.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday 1 December 2013

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கெட்ட ரத்தத்தைக் குடிக்க அட்டைப் பூச்சி!


என் வயது 35. கடந்த பத்து வருடங்களாக முழங்கால் வலியால் அவதிப்படுகிறேன். எவ்வளவோ சிகிச்சைகள் எடுத்தும் பயன் இல்லை. உள்ளங்காலில் எரிச்சலும், குடைச்சலும் வேறு இருக்கிறது. இதனால் நான் மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறேன். தூக்கமின்மையாலும் தவிக்கிறேன். இதற்கு ஆயுர்வேத மருத்துவம் உள்ளதா?

உள்ளங்கால் எரிச்சல் என்பது சூடு எனும் குணத்தைக் கொண்ட பித்த தோஷத்தின் சீற்றம், ரத்தத்தில் கலப்பதால் ஏற்படக் கூடும். இந்தக் கலப்பினால் ரத்தம் கெட்டுவிடக் கூடும். அவரைக்காய், நீர் வாழ் பிராணிகளின் மாமிசம், கொள்ளு, புளிப்பான மதுபானம், மோர், தயிர், உணவில் அதிக காரம், புளி, உப்பு ஆகியவற்றின் சேர்க்கை, சாப்பாட்டிற்குப் பிறகு பகலில் படுத்து உறங்குவது, குடையும் காலில் செருப்பில்லாமலும் கடும் வெயிலில் அலைந்து திரிவது போன்ற செய்கைகளாலும், அவ்வாறு அலைந்துவிட்டு உடனே குளிர்பானங்களைக் குடிப்பது ஆகியவற்றால் ரத்தத்தில் பித்த சீற்றம் கூடி எரிச்சலை உண்டாக்குகிறது.

பேருந்தில் நின்று கொண்டே பயணம் செய்வது, இரு சக்கர வாகனத்தில் குண்டும் குழியுமாக உள்ள பாதைகளில் பயணம் செய்வது, குளிர்ச்சியான நீரில் நீந்துவது, குளிப்பது, கால்களால் அதிகம் மிதித்து தையல் மிஷினில் வேலை செய்வது போன்றவற்றால் இடுப்பிற்குக் கீழே வாயுவின் சஞ்சார விசேஷம் கூடுகிறது.

ஆனால், தமனிகளில் சஞ்சரிக்கும் கேடுற்ற ரத்தத்தினால் வாயுவின் ஓட்டத்திற்குத் தடை ஏற்படுகிறது. அதன் கதி முடக்கம், மூட்டுகளில் வலியும், உள்ளங்கால் எரிச்சலுக்கும் காரணமாகின்றன.

இதற்கு வாத ரத்தம் என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது. முதலில் சருமம், மாம்ஸம் ஆகிய தாதுக்களில் தங்கி உண்டாகும் வாத ரத்தம், உத்தானம் அதாவது வெளிப்படையானது எனப்படும். பிறகு எல்லாத் தாதுக்களிலும் பரவும். இந்த நிலைக்குக் கம்பீரம் அதாவது ஆழ்ந்தது எனப் பெயர்.

இந்நோயில் கெட்டுள்ள ரத்தத்தை வெளியேற்ற வேண்டும். காலில் பெருவிரல் பகுதிக்கும் அதற்கு அடுத்துள்ள விரலுக்கும் நடுவே உள்ள பகுதிக்கு க்ஷிப்ர மர்மம் என்று பெயர். அதிலிருந்து 2 அங்குலம் மேலே அட்டைப் பூச்சியை வைத்து கடிக்கச் செய்தால், கெட்ட ரத்தத்தைக் குடித்துவிடும். உடலில் நெய்ப்புத் தரும் நெய் மஜ்ஜை முதலியவற்றைக் கொடுத்து எண்ணெய்ப் பசையை உருவாக்கிய பிறகு, மேற்குறிப்பிட்ட அட்டைப் பூச்சி வைத்தியம் சிறந்தது. கெட்ட ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, ஆயுர்வேத கஷாய மருந்துகளாகிய பலாகுடூதசச்யாதி, கோகிலாக்ஷம், ப்ருகத்யாதி, தசமூலம் போன்றவற்றில் உங்களுக்கு எது உகந்ததோ அதை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.

