.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday 18 December 2013

சாகித்ய அகாடெமி விருது பெறுகிறார் தமிழ் எழுத்தாளர் ஜோ டி குரூஸ்




2013-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி விருது, தமிழில் கொற்கை நாவலை எழுதிய எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பெற்றிருக்கிறார்.


எழுத்தாளர்களுக்கான உயரிய கவுரமாக கருதப்படும் சாகித்ய அகாடெமி விருது பெறுபவர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து 2011 டிசம்பர் வரை வெளியான புத்தகங்கள் இந்த ஆண்டு விருதுக்கான பரிந்துரைக்கு ஏற்கப்பட்டிருந்தன. இந்த முறை கவிஞர்களே அதிக விருதுகளைப் பெற்றுள்ளனர். பெங்காலி, உருது, சமஸ்கிருதம் உள்ளிட்ட 8 மொழி கவிஞர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.


தமிழில் புதினத்திற்கான விருதை எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பெற்றிருக்கிறார். நெய்தல் நில மக்களின் வாழ்க்கையை ஒட்டி அவர் எழுதிய கொற்கை என்கிற நாவலுக்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.


2014 மார்ச் மாதம் 11ஆம் தேதி புது டெல்லியில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது...?



ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை இங்கு சொல்கிறேன்..

ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன.

நிறம்:


ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என fair complexion உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.

முக தோற்றம்:


ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் மீசை க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மீசை ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ  தாடி பிடிப்பதில்லை. காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பதுதான். சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய் வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.

உடை அலங்காரம்:


பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ட்ரெஸ் ஸென்ஸ் ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள். பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை. இன்றைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ்- டி ஷர்ட். இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான, நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம்.

பேச்சு திறன்:


முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் (அவள் முகத்தை மட்டும்!). முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.

இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.

‘அச்சம் தவிர்’ விறுவிறுப்பு...சினிமா விமர்சனம்..!,




நடிகர் : சரத்குமார்

நடிகை : சனுஷா

இயக்குனர் : ஓம்கர்

இசை : ஜோஸ்வா ஸ்ரீதர்

ஓளிப்பதிவு : விஸ்வாஸ் சுந்தர்



நிவாஸ், ஜீவா, யாசர் ஆகிய மூன்று பேரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இவர்களின் நட்பு கல்லூரி வரை தொடர்கிறது. படிப்பு மற்றும் தொழில் முறையில் இவர்களின் ஈடுபாடு வெவ்வேறாக இருந்தாலும் எண்ண ஓட்டம் ஒரே மாதிரியாகதான் இருக்கும்.

முதலில் ஒரு போலீஸ் ஸ்டேசனில் இருந்து ஒரு ரவுடியை காப்பாற்றுகிறார்கள். பிறகு அவன் மூலம் துப்பாக்கி வாங்குகிறார்கள். மூன்று நண்பர்களில் ஒருவரான யாசருக்கு கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். யாசரின் நண்பர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன். இவர் மேட்ச் பிக்சிங் மூலம் போலீசிடம் மாட்டிக்கொள்கிறார். இவர் ரிலீஸ் ஆவதற்கு யாசர் போராட்டம், மறியல் செய்து வெளியே கொண்டு வருகிறார். வெளியில் வரும் அவர் யாசரை சந்திக்க செல்கிறார். இருவரும் சந்தித்த அடுத்த சமயத்தில் யாசர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். கிரிக்கெட் வீரரை யாரோ கடத்தி சென்று விடுகிறார்கள்.

ஜீவா சினிமாவில் ஈடுபாடு உள்ளவர். சினிமா ஸ்டார் பெரிய தம்பியிடம் ஜீவாவின் தந்தை ரசிகனாகவும், அவருடைய படத்திற்கு கட் அவுட், பேனர் வைப்பது போன்ற வேலைகளையும் செய்து வந்தவர். இதேபோல் பெரிய தம்பியின் மகன் சின்ன தம்பியும் சினிமாவில் நடிக்கிறார். அவருடைய படத்தின் வெற்றி விழாவில் பெரிய தம்பி கடத்தப்படுகிறார். இந்த களேபரத்திற்கு மத்தியில் ஜீவா கொல்லப்பட்டு கிடக்கிறார். இந்த இரண்டு சம்பவங்களை துப்புதுலக்கும் போலீஸ் அதிகாரியாக சரத்குமார் வருகிறார்.

நிவாஸ் அரசியலில் ஈடுபாடு உடையவர். ஒரு விழாவில் எம்.எல்.ஏ.வை கொல்ல முயற்சிக்கிறார் நிவாஸ். அப்போது போலீஸ் அதிகாரியான சரத்குமார் எம்.எல்.ஏ.வை காப்பாற்றி நிவாசை கைது செய்கிறார்.

