.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 12 October 2013

பதைக்க வைத்த பாலைவன மலர்!


1965ம் ஆண்டு சோமாலியாவில் உள்ள ஒரு பாலைவன கிராமத்தில் பிறந்தவர் வாரிஸ் டைரி. கொளுத்தும் வெயிலில் ஆடுகளை மேய்ப்பது, உணவு தயாரிப்பது, வீட்டைப் பராமரிப்பது என்று ஓர் ஆப்பிரிக்க பெண்ணின் கடின உழைப்பு வாரிஸிடமும் இருந்தது. 


துறுதுறுப்பாகவும் சுறுசுறுப்பாகவும் பறந்து திரிந்த பட்டாம் பூச்சி, அந்தக் கொடூரத்தின் உச்சத்தைச் சந்தித்த போது வயது 5.ஆரம்பத்தில் நல்ல உணவு கொடுக்கப்பட்டு, அன்பாகப் பேசி அழைத்துச் செல்லப்பட்டார் வாரிஸ். 



அதிகாலை மருத்துவச்சியின் பிளேடால் அவரது பிறப்புறுப்பு வெட்டி எடுக்கப்பட்டு, முள்களால் தைக்கப்பட்டது. உடல் முழுவதும் ரத்தம்… வலியின் உச்சம்… அந்தச் சின்னஞ்சிறிய பாலைவன மலர் வதங்கிப் போனது.


                           12- lady deset wariyors

 


மதத்தின் பெயரால் ஆப்பிரிக்கப் பெண்களின் கற்பைக் காப்பதற்காக, இந்தக் கொடிய செயல் பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்டு வருகிறது. ஆப்பிரிக்கா உள்பட உலகின் 28 நாடுகளில் பெண்களுக்கு இந்தக் கொடூரம் இன்னும் நடக்கிறது. பெருகும் குருதி, நோய்த்தொற்று போன்ற காரணங்களால் நான்கில் இரு பெண்கள் மரணத்தைச் சந்தித்துவிடுவார்கள்.



தைக்கப்பட்ட பிறப்புறுப்பு திருமணத்தின் போது வெட்டிவிடப்படும் (இப்படிச் செய்யப்பட்டவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் தாம்பத்ய இன்பம் கிடைக்காது என்பது இன்னொரு கொடூரம்). அதுவரையிலும், தைக்கப்பட்ட பிறப்புறுப்பின் மிகச்சிறு துளை வழியே சிறுநீர் கழிப்பதும் மாதவிடாய் ரத்தம் வெளியேறுவதும் கொடுமையாக இருக்கும். அம்மாவின் அரவணைப்பில் தைரியம் மிக்க வாரிஸ் தேறினார். 



வழக்கமான வேலைகளைச் செய்து வந்தார். 13 வயதில் திடீரென ஒருநாள் வாரிஸின் அப்பா, தன்னை விட வயதில் பெரிய முதியவரை அழைத்து வந்து, ‘வாரிஸின் கணவன்’ என்றார். ‘திருமணம் வேண்டாம்’ என்று வாரிஸ் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை.



ஒரு நாள் இரவு உணவு, தண்ணீர், செருப்பு எதுவுமின்றி, அம்மாவின் சம்மதத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார் வாரிஸ். பகல் முழுவதும் கொடுமையான பாலைவன வெயில். இரவு கொடுங்குளிர். வெற்றுக்காலில் ஓடிக்கொண்டே இருந்தார் வாரிஸ். கொஞ்சம் தாமதித்தாலும் அப்பாவால் பிடித்துச் செல்லப்படுவோம் என்ற உணர்வு, ஓட்டத்தின் வேகத்தை அதிகரித்தது. 



களைப்பில் ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்கும்போது, மூச்சு விடும் சத்தம் கேட்டு விழித்தார் வாரிஸ். அருகில் ஒரு சிங்கம். இனி பிழைக்க வழியில்லை. சிங்கத்துக்கு இரையாகத் தயாரானார் வாரிஸ். அருகில் வந்த சிங்கம், அவரை முகர்ந்து பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டது.



