.......................................................................... ....................................................................... ......................................................................

Friday 1 November 2013

விண்டோஸ் 8.1 அப்கிரேட் அவசியமா?

 

விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வர்த்தக ரீதியாக வெளியாகியுள்ள நிலையில், புதிய இன்டர்பேஸ் கூடுதல் வசதிகளையும், சங்கடங்களையும் தரும் நிலையில், கம்ப்யூட்டர் பயனாளர்களில் பலர், நாம் விண்டோஸ் 8.1க்கு மாறத்தான் வேண்டுமா என எண்ணத் தொடங்கி உள்ளனர்.

1. நீங்கள் ஏற்கனவே, விண்டோஸ் 8 உள்ள பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கிப் பயன்படுத்திக் கொண்டு இருந்தால், அது உங்களுக்குப் பிடித்ததாக இருந்தால், விண்டோஸ் 8.1க்கு அவசியம் மாறிக் கொள்ளுங்கள். இலவசமாகவே மைக்ரோசாப்ட் இதனைத் தருகிறது.

2. நீங்கள் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி வருகிறீர்களா? அது உங்களுக்கு சகல விதத்திலும் பயனுள்ளதாக, சிரமம் தராததாக உள்ளதா? அப்படியானால், புதியதாக ஒரு பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கும் வரை இதனையே பயன்படுத்தவும். மேலும், உங்கள் விண்டோஸ் 7 உள்ள பெர்சனல் கம்ப்யூட்டரில் டச் ஸ்கிரீன் இருக்காது. விண்டோஸ் 8 மற்றும் 8.1 சிஸ்டங்கள், டச் ஸ்கிரீன் இல்லாமல் இயங்கினாலும், பல வசதிகள் உங்களுக்குக் கிடைக்காது. எனவே, விண்டோஸ் 7 உடன் உங்கள் பயணம் சில காலத்திற்குத் தொடரட்டும்.
 
3. விண்டோஸ் 8 சோதனை சிஸ்டம் பயன்படுத்தி, அதன் செயல்பாடுகள், உங்களிடம் இருந்து எதிர்பார்க்கும் மாற்றங்கள் உங்களுக்குப் பிடிக்க வில்லையா? அதனால், புதிய கம்ப்யூட்டர் வாங்கும் முடிவைச் சிறிது காலம் தள்ளி வைத்திருக்கிறீர்களா? இந்த முடிவை ஒதுக்கித் தள்ளுங்கள். உடனே, விண்டோஸ் 8 சிஸ்டம் தரும் வசதிகளைப் பயன்படுத்த முயற்சிக்கவும். புதிய கம்ப்யூட்டர் இனி விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் தான் கிடைக்கும். எனவே, அதற்குப் பழக்கிக் கொள்ளுங்கள்.
Click Here

பத்து லட்சம் ஆண்டு டேட்டா பாதுகாக்கும் டிஸ்க்!



காந்த சக்தியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஹார்ட் டிஸ்க்குகள், அதிக பட்சம் பத்து ஆண்டு காலம் நல்லபடியாக இயங்கும். பல்லாண்டுகள் தகவல்களைச் சேர்த்துப் பாதுகாக்க விரும்பு பவர்கள், இதனாலேயே மேக்னடிக் டேப்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தேவைக்குப் பதில் கொடுக்கும் வகையில், பத்து லட்சம் ஆண்டுகள் கூடப் பாதுகாப்பாக தகவல்களைப் பதிந்து வைக்கக் கூடிய டிஸ்க்குகளை நானோ தொழில் நுப்ட வல்லுநர்கள் உருவாக்கியுள்ளனர்.

