.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 21 September 2013

ஆச்சர்ய.. கன்னியாகுமரி..! - சுற்றுலாத்தலங்கள்!


ஆச்சர்ய.. கன்னியாகுமரி..!
 
ஆச்சர்ய.. கன்னியாகுமரி..!

கன்னியாகுமரி ஓர் இயற்க்கையின் ஆச்சர்ய பூமி... முக்கடலும் சங்கமிக்கும் இக்கடற்கரையில்  அன்னை கன்னியாகுமரித் தாயின் திருக்கோயில் அமைத்திருக்கிறது . கடல் நடுவே வீரத்துறவி விவேகானந்தரின் திருக்கோயிலும் ஐய்யன் திருவள்ளுவரின் பிரமாண்டத் திருச்சிலையும் தேசத் தந்தை மகாத்மா காந்திஜியின் நினைவு மண்டபமும் ஒருசேர ஒரே இடத்தில் அமைந்திருப்பது ஆச்சரியமல்லவா?

அந்த ஆச்சர்ய கன்னியாகுமரியை இப்போது அறிவோம்
 

கன்னியாகுமரியில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு சொர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரள மாநிலமும் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளாக தமிழகத்தின் நெல்லை மாவட்டமும் திகழ்கின்றன.  இங்கு காணக் கிடைக்கும் சூரிய உதயமும், அஸ்தமனமும் வண்ணத்திருவிழாவாக திகழ்கின்றது கிழக்கே வங்கக்கடலும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் கூடி அலைமோதும் அழகிய காட்சியுடையது. சில பவுர்ணமி நாளன்று, இக்கடற்கரையில் நின்று மாலைக் கதிரவன் மேலைக் கடலில் மறைவதையும் முழுமதி கீழைக் கடலில் கிளர்ந்தெழுவதையும் ஒரு சேரக் கண்டு களிக்கலாம். பல வண்ண மணல் நிரம்பிய குமரி கடற்கரையைக் காணக்காண மனதெல்லாம் உற்சாகம் பரவும்
1984ல் தேசப்பிதா காந்தியடிகளின் அஸ்தி இங்கு கடலில் கரைக்கப்பட்டது. கரைக்கும் முன்பு அஸ்தி வைக்கப்பட்ட கலசம் ஒரு பீடத்தின் மீது வைத்து அஞ்சலி செய்யப்பட்டது. அவ்விடத்தில் ஒரு நினைவுச்சின்னம் கட்ட காந்தியடிகளின் சீடர் கிருபளானி மேற்கொண்ட முயற்சியால் 1954ல் அடிக்கல் நாட்டி 1956 ல் அழகிய மண்டபமாக கட்டி முடிக்கப்பட்டது. காந்திஜி பிறந்த நாளான அக்டோபர் 2-ந்தேதி சூரிய ஒளி பீடத்தின் மீது படும்படியாக அமைத்திருப்பது தனிசிறப்பு. சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்திழுக்கும் மண்டபமாக திகழ்கிறது. அதுமட்டுமல்ல அம்மனின் சக்தி பீடங்களில் கன்னியாகுமரியும் ஒன்றாக திகழ்கிறது
 

கன்னியாகுமரி அம்மன் ஆலயம்
 
கன்னியாகுமரியில் கடற்கரையோரமாக அமைந்துள்ளது குமரி பகவதி அம்மன் ஆலயம். அன்னை பகவதி திருமணம் செய்து கொள்ளாமல் குமரியாகவே வாழ்வதால் அன்னைக்கு கன்னியாகுமரி என்று பெயர். அதனால் தான் இந்த மாவட்டத்திற்கு கன்னியாகுமரி என்று பெயர் வந்தது. முக்கடலும் சங்கமிக்கும் கடலோரமாக அமைந்துள்ளது இந்தக் கோவில். குமரி அம்மனின் மூக்குத்தி ஒளியால் கவரப்பட்டு வந்த கப்பல் ஒன்று பாறையில் மோதி சிதறி விட்டதாம். அதனால் கடலை நோக்கிய கோவிலின் கருவறை வாசல் மூடப்பட்டிருக்கிறது என்பது ஐதீகம்.
 

