.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 7 October 2013

ஈஸி எக்ஸ்ட்ரா டிப்ஸ்!


*  காற்றோட்டமில்லாத அறைகளில் அதிக நேரம் இருந்தாலோ அப்படிப்பட்ட வீடுகளில் குடியிருந்தாலோ சிறுநீரகக் கோளாறு வரலாம்.

*  ஊறுகாய், கருவாடு, வடாம் ஆகியவற்றை அடிக்கடியோ அதிகமாகவோ சேர்த்துக்கொள்வது சிறுநீரகத்துக்கு நல்லதல்ல.

*  சிறுநீரகச் செயலிழப்பு இருப்பவர்கள் தண்ணீரை அதிகமாகக் குடிக்கக் கூடாது. மீறினால் நீர்ச்சத்து அதிகமாகி, மூச்சு வாங்குதல், உடல் வீக்கம் போன்றவை நிகழலாம். அதே நேரம் நன்னாரி வேரை இடித்து நீரில் போட்டு அந்த நீரைக் குடிக்கலாம்.

*  தேவையில்லாத பயம், மனத்தளர்ச்சி போன்றவையும் சிறுநீரக சக்தி குறைவதன் அடையாளமே!


அதிகாலை 3 முதல் 5 மணி வரையிலான நேரம் நுரையீரலின் செயல்பாடு உச்சத்தில் இருக்கும் நேரம். ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள் இந்த நேரத்தில் எளிய மூச்சுப் பயிற்சிகளைச் செய்யலாம்.


இனிப்புகள் மற்றும் மைதாவால் செய்யப்பட்ட உணவுப்பொருள்களை ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். மிளகு, பூண்டு முதலானவற்றை அதிகம் சேர்க்கலாம்.


மூச்சுவிட சிரமப்படும்போது நடு மார்பில் கடிகாரச் சுற்றில் இதமாக கட்டை விரலால் அழுத்தி விடும்போது நல்ல பலன் கிடைக்கும்.


தொழிற்சாலைகள் நிறைந்த இடங்களில் வசிப்பவர்கள் திறந்தவெளி இடங்களுக்குச் சென்று அடிக்கடி பிராணாயாமம் போன்ற பயிற்சிகளைச் செய்ய வேண்டியது அவசியம்.


புரோகிராமினை மாற்றுவது எப்படி?



புதிய கம்ப்யூட்டரில் அல்லது விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்த கம்ப்யூட்டரில், நமக்குத் தேவையான புரோகிராமினை, அதன் போல்டரில் உள்ள பைல்களை, அப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்தால், ஏன் அவை இயங்குவதில்லை? எனப் பல வாசகர்கள் தங்கள் கடிதங்களில் கேட்பதுண்டு. ஒரு புரோகிராம், கம்ப்யூட்டர் ஒன்றில் எப்படி தன்னைப் பதித்துக் கொள்கிறது என்பதனை அறிந்தால், இந்த சந்தேகம் நமக்கு வராது. அதனைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.


ஒரு சில புரோகிராம்கள் மட்டும், குறிப்பாக, கேம்ஸ் புரோகிராம்கள், அவை பதியப்பட்டு இயங்கும் போல்டர்களில் இருந்து மொத்தமாக காப்பி செய்து, இன்னொரு கம்ப்யூட்டரில் பேஸ்ட் செய்து, இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. இவற்றை எடுத்துச் செல்லும் வகையிலான புரோகிராம்கள் ("portable apps') எனக் கூறலாம். மற்றவை அப்படி அல்ல. அவற்றை அதன் மூலக் கோப்பினைக் கொண்டு, இன்ஸ்டால் செய்திட வேண்டும். எனவே காப்பி செய்து, எடுத்துச் சென்று, பதிந்து இயக்க முடியாது.


