.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 27 December 2013

மௌனம்....?




வார்த்தைகள் இல்லாத புத்தகம் மௌனம். ஆனால், வாசிக்க, வாசிக்க இதற்குள் வாக்கியங்கள். மௌனம் என்பது வெளிச்சம். நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம். மௌனம் என்பது இருட்டு. எல்லாத்துன்பங்களையும் இதற்குள் புதைக்கலாம். மௌனம் என்பது மூடி! இதை தயாரித்து விட்டால் எல்லா உணர்ச்சிகளையும் இதற்குள் பூட்டி வைக்கலாம். மௌனம் என்பது போதி மரம். இதுவரை உலகம் சொல்லாத உண்மைகளை இது போதிக்கும். மனம் என்பது தவம். இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.

“மௌனம் என்பது வரம்” நம்மிடம் நாமே பெறுவது. இன்பம், துன்பம் இரண்டையும் மௌனம் கொண்டு சந்தித்தால் எப்போதும் இதயம் இயல்பாக இருக்கும். இதழ்களை இறுக மூடி நாம் நமக்குள் இறங்குவோம்!”

எங்கோ, எப்பொழுதோ படித்திதயத்தை வருடிய வரிகள், உலகத்திலேயே நமக்குப் பிடித்த குரல் நமது குரல்தான். நமக்குப் பிடித்த பேச்சு நமது பேச்சுதான். அதனால் நாம் பேச ஆரம்பித்தால் மணிக்கக்காகப் பேசிக்கொண்டே இருக்கிறோம். ஒரு வரியில் பேச வேண்டியதை ஒன்பது வரிகளில் பேசுகிறோம். நாம் பல சமயம் யாரிடம் பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம எந்த இடத்தில் பேசுகிறோம் எனபதைப் பற்றியே சிந்திப்பதில்லை. நமக்குத் தெரிந்ததை பேச வேண்டும் என்பது, மட்டுமே நமது இலக்கு. புத்திசாலி மற்றவர்களைப் பேசவிட்டு,, மௌனம் சாதித்து, தேவையான பொழுது மட்டும் பேசி பேசுபவர்களின் நட்பைப் பெறுகிறான். பேசுவதால் நம் இருப்பை பிறர்க்கு உணர்த்துகிறோம். நாம் ஒரு நாளில் பேசுகிற பேச்சை ஒலிநாடாவில் பதிவு செய்து அதையே நாம் கேட்டால் சில நேரங்களில் வருத்தப்படுவோம். நமது நாக்கு ஈரமுடையது.

இது அவசர உலகம். இயந்திர கதியில் மனிதர்கள். வாய்க்கும் வயிறுக்கும் போராட்டம். நின்று, நிலைக்க நேரமில்லை, வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. வாரம் ஒரு முறை தினசரிக் காலண்டரில் ஞாயிறன்று ஆறு நாட்களைச் சேர்த்து கிழிக்கிறோம். தேவை நிம்மதி. தேவை மன அமைதி. தேவை மகிழ்ச்சி. இது மௌன தவத்தால் கிட்டும்.

தன்னம்பிக்கை ....?




சுவாமி விவேகானந்தர் பாரீஸ் நகரிலே இருந்தபொழுது ஓய்வு எடுப்பதற்காக குதிரை வண்டியிலே தனது சிஷ்யை ஐரோப்பிய பெண்மணியுடன் பாரீஸ் நகரை வலம் வந்தார். ஒரு தெரு வழியாக ஒரு வீட்டுக்குள்ளே இருந்து இரண்டு சிறிய பையன்கள் வெளியே வந்தார்கள். அவர்களின் தோற்றம் பணக்கார வீட்டுக் குழந்தைகள் போன்று தோன்றியது. அவர்களது அம்மா அந்தக் குழந்தைகளை அழைத்து வந்தார்கள். குதிரை வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அந்தக் குழந்தைகளை கட்டிப்பிடித்து முத்தமிட்டு, தட்டிக்கொடுத்துவிட்டு மீண்டும் குதிரை வண்டியில் ஏறி ஓட்டிக்கொண்டு போனார்.

