.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 23 September 2013

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை!


                                                          

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை
இந்திய சினிமா நூற்றாண்டு விழா கொண்டாட்ட தொடக்க விழாவில், முதல்–அமைச்சர் ஜெயலலிதா குட்டிக்கதை சொன்னார்.


வந்தாரை வாழவைக்கும் பூமி...


வந்தாரை வாழவைக்கும் பூமி தமிழ்நாடு. இன்று கூட, பல்வேறு மொழி பேசும் நடிகர், நடிகையர், பின்னணிப்பாடகர்கள், இசையமைப்பாளர்கள், தமிழ்த்திரைப்படத்துறையில் முன்னணியில் இருக்கிறார்கள். தானும் வாழவேண்டும், அடுத்தவர்களும் வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் தமிழ் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழ் சினிமாத்துறை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது என்பதை நான் சொல்லி, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.


இந்த உலகத்தில் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறவர்கள் உண்டு. தானும் வாழ வேண்டும், அடுத்தவர்களும் வாழவேண்டும் என்று நினைக்கிறவர்களும் உண்டு. எப்படியாவது தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கிறவர்கள், எப்போதும் அவர்களுடைய வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறவர்களை மட்டும் அல்லாமல், தனக்கு போட்டியாக இருப்பவர் என கருதப்படுபவரையும் அழித்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள்.


குட்டிக்கதை


ஓர் ஊரில் ஒரு மனிதர் இருந்தார். அவர் நிறைய பாவங்களை செய்ததால், நரகப்படுகுழி என்கிற கிணற்றில் விழுந்துவிட்டார். அந்த கிணற்றில், ஏற்கனவே பாவம் செய்தவர்கள் விழுந்து கிடந்தார்கள். உள்ளே ஏகப்பட்ட சத்தம். இப்பொழுது விழுந்த அந்த மனிதரின் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தது.


அந்த கிணற்றுக்கு பக்கத்தில் ஒரு மகான் இருந்தார். இந்த மனிதர் போடுகின்ற சத்தம் அதிகமாக கேட்டதும், கிணற்றை எட்டிப்பார்த்தார் அந்த மகான்.
மகானை பார்த்தவுடன், அந்த மனிதர், ‘‘சுவாமி! என்னைக்காப்பாற்றுங்கள்’’ என்று கத்தினார்.


அந்த மனிதரைப்பார்த்ததும், மனித சமுதாயத்திற்கு அந்த மனிதர், என்னென்ன கெடுதல் செய்திருக்கிறார் என்ற விவரம் மகானின் கண் முன்னே தெரிந்தது. இருந்தாலும், அந்த மனிதரை காப்பாற்ற ஏதாவது வழி உண்டா என்று யோசித்தார். ஏதாவது ஒரு நல்லகாரியத்தை அந்த மனிதர், தனது வாழ்நாளில் செய்திருக்கிறாரா என்று பார்த்தார்.


ஒரு சமயம், அந்த மனிதர் தன் காலடியில் மிதிபட இருந்த சிலந்தியை, தன்னை அறியாமல், மிதிக்காமல் தாண்டி போயிருந்தது தெரியவந்தது. இந்த செயலுக்காக, அந்த மனிதரை கரையேற்ற முடியுமா என்று சிந்தித்தார். உடனடியாக, அவர் கையில் சிலந்தி ஒன்று வந்து நின்றது. அதனிடமிருந்து, நூலிழை வெளிவர ஆரம்பித்தது. அந்த நூல் இழை, கிணற்றின் ஆழம் வரைக்கும் நீண்டு கொண்டே போயிற்று.


உடனே அந்த மகான், கிணற்றில் இருந்த மனிதரைப்பார்த்து, ‘‘இந்த நூலை பிடித்துக்கொண்டு மேலே ஏறி வா’’ என்றார்.


சிலந்தி நூல்


இதற்கு அந்த மனிதர், ‘‘சிலந்தி நூல், என்னைத்தாங்குமா?’’ என்று கேட்டார்.
‘‘எல்லாம் தாங்கும். அதைப்பிடித்து வா’’ என்றார் மகான்.


சந்தேகத்துடனேயே அந்த நூலிழையை பிடித்து இழுத்துப்பார்த்தார் அந்த மனிதர். நூலிழை வலுவாக இருந்தது.


எனவே, அதைப்பிடித்துக்கொண்டு மெதுவாக ஏறி வர ஆரம்பித்தார். பாதி தூரம் வந்தவுடன், அந்த மனிதரின் காலுக்கு கீழே கொஞ்சம் சத்தம் கேட்டது. கீழே குனிந்து பார்த்தார் அந்த மனிதர். வேறு சிலரும், அந்த நூலிழையை பிடித்துக்கொண்டு மேலே வந்து கொண்டிருந்தார்கள்.