ஏன் இன்ஸ்டால் செய்திட வேண்டும்? புரோகிராம்களை ஏன் புதிய கம்ப்யூட்டரில், அல்லது விண்டோஸ் மறு பதிவு செய்த பின்னர் இன்ஸ்டால் செய்திட வேண்டும்? விண்டோஸ் சிஸ்டத்தில், புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், அது குறிப்பிட்ட சில போல்டர்களில், குறிப்பிட்ட ட்ரைவ்களில் பைல்களைப் பதிக்கும். எடுத்துக்காட்டாக, ஆப்பிள் ஐ ட்யூன்ஸ் புரோகிராமினை, விண்டோஸ் சிஸ்டத்தில் பதிந்தால், அது மாற்றப்படாத நிலையில், C:Program Files (x86)>iTunes என்ற இடத்தில் தான் பதியும். எனவே, இதன் இயக்க பைலை இயக்கி இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது மிக எளிதானதாகும் என்று நாம் நினைக்கலாம். ஆனால், இன்ஸ்டால் செய்திடும் வேலை அவ்வளவு எளிதாக நடைபெறுவதில்லை. இந்த புரோகிராம்களுக்கான டேட்டா, பல இடங்களில் பரவலாகப் பதியப்படுகின்றன. அந்த இடங்களாவன:
 

1. ரிஜிஸ்ட்ரி செட்டிங்க்ஸ் (Registry Settings):


  பெரும்பாலான புரோகிராம்கள், விண்டோஸ் சிஸ்டத்தின் ரெஜிஸ்ட்ரி என அழைக்கப்படும் பைலில் தங்கள் அமைப்பு மற்றும் செயல்பாடு தொடர்பான தகவல்களைப் பதிகின்றன. இந்த தகவல்கள் registry keys (ரெஜிஸ்ட்ரி குறியீடுகள்) என அழைக்கப்படுகின்றன. இவை விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் ஒரே இடத்தில் பதியப்படும் எனவும் எதிர்பார்க்க முடியாது. இவை பலவகைப்படும். புரோகிராம் கட்டமைப்பிற்கான குறியீடுகள் (program settings), காண்டெக்ஸ்ட் மெனுவிற்கான குறியீடுகள், சில பைல்கள் இயக்க மாறா நிலையில், இந்த புரோகிராமினைய் (default program) அமைக்கும் குறியீடுகள் என இவை அமைகின்றன. இவற்றில் ஏதேனும் இல்லை எனில், புரோகிராம் இயங்குவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
 

2. மற்ற புரோகிராம் போல்டர்கள்:  


சில புரோகிராம்கள் தாங்கள் இயங்க, வேறு சில புரோகிராம்களையும் பதிகின்றன. எடுத்துக் காட்டாக, ஐ ட்யூன்ஸ், தான் பதியப்படுகையில், ஆப்பிள் அப்ளிகேஷன் சப்போர்ட் அப்ளிகேஷனையும் (Apple Application Support application) பதிகிறது. இந்த சப்போர்ட் அப்ளிகேஷன் ஏற்கனவே வேறு ஒரு ஆப்பிள் புரோகிராமிற்காகப் பதியப்பட்டிருந்தால், இது பதியப்படாது. இல்லை எனில், பதியப்படும். இந்த புரோகிராமும், மற்ற புரோகிராமிற்கான ரெஜிஸ்ட்ரி செட்டிங்ஸ் மற்றும் பிற குறியீடுகளையும் அமைத்துக் கொள்ளும்.
 

3. விண்டோஸ் சிஸ்டம் கோப்புகள் (Windows System Files): 


சில புரோகிராம்கள், அவற்றிற்கான டி.எல்.எல். கோப்புகளை (DLL files), விண்டோஸ் சிஸ்டம் பைல்கள் வைக்கப் பட்டிருக்கும் டைரக்டரிகளில், அதிக அளவில் பதிந்துவிடும். இவை இல்லாவிட்டால், அந்த புரோகிராம் இயங்காது.
 

4. சிஸ்டம் சர்வீஸ்: 


 பல புரோகிராம்கள், தங்களுக்குத் தேவையான விண்டோஸ் சிஸ்டம் சர்வீஸ் பைல்களையும் பதிந்து கொள்ளும். எடுத்துக் காட்டாக, அடோப் ப்ளாஷ் ப்ளேயர் புரோகிராமினைப் பதிந்தால், அதனை அப்டேட் செய்வதற்கான புரோகிராமினையும் (Adobe Flash Player Update service) அது பதிந்து வைத்துக் கொள்ளும். இது போன்ற சர்வீஸ் புரோகிராம்கள் இல்லை என்றாலும், சில புரோகிராம்கள் இயங்க மறுக்கும்.
 

