.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 28 December 2013

கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது எப்படி?



கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது எப்படி?


தங்கம், நிலம், வீடு ஆகியவை நம் முதலீட்டில் முக்கிய அங்கம் வகித்தாலும், அதன் பிறகு நம்மில் பலருக்கு முதலீடு என்பதே கடன் பத்திரங்கள்தான். கடன் பத்திரங்கள் நிலையான வட்டியை, வருவாயை கொடுப்பதுதான் அதன் சிறப்பு. கடன் பத்திரங்களில் முதலீடு செய்வோர் வங்கிகளில் வைப்புக் கணக்கு, பிராவிடன்ட் தொகை, தேசிய சேமிப்புப் பத்திரங்கள், ஆயுள் காப்பீடு பாலிசி என பலவகைகளில் வைத்திருப்பார்கள். இந்தக் கடன் வகைகள் யாவும் வெவ்வேறான கால அளவுகளில் இருக்கும். வெவ்வேறான வட்டி விகிதங்களைக் கொடுக்கின்றன.


நீங்கள் ஓராண்டு வைப்புக் கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். இதன் மீதான ஆண்டு வட்டி 10%. ஒரு வருட முடிவில் உங்களுக்கு ரூ.10,000 வட்டியாகக் கிடைக்கும். இந்த வட்டியை நீங்கள் மாதம்தோறும் வாங்கினால் (10000/12) ரூ.833 மாத வட்டியாகக் கிடைக்கும். அந்த மாத வட்டியை மீண்டும் 10 சதவீதத்தில் முதலீடு செய்தால், ஓராண்டு இறுதியில் உங்கள் மொத்த வட்டி 10 சதவீதத்தைவிட அதிகமாக இருக்கும். இவ்வாறு நீங்கள் வாங்கும் வட்டி மாத வட்டி, கால் அல்லது அரை வருட வட்டி, ஒரு வருட வட்டி, முதிர்வு கால வட்டி என்று பலவிதத்தில் இருக்கும்.


பொதுவாக பிராவிடன்ட் தொகை, அதன் முதிர்வில்தான், அதாவது 15 அல்லது 20 வருட முடிவில் கிடைக்கும். தேசிய சேமிப்பு பத்திரங்களும் அவ்வாறுதான்.


கடன் பத்திரங்களில் ஒரு வகை Bond. இதில் மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் Government Securities, அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் அளிக்கும் Corporate Bond அல்லது Debenture என பல வகைகள் உண்டு. Bond என்பது ஒரு குறிப்பிட்ட வட்டித் தொகையை மாதம் அல்லது வருடம்தோறும் தருவதாகவும் அல்லது ஒரு குறிப்பிட்ட முதிர்வுத் தொகையை மட்டும் கொடுப்பதாகவும் இருக்கும். சில corporate debenture-கள் பின்னர் பங்குப் பத்திரமாக மாற்றிக்கொள்ளும் வசதியுடன் வருகின்றன.


வட்டி விகிதம், பணவீக்கத்தைவிட அதிகமாக இருக்க வேண்டும் என்பது கோட்பாடு. நீண்டகாலத்துக்கு (3 ஆண்டுக்கும் அதிகமாக) கடன் பத்திரத்தில் முதலீடு செய்யும்போது, நிகரவட்டி (ஒப்புக்கொள்ளப்பட்ட வட்டி – பணவீக்க விகிதம்) சில ஆண்டுகளில் குறைவாகவும், சில ஆண்டுகளில் அதிகமாகவும் இருக்கும். இதை கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே வருமான வரி, பணவீக்கம் நீங்கலாக உள்ள நிகர வருவாயைக் கணக்கிடுவது முக்கியம்.