1956 ஆம் ஆண்டில், ஐ.பி.எம். நிறுவனம் முதன் முதலாக, காந்த சக்தியின் அடிப்படையில் இயங்கும் ஸ்டோரேஜ் டிஸ்க்கினை, வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்தியது. IBM 305 RAMAC என அழைக்கப்பட்ட இந்த டிஸ்க், 24 அங்குல டிஸ்க்காக இருந்தது. 5 எம்பி டேட்டாவினை (அந்த காலத்தில் இது ரொம்ப அதிகம்) அதில் பதிந்து பாதுகாக்கலாம். இப்போது, 3.5 அங்குல அளவிலான டிஸ்க்குகளில் 1 டெரா பைட் அளவு கொள்ளும் ஹார்ட் டிஸ்க்குகள் எளிதாக, விலை மலிவாகக் கிடைக்கின்றன. மின் சக்தி பயன்பாடும் முன்னேறிய நிலையில் உள்ளது. இது நவீன தொழில் நுட்பத்தினால் சாத்தியப்பட்டது என்றாலும், எத்தனை ஆண்டுகள், இதில் பதியப்படும் தகவல்கள் சேதமடையாமல் இருக்கும் என்பதில், நாம் இன்னும் முன்னேற்றம் காண இயலவில்லை. அதிக பட்சம் பத்து ஆண்டுகள் என்ற கால எல்லையிலே தான் இருக்கிறோம்.

அப்படியானால், நம் கலாச்சாரம், சமுதாயக் கூறுகள் ஆகியவற்றை வெகு காலம் பாதுகாத்து வைக்க என்ன செய்திடலாம்? என்ற கேள்வி எழுந்தது. இதற்கான விடையாக, இப்போதைய நானோ தொழில் நுட்பத்தில் டிஸ்க் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. Jeroen de Vries என்னும் வல்லுநர் தலைமையிலான குழுவினர், நெதர்லாந்தில் உள்ள ட்வெண்டி பல்கலைக் கழகத்தின் (University of Twente) சோதனைச் சாலையில் இதனை உருவாக்கியுள்ளனர். இந்த டிஸ்க்கில் பதியப்படும் தகவல்கள், பத்து லட்சம் ஆண்டுகள் மட்டுமின்றி, அதற்கும் மேலாகவும் பாதுகாத்து வைக்கும் என, அதன் மீது நடத்தப்பட்ட சோதனைகள் தெரிவித்துள்ளன.

இவர்களின் நிபுணத்துவம், டிஸ்க் உருவாக்குவதனை முக்கியமானதாக எடுத்துக் கொள்ளவில்லை. அநேக ஆண்டுகள் தொடர்கையில், ஒரு பொருள் நிலைத்து இருக்க வேண்டுமாயின், காலத்தின் அழிப்பு தன்மையை எதிர்த்து நிற்க என்ன வேண்டும் என ஆய்வு செய்து வழிகளைக் கண்டறிந்துள்ளனர். அறிவியலில் இதனை Arrhenius law என அழைப்பார்கள். அந்தச் சோதனையில் கிடைத்த முடிவுகளை, டிஸ்க் தயாரிப்பில் பயன்படுத்தி உள்ளனர்.

மிக மெல்லிய உலோகமான டங்க்ஸ்டன் இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால், இதனை உருக்க வேண்டும் என்றால் 3,422 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவை. எனவே, பாதுகாப்பானது என இதனைத் தேர்ந்தெடுத்துள்ளனர். டேட்டா, இதில் உள்ள வரிகளில் பதியப்படுகிறது. அதன் மேலாக பாதுகாப்பிற்கான ஒரு அடுக்கு அமைக்கப்படுகிறது. இதனை அமைக்க சிலிகான் நைட்ரைட் (Silicon nitride (Si3N4)) பயன்படுத்தப்படுகிறது. இந்த உலோகம் எந்த பாதிப்பிலும் சேதம் அடையாது. இவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட டிஸ்க்கில் டேட்டா எழுதப்பட்டு சோதனை நடத்தப்பட்டு, இறுதியில் வெற்றி பெற்றுள்ளனர்.

மேலும் இது குறித்து தகவல்கள் தேவைப்படுவோர் arxiv.org/abs/1310.2961என்ற முகவரியில் உள்ள இணையதளம் செல்லலாம்.

மொபைல் மற்றும் டிஜிட்டல் வியாதிகள்!

