.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 29 November 2013

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல!- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு!

 

“திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, இந்தியாவில் சமூகத்தாலோ, சட்டத்தாலோ அங்கீகரிக்கப்படவில்லை.அதே சமயம் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல.”என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து பிரிந்துவிட்ட ஒரு பெண், அந்த ஆணிடம் இருந்து ஜீவனாம்சம் கோரி தாக்கல் செய்த மனு மீது நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து வந்தது.இது தொடர்பாக, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் “திருமணம் செய்து கொள்வதோ, செய்து கொள்ளாமல் இருப்பதோ ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, இந்தியாவில் சமூகத்தாலோ, சட்டத்தாலோ அங்கீகரிக்கப்படவில்லை. இருந்தாலும், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல. இந்த உறவு, திருமண உறவு போன்றது அல்ல. இத்தகைய உறவை பல நாடுகள் அங்கீகரிக்கத் தொடங்கி உள்ளன.

இந்த உறவில், ஏற்றத்தாழ்வுகள் இருப்பதை நாம் பார்க்காமல் இருக்க முடியாது. இந்த உறவு முறிவடைந்தால், பெண்களும், இந்த உறவின் மூலம் பிறக்கும் குழந்தைகளும்தான் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, பெண்களையும், அவர்களது குழந்தைகளையும் பாதிப்பில் இருந்து பாதுகாக்க பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும். அல்லது, சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய வேண்டும். திருமண உறவை அங்கீகரித்தது போல இந்த உறவையும் அங்கீகரிக்க வேண்டும்.

அதே சமயத்தில், திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவை பாராளுமன்றம் ஊக்குவிக்க முடியாது. எனவே, பொதுமக்கள் இதற்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ கருத்து தெரிவிக்கலாம்.கள்ளத் தொடர்பு, பலதார மணம் ஆகியவற்றை ‘திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல்’ உறவில் சேர்க்க முடியாது.” என்று,நீதிபதி தன் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

டிசம்பரில் ரஜினி, விஜய், அஜீத், கமல் படங்களின் இசை வெளியீடு!

 

வரும் பொங்கல் தமிழக ரசிகர்களுக்கு மறக்க முடியாத பொங்கலாக இருக்கப் போகிறது. காரணம், அன்றைய தினத்தில் பெரிய ஹீரோக்களின் படங்கள் நேரடியாக மோத உள்ளன. ஜனவரியில் பொங்கலுக்கு பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸாக இருப்பதால் அதற்கு முன்பாக சம்மந்தப்பட்ட படங்களின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. எனவே, பொங்கலுக்கு முன்பாகவே ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டம் காத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன் விவரம் வருமாறு:-

டிசம்பர் 12 – கோச்சடையான்


ரஜினி, தீபிகா படுகோன் நடித்துள்ள படம் கோச்சடையான். முற்றிலும் அனிமேஷன் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தை ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான்.

டிசம்பர் 15 – ஜில்லா

துப்பாக்கி படத்தை தொடர்ந்து விஜய், காஜல் அகர்வால் மீண்டும் ஜோடி சேர்ந்திருக்கும் படம்தான் ஜில்லா. நேசன் இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். படத்தில் விஜய்யும், இமானும தலா ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். இமான் இசையமைக்கும் பாடல்கள் அனைத்துமே ஹிட் ஆகிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

டிசம்பர் 18 – வீரம்

அஜீத், தமன்னா முதன்முறையாக இணைந்திருக்கும் படம் வீரம். சிறுத்தை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவா இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். எனவே, படத்தில் மெலடி மற்றும் குத்து பாடலை எதிர்பார்க்கலாம்.

டிசம்பர் 26 – விஸ்வரூபம் 2

‘விஸ்வரூபம்’ படத்தின் தொடர்ச்சியாக அதன் 2ஆம் பாகம் உருவாகியுள்ளது. கமல், தயாரித்து, இயக்கி, நடித்து வரும் இப்படத்திலும் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே நடிக்கின்றனர். ஷங்கர் எஹ்சான் லாய் இசையமைத்துள்ளார். இவர்தான் விஸ்வரூபம் படத்தின் இசையமைப்பாளரும் கூட.