திருவள்ளுவர் சிலை

கடலில் காணப்படும் இன்னொரு பாறையில் அதி அற்புதமாக, பிரமாண்டமாக நிற்கும் திருவள்ளுவர் சிலை இருக்கிறது. மிகவும் கலைநுணுக்கத்துடன் திருக்குறளில் 133 அதிகாரங்களையும் நினைவுபடுத்தும் வகையில் 133 அடி உயரத்தில் பிரமாண்டமாய் வானுயர நின்ற வடிவில் எழிலோடு நம் அய்யனின் திருச்சிலை  அமைந்திருக்கிறது   இச்சிலையை அருகில் சென்று பார்க்க படகு போக்குவரத்து வசதி உள்ளது கடல் அலைகளோடு போட்டிபோட்டு கம்பீரமாக காட்சி தரும் இந்த திருவள்ளுவர் சிலை திறந்த வெளியில் நிற்பதால் கடல் காற்றாலும், மழை மற்றும் வெயிலாலும் சேதம் அடைகிறது. இதை தடுக்க 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலையை சுற்றிலும் ரசாயன கலவை பூசப்படுகிறது. சிலையில் படிந்துள்ள உப்பு படிவங்கள் உறிஞ்ச பேப்பர் ஒட்டப்பட்டு சுத்தப்படுத்தப்படுகிறது. பின்னர் வேக்கர் சிலிகான் மெட்டீரியல் மூலம் சிலை முழுவதும் ரசாயன கலவை பூசப்படுகிறது.
 

காந்தி நினைவு மண்டபம்
 
கன்னியாகுமரியில் தான் மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி கரைக்கப்பட்டது. அவருடைய நினைவாக முக்கடலின் கரையில் இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காந்தியின் சாம்பல் வைக்கப்பட்டுள்ளது. அக்டோபர் இரண்டாம் தேதி காந்தியடிகளின் பிறந்த நாளன்று சூரிய ஒளி நேரடியாக இந்த சாம்பலின் மேல் விழுவது இதன் சிறப்பாகும்
 

விவேகானந்தர் நினைவு மண்டபம்
 
கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ளது சுவாமி விவேகானந்தர் மண்டபம். 1892ல் சுவாமி விவேகானந்தர் சிகாகோ உரையை முடித்துக்கொண்டு  குமரிமுனை வந்து அம்மனை வழிபட்டுவிட்டு இப்பாறையில் உட்கார்ந்து தவம் செய்தாராம். அவரது நினைவாக அவர் தவம் செய்த பாறையின் மேல் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து 200 மீட்டர் கடலின் உள்ளே இது அமைந்துள்ளது. மண்டபத்தின் உள்ளே தியான அறையும் அமைந்துள்ளது. வாரத்தின் எல்லா நாட்களும் காலை ஏழு மணி முதல் மாலை ஆறு மணி வரை பாறைக்கு படகுப் போக்குவரத்து இருக்கிறது. குமரி முனையின் கிழக்கே கடலில் இரண்டு அழகிய பாறைகள் உள்ளன. அதில் பெரிய பாறை சுமார் 3 ஏக்கர் பரப்பும் கடல் மட்டத்திலிருந்து 55 அடி உயரமும் உடையது. அதில் ஓரிடத்தில் பாதம் போன்ற அடையாளம் காணப்படுகிறது. அதை தேவியின் திருப்பாதம் என்று அழைக்கிறார்கள்.
நாங்களும் ஒருமுறை கன்னியாகுமரி சென்று அந்த ஆச்சர்யத்தை உணருங்கள் 
 
 

கன்னியாகுமரிக்கு அருகே
அமைந்துள்ள சுற்றுலா தளங்கள்

நாகர்கோவில்
சுசீந்திரம்
வட்டக் கோட்டை
பத்மநாபபுரம் அரண்மனை
சிதறால் சமண நினைவு சின்னங்கள்
மாத்தூர் தொட்டிப் பாலம்
திருநந்திக்கரை குகைக் கோவில்
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவில்
உதயகிரிக் கோட்டை
உலக்கை அருவி
பேச்சிப்பாறை அணைக்கட்டு
பெருஞ்சாணி அணைக்கட்டு
திற்பரப்பு நீர்வீழ்ச்சி
முட்டம் கடற்கரை
தேங்காய்ப்பட்டணம் கடற்கரை
சங்குத்துறை கடற்கரை
ஆலஞ்சி கடற்கரை

முயலும் ஆமையும் (நீதிக்கதை)!




ஒரு மரத்தடியில் ஆமையிடம் ஓட்டப்பந்தயத்தில் தோற்ற முயல் இளப்பாறிக் கொண்டிருந்தது.அதனிடம் வென்ற ஆமை..தனது ஓடும் திறமையில்தான் வென்றோம் என்னும் இறுமாப்பில் முயலைப் பார்த்து'மீண்டும் ஓட்டப் பந்தயத்திற்கு வருகிறாயா?'எனக் கேட்டது.
 