 
 
இன்றைய உலகம் மொபைல் போன்களால், கையளவில் சுருங்கி விட்டது. இதனால், நாம் பல வசதிகளை அனுபவிக்க முடிகிறது. யாருமே அணுக முடியாத இடத்தில், நிலையில் இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. எதனையும், உலகின் எந்த மூலைக்கும் அனுப்ப முடியும் என்ற வசதி நம் பைகளில் வந்து அமர்ந்துள்ளது.

அதே நேரத்தில், இதே மொபைல் போன் பயன்பாட்டினால், நாம் பல்வேறு மன, உடல் நோய்களுக்கு ஆளாகி உள்ளோம். மேற்கு நாடுகளில், இது குறித்து பல மருத்துவ ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு உடல் ரீதியான, மன ரீதியான பிரச்னைகளை க் கண்டறிந்துள்ளனர். அவற்றை இங்கு காணலாம்.

1.நோமோ போபியா (Nomophobia): 

நோமோபியா என்பது ஸ்மார்ட் போன்களால் பெற்றுள்ள, எங்கும் காணப்படுகிற ஒரு மன வியாதியாகும். இந்த சொல், மொபைல் போன் பயன்படுத்தும் பலவகையான பயனாளர்களை ஆய்வு செய்த மேலை நாட்டு அமைப்பு ஒன்று உருவாக்கியுள்ளது. இந்த சொல் "nomobile phobia” என்பதன் சுருக்கமாகும். மொபைல் போன் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகையில் இந்த மன வியாதிக்கு நாம் ஆளாகிறோம். ஒரு விமானம் தரை இறங்கியவுடன், அதில் பயணம் செய்தவர்களைப் பாருங்கள்.மிக வேகமாகத் தங்கள் மொபைல் போனை ஸ்விட்ச் ஆன் செய்து, ""அப்பாடா'' என்று பெருமூச்சு விடுவார்கள். அதுவரை பல மணி நேரம் மொபைல் போன் மூலம் யாரையும் தொடர்புகொள்ள முடியாததால், ஒருவகை விரக்திக்கு ஆளாகின்றனர். இதுவே நோமோ போபியா ஆகும்.

பல தலைமை நிர்வாகிகள், மருத்துவர்களை ஆய்வு செய்த போது, தாங்கள் காலையில் தூக்கத்திலிருந்து விழித்தவுடன், முதலில் செய்திடும் காரியம், மொபைல் போனை ஸ்விட்ச் ஆன் செய்து, அழைப்புகள் உள்ளனவா என்று பார்ப்பதுதான். அதுவரை, மொபைல் போனைப் பயன்படுத்தாமல் இருந்தது அவர்களிடம் இந்த போபியாவினை உண்டாக்கி உள்ளது.

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில், இதே நோமோ போபியா என்ற பெயரில் ஓர் அப்ளிகேஷன் உருவாக்கப்படுள்ளது. இந்த அப்ளிகேஷன் நாம் எந்த வகைகளில், மொபைல் போன் ஒன்றை மிக அதிக உணர்ச்சிப் பூர்வமாக அதிகமாகப் பயன்படுத்துகிறோம் என்பதனை அளக்கிறது.

2. ஸ்மார்ட் போன் அடிமை:
 


நோமோபோபியா மன நிலை தீவிரமாக மாறுகையில், அந்த பயனாளர், ஸ்மார்ட் போன் பழக்கத்திற்கு அடிமையாகிறார். ஸ்மார்ட் போனுடன் ஒருவரின் அதீத இணைப்பு, உறவுகளைக் கெடுக்கிறது. பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகத்தில் நம் பண்பை மாற்றுகிறது. திருமணத்தின் போது கூட ஒரு மணப்பெண், தன் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்திக் கொண்டிருந்ததாக, ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. உளவியல் நிபுணர் ஒருவர் கூறுகையில், சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்தவர்கள் கூட, மனிதர்களிடமிருந்து விலகி இருக்க, மொபைல் போனை ஒரு கருவியாகப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர் என்று கூறியுள்ளார். எந்த அளவுக்கு ஒரு மொபைல் போன் அதி நவீன வசதி கொண்டதாக உள்ளதோ, அந்த அளவிற்கு, அது ஒருவரை போன் பைத்தியமாக மாற்றுகிறது. தென் கொரியாவில், 20 சதவீத மாணவர்கள், ஸ்மார்ட் போனுக்கு அடிமைகளாக உள்ளனர் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதிலிருந்து விடுபடக் கூடிய வழிகளும் இப்போதைக்கு உறுதியாகப் புலப்படவில்லை.