இவர் எதற்காக எம்.எல்.ஏ.வை கொலை செய்ய வந்தார்? கடத்தப்பட்ட கிரிக்கெட் வீரர், சினிமா நடிகர் கதி என்ன? எதற்காக கடத்தப்பட்டார்கள்? நண்பர்கள் எப்படி இறந்தார்கள்? என்ற மீதிக்கதையை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்புடனும் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் ஹவிஸ், இன்னும் நடிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நண்பர்களாக ஜீவா, யாசர் கதாபாத்திரத்தில் வருபவர்கள் திறமையாக நடித்திருக்கிறார்கள்.

நாயகியான சனுஷா, நடிப்பில் அழகு. மற்றொரு நாயகியான அபிநயாவிற்கு நடிக்க வாய்ப்பு குறைவு. சுமன், ஆசிஷ் வித்யார்தி, கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஆகியோர், அவர்களுக்கு கொடுத்த வாய்ப்பை திறம்பட செய்திருக்கிறார்கள். போலீசாக வரும் சரத்குமார் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருந்துகிறார்.

படத்தில் பாடல்கள் அடிக்கடி வருவதால் படத்தின் விறுவிறுப்பு குறைகிறது. ஆனால் பாடல் காட்சிகளை ஒளிப்பதிவு செய்த விதம் அருமை. பின்னணி இசையிலும் ஸ்கோர் பண்ணுகிறார் ஜோஸ்வா ஸ்ரீதர். இளைஞர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதையை சிறப்பாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர் ஓம்கர்.

மொத்தத்தில் ‘அச்சம் தவிர்’ விறுவிறுப்பு.

அற்புதமான விளக்கம் மனைவிக்கு.....?





ஒருவருக்கு புதிதாக திருமணம் நடந்தது. அவர் தனது அழகான மனைவியோடு கடல் வழியாக படகொன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்நேரத்தில் வானம் முழங்கியது. மின்னலும் மின்னியது. கடலலைகள் பெரு அலைகளாக மாறி மாறி வந்தன. அந்நேரத்தில் மனைவி பயந்து கொண்டாள்.

எவ்விதமான பயத்தையும் உணராமல் அமைதியாய் புன்னகையோடு கணவன் தனதருகில் அமர்ந்திருப்பதை உணர்ந்தாள்.


கணவனைப் பார்த்து மனைவி கேட்டாள் "உங்களுக்கு பயம் இல்லையா" என்று. கணவன் எதுவுமே கூறாமல் மௌனமாக இருந்தபடி அருகிலிருந்த கத்தியொன்றை எடுத்து அவள் கழுத்தருகில் வைத்தான். ஆனால் அதற்கு அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்.


மனைவியைப் பார்த்து கணவன் கேட்டான் "இந்த கூரிய ஆயுதமான கத்தியை உன் கழுத்தில் வைத்திருக்கிறேன், நீ எதற்காக சிரிக்கிறாய்?" என்று.


அதற்கு மனைவி சொன்னால் " கத்தி கூர்மையானதுதான், ஆனால் அந்தக்கத்தியை வைத்திருக்கும் என் கணவர் மிகவும் அன்புக்குரியவர்" என்று புன்னகையோடு பதிலளித்தாள்.


கனவனும் புன்னகையோடு "இந்த கடலலைகளும், இடியும், மின்னலும் பயங்கரமானவைதான், ஆபத்தானவைதான். ஆனால் அவற்றை தன் வசம் வைத்திருக்கும் இறைவன், என் அன்புக்குரியவன். அதனால் எனக்கு எவ்வித பயமுமில்லை என்றான்...!

இசைக்கு மருந்தென்றே பெயர்!




‘நாள் பூராவும் ஓய்வின்றி வேலை செய்துவிட்டு வீடு திரும்புகிறீர்கள், வந்தவுடன் உங்களுக்கு விருப்பமான ஒலிநாடாவை வைத்துக் கேட்கிறீர்கள். சட்டென்று உள்ளுக்குள் ஒரு புத்துணர்வு முளைத்து, மனம் ‘ரிலாக்ஸ்’ ஆகிறது. இதமான இசை, மன, உடல் ரீதியான பாசிடிவ் மாறுதல்களை ஏற்படுத்துகின்றது’ என்கிறார்கள் வல்லுநர்கள். ஆனாலும் இது புதிய கண்டுபிடிப்பு இல்லை. பழங்காலத்திலிருந்தே தத்துவ ஞானிகள் பிதாகரஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் போன்றவர்கள் இசைக்குள்ள மருத்துவ குணம், நோய் வராமல் தடுப்பது போன்ற பிற குணநலன்களைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஏன்? பைபிள் பழைய வேதாகமத்தில், தாவூத் அரசர் வயலினின் நரம்பு மீட்டலில் வியாதி குணமடைந்ததாகக் குறிப்பு உள்ளது.