உடனே அந்த மனிதருக்கு கோபம் வந்தது. தன் இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து, தன் காலுக்கு கீழே உள்ள நூலிழையை வெட்டிவிட்டார். இனிமேல், தான் மட்டும் மேலே ஏறிவிடலாம் என்று நினைத்தார் அந்த மனிதர்.


ஆனால் நடந்தது என்ன தெரியுமா?


மொத்த நூலிழையும் அறுந்து விழுந்தது. அந்த மனிதரும் பொத்தென்று கீழே விழுந்துவிட்டார். மறுபடியும் கத்த ஆரம்பித்தார். ஏற்கனவே தன்னை அறியாமல், அந்த மனிதர் செய்த ஒரு நற்செயல், அந்த நூலிழைக்கு உறுதியை கொடுத்தது. இப்போது அவர் செய்த பாவம் அந்த நூலிழையை வலுவிழக்க செய்துவிட்டது.


அடுத்தவர்களும் வாழ வேண்டும் என்ற எண்ணம் அந்த மனிதருக்கு இருந்திருந்தால், அந்த மனிதர் கரையேறியிருப்பார். ஆனால், அவர் அதை செய்யவில்லை. எனவே அதல பாதாளத்தில் வீழ்ந்து விட்டார் அந்த மனிதர்.


அரசு உதவும்


திரைப்படத்துறையால், தானும், தன் குடும்பமும் மட்டும் செழிப்படைய வேண்டும் என்று நினைத்தவர்கள் இந்த நிலைமையில் தான் இன்று இருக்கிறார்கள். திரைப்படம் என்பது, பல்வேறு கலைஞர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் ஒரு கருவி என்றாலும், நல்ல கருத்துகளையும், முற்போக்கு சிந்தனைகளையும், எண்ணங்களையும், இளைய சமுதாயத்தினரிடம் எடுத்துச்செல்லும் வகையிலும்;
சாதி மற்றும் மத ரீதியிலான வகையில், பிறர் மனம் புண்படாமல் இருக்கும் வகையிலும்; வன்முறை மற்றும் ஆபாச காட்சிகளை தவிர்த்தும் படங்களை எடுக்கவேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர்களை இந்த தருணத்தில் அன்போடு கேட்டுக்கொள்வதுடன், திரைப்படத்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எனது தலைமையிலான அரசு நல்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா குட்டிக்கதை கூறினார்.


தலைமைச்செயலாளர்


முன்னதாக தமிழக தலைமைச்செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆற்றிய வாழ்த்துரை வருமாறு:–


திரைப்படங்கள் வெறும் பொழுது போக்குக்காக மட்டுமல்ல சமுதாயத்தை மாற்றும் சக்தியாகவும் உள்ளது. இந்திய திரைப்பட வரலாற்றில் தென்னிந்திய திரைப்படங்கள் குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. திரைப்பட உலகம் பற்றி முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறும்போது, ‘திரையுலகம் எனது தாய்வீடு’ என்று பெருமையோடு குறிப்பிட்டுள்ளார். எனவேதான் இந்திய திரையுலகத்தின் இந்த கோலாகல நூற்றாண்டு விழாவுக்காக தானே முன்வந்து பல உதவிகளை வழங்கியுள்ளார்.


அவர் தனது அயராத உழைப்பால், அனைத்துத்துறைகளிலும் தமிழகம் முதல் மாநிலமாக திகழும் நிலையை உருவாக்கி வருகிறார். சிறந்த திரைப்படங்களுக்கான மானியம் வழங்குதல், புதிய விருதுகளை உருவாக்குதல், சினிமாவின் திருட்டு சி.டி. குற்றத்தை ஒழித்தல் போன்ற பல எண்ணற்ற திட்டங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்துள்ளார்.


திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அவர் இருப்பதால், சினிமா துறையினர் அவருக்கு நன்றிகடன் பட்டவர்களாக இருக்கிறார்கள். முதல்–அமைச்சர் ஜெயலலிதாவும் திரைப்படத்துறையில் இருந்து வந்தவர் என்பதால், அந்தத்துறையை சேர்ந்தவர்கள் மீது தனி அன்பும், பாசமும் கொண்டுள்ளார்.