பிண்ட தைலம், மஞ்ஜிஷ்டாதி தைலம் போன்றவை மேல் பூச்சாக உபயோகிப்பது, ஆஸன வாய் வழியாக மலப்பையில் சேர்க்கப்படும் எண்ணெய் வஸ்தி, குடல் கழிவுகளை அகற்றும் கஷாய வஸ்தி, முட்டி வலியைப் போக்கும் ஜடாமயாதி, கொட்டம் சுக்காதி போன்ற மேல்பூச்சு பற்று மருந்துகள், மூலிகைத் தைலத்தைத் தாரையாக முட்டி மற்றும் பாதங்களில் ஊற்றுவது போன்ற சிறப்பான மருத்துவ முறைகளால் நீங்கள் விரைவில் குணம் பெறலாம்.

Saturday 30 November 2013

அடிக்கடி ஏப்பம் வந்து மானத்தை வாங்குதா? இத ட்ரை பண்ணுங்க...


உணவு சாப்பிட்ட பின்னர் அனைவருக்கும் ஏப்பம் வருவது இயற்கை தான். இத்தகைய ஏப்பமானது உணவால் வயிறு நிறைந்துவிட்டாலோ அல்லது பசி ஏற்படும் போதோ வரும். குறிப்பாக உடலில் காற்றின் அளவு அதிகம...ாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறும். அதுவே இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால், வாய்வாக மலவாயில் ஊடாக வெளியேறும்.

ஆனால் சிலருக்கு தொடர்ச்சியாக ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். அலுவலகத்தில் இருக்கும் போது இப்படி அடிக்கடி ஏப்பம் வந்தால், அது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, நம்மீது கெட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்திவிடும். அதுமட்டுமின்றி, ஏப்பம் வந்தால் ஒருவித கெட்ட துர்நாற்றமும் வீசும். இப்படி அடிக்கடி ஏப்பம் விட்டால், யாரும் அருகில் கூட வர மாட்டார்கள். ஆகவே பலர் ஏப்பத்தால், சங்கடத்திற்கு உள்ளாவார்கள்.

மேலும் அடிக்கடி ஏப்பம் வந்தால், நமக்கே எரிச்சல் ஏற்படுவதோடு, உடலும் சோர்ந்து விடும். இருப்பினும் இத்தகைய தொடர் ஏப்பத்திற்கு பல்வேறு இயற்கை நிவாரணிகள் உள்ளன. எனவே ஏப்பம் வரும் போது கீழ் கூறியவற்றை முயற்சித்தால், நிச்சயம் ஏப்பம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

சரி, அந்த இயற்கை நிவாரணிகள் என்னவென்று பார்ப்போமா!!!

அடிக்கடி ஏப்பம் விட்டு மானம் போகுதா? இத ட்ரை பண்ணுங்க...

குளிர்ச்சியான தண்ணீரை குடித்து வந்தால், ஏப்பத்தில் இருந்து விடுபடலாம்.

சோடா

அமிலத்தன்மை உள்ள பானங்களான சோடா போன்றவற்றை ஒரு சிப் குடித்தாலும், அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கலாம்.

புதினா

அடிக்கடி ஏப்பம் வரும் போது, ஒரு கப் புதினா டீ குடித்தால், ஏப்பப் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடலாம்.

ப்ளாக் டீ

ப்ளாக் டீ கூட ஏப்பத்திற்கு நல்ல நிவாரணியாக விளக்கும். அதற்கு ஒரு கப் வெதுவெதுப்பான ப்ளாக் டீயை குடியுங்கள்.