 

தனது அலட்சியப் போக்கால் முன்னர் தோல்வியடைந்த முயல்..சரியான தருணத்திற்குக் காத்திருந்தது.ஆமைக் கேட்டதுமே முயல் 'சரி' எனச் சொல்லி விட்டது.
 

இம்முறை தூங்கிவிடாது, ஒரே தாவலாய்த் தாவி வெற்றிக் கோட்டை அடைந்தது முயல்.
 

ஆமையும் ..அப்போது தான் முயல் போல தன்னால் வேகமாக ஓட முடியாது என்பதை உணர்ந்து..வெட்கித் தலை குனிந்தது.
 

முயலும் சென்ற முறை தன்னை உயர்வாக எண்ணியதால்..ஓடுகையில் தூங்கச் சென்றதை உணர்ந்து..அத் தவறை இம்முறை செய்யாது ஓடி வென்றது.
 

தவறு செய்வது என்பது அனைவரும் செய்யக் கூடியதே..
 

அது போல ஒரு முறை தவறு செய்துவிட்டால் அத்தவறை மீண்டும் செய்யாமல் கவனமாய் இருக்க வேண்டும்.
 
 

நடுவுல கொஞ்சம் பாஸ்போர்ட் காணும்…!



அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் – 23 பாஸ்போர்ட் புக்குகள் காணவில்லை. இது வெறும் புக்தான் ஆனாலும் இதில் நன்கு தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் புழகத்தில் உள்ள பாஸ்போர்ட் மாதிரி உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் தேவையான நம்பரை போட்டு பாஸ்போர்ட் தயாரிக்க முடியும். இதன் மூலம் தீவிரவாதிகள் இந்தியாவில் லீகலாய் நுழைய முடியும்.


sep 22 - ravi passport

 



இப்படிதான் 2010 ஆம் ஆண்டு இஸ்ரேல் உளவுத்துறை மோஸாட் – ஹமாஸ் தலைவரை துபாயில் கொல்ல கூட இந்திய பாஸ்போர்ட் புக்கை திருடித்தான் இந்த காரியத்தை முடித்தது. ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் (Z ) வகை 500 பாஸ்போர்ட்கள் காணாமல் போய் (Z) வைத்திருந்தாலே ஒரு மாதிரி செக் செய்யும் அவலம் இன்றும் ஏர்போர்ட் இமிகிரேஷனில் உலகம் முழுவதும உண்டு. இப்போது இந்த தொல்லை!.


தற்போது ஒரு இந்தியன் பாஸ்போர்ட்டுக்கு சுமார் 7 முதல் 10 லட்சம் வரை விலை போகும்-சர்வ சாதாரணமாய். இந்திய பாராளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் அகமது இதை ஒப்பு கொண்டார். ஹும்.. பாஸ்போர்ட் தொலைஞ்சா எம்பஸில சொல்லாம், எம்பஸியே தொலைச்சா யாருக்கிட்ட சொல்ல முடியும்…!

சர்வதேச அமைதி தினம் – செப்டம்பர் 21!



உலக அமைதி நாள் (International Day of Peace International) ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தினம் 1981 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் மூன்றாம் செவ்வாய்க் கிழமை கொண்டாடப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் தினம் செப்டம்பர் 21 ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது. 



அமைதி என்பதற்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன. தற்காலத்தில் அமைதி என்பது, பகை இல்லாத நிலையைக் குறிக்கிறது. சர்வதேச அளவில் போர் இல்லாத நிலையையும் குறிக்கிறது. மகாத்மா காந்திஜியின் கருத்துப்படி, அமைதி என்பது வன்முறை இல்லாமையை குறிக்கும். அமைதி – இது எங்குள்ளதோ அந்த இடம் எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும். அனைத்து பிரச்னைகளுக்கும், அமைதியே மருந்து

sep 21 - peace day

 



மேலும் உலகின் சகல முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது சமாதானம். வரலாற்றில் பல யுத்தங்கள் நடை பெற்றுள்ளன. 20 ஆம் நூற்றாண்டின் இரு பெரும் உலக மகா யுத்தங்கள் கோடிக்கணக்கான உயிர்களையும் சொத்துக்களையும் காலி செய்திருக்கின்றன. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் உலக சமாதானத்திற்காக 1945 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபை, உலக நாடுகளிடையே பூசல்களையும், போர்களையும் தடுக்க பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நம்மால் துப்பாக்கிகளுக்கும் குண்டுகளுக்கும் ஓய்வு கொடுக்க முடியவில்லை. 