டென்ஷன் எதனால்?

டென்ஷன் என்பது, ஏதோ ஒரு சூழ்நிலையில் கோபத்தில் எழுந்து அடங்கும் உணர்வு என்றுதான் பலரும் நினைத்திருக்கிறார்கள். அது தவறு. மனத்தாலும், உடலாலும் அது பல கட்டங்களைக் கடந்த பின்னர்தான் வெளிப்படும்.
ஏதோ ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற முனைப்பு உள்ளுக்குள் எழுகிறது. அதற்கு இடையூறு ஏற்படுவதாக உணர்கிறீர்கள். உடனே, அதைச் சரியாக செய்ய முடியுமோ முடியாதோ என்கிற சந்தேகம் உள்ளுக்குள் வந்துவிடுகிறது. மனம் பதைபதைப்பு அடைகிறது. நெஞ்சு துடிக்கிறது. ஒரு தடுமாற்றம் நடுக்கம் வருகிறது. நிதானம் இழக்கிறது. தவிப்பு ஏற்படுகிறது. இதனால், உடல் திசுக்கள் நிறைய கெடுகின்றன.

உடல்திசுக்கள் கெடக்கெட மனத்திலும், உடலிலும் ஒரு விறைப்பு நிலை உண்டாகிவிடும். இந்தச் சமயம்தான் மனிதர் கண்மண் தெரியாமல் நடந்து கொள்கிறார். அதாவது டென்ஷன் அடைகிறார். எளிதில் டென்ஷன் ஆகிறவர்கள் யார் யார்?

அவர்களுக்கு அடிக்கடி தலைவலி வரும். தலைக்கனமாக இருக்கும். கழுத்துவலி, உடல்வலி இருப்பதாக அடிக்கடி சொல்பவர்கள், திடீர்திடீரென்று இதயத்துடிப்பு அதிகரிப்பதாக உணர்பவர்கள், எடை குறைபவர்கள், உடல் பலவீனமாகவே இருப்பவர்கள், ஞாபகமறதி உள்ளவர்கள், மனதை ஒருமுகப்படுத்த முடியாமல் தவிப்பவர்கள், மனச் சஞ்சலம் உள்ளவர்கள், கைகால்களில் நடுக்கம் உள்ளவர்கள், உள்ளங்கை மற்றும் கால் பாதங்களில் வியர்வை கொண்டவர்கள், தன்னம்பிக்கை குறைந்தவர்கள், எதிலும் ஆர்வமில்லாதவர்கள், எப்போதும் சோகமாகக் காட்சித் தருபவர்கள், பசியின்மை தூக்கமின்மை உள்ளவர்கள், எதன்மீதும் ஒரு முடிவு எடுக்க முடியாமல் இருப்பவர்கள் ஆகியோருக்கு டென்ஷன் எளிதில் வரும்.
இவையன்றி கீழ்வரும் ஐந்து முக்கிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே ரெட் சிக்னல் காட்டி விட வேண்டும். அது ஓரளவிற்கு டென்ஷனைக் குறைக்க உதவும்.


1. நெஞ்செரிச்சல் (Heartburn):

டென்ஷனால் வயிறானது அமிலத்தை அளவுக்கதிகமாக உற்பத்தி செய்துவிடும். அதோடு எண்ணெய்ப் பதார்த்தம் உள்ளிட்ட சில வகை உணவுகள் உண்ணும்போது, அவை மேலும் தீவிரமடைந்து அமிலம் பின்னோக்கித் தள்ளப்பட்டு, நெஞ்சில் வந்து உட்கார்ந்து கொள்ளும். அப்போதுதான் நெஞ்செரிச்சல் வந்துபடுத்தும். பிறகு டென்ஷனுக்குக் கேட்கவே வேண்டாம்.