சோம்பு

சோம்புவை தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், அடிக்கடி ஏப்பம் ஏற்படாமல் இருக்கும். இந்த முறையால் உடனே ஏப்பம் நிற்காவிட்டாலும், தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஏப்ப பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

சீமைச்சாமந்தி டீ

 
டீயிலேயே ஏப்பத்தை கட்டுப்படுத்துவதில் சீமைச்சாமந்தி டீ தான் பெஸ்ட். எனவே அடிக்கடி ஏப்பம் வந்தால், சீமைச்சாமந்தி டீயை குடியுங்கள்.

செலரி

செலரியை சிறிது வாயில் போட்டு மென்றால், ஏப்பம் தொல்லையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

ஏலக்காய் டீ

ஒரு கப் ஏலக்காய் டீ குடித்தால், செரிமான பிரச்சனை நீங்கி, அடிக்கடி ஏப்பம் வருவது உடனே நின்றுவிடும்.

இஞ்சி

ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்றாலோ அல்லது இஞ்சி டீ குடித்தாலோ, தொடர் ஏப்பம் வராமல் இருக்கும்.

குளிர்ந்த பால்

ஒரு கப் குளிர்ந்த பாலை மெதுவாக குடித்து வந்தாலும், ஏப்பம் வருவதை தடுக்கலாம்.

கிராம்பு

ஒரு துண்டு கிராம்பை வாயில் போட்டு மென்றால், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, ஏப்ப பிரச்சனையும் குணமாகும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் கூட ஏப்ப பிரச்சனைக்கு நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். அதிலும் ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், அது வயிற்றில் உள்ள காற்று உடனே வெளியேற்றி, அடிக்கடி ஏப்பம் வருவதைத் தடுக்கும்.

கோதுமை பிரட்

ஒரு துண்டு கோதுமை பிரட் சாப்பிட்டால், அது ஏப்ப பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும்.

எலுமிச்சை ஜூஸ்


எதுவும் முடியவில்லையா, ஒரு கப் சர்க்கரை சேர்க்காத எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். இதனால் செரிமான பிரச்சனையுடன், ஏப்ப பிரச்சனையும் குணமாகும்.

தயிர்

இல்லாவிட்டால், சாப்பிடும் போது ஒரு கப் தயிரை சாப்பிடுங்கள், நல்ல மாற்றம் தெரியும்.

வாழ்க்கைப் பாடம்....

அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.

அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன. மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.

அவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.

உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள். அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார். பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.

மிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன. விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள். அந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.

பின் கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா?”

அவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்”

”எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேனீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது. உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.”

“அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறார்கள். வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்”

“தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம். எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”

அவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள். சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது. இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார்.

ஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது.

இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம்


 இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே.


இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது.


 இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.


வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது. உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.

இளநரை போக்க மூலிகை எண்ணெய்

 தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.

சீரகம் – 1 ஸ்பூன்

 சோம்பு – 1/2 ஸ்பூன்

 சின்ன வெங்காயம் – 3

கறிவேப்பிலை – 2 இணுக்கு

 கொத்தமல்லலி – சிறிதளவு


 நெல்லி வற்றல் – 10 கிராம்

 வெட்டிவேர் – 5 கிராம்

 இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.

மற்றவர்கள் முன்பு நீங்கள் திறமையானவர்களாக திகழ வழிகள்!

 காலத்தின் மாற்றத்திற்கேற்ப – நமது கருத்திலும் வளர்ச்சி வேண்டும்!

