.......................................................................... ....................................................................... ......................................................................

Monday 16 September 2013

செப்டம்பர்19-இல் நடிகை டி.பி.ராஜலட்சுமி நூற்றாண்டு விழா: முதல்வர் உத்தரவு



தென்னிந்தியாவின் முதல் நடிகை மற்றும் பெண் இயக்குநர் டி.பி. ராஜலட்சுமியின் நூற்றாண்டு விழாவை செப்டம்பர் 19-ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் 1911-ஆம் ஆண்டு பிறந்தவர் டி.பி.ராஜலட்சுமி. தனது இளமைக்காலம் முதலே நாடக்குழுவில் நடித்து வந்த ராஜலட்சுமி, எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "பவளக்கொடி', "கோவலன்' ஆகிய நாடகங்களில் கதாநாயகியாக நடித்து பேரும் புகழும் பெற்றார். தனது 18-ஆம் வயதில்  "கோவலன்' என்னும் திரைப்படத்தில் மாதவி வேடத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறையில் முதன் முதலாக கால் பதித்தார். தமிழில் வெளிவந்த முதல் பேசும் படமான "காளிதாஸ்' திரைப்படத்தில் டி.பி.ராஜலட்சுமி நடித்துள்ளார். மேலும் ராஜம் டாக்கீஸ் என்ற தனது சொந்த பட நிறுவனம் மூலம் "மிஸ் கமலா' என்ற திரைப்படத்தை தயாரித்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். 


தன்னுடன் திரைப்படங்களில் நடித்த டி.வி.சுந்தரம் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். 20 ஆண்டுகாலம் திரைப்படத்துறையில் புகழ் பெற்று விளங்கிய இவர் 1964- ஆம் ஆண்டு காலமானார். ஒரு நடிகையாக மட்டுமின்றி இயக்குநர், எழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரராக விளங்கும் டி.பி.ராஜலட்சுமிக்கு செப்டம்பர் 19-ஆம் தேதி நூற்றாண்டு விழா நடத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

எச்.ஐ.வி.,யை அழிக்க புதிய மருந்து: அமெரிக்க ஆய்வாளர்கள் சாதனை!






அமெரிக்க ஆய்வாளர்கள், எச்.ஐ.வி., வைரசை அழிக்கும், புதிய மருந்துப் பொருளை, கண்டுபிடித்து உள்ளனர்.


எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான, எச்.ஐ.வி., வைரசை அழிப்பதில், மருத்துவர்களும், மருந்துப் பொருள் தயாரிப்பாளர்களும், இன்னும் தங்கள் ஆய்வில், 100 சதவீத வெற்றியை அடையவில்லை என்றே கூறலாம். அமெரிக்காவில் உள்ள, மின்னிசோட்டா பல்கலைக்கழக மருந்துப்பொருள் தயாரிப்புத் துறை ஆய்வாளர்கள், எச்.ஐ.வி., வைரசை அழிக்கும் மருந்துப் பொருளைக் கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டு உள்ளனர். இவர்களின் ஆராய்ச்சியின் பலனாக, எச்.ஐ.வி.,யைக் கட்டுப்படுத்தும், இரு திரவ மருந்துகளின் கலவையில் புதிய மருந்துப் பொருளைக் கண்டுபிடித்து உள்ளனர்.


ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வுக் கட்டுரையில் கூறியுள்ளதாவது: புற்று நோயைக் கட்டுப்படுத்த, "டெசிடேபைன், கெம்சிடேபைன்' என்ற இரு திரவ மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துப் பொருட்கள், எச்.ஐ.வி., வைரசை அழிக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளன. இந்த மருந்துகள், நோயாளிகளுக்கு, ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இதனால், பெரும் நேர விரயமும், பொருட் செலவும் ஏற்படுகிறது.




