.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday 31 October 2013

திரையுலகில் சரித்திர, புராண படங்கள் மீண்டும் ஆதிக்கம்!

திரையுலகில் சரித்திர, புராண படங்கள் மீண்டும் ஆதிக்கம்
திரையுலகில் சரித்திர புராண படங்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க நடிகர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ரஜினியின் கோச்சடையானும், செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் இரண்டாம் உலகம் படமும் இதே கதையம்சத்தில் வருகின்றன. தமிழ், தெலுங்கில் அனுஷ்கா நடிப்பில் தயாராகும் ருத்ரமாதேவி படமும் சரித்திர கதையம்சம் கொண்டது.

கோச்சடையான் படத்தில் ரஜினி மன்னன், இளவரசன் என இரு வேடங்களில் வருகிறார். புராண காலத்தில் சிவ பக்தனாக வாழ்ந்த ஒரு அரசனை பற்றிய கதையே இப்படம். மன்னர் காலத்து ஆடை அணிகலன்கள், யுத்த கருவிகள் இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யாவின் கெட்டப் காட்டுவாசியை நினைவூட்டுவதுபோல் அமைந்துள்ளது. அனுஷ்கா வாள் சண்டையிடும் வீரப்பெண் போல் தோற்றமளிக்கிறார். ஏற்கனவே செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்தையும் இதே சாயலில்தான் எடுத்து ரிலீஸ் செய்தார்.

ருத்ரமாதேவி படத்தில் அனுஷ்கா மகாராணி வேடத்தில் வருகிறார். சரித்திர காலத்தில் வீரதிரத்தோடு வாழ்ந்த ஒரு ராணியை பற்றிய கதையே இப்படம். ஏற்கனவே அருந்ததி படம் அனுஷ்காவுக்கு பெயர் வாங்கி கொடுத்ததால் இப்படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிட்டியுள்ளது.

தெலுங்கில் தயாரான மகதீரா சரித்திர படமும் நயன்தாரா நடித்த ஸ்ரீராம ராஜ்ஜியம் புராண படமும் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. இப்படங்கள் ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது.

பிருதிவிராஜ், பிரபுதேவா, ஜெனிலியா, நித்யாமேனன் நடித்த உருமி படமும் சரித்திர கால கதையம்சம் கொண்டது. இப்படம் தமிழ், மலையாளத்தில் வெளியானது. இது போன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில், வரவேற்பு ஏற்பட்டு உள்ளதால் நிறைய படங்கள் இனிமேல் இதே கதைசம்சத்தில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமலின் மருதநாயகம் படத்தையும், ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சிம்புவின் ‘வேட்டை மன்னன்’ டிராப் ஆனது?

சிம்புவின் ‘வேட்டை மன்னன்’ டிராப் ஆனது?
நடிகர் சிம்பு ‘வாலு’, ‘வேட்டைமன்னன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களையும் நீண்டகாலமாக கடத்தி வந்த சிம்பு சமீபகாலமாக ‘வாலு’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, கிட்டத்தட்ட முடித்துக் கொடுத்துவிட்டார். இன்னும் ஒரேயொரு பாடல் காட்சி மட்டும் எடுக்க வேண்டி உள்ளது. படத்தை டிசம்பரில் வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படத்தைத் தொடர்ந்து ஒப்புக்கொண்ட ‘வேட்டை மன்னன்’ படம் குறித்து சிம்பு வாய் திறக்காமலே உள்ளார். இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடிக்கிறார். புதுமுக இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.

