.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 30 December 2013

பெர்லின் பட விழாவில் நிமிர்ந்து நில்!




ஜெயம்ரவி நடிக்க சமுத்திரகனி டைரக்ட் செய்துள்ள படம் நிமிர்ந்து நில். இதில் ஜெயம்ரவி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அமலாபால் ஹீரோயின். நீ திருந்து உலகம் தானாக தன்னை திருத்திக் கொள்ளும் என்ற மெசேஜை கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது.


 2013ல் ஆதிபகவன் கொடுத்த அடியில் துவண்டு போயிருக்கும் ஜெயம் ரவி இந்தப் படத்தை நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நிமிர்ந்துநில் படம் பெர்லின் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருக்கிறது. வருகிற 14ந் தேதி திரையிடப்படுகிறது.



இதுகுறித்து ஜெயம்ரவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரசிகர்களுக்கும், சக நடிகர் நடிகையர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நிமிர்ந்து நில் என் வாழ்க்கையில் மிக முக்கியமான படம்.


அது பெர்லின் திரைப்பட விழாவுக்கு தேர்வு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் தரத்திற்கு கிடைத்த அங்கீகாரம் இது. புது வருடம் எனக்கு இனிமையாக அமைய உள்ளது. மேலும் நல்ல செய்திகள் இந்த ஆண்டு வரும் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

வாழ்க்கை கொடுத்த குருவை மறந்த சிஷ்யன்;அடி முட்டாள் என திட்டிய குரு..?




சினிமாவில் ஊர் உலகத்துக்கெல்லாம் கருத்து சொல்லும் காமெடியன், ஹீரோவாக நடித்த எந்தப் படமும் இதுவரை ரிலீசாகவில்லை. இப்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அதன் ஆடியோ ரிலீஸ் நடந்தது.


இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய காமெடியன், விழாவுக்கு வந்திருந்த ஏ.ஆர்.ரகுமான், மணிரத்னம், பாரதிராஜா, கேயார், விக்ரமன் ஆகியோரை வானளாவ புகழ்ந்து தள்ளிவிட்டு தன்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய கே.பாலச்சந்தர் பற்றி பேச மறந்து விட்டார். பிறகு சிறிது நேரத்திற்கு பிறகு மன்னிப்பு கேட்டுக் கொண்டு பேசினார்.


இதைத் தொடர்ந்து பேச வந்த பாலச்சந்தர் கூறியதாவது:


செகரட்டரியேட்ல கிளர்க்கா வேலை பார்த்துகிட்டு இருந்தவன் சின்ன சின்ன கவிதை எழுதிக் கொண்டு வந்து என்கிட்ட காட்டி வாய்ப்பு கேட்டான். நானும் தொடர்ந்து அவனுக்கு மூன்று படத்துல வாய்ப்பு கொடுத்தேன். முதல் படத்துலேயே தன்னை அறிவாளியா காட்டிக்கிட்டுதான் நடிச்சான். ஆனா நான் அவனை அப்போதே முட்டாள்னுதான் திட்டுவேன்.


 இப்போ என் பெயரை மறந்துட்டு தான் அடிமுட்டாள்னு புரூப் பண்ணிட்டான். என்றார்.


இந்தப் படத்திற்கு வெங்கட் க்ருஷி என்பவர் இசை அமைத்திருந்தார். ஆனால் அவரை மேடைக்கு அழைக்கவே இல்லை. அவரைப் பற்றி ஒரு வார்த்தைகூட யாரும் பேசவில்லை. பாரதிராஜா மட்டும் பெயரை குறிப்பிட்டு ஹாட்ஸ் ஆப் யூ என்றார்.

பாலூட்டும் புறா..?




தமிழ்நாட்டின் மாநிலப் பறவை மரகதப்புறா (Emerald Dove) பச்சை நிற இறகுகளும் சிவப்பு நிற அலகும் கொண்ட இந்த மரகதப்புறா மட்டுமல்ல, எல்லாப் புறாக்களும் தங்கள் குஞ்சுகளைப் பாலூட்டி வளர்க்கின்றன என்பது தெரியுமா?