மீண்டும் ஓட்டம்… பல நாள்கள் பயணம் செய்து, ஏறக்குறைய 480 கிலோமீட்டர் கடந்து வந்திருந்தார் வாரிஸ். அது அவருடைய அக்கா மற்றும் சில உறவினர்கள் வசிக்கும் மொஹதீஸு என்ற இடம். அக்கா வீட்டில் வீட்டு வேலைகள் முழுவதையும் செய்தார். குழந்தையைப் பார்த்துக்கொண்டார். அக்காவோ வாரிஸை தங்கையாக நினைக்காமல் வேலைக்காரியாகவே நடத்தினார். அங்கிருந்து வெளியேறி, சித்தப்பா வீட்டில் தஞ்சம் புகுந்தார். அங்கும் வீட்டு வேலைகளைச் செய்தார்.



அப்போது லண்டனில் உள்ள சோமாலியா தூதரகத்தில் வேலை செய்த சித்தப்பா, வீட்டுவேலை செய்ய ஆள் தேடி வந்தார். தானே வருவதாக விருப்பத்துடன் கூறினார் வாரிஸ். உடனே பாஸ்போர்ட் பெறப்பட்டு, லண்டன் வந்து சேர்ந்தார். அங்கும் சமையல் வேலை, வீட்டுவேலைகளைச் செய்துகொண்டிருந்தார்.



அந்த வீட்டுக் குழந்தையைப் பள்ளியில் விடும்போது, அங்கு ஒரு குழந்தையின் அப்பா, வாரிஸைப் பார்த்து அடிக்கடி புன்னகை செய்வார். ஒருநாள் தன்னுடைய பிசினஸ் கார்டை கொடுத்தார். ஆங்கிலம் அறியாத வாரிஸ் அதை வாங்கி வைத்துக்கொண்டார்.




சோமாலியாவில் உள்நாட்டுக் கலவரம் வெடிக்க, சித்தப்பாவை சோமாலி யாவுக்கு வரச் சொல்லிவிட்டனர். மீண்டும் சோமாலியா செல்வதில் வாரிஸுக்கு விருப்பம் இல்லை. தன் பாஸ்போர்ட் தொலைந்துவிட்டது என்று சொல்லிவிட்டார். வேறு வழியில்லாமல் சித்தப்பா குடும்பம் மட்டும் கிளம்பிச் சென்றது.



வாரிஸின் தோழி ஒருவர் அடைக்கலம் கொடுத்தார். அவர் மூலம் பிசினஸ் கார்ட் கொடுத்தவரிடம் தொடர்புகொண்டார். அவர் டெரன்ஸ் டொனொவன். புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர். வாரிஸை புகைப்படம் எடுக்க விரும்பினார். தனக்கும் வாழ பணம் வேண்டும்… அம்மாவுக்கும் பணம் அனுப்ப வேண்டும் என்று நினைத்த வாரிஸ் மாடலிங் செய்ய சம்மதம் தெரிவித்தார்.



அவருடைய அழகான புகைப்படங்கள் பலரின் பாராட்டுகளைப் பெற்றன. பணம் சேர்ந்தது. மருத்துவரிடம் சென்று, தைக்கப்பட்ட பிறப்புறுப்பை பிரித்தார். பல ஆண்டுகள் அனுபவித்து வந்த சித்திரவதையில் இருந்து மீண்டார். விரைவில் பைரலி காலண்டரின் முகப்பை வாரிஸின் படம் அலங்கரித்தது. குறுகிய காலத்திலேயே பிரபல மாடலாக வலம் வந்தார். 



உலகின் மிக முன்னணி நிறுவனங்கள் பலவும் போட்டி போட்டுக்கொண்டு அவரை பிராண்ட் அம்பாசிடராக கொண்டாடின. அதைத் தொடர்ந்து ஜேம்ஸ் பாண்ட் படத்திலும் (The Living Daylights) நடித்தார். இவரது வாழ்க்கையே 2009ல் ‘Desert Flower’ என்ற பெயரில் ஜெர்மன் திரைப்படமாக வெளியானது.