இந்நிலையில், சிம்பு பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்நிலையில், பொறுத்திருந்த பார்த்த நெல்சன் தன்னுடைய அடுத்தப்படத்துக்கு தயாராகிவிட்டார். ஹாரர் படத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்ட இவர் அடுத்த படத்தை இயக்க ரெடியாக வருகிறார். விரைவில் நெல்சன் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

குழந்தைகள் உலகம்.....தொடர் பதிவு




இன்று குழந்தைகள் ..அந்த வயதில் நாம் இருந்ததைவிட புத்திசாலியாகத்தான் இருக்கிறார்கள்.அவர்களை வழி நடத்திச் செல்ல பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியவைகளே அதிகம்.ஆகவே இத் தொடர் பதிவில் பெற்றோர்கள் பற்றியே எழுதியுள்ளேன்.

மழலையர் உலகம்.....

ஆஹா..சூது..வாது இல்லாத உலகம்...மழலைச்சொல்..இசையைப்போல மனதை மயக்கக்கூடியது...அதனால் தான் வள்ளுவனும்

குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
                       -   என்றான்......

குழந்தைகள் மனம் நாம் சொல்வதை ' பளீச் ' என பிடித்துக் கொள்ளும்...பசுமரத்தாணிப்போல ...
அதனால் தான் பெரியவர்கள் குழந்தைகளிடம் பார்த்து பேசவேண்டும்.

குழந்தையிடம் 'பொய் பேசக்கூடாது' என்று அறிவுரை சொல்லிவிட்டு ...நாம் வீட்டிலிருந்தபடியே நம்மைத் தேடி வருபவரிடம் ' இல்லை' என்று சொல்லுமாறு குழந்தையைப் பணித்தால்...அந்தக் குழந்தைக்கு நம்மிடம் இருக்கும் மரியாதையும் போகும்..அதுவும் பொய் சொல்ல ஆரம்பிக்கும்.

தனியார் சேனல் ஒன்றில் சூப்பர் சிங்கர் போட்டிக்கு வரும் குழந்தைகளில் எத்தனைப் பேர் உண்மையில் மனமுவந்து வருகிறார்கள்.பெற்றோர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வருகிறார்கள்...அதற்கு குழந்தைகளை எவ்வளவு பாடுபடுத்துகிறார்கள் என்பதை ..அக்குழந்தை தேர்வு ஆகவில்லையெனில் கண்டிக்கும் பெற்றோரையும் காணமுடிகிறது.

ஆனால் அதே சமயம்..என்னமாய் சுருதி பிசகாமல் பாடுகின்றனர் அவர்கள்...நம்மால் முடியாததை அவர்கள் சாதித்தை ஒவ்வொரு பெற்றோர் முகமும் காட்டியது.

குழந்தைகள் திறமை எதில் உள்ளதோ அதில் ஈடுபடுத்தவேண்டும்.அதை விடுத்து நாம் விரும்பும் துறையில் அவைகளை திசை திருப்பக்கூடாது.

குழந்தையின் மீது பெற்றோர் முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.உங்கள் குழந்தை உங்களுக்கு உயிர் என அக்குழந்தை உணருமாறு நடந்து கொள்ளவேண்டும்.

குழந்தையின் சாதனைகளை,திறமைகளை உடனுக்குடன் பாராட்டவேண்டும்.

சின்ன சின்ன தவறுகள் குற்றமல்ல என்று அவர்களுக்கு உணர்த்தி திருத்தவேண்டும்.

குழந்தைகளின் ரசனைகள் ஆச்சிரியமானவை.அவர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே தங்களால் எது முடியும் எது முடியாது என புரிந்து கொள்கிறார்கள்.

அவர்களின் திறனை வளர்க்க வாய்ப்புகளை பெற்றோர் ஏற்படுத்தித் தரவேண்டும்.

அவர்கள் பின்னால் என்றும் நின்று பொறுமையுடன் இருந்து அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

அவர்கள் வேலையை அவர்களே செய்து கொள்ளும் திறனை பெற்றோர்கள் அவர்களிடம் ஏற்படுத்தவேண்டும்.