என்றென்றும் புகழ்ந்து பேசப்படும் இந்த விழாவில் வாழ்த்துரை வழங்குவதற்கு எனக்கு வாய்ப்பு அளித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
 

‘‘சினிமா ஒரு அபூர்வ உலகம்’’ நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு!





‘‘சினிமாவில் ஜெயித்தவர்கள் வாழ்க்கையில் தோற்று இருக்கிறார்கள். வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் சினிமாவில் தோற்று இருக்கிறார்கள். சினிமா ஒரு அபூர்வமான உலகம்’’ என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.


ரஜினிகாந்த் பேச்சு


சென்னையில் நேற்று இரவு நடந்த சினிமா நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–


‘‘இந்த விழாவை மிக சிறப்பாக நடத்தியதற்காக, முதல்–அமைச்சருக்கு என் நன்றி. என் திரையுலக அண்ணன் கமல்ஹாசனுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. அன்றும் சரி, இன்றும் சரி, நான் கமல் ரசிகன். இரண்டு பேரும் சேர்ந்து ஏழு எட்டு படங்கள் நடித்தோம். கமல் இஷ்டப்பட்டு நடித்தார். நான் கஷ்டபட்டு நடித்தேன்.


இந்திய சினிமா நூற்றாண்டு விழாவை கொண்டாடும் இந்த வேளையில், சாதாரண ஆளாக இருந்த என்னை சினிமாவில் பெரிய ஆளாக்கிய கே.பாலசந்தருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வளர்த்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு நன்றி.


நடிப்பை தவிர...


சமூகத்தில் இவ்வளவு பெரிய ஆளாக என்னை மதிக்கிற அனைவருக்கும் நன்றி. அது, சினிமா எனக்கு கொடுத்த பிச்சை. 38 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். நடிப்பதை தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது. வேறு இரண்டு மூன்று விஷயங்களில் இறங்கி, என்னால் ஜெயிக்க முடியவில்லை. ஆனால், கமல் அப்படி அல்ல. நிறைய விஷயங்கள் தெரிந்தவர்.
சினிமாவில் வில்லனாக இருந்த என்னை காமெடியாக நடிக்க வைத்தவர், கே.பாலசந்தர். ஆறில் இருந்து அறுபது வரை படத்தில், என்னை சோகமாக நடிக்க வைத்தவர், எஸ்.பி.முத்துராமன். முள்ளும் மலரும் படத்தில் இயல்பாக நடிக்க வைத்தவர், மகேந்திரன். பாட்ஷா படத்தின் மூலம் என்னை எங்கேயோ கொண்டு போனவர், சுரேஷ் கிருஷ்ணா. முத்து, படையப்பா, கோச்சடையான் ஆகிய படங்களில் கே.எஸ்.ரவிகுமார், சந்திரமுகியில் பி.வாசு இவர்கள் எல்லாம் மறக்க முடியாதவர்கள்.


ஜாம்பவான்கள்


இவர்கள் எல்லோரும் என்னை உயரத்தில் தூக்கிக் கொண்டு போய் வைத்து விட்டு, போய் விட்டார்கள். நான் தனிமையில் இருக்கிறேன். ‘டாப்’பில் இருப்பவர்களுக்கு இதுதான் பிரச்சினை. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் சிவாஜிராவ் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.
சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்த தாதா சாகேப் பால்கே, சாந்தாராம், எஸ்.எஸ்.வாசன், ஏவி.மெய்யப்ப செட்டியார், நாகிரெட்டி, சக்ரபாணி இவர்கள் எல்லாம் போட்ட சாப்பாட்டை இப்போது நாம் வேறுவிதமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

மகான்கள்

சினிமா இப்போது எவ்வளவோ முன்னேறினாலும், சந்திரலேகா மாதிரி ஒரு படத்தை எடுக்க முடியுமா? அவ்வையார் படத்தை நான் பத்து வயதில் பார்த்தேன். அந்த பிரமிப்பு இன்னும் இருக்கிறது.
எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப்பெண், நாடோடி மன்னன், சிவாஜி நடித்த திருவிளையாடல், சரஸ்வதி சபதம் ஆகிய படங்கள் எல்லாம் காவியங்கள். அந்த காவியங்களை படைத்து அமரர்களாகிப்போன மகான்களின் பாதங்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்துகிறேன்.
அதேபோன்ற இன்னொரு மகான், கமல்ஹாசன். அபூர்வ சகோதரர்கள், தசாவதாரம் ஆகிய படங்களை அவரை தவிர, வேறு எந்த நடிகராலும் நடிக்க முடியாது.