விடுபடவழிகள்:

ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் கொஞ்சம் தண்ணீர் குடியுங்கள். இது டென்ஷனைக் குறைப்பது மட்டுமல்ல, உணவுக் குழாயில் தங்கியுள்ள அமிலங்களையும் துடைத்தெடுத்துவிடும். தாற்காலிகமாக நெஞ்சு எரிச்சல் வராமல் இருக்கும். ஃபாஸ்ட் புட், கொழுப்பு அதிகமுள்ள உணவுகள் ஆகியவற்றை உடனே நிறுத்திவிடுங்கள். கூடவே, காபி, தக்காளி சாஸ், வெங்காயம், சாக்லெட், பெப்பர்மிண்ட் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

2. கை நடுக்கம்:

கை நடுக்கம் இருந்தாலே மனிதர் கோபத்தில் இருக்கிறார் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். தங்களுக்குச் சேர வேண்டிய பாராட்டை வேறு யாருக்காவது மேலதிகாரி தந்தால் முதலில் கையை மேசை மேல் குத்துவது போன்று செயல்படுவதைக் கவனித்து இருக்கலாம். காஃபின் என்ற நச்சு, உடலில் இருந்தாலும், இந்த நிலை ஏற்படும்.

விடுபட வழிகள்:

உங்களுக்குச் சேர வேண்டியதை மேலதிகாரியிடம் கேட்டுப் பெற முயற்சிக்கலாம். உங்களையும் மீறி ஒரு செயல் நடந்து, அதையட்டி கை நடுக்கம் ஏற்பட்டால் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டுக்கொள்ளலாம். பெண்கள் கைப்பைக்குள் கையை நுழைத்துக் கொள்ளலாம். தொடர்ந்து கை நடுக்கம் இருந்தால் மருத்துவர்தான் நல்லவழி.

3. திடீர் தலைச்சுற்றல்:

 டென்ஷனாக இருந்தால் சிலருக்குத் திடீரென்று தலைச்சுற்றல் வரும். ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பதற்கும் இது ஒரு அறிகுறியாகும்.

விடுபட வழிகள்:

தலைச்சுற்றல் உள்ளவர்கள் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிக்கவேண்டும். உங்களுக்குத் தலைச்சுற்றல் இருந்தால் உடனே கீழே உட்கார்ந்து இந்த மூச்சுப் பயிற்சியைச் செய்யுங்கள். காற்றை நன்றாக ஆழமாக உள்இழுத்து அதை நுரையீரலில் சிறிதுநேரம் தங்க வையுங்கள். பின்னர் மெதுவாக மூக்கின் வழியே காற்றை வெளியேற்றுங்கள். இதனால், போதுமான அளவிற்கு ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். தலைச்சுற்றல் இருக்காது. மீண்டும் ஒருமுறை தலைச்சுற்றல் வந்தால் உடனே டாக்டரிடம் செல்லுங்கள்.

4. தோல் அரிப்பு:


சிலருக்கு டென்ஷன் ஆரம்பமாகும்போது, ஹார்மோன் உற்பத்தியில் மாற்றம் ஏற்பட்டு, தோல் திசுக்கள் பாதிக்கப்பட்டு அரிப்பு ஏற்படும்.

விடுபடவழிகள் :

அரிப்புக் கண்டவர்கள் உடனே பென்சில் அல்லது கையில் கிடைக்கும் பொருள்களால் உடம்பை சொரியக்கூடாது. பிளாஸ்டிக் பையில் ஐஸ் கட்டிகளைப் போட்டு அரிக்கும் இடத்தில் வைக்கலாம். இதற்கானலோஷன் இருந்தால் தடவலாம்.

5. அதிகப்பணம் செலவழிக்கும்போது:

எதிர்பாராமல் அளவுக்கு அதிகமாக பணம் செலவழிக்கும் நிலை வந்தால் சிலருக்கு டென்ஷனாக இருக்கும். இது உடல் சம்பந்தப்பட்டதல்ல, என்றாலும், மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதே.

ஷாப்பிங் செல்லும்போது, கையில் உள்ள பணத்திற்குத் தக்கபடி என்னென்ன பொருள்கள் வாங்குவது என்று திட்டமிட்டுச் செயல்படுவது டென்ஷனைக் குறைக்க உதவும்.