உலகப் புகழ்பெற்றவராக ஆகிவிட்டாலும் வாரிஸின் மனம் அமைதியடையவில்லை. தான் அடைந்த சித்திரவதையை இனி எந்தப் பெண்ணும் அனுபவிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் ‘டெசர்ட் ஃப்ளவர் ஃபவுண்டேஷன்’ அமைப்பை உருவாக்கினார். பெண்களின் பிறப்புறுப்பு சிதைக்கப்படுவதை எதிர்ப்பதும் தடுப்பதும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். அதோடு, சோமாலியா நாட்டின் குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவம் போன்றவற்றையும் அளித்து வருகிறது இந்த அமைப்பு.



1997ல் மாடலிங் செய்வதை நிறுத்திவிட்டு, முழு நேரத்தையும் சமூக சேவையில் செலவிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவராக நியமிக்கப்பட்டார் வாரிஸ். 2003ம் ஆண்டு வரை இந்தப் பணியைத் திறமையாகச் செய்து முடித்தார்.



 1998ல் வாரிஸ் தன் வாழ்க்கையை ‘டெசர்ட் ஃப்ளவர்’ என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். ஓர் ஆப்பிரிக்கப் பெண்ணின் வலி மிகுந்த வாழ்க்கையையும் ஓர் ஆப்பிரிக்கப் பெண்ணின் வெற்றியையும் வெளிப்படுத்திய இந்தப் புத்தகம், உலகம் முழுவதும் 1 கோடியே 10 லட்சம் பிரதிகளை விற்று சாதனை படைத்திருக்கிறது.



‘டெசர்ட் சில்ட்ரன்’, ‘லெட்டர் டூ மை மதர்’ உள்பட இன்னும் 4 முக்கிய நூல்களையும் எழுதியிருக்கிறார். ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி உள்பட பல நாடுகளும் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகளும் வாரிஸுக்கு விருதுகளை வழங்கியிருக்கின்றன. மாடல், நடிகை, பெண்ணுரிமைப் போராளி என்று தானும் உயர்ந்து, சமூகத்தையும் உயர்த்திய இந்த வாரிஸ் டைரி பாலைவன மலர் அல்ல… பாலைவனச் சோலை!

பூசணிக்காய் நம்பிக்கை உயிர்!






 நாளை ஆயுத பூஜை. எது நடக்கிறதோ இல்லையோ.. திருஷ்டி கழிக்க பூசணி சுற்றி உடைக்கும் நிகழ்ச்சி எல்லா இடங்களிலும் நடக்க போகிறது. அக்டோபர் மாதம் மழை காலத்தில் பெரும்பாலும் சாலைகளும் தெருக்களும் சகதியாக மாறிவிடும். இந்த நேரத்தில் பூசணிக்காய் சிதறல்கள் வாகனங்களில் நசுங்கி சாலைகளை கொழ கொழ என்று மாற்றி விடுகின்றன. வழுக்கி விழுவதற்கு இதை விட வேறு என்ன வேண்டும். 


பூசணி உடைப்பது அவரவர் நம்பிக்கையாக இருப்பதில் தவறில்லை. ஆனால், மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதில் கவனம் தேவை. தெருக்கள், சாலைகளில் உடைக்கப்படும் பூசணிக்காயால் என்னென்ன நடந்திருக்கிறது என்பதை சொல்ல தேவையில்லை. பைக்கில் செல்பவர்கள் எத்தனை பேர் பூசணிக்காயால் சறுக்கி விழுந்துள்ளனர். பலர் உயிரை துறந்துள்ளனர் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். 


சுற்றுப்புறத்தை நாமே கெடுத்துவிட்டு, துப்புரவு ஊழியர்கள் அப்புறப்படுத்தவில்லை என்று குற்றம் சொல்வது எந்த வகையில் நியாயம்.பூசணிக்காயால் பைக்கில் வழுக்கி விழுபவரின் உயிர் போகும் போது, மெதுவாக சென்றிருந்தால் நடந்திருக்காது. பார்த்து சென்றிருந்தால் நடந்திருக்காது, குடித்துவிட்டு ஓட்டாமல் இருந்திருந்தால் நடந்திருக்காது.  ஹெல்மெட் அணிந்திருந்தால் நடந்திருக்காது.. என்று பல காதுகளை காரணம் சொல்லி ஆறுதல் அடைவதே வழக்கமாகி விட்டது. 