5. ஹார்ட்வேர் பிணைப்பு (Hardware Locking): 


சில புரோகிராம்கள், தாங்கள் இயங்கத் தொடங்கும் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் பாகங்களைப் புரிந்து கொண்டு, அவற்றுடன் தங்கள் செயல்பாட்டினை இணையாகப் பதிந்து வைத்துக் கொள்ளும். இந்த புரோகிராம் பைல்களைக் காப்பி செய்து, இன்னொரு கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கினால், நிச்சயமாக அவை இயங்கா.
 

6. பயனாளர் டேட்டா போல்டர்கள்: 


தற்போது வரும் நவீன புரோகிராம்கள், தாங்கள் சேவ் செய்திடும் தகவல்களை, அதன் புரோகிராம் போல்டர்களில் பதிந்து வைப்பதில்லை. ரெஜிஸ்ட்ரியில் பதியப்படாத தகவல்களை, யூசர் டேட்டா போல்டர்களில் பதிகின்றன. புரோகிராம் பைல்களைக் காப்பி செய்து பதிகையில், இந்த டேட்டா போல்டர்களும் பதியப்பட வேண்டும். இல்லை எனில், புரோகிராம்கள் இயங்காது.



எங்கெல்லாம், (registry settings, program files, system files, user data folders), ஒரு புரோகிராமின் தகவல்கள் பதியப்படுகின்றன என்று நாம் அறிந்து கொள்ள முடியும் என்பதனால், அவற்றை எல்லாம், நாம் காப்பி செய்து, புதிய கம்ப்யூட்டர்களிலும், அதே போல பதிக்கலாமே என நீங்கள் எண்ணலாம். அவ்வாறே, போல்டர்களை அடையாளம் கண்டு காப்பி செய்திடலாம். ஆனால், அது அவ்வளவு எளிதான வேலை அல்ல. குறிப்பாக, புதிய கம்ப்யூட்டரில், சரியான இடத்தினைக் கண்டறிந்து அல்லது உருவாக்கிப் பதிவது என்பது அவ்வளவு எளிதாகவும் சரியாகவும், துல்லியமாகவும் செய்திட முடியாது. 



சிறிய தவறு அல்லது இடம் மாற்றம் ஏற்பட்டாலும், புரோகிராம் இயங்கவே இயங்காது. இதற்குப் பதிலாக, மூலக் கோப்பினை எடுத்து, புதிய கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்ய கட்டளை கொடுத்துவிட்டு, அடுத்து அடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்திக் கொண்டு, அதே நேரத்தில் எதனையாவது கொறித்துக் கொண்டு இருக்கலாம். புரோகிராமுடன் வரும் இன்ஸ்டாலர் புரோகிராம், உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் திறன் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவற்றை அறிந்து, தானே முடிவெடுத்து, அழகாகப் பதிந்துவிடும்.



Click Here

மாய உலகத்திற்குள் மூழ்கி போன மருத்துவம!


எதுவும் புரியாமல், என்ன நடக்கிறது என்றே தெரியாமல், எதற்காக இவை செய்யப்படுகின்றன என்று கேட்கக் கூட முடியாத நிலைக்கு நோயாளிகளைத் தள்ளும் மாய உலகமாக, மருத்துவ உலகம் மாறி வருகிறது. இதில் எல்லா மருத்துவர்களையும் குறை கூறுவதற்கு இல்லை. ஒரு சிலர் இப்படியும் இருக்கிறார்கள்.