மாதம் அல்லது வருட வட்டி கொடுக்கும் நீண்ட கால கடன் பத்திரத்தில் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். வட்டி வருவாய் மாதம் அல்லது வருடம்தோறும் உங்கள் செலவுக்கு தேவை என்றால் மட்டுமே அவ்வாறான கடன் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். இல்லையென்றால், அதில் வரும் மாதாந்திர, வருடாந்திர வட்டி வருவாயை மீண்டும் சரியாக முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு வரும் சிறியத் தொகைகளை மீண்டும் அதிக வட்டி வரும் வகையில் முதலீடு செய்ய முடியாது. எனவே, முதிர்வு கால வட்டி வழங்கும் கடன் பத்திரத்தில் முதலீடு செய்க. கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும்போது கால அளவை நிர்ணயிப்பது முக்கியம்.


உங்கள் பணத்தை பல்வேறு கால அளவுகளில், பல கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம். நீண்ட கால முதலீட்டுக்கு பிராவிடன்ட் தொகை, ஆயுள் காப்பீடு திட்டங்களைத் தேர்ந்தெடுங்கள். குறுகியகால முதலீடு, மாதந்தோறும் வட்டி வாங்க வங்கி வைப்புக் கணக்கை தேர்ந்தெடுங்கள். வரி சேமிப்புக்கு அரசு கடன் பத்திரங்கள் உதவும். ஓரளவுக்கு ரிஸ்க் எடுக்க நினைத்தால், corporate bond அல்லது debenture வாங்குங்கள்.

டப்பிங் சீரியல் ஏன் பிடிக்கிறது?




சித்தியிலும் மெட்டிஒலியிலும் சரவணன் மீனாட்சியிலும் மயங்கிக் கிடந்த தமிழ்ப் பெண்களின் மனத்தை, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘உள்ளம் கொள்ளை போகுதே’, ‘என் கணவன் என் தோழன்’, ‘தெய்வம் தந்த வீடு’, ‘சிந்து-பைரவி’, ‘இது காதலா’, ‘மதுபாலா’ போன்ற டப்பிங் மெகா சீரியல்கள் எப்படிக் கொள்ளையடித்தன?


தமிழ் மெகா சீரியல்களை மாய்ந்து மாய்ந்துப் பார்த்த, அழுதும் புலம்பியும் பார்த்த பெண்கள் இப்போது டப்பிங் மெகா சீரியல்களை விரும்பிப் பார்க்கத் தொடங்கியதன் காரணங்கள்தான் என்ன?


90களில் நாடகங்கள் தொடர்களாகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின. வாரம் தோறும் அல்லது வாரம் இருமுறை என்ற அமைப்பிலும் 13 வாரத்தொடர் என்ற அமைப்பிலும் வெளிவந்தன. பெரும்பான்மையாக அவை ஸ்டூடியோவுக்குள் மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை. ஒருவிதத்தில் அவை “வீட்டுக்கு வந்த மேடைநாடகங்கள்” என்ற அளவில் இருந்தன. அவற்றால் மக்கள் தங்களின் மனத்தைத் திரைப்படத்திலிருந்து சற்று விலக்கிக் கொண்டனர்.


2000த்தில் நாடகங்கள் திரைப்படத் தரத்தில் பெருந்தொடராக (மெகா சீரியல்) நாள்தோறும் வெளிவரத்தொடங்கின. அப்போதும் பிறமொழி நாடகங்கள் தரமற்ற மொழிபெயர்ப்பில் வெளிவந்தன. ஆதலால், அவற்றை மக்கள் வரவேற்கவில்லை. அதேவேளையில் தமிழ் மெகா சீரியர்கள் தரமுடன் தயாரிக்கப்பட்டன. வெளிப்புறப் படப்பிடிப்பு, தெளிவான ஒளி-ஒலி,  பெண்களின் குடும்பப் போராட்டங்களை மையப்படுத்திய கதையமைப்பு, பாடல்கள், சண்டைக் காட்சிகள் என அவை தம்மைத் திரைப்படங்கள் போலவே பாவித்துக்கொண்டன. அதில் மனத்தைப் பறிகொடுத்தத் தமிழ்ப் பெண்கள் அவற்றைத் “தொடர்த் திரைப்படங்கள்” என்று கருதுகின்றனர்.