புதுப்புது திறன்களை கற்றால் – நெஞ்சில் புத்துணர்ச்சி என்றும் தவழும்

தொழில் வாழ்க்கையில் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கும், பாராட்டு மழையில் நனைவதற்கும் நீங்கள் எப்பொழுதும் திறமையானவராகத் திகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்.கடந்த காலங்களில் நீங்கள் சிறப்பாக பணி செய்திருக்கக் கூடும்.ஆனால் அது மட்டுமே போதாதது.வாழ்க்கை என்பது ஒரு வளர்ச்சி. அந்த வளர்ச்சியின் தேவைக்கு ஈடு கொடுக்கும் விதத்தில் உங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் நீங்கள் எந்த அளவிற்குத் திறமையானவர் என்பதை நிகழகாலத்தில் நீங்கள் செய்யும் பணித்திறனை வைத்துத்தான் முடிவு செய்கின்றார்கள். ஆகவே நிகழ்காலப் பணியின் தேவையையும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள மாற்றத்தையும் கணக்கிட்டு, அவற்றிற்குத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொண்டே இருங்கள். உங்களுடைய செயல் திறனை அதிகரிக்க உங்களுடைய திறமைகளின் வளர்ச்சி மிகமிக முக்கியம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். வளர்ச்சியே வாழ்வின் வெற்றி.

செயல்திறனை அதிகரியுங்கள்


உங்களுக்கு உள்ள திறமைகளைச் (Skills) செயல்திறனாக (Productivity) மாற்றும் போதுதான் பணியில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றமும் பதவி உயர்வும் கிடைக்கின்றது. மேலும் செயல்திறனை காட்டும் அளவீடுகள் என்னென்ன என்பதைப் பார்க்கும்போது கீழ்க்காணுபவைகளை மிகவும் முக்கியமானைகளாகக் கருத வேண்டியுள்ளது.

1. வேகமாகச் செயல்படுதல்

2. எப்பொழுதும் சரியாகவே செயல்படுதல்

3. தொடர்ந்து கற்றுக்கொண்டே இருத்தல்

4. அனுபவப்படுதல்

5. ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுதல்

6. தீர்வாகத் திகழுதல்

7. விரயத்தைக் குறைத்தல்

8. தரத்தை மேம்படுத்துதல்

9. உற்பத்தி இலக்கை அடைதல்

10. முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளை வழங்குதல்


வேகமாகச் செயல்படுதல்


உங்களுடைய செயல்களை வேகமாகவும்,விவேகமாகவும் செய்ய வேண்டும்.சோம்பேறித்தனத்திற்கு மனதில் மட்டுமல்ல செயலிலும் இடந்தராதீர்கள். ஏனென்றால் செயல்களின் விளைச்சலே வெற்றியாகும். உங்களிடம் ஒப்படைக்கப்படுகின்ற பணிகளை வேகமாக செய்து முடிக்க வேண்டும்.ஆனால் அவசரப்படக்கூடாது. வேகமாகச் செயல்படுவதற்கும், அவசரமாகச் செயல்படுவதற்கும் ஒரு வேறுபாடு உண்டு. அது என்னவென்றால், வேகம் என்பது வலிமையின் வெளிப்பாடு, அவசரம் என்பது தயாரிப்பின்மையின் பிரதிபலிப்பு. மேலும், திட்டமிட்டு முழுத்திறனும் வெளிப்படும் விதத்தில் விழிப்புணர்வோடு செயல்படுவதே வேகமாகச் செயல்படுவதலாகும். போதிய தயாரிப்பும், திட்டமும், பயற்சியும் இல்லாமல், எடுத்தேன்,கவிழ்த்தேன் என்ற ரீதியில் விளைவுகளைப் பற்றிய எச்சரிக்கையும்,விழிப்புணர்வும் இல்லாமல் செயல்படுவதே அவசரமாகச் செயல்படுவதாகும்.

வேகமும் விவேகமும் கலந்ததாக உங்கள் செயல் இருக்கும்போதுதான் நீங்கள் பணிபுரியும் நிறுவனமும் நீங்கள் முனேற்றக்காற்றை மூச்சுக்காற்றாகச் சுவாசித்துக்கொண்டே இருக்க முடியும். ஏதோ மனம்போன போக்கிலே பணிகளைச் செய்யாமல் அனைவரின் பாராட்டப் பெறும் விதத்தில் கவனமாகவும் வேகமாகவும் செய்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு பணிகளைச் சிறப்பாகவும், வேகமாகவும் செய்வதற்குத் தேவையான திறமைகளைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.