பொதுவாக ஸ்கேன் என்பது இருவகைப்படும். சாதாரண அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன். மற்றொன்று சி.டி. ஸ்கேன் (கம்ப்யூட்டட் டோமோகிராபி ஸ்கேன்) என்பதாகும். இதில் முதல் வகை ஸ்கேனுக்கு குறைந்தது 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், இரண்டாவது வகையான சி.டி. ஸ்கேன் என்பது பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பல ஆயிரங்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


7 - health_CT_SCAN_

 


இதற்கு என்ன காரணம் – சி.டி. ஸ்கேன் எடுக்கும் இயந்திரத்தின் விலை அதிகமோ, இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரம் என்பதாலோ, அதனை பராமரிப்பது கடினம் என்றெல்லாமோ நாம் கருதலாம். ஆனால் உண்மையில், சி.டி. ஸ்கேன்களின் விலை பல ஆயிரங்களைத் தொட்டதற்கு “ஒரு சில மருத்துவர்கள்’ மட்டுமே காரணம்.


ஒரு சி.டி. ஸ்கேன் எடுத்தால், அதற்கு 6 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் அதிகபட்சமாக 4 ஆயிரம் வரை சி.டி. ஸ்கேன் மையத்தால், மருத்துவர்களுக்குக் கமிஷனாக அளிக்கப்படுகிறதாம்! உண்மையிலேயே ஒரு சி.டி. ஸ்கேன் செய்ய வெறும் 1,500 ரூபாய் கூட போதுமாம். ஆனால், சி.டி. ஸ்கேனுக்கு பரிந்துரை செய்யும் மருத்துவர்களுக்கு அளிக்க வேண்டிய கமிஷன் தொகையுடன் சேர்த்துத்தான் கட்டணமாக நோயாளிகளிடம் வசூலிக்கப்படுகிறது.


சி.டி. ஸ்கேன் மையங்களுக்கு கட்டணத் தொகையில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை மட்டுமே செல்கிறது. அதில்தான் மையத்தின் அனைத்துச் செலவுகளையும் நிர்வாகிகள் சமாளிக்க வேண்டும். நோயாளிகளிடம் இருந்து பறிக்கப்படும் கட்டணம், அதனைப் பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்குச் செல்கிறது என்றால்,மருத்துவர்கள், சி.டி. ஸ்கேன் என பரிந்துரைப்பதையே அல்லவா சந்தேகிக்கப்பட நேரிடுகிறது!


இந்த விஷயங்கள் தெரிந்திருந்ததால், நமது நண்பர் ஒருவர், மருத்துவர் பரிந்துரை செய்த ஸ்கேன் மையத்தைத் தவிர்த்துவிட்டு வேறொரு ஸ்கேன் மையத்துக்குச் சென்று சில ஆயிரங்கள் குறைவான கட்டணத்தில் சி.டி. ஸ்கேன் செய்து கொண்டார். பிறகு, சி.டி. ஸ்கேன் முடிவுகளை எடுத்துக் கொண்டு, உரிய மருத்துவரிடம் காண்பிக்கச் சென்றபோது, அந்த மருத்துவர், சி.டி. ஸ்கேன் ரிப்போர்ட்டை வாங்கிக்கூடப் பார்க்கவில்லை. அதற்குக் காரணம், அந்த சி.டி. ஸ்கேன் வேறொரு மையத்தின் கவரில் இருந்ததுதான். அதனால், அவர் சி.டி. ஸ்கேன் எழுதிக் கொடுத்ததையோ, நோயாளி அதை எடுத்ததையோ முழுவதுமாகப் புறக்கணித்துவிட்டார். நண்பர் சி.டி. ஸ்கேன் அறிக்கையைப் பார்க்குமாறு வற்புறுத்தியதன் அடிப்படையில் அதனைப் பார்த்துவிட்டு, “ஒன்றுமில்லை போய் வாருங்கள்’ என்று கூறிவிட்டாராம். குறிப்பாக, சி.டி. ஸ்கேனை எடுத்து பார்த்துக் கொண்டே ஒரு வாக்கியத்தைக் குறிப்பிட்டாராம் அந்த மருத்துவர்…


அதாவது, “நான் குறிப்பிட்ட சி.டி. ஸ்கேன் மையத்தில் நீங்கள் ஸ்கேன் செய்திருந்தால், ஒரு வேளை பரிசோதனையில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அங்கே உங்களுக்கு இலவசமாக மற்றொரு முறை ஸ்கேன் எடுக்க நான் வலியுறுத்தியிருப்பேன். அதனால்தான் அந்தக் குறிப்பிட்ட ஸ்கேன் மையத்தில் உங்களை ஸ்கேன் எடுக்கச் சொன்னேன். இப்போது அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது’ என்றாராம். மொத்தத்தில், அவர் குறிப்பிட்ட ஸ்கேன் மையத்தில் ஸ்கேன் எடுக்காததை ஒரு பெரும் குற்றமாகவே நோயாளி மீது திணித்துள்ளார்.