3. தூக்கத்தில் மெசேஜ் டெக்ஸ்ட்:  


அமெரிக்காவில் ஐந்தில் நான்கு இளைஞர்கள், தாங்கள் உறங்கும்போதும், படுக்கையில் தங்களின் கைக்கு எட்டும் தூரத்தில் அல்லது தங்கள் மார்பு மேலாக, மொபைல் போனை வைத்து உறங்குகின்றனர். நண்பர்களிடமிருந்து மெசேஜ் வந்தால், உடனே அதனைப் பார்த்து பதில் அளிக்க இந்த ஏற்பாடு. இதனால், அவர்களின் உறக்கம், பாதி விழித்த நிலையிலேயே (“junk sleep” syndrome) நிலை கொள்ளாமல் தொடர்கிறது. இப்போது பலர், தங்கள் ஸ்மார்ட் போனில், தூங்கி வழிந்தவாறே, டெக்ஸ்ட் அமைக்கின்றனர். டெக்ஸ்ட் அமைப்பதில் பல எளிய வழிகள் இந்த ஸ்மார்ட் போனில் இருப்பதால் இந்த பழக்கம் தொற்றிக் கொள்கிறது.

4. ஸ்கிரீன் தரும் தூக்கமின்மை:


 மேற் சொன்ன இரு வித பிரச்னைகளுக்குத் (“junk sleep syndrome” and sleep texting) தொடர்பானது இந்த ஸ்கிரீன் தூக்கமின்மை நோய் ஆகும். பொதுவாக, பளிச் என்ற வெளிச்சம் இருந்தால், அது பகல் போலத் தோற்றமளித்து நமக்கு தூக்கத்தினைத் தராது. டேப்ளட் பி.சி. அல்லது ஸ்மார்ட் போனை உங்கள் கண்களுக்கு முன்னால் பிடித்து, திரையில் உள்ளதைப் படிக்க முயற்சி செய்கையில், திரை வெளிச்சம் இந்த பிரச்னையை ஏற்படுத்துகிறது.

நம் உடலுக்குள் ஒரு கடிகாரம் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இதனை உடல் கடிகாரம் (Body Clock) என்று அழைக்கின்றனர். இதுதான், இரவு நெருங்குகையில், இது தூங்கும் நேரம் என, உடம்பிற்கு அல்லது மூளைக்கு எடுத்துச் சொல்கிறது.இதற்கு உடலில் உள்ள மெலடோனின் (melatonin) என்ற ஹார்மோன் உதவுகிறது. நல்ல வெளிச்சம் இந்த ஹார்மோன் செயல்பாட்டினை அழுத்துகிறது.


 இதனால், நமக்குத் தூங்க வேண்டும் என்ற எண்ணம் அமுங்கிப்போகிறது. எனவே, இதிலிருந்து தப்பிக்க, ஸ்கிரீனின் ஒளி வெளிச்சத்தின் அளவை இரவில் குறைத்து வைத்து, கண்கள் அருகே இல்லாமல், தள்ளிவைத்து போனின் திரையைப் பார்க்க வேண்டும். படுக்கைக்குச் செல்ல இரண்டு மணி நேரம் முன்பாகவே, இந்த போன்களைப் பயன்படுத்துவதனைத் தவிர்க்க வேண்டும். எந்த சாதனத்தின் ஒளித்திரையும், (கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி) நம் கண்களைப் பாதித்து, உறக்கத்தினைக் கெடுக்கலாம். ஆனால், ஸ்மார்ட் போனால் தூண்டப்படும் இந்த தூக்கமின்மை தொடர்ந்து மக்களிடையே அதிகரித்து வருவதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அச்சிட்ட நூல்களுக்குப் பதிலாக, நூல்களைப் படிக்க, டேப்ளட் பிசிக்கள் அதிக அளவில் பயன்படுத்துவது அதிகரித்து வருவதால், டேப்ளட் பிசியினால் தூக்கமின்மை மிக அதிகமாகவே உருவாகி வருகிறது.