DoveP-feed புறாவின் பாலானது அதன் தொண்டைப் பகுதியிலுள்ள ‘crop’ எனப்படும் தொண்டைப் பையின் உட்புற சுவரின் திசுக்களில் சுரக்கிறது. இதனால் புறாப்பால் ‘crop milk’ எனவும் அழைக்கப் படுகிறது. திரவமாக இல்லாமல் பாலாடை போன்று சற்றே கெட்டியாக இருக்கும் இந்தப் பாலில் தாய்ப்பாலைவிட புரதச் சத்தும், கொழுப்புச் சத்தும் மிக அதிகம். ஆனால் மாவுச் சத்தும் கால்சியமும் கிடையாது.


தாய்ப்புறா முட்டை இட்டதும் தாய், தந்தை என இரு புறாக்களுமே அடைகாக்கின்றன. குஞ்சுகள் வெளி வருவதற்கு நாலைந்து நாட்களுக்கு முன்பிருந்தே புறாக்களின் தொண்டைப் பையில் பால் சுரக்க ஆரம்பித்து விடுகிறது. அப்படிச் சுரக்கும் பாலை, புறாக்கள் தொண்டைப் பையிலிருந்து எதிர்க்களிப்பு செய்து தங்கள் வாய்க்குள் கொண்டு வருகின்றன. குஞ்சுகள் தங்கள் சிறிய அலகுகளை தாய் தந்தையின் அலகுக்குள் செலுத்தி இந்தப் பாலை உட்கொள்ளுகின்றன.


குஞ்சுப் புறாக்களுக்கு முதல் இரண்டிலிருந்து மூன்று வாரங்கள் வரை இந்தப் பால் மட்டும்தான் உணவு. பால் சுரக்கும் தொண்டைப் பையானது சாதாரண நாட்களில் புறாக்கள் வேகமாக உட்கொள்ளும் தானியத்தைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்க உதவும் உறுப்பாகும். பால் கொடுக்கும் சமயத்தில் புறாக்கள் தானியம் உட்கொண்டால் பாலில் குஞ்சுகளால் ஜீரணிக்க முடியாத தானியம் கலக்க வாய்ப்புண்டு. அதனால் புறாக்கள் தாங்கள் பட்டினியாக இருந்து தங்களின் சிறிய குஞ்சுகளுக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பாலூட்டுகின்றன. எப்பேர்ப்பட்ட தியாகம் மூன்று வாரங்களுக்குப் பிறகு ஈரப்படுத்தி மென்மைப்படுத்தப்பட்ட தானிய உணவு குஞ்சுகளுக்குக் கொடுக்கப்படுகிறது.


அதிபுத்திசாலியான புறா இனம், கண்ணாடியில் தங்கள் பிரதிபலிப்பைத் தெரிந்து கொள்ளும் (pass the mirror test) ஆற்றல் படைத்தவை மனிதர்களைத் தவிர குரங்கு, யானை, டால்ஃபின் போன்ற இன்னும் சில மிகக் குறைந்த உயிரினங்களுக்கே இந்த ஆற்றல் உண்டு. இதுபோல் இந்தப் புவியில் வாழும் தாவரங்கள், விலங்கினங்கள் என எல்லாவற்றிலும் நமக்குத் தெரியாத பல்வகை அதிசய ஆற்றல்கள் உள்ளன. இவற்றை அறியும் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும். எல்லா உயிர் இனங்களையும் போற்றிப் பாதுகாக்கும் உணர்வை வளர்க்க வேண்டும். இந்தப் புவியானது, மனிதர்களாகிய நமக்கே சொந்தம் என்ற அகந்தை உணர்வு மழலைச் செல்வங்களிடம் தலைதூக்கமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.

ஒரு கடிதமும் சில கேள்விகளும்…




ஒரு கடிதமும் சில கேள்விகளும்…மகனின் வளர்ச்சியில் அக்கறை


அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், தன் மகனின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு அவனது ஆசிரியருக்கு எழுதிய கடிதம் உலக பிரசித்தி பெற்றது.


    ஏமாற்றுவதைவிட தோற்பது எவ்வளவோ பெருமையானது என்பதை என் மகனுக்கு கற்றுத் தாருங்கள்.