 இந்த சிகிச்சை பெறும் நோயாளிகள், சிகிச்சை முடியும் வரை, எவ்வித வேலையிலும் ஈடுபட முடியாமல், படுக்கையிலேயே இருக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால், இந்த இரு மருந்துப் பொருட்களையும் ஒன்றாக்கி, மாத்திரை வடிவில் புதிய மருந்துப் பொருள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், நோயாளிகளின், பொருள் மற்றும் நேரம் மிச்சப்படுத்தப்படும். எனினும், முதற்கட்ட சோதனைகளுக்குப் பின்னரே, நோயாளிகளுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்படும். புதிதாக உருவாக்கப் பட்டுள்ள மருந்து, சோதனையில் வெற்றி பெற்றால், எய்ட்ஸ் நோய்க்கான மருந்துப் பொருள் தயாரிக்கும் ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு ஒரு மைல் கல்லாய் அமையும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

‘தமிழக அரசு பாட்டில் குடிநீர் விற்பனை முயற்சியை கைவிட வேண்டும்!’ – பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை!



“தண்ணீருக்கு விலை வைப்பது என்பது, நம் உயிரை விலை பேசுவது போன்றது. எனவே, தமிழகத்தில் தண்ணீர் விற்பனையை அனைத்து வகைகளிலும் தடை செய்து, தண்ணீர் பொதுச்சொத்து என்று சமூகஉரிமையை நிலைநாட்டி தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும்.”என்று பூவுலகின் நண்பர்கள் குழு கேட்டுக் கொண்டுள்ளது.


இது குறித்து அக்குழு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில்,”மனிதனின் அடிப்படைத் தேவைகளில் தண்ணீரும் முதன்மையானது, உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது. ஆரோக்கியமான, சுத்தமான தண்ணீர் மழையாய் பொழிந்து, ஆறுகளின் வழியாக காலம்காலமாக நமக்குக் கிடைத்து வருகிறது. வரலாற்றில் நாகரிகங்கள் தோன்றி வளரக் காரணமாக இருந்தது பெரும் நதிகள்தான்.


நம் நாட்டில் எதிரி வீடுகளுக்குச் சென்றாலும்கூட, முதலில் நமக்குக் கொடுத்து உபசரிப்பது ஒரு குவளை தண்ணீர்தான். மேலும், ஒருவரிடம் ஒரு குவளை தண்ணீர் வாங்கிக் குடித்தாலும், அவருக்கு நாம் நன்றிக் கடன் பட்டவர்களாகி விடுகிறோம்.

sep 15 amma mineral water spot

 


காலங்காலமாக தண்ணீர் பந்தல் அமைத்தும், வீட்டின் முன்புறம் மண்பானை வைத்தும் தண்ணீரை இலவசமாக தந்தது நமது பண்பாட்டின் பெருமைமிகு அடையாளம். சுவாசிக்கும் காற்றைப் போல பெரும்பாலான அடிப்படைத் தேவைகள் பொதுச்சொத்தாக, அனைவருக்கும் இலவசமாக கிடைத்து வருவது போலவே தண்ணீரும் கடந்த நூற்றாண்டு வரை இலவசமாகவே கிடைத்து வந்தது. ஆனால், தண்ணீர் இன்றைக்கு விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டுவிட்டது.


பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீர்தான் பாதுகாப்பாக, சுகாதாரமாக இருக்கும், அதற்கு 20 ரூபாய் கொடுப்பது தப்பில்லை என்றொரு மனப்பான்மை வலிந்து திணிக்கப்பட்டுவிட்டது. ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு ரூபாய்க்கும் குறைவான காசில் அரசிடம் இருந்து வாங்கி, அதை 10 ரூபாய், 20 ரூபாய் என்று விற்கும் மிகப் பெரிய பகல் கொள்ளை நிகழ்ந்து வருகிறது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல, போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக தமிழக அரசே பாட்டில் குடிநீரை விரைவில் அறிமுகப்படுத்தப் போகிறது.


கடந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட தேசிய தண்ணீர் வரைவு கொள்கையும் (2012) தண்ணீரை விற்பனைப் பண்டமாக முன்னிறுத்துகிறது. மக்களின் உழைப்பு, அறிவை பயன்படுத்தி நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு நேர்மாறாக, மீண்டும் உருவாக்க முடியாத இயற்கை ஆதாரங்களை கூறுபோட்டு விற்பதையே மத்திய, மாநில அரசுகள் செயல்திட்டமாகக் கொண்டுள்ளன. காற்று, தண்ணீர், காடுகள் போன்ற அனைத்தும் மக்களின் பொதுச் சொத்து, இவற்றை மத்திய, மாநில அரசுகள் விற்பனைப் பண்டமாக்கி விற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக, தண்ணீரை விற்பனைப் பண்டமாக மாற்றுவது மிகப் பெரிய ஆபத்து.