அபூர்வ உலகம்

சினிமா, ஒரு வித்தியாசமான தொழில். இதில் தயாரிப்பாளர்கள்தான் எப்போதுமே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் வெற்றி பெற்றவர்கள் வாழ்க்கையில் தோற்று இருக்கிறார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் சினிமாவில் தோற்று இருக்கிறார்கள். இது, ஒரு மாயாபஜார். அபூர்வமான உலகம்.

நான், 38 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். கமல், 55 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். நம் வாழ்நாளில் பார்க்க முடிகிற மிக திறமையான நடிகர் கமல். இப்போது வந்திருக்கிற இளம் நடிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது, பொருளாதார ரீதியாக உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள்.’’

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

கமல்ஹாசன் பேச்சு

விழாவில், கமல்ஹாசன் பேசியதாவது:–

‘‘சினிமாவில், நான் 50 வருடங்களாக இருந்தாலும் இன்னும் சின்ன குழந்தைதான். குழந்தையாக இருந்தபோது சிவாஜியின் மடியிலும், எம்.ஜி.ஆரின் தோளிலும் வளர்ந்தவன். நான் ஜெயிக்காமல் இருக்க முடியுமா? சினிமாவில் எனக்கு இரண்டு குருக்கள் இருக்கிறார்கள். ஒருவர், சிவாஜி. இன்னொருவர், கே.பாலசந்தர்.

இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாடும் இந்த வேளையில், என்னை வளர்த்த தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த தலைமுறையினர் எங்களை விட பெரிய அளவில் வளர வேண்டும்.’’

மேற்கண்டவாறு கமல்ஹாசன் பேசினார்.

முத்துவீரப்பநாயக்கன் சத்திரம் வீரப்பன்சத்திரமாக மாறியது எப்படி?



 கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்ததில் விஜய நகர பேரரசு வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே கன்னியாகுமரி வரை பரவியிருந்தது. கிருஷ்ண தேவராயர் தனது ஆட்சி காலத்தில் தனது பகுதிகளை ஆறு ராஜ்ஜியங்களாக பிரித்து அந்த பகுதிகளை ஆட்சி செய்ய 6 பிரதிநிதிகளை நியமித்தார். மதுரை ராஜ்ஜியத்திற்கு நாகமநாயக்கரை நியமித்தார். நாகமநாயக்கர் விஜய நகர பேரரசிற்கு உரிய வரிப்பணத்தை செலுத்தாமலும், ஆணைக்கு கட்டுப்படாமலும் இருந்துள்ளார்.


இதையடுத்து நாகமநாயக்கரின் மகன் விசுவநாத நாயக்கர் மதுரைக்கு படை எடுத்து சென்று தனது தந்தையை வென்று அவரை விஜய நகரத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து விசுவநாத நாயக்கரை மதுரை நகர பிரதிநிதியாக கிருஷ்ணதேவராயர் நியமித்தார். 1529ம்ஆண்டு முதல் 1682ம் ஆண்டு வரை 8 நாயக்கர்கள் ஆட்சி செய்தனர். இவர்கள் ஆட்சி காலத்தில் ஈரோடு மாவட்ட பகுதிகள் நாயக்கர்களின் ஆளுகையின்கீழ் இருந்து வந்தது.



நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் ஈரோடு மாவட்ட பகுதிகளில் ஈரோடு, விஜயமங்கலம், நாயக்கன்கோட்டை, சத்தியமங்கலம், அந்தியூர், குன்னத்தூர், பெருந்துறை, கோசனம், கொளாநல்லி, பாலத்தொழுவு போன்ற இடங்களில் கோட்டைகள் இருந்தது. நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் 1609ம்ஆண்டு முதல் 1659ம்ஆண்டு வரை முதலாம் முத்துவீரப்பநாயக்கர் ஆட்சி செய்து வந்தார்.



இவரது ஆட்சி காலத்தில் நிறைய சத்திரங்களை கட்டி வழிப்போக்கர்களுக்கு உணவு வழங்கி வந்தார். இவர்கள் தங்கி செல்ல சத்திரமும், குளங்களையும் அமைத்து கொடுத்தார். ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தனது படைகள் தங்குவதற்கும், வழிபோக்கர்களுக்காகவும் சத்திரங்களை கட்டினார். மேலும் ஒரு குளத்தையும் அமைத்து கொடுத்தார்.