5. ஆமைக் கழுத்து நோய்: 

ஸ்மார்ட் போனை அல்லது எந்த மொபைல் போனையும் ஒழுங்காகப் பிடித்து பேசுவது என்ற பழக்கம், பெரும்பாலானவர்களிடம் இல்லை. நாம் ஏதேனும் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்து கொண்டிருப்பதால், கழுத்து அருகே, போனை வைத்து, தலை சாய்த்துப் பிடித்து, போனைப் பயன்படுத்துவதே இப்போது பழக்கமாகி வருகிறது. இது தொடர் கையில், ஆமைக் கழுத்து நோய் வருகிறது. ஆங்கிலத்தில் இதனை turtleneck syndrome என அழைக்கின்றனர். தொடர்ந்து இந்த பழக்கம் உள்ளவர்களுக்கு, கழுத்தில் தீராத வலி உண்டாகிறது. இந்த வலியால் அவதிப்படுவோர் அதிகம் வசிக்கும் நாடு தென் கொரியாவாகும்.

6. வெட்டிப் பந்தா மேடை: 

சமூக தளங்களில் அதிகம் உலா வருவோருக்கு இந்த நோய் அதிகம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தளங்களில் எழுதுபவர்கள், தங்களைப் பற்றி எழுதுகையில், மிக நல்ல விஷயங்களை மட்டுமே வெளிப்படுத்தி, தானே, மிக நல்ல மனிதன் என்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குகின்றனர். சமூக இணைய தளங்கள், இந்த வெட்டிப் பந்தாவிற்கு மேடை அமைக்கின்றன. இதில் என்ன பிரச்னை என்றால், எல்லாரும் இந்த பொய்த் தோற்றத்தினை அமைக்கையில், மற்றவர்கள், தான் அது போல இல்லையே என்ற மன வருத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதனை பேஸ்புக் மனச்சுமை (Facebook Depression) எனவும் அழைக்கின்றனர்.

7. தன் காதல் மனக் கோளாறு: 

சமூக இணைய தளங்களில், பெரும்பாலானவர்கள், தங்களை விதம் விதமாக அவ்வப்போது போட்டோ எடுத்துப் பதிக்கின்றனர். இது எதற்காக? நோக்கம் என்ன? ஒன்றுமில்லை. ""இதோ ! என்னைப் பார்'' என்று கூறுவதற்காகவே. இது தன்னைத்தானே காதலிக்கும் ஒரு மனச் சுமையை உருவாக்குகிறது. மேலே கூறப்பட்ட கூற்றுகளுக்காக, ஸ்மார்ட் போன் அல்லது மற்ற மொபைல் போன்கள், பிற டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதனை நிறுத்த வேண்டும் என்று சொல்வதற்கில்லை. இவை இல்லாமல், இனி இந்தப் புவியில் வாழ்க்கை இல்லை என்ற நிலைக்கு இவற்றின் பயன்பாடு வந்துவிட்டது. இருப்பினும் மேலே தரப்பட்டுள்ள பிரச்னைகளும் நம்மிடையே தோன்றி உள்ளன. இவற்றை உணர்ந்து திருந்தினால், நமக்கும் நாட்டுக்கும் நல்லது.
Click Here

"ஹிட்' என்றால் என்ன?

இன்டர்நெட் குறித்து பேசுகையில் பலர் இந்த தளத்தின் ஹிட் எண்ணிக்கை என்ன? என்று கேட்கின்றனர். அல்லது சில தளங்களின் முகப்புப் பக்கத்தில் இத்தனை பேராக நீங்கள் இதனைப் பார்க்கிறீர்கள் என்று கணக்குக் காட்டப்படும். பலர் இதுதான் அந்த தளம் பெற்ற ஹிட்களின் எண்ணிக்கை என எண்ணுகின்றனர். இந்த ஹிட்” என்பது என்ன? அது எதனைக் குறிக்கிறது>? அதனை எப்படிக் கணக்கிடுகிறார்கள்? என்று பார்ப்போம்.