“யார் அந்த சிறுவர்கள்?” என்று விவேகானந்தரின் சிஷ்யை கேட்டாள். “என்னுடய பிள்ளைகள்தான்” என்று கூறினார் குதிரை வண்டியை ஓட்டியவர். அவர்களுக்கு ரொம்ப ஆச்சரியம். “குழந்தைகளைப் பார்த்தால் ரொம்ப பணக்கார வீட்டுக் குழந்தைகள் போலத் தோன்றுகிறது. இவர் குதிரை வண்டி ஓட்டுகிறாரே என்று”. குதிரைவண்டு ஓட்டுகிறவர் திரும்பிப் பார்த்தார். பாரீஸ்லே ஒரு வங்கி பேரைச் சொல்லி ‘அந்த வங்கியை உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டடார். “ஓ கேள்விபட்டிருக்கிரோமே! ரொம்ப பெரிய வங்கி ஆச்சே அது! எங்களுக்கு கூட அந்த வங்கியிலே கணக்கு இருந்தது. ஆனா இப்பொழுது அந்த வங்கி திவாலாகி விட்டதாக தெரிகிறதே” அப்படின்னாங்க சுவாமியோட சிஷ்யை.

இதைக் கேட்டுவிட்டு… அதற்கு பிறகு அந்த குதிரை வண்டியைய் ஓட்டியவர் விளக்கினார். “நான் தான் அந்த வங்கிக்குச் சொந்தக்காரன்! அந்த வங்கி இப்ப கொஞ்சம் கஷ்ட நிலைமையில்தான் இருக்கிறது. பாக்கிகள் எல்லாம் வசூல் பண்ணி கடன்களை எல்லாம் அடைக்க சிறிது நாள் ஆகும் போல தெரிகிறது. இந்த நிலைமையில் நான் மற்றவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை. சொந்த ஊரிலே ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தேன். என் கிட்டே இருந்தது… என் மனைவி கிட்டே இருந்தது எல்லாவற்றையும் விற்று இந்த குதிரை வண்டி வாங்கி வாடகை வண்டியாக ஓட்டிக் கொண்டு இருக்கிறேன். என் மனைவியும் கொஞ்சம் சம்பாதிக்கிறாள். எங்களுடைய இரண்டு பேர் வருமானத்தில் குழந்தைகளுக்கு ஆகிற செலவுகளை சரிசெய்து கொண்டு இருக்கிறோம். பாக்கிகளை வசுல் செய்து கடன்களை அடைத்ததும் மறுபடியும் வங்கியை திறந்துவிடுவேன்!” என்றார்.

சுவாமி விவேகானந்தர் இதை கேட்டுக் கொண்டு இருந்தார். மனதிற்கு மகிழ்சியாக இருந்தது. சுவாமி விவேகானந்தர் சொன்னார், “இதோ இந்த மனிதரைப் பார்? இவர்தான் சரியான வேதாந்தி. அப்படியே நடைமுறைப்டுத்தியிருக்கிறார்! பெரிய ஒரு அந்தஸ்திலே இருந்து விழுந்துவிட்டால் கூட சூழ்நிலைக்கு இரையாகிவிடவில்லை! அப்படின்னு சொல்லி ஆச்சரியப்பட்டார்!”.

“எவ்வளவுதான் கஷ்டம் வந்தாலும் தன்னம்பிக்கையை தளரவிடக்கூடாது.

புதுமைக்குத் தேவை சவால் ...?



நம்மிடம் உலகத்திலேயே சிறப்பான கருத்து, கற்பனை, சிந்தனை,
எண்ணம் இருக்கலாம்; ஆனால் அதிலேயே நாம் ஒரு புதுமையானவர்
ஆகிவிட முடியாது. புதுமைக்கு முதல் தேவை புத்தம் புதிய கருத்து. கருத்தோடு மட்டும் புதுமையை அடைய முடியாது! ஆனால் உண்மையில் புதுமைக்குத் தேவைப்படுவது, ஒரு சவால்தான். நாம் காலம் காலமாகப்
போய் வந்த பாதையை ஒரேடியாக மாற்றச் செய்யும் ஒரு சவால்!

டென்மார்க் நாட்டில், ஆர்லாஃபுட்ஸ் என்ற ஒரு நிறுவனம் பால் பொருட்கள் தயாரித்து விற்று வந்தார்கள். புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு ஆசை. எனவே அவர்களுடைய புதுமை படைக்கும் துறையின் இயக்குனர் மைக்கேல் ஸ்டீவன்ஸ், ஒரு சவாலைத் தேடிப் புறப்பட்டார். அதுவரை நிறுவனம் சுற்றிக் கொண்டிருக்கும் பாதையைவிட்டு அப்படியே தூக்கிப்போய் வேறு எங்கோ வீசிவிடப் போகும் சவால் அது! ‘பால் மற்றும் பால் பொருட்களை விண்வெளியில் அனுப்பிய முதல் ஆள் நாமாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார் அவர். இதுவரை யாரும் இதைச் செய்ததில்லை. விண்வெளி வீரர்கள் பால் எடுத்துக்கொள்வதால் நன்மைகள் ஏராளம்; இருந்தும் ஏவுகணையில் போகும் போது யாரும் பால் சாப்பிட்டதே இல்லை’.