மூக்கின் அழகை மறைக்கும் தழும்பை போக்க டிப்ஸ்!

 

தற்போது கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. தொடர்ச்சியாக கண்ணாடியை அணிபவர்களுக்கு, மூக்கின் மேல் தழும்புகள் போன்று கருப்பாக காணப்படும்.

இத்தகைய தழும்புகள் ஏற்படுவதற்கு காரணம் கனமான கண்ணாடி மற்றும் மூக்கினை அழுத்தும் படியாக நீண்ட நேரம் கண்ணாடி அணிவது தான்.
இது முகத்தில் ஒருவிதமான அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும். கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை போக்குவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

1. தினமும் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவி, மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தினமும் 3 முறை செய்து வந்தால், அத்தகைய கருப்பான தழும்புகளை படிப்படியாக மறைவதை காணலாம்.

2. உருளைக்கிழங்கை தழும்புள்ள இடத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால், கண்ணாடியால் ஏற்படும் தழும்புகளை மறையும்.இவ்வாறு வாரம் 4 நாட்கள் செய்ய வேண்டும்.

3. எலுமிச்சை சாறும் கருமையான தழும்புகளை போக்க வல்லது. எலுமிச்சை சாற்றினை பஞ்சில் நனைத்து, தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

அதன் பின்னர் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கருமை நிறம் மறையும்.

4. கற்றாழை ஜெல்லும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குவதற்கு சிறந்த பொருள். ஏனெனில் அதிலும் கிளின்சிங் தன்மை அதிகம் உள்ளது.

ஆகவே இதுவும் தழும்புகள் மற்றும் வடுக்களை போக்குவதற்கு வல்லது.

மலாலா – பிரிட்டனின் செல்வாக்குமிக்க ஆசியர்!

nov 28 -malala_yousafzai_

மலாலா மீது எந்நேரத்திலும் தாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று தலிபான் பயங்கரவாதிகள் மிரட்டியதற்கு பதிலடியாக, பயங்கரவாதிகளால், எனது உடலைத் தான் சிதைக்க முடியுமே தவிர, எனது கனவுகளை ஒருபோதும் சிதைக்க முடியாது என்று தெரிவித்த
மலாலா யூசுப்சையை, பிரிட்டனின் செல்வாக்குமிக்க ஆசியர் என்று லண்டனிலிருந்து வெளிவரும் வார இதழ் புகழாரம் சூட்டியுள்ளது.

பெண் கல்வியை வலியுறுத்தி பிரசாரம் செய்து வந்த பாகிஸ்தான் சிறுமி மலாலா மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் சர்வதேச நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் லண்டனில் உள்ள பிரபல மருத்துவமனையில் மலாலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் உடல்நலம் தேறியுள்ளார். சர்வதேச நாடுகள், மலாலாவை பாராட்டி பல விருதுகள் வழங்கி வரும் நிலையில், அண்மையில் லண்டனில் நடைபெற்ற கராவி குஜராத்-2 என்ற கூட்டத்தில் தைரியத்திற்காக வழங்கப்படும் ஹேமர் விருதுக்கு, மலாலாவும் அவருடன் சுடப்பட்ட மற்ற இரு சிறுமிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் பிரிட்டனை சேர்ந்த வாரப் பத்திரிக்கை ஒன்று பிரிட்டனில் செல்வாக்கு மிக்க 101 பேரின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் மலாலா யூசப்சாய் செல்வாக்கு மிக்க முதல் ஆசியராக உள்ளார் என்று தெரிவித்துள்ளது.

இவருக்கு அடுத்தபடியாக, லேபர் கட்சியின் எம்.பி.யும், பாராளுமன்ற விவகாரக்குழு தலைவருமான கீத் வாஸ் இரண்டாவது செல்வாக்கு மிக்க ஆசியராக உள்ளார். ஒருமுறை பிரிட்டனின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த லட்சுமி மிட்டல் இப்போது இந்த பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார் .

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top