    எல்லோருமே தவறு என்று கூறினாலும் தன் சொந்தக் கருத்துக்களில் நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுத் தாருங்கள்.



    கண்ணீர் விடுவதில் அவமானமில்லை என்றும்,
    சிடுமூஞ்சிகளை அலட்சியப்படுத்தவும்,
 

 இனிமையாக பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு கற்றுத் தாருங்கள்.

    பொறுமையின்றி இருக்கும் துணிச்சலும், துணிவோடு இருக்கும் பொறுமையும் அவனுக்கு வேண்டும்.



    தன்னிடம் நம்பிக்கை வைப்பதை கற்றுக் கொடுங்கள். ஏனெனில் அப்போது தான் மனித சமுதாயத்தில் அவன் உன்னத நம்பிக்கை வைப்பான்.”


இது லிங்கன், கடிதத்தின் முக்கியமான பகுதி மட்டுமே.


உங்கள் குழந்தையும் எல்லா வகையிலும், எல்லா நிலையிலும் வளர்ச்சி பெற விரும்புவீர்களானால், குழந்தைகளை சரிசெய்வதைவிட- பெற்றோர்களாகிய உங்களை நீங்களே சீர்படுத்திக்கொள்வது அவசியம்.


அதற்காக இந்த கேள்விகளைப் படியுங்கள்…


* வேறு வேலையாக இருக்கும்போது உங்கள் குழந்தைகள் விளையாட அழைத்தால் செல்வீர்களா?


* குழந்தைகள் தேர்ந்தெடுக்கும் உடையை அணிய விடுவீர்களா?


* குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டதை உணர்ந்தால் மன்னிப்பு கேட்பீர்களா?


* இந்த டி.வி. சேனல்தான் பார்க்க வேண்டும், இவ்வளவு நேரம்தான் டி.வி. பார்க்க அனுமதி என்ற கட்டாயம் உண்டா?


* வீட்டுப்பாடத்தை குழந்தை முடிக்கவில்லையென்றால் நான் அதை செய்து கொடுக்க மாட்டேன். பள்ளியில் அதற்கான தண்டனையை பெறட்டும், அப்படியென்றால்தான் அடுத்த முறை தவறு நடக்காது என்று விட்டுவிடுவீர்களா?


* ஒழுக்கமாக வளர வேண்டும் என்பதற்காக, நான் குழந்தையை கண்டிக்கிறேன் என்கிறீர்களா?


* குழந்தைகள் கேட்பதை வாங்கி கொடுக்க மாட்டேன். அடம்பிடிக்கும்போது அன்பாய் நடந்து கொள்ள என்னால் முடியவில்லை?


* ஆசிரியர் உள்பட மற்றவர் மீது குழந்தை புகார் கூறினால் அதில் கவனம் எடுத்துக் கொள்கிறேன்?


* குழந்தை வளர்ந்ததும் அவன் தேர்ந்தெடுக்க விரும்பும் பாடத்தை சொல்கிறான். ஆனால் அது அவனுக்கு சரிப்படாது என்றோ, தேவையில்லை என்றோ கருதுகிறேன். இருந்தாலும் அவன் இஷ்டப்படி படிக்க வைப்பேன்?


இந்த கேள்விகளில் குறைந்தபட்சம் 7 கேள்விகளுக்காவது `ஆம்’ என்ற பதில் வந்திருந்தால் நீங்கள் நல்ல பெற்றோர். இல்லாவிட்டால் உங்களையே நீங்கள் ஆத்ம பரிசோதனை செய்து சரிசெய்துகொள்ளவேண்டும். நல்ல பெற்றோரால்தான் குழந்தைகளை நல்லவர்களாக உருவாக்க முடியும்.

ஒரு நாளைக்குப் பிச்சை எடுக்கும் தொகை ரூ 10,000/-...!




இங்கல்ல, பிரிட்டனில்  நாட்டிங்ஹாம் நகரில் பிச்சையெடுப்பவர்களுக்கு ஒரு வாரத்துக்கு 700 பிரிட்டிஷ் பவுண்டு ஸ்டெர்லிங் கிடைக்கிறதாம். அது 70,550 ரூபாய்க்குச் சமம். ஒரு நாளைக்கு சுமார் 10 ஆயிரம் ரூபாய் என்றால் ஆண்டுக்கு 36 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்.