இதைச்செய்...உனக்கு அதை வாங்கித்தருகிறேன் என்றெல்லாம் சொல்லி வளர்க்காதீர்கள்...இப்பழக்கம்தான் பின்னாளில் ஒரு காரியத்தைச் செய்து முடிக்க ஆதாயம் உள்ளதா என்று அவர்களை நினைக்க வைக்கிறது.

இன்றைய குழந்தைகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக பரவலாக ஒரு செய்தி உள்ளது.அவர்களிடம் பேசி அதை மாற்ற வேண்டியது பெற்றோர் கடமை.
ஆதரவாக பேசி அவர்கள் மன அழுத்தத்தை போக்குவதோடு அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

எப்போதும் குழந்தைகளை குறை சொல்லிக்கொண்டே இருக்கக்கூடாது...குழந்தை செய்யும் செயலை பாராட்டுங்கள்.இதனால் தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை அவர்களிடம் அகலும்.

நம் குழந்தையை...அவையில் முந்திருப்பச் செய்ய வேண்டியது பெற்றோர் கடமை.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

அப்படி தந்தை செய்தால் மகனும்(மகளும்)

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்

என்பதற்கேற்ப நடப்பார்கள்.

அப்போதுதான் அவனை(ளை)ப் பெற்ற தாயும்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோர் எனக்கேட்ட தாய்

என்பதற்கேற்ப மகிழ்ச்சியடைவாள்.

ஒரு ஜோக்:

குழந்தை: (வீட்டிற்கு வரும் விருந்தினரைப்பார்த்து) அம்மா..
          நேற்று இந்த மாமாவுக்கு இரட்டை நாக்கு என்று
           சொன்னே'''ஆனா ஒரு நாக்குத்தானே இருக்கு....
(மேற் சொன்ன துணுக்கில் தவறு யாருடையது?..)

அணைப்பு

அலுவலகத்திலிருந்து
அம்மா வருவதை
எதிர்பார்த்த குழந்தை..
அலுப்பாய் வந்த
அம்மாவிடம் திட்டும்,
ஆத்திரத்துடன் வந்த
அப்பாவிடம்
அடியும் வாங்கி
அழுதபடியே - பாசத்துடன்
அணைத்தது..தன்
இளவரசி சிண்ட்ரெல்லாவை...

ஆச்சரியப்படுத்தும் ஆக்ரா கோட்டை - சுற்றுலாத்தலங்கள்!

ஆச்சரியப்படுத்தும் ஆக்ரா கோட்டை

ஆச்சரியப்படுத்தும் ஆக்ரா கோட்டை

"பளிங்கினால் ஒரு மாளிகை...பவளத்தால் மணிமண்டபம், உயரத்தில் ஒரு கோபுரம்...உன்னை அழைக்குது வா..." என்ற பாடலை முணுமுணுப்-பவரா நீங்கள்? அப்படியென்றால் நீங்கள் நின்று பாடவேண்டிய சரியான இடம் ஆக்ரா கோட்டைதான். இது ஒரு அரண்மனை நகரம். இங்கு சுமார் 100ஏக்கர் நிலப்பரப்பில் எழுந்து நிற்கும் கலைப்பொக்கிஷங்கள் வேறெங்கும் காணக்கிடைக்காதவை.

வரலாற்றின் வளமான பக்கங்கள்பல மொகலாய மன்னர்களின் வசந்தமான வாழ்க்கையால் நிரப்பப்பட்டவை. 

அவர்களது வாழ்க்கைக்கும், அப்போது நடந்த பல ஆச்சரியங்களுக்கும் சான்றாக திகழ்ந்து கொண்டிருக்கிறது இந்தக்கோட்டை. யமுனை ஆற்றின் கரையோரத்தில் தாஜ்மகாலில் இருந்து சுமார் இரண்டரை கி.மீ தொலைவில் அமைந்துள்ள இது, ஆக்ராவின் செங்கோட்டை, லால் கிலா, போர்ட் ரூய்ஜ் என்றும் அழைக்கப்படுகிறது. அப்போது நாட்டின் மிகப்-பெரிய கஜானா, நாணயசாலையை இந்தக் கோட்டை கொண்டிருந்தது. பாபர், ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான், அவுரங்கசீப் ஆகியோர் இங்குதான் வசித்துள்ளனர்.