மனம் நொந்த நண்பர், இறுதியாக அந்த சி.டி. ஸ்கேனை எடுத்துக் கொண்டு வேறொரு மருத்துவரிடம் காண்பிக்க, நோயின் தீவிரம் அதிகமாக இருப்பதாகக் கூறி உடனடியாக சிகிச்சை துவக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அந்த மருத்துவரின் அலட்சியத்தை அறியாத நண்பர், “நமக்கு எதுவும் இல்லை’ என்று வீடு திரும்பியிருந்தால்…


சில சி.டி. மையங்களில், மருத்துவப் பரிசோதனைகளே தலைகீழாக செய்யப்படுகின்றன.அதாவது, ஒரு நோயாளிக்கு இரண்டு விதமான மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றால், அதில் விலை அதிகம் உள்ள மருத்துவச் சோதனைகளை உடனடியாகவும், முதலிலும் செய்து கொள்ளும்படி நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், விலை குறைவான மருத்துவப் பரிசோதனையை முதலில் செய்து, அதில் நோய் இருப்பது உறுதியானால்தான் விலை அதிகமான அடுத்தகட்ட பரிசோதனை செய்யப்பட வேண்டும்.


ஆனால், விலை குறைவான மருத்துவப் பரிசோதனையை முதலில் செய்து, அதில் எதுவும் பிரச்னை இல்லை என்பது உறுதியானால், விலை அதிகமான மருத்துவப் பரிசோதனையை செய்யவேண்டிய அவசியம் ஏற்படாமல் போனால், இதுபோன்ற பரிசோதனை மையங்கள் எவ்வாறு லாபம் சம்பாதிப்பது என்பதால், முன்னுக்குப் பின்னாக சில மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்படுகின்றனவாம்!


எனவே, எந்த விதமான மருத்துவப் பரிசோதனையாக இருந்தாலும், நமக்கு பரிந்துரைக்கும் மருத்துவர் கூறியுள்ளார் என்பதற்காகவே அங்கு செல்லாமல், நன்கு விசாரித்து உரிய கட்டணம் என்ன என்பதை தெரிந்து கொண்டு, நமது நோய்க்கு இந்தப் பரிசோதனைகள் தேவைதானா என்பதையும் அறிந்து கொள்வது நல்லது. ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமா?

நடிகர் அர்ஜுன் கட்டும் அஞ்சநேயர் கோவில்!


திரையில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் அக்ஷன் அர்ஜுனுக்குள் ஆன்மீக அர்ஜுன் உள்ளார் அந்த ஆன்மீக அர்ஜுனின் லட்சியமான ஆஞ்சநேயர் கோவில் கட்டும் எண்ணம் தற்போது செயல் வடிவில் நடந்து கொண்டிருக்கிறது.கோவிலின் கோபுரத்தை 27 டன் எடையில் முழுக்க முழுக்க இரும்பால் உருவாக்கி இருக்கிறார்கள் அதை பொருத்தும் பணி இன்று காலை நடைபெற்றது


7 - cine arjun.MINI

 


சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள அவரது தோட்டத்தில் ஒரு ஏக்கரில் அஞ்சநேயருக்கான கோவில் கட்டப்பட்டுக் கொண்டுருக்கிறது ஏறக்குறைய 35 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை கர்நாடக மாநிலத்தில் உள்ள கொய்ரா என்ற ஊரில் ஒரே கல்லில் சிலையாக வடிக்கப் பட்டது டன் எடை கொண்ட அந்த சிலையை சென்னைக்கு வரவழைத்து பீடத்தில் பொருத்தினார்கள்.