ஆனால், சுற்றுப்புற கேடு, விபத்து என்று பல விஷயங்களுக்கு மூல காரணம் பூசணிக்காய் சிதறல்கள் என்பதை மறந்து விடுகிறோம்.பூசணிக்காய் இறப்புகளை தடுக்க தொடர்ந்து பிரசாரம் நடத்தப்படுகிறது. எனினும் விழிப்புணர்வுதான் முழுமையாக ஏற்படவில்லை. பூசணி உடைக்கலாம். உடைத்த பின் அதன் சிதறல்களை ஓரமாக தள்ளி வைத்தால் நடப்பவர்கள், வாகனங்களில் செல்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் கிடைக்கும். 



இதை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் சிந்தித்தால்தான் விபத்துகளை தடுக்க முடியும். மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள யாருக்கும் உரிமையில்லை. அப்படி நடந்தால் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க சட்டமும் இருக்கிறது. அந்த அளவுக்கு யோசிக்காவிட்டாலும், குறைந்தபட்சம் நம் வீட்டு முன்போ, கடை முன்போ உடைக்கப்படும் பூசணிக்காயே பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்தாலே போதும். திருஷ்டி கழித்த பின் அதன் சிதறல்களை ஓரமாக பெருக்கி தள்ளும் எண்ணம் வரும். அப்போதுதான் உண்மையாகவே திருஷ்டி கழியும்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் வரலாறு !



தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களில் இதுவும் ஒன்று. இன்றும், மன்னராட்சி இருந்ததற்கான சுவடுகளோடு காட்சியளித்துக் கொண்டிருக்கும் புதுக்கோட்டை, தொல்லியல் மற்றும்

வரலாற்று ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கொடும்பாளூர், நார்த்தமாலை, குடுமியான் மலை, குன்னாண்டனார் கோயில், சித்தன்ன வாசல், திருமயம், ஆவுடையார் கோயில் போன்ற

தொன்மைச் சிறப்பு வாய்ந்த இடங்களைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டம், சங்கப் பாடலிலும் இடம் பெற்றுள்ளது. ஜனவரி 14, 1974ல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுகை

(புதுக்கோட்டையின் சுருக்கமான பெயர்) மாவட்டம் உருவாக்கப்பட்டது.

ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து

வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.

இந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச்

சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தின் பிற்பகுதியான இரும்பு காலத்தில் நிலவிய பெருங்கற்காலத்தில் உபயோகத்திலிருந்த செம்பு, இரும்பு ஆயுதங்கள் மட்பாண்டங்கள், மணிகள்,

அணிகலன்கள் இறந்தோரைப் புதைத்த புதைக்குழிகள், இறந்தோரின் நினைவுச் சின்னங்களாக பயன்படுத்தப்பட்ட கல்லறைகள் புதைகுழித் தாழிகள் ஆகியன நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இரும்புக்கால - பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் கி.மு 600 வரை நீளும் என்று கருதப்படுகிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள்

சான்று பகிர்கின்றன. குறிப்பாக இறந்தோரை தாழியிட்டு புதைக்கும் முறை சங்க காலத்தில் பழக்கத்திலிருந்த செய்தியை புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை போன்ற நூல்களிலிருந்து அறிகிறோம்.

