.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 14 September 2013

அச்சம் தவிர்- (நீதிக்கதைகள்)



ஒரு காட்டில் பல முயல்கள் இருந்தன...இவை..தினம்..தினம்.,சிங்கம்..புலி ஆகியவை தாக்குமோ என பயந்து பயந்து வாழ்ந்தன.

ஒரு நாள் இவை எல்லாம் ஒன்று சேர்ந்து ..'நாம் கோழைகளாக தினம்..தினம் ..பயந்து சாவதை விட ஒட்டு மொத்தமாக குளத்தில் விழுந்து சாகலாம்'என முடிவெடுத்து..ஒரு குளத்தை நோக்கிச் சென்றன..

அந்த குளத்தில்.. பல தவளைகள் வாழ்ந்து வந்தன..குளத்தின் கரையில் உட்கார்ந்து கொண்டிருந்த தவளைகள்...எல்லா முயல்களும் அவற்றை நோக்கி வருவதைப் பார்த்து ..குளத்தில் குதித்து மறைந்தன.

இதைப் பார்த்த முயல்களின் தலைவன் மற்ற முயல்களைப்பர்த்து ..'நாம் கோழைகள் தான்..ஆனால் நம்மை விட கோழையானவர்களும் உலகில் உள்ளனர்.அவர்களே பயமில்லாமல் வாழும்போது நாம் ஏன் பயப்படவேண்டும்' என்று கூற .. அனைத்தும் திரும்பின.

நாம் பிறரைக் கண்டு பயப்படாமல் இருக்கவேண்டும்.நம்மைக் கண்டு பயப்படுபவர்களும் உலகில் இருப்பார்கள்.

பயம்..மனிதனை சிறிது சிறிதாக கொன்றுவிடும்.ஆகவே எதற்கும் எப்போதும் பயப்படக்கூடாது

வன்முறை எண்ணத்தை தூண்டுமோ வானிலை மாற்றம்?


அண்மையில், பர்க்லியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எட்வர்ட் மிகுவல் என்ற விஞ்ஞானியின் தலைமையிலான ஆய்வர் குழு, “வளிமண்டல வெப்பநிலை உயர்வு, மனிதர்களின் நரம்பு சார்ந்த உடற்செயலியல் நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, உலகில் போர் நிகழும் வாய்ப்புகளை அதிகமாக்கும்’ என்று கூறுகிறது.ஆம், வளி மண்டலத்தில் கரியமில வாயு போன்ற பசுங்குடில் வாயுக்கள் நிறைவதால் உலகளாவிய சூழல் வெப்பநிலை அதிகரித்து பல வகையான விபரீத விளைவுகளை உருவாக்கும்.


சாதாரணமாகவே கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கிறபோது அல்லது அலுவலக அறையில் குளிரூட்டும் கருவி பழுதாகி புழுக்கம் வதைக்கிறபோது அல்லது பயணிகள் நிரம்பி வழிகிற பஸ் அல்லது ரயில் பெட்டிக்குள் சிக்கிக்கொண்டு மூச்சு விடக்கூட முடியாமல் திணறுகிறபோது அல்லது சாலைப் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு காரை நகர்த்த முடியாமல் தவிக்கிறபோது – இதுபோன்ற நேரங்களில், எல்லாருக்குமே நிதானம் தவறி மனதில் எரிச்சலும் கோபமும் பொங்கியெழும். சம்பந்தாசம்பந்தமில்லாமல் எரிந்து விழுவது, கெட்ட வார்த்தைகளால் திட்டுவது, சின்ன விஷயத்துக்குக்கூட வரிந்து கட்டிக்கொண்டு மல்லுக்கு நிற்பது, காது கிழியும்படி லாரி அல்லது காரின் ஊதுகுழலை அலற விடுவது போன்றவை அத்தகைய மனநிலையின் வெளிப்பாடுகள்.


sep 14 - climate and violence

 



மிகுவல் குழுவினரின் ஆய்வு முடிவு, பருவநிலை மாறுபாடுகளால் உலகளாவிய வளிமண்டல வெப்பநிலை உயர்வதற்கும் மனிதர்களின் உடல் நலம் மற்றும் மனநலக் குலைவுகளுக்குமிடையில் ஒரு நேரான இணைப்பு இருப்பதாகக் கூறுகிறது. சூழல் வெப்பநிலை உயரும்போது மனித மனங்களில் வன்முறை எண்ணங்கள் தோன்றுவதும் அதிகமாகிறது. அவ்வாறு ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பதை அந்த ஆய்வர்களால் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்ட முடியவில்லை.சூழல் வெப்பநிலை உயரும்போது தனி நபர்களின் நரம்பு மண்டலம் சார்ந்த உடலியக்கவியல் நடவடிக்கைகளில் தாக்கமுண்டாவதாக மிகுவல் ஊகிக்கிறார்.


மிகுவலின் ஆய்வர் குழு கி.மு. 8000 முதல் உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த சண்டை சச்சரவுகளையும் வன்முறைகளையும் ஆராய்ந்து, முக்கியமான பல நூறு வன்முறை சம்பவங்களைப் பகுப்பாய்வு செய்து, பல்லாயிரம் தரவுகளைப் பதிவு செய்துள்ளது. அவற்றுக்கும் பருவ நிலை மாற்றங்களுக்குமிடையில் ஏதாவது நேர்கோட்டுப் பொருத்தம் தென்படுகிறதா என புள்ளியியல் தத்துவங்களின் அடிப்படையில் ஆய்வு செய்திருக்கிறார்கள். சில ஆயிரம் வாக்காளர்களிடம் விசாரணை செய்து அடுத்து எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்று அறிவிப்பதைப் போன்ற செயல்முறைதான் இது. எனினும் இதை அறிவியல் அங்கீகரிக்கிறது. பெரும்பாலான சமயங்களில் அத்தகைய ஜோசியங்கள் பலித்தும் விடுகின்றன.