இந்த ஒரு சவால் மட்டுமே - ஆர்லாஃபுட்ஸின் ஆராய்ச்சிப் பிரிவையும், தயாரிப்பு வளர்ச்சித் துறையையும் அவர்களுகடைய பழகிய பாதையை விட்டு தூக்கிவிட்டது. அவர்கள் வேறு ஏதோ திசையில் எங்கோ வெளியே வந்தபோது, மிகமிகப் புதுமையான தயாரிப்புகளைக் கையில் எடுத்துக் கொண்டுவந்தார்கள். விண்வெளில் மட்டும் இல்லாமல் அவற்றை பூமியிலும் சாப்பிட முடியும்! உதாரணமாக, குளர்சாதன பெட்டியில் வைக்காமலேயே இரண்டு வருடம் வரை கெடாமல் இருக்கும் தயிரைப் பார்த்தீர்களா? பூமியிலேயே கால் பதித்து நின்றியிருந்தால் அவர்கள் இந்த மாதிரியான பொருட்களைத் தயாரிப்பது பற்றி கனவுகூடக் கண்டிருக்கமாட்டார்கள்.

இவர்கள் மட்டுமல்ல. புதுமையுடன் சவாலையும் சேர்த்துக் கொள்ளும் எந்த ஒரு தனிமனிதனும் அல்லது நிறுவனமும் ரஜினி படத்தின் பாடல் வரிகள் போல “சிகரத்தில் ஏறு, சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு” என்பனபோல உலகஅளவில் தன் வெற்றியை கால் பதிக்கின்றனர்.

போகிற பாதை மிகவும் பயங்கரமானது! அதன் ஒவ்வொரு அடியிலும் புதிய புதிய சிந்தனைகள் தேவைப்படும். புதுமை செய்கிறேன் என்று புறப்படும் நிறுவனத்தின் பாதை, ஒரு கடினமான மலைப் பாதையைப் போல அணியின் உற்சாகமும் ஈடுபாடும் அணைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி நம் இதயம் சோர்ந்து போய், “கிழே போய்விடலாம்” என்று சொல்லும்; அதைமீறி மேலே போய்க் கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு சாகசப் பயணம் என்றால் வழியில் நூற்றுக்கணக்கான புயல்கள் வீசும், சவால்கள் மறிக்கும். கடைசியாக பயணத்தின் நோக்கம் சிகரத்தை அடைவது மட்டுமே அல்ல;  இன்னும் பல சிகரங்களை எட்டுவதற்கான வல்லமைளை வளர்த்துக் கொள்வதும்தான்!

                 சிகரத்தை அடைவோம்! வானத்தைத் தொடுவோம்!!

பணத்தை மிச்சப்படுத்த சில டிப்ஸ்




சேமிப்பு என்று ஒன்று இருந்துவிட்டால், வீட்டில் எழும் பல்வேறு பொருளாதார பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைத்துவிடும். உங்கள் உழைப்பை சேமிப்பாக மாற்ற சில டிப்ஸ்…

* தினமும் நீங்கள் செலவழித்ததை, இரவில் எழுதிப் பாருங்கள். அதில் தேவையற்ற செலவு எனத் தோன்றுவதை அடுத்த முறை தவிர்த்துவிடுங்கள்.

* மணிக்கு ஒரு முறை காபி, டீ குடிக்கும் பழக்கம் உடையவராக இருந்தால், வீட்டிலிருந்தே ஒரு பிளாஸ்கில் டீ எடுத்துப் போய்விடுங்கள்.

* புத்தகங்கள் குறித்து முன்பின் அறியாமலேயே வாங்கிக் குவிக்கிறீர்களா? வாடகை புத்தகங்கள் கிடைக்கும் நூலகங்களில் அதனை வாங்கிப் படித்துவிட்டு, அந்த புத்தகத்தை சேர்க்க விரும்பினால் மட்டும் வாங்கிக் கொள்ளலாமே.

* வீட்டில் தேவைக்கு அதிகமான அலங்காரப் பொருள்கள் அல்லது ஃபர்னிச்சர் பொருள்களை வாங்க நினைத்தால், அந்த திட்டத்தை பத்து நாள் தள்ளிப்போட்டுப் பாருங்கள். அதற்குப் பின்னும் தேவையென்று தோன்றினால் வாங்குங்கள்.

