.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 11 November 2013

உடல் சூட்டை குறைக்க அல்லது கூட்ட உதவும் பிரேஸ்லெட் !

 

இந்த நவீன பிரேஸ்லெட்டை அணிந்துகொண்டால் நம் உடம்பே குளிர்ச்சியாக வைத்திருருக்கும் வெப்ப மின்னோட்ட டெக்னாலஜியை அமெரிக்காவின் எம்.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.இது வரை வீடு, கார், அலுவலகம், தியேட்டர் என நாம் போகிற இடங்கள் எல்லாவற்றிலும் ஏ.சி., ஏர்கூலர் வைக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது என்றும் மின் கட்டணம் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர் அதே சமயம் ஊட்டி, கொடைக்கானல் குளிரிலும் நடுங்கத் தேவையிருக்காது. ரிஸ்டிஃபை கருவியை அணிந்துகொண்டால், தேவைப்படும் நேரத்தில் உடம்பு தானாக சூடாகும் அல்லது குளிர்ச்சியாக மாறும் எனவும் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவின் மசாசூசட்ஸ் மாநிலம் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ளது மசாசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம். இங்கு படிக்கும் 4 மாணவர்கள் சேர்ந்து ரிஸ்ட்டிஃபை என்ற கருவியை உருவாக்கியிருக்கின்றனர்.தற்போது கருவிக்கு முறைப்படி காப்புரிமை பெற்று வணிக ரீதியாக அதை தயாரிக்கும் முயற்சியிலும் மாணவர்கள் இறங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி ஆய்வு மாணவரில் ஒருவரான சாம் ஷேம்ஸ் ,”நாங்கள் உருவாக்கியுள்ள ரிஸ்ட்டிஃபை கருவி, வெப்ப மின்னோட்ட தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இயற்பியலில் பெல்டியர் விளைவு என்று ஒன்று உண்டு. வெவ்வேறு உலோகங்கள் கொண்ட ஒரு சுற்றில் மின்னோட்டம் பாயும்போது உலோகங்களின் ஒரு இணைப்புப் பகுதி வெப்பத்தை வெளியேற்றும், இன்னொரு பகுதி வெப்பத்தை உள்ளிழுக்கும் என்பதை பிரான்ஸ் விஞ்ஞானி பெல்டியர் கண்டறிந்தார். அந்த தத்துவம்தான் எங்கள் கண்டுபிடிப்புக்கு அடிப்படை. ரிஸ்ட்டிஃபை கருவி சற்று பெரிய வாட்ச் அளவில் இருக்கும். வாட்ச் போலவே மணிக்கட்டில் இதை அணிந்துகொள்ள வேண்டும். பெல்டியர் கூலர் எனப்படும் இரண்டு வெவ்வேறான வெப்பக் கடத்திகள் இதில் இருக்கின்றன. தோல் வெப்பநிலை வழக்கமான அளவில் இருக்கும்போது பெல்டியர் கூலருக்கு வேலை இல்லை. தோல் வெப்பநிலை அதிகரித்தால், பெல்டியர் கூலர் வேலை செய்யத் தொடங்கும். தோலில் இருக்கும் வெப்பத்தை உறிஞ்சி, தோலுக்குக் குளிர்ச்சியை வழங்கும்.

உடம்பின் ஏதாவது ஒரு பகுதியைக் குளிரச் செய்தாலே, மற்ற அனைத்து பகுதிகளுக்கும் ஒருசில வினாடிகளில் அந்த குளிர்ச்சி பரவிவிடும்.பனிப் பிரதேசங்களில் அதிக குளிரில் இருப்பவரின் உடல் வெப்பநிலையை அதிகரித்து, உடலுக்கு சூட்டைக் கொடுக்கவும் ரிஸ்டிஃபை கருவியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறிய அளவு லித்தியம் பாலிமர் பேட்டரி உதவியுடன் இது செயல்படுகிறது” என்றார் அந்த மாணவர்.

