.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 14 December 2013

கிராமங்களை நோக்கித் தேடுங்கள்..?



கிராமங்களை நோக்கித் தேடுங்கள். கிரிக்கெட்டை தாண்டி ஏனைய விளையாட்டுகள் தெரிந்த அத்லெட்டிக் வீரர்கள் நிறையக் கிடைப்பார்கள்.


கிராமங்களை நோக்கித் தேடுங்கள். இயற்கை வேளாண்மை பற்றிய தெளிவு கொண்ட விஞ்ஞானிகள் நிறையக் கிடைப்பார்கள்.


கிராமங்களை நோக்கித் தேடுங்கள். மதிய உணவிற்காக மட்டுமே பள்ளிக்குச் சென்றும், அறிவியலில் சாதிக்கும் குழந்தைகள் நிறையக் கிடைப்பார்கள்.


கிராமங்களை நோக்கித் தேடுங்கள். சிலம்பாட்டம் முதல் கரகாட்டம் வரையிலான தமிழர் கலைகள் இரத்தத்திலேயே ஊறிப்போன கலைஞர்கள் நிறையக் கிடைப்பார்கள்.


என்று இந்த நாடு கிராமங்களை நோக்கி தேட ஆரம்பிக்கிறதோ..

என்று இந்த நாடு கிராமங்களிலும் எல்லாம் இருக்கிறது என்பதை நம்புகிறதோ..

என்று இந்த நாடு திறமையுள்ள எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரி அங்கீகரிக்கிறதோ..


அன்றே அறிவியல், கலை, விளையாட்டு என அத்தனை துறைகளிலும் இதுவரை இல்லாத மாபெரும் வளர்ச்சியைக் காண முடியும்.

கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை!!!!





கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை!!!!


உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் கவியரசர்.

அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.

அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் பேசத்தெரி்யாது என்பதைக் கேள்விப் பட்ட கவியரசர் உடனே ஒரு கவிதை எழுதினார்.

அக்கவிதையே அக்கவி எழுதிய கடைசி கவிதை.


மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் -இங்கு

 மழலைகள் தமிழ் பேச செய்துவைப்பீர்

 தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற

 தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை!!!

மது அருந்துபவர்களுக்கு இனிப்பான தகவல்!



மது அருந்துபவர்கள் கல்லீரலின் முக்கியத்துவம் தெரியாமல் இருக்கிறார்கள். மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் கடுமையாக பாதிக்கப்படும். இந்த கல்லீரல் மற்ற எல்லா உறுப்பகளையும் விட அதிகமான பணிகளைச் செய்கிறது. 500 வேலைகளைச் செய்கிறது 1000 க்கும் மேற்பட்ட என்சைம்களை உருவாக்குகிறது.


உங்கள் தாய், தகப்பன், மனைவி, குழந்தைகள் இவர்கள் அனைவரையும் விட உங்கள் மேல் அக்கறை உள்ள ஒருவர் உண்டென்றால், அது லிவர் எனப்படும் கல்லீரல் மட்டுமே.


முடி கொட்டிவிடுமே என்று கவலைப்படுகிற அளவுகூட கல்லீரல் கெட்டுவிடுமே என்று கவலைப்படாமல் இருப்பவர்களைக் கண்டால் வேதனையாக இருக்கிறது. சில கல்லீரலின் பணிகளைச் சொல்கிறேன் கேளுங்கள்.


 உங்கள் கையில் ஒரு பிளைடு அறுத்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம், உடனே கல்லீரல் என்ன செய்யும் தெரியுமா பதறிப்போய் அந்த இடத்துக்கு Prothrombin என்ற இரசாயனத்தை அனுப்பிவைக்கும். அந்த இரசாயனம் இரத்தத்தை உறையச்செய்து இரத்தப் போக்கை நிறுத்தும். கல்லீரல் மட்டும் அந்த இரசாயனத்தை அனுப்பவில்லை என்றால் அந்த சிறு காயமே போதும் உங்கள் முழு இரத்தமும் வெளியேறிவிடும். கல்லீரல் கெட்டுப் போனால் அதுதான் நடக்கும்.


பிறகு நீங்கள்(குடிப்பவர்கள்) போனால் போகட்டும் போடா என்று பாடிக் கொண்டே போய்விட வேண்டியதுதான். அது மட்டுமா இப்போதெல்லாம் எதெற்கெடுத்தாலும் மத்திரைதான் ஒரு சிறு தலைவலி என்றால் கூட உடனே மெடிக்கலுக்கு ஓடிப்போய் ஒரு மாத்திரையை வாங்கி உள்ளே தள்ளிவிட வேண்டியது.