முதலில் ராஜபுதனத்து சௌகான்கள் வசம் கோட்டை இருந்துள்ளது.  அப்போது இந்த இடம் பஸல்கார், படல்கார் (badalgarh) என்றழைக்-கப்பட்டுள்ளது.  டெல்லியில் இருந்து ஆக்ராவுக்கு தலைநகரை மாற்றி இங்கு வாழ்ந்த முதல் டெல்லிசுல்தான் சிக்கந்தர் லோடி (1487-1517). இதனால் இது நாட்டின் இரண்டாவது தலைநகராகக் கருதப்பட்டுள்ளது.

சிக்கந்தர் லோடிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவரது மகன் இப்ராகிம் லோடி சுமார் 9ஆண்டுகள், அதாவது 1526ல் பானிபட் போரில் கொல்லப்படும் வரை இங்குதான் வாழ்ந்துள்ளார். இவரது காலத்தில்தான் இங்கு புதிய அரண்மனைகளும், மசூதிகளும், கிணறுகளும் வெட்டப்பட்டுள்ளன.

 இந்தநிலையில், பானிபட் போரில் வெற்றிபெற்ற மொகலாயர்கள் இந்த கோட்டையையும் கைப்பற்றினர். இங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த பெரும் செல்வங்கள் அவர்கள் வசமானது. இதில் பிரபலமான கோஹினூர் வைரமும் அடங்கும்.

மொகலாயர் வசம் வந்த பிறகு கோட்டை சீரமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான சுற்றுச்சுவரை பாபர் எழுப்பினார். பாபரின் மகன் ஹுமாயூன் 1530ம் ஆண்டு மன்னராக முடிசூட்டப்பட்டார். பிள்ளைப்பருவத்தில் தண்ணீரில் விழுந்த ஹுமாயூனை, நீர்சுமக்கும் தொழிலாளியான நஜாம் என்பவர் காப்பாற்றியுள்ளார். இளவரசரின் உயிரைக் காப்பாற்றிய நஜாம், அரைநாள் மன்னராக ஆக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளார். அந்தச் சம்பவம் நடந்ததும் இங்குதான்.

1558க்கு பிறகு ஆக்ராவுக்கு வந்த அக்பர் இந்தக் கோட்டையை புனரமைக்க உத்தரவிட்டுள்ளார். தினமும் சுமார் 4ஆயிரம் கட்டிடக்கலைஞர்கள் பணியாற்றி 8ஆண்டுகளில் (1565-1573) புதிய கோட்டையை கட்டி முடித்துள்ளனர். மண்டபங்கள், மசூதிகள், மாடமாளிகைகள் என அட்டகாசப்படுத்தப்பட்டது அக்பர் காலத்தில்தான். அக்பரின் முக்கிய அமைச்சரும், அக்பர்நாமாவை எழுதியவருமான அபுல்பஸல் இந்தக்கோட்டைக்குள் 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டதாக குறிப்பெழுதியிருக்கிறார்.

அன்றைய கட்டடங்கள் இப்போது இல்லை. அக்பர் கட்டியவற்றில் பல கட்டிடங்களை பளிங்கு மாளிகைகள் அமைப்பதற்காக ஷாஜகான் அகற்றியுள்ளார். ஆங்கிலேயர் வசம் கோட்டை வந்த பிறகும் சில கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளது.