2010களில் பிறமொழி மெகா சீரியல்கள் தமிழில் தரமாக மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவரத்தொடங்கின. குறிப்பாக ஹிந்திமொழி மெகா சீரியல்கள் பல 2013இன் தொடக்கத்தில் தமிழ் மொழியாக்கத்தில் வெளிவரத் தொடங்கின. அவற்றின் தரம் தமிழ்ப் பெண்களைத் தமிழ் மெகா சீரியல்களுக்கு இணையாக ரசிக்கும் அளவுக்குச் செய்துள்ளன.


70களிலிருந்து தமிழர்கள் தமிழ்ப் படங்களுக்கு இணையான வரவேற்பை ஹிந்திப் படங்களுக்கும் வழங்கிவருகின்றனர். அதைப் போலவே தமிழ்ப் பெண்கள் தமிழில் டப்பிங் செய்து ஒளிபரப்பப்படும் ஹிந்தி மெகா சீரியர்களுக்கும் இப்போது வரவேற்பு அளிக்கின்றனர்.


எந்தெந்த விதத்தில் அவை தமிழ் மெகா சீரியல்களைவிடச் சிறந்துள்ளன?


    டப்பிங் மெகா சீரியல்களின் புதுவிதமான கதைதான் தமிழ்ப்  பெண்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. தமிழ் மக்கள் அனுபவிக்காத, கேட்டறியாத புதுக்கதைகள். குறிப்பாக, பெரிய இடங்களில் நடந்துகொண்டிருக்கும் உண்மைக்கதைகள்.


    சின்னத்திரைக்கதை அமைப்பு யாரும் கணிக்க இயலாத வகையில் திருப்பங்களைக் கொண்டிருக்கும். நம் பெண்களுக்கு அவை ஒரு த்ரில்லர் அனுபவத்தைக் கொடுக்கின்றன.


    வசன அமைப்பு செறிவாக இருக்கிறது. ஒரே விஷயத்தை ஒவ்வொரு கதைமாந்தரும் ஒவ்வொருவிதத்தில் பேசி போரடிப்பதில்லை. வசனத்தின் குறுக்கே பின்னணி இசை ஒருபோதும் வருவதில்லை.


    கதைமாந்தர்களின் உடையலங்காரம், சிகையலங்காரம், பின்னணிக் காட்சி அமைப்பின் பிரம்மாண்டம், காமிரா நகர்வு போன்றவை பெரிய பட்ஜெட் திரைப்படத்துக்கு இணையானவை.


    ஒரு எபிசோடில் மூன்று காட்சிகளும் ஒவ்வொருகாட்சியிலும் இரண்டுக்கும் குறையாத திருப்பு முனைகளும் இருக்கும். சுவாரஸ்யம் கூடியபடியே இருக்கிறது.


    இந்தியப் பண்பாடு சார்ந்த வழக்கங்களைத் தற்காலத்துக்கு ஏற்ப முற்போக்காக மாற்றிப் பல காட்சிகளை இடம்பெறச் செய்கின்றனர். இரண்டு குழந்தைகளைப் பெற்ற ஒரு விதவைக்கு மறுமணம் செய்துவைத்தல் போன்றன.


    நகைச்சுவை என்ற பெயரில் “மொக்கை“  போடுவதில்லை.
    மாமியார் – மருமகள் சண்டைக்காட்சிகள்கூட இயல்பாக, அதிகக் காழ்ப்புணர்ச்சி இன்றிக் காட்டப்படுகின்றன. மாமியார்களை எதிரியாச் சித்தரிக்கும் போக்கு இருப்பதில்லை.


    இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காகக் கதைமாந்தர்களின் செயல்பாடுகளை நிதானமாகக் காட்டி, நேரத்தை ஓட்டிப் பார்வையாளர்களுக்கு அலுப்பூட்டுவதில்லை.