எப்பொழுதும் சரியாகவே செயல்படுதல்

எதைச் செய்தாலும் அதைச் சரியாவே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். ஏனென்றால் உங்களுடைய செயல்களே உங்களை உலகிற்கு அறிமுகம் செய்கின்றது. மேலும் எதையும் முதல்முறையே சரியாகச் செய்வது (Right First) என்ற கொள்கையையும் கடைப்பிடிக்க வேண்டும். மற்றவர்களிடமிருந்து உங்களத் தனித்துக் காட்டும் விதத்தில் உங்களுடைய திறமைகளை செயல்களாக மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். வேலையில் ஆர்வமும் ஈடுபாடும் இருக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் செய்யும் பணிதான் உங்களுடைய வாழ்க்கையின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள உதவுகின்றது. ஆகவே, அப்பணியைச் சிறப்பாகச் செய்வதுடன் சரியாகவே செய்ய வேண்டும். பணிகளைச் சிறப்பாகவும் சரியாகவும் பொறுப்புணர்ச்சியுடனும் செய்யும் பண்பாடுடையவராக நீங்கள் திகழ வேண்டும். பணியை அரையும் குறையுமாகச் செய்தால் நமக்கு எந்த வித நன்மையும் இல்லை என்பதையும் நீங்கள் உணர்ந்து கொண்டு, பணி சரியாகச் செய்ய முயலுங்கள்.

கற்றுக்கொண்டே இருத்தல்

தொழில்துறையில் நிகழும் மாறுதல்களுக்கு ஈடுகொடுத்து வெற்றியடைவதற்கு புதிய புதிய திறமைகள் தேவைப்டுகின்றன. நீங்கள் செய்யும் பணியில், இயக்கும் இயந்திரத்தில், உற்பத்தி முறைகளில், தரமேம்பாட்டு முறைகளில், தினசரி ஏற்படும் மாறுதல்களும் வளர்ச்சியும் உங்களிடமிருந்து அதிகப்படியான திறமைகளை எதிர்பார்கின்றது. ஆகவே புதிய புதிய திறமைகளைக் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடனும் திறந்த மனதுடனும் இருங்கள். புதுக்கருத்துகள் மனதினுள் நுழையும்போதுதான் புதிய சிந்தனைகள் தோன்றுகின்றன. புதிய எண்ணங்களே முன்னேற்றத்திற்குத் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளச் செய்கின்றன. மேலும் ஏற்கனவே நேற்றைய பட்டதாரி இன்று படிப்பதை நிறுத்தி விட்டால் நாளை படிக்காதவர் ஆகிவிடக்கூடும் என்கின்றார்கள். ஆகவே தொடர்ந்து கற்றுக்கொண்டே இருங்கள். அப்பொழுதுதான் உங்கள் திறமைகள் வளர்ந்து கொண்டே இருக்கும்.

அனுபவப்படுதல்

எதையும் உத்வேகத்துடனும் விழிப்புணர்வுடனும், அனுபவப்பட்டு தெரிந்துகொள்ளும் ஆர்வம் வேண்டும். அறிவின் வளர்ச்சிக்கு அனுபவமே ஆசான். புதிய இயந்திரங்கள். புதிய உற்பத்தி முறைகள் போன்றவை நடைமுறைக்கு வரும்போது அவற்றை ஏற்றுப்பணி செய்யும் ஆர்வமும், அவற்றிலுள்ள நுணுக்கங்களை அறந்து கொள்ளும் முனைப்பும் உங்களுக்கு இருக்க வேண்டும். மேலும் காலத்தின் தேவைக்கு ஏற்ப புதியனவற்றைக் கற்றுக்கொள்ளும் புத்துணர்வு நெஞ்சில் தவழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். புதியனவற்றை கற்று என்ன செய்யப்போகின்றோம் என்ற மனநிலையுடன் இருந்தால் வேலையில் சலிப்பும் செயலில் சோர்வும்தான் ஏற்படும். எதுவாயினும், கற்றுக்கொள்கின்றேன், கற்றது காலத்திற்கு உதவும் என்ற மனநிலையைக் கொண்டவர்களே தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தீர்வாகத் திகழ்தல்