சரியாகச் சொல்வதென்றால் இந்த சொல் குறித்து பலரும் தவறாகவே கருத்து கொண்டுள்ளனர் என்று கூறலாம். பலரும் ஹிட் என்றால் ஓர் இணைய தளத்தை எத்தனை பேர் பார்த்தார்கள் என்று குறிப்பிடுவதாக எண்ணிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு முறை ஒருவர் ஓர் இணைய தளத்திற்குச் சென்று பார்த்தால் அதன் ஹிட்களின் எண்ணிக்கை யில் ஒன்று கூடும் என எண்ணுகிறார்கள். இது உண்மை அல்ல. சரியான கணிப்பும் அல்ல. “ஹிட்” என்பது ஒரு வெப் சர்வருக்கு அளிக்கப்படும் வேண்டுகோள் ஆகும்.


எடுத்துக் காட்டாக நீங்கள் தன்னுடைய இணைய முகப்புத் தளத்தில் ஆறு படங்களை உடையதாக ஓர் இணைய தளம் இருப்பதாகக் கொள்வோம். இந்த தளத்தைப் பெற உங்களுடைய பிரவுசர் இந்த ஆறு படங்களுக்கு ஒரு வேண்டுகோளை அனுப்பும். அத்துடன் அத்தளத்தின் எச்.டி.எம்.எல் க்காகவும் ஒரு வேண்டுகோளை அனுப்பும். எனவே இந்த வேண்டு கோள்கள் எல்லாம் சேர்ந்தால் மொத்தம் ஏழு “ஹிட்” கள் இந்த தளத்திற்கு அனுப்பப் படுகின்றன.

நீங்கள் கூகுள் தேடுதளத்தில் (அல்லது நீங்கள் விரும்பும் எந்த தேடு தளத்திலும்) உங்கள் தேடுதலை அனுப்பி அதற்கான முடிவுகள் உங்களுக்குத் தெரிவிக்கப் பட்டால் அவை ஒவ்வொன்றும் ஒரு ஹிட்” ஆகக் கருதப்படும். எனவே உங்கள் தேடுதல் சார்ந்து 423 தளங்களின் முகவரிகள் பட்டியலிடப்பட்டால் உங்களுக்கு 423 ஹிட்கள் திரும்ப வந்துள்ளன என்று பொருள். இதுதான் “ஹிட்” என்பதின் உண்மையான பொருள்.

நேரம் பொன்னானது!

சிலர் இணைய தளத்தில் நேரம் போவது தெரியாமல் மூழ்கி விடுவார்கள். சிலர் ஒவ்வொரு முறையும் மணிபார்க்க கடிகாரத்தை தேடுவார்கள். இப்படிப்பட்ட மணி அறியா மகான்களுக்கு உதவும் இணையதளம் இது.

இந்த இணைய தளத்திற்கு சென்றால் டிஜிட்டல் கடிகாரம் நம்மை வரவேற்கும். அந்த கடிகாரத்தில் நாம் விரும்பும் நேரத்தை தேர்வு செய்தால் போதும். அந்த நேரம் வந்தவுடன் அலாரம் சத்தமிடும். இதனால் சரியான நேரத்தில் எழுந்து கொள்ளலாம்.

நேரத்தை துல்லியமாக கணக்கிடும் `ஸ்டாப் வாட்ச்' கடிகாரமும் உண்டு. அதனைப் பயன்படுத்தி நாம் வேலைகளை எத்தனை நிமிடத்தில் முடிக்கிறோம் என்பதையும் கணக்கிடலாம்.

`காலம் பொன் போன்றது' என்ற கருத்துப்படி வாழ் பவர்களுக்கு உபயோகமான இணையதளம்.

http://onlineclock.net/

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top