எம்.ஐ.டி. பல்கலைக்கழகம் சார்பில் மெட்டீரியல் சயின்ஸ் டிசைன் போட்டி கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதில் முதல் பரிசை தட்டிச் சென்றிருக்கிறது ரிஸ்டிஃபை. போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ரிஸ்டிஃபை பற்றிய அடுத்தகட்ட ஆய்வுக்கான நிதியுதவியும் அந்த மாணவர்களுக்குக் கிடைத்திருக்கிறது..

அரசிடம் முனைப்பும், பொதுமக்களிடம் பொறுப்புணர்வும் இருந்தால் போதும் குப்பையும் காசாகும்!

 

இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியாவின் நகரவாசிகள் தொகை 600 கோடியாகவும் அவர்கள் ஒரு நாளில் கழிக்கும் குப்பை ஆறு லட்சம் டன்னாகவும் உயரும் என ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. நகரங்களில் நிலத்தின் விலை வானளாவ உயர்ந்து விட்டது. நகராட்சிகளுக்குக் குப்பை கொட்ட இடம் கிடைக்கவில்லை. அடுத்த ஊரில் கொண்டு போய்க் கொட்ட நினைத்தால் அந்த ஊர்க்காரர்கள் ஒன்றுகூடிச் சண்டைக்கு வருகிறார்கள். மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் வேறு அவ்வப்போது ஏதாவது குறை சொல்லிக் கொண்டேயிருக்கின்றன. இதன் காரணமாகப் பல நகராட்சிகள் தம்மூரிலுள்ள குப்பைக் கிடங்குகளில் குப்பை பொறுக்குவோரைத் தாராளமாக நடமாட விட்டு அவர்கள் திரட்டியது போக மிச்சமுள்ளதை எரித்துவிட மறைமுக ஆதரவளிப்பதைப்போலத் தோன்றுகிறது. உலகின் பெரும்பாலான ஊர்களிலும் இதே கதைதான்.


÷சில நகரங்களில் குப்பையிலிருந்து மக்காத பொருட்களைச் சலித்து நீக்கிவிட்டு, மீதமுள்ள கரிமப் பொருளை உலர வைத்துக் கட்டிகளாக்கித் தொழிற்சாலைகளிலும் மின் உற்பத்தி நிலையங்களிலும் எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். மத்திய அரசு இம்முறையில் சுற்றுச்சூழலைக் கெடுக்காமல் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்குக் கூடுதல் விலை தர முன் வந்திருக்கிறது. பசுங்குடில் வாயுக்களை வெளியிடாமல் மின் உற்பத்தி செய்வோருக்கு கார்பன் பற்று-வரவு மூலமும் பணம் கிடைக்கும். தில்லியில் ஒரு தனியார் நிறுவனம் எட்டுக்கும் மேற்பட்ட குப்பை மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ முன் வந்திருக்கிறது. அதற்கு மத்திய அரசின் காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அனுமதி அளித்திருக்கிறது.

÷ஆனால் இவற்றின் காரணமாகப் பல லட்சம் குப்பை பொறுக்குவோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. குப்பைகளை எரிக்கிறபோது புகைக் கூண்டுகளிலிருந்து வெளிப்படும் புகைத் துகள்கள் நுரையீரல் நோய்களை உண்டாக்கும். அவற்றுடன் வெளிப்படும் டயாக்சின்கள், ஃப்யூரான்கள், நைட்ரஜன் ஆக்சைடுகள், கந்தக ஆக்சைடுகள் ஆகியவை உடலுக்கு ஊறு விளைவிப்பவை. டயாக்சின் குழுவில் நூற்றுக்கும் மேற்பட்ட வேதிகள் உண்டு. அவை மிக நீண்ட ஆயுள் கொண்டவை. அவை நீரில் கரையா. அவை தரையிலும் நீரிலும் படிந்து தாவரங்களால் முழுமையாக உட் கவரப்படும். அத் தாவரங்களை உண்டு வாழும் மீன்கள் மற்றும் விலங்குகளின் மாமிசம், முட்டை, பால் போன்றவற்றின் மூலம் மனித உடலில் அந்த நச்சுகள் புகுகின்றன. அவை உடலில் வளர்சிதை மாற்றமடைவதில்லை. அவை மல-ஜலமாக வெளியேற்றப்படுவதுமில்லை.