அனைவருக்கும் சுகாதாரமான தண்ணீரை வழங்க வேண்டியது அரசின் கடமை. வீட்டு குடிநீர் இணைப்புக்கு ஏற்கெனவே நாம் பணம் செலுத்தி வருகிறோம். ஆனால், எல்லா நாளும் தண்ணீர் விநியோகிக்கப்படுவதில்லை. அப்படியே விநியோகிக்கப்பட்டாலும், அந்தத் தண்ணீர் தரமானதாக இல்லை.
இதற்குக் காரணம் கழிவுநீரை சுத்திகரிப்பது, கால்வாய்களைக் கட்டி நகர்ப்புற கழிவுநீரை வெளியேற்றுவது போன்ற செயல்களை மேற்கொள்ளாமல் நம் வாழ்வின் ஆதாரமாக இருக்கும் ஆறுகளை மாசுபடுத்தி, சுற்றுச்சூழலும் நீராதாரங்களும் அழிந்து போக அரசே நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக இருப்பதுதான்.


தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னையில் அனுமதி பெறாமல் செயல்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை சில மாதங்களுக்கு முன் மூடியபோது, தமிழ்நாடு பேக்கேஜ்டு குடிநீர் உற்பத்தியாளர் சங்கம் ஒட்டுமொத்த குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை 3 நாள்களுக்கு மூடி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது. குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளை முறைப்படுத்துவதற்கு எதிராகத்தான், அந்த அமைப்பு செயற்கையான ஒரு குடிநீர் பஞ்சத்தை உருவாக்கி, தன் வலிமையைக் காட்டியது. இதன்மூலம் தெரிய வருவது என்னவென்றால், இவர்கள் நினைத்தால் எதிர்காலத்தில் நமக்குத் தேவையான தினசரி குடிநீரை தடுக்க முடியும், நினைத்த விலையை வைத்து விற்க முடியும், எப்படி வேண்டுமானாலும் நம்மை பிளாக் மெயில் செய்ய முடியும்.


தண்ணீரை விற்பனைப் பண்டமாக்குவதன் மூலம், நிலத்தடி நீர் கண்மண் தெரியாமல் உறிஞ்சப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் சரியும். ஏற்கெனவே, விவசாயம், வீட்டுப் பயன்பாடுகளுக்கு பெருமளவு ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டுவிட்டதால், நிலத்தடி இயற்கை ஊற்றுகள் வற்றி விட்டன, நிலத்தடி நீர்மட்டம் சரிந்துவிட்டது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நம் நாட்டில் பாதிக்கு மேற்பட்ட மக்கள் விவசாயிகள், பெருமளவு மக்கள் ஏழைகள். ஏற்கெனவே பணவீக்கம், விலைவாசி ஏற்றம் போன்றவற்றால் இவர்கள் வாழ்க்கை நடத்துவது கடினமாக உள்ள சூழ்நிலையில், தண்ணீர் போன்ற அடிப்படை தேவையை விற்பனைப் பண்டமாக்கி, காசுக்கு விற்பனை செய்வது அவர்களை கூடுதல் நெருக்கடியிலேயே தள்ளும்.

தண்ணீரை விற்பனைப் பண்டமாக மாற்றுவது என்பது, இது போன்ற வேறு பல பெரும் பிரச்சினைகள் உருவாகக் காரணமாக இருக்கும். எனவே, அதை முதல் நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும்.



ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் குடிநீர் தொட்டியுடன், நீர் சுத்திகரிப்பு கருவியை பொருத்தினாலே போதும், மக்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான குடிநீர் கிடைத்துவிடும். இதற்கு பெரும் முதலீடும் தேவையில்லை, பணிச் சுமையும் பெரிதாக இருக்காது.


கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. தண்ணீர் சேகரிப்புக்கு அது போன்ற ஆக்கப்பூர்வமான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து இப்போது யோசிக்கலாம். இயற்கையாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் பெருமளவு தண்ணீரை சேகரித்து பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராயாமல், பன்னாட்டு, உள்நாட்டு வியாபாரிகளுக்கு தண்ணீர் விற்பனையை திறந்து விடுவதால், நமது தண்ணீர் தேவையும் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகின்றன.


இந்த விவகாரத்தில், நாம் கவனம் செலுத்த வேண்டிய முதல் விஷயம் “தண்ணீர் என்பது பொதுச்சொத்து, அதை விற்பதற்கு அரசுக்கு உரிமையில்லை” என்பதுதான். உலகின் பல நாடுகளில் தண்ணீர் பொதுச்சொத்தாகவே இருக்கிறது. ஐ.நா. சபையும் தண்ணீர் வழங்குவதை, அடிப்படை மனித உரிமையாகக் குறிப்பிட்டிருக்கிறது.


தண்ணீருக்கு விலை வைப்பது என்பது, நம் உயிரை விலை பேசுவது போன்றது. எனவே, தமிழகத்தில் தண்ணீர் விற்பனையை அனைத்து வகைகளிலும் தடை செய்து, தண்ணீர் பொதுச்சொத்து என்று சமூகஉரிமையை நிலைநாட்டி தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும்.


தமிழக அரசு, தனியார் தண்ணீர் விற்பனையை தடைசெய்ய வேண்டும். மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட தேசிய தண்ணீர் வரைவுக் கொள்கை – 2012யை திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசு பாட்டில் குடிநீர் விற்பனை முயற்சியை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தமிழ் கலைஞ்ர்களுக்கென தனி அமைப்பு!’ – பாரதிராஜா பரபரப்பு பேச்சு!



“ஆந்திராவில் தெலங்கானா பிரச்னை நடந்து கொண்டிருப்பதால், ஆந்திர கலைஞர்கள், விழாவில் ஆட முடியாது என்று சொல்லி விட்டார்கள். தமிழ் கலைஞர்களால் அப்படி சொல்ல முடியவில்லை. நமக்கு பிரச்னைகள் இல்லையா? ஈழத் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். காவிரிப் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. முல்லைப் பெரியாறு பிரச்னை தீரவே இல்லை. கச்சத்தீவு பிரச்னை இருக்கிறது. மீனவர்கள் கூட்டம், கூட்டமாக சுடப்படுகிறார்கள். இதெல்லாம் பிரச்னை இல்லையா? தமிழர்களான நாங்களும் பிரச்னையில்தான் இருக்கிறோம். எனவே, சினிமா நூற்றாண்டு விழாவில் எங்களால் கலந்துகொள்ள முடியவில்லை என்று சொல்ல முடியவில்லை. “என்று பாரதிராஜா வேதனையுடன் குறிப்பிடடத்தை பற்றி கோலிவுட்டில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

sep 17 JK Enum Nanbanin  MINI
 


டிரீம் தியேட்டர் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சேரன் எழுதி, இயக்கியுள்ள “ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா முன்னிலையில் நடிகர் சூர்யா ஒலிப்பேழையை வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.
அந்த விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசும் போது,”டைரக்டர் சேரன் உணர்ச்சிகரமானவர். அற்புதமான கலைஞன். யதார்த்தமாகவும், மண்வாசனையோடும் படம் எடுக்க கூடியவர். அவரது ‘தவமாய் தவமிருந்து’ படத்தை பார்த்தபோது என்னால் இதுபோன்ற ஒரு படம் எடுக்க முடியவில்லையே என்று நினைத்து இருக்கிறேன். வாழ்க்கையை பிழிந்து படம் எடுத்து இருந்தார். 


சினிமாவில் யதார்த்தங்கள் வரவேற்கதக்கதுதான். ஆனால் பாதையை மாற்றக்கூடாது. என் தாத்தா போட்ட ஒத்தையடிப்பாதையை என் தந்தை வண்டிச் சாலையாக்கினார். நான் தார்ச்சாலை போட்டேன். என் பிள்ளை சிமெண்ட் சாலை போடுவான். அது ரப்பர் சாலை ஆகலாம். இப்படித்தான் சினிமாவில் மாற்றம் இருக்க வேண்டும்.