இது முதுமக்கள் தாழி, ஈமாத்தாழி, முதுமக்கள் சாடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தோர் நினைவாக பள்ளிப்படை அமைத்த செய்தியும் காணப்படுகின்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள்,

கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலே கூறியவற்றிலிருந்து புதுக்கோட்டைப் பகுதியில் வரலாறிற்கு முற்பட்ட காலங்களான பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம் போன்ற காலக்கட்டங்களில் நாகரீகம் படிப்படியாக

உயர்ந்து அவ்வப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் பரவியிருந்த நாகரீக வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தது. இரும்புக் காலத்திற்கு பிறகு நாகரீகம் துரிதமாக வளம் பெற்று கிறிஸ்து

சகாப்தத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூற்றாண்டுகளில் செம்மையான வரலாறு துவங்குகிறது. கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டு சேர சோழ பாண்டியரைப் பற்றிக்

குறிப்பிடுகிறது. அதுவே தென்னிந்திய வரலாற்றுப் பாதையில் ஒரு முக்கிய காலக்கட்டமாகும். அதனைத் தொடர்ந்து பாண்டி நாட்டில் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தொடக்க

காலத்தின் அறுதியான சான்றாகத் திகழ்கின்றன.


வாழும் வரலாற்றுக்களம் மாமல்லபுரம் - சுற்றுலாத்தலங்கள்!

     வாழும் வரலாற்றுக்களம் மாமல்லபுரம்

வாழும் வரலாற்றுக்களம் மாமல்லபுரம்
சென்னை அருகே உள்ள வாழும் வரலாற்றுக்களம் மாமல்லபுரம். கல்லிலே கலைவண்ணம் கண்டபுரம். பல்லவர்கால துறைமுக நகரம். இங்குள்ள புடைப்புச்சிற்பங்களும், கோவில்களும் உலகப்புகழ் பெற்றவை. தெய்வங்களின் உருவங்கள், புராணக்கதை காட்சிகள், சமுதாய நிகழ்வுகள் இங்கு சிற்பங்களாக சிலிர்த்துக் கொண்டிருக்கின்றன.
கடற்கரை கோவில்:
மாமல்லபுரம் என்றவுடனேயே அலைகள் தொட்டுச் செல்லும் கடற்கரை கோவில்தான் முதலில் நினைவுக்கு வரும். இது இரண்டு சிவன்கோவில்களை உள்ளடக்கியதாகும். இவை கி.பி. 700- 728க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டவை. ஆனந்தமும், ஆன்மீகமும் தழுவும் இடம் இந்தக் கடற்கரைக் கோவில்.
பஞ்ச ரதம்:
பஞ்ச ரதம் என்றழைக்கப்படும் ஐந்து ரதங்கள் கி.பி. 7ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை. முதலாம் மகேந்திரவர்மன், அவரது மகன் முதலாம் நரசிம்மவர்மன் காலத்தைச் சேர்ந்தவை. நிஜத்தேர் போன்று காணப்படும் கோவில் வடிவிலான இந்த ரதங்கள் ஒவ்வொன்றும் ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்டவை. இவற்றுக்கு தர்மராஜ ரதம், பீம ரதம், திரௌபதி ரதம், நகுல- சகாதேவ ரதம் என பஞ்ச பாண்டவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தர்மராஜ ரதத்தில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம், அழகும் ஆச்சரியமும் கலந்தது. கோவில்களின் மாதிரிக்காக பஞ்ச ரதங்கள் அமைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அர்ச்சுனன் தபசு:
சுமார் 30மீட்டர் உயரம், சுமார் 60மீட்டர் அகலம் கொண்ட, சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே அர்ச்சுனன் தபசு என்றழைக்கப்-படுகிறது. வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் எல பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஏதோ ஒரு புராணக்கதை அடிப்படையில் இவை உருவாக்கப்பட்டிக்கலாம் என தெரிகிறது. ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே சூலாயுதம் ஏந்திய சிவன் பூதகணங்கள் சூழநின்று வரம் கொடுப்பதாக சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இது பாசுபத அஸ்திரம் பெறுவதற்காக சிவனை நோக்கி அர்ச்சுனன் தவமிருந்ததை குறிப்பதால் அர்ச்சுனன் தபசு என்றழைக்கப்படுவதாக ஒரு கருத்தும் உண்டு.