பெண்கள் தமது உடலில் சேரும் டயாக்சின்களைக் கருப்பை மூலமாகவும் தாய்ப்பால் மூலமாகவும் சிசுக்களின் உடலுக்குள் செலுத்துகின்றனர். உடலில் அவை அதிக அளவில் சேரும்போது கல்லீரல் செயல்பாடும் நோயெதிர்ப்புத் திறனும் இனப்பெருக்கத் திறனும் குலையும். குப்பை எரிப்பு நிலையங்களில் எவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தாலும் அவை காற்றிலும் மண்ணிலும் கலப்பதைத் தடுக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

குப்பைகளைப் பாதுகாப்பாக அழிப்பதற்கும் அவற்றிலிருந்து பொருளாதார லாபங்களை அடைவதற்கும் “வாயுவாக்கல்’ என்ற தொழில்நுட்பம் மிகச் சிறப்பானது; கரிமப் பொருட்களைக் குறைந்த ஆக்சிஜனுள்ள சூழலில் எரிக்கிறபோது அவை முழுமையாக எரியாமல் கார்பன் மோனாக்சைடு, ஹைட்ரஜன் ஆகியவற்றை வெளியிடும். அந்தக் கலவை எரியன் வாயு எனப்படும். அதைப் பயன்படுத்தி மின் உற்பத்திக் கருவிகளை இயக்கவும் விமானம், ரயில், பஸ், கார் போன்ற ஊர்திகளை ஓட்டவும், டை மெதில் ஈதர், சமையல் எரிவாயு போன்ற எரியன்களை உற்பத்தி செய்யவும் முடியும். “வாயுவாக்கல்’ 1,000 முதல் 3,000 செல்சியஸ் டிகிரி வெப்ப நிலையில் நிகழ்வதால் டையாக்சின், ஃப்யூரான் போன்ற வாயுக்கள் சிதைந்து சாதாரண மூலக்கூறுகளாக மாறிவிடும். உலகின் முன்னணி விமான நிறுவனங்கள் தமது எரியன் செலவைக் குறைப்பதற்காக “வாயுவாக்கல்’ முறையில் விமான எரிபொருளை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகளில் முதலீடு செய்து வருகின்றன. நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் உற்பத்தியாகப் போகிற ஆறு லட்சம் டன் குப்பையிலிருந்து ஆண்டுக்கு 35 மில்லியன் டன்கள் என்ற அளவில் ஊர்திகளுக்கான எரியன்களை உற்பத்தி செய்ய முடியும். அதன்மூலம் நம் நாட்டுக்கு மிகப் பெரிய அளவில் அன்னியச் செலாவணி மிச்சமாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டபோது பஸ்களிலும் லாரிகளிலும் விறகு, கரி ஆகியவற்றை எரித்து எரியன் வாயுவை உண்டாக்கும் “வாயுவாக்கிகள்’ பொருத்தப்பட்டன.

மக்கள்தான் குப்பைகளை உண்டாக்குகிறார்கள். ஆனால் அதைக் காணவே அவர்களுக்குப் பிடிப்பதில்லை. ஆகவே தம் வீட்டுக் குப்பைகளை அருகிலுள்ள காலி மனைகளில் கொட்டி விட்டு நிம்மதியடைகிறார்கள்! சுகாதாரப் பணியாளர்கள் தெருவிலோ காலி மனைகளிலோ ஏரி அல்லது குளக்கரைகளிலோ தென்படும் குப்பைக் குவியல்களைக் கண்டும் காணாமல் போய் விடுகிறார்கள். நகராட்சிகளுக்குக் குப்பைகளைத் திரட்டுவதும் அவற்றைக் கிடங்குகளுக்குக் கொண்டு சேர்ப்பதும் உழைப்பும் செலவும் அதிகமாகத் தேவைப்படுகிற பணிகளாயிருக்கின்றன. வீடுகளிலேயே மக்குகிற குப்பைகளையும் மக்காத குப்பைகளையும் தனித்தனியாகப் பிரித்துத் தருமாறு மக்களுக்கு விடுக்கப்படும் வேண்டுகோள்கள் பயனற்றுப் போகின்றன. மருத்துவமனைகளே கூட கிருமிகள் நிறைந்த குப்பைகளைத் தெருவில் வீசி விடுகின்றன.