அதற்கான கோபுரத்தை 27 டன் எடையில் முழுக்க முழுக்க இரும்பால் உருவாக்கி இருக்கிறார்கள் அதை பொருத்தும் பணி இன்று காலை நடைபெற்றது.


தஞ்சாவூர் பெரிய கோபுரத்தின் உள்ளிருந்து அபிசேகம் செய்யும் அதே முறையை பயன்படுத்தி இந்த கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அர்ஜுன் தெரிவித்தார்.


2006 ஆம் ஆண்டிலிருந்து இந்த கோவில் கட்டும் திருப்பணியை செய்துகொண்டிருக்கிறோம் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த உள்ளோம் என்று அர்ஜுன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

களஞ்சியம் இலவச அகராதி!


இணைய இணைப்பு இல்லாமல், சிறிய பைல் ஒன்றினை இயக்குவதன் மூலம், ஆங்கிலம்- தமிழ், ஆங்கிலம்- ஆங்கிலம் மற்றும் தமிழ்-தமிழ் எனப் பல்முனை அகராதி ஒன்றை நம் டெஸ்க் டாப்பில் வைத்துப் பயன்படுத்தும் வகையில், மென்பொருள் ஒன்று இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் பெயர் ""களஞ்சியம் அகரமுதலி''. இதற்கான மூல கோப்பு கிடைக்கும் தள முகவரி 


www.ekalai.com/kalanjiyam/dowload/.
 


இந்த தளத்திற்குச் சென்றவுடன் அகராதிக்கான கோப்பாக KalanjiamDictionarySetup என்ற கோப்பு கிடைக்கிறது. இதன் அளவு ஏறத்தாழ 189 எம்.பி. ஆகும். இதனை டவுண்லோட் செய்து, பின்னர் அதன் மீது டபுள் கிளிக் செய்திட, அகராதி நம் கம்ப்யூட்டரில் பதியப்படுகிறது. அகராதியைப் பயன்படுத்த, கண்ட்ரோல் + டில்டே(கீ போர்டில் எண் 1 கீக்கு முந்தைய கீ) (Ctrl+~) கீகளை அழுத்த வேண்டும். பயன்படுத்திய பின்னர், அகராதிக் கட்டம் தாண்டி, திரையில் கிளிக் செய்தால், டாஸ்க்பாரில் அகராதி சென்று அமர்ந்துவிடும். மீண்டும் தேவை எனில், டாஸ்க் பாரில் கிளிக் செய்து பெறலாம். அல்லது மீண்டும் மேலே குறிப்பிட்ட இரு கீகளை அழுத்த வேண்டும்.


இதனைக் கணிப்பொறியில் இயக்கி வைத்துள்ள நிலையில், எந்த அப்ளிகேஷன் புரோகிராமில் உள்ள சொல்லையும் தேர்ந்தெடுத்து, உடன் கண்ட்ரோல் + டில்டே கீகளை அழுத்தினால், அகராதி திரையில் தரப்பட்டு அதற்கான பொருள் தரப்படுகிறது. எந்த நேரத்திலும், இதே கீகளை அழுத்தினாலும், அகராதியில் பொருள் தேடும் கட்டம் விரிகிறது. 



வழக்கமான இரு மொழிகளுக்கிடையேயான அகராதியாக இல்லாமல், மேலே குறிப்பிட்டபடி, பலமுனை அகராதியாக இது அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏறத்தாழ 2 லட்சம் தனிச் சொற்கள் இருப்பதாக, இதனைத் தரும் இணைய தளம் அறிவித்துள்ளது. அத்துடன், இணைப்பு சொற்களாக, 40 லட்சம் சொற்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. 



இந்த அகராதியை இயக்கியவுடன், இதனைப் பயன்படுத்தக் கிடைக்கும் இடைமுகம் மிகவும் எளிதாகச் செயல்படும்படி அமைக்கப்பட்டுள்ளது. முதலில் எந்த அகராதியைப் பயன்படுத்தப் போகிறோம் என்பதனைத் தேர்ந் தெடுக்க வேண்டும். முன்பே குறிப்பிட்டபடி, ஆங்கிலம்-தமிழ், தமிழ்-தமிழ் மற்றும் ஆங்கிலம்- ஆங்கிலம் என மூன்று வகையான அகராதிகள் கிடைக்கின்றன.



இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பின்னர், சொல் அமைக்கும் கட்டத்தில், சொல்லை அமைக்க வேண்டும். தமிழ்ச் சொல்லுக்குப் பொருள் தேவை எனில், Type in Tamil என்பதில் டிக் கிளிக் செய்து, Look up என்பதற்கு அருகே உள்ள கட்டத்தில் சொல்லை அமைக்கலாம்.



 தமிழ்ச் சொற்களை உள்ளீடு செய்திட அஞ்சல்/போனடிக் எனப்படும் ஒலி சார்ந்த கீபோர்ட் முறை பயன்படுத்தப்படுகிறது. பின்னர் தேடு (Search) என்ற கட்டத்தில் கிளிக் செய்தால், கீழே உள்ள கட்டத்தில் சொல்லுக்கான அனைத்து நிலை பொருளும் தரப்படுகிறது. சொல் இலக்கணப்படி எந்த வகையைச் சேர்ந்தது (Verb/ Noun/Adjective.) எனக் காட்டப்பட்டு பொருள் தரப்படுகிறது. வலது பக்கம் உள்ள கட்டத்தில், அந்த சொல் சார்ந்த சொற்களும் தரப்படுகின்றன. 


எடுத்துக்காட்டாக, Computer என்ற சொல்லைத் தந்த போது Compute, Key, laptop, monitor, mouse, processor, type, usb ஆகிய சொற்கள் அக்கட்டத்தில் காட்டப்பட்டன.இந்த சொற்களில் ஏதேனும் ஒன்றுக்குப் பொருள் பெற விரும்பினால், இந்தக் கட்டத்தில் அதன் மீது கிளிக் செய்தால் போதும். பொருளைத் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெறலாம். இரண்டும் வெவ்வேறு வண்ணத்தில் தரப்படுவது, முதல் முறையாகப் பொருளைப் படிப்பவருக்கு கூடுதல் வசதியைத் தருகிறது. 


பொருள் தரும் கட்டத்தின் கீழாக, Image, Nearest, Synonyms, Antonyms என்று நான்கு டேப்கள் அமைக்கப்பட்டு ஒரு கட்டம் கிடைக்கிறது. இதில் Image என்பது தேர்ந்தெடுக்கப்பட்டால், சொல்லுக்கான படம் காட்டப்படுகிறது. 3,000க்கும் அதிகமான படங்கள் இந்த அகராதியில் தரப்பட்டுள்ளன. மேலும், ஒரு நாட்டின் பெயரை, சொல் தேடும் கட்டத்தில் அமைத்துத் தேடினால், கீழாக, அந்த நாட்டுடன் உலக வரைபடம், நாட்டின் வரைபடம், அதன் தேசிய கொடி ஆகியவை காட்டப்படுகின்றன. இது பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான ஒன்றாகும்.


இதே போல, தொழில் நுட்ப சொற்களைத் தந்தால், அது வழக்கமான அகராதியிலிருந்து தரப்படாமல், Glossary என்ற பகுதியிலிருந்து அதற்கான பொருள் தரப்படுகிறது. எடுத்துக் காட்டாக, கணிப்பொறி இயல் துறையில் வழங்கப்படும் WYSIWIG என்ற சொல்லைக் கொடுத்துப் பாருங்கள். தனியே அதற்கான விளக்கமும், தமிழில் பொருளும் கிடைக்கும்.



Nearest என்ற கட்டத்தின் கீழாக, பொருளை ஒட்டிய மற்ற சொற்களும், Synonyms என்பதன் கீழ் அதே பொருள் தரும் சொற்களும் மற்றும் Antonyms என்ற பிரிவில், எதிர்ப்பதங்களும் தரப்படுகின்றன. 