    எல்லாக் கதைமாந்தர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். டிவிஸ்ட் தருவதாக எண்ணித் திடீரென ஒரு புதுக்கதைமாந்தரை அறிமுகப்படுத்திப் பார்வையாளரைக் குழப்புவதில்லை.


    அழுகைக் காட்சிகளில் கதைமாந்தர்களின் கண்கள் இயல்பாகச் சிவக்கின்றன. அவர்களின் கண்களில் கண்ணீர் அரும்புகிறது.  அவர்களின் மனச் சோகத்தை இசையே பார்வையாளர்களுக்கு ஊட்டிவிடுகிறது. அந்த இயல்பான அழுகைப் பார்வையாளரின் உள்ளத்தை ஊடுறுவுகிறது.
    பிரிந்துள்ள தம்பதிகள், காதலர்கள் ஆகியோரின் காதல் மற்றும் அன்புறவுகளைச் சின்னச்சின்ன சலனங்களுடன் எடுத்துக் காட்டுவதில் டப்பிங் மெகா சீரியல்கள் உச்சத்தில் நிற்கின்றன.


    சீரியலை அப்டுடேட் செய்கிறேன் என்ற போக்கில் நாட்டு நடப்பு நிகழ்ச்சிகளை சீரியலுக்குள் திணித்து, வலிந்து காட்சிப் படுத்துவதில்லை. ஒரு வசனமாகக்கூட அவை வெளிப்படுத்துவதில்லை.


    கதாமாந்தர்களின் குணத்தைப் பிறரின் வசனங்களின் வழியாகத் தெரியப்படுத்தாமல் அந்தந்தக் கதாமாந்தர்களின் செயல்களின் வழியாகவே காட்டுகின்றனர்.


    ஒரு எபிசோடில் அத்தியாவசியமான தருணத்தில் மட்டுமே தீம் மியூசிக் வெளிப்படுகிறது.


    திருமணம் சார்ந்த விழாக்கள் அனைத்தும் சங்கடங்களின்றி மிகுந்த உற்சாகத்துடன் காட்டப்படுகின்றன. ஆனால், தமிழ் மெகா சீரியல்களோ திருமணக்கட்சிகள் என்றாலே ஏகப்பட்ட சண்டைகளும் மனக் கசப்புகளுமாகக் காட்டி “அவைதான் நம் வழக்கம்“ என்பதுபோலப் பாவனைசெய்கிறார்கள்.


தற்போது தமிழ்த் தொலைக்காட்சிகள் பரவலாக டப்பிங் மெகா சீரியர்களைப் ஒளிபரப்பத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், தமிழ் மெகா சீரியல்கள் வீட்டுப்பெண்களின் விரும்பங்களை நிறைவேற்றிச் சின்னத்திரையில் தாக்குப்பிடிக்குமா?

லட்சியங்கள் நனவாக !




1. நாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது நம் மனம்தான். `நான் ஆனந்தமாக இருக்கிறேன்’ என்று நீங்கள் கருதினால் ஆனந்தமாக இருக்கிறீர்கள். இல்லை என்றால், ஆனந்தம் உங்களிடம் `மிஸ்’ ஆகிவிடும். அதனால், எப்போதும் ஆனந்தமாக இருங்கள்.


2. ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் இல்லாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொருவருக்குள்ளும் அவை புதைந்து கிடக்கின்றன. நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு நிறைவேறுகிறதே; நமக்கு மட்டும் ஏன் நிறைவேறவில்லை என்று எண்ணாதீர்கள். முடியும் என்றால் எல்லாமே முடியும். அதே நேரம், முடியாது என்றால் எதுவுமே முடி யாமல் போய்விடும்.


3. பணம் எல்லோருக்கும் முக்கியம். அதற்காக பணமே வாழ்க்கை என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அதுவும் தேவை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இருக்கும் பணமே திருதியெனக் கொண்டால் இல்லாத பணத்திற்காக ஏங்கும் மனநிலை வராது.


4. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுபோகும். அந்த பழமொழியை நீங்கள் தினமும் உங்கள் வீட்டில் செயல்படுத்தி வந்தால் உங்கள் இல்லம் ஆனந்தம் விளையாடும் வீடே!


5. ஜன்னலை திறந்து வைத்தால்தான் வீட்டிற்குள் தென்றல் காற்றின் இனிமையை உணர முடியும். அதுபோல், கவலைகள் சுமக்காத திறந்த மனதுதான் ஆனந்தமாக இருக்கும்.


6. ஆடை பாதி, ஆள் பாதி என்பார்கள். நீங்கள் எப்படிபட்டவர் என்பதை நீங்கள் அணியும் ஆடையும் தீர்மானிக்கிறது. நல்ல பழக்கவழக்கங்களோடு தூய்மையான-நேர்த்தியான ஆடையை தினமும் அணிவது, உங்கள் மீதான அடுத்தவர்களின் மரியாதையை அதிகபடுத்தும்.


7. சிலர் தோல்வியைக் கண்டால் அப்படியே துவண்டுபோய் விடுகிறார்கள். தோல்வியும், வெற்றிம் நிரந்தரமல்ல. குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சொந்தமும் அல்ல. சோர்ந்தாலும் எதிர்த்து போராடினால் நிச்சயம் வெற்றிக்கனி பறிக்கலாம்.


8. வாழ்க்கை என்பது பூக்களின் இதழ்கள் பரப்பபட்ட மென்மை யான பாதை அல்ல. அங்கே ரோஜா வும் இருக்கலாம், ரோஜாவின் முட்களும் இருக்கலாம். ரோஜா கிடைத்தால் சந் தோஷப் படலாம். அதன் முள் குத்தினால், அங்கே யே இருந்து விடக் கூடாது. அதை எறிந்து விட்டு லட்சியபாதையில் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.


9. காலையில் எழுந்ததும் குறைந்தது 1/4 மணி நேரமாவது தியானம் செய்ங்கள். அது, உங்கள் மனதை அமைதிபடுத்தும். தெளிவான-உறுதியான முடிவுகள் எடுக்க உதவும்.


10. சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்றால் உற்சாகம் ஊற்றாக பெருக்கெடுத்து வரவேண்டும். அதற்கு, நம்மை சுற்றி ள்ள சூழ்நிலைகள் ஆரோக்கியமாக – மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். அதற்கு, வாரத்தில் ஒருநாளையாவது குடும்பத்தோடு செலவிடுங்கள். அன்று, பார்க், பீச், தியேட்டர் என்று வெளியில் சென்று வருவது செலவை வைத்தாலும், அள்ள அள்ள குறையாத மகிழ்ச்சியை கொண்டு வரும்.


11. பிரச்சினை இல்லாத கணவன்-மனைவியே கிடையாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும், அவர்களே ஆற அமர்ந்து பேச ஆரம்பித்தால் அதற்கான தீர்வு எளிதில் கிடைக்கும். முன்றாவது நபரிடம் உங்கள் பிரச்சினை பற்றி எக்காரணம் கொண்டு சொல்லி விடாதீர்கள். மீறி சொன்னால், குரங்கு கையில் கொடுத்த பூமாலை ஆகிவிடும் உங்கள் மண வாழ்க்கை.


12. பிரிந்திருந்தால்தான் காதல் பலப்படும் என்று சொல்வார்கள். இதே பிரிவு கணவன் – மனைவியருக்குள் எக்காரணம் கொண்டும் , எந்த சூழ்நிலையிலும் ஏற்படக்கூடாது. மீறி பிரியும் சூழ்நிலை ஏற்பட்டால், வேறு வாழ்க்கைக்கு மனம் பழகிவிடும். அதனால் உஷார்…


13. வேலைக்கு செல்பவர்கள் வேலையே கதியென்று இருந்து விடக் கூடாது. குடும்பம் என்ற ஒன்று இருக்கிறது என்ற நினைப் பும் இருக்க வேண்டும். அப்படி வரும்போது, திருமணம் ஆன ஆண்கள் மனைவிக்கு மல்லிகைபூவையும், கூடவே ஸ்வீட்டைம் வாங்கி வந்து கொடுப்பது மனைவியை ஆனந்தத் தின் உச்சிக்கே கொண்டு போய் விடும்.