ரசனைமிக்க ஷாஜகான் காலத்தில்தான் இங்கு பளபள பளிங்கு கட்டிடங்கள் பல எழுப்பப்பட்டுள்ளன. இவற்றில் மோத்தி மஸ்ஜித், நஜினா மஸ்ஜித், மினா மஸ்ஜித் போன்ற மசூதிகள் குறிப்பிடத்தக்கவை. அதே நேரத்தில் ஷாஜகானை அவரது மகன் அவுரங்கசீப் சிறைவைத்த இடமும் இந்த கோட்டைதான். எட்டு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்த ஷாஜகான் மரணமடைந்த பிறகு அவரது உடல் அருகில் உள்ள தாஜ்மகாலுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஷாஜகானுக்குப் பிறகு கோட்டை களையிழந்தது. இப்படியாக பல வரலாறுகளில் வலம் வந்து கொண்டிருந்த கோட்டை, 1803ம் ஆண்டில் ஆங்கிலேயர் வசம் வந்தது.
 
ஆக்ரா கோட்டைக்குள் திராட்சைத் தோட்டம் என்றழைக்கப்படும் ஆங்குரி பாக், பொதுமக்களிடம் குறைகள் கேட்கும் திவான்-இ-ஆம் மண்டபம், பிறநாட்டு மன்னர்கள் மற்றும் பிரபலங்களை வரவேற்கும் திவான்-இ-காஸ் மண்டபம், மாட மாளிகையான கோல்டன் பெவிலியன்ஸ், பளபள பளிங்கு மாளிகைகளான ஜஹாங்கிர் மஹால், காஸ் மஹால், மச்சி பவன், முஸம்மான் பர்ஜ், மினா மஸ்ஜித், பியர்ல் மசூதி, நஜினா மஸ்ஜித், பெண்கள் மட்டும் ஷாப்பிங் செல்வதற்காக கட்டப்பட்ட செனானா மினா பஜார், அரசவைக் கலைஞர்கள் இசைநிகழ்ச்சி நடத்தும் நவ்பத் கானா, மன்னரின் அந்தப்புரமான ரங்மஹால், ஷாஜகானி மஹால், காலத்தால் அழிக்க முடியாத கண்ணாடி வேலைப்பாடுகள் நிறைந்த அரச ஒப்பனைக்கூடமான ஸீஸ் மகால் போன்றவை இன்றளவும் கலைப்பொக்கிஷங்களாக காட்சி-யளித்துக் கொண்டிருக்கின்றன.

கோட்டைக்குள் செல்ல கட்டணம் உண்டு. இந்திய குடிமக்களுக்கும் SAARC, BIMSTEC அமைப்பின் உறுப்புநாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கும் நுழைவுக்கட்டணம் நபருக்கு 10ரூபாய்தான். பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஐந்து அமெரிக்க டாலர் அல்லது ரூபாய் 250 கட்டணமாகும்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஆக்ரா கோட்டை, டெல்லியில் இருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ளது. ஆக்ராவில் விமான நிலையமும்,  ரயில்நிலையமும் அமைந்துள்ளன. யுனெஸ்கோவின் பாராம்பரியச் சின்னங்கள் பட்டியலில் ஆக்ரா கோட்டை 1983ல் இடம் பெற்றது.

இது நம்ம தலைவர் பத்த வெச்ச ராக்கெட்!

சரக்கு உள்ளே போயிட்டா, தலைவர் பண்ற
 அழிச்சாட்டியம் தாங்க முடியல…
-
என்ன பண்றார்?
-
பட்டாசு கடையில போய்ஊறுகா வெடி
 இருக்கான்னு கேட்குறார்..!
-
——————————————————————–
-
இது நம்ம தலைவர் பத்த வெச்ச ராக்கெட்
 வெடின்னு எப்படிச் சொல்றே?
-
கரெக்டா புறம்போக்கு நிலத்துல போய்
 விழுந்திருக்கே…!
-
——————————————————
-
என்னதான் பட்டாசு கடைக்காரர் தேர்தல்ல நின்னாலும்
 அவருக்கும் வோட்டுதான் விழும், வேட்டு விழாது..!

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top