஞாபக சக்தியே சற்று குறைவாகத்தான் இருக்கிறது. அடிக்கடி எனக்கு மறந்து போய்விடுகிறது” - என்று தங்களைப் பற்றியே தாங்கள் கொள்கின்ற அவநம்பிக்கையை விட வேண்டும்.

“நினைவாற்றல்” என்பது மூளையின் ஒரு திறமை. அதனை பயன்படுத்தப் பயன்படுத்த, பயிற்சியாலும் முயற்சியாலும் அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு, நினைவாற்றலை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் அற்புத நினைவாற்றல் பெறமுடியும்!

2.ஆர்வம் (Interest)

ஆர்வம் காட்டுகிற விசயங்கள் நினைவில் நன்றாகப் பதியும். இயற்கையாக ஆர்வம் இல்லாவிட்டால் கூட ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு கவனித்தால், பதியவைத்தால் நினைவில் நிற்கும்.

3. செயல் ஊக்கம் (Motivation)


இந்தச் செய்திகளை ஏன் நான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு எவ்வகையில் இது பயன்படும் என்று உங்களோடு இணைத்து தெளிவுபடுத்திக் கொண்டால் செய்திகள் நன்றாகப் பதியும்.

உதாரணத்திற்கு “ஹோட்டல் ரெசிடென்ஸிக்கு நாளை காலை 4 மணிக்கு நீங்கள் வந்தால் உங்களுக்கு 5 லட்ச ரூபாய் கொடுக்கப்படும்” என்று ஒருவர் உங்களிடம் சொன்னால் நீங்கள் மறந்து விடுவீர்களா?

தேவையை, அவசியத்தை நன்றாக உணர்ந்த விசயங்கள் நன்றாகப் பதிகின்றன.

4. விழிப்புணர்வு (Awareness)


மனம் விழிப்பு நிலையில் இருக்கும்பொழுது கவனமும், ஒருமைப்பாடும் மிகச்சிறந்து இருக்கும் விழிப்புணர்வு அதிகரிக்க தியானப் பயிற்சிகளும், யோகாசனப் பயிற்சிகளும் துணைபுரியும்.

உங்களுக்குப் பிடித்த எந்த அமைப்பின் மூலமும் இவற்றைக் கற்று முறைப்படி பயிற்சி செய்தால் மனத் தெளிவும், அமைதியும், விழிப் புணர்வும் பெறலாம். வேதாத்திரி மகரிஷி அவர் களின் பயிற்சிகளும், சமர்ப்பண் - வாழும் கலைப் பயிற்சிகளும், ஈசா யோக மையப் பயிற்சிகளும், ஓசோ ரஜினிஷ் பயிற்சிகளும், கிருஷ்ணமாச்சார்ய யோகமந்திரம் (சென்னை) முதலிய அமைப்பு பயிற்சிகள் விஞ்ஞானப்பூர்வமானதாக அற்புத மானவையாக இருக்கின்றன.

5. புரிந்துகொள்ளல் (Understanding)

புரிந்து கொண்ட விசயங்கள் நினைவில் நன்றாக இருக்கின்றன. புரியாவிட்டால் - தெரியாவிட்டால் கூச்சம், அச்சம், தயக்கம் இல்லாமல் ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? எங்கு? யார்? …………………….. என்று கேள்விகளைக் கேட்டு புரிந்து கொள்ளுங்கள்.

6. உடல் ஆரோக்கியம் (Health)
உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது நினைவாற்றல் நன்றாக இருக்கும். ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு தளர்ந்திருக்கும் நேரத்தில் செய்திகளை நினைவில் வைப்பதே சிரமமாக இருக்கும். ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top