குப்பைகளை ஜீரணிப்பது, நொதிக்க வைப்பது, வாயுவாக்குவது ஆகிய முறைகள் மூலம் எரிவாயுக்களை உற்பத்தி செய்யலாம். தாவரக் குப்பைகளைக் குறைந்த அளவில் ஆக்சிஜனைச் செலுத்திச் சூடாக்கினால் குறைந்த எரி திறனுள்ள “எரியன் வாயு’ கிடைக்கும். அவற்றை உயர் வெப்பநிலையிலும் உயர் அழுத்தத்திலுமுள்ள நீராவியையும் ஆக்சிஜனையும் செலுத்திச் சூடாக்கினால் நடுத்தரமான எரி திறனுள்ள எரிவாயு கிடைக்கும். அதை நேரடியாக எரியனாகப் பயன்படுத்தலாம் அல்லது அதிலிருந்து எத்தனால், மெத்தனால் போன்ற திரவ எரியன்களை உற்பத்தி செய்யலாம். அதை உயர் எரி திறனுள்ள மீத்தேனாகவும் ஹைட்ரஜனாகவும் மாற்றி விடலாம். தாவரக் குப்பைகளில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை மெத்தனாலாக மாற்ற முடியும்.

÷மரக் குப்பைகளைத் தூளாக்கி அவற்றின் ஊடாக உயர் அழுத்தத்திலும் வெப்பநிலையிலும் உள்ள ஹைட்ரஜன் வாயுவைச் செலுத்தி நேரடியாக மீத்தேனை உற்பத்தி செய்யலாம். அந்தக் கொதிகலத்திற்குள் நீராவியைச் செலுத்தினால் அது கார்பன் மோனாக்சைடாகவும் ஹைட்ரஜனாகவும் மாறும். மீத்தேனை மெத்தனாலாக மாற்றுவதற்குச் சிறப்பான தொழில்நுட்பங்களும் எந்திரங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

÷நூறு முதல் 400 செல்சியஸ் டிகிரி வரையான வெப்பநிலைகளில், நூறு மடங்கான வளியழுத்தத்தில் தாவர செல்லுலோஸ் குப்பைகளில் செலுத்தப்படும். நீராவியும் கார்பன் மோனாக்சைடும் அடர்த்தி மிக்க எண்ணெய்களை வெளிப்படுத்தும். அவற்றைச் சுத்திகரித்து டீசலை ஒத்த எரியன்களை உற்பத்தி செய்யலாம். கால்நடைத் தீவனமாகவும் எரிபொருளாகவும் பயன்படும் வைக்கோலில் கிட்டத்தட்ட 70 சதவீதம் செல்லுலோஸ்தான்.

÷தாவரக் குப்பைகளைக் காற்றுப்படாமல் சூடாக்கும்போது ஹைட்ரஜன், நைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு, கரியமில வாயு, ஈத்தேன், மீத்தேன், எத்திலீன், டாலுயின் போன்ற மதிப்புமிக்க வேதிகள் வெளியாகின்றன. ஹைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு ஆகியவற்றை இணைத்து மெத்தனால், பெட்ரோல், டீசல், அம்மோனியா, மருந்துகள், பசைகள், செயற்கை இழைகள் போன்ற பல உபயோகமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. காற்றுப்படாமல் சூடாக்கும் முறை “தீயாற் பகுப்பு’ எனப்படும். எளிய சாதனங்கள், எளிய செயல்முறை, குறைவான கழிவு ஆகியவை இம்முறையின் சிறப்புகளாகும்.