தமிழ் பண்பாடு கலாச்சாரத்தை விட்டு விட்டு படம் எடுக்க கூடாது. அவற்றை சார்ந்தே படங்கள் இருக்க வேண்டும்.ஆனாலும் தமிழ்த் திரையுலகில் இன்று, இளம் இயக்குனர்கள் வித்தியாசமான சிந்தனைகளுடன் படங்கள் இயக்குகிறார்கள். நாம் எந்தக் கதையை வேண்டுமானாலும் இயக்கலாம். 

ஆனால், தமிழ் மண்ணையும், கலாசாரத்தையும், நாகரீகத்தையும், பண்பாட்டையும் மறக்ககூடாது. இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும், தமிழக அரசும் இணைந்து நடத்த இருப்பதை அறிந்தேன். நம் உணர்வுகளை சொல்ல, நமக்கென்று தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை இல்லையே என்று நினைக்க தோன்றுகிறது.
ஆந்திராவில் தெலங்கானா பிரச்னை நடந்து கொண்டிருப்பதால், ஆந்திர கலைஞர்கள், விழாவில் ஆட முடியாது என்று சொல்லி விட்டார்கள். தமிழ் கலைஞர்களால் அப்படி சொல்ல முடியவில்லை. நமக்கு பிரச்னைகள் இல்லையா? ஈழத் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். 


காவிரிப் பிரச்னை முடிவுக்கு வரவில்லை. முல்லைப் பெரியாறு பிரச்னை தீரவே இல்லை. கச்சத்தீவு பிரச்னை இருக்கிறது. மீனவர்கள் கூட்டம், கூட்டமாக சுடப்படுகிறார்கள். இதெல்லாம் பிரச்னை இல்லையா? தமிழர்களான நாங்களும் பிரச்னையில்தான் இருக்கிறோம். எனவே, சினிமா நூற்றாண்டு விழாவில் எங்களால் கலந்துகொள்ள முடியவில்லை என்று சொல்ல முடியவில்லை. 


தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் இருக்கிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இருக்கிறது. ஆனால், தமிழ் நடிகர்களுக்கு என்று சங்கம் இல்லை. தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் இல்லை. தமிழ் திரைப்பட வர்த்தக சபை இல்லை. எனவே, இதுபோன்ற அமைப்புகள் தொடங்க வேண்டும்” என்று பாரதிராஜா பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார.

கரடியும் இரு நண்பர்களும்............குட்டிக்கதைகள்



இரண்டு நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து காட்டுப் பகுதியைக் கடக்க வேண்டியிருந்தது....


அவர்கள் போகும் வழியில் ...எதிரே திடீரென ஒரு கரடி வர..மரம் ஏறத்தெரிந்த நண்பன் மற்றவனை விட்டு விட்டு சட்டென்று பக்கத்தில் இருந்த மரத்தில் தாவி ஏறிவிட்டான்.


என்ன செய்வது என பயந்த மற்றவன் அப்படியே கீழே படுத்து ..மூச்சை அடக்கி செத்த பிணம் போலக் கிடந்தான்.


உயிரற்ற உடலைக் கரடி பார்க்காது என்பதற்கிணங்க ...அக்கரடி அவனிடம் வந்து மோப்பம் பிடித்து விட்டு அகன்றது.


கரடி சென்றதும் மரத்திலிருந்த நண்பன் இறங்கி..'கரடி உன்னை நெருங்கி உன் காதில் என்ன சொல்லிற்று' என்றான்.


அதற்கு மற்றவன்..'ஆபத்து காலத்தில் உன்னை உதறி விட்டு தன்னை மட்டும் காப்பாற்றிக்கொள்ள மரம் ஏறிய சுயநலமிக்க நண்பர்களை நம்பாதே என்று சொல்லிற்று' என்றவாறே..அவனை விட்டு
பிரிந்து தனியே நடக்கலானான்.


ஒருவருக்கு ஆபத்து வரும் நேரத்தில் உதவுவது நண்பர்களின் செயலாக இருக்கவேண்டும். 
 

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top