இப்படி கண்ட கண்ட மாத்திரைகளை உள்ளே தள்ளுவதால் மாத்திரையிலுள்ள விஷத்தன்மை நம் உடலை பாதிக்கா வண்ணம் கல்லீரல் அந்த விஷத்தன்மையை முறிக்கிறது. அப்படி அது செய்ய வில்லை என்றால் விஷத்தன்மை நேராக இதயத்துக்குச் சென்று இதயத்தை செயலிழக்கச் செய்துவிடும். பிறகு இதயமே இதயமே என்று ஒப்பாரி வைக்க வேண்டியதுதான்.


''எவ்வளவு குடித்தாலும் ஸ்டெடியாக இருப்பேன்'' அட மரமண்டைகளா நீங்கள் குடிக்கும் மதுவின் விஷத்தன்மையை முறிக்க கல்லீரல் இரவு முழுவதும் போராடிக் கொண்டிருக்கிறது. அதுக்கு அதிகமாவேலையைக் கொடுத்து அது கெட்டுப் போச்சுன்னா அப்புறம் நீ ஸ்டெடியா மூச்சுகூட விட முடியாது.


 ''கல்லீரல் என்பது கழுதை. பாரம் சுமக்கும். படுத்தால் எழாது''. இதையும் நான் சொல்லவில்லை. ஐயா வைரமுத்து அவர்கள் குடியால் கெட்டுப்போய் மாய்ந்து போகிறவர்களைக் கண்டு வேதனையோடு சொன்னது.

அழுவதுக் கூடச் சுகம் தான் - கவிதை!




அழுவதுக் கூடச் சுகம் தான்
 அழவைத்தவரே அருகில் இருந்து
 சமாதானம் செய்தால்...

காத்திருப்பது கூடச் சுகம் தான்
 காக்கவைத்தவர் அதற்கு தகுதி
உடையவரானால்..

பிரிவு கூடச் சுகம் தான்
 பிருந்திருந்த காலம் அன்பை
 இன்னும் ஆழமாக்கினால்..

சண்டைக் கூடச் சுகம் தான்
 சட்டென முடிக்கு கொண்டு வரும்
 சகிப்புத் தன்மை இருந்துவிட்டால்..

பொய்கள் கூடச் சுகம் தான் கேட்பவர்
 முகத்தில் புன்னகையை மட்டும்
 வரவழைத்தால்..

ஆத்திரம் கூடச் சுகம் தான் உரிமையையும்
 அக்கறையையும் மட்டும்
 வெளிப் படுத்தினால்..

விட்டுக் கொடுப்பது கூடச் சுகம் தான்
 விவாதத்தை விட உயர்ந்தது உறவு
 என்றப் புரிதல் இருந்துவிட்டால்..

துன்பம் கூடச் சுகம் தான்
 உண்மையான அன்புக் கொண்ட நெஞ்சத்தை
 உணர்ந்துக் கொள்ள உதவினால் ..

தோல்விக் கூடச் சுகம் தான்
 முயற்சியின் தீவிரத்தை இன்னும்
 அதிகப் படுத்தினால்..

தவறுக் கூடச் சுகம் தான்
 தவறாமல் தவறிலிருந்து பாடம்
 கற்றுக் கொண்டால்..

மொத்தத்தில் வாழ்வில் எல்லாம் சுகம் தான்
 எதிர்மறையில் இருக்கும் நேர்மறையைத்
 தேடித் தெரிந்து நம்மைத் தேற்றிக் கொண்டால்...

தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள்..




சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.


சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.


செஞ் ஞாயிற்றுச் செலவும்
 அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
 பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
 வளி திரிதரு திசையும்
 வறிது நிலைஇய காயமும்
 என்றிவை
 சென்று அளந்து அறிந்தார் போல
 என்றும் இனைத்து என்போரும் உளரே



 இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது.


இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.


புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
 வலவன் ஏவா வான ஊர்தி எய்துப



 இதன் பொருளைப் பாருங்கள்! விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து. இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.


 "எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்" என்று திருத்தக்க தேவரின் "சீவக சிந்தாமணி" சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் கெலியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.


கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி! இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.


மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
 விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
 புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
 எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.



விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.


இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மைதானே!

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top