மகிஷாசுரமர்த்தினி சிற்பம்:
கலங்கரை விளக்கத்துக்கு செல்லும் வழியில் குன்றின் மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. இங்குள்ள மகிஷாசுரமர்த்தினி சிற்பம் சிறப்பு வாய்ந்தது. மகிஷாசுரமர்த்தினி என்றழைக்கப்படும் சக்தி, மகிஷாசுரனை வதம் செய்ய பத்து கைகளுடன் தோன்றும் காட்சி இங்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாக காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபம்.
இவை தவிர வராகமூர்த்தி சிற்பம், கோவர்த்தன மலை சிற்பம் போன்றவையும் நிறைய ஆச்சரியங்கள் கொண்டவை. இப்படி சிறப்பு வாய்ந்த மகாபலிபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னங்களாக 1984ல் யுனெஸ்கோ அறிவித்தது.
எப்படிப் போகலாம்?
சென்னையில் இருந்து சுமார் 60கி.மீ தொலைவிலும், பாண்டிச்சேரியில் இருந்து 130 கி.மீ தொலைவிலும், திருச்சியில் இருந்து 250 கி.மீ தொலைவிலும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. ரயிலில் வருவோர் செங்கல்பட்டில் இறங்கி விட்டால் அங்கிருந்து 30கி.மீ தூர பயணம்தான். சென்னை, திருச்சியில் சர்வதேச விமானநிலையம் உள்ளது. டிசம்பர்- ஜனவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியவிழா ஒன்றும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுகிறது. 

ஒற்றுமை.... (நீதிக்கதை)!



 
நாலு மாடுகள் மிகவும் நண்பர்களாய் இருந்தன.


அவை தினமும் காட்டுப்பகுதிக்குச் சென்று புல் மேய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன.


நன்கு கொழுத்துக் காணப்பட்ட அவற்றை அடித்து உண்ண சிங்கம் ஒன்று விரும்பியது.


அதற்காக அது ஒரு முறை முயன்றபோது ...நாலு மாடுகளும் சேர்ந்து சிங்கத்தைத் தாக்கி...அதற்கு காயத்தை
ஏற்படுத்த ....தப்பினால் போதும் என அவைகளிடமிருந்து சிங்கம் ஓடியது.


பின் ஒரு நாள்..தனக்கு ஆலோசனைகள் கூறும் நரியைப் பார்த்து சிங்கம் அந்த மாடுகள் பற்றிக் கூறியது.


அதற்கு நரி...'சிங்க ராஜாவே....அவைகள் ஒற்றுமையாய் இருப்பதாலேயே பலமுள்ளதாய் தெரிகிறது. அவற்றை பிரித்தால் ...தனித்தனியாக அவற்றை அடித்து உண்ணலாம்' என்று தெரிவித்ததோடு ...அவற்றை பிரிக்கும் பணியையும் ஏற்றது.


ஒரு நாள் நான்கு மாடுகளில் ஒன்று சற்று தனியாக இருந்தபோது ...நரி அதைப் பார்த்து ' உங்கள் நால்வரில் நீயே பலசாலி...ஆகவே நீ தனித்து புல் மேயப்போனால் உனக்கு அதிக புற்கள் கிடைக்கும் ....மேலும் உன்னுடைய பலமும் அப்போதுதான் மூன்று பேருக்கும் புரியும்' என்றது.


அப்படியே மற்ற மூன்று மாடுகளிடமும் சொன்னது.


நரி சொல்வதை உண்மை என்று நம்பிய மாடுகள்...அடுத்த நாள் தனித்தனியாக புல் மேய தனி இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்தது.


தினமும் ஒன்றாக...அவற்றை சிங்கம் அடித்து உண்டது.


மாடுகள் ஒற்றுமையாய் பிரியாமல் இருந்தால் பலமுள்ளதாக இருந்திருக்கும். பிரிந்ததால் பலமற்றுப் போய் மடிந்தன.


ஒற்றுமையாய் இருந்தால் நம்மால் பல சாதனைகளை சாதிக்கமுடியும்.ஒற்றுமையின்மையால் நாம் செயலற்று போவோம். 
 
 

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top