இதே போல, வினைச்சொல் ஒன்றைத் தந்தால், வலதுபுறம் கீழாகத் தரப்பட்டுள்ள கட்டத்தில், அந்த வினைச்சொல்லுக்கான இறந்த, நிகழ், எதிர்கால வினை குறிக்கும் சொற்கள் தரப்படுகின்றன. 



தமிழ்ச் சொல்லை உள்ளிட, ஒலி அடிப்படையிலான அஞ்சல் கீ போர்ட் செயல்முறை தரப்பட்டுள்ளதால் எளிதாகவும், விரைவாகவும் அனைவரும் சொல்லை இட முடிகிறது. தமிழ்ச் சொல்லைத் தந்துவிட்டு, ஆங்கிலம்- தமிழ் அகராதிப் பிரிவைத் தேர்ந்தெடுத்தால், அதற்கான ஆங்கிலச் சொற்களுடன் விளக்கம் தரப்படுகிறது. தமிழ்-தமிழ் என்ற அகராதிப் பிரிவினைத் தேர்ந்தெடுத்தால், பொருளும், சார்ந்த தமிழ்ச் சொற்களும் தரப்படுகின்றன. 



எடுத்துக் காட்டாக, கிணறு என்ற சொல்லைத் தந்த போது, தமிழ்-தமிழ் அகராதியில், அசும்பு, உறவி, குழி, கூபம், கூவல், பூவல் மற்றும் கேணி என்ற வகையில் பொருட் சொற்கள் தரப்படுகின்றன. அதே நேரத்தில், சார்ந்த ஆங்கிலச் சொற்களும் தனிக் கட்டத்தில் கிடைக்கின்றன.


ஆங்கிலம்- ஆங்கிலம் அகராதியைத் தேர்ந்தெடுத்து சொல் ஒன்றுக்குப் பொருள் பார்க்கையில், பொருளுடன், அந்தச் சொல்லை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என எடுத்துக் காட்டு வாக்கியங்கள் தரப்படுகின்றன.



எந்த சொல்லைக் கொடுத்தாலும், தேடல் கட்டத்தின் வலது மூலையில் உள்ள அம்புக் குறியினைக் கிளிக் செய்தால், சார்ந்த சொல் பட்டியல் கிடைக்கிறது. பட்டியலில் உள்ள சொல்லையும் கிளிக் செய்து பொருள் பெறலாம்.




இந்த அகராதியின் இன்னொரு தனிச் சிறப்பு என்னவெனில், நாம் உள்ளிடும் சொல்லை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கும் உள்ள வசதியினைக் கூறலாம். சொல்லை அமைத்துவிட்டு, அருகே உள்ள ஸ்பீக்கர் ஐகானில் கிளிக் செய்தால், சொல் உச்சரிக்கப்படுகிறது. தமிழ்ச் சொற்களும் சற்று வித்தியாசமாக உச்சரிக்கப்படுகின்றன. 



புதியதாக ஓர் சொல்லை இந்த அகராதியில் தேடுகையில் கிடைக்கவில்லை எனில், அதன் பொருளைத் தேடி அறிந்து, இந்த அகராதியில் உள்ளீடு செய்திடும் வசதி கொடுக்கப்பட்டிருப்பது இதன் இன்னொரு சிறப்பு. மிகச் சிரமப்பட்டு உருவாக்கி, இலவசமாக, தமிழ்ச் சமுதாயத்திற்கு, இந்த அகராதியினைத் தந்திருக்கும் கம்ப்யூட்டர் வல்லுநர் சேகர் பாராட்டுக்குரியவர். 



இவர் தன் முறையான கல்வியை 10ஆம் வகுப்போடு முடித்துக் கொண்டவர். கணிப்பொறி இயலில் ஆர்வம் இருந்ததன் காரணமாக, தானே கணிப்பொறி மொழிகளைக் கற்று, இப்படி ஒரு படைப்பினைத் தந்துள்ளார். ஆர்வம் இருந்தால், யாரும் எதனையும், கல்வி நிலையங்கள் செல்லாமலேயே படிக்கலாம் என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு. நன்றியும் வாழ்த்துக்களும் சேகர்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top