* நீங்கள் வாங்கவிருக்கும் அல்லது செலவழிக்கப்போகும் பொருளை மூன்று விதமாகப் பிரியுங்கள். அவசியம், அத்தியாவசியம், அனாவசியம். “அத்தியாவசியம்’ என்று தோன்றுவதை மட்டும் செய்யுங்கள்.

* தபால் நிலையம், வங்கி, அலுவலக சேமிப்பு என நம்பகமான இடங்களில் சிறு சிறு தொகையை சேமியுங்கள். அவசரத் தேவைக்கு அது உதவும்.

*கிரெடிட் கார்டு உபயோகிப்பதை பெரும்பாலும் தவிர்த்துவிடுங்கள். கையில் பணத்தை வைத்துக் கொண்டு, வட்டியையும், முதலையும் சேர்த்து செலுத்த வேண்டாமே!

ஆண்-பெண் நட்பு...?




இன்று ஐரோப்பியாவில் இது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான ஒரு போராட்டம் என்று கூடச் சொல்லலாம்.

முக்கியமாகப் பெண் பிள்ளைகள். இவர்கள் கலாச்சாரம், பண்பாடு என்ற இருவிடயங்களால் பெற்றோருடனும் ஒட்ட முடியாமல், ஐரோப்பிய வாழ்க்கையுடனும் ஒட்ட முடியாமல் ஒரு வித மன உளைச்சலுடன் வாழ்கிறார்கள்.

இதே நேரம், பிள்ளைகள் பால் வேற்றுமையின்றி நட்புடன் பழகுவதை, நட்பு என்ற கண் கொண்டு பார்க்காமல் `எங்கே பிள்ளைகள் தவறி விடுவார்களோ..! ` என்று அச்சப் பட்டு அச்சப்பட்டே பெற்றோர்களும் தமக்குத்தாமே மன உளைச்சலை ஏற்படுத்திக்கொண்டு வாழ்கிறார்கள்.

இது தப்பு

நான்கு சுவர்களுக்குள் வளர்க்கப்படும் பிள்ளைகள் காதல் வலையில் விழவில்லையா? தவறுகள் அங்கு நடக்கவில்லையா? என்பதைப் பெற்றோர் நன்றாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

வீட்டுக்குள் வளர்க்கப்படும் பெண் பிள்ளைகள், வெளி உலகத்தை நன்கு தெரியாமல் வளர்கின்ற போதுதான் தவறுகள் கூடுதலாக அரங்கேறுகின்றன என்பதை, ஏனோ பெற்றோர்கள் சிந்திக்க மறந்து விடுகிறார்கள்.

உதாரணமாக , வீடு மட்டுமே உலகமாக்கப்பட்டு வளரும் பெண் பிள்ளைகள் வீட்டுக்கு வந்து போகும் அண்ணனின் நண்பனையோ அல்லது பக்கத்து வீட்டு யன்னலில் தெரியும் வாலிபனையோ காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள்.

இதிலிருந்தாவது பெற்றோர்கள், பிள்ளைகளைக் கட்டி வைப்பதால், அவர்கள் மனதையோ உணர்வுகளையோ கட்டிவைக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அத்தோடு இப்படி வளர்க்கப்படும் பெண்பிள்ளைகள் உலகத்தைக் காணத் தவறிவிடுகிறார்கள். மனிதர்களின் நியமான குணங்களைப் புரிந்து கொள்ள முடியாமற் போய் விடுகிறார்கள். தமது வட்டத்துக்குள் தாம் சந்திக்கும் யாராவது ஒரு ஆண்மகனை (அவன் அண்ணனின் நண்பனோ, அல்லது பக்கத்து வீட்டு யன்னலில் தெரிபவனாகவோ இருக்கலாம்) அவன் நல்லவனா, கெட்டவனா, தனக்குப் பொருத்தமானவனா என்று தெரியாமலே கண் மூடித்தனமாய் காதலிக்கத் தொடங்கி விடுகிறார்கள். எந்த வித முன் யோசனையுமின்றி கல்யாணத்துக்குத் தயாராகியும் விடுகிறார்கள். ஆனால் வெளியில் போய் ஆண், பெண் என்ற பேதமின்றி எல்வோருடனும் நட்புடன் பழகும் ஒரு பெண், யாராவது ஒருவனைக் கண்டவுடன் காதலிக்க மாட்டாள். நட்புடன்தான் பழகுவாள்.