சில குறிப்பிட்ட ஸ்வரங்கள், ஜதிகள், ராகங்கள் உடல் ரீதியான மாறுதல்களை விளைவிக்கின்றன. வடஇந்திய டாக்டர் ஒருவர் கூறுகிறார், இசையை ரசிக்கும்போது, எண்டார்ஃபின் என்கிற திரவம் ஊற்றெடுத்து அது கேட்பவரின் மனநிலையை மாற்றுகிறது. ஹார்மோன் மாற்றங்களும் மனோபாவமும் தொடர்பு கொண்டதால் சில சிக்கல்களைத் தீர்க்கிறது. ஆனால் ஒன்று, நோயாளியின் ரசனைக் கேற்றபடியான சங்கீதத்தை மனத்தில் கொள்ள வேண்டும்" என்கிறார் டாக்டர் படேல்.

உடல் நலம், தெளிவான உரையாடல், மனப்படிமம் போன்ற அம்சங்களைக் கணக்கிட்டு சிகிச்சையை மேற்கொள்கிறோம். உதாரணமாக, இந்திய சங்கீதத்தில் காபி ராகத்துக்கு அமைதிப்படுத்துகிற குணம் உண்டு. பூர்வ தனஸ்ரீ என்கிற (இந்துஸ்தானி) ராகத்துக்குக் குழம்பும் மனத்தை நிலைப்படுத்துகிற சக்தி உண்டு.

இதுபோன்ற சிகிச்சையைக் காலையிலோ, மாலை அல்லது இரவிலோ செய்யலாம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரக்கெடுவுக்குள் இதைப் பிரிக்கவும் செய்யலாம். நீண்ட நேரம் கூடாது. காலியான வயிற்றுடன் இருக்கக் கூடாது. இதற்குக் கொஞ்சநாள் முன்பாகவே நோயாளியைத் தயார்ப் படுத்திவிட வேண்டும்" என்கிறார்.

அல்ஸைமர் வியாதி, மூளைக் காயங்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கு வரும் பிரசவ வேதனை ஆகியவற்றுக்கெல்லாம் இது போன்ற சிகிச்சைகளினால் பலனுண்டு. சிறுவர்கள் இது போன்ற சிகிச்சை முறைகளை நன்றாக எதிர்கொள்கிறார்கள். ‘ஆட்டிஸம்’ - கற்கிற குறைபாடு போன்ற சிலவற்றுக்கு இது பயனானது." என்கிறார் டாக்டர்.

‘மியூசிக் தெரபி’ குறித்து மேலை நாட்டில் ஆராய்ச்சிகள் செய்து சில பத்திரிகைகள் வெளியிட்டிருக்கின்றன. ‘அமெரிக்கன் மியூசிக் தெரபி சங்கங்கள்’ இவற்றுக்கு ஆதரவு அளிக்கின்றன.

சென்னை சூளைமேட்டில், நாட்டியாச்சார்யா இசை - நாட்டியப் பள்ளி ஒன்றிருக்கிறது. இதை நடத்தி வரும் பாலச்சந்திர ராஜு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ராக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு ராகத்துக்கும் ஓர் இயல்பு உண்டு, பல நோய்களும் குணமாக ராகங்கள் இருக்கின்றன என்பதை விளக்குகிறார்.

நாட்டை - ஆஸ்துமா குணமாகிறது. வாசஸ்பதி - நாசி பிரச்சினை தீரும். ஹம்சவர்த்தினி - தலைச்சுற்றல் நீங்கும். நாத நாமக்கிரியா - வயிற்றுவலி தீரும். பேகடா - ரத்த அழுத்தம் சரியாகும். ஆனந்த பைரவி, சிந்து பைரவி - உயர் ரத்த அழுத்தம் சீராகும். மத்திய மாவதி - ஒற்றைத் தலைவலி நீங்கும்.

ஒரு வலியைப் பற்றிய அனுபவமுண்டு; வயிற்றுவலி சிறிது அதிகமாக இருக்கையில் உருக்கமான நாத நாமக் கிரியாவும், ஆனந்த பைரவியும் போக்க உதவியிருக்கின்றன," என்கிறார்.

இது சில ஆராய்ச்சிகளில் நிரூபணமாகியிருக்கிறது. பல தனிமனித அனுபவங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. எது எப்படியோ, இசை இறைவனின் மகா வஸ்து என்பது மட்டும் மாறாத கருத்து.

 (‘கர்நாடக சங்கீதத்தை ரசியுங்கள்’ நூலில் இருந்து)

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top