அதிக சம்பளம் கிடைப்பதாகச் சொல்லப்பட்டு பலரின் வயிற்றெரிச்சலுக்கு உள்ளாகிக் கிடக்கும் நமது ஐடி துறையினருக்குக் கூட இந்த அளவுக்குச் சம்பளம் இல்லை!

பிச்சையெடுக்கிறார்களே… பாவம்… தெருவோரத்தில் குடியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? தவறு. அங்கே வீடில்லாத பிச்சைக்காரர்கள் மிகக் குறைவு.

அவர்கள் தங்குவது உயர்தர ஹோட்டல்களில். பறப்பது டாக்ஸியில்.

“பிச்சையெடுக்கிறார்களே… பாவம்’ என்று யாராவது இரக்கப்பட்டு உணவு வாங்கிக் கொடுத்தால், நம்நாட்டைப் போல அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு அரக்கப் பரக்க அவர்கள் சாப்பிடுவதில்லை. தூக்கியெறிந்துவிடுகிறார்கள். அதுபோல எந்த குளிர்பானங்களை யார் வாங்கிக் கொடுத்தாலும் குடிப்பதில்லை. பணம் கொடுத்தால் மட்டுமே வாங்கிக் கொள்கிறார்கள்.

பிரிட்டனில் “பிக் இஸ்யூ’ என்ற இதழ் ஒன்று உள்ளது.

“”நீங்கள் ஏன் பிச்சையெடுக்க வேண்டும்? எங்களுடைய இதழை விற்று நீங்கள் சம்பாதிக்கலாமே?” என்று ஒரு பிச்சைக்காரரிடம் கேட்டதற்கு, “”அதெல்லாம் எனக்குக் கட்டுப்படியாகாது. நான் பிச்சையெடுத்தால் எனக்கு ஒரு மணி நேரத்துக்கு 20 பவுண்ட் ஸ்டெர்லிங் (ரூ.2000) கிடைக்கும். உங்கள் பத்திரிகையை விற்றால் கிடைக்குமா?” என்று திருப்பிக் கேட்டாராம்.

இப்படிப்பட்ட பிச்சைக்காரர்களுக்கு மக்கள் இரக்கப்பட்டு பணம் கொடுக்க வேண்டாம் என்ற குரல் அங்கே எழும்பியிருக்கிறது.

“பிக் இஸ்யூ’  பவுண்டேஷனும், சில தன்னார்வ அமைப்புகளும், காவல்துறையும் சேர்ந்து இந்தப் பணக்காரப் பிச்சைக்காரர்களுக்கு எதிராகக் களம் இறங்கியிருக்கிறார்கள்!

“”உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறவர்கள் இருக்கிறார்கள். வீடற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் இம்மாதிரியான பணக்காரப் பிச்சைக்காரர்களால் உண்மையிலேயே உதவி தேவைப்படுகிறவர்களுக்கு உதவி கிடைக்காமற் போகிறது” என்கிறார்கள்.

“”பிறருக்கு உதவ வேண்டும் என்ற இரக்க குணம் உங்களுக்கு இருக்கிறதா? உண்மையிலே தொண்டுள்ளத்துடன் செயல்படும் எவ்வளவோ தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றுக்கு உதவுங்கள்” என்கிறார்கள்.

“”பிச்சைக்காரர்களுக்குப் பணம் தருவதன் மூலம் அவர்களுக்கு உதவுவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால்  உழைத்து நல்ல மனிதனாக வாழ வேண்டிய ஒருவரை தங்களுடைய இரக்க குணத்தால் கொன்றுவிடுகிறார்கள். சோம்பேறிகளும், தீயவர்களும் உருவாகக் காரணமாகிவிடுகிறார்கள்” என்று பிச்சையிடுபவர்களைச் சாடுகிறார்கள்.

பணக்காரப் பிச்சைக்காரர்களுக்கு எதிராகக் கிளம்பியிருக்கும் இவர்கள், உண்மையிலேயே  தெருவோரத்தில்  வாழ்பவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top