அதே சமயம் உலகின் நிரந்தர சமாதானத்தை உருவாக்கும் பணி யுனெஸ்கோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. உலக சமாதான முயற்சி ஒன்றின் போது ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஹாமர்சீல்ட் விமான விபத்தில் உயிர் துறந்தது கொடுமையிலும் கொடுமையாகும். அவர் 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் மூன்றாம் வாரத்தின் செவ்வாய்க் கிழமையில் மரணம் அடைந்தார். அந்தத் தினமே உலக அமைதி தினமாக அனுசரிக்கப்படுகிறது. 



இந்த யுனெஸ்கோவின் பணி, கல்வி, அறிவியல், பண்பாட்டு நடவடிக்கைகளின் வழியாக உலக சமாதானம், மனித இனத்தின் பொது நலன் ஆகிய குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டும். ஐ.நா சபையும், ஐ.நா சாசனமும் இந்தக் குறிக்கோள்களின் அடிப்படையிலே அமைக்கப்பட்டிருக்கிறது. மனித உரிமைகளையும், கடமைகளையும் செயல்படுத்த முக்கியமாக தேவைப்படுவது சமாதானமாக இருக்கிறது. அதாவது, குடிமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரமான, நியாயமான சட்டம், சமத்துவம், ஒருமைப்பாடு என்பது தான் சமாதானமாக இருக்கிறது. சமாதானம், வளர்ச்சி, ஜனநாயகம் ஆகிய மூன்றும் ஒன்றுக்கு ஒன்று உருதுணைபுரிபவையாக இருக்கின்றன. அவை ஒன்றையொன்று வலுப்படுத்துகின்றன. 



உலகில் அணு ஆயுதங்களுக்கு ஐக்கிய அமெரிக்க நாடுகள், ரஷ்யா (முன்னாள் சோவியத் ஒன்றியம்), சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடிக் கொண்டுள்ளன. உலக அமைதியை வலியுறுத்தும் நாடுகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையையே தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் நாடுகள் கூட பாதுகாப்பு என்கிற போர்வையில் அணு ஆயுத பலத்தை பெருக்குகின்றன என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். 

குல்லா வியாபாரியும் ..குரங்கும் - நீதிக்கதை!


 
ஒரு ஊரில்  ஒரு குல்லா வியாபாரி இருந்தார். அவர் தலைக்குல்லாய்களை  ஒரு மூட்டையாகக்  கட்டி  தலையில் சுமந்து வியாபாரம்  செய்து வந்தார் .
 

வெயிலில்  அவர் அலைவதால் ..அவரும் ஒரு குல்லா அணிந்திருந்தார்    .
ஒருநாள்  குல்லாக்களை  விற்க..தலையில் சுமந்தப்படி  சென்ற அவர் ..ஒரு மரத்தின் கீழ்  மூட்டையை இறக்கி வைத்து விட்டு கண்ணயர்ந்தார் .
 
 

அந்த மரத்தில் நிறைய குரங்குகள் இருந்தன.அவை கீழே இறங்கி வந்து மூட்டையைப் பிரித்து அதில் இருந்த குல்லாய்களை ..
அதனதன் தலைகளில் அணிந்துக் கொண்டன.
  

தூக்கம் கலைந்து எழுந்த வியாபாரி ..  
 
குல்லா மூட்டையைக் காணாது .. 
 
மரத்தை ஏறிட்டு நோக்க ..   
 
குரங்குகள் ஒவ்வொன்றும் குல்லாய் அணிந்திருந்தன. 

அவற்றிடம் இருந்து குல்லாயை எப்படி வாங்குவது என யோசித்த வியாபாரி ..குரங்குகள் நாம் செய்வதையே திரும்பச் செய்யும் என படித்திருந்தார் .

அதனால் , தன் தலையிலிருந்த  குல்லாயைக் கழட்டி கீழே எறிந்தார் .
அதைப் பார்த்த குரங்குகள் தங்கள் தலையில் இருந்த குல்லாய்களையும் கீழே வீசின .

வியாபாரி எல்லாவற்றையும் எடுத்து மீண்டும் மூட்டையாகக் கட்டிக் 
கொண்டு   வியாபாரத்திற்குக்  கிளம்பினார் .

  எந்த காரியத்திலும் நாம் சற்று  சிந்தித்து செயல்பட்டால் வெற்றி அடையலாம் .

இந்தக் கதையில் வியாபாரி தன் புத்தியை உபயோகித்ததால்  அவரது குல்லாக்களுக்கு  சேதமின்றி திரும்பக் கிடைத்தது . 
 

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top