÷சரியான முறையில் மேலாண்மை செய்யப்பட்டால் குப்பையும் செல்வம் தரும். அதற்குப் புதிய கண்டுபிடிப்புகளோ, புதிய வடிவமைப்புகளோ புதுவகை எந்திர சாதனங்களோ தேவையில்லை. அரசிடம் முனைப்பும், அதிகாரிகளிடம் அக்கறையும் பொதுமக்களிடம் பொறுப்புணர்வும் இருந்தால் போதும். குப்பையும் காசாகும்!

‘ஷோலே’ – 3 டி எபெக்டில் வரப் போகுதில்லே!

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் இந்தியில் வெளிவந்து கலக்கிய .‘ஷோலே’ படத்தை பார்க்காத ரசிகர்கள் இருக்க முடியாது. இருந்தாலும் இன்றைய இளைய தலைமுறையினர் அனைவரும் பார்த்து ரசிக்கும் விதமாக தற்போது இந்தப்படத்தை ‘3டி’யில் உருவாக்கியுள்ளார்கள்.இதையடுத்து மும்பையில் நடைபெறவுள்ள இந்த புதிய பதிப்பின் அறிமுக விழாவில் அமிதாப் பச்சன், தர்மேந்திரா உள்ளிட்ட நடிகர் – நடிகைகள் பங்கேற்கிறார்கள்.



                  nov 11 - cine sholey

பல வருடங்களுக்கு முன் வெளிவந்த சூப்பர்ஹிட் படங்களை டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிடுவதும் 3டியில் மாற்றி வெளியிடுவதும் இப்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் இந்தியில் வெளிவந்து ஏகப்பட்ட கலெக்‌ஷனை அள்ளிய ‘ஷோலே’ படமும் 3டியில் வெளியாக இருக்கிறது.

இந்திய திரையுலகில் வெளியான படங்களில் முக்கியமான படங்களை பட்டியலிட்டால், அதில் தவறாமல் இடம்பிடிக்கும் படம் ‘ஷோலே’. ரமேஷ் சிப்பி இயக்கத்தில் தர்மேந்திரா, அமிதாப் பச்சன், ஹேமமாலினி மற்றும் பலர் நடிப்பில் 1975 ஆகஸ்ட் 15ல் வெளியானது ‘ஷோலே’. அமிதாப், தர்மேந்திரா மட்டுமல்ல இந்தப்படத்தின் வில்லனாக நடித்திருந்த அம்ஜத்கானுக்கும் இந்தப்படம் புகழ்மாலை சூட்டியது.

இந்தப்படம் வெளியானபோது முதல் இரண்டு வாரங்களுக்கு வசூல் குறைவாகவே இருந்தது. ஆனால் 3ஆம் வாரத்தில் இருந்து வசூல் மழை கொட்ட ஆரம்பித்தது. அதற்கு முன்பு வெளியான அனைத்து படங்களின் வசூலையும் முறியடித்தது ‘ஷோலே’. அதுமட்டுமன்றி 100 திரையரங்குகளில் 25 வாரங்கள் ஓடியது.

‘3டி’க்கு மாற்ற சுமார் மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்து முடித்துள்ள இந்தப் படத்தை யுடிவி மோஷன் பிக்‌ஷர்ஸ் நிறுவனம் வரும் 2014 ஜனவரி 3ஆம் தேதி வெளியிட தீர்மானித்திருக்கிறது.

அதிமுக இணையதளத்தை பொழுதுபோக்குக்காக முடக்கிய சென்னை இளைஞர் கைது!