இப்படிப் பலருடன் நட்புடன் பழகும் போது யாராவது ஒருவரின் குண இயல்புகள், பழக்க வழக்கங்கள் அவளுக்குப் பிடிக்கும் போது, அங்கு அது காதலாகவும் மலரலாம். இந்தக் காதல் தப்பு என்று கருதவேண்டிய அவசியம் இல்லை. இந்தக் காதல் ஒருவகையில் நல்லதும் கூட. ஒருவரையொருவர் ஓரளவு முதலே தெரிந்து கொண்ட இவர்களின் மணவாழ்வு பெரும்பாலும் புரிந்துணர்வும், ஒற்றுமையும் மிகுந்ததாகவே இருக்கும்.

"எங்கடை பெடியள் சரியில்லை." இது பெண்ணைப் பெற்றவர்கள் பலரின் வாய்ப்பாடமும் மனக்கருத்தும். இது மிக மிகத் தப்பானதொரு கருத்து.

ஆண்கள் கெட்டவர்கள், பெண்கள் நல்லவர்கள் என்றில்லை. நல்லவர்களும் கெட்டவர்களும் இருபகுதியிலும் உள்ளார்கள். அந்தக் கெட்டவர்கள் ஏன் உருவானார்கள் என்பதைத்தான் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

இங்கு நாம் எடுத்துக் கொண்ட விடயத்துடன் பார்த்தால், ஆண் பெண் என்ற பாகுபாடின்றி வளரும் போது பெண் பிள்ளைகளுடன் கதைப்பதை, ஒரு சாதனையாக ஆண் பிள்ளைகள் கருதவே மாட்டார்கள். கதைப்பதற்கென்றே அலையவும் மாட்டார்கள். எமது வாழ்க்கை முறையின் தவறினால்தான் இந்தத் தப்புகள் எல்லாம்.

சின்ன வயதிலிருந்தே பால் பாகுபாடின்றி ஒன்றாக நட்புடன் வளரும் பிள்ளைகள் மத்தியில் ஏற்படும் தவறுகளைவிட, "நீ ஆண், நீ பெண்" என்று பிரித்து தனிமைப் படுத்தப்பட்டு வளர்க்கப்படும் பிள்ளைகளின் மத்தியில்தான் தவறுகள் அதிகமாக ஏற்படுகின்றன.

12, 13 வயதுகளின் பின், ஒரு பெண் பிள்ளைக்கு பெண் நண்பிகளைத் தவிர, வேறு ஆண் நண்பர்களே இல்லாத போது அவளுக்கு யாராவது ஒரு ஆணுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டால், உடனேயே அவனில்
இப்படியான காதலின் போது, இவனுடனான என் வாழ்வு இனிமையாக அமையுமா? இவன் போக்கும் என் போக்கும் பொருந்திப் போகுமா....?, என்பது போன்ற பல விடயங்களைச் சிந்தித்துப் பார்க்கும் மனப்பக்குவம் இல்லாது போய் விடுகிறது. இதே போலத்தான் ஆண் பிள்ளைகளின் நிலையும்.

ஆனால் ஆண் பெண் என்ற பாகு பாடின்றி நட்புடன் பழகும் பிள்ளைகளிடம், இவன் அல்லது இவள் எனக்குப் பொருத்தமானவளா? இவன் அல்லது இவளுடன் காலம் பூராக வாழ முடியுமா..?, என்பது போன்ற பல விடயங்களைச் சிந்தித்துப் பார்க்கும் மனப்பக்குவம் தாராளமாக இருப்பதைக் கண்கூடாகக் காணமுடிகிறது.

ஆதலால் ஆண்-பெண் பால் பாகுபாடின்றிய நட்பு அவசியம். பெண் பிள்ளைகளும் உலகத்தைப் பார்க்க பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும்.

தவறுகள் நடவாதிருக்க உரிய வயதிலேயே உடல் ரீதியான, உணர்வுகள் சம்பந்தமான சில முக்கிய விடயங்களை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து அவர்கள் மனதில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

அதைவிடுத்து பெண் பிள்ளைகளை ஆண்களுடன் பழகவிடாது வீட்டுக்குள் வைத்து வளர்ப்பதுதான் சரியென நினைத்து பிள்ளைகளையும் மனரீதியாக வதைத்து, பெற்றோர்கள் தம்மையும் தாமே வதைத்துக் கொண்டு, ஏதோ, "நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்கின்றோம்." என்று சொல்வது அனாவசியச் செயலே.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top