அவர் ஆட்சி செய்த காலக்கட்டத்தில் வீரப்பன்சத்திரம் முத்துவீரப்பநாயக்கன் சத்திரம் என்று அழைக்கப்பட்டு வந்தது. நாளடைவில் முத்துவீரப்பநாயக்கன் சத்திரம் வீரப்பன்சத்திரமாக பெயர் மாறியது. நாயக்கர்கள் அமைத்து கொடுத்த சத்திரங்கள் நாளடைவில் அழிந்து போனது. நாயக்கர்கள் ஆட்சி செய்ததற்கு அடையாளமாக இன்றும் வீரப்பன்சத்திரத்தில் தெப்பக்குளம் என்று அழைக்கப்படும் குளம் சாட்சியாக உள்ளது.

வேடந்தாங்கல் என்றால் வேடர்களின் கிராமம்’ வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு அழகான வரலாற்று பின்னணி!



இந்த சரணாலயத்துக்கு சுவாரஸ்யமான வரலாற்று பின்னணியும் உண்டு. இங்கு, 400 ஆண்டுகளுக்கு முன்னிலிருந்தே பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வந்து சென்றுள்ளன. 1700ம் ஆண்டுகளில் கிராம உள்ளூர் பண்ணையார்கள் பறவைகளை வேட்டையாடும் இடமாக இது இருந்துள்ளது. அவர்களைத் தொடர்ந்து, 18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் வேட்டையாடி பொழுதை கழிக்க வேடந்தாங்கலை பயன்படுத்திக் கொண்டனர். இந்நிலையில், 1936ம் ஆண்டு உள்ளூர் விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க செங்கல்பட்டு கலெக்டராக இருந்த ப்ளேஸ், வேடந்தாங்கலை பறவைகள் சரணாலயமாக அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 1962ல் இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் வந்தது. வேடந்தாங்கல் என்றால் வேடர்களின் கிராமம்’ என்று அர்த்தம்.


கிராம மக்களின் தியாகம்



இங்கு பறவைகள் வந்து செல்வதால் அவற்றின் எச்சம் நீர்பரப்பு முழுவதும் நிரம்பி காணப்படுகிறது. இந்த நீரை விவசாயத்துக்கு பயன்படுத்துவதாலும், வயல்வெயிலில் பறவைகள் எச்சமிடுவதாலும் விளைச்சல் நன்றாக இருப்பதாக கூறுகின்றனர் இக்கிராமத்து விவசாயிகள். இதற்காக பறவைகளுக்கு எந்த தொந்தரவும் தராமல் வாழ்ந்து வருகின்றனர். பறவைகள் வெடி சத்தத்துக்கு பயப்படும் என்பதால் இந்த கிராமத்தினர் தீபாவளியன்று கூட பட்டாசு வெடிக்காமல் அந்த சந்தோஷத்தையும் தியாகம் செய்திருக்கிறார்கள். 

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளை இன்டர்நெட் மூலம் இணைத்து வகுப்புகள் நடத்த திட்டம்!




 தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை இன்டர்நெட் மூலம் இணைத்து ஒருங்கிணைந்து  பயிலும் திட்டத்தை உருவாக்க தொடக்கக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறை மூலம், அனைத்து பள்ளிகளுக்கும் லேப்டாப் வழங்கப்பட்டு, கம்ப்யூட்டர் உதவியுடன் பயிலும் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தற்போது அனைத்து பள்ளிகளையும் இன்டர்நெட் மூலம் இணைத்து ஒருங்கிணைந்து (கொலாபரேட்டிவ் சிஸ்டம்) பயிலும் திட்டம் உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக பள்ளிகளை தேர்வு செய் வது குறித்து அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:


தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் வலைதளத்தின் மூலம் ஒருங்கிணைப்பதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சிறந்த செயல்பாட்டினை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொள்ள முடியும். இதன்மூலம் நன்கு படிப்பதற்கான புதிய வழிகளை கண்டறிந்து தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு நடவடிக்கையும் திட்டங்களையும் வெளிக்கொண்டு வர முடியும். இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் புதிய படைப்புகளை உருவாக்குபவர்களாகவும் திகழ்வார்கள்.



இத்திட்டத்தின் முதற் கட்டமாக, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 4 பள்ளிகள் என 32 மாவட்டங்களில் 128 பள்ளிகளில் உள்ள வகுப்புகளை இன்டர்நெட் மூலம் இணைத்து அனைவருக்கும் கல்வி திட்டத்தின் வாயிலாக ஒருங்கிணைந்த பயிலும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்ட்ரா தகவல்



தமிழகத்தில் 44 ஆயிரத்து 986 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் 52 லட்சத்து 4 ஆயிரத்து 61 மாணவர்கள்
படிக்கின்றனர்.



 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top