அதிமுக இணைய தளத்தை முடக்கிய சென்னை இளைஞர் கைது செய்யப்பட்டார்.இதை ‘விளையாட்டுக்காகவும், பொழுதுபோக்குக்காகவும் செய்தேன்’ என்று விசாரணையில் கூறியிருக்கிறார். இதையடுத்து ஈஸ்வரனை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


              


அதிமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.aiadmkallindia.org. கடந்த 1-ம் தேதி இந்த இணைய தளத்துக்குள் புகுந்த ஒருவர் அதை செயல்படவிடாமல் முடக்கி விட்டார். மேலும், இஸ்லாம் ஜிந்தாபாத், லாங் லிவ் முஸ்லிம்ஸ், பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற வாசகங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. பாகிஸ்தான் கொடியுடன் மனித மண்டை ஓட்டின் உருவமும் அதில் இருந்தன. நாங்கள் பாகிஸ்தான் ஹாக்கர்ஸ் க்ரூ. எங்களுக்கு நீதியும், அமைதியும் தேவை என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தனர்.

இதுகுறித்து அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். ஆணையரின் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் சாப்ட்வேர் நிபுணர்களின் உதவியுடன் நடந்த இந்த தீவிர விசாரணையில் பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜீனியராகப் பணியாற்றி வரும் சென்னையைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர்தான் இந்த வேலையைச் செய்ததாக தெரிய வந்தது.

இது குறித்து இவ்வழக்கை விசாரித்த காவல் துறை அதிகாரிஇடம் பேசிய போது,”அதிமுக இணைய தளத்துக்குள் நுழைந்தவர்களின் பட்டியலை சர்வர் மூலம் முதலில் சேகரித்தோம். அதில் ஒருவர் மட்டும் 300-க்கும் அதிகமான முறை அந்த இணைய தளத்துக்குள் நுழைந்து, அதிக நேரம் இணைப்பில் இருந்தது தெரிந்தது. அவரது முகவரியை சர்வர் மூலம் தேடியபோது, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ஈஸ்வரன் என்பது தெரிந்தது. உடனே சனிக்கிழமை இரவில் அவரை கைதுசெய்து அவரிடம் இருந்த மடிக்கணினியையும் பறிமுதல் செய்தோம்.

இது குறித்து அவரிடம் விசாரித்த போது, ‘விளையாட்டுக்காகவும், பொழுது போக்குக்காகவும் செய்தேன்’ என்று சாதாரணமாக கூறினார். ஈஸ்வரன் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 66-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்து விட்டோம்.

இந்த ஈஸ்வரன் 2011 ம் ஆண்டு கணினி பொறியியல் படிப்பை முடித்து, பெங்களூரில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் இணைய தளத்துக்குள் நுழைந்து பிரச்சினைக்குரிய வாசகங்களை பதிவு செய்ததுதான் எங்களுக்கு புரியவில்லை. அவருக்கும், அவர் பதிவு செய்திருக்கும் வாசகங்களுக்கும் தொடர்பில்லாததுபோல உள்ளது.

எனவே அவர் மட்டும்தான் இந்த செயலை செய்தாரா அல்லது வேறு யாருடைய தூண்டுதலின் பேரில் இதை செய்தாரா என்பதை மேலும் விசாரிக்க வேண்டியுள்ளது. இதனால் ஈஸ்வரனை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்கிறோம்” என்றார்..

பேஸ்புக் லைக் வசதியில் மாற்றம்!

தற்போது இணையத்தளங்கள் மற்றும் வியாபார நிறுவனங்கள் தம்மை பிரபலப்படுத்திக்கொள்வதற்காக பேஸ்புக் தளத்தினை பயன்படுத்தி வருகின்றமை மறுக்க முடியாத ஒன்றாகும்.


இதற்காக பேஸ்புக் ஆனது லைக் பேஜ் வசதியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வசதியில் இதுவரை காலமும் காணப்பட்ட கைவிரல் அடையாளம் தற்போது நீக்கப்பட்டுள்ளது.


நாள்தோறும் சுமார் 22 பில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் இந்த கைவிரல் அடைய பொத்தானை கிளிக் செய்து வந்ததோடு, 7.5 மில்லியன் வரையான இணையத்தளங்களில் இவை இணைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top