நீங்கள் ஒரு பிரச்னையின் அங்கமாக அமையாமால் அதன் தீர்வாகத் திகழ வேண்டும். சிக்கல்கள் ஏற்படும்போது அதை மேலும் சிக்கலாக்காமல், அதன் தீர்வாகத் திகழ வேண்டும். சிக்கல்கள் ஏற்படும்போது அதை மேலும் சிக்கலாக்காமல்,அதைத் தீர்க்கும் யோசனைத் தருபவராகவும், மற்றவர்கள் கூறும் சரியான யோசனைகளை ஏற்றுக் கொள்பவராகவும் நீங்கள் இருக்க வேண்டும். தொழில் நிறுவனத்தில் உங்களைப் பணிக்கு அமர்த்தி இருப்பது, பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அல்ல. எல்லாப் பிரச்சனைகளையும் உங்களால் தீர்க்க முடியாதுதான், என்றாலும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவலாம் அல்லவா? ஆகவே ஆக்க சிந்தனையுடன், பிரச்சனைகளைத் தீர்க்கும் வழிகளை எண்ணுபவராக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்களுடைய பணியில் உங்களுக்குப் பெருமையும், உங்களால் உங்கள் பணிக்குப் பெருமையும் கிடைக்கும்.

விரயத்தை குறைத்தல்

பொருள்களின் விரயத்தை குறைக்கும் ஆற்றலும், சிக்கனமும் தேவை. அப்பொழுதான் பொருள்களின் உற்பத்திக்காகும் செலவுகளைக் குறைக்க முடியும். பொருள்களின் விரயத்தைக் குறைக்க முயல்வதுடன் கால விரயத்தையும் குறைக்க முயல வேண்டும். அதற்கு, சரியான நேர நிர்வாகத் திட்டம் உங்களிடம் இருக்க வேண்டும்.அதாவது ஒவ்வொரு நாளும் உங்களுடைய பணி நேரத்தை முழுப்பயனுள்ள பணிகளைச் செய்யக்கூடிய விதத்தில் திட்டமிட வேண்டும். அத்துடன், பிறருடைய தலையீடு, வீண் விவாதம் போன்றவற்றை தவிர்த்து விடும் கலையையும் கற்றுக்கொள்ள வேண்டும். நேரமே நமது வாழ்க்கை. நேரத்தை விரயம் செய்வது என்பது நமது வாழ்நாளை விரயம் செய்வதற்குச் சமம் என்பதுடன், வேலை நேரத்தை விரயம் செய்வதென்பது நமக்கு வேலையளிப்பவர்க்கு செய்யும் தீங்கு மட்டுமல்ல., நமது முன்னேற்றத்திற்கு நாமே போட்டுக்கொள்ளும் முட்டுக்கட்டை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உற்பத்தியாகும் பொருள்களின் தரத்தை உயர்த்துவதற்கு ஆலோசனை வழங்கக் கூடியவராகவும் நீங்கள் விளங்க வேண்டும். செய்யும் தொழில் மீதும், பணியாற்றும் நிறுவனத்தின் மீதும் நீங்கள் கொண்டுள்ள ஈடுபாடும், பற்றும், உங்ளை மேலும் திறமையும், ஆற்றலும் உள்ளவராக மாற்றும் என்பது உண்மை. ஆகவே ஈடுபாட்டுடன் வேலை செய்யும் பண்புடையராகவும், திறமைகளை வளர்த்துக் கொள்ளும் ஆர்வமுடையவராகவும் விளங்குங்கள். அதுவே தொழில் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு உதவும் எளிய வழியாகும்.

திறமை தீபம் ஏற்றினால் கடமை முடிப்பது எளிதாகும் தொடர்ந்து கற்பதை பழக்கமாக்கினால் தோல்வி என்பது வாழ்க்கையிலில்லை.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top