14. குழந்தைகளை லட்சியத்தோடு வளர்த்து ஆளாக்க வேண்டும். பாலின வேறுபாடு காட்டக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித திறமை உண்டு. அதை கண்டறிந்து ஊக்க படுத்தினால், அவர்களும் பிற்காலத்தில் ஸ்டார்களாக ஜொலிப் பார்கள்.


15. உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். அதனால், நீங்கள் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கட்டும். பாக்கெட்டுகளில் தயாரித்து விற்கபடும் உணவு வகைகளையும், பாஸ்ட் புட் அயிட்டங் களையும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இவற்றை நீங்கள் விரும்பி சாப்பிட ஆரம்பித்தால் உடல் எக்குத்தப்பாக சதை போட ஆரம்பித்துவிடும். இல்லாத நோய்களும் வந்து ஒட்டிக் கொள்ளும்.


16. வருடத்திற்கு ஒருமுறையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் என்று குடும்பத்தோடு இன்பச் சுற்றுலா சென்று வாருங்கள். இதுவும் உங்கள் உள்ளத்தை உற்சாகபடுத்தும்.

17. வரவிற்குள் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும். அதனால், மாதம்தோறும் பட்ஜெட் போடுவது சிறந்தது. அந்த பட்ஜெட்டில் சேமிபுக்கு என்றும், மருத்துவச் செலவுக்கு என்றும் தேவைபடும்போது மாத்திரம் எடுத்து பயன்படுத்தும் வகையில் ஒரு தொகையை ஒதுக்குவது ஆனந்த வாழ்வுக்கு வித்திடும்.


18. உங்கள் நட்பு வட்டாரம் பயனுள்ளதாக இருக்கட்டும். உங்களை உற்சாகபடுத்தும் நட்புக்கே முதலிடம் கொடுங்கள்.


19. அட்ஜஸ்ட் என்பது அளவோடு தான் இருக்க வேண்டும். வாழ்க்கையே அட்ஜஸ்ட் ஆகிவிட்டால், நீங்கள் வாழ்ந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.


20. தம்பதியரின் ஆனந்த வாழ்க்கைக்கு தாம்பத்திய வாழ்க்கையும் ஒரு முக்கிய காரணம். அந்த வாழ்க்கை ஆனந்த மாக இருந்தால் உங்கள் ஒவ்வொரு செயலும் இனிக்கும். ஆனந்த வாழ்க்கை தானாகத் தேடி வரும்.

சங்க கால மலர்கள்...





சங்க காலத்தில் 99 வகையான மலர்களை அக்கால மகளிர் தொடுத்தும், அணிந்தும் மகிழ்ந்ததாகக் கபிலர் தனது குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.


அம்மலர்களின் பெயர்கள் அகரவரிசைப்படி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.


1. அடும்பு

2. அதிரல்

3. அவரை - நெடுங்கொடி அவரை

4. அனிச்சம்

5. ஆத்தி - அமர் ஆத்தி

6. ஆம்பல்

7. ஆரம் (சந்தன மர இலை)

8. ஆவிரை - விரிமலர் ஆவிரை

9. இருள்நாறி - நள்ளிருள் நாறி

10. இலவம்

11. ஈங்கை

12. உந்தூழ் - உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ்

13. எருவை

14. எறுழம் - எரிபுரை எறுழம்

15. கண்ணி - குறு நறுங் கண்ணி

16. கரந்தை மலர்

17. கருவிளை - மணிப்பூங் கருவிளை

18. காஞ்சி

19. காந்தள் - ஒண்செங் காந்தள்

20. காயா - பல்லிணர்க் காயா

21. காழ்வை

22. குடசம் - வான் பூங் குடசம்

23. குரலி - சிறு செங்குரலி

24. குரவம் - பல்லிணர்க் குரவம்

25. குருக்கத்தி - பைங் குருக்கத்தி



26. குருகிலை (குருகு இலை)

27. குருந்தம் (மலர்) - மாயிருங் குருந்தம்

28. குவளை (மலர்) - தண்கயக் குவளை

29. குளவி (மலர்)

30. குறிஞ்சி

31. கூவிரம்

32. கூவிளம்

33. கைதை

34. கொகுடி - நறுந்தண் கொகுடி

35. கொன்றை - தூங்கு இணர்க் கொன்றை

36. கோங்கம் - விரிபூங் கோங்கம்

37. கோடல்

38. சண்பகம் - பெருந்தண் சண்பகம்

39. சிந்து (மலர்)

40. சுள்ளி மலர்

41. சூரல்

42. செங்கோடு (மலர்)

43. செம்மல்

44. செருந்தி

45. செருவிளை

46. சேடல்

47. ஞாழல்

48. தணக்கம் (மரம்)

49. தளவம்

50. தாமரை - முள் தாள் தாமரை


51. தாழை மலர்

52. திலகம் (மலர்)

53. தில்லை (மலர்)

54. தும்பை

55. துழாஅய்

56. தோன்றி (மலர்)

57. நந்தி (மலர்)

58. நரந்தம்

59. நறவம்

60. நாகம் (புன்னாக மலர்)

61. நாகம் (மலர்)

62. நெய்தல் (நீள் நறு நெய்தல்)

63. நெய்தல் (மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்)

64. பகன்றை

65. பசும்பிடி

66. பயினி

67. பலாசம்

68. பாங்கர் (மலர்)

69. பாதிரி - தேங்கமழ் பாதிரி

70. பாரம் (மலர்)

71. பாலை (மலர்)

72. பிடவம்

73. பிண்டி

74. பித்திகம்

75. பீரம்



76. புன்னை - கடியிரும் புன்னை

77. பூளை - குரீஇப் பூளை

78. போங்கம்

79. மணிச்சிகை

80. மராஅம்

81. மருதம்

82. மா - தேமா

83. மாரோடம்

84. முல்லை - கல் இவர் முல்லை

85. முல்லை

86. மௌவல்

87. வகுளம்

88. வஞ்சி

89. வடவனம்

90. வழை மரம் - கொங்கு முதிர் நறுவழை

91. வள்ளி

92. வாகை

93. வாரம்

94. வாழை

95. வானி மலர்

96. வெட்சி

97. வேங்கை

98. வேரல்

99. வேரி மலர்

படித்ததில் பிடித்தது!



பணத்திற்காக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்.


துன்பம் துன்பம் என்று சலித்துக் கொண்டு என்ன பயன்? உடம்பிலிருக்கும் ஒன்பது ஓட்டைகளோடு அதுவும் பத்தாவது ஓட்டை என்று முடிவு கட்டு : வாழ்வுக்கு நியாமும் நெஞ்சிற்கு நிம்மதியும் கிடைக்கும்.


உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை. தீமையையும் விரட்டுகிறது.


அழகான பெண் கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம். இரண்டாமவள் ஒரு புதையல்.


ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கி விடுகிறாள்.


பெண் இல்லாத வீடும், வீடு இல்லாத பெண்ணும், மதிப்பு இல்லாதவை!


பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.


மது உள்ளே சென்றால் அறிவு வெளி செல்கிறது.


நண்பனைப் பற்றி நல்லது பேசு. விரோதியைப் பற்றி ஒன்றும் பேசாதே.


செல்வம் என்பது பணம் மட்டும்தான் என்பது இல்லை.


பறக்க விரும்புபவனால் படர முடியாது.


ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால் நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top