2050-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய வளிமண்டல வெப்ப நிலையில் இரண்டு செல்சியஸ் டிகிரி வரை உயர்வு ஏற்படக்கூடும் என அனுமானம் செய்கிற விஞ்ஞானிகள், அது கோடை கால சராசரி வெப்ப நிலை உயர்வு, காலமில்லாத காலத்தில் பெரு மழைப் பொழிவு போன்ற விளைவுகளை ஏற்படுத்தலாம் என ஊகிக்கிறார்கள். அது மட்டுமின்றி தற்காலத்தில் இனம், மதம், சாதி, கட்சி சார்ந்த சச்சரவுகள் பரவலாக நிகழ்ந்து கொண்டிருக்கிற நாடுகளில், குறிப்பாக வெப்ப மண்டல நாடுகளில், உள்நாட்டுக் கலகம், புரட்சி போன்ற சச்சரவுகளின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை உயரக்கூடும் எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.



எனினும் பருவ நிலை மாற்றத்துக்கும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கும் ஓர் இணைப்பு உள்ளதாக அவர்களால் சுட்டிக்காட்ட முடிந்த போதிலும், எந்த நாட்டில், எந்தப் பகுதியில், எந்தவிதமான சச்சரவு எப்போது வெடிக்கும் என்று சொல்லக்கூடிய வகையில் ஒரு விதி அல்லது கோட்பாட்டை அவர்களால் உருவாக்க முடியவில்லை. ஆனால், பாதகமான பருவ நிலை மாற்றத்துக்கும் வன்முறை உணர்வுகள் தூண்டப்படுவதற்குமிடையில் ஒரு காரண காரிய இணைப்புள்ளது என்பதை அனுபவம் சார்ந்த சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.



வன்முறை என்பதில் கொலை, களவு, கற்பழிப்பு போன்ற தனி நபர் குற்றங்களும் குழுக்களுக்கிடையிலான சச்சரவுகளும் அடங்கும். மிகுவல் ஆய்வுக்குழு உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்த 27 வன்முறைச் சம்பவங்களைப் பகுப்பாய்வு செய்த பின்னர், அதிகரித்த வறட்சி, சராசரியைவிட கூடுதலான ஆண்டு வெப்பநிலை போன்ற பாதகமான பருவநிலை மாற்றங்கள் அந்தச் சச்சரவுகளுக்கு ஒரே மாதிரியான தூண்டு விசையாக அமைந்தன என்று முடிவு செய்தது. மனிதர்களின் நரம்பு சார்ந்த உடலியக்கவியல் செயல்பாடுகளில் ஏற்பட்ட தாக்கம் மட்டுமின்றி, விவசாயம் பொய்த்தது போன்ற பொருளாதார சீர்குலைவுகளும் பருவநிலை மாற்றங்கள் காரணமாக ஏற்பட்டுச் சச்சரவுகளுக்கு வித்திட்டிருக்கக்கூடும். வளர்ச்சியில் பின்தங்கியுள்ள நாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் உணவுக்கும் வருவாய்க்கும் உள்நாட்டு விவசாய உற்பத்தியையே நம்பியிருக்கின்றனர். அதீதமான வறட்சி அல்லது பெருமழைப் பொழிவு விவசாய உற்பத்தியை பாதித்து வருவாயைக் குறைக்கும். அதன் காரணமாக மக்களிடம் விரக்தியும் ஏமாற்றமும் தோன்றி வன்முறைச் சம்பவங்களுக்கு வழிகோலும் என மிகுவல் கருதுகிறார்.



பண்டைய காலத்தில் மாயன் மற்றும் சீன சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சி முதல், அண்மைக்காலத்தில் இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் அதிகரித்த குடும்பச் சண்டைகள், அமெரிக்காவிலும் தான்சானியாவிலும் அதிகரித்த கொலைகளும் குற்றங்களும் ஐரோப்பாவிலும் தெற்காசியாவிலும் அதிகரித்த இனக்கலகங்கள், பிரேசிலில் மக்கள் அரசு நிலங்களை ஆக்கிரமித்தது, வெப்ப மண்டல நாடுகள் எல்லாவற்றிலுமே குடும்ப மற்றும் சொத்துத் தகராறுகள் அதிகரித்தது என்பன வரையான பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் மிகுவல் குழுவினரால் பகுப்பாய்வு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றின் அடிப்படையிலேயே பருவ நிலை பாதிப்புகளுக்கும் மனித சமூகச் சச்சரவுகளுக்குமிடையில் ஒரு தொடர்பு இருப்பதாக மிகுவல் ஆய்வுக் குழுவினர் முடிவு செய்தனர். 



அந்தத் தொடர்பு எத்தன்மையது என்பதைப் பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் தொடர்பு இருப்பதை யாரும் மறுதலிக்கவில்லை. அவருடைய ஆய்வர் குழுவில் தொல்லியல், குற்ற ஆய்வியல், பொருளியல், புவியியல், வரலாற்றியல், அரசியல், உளவியல் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் தாங்கள் சேகரித்த தரவுகளை, புள்ளியியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தி, கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்ப நெளிவு சுளிவுகளை அனுமதித்து பகுப்பாய்வு செய்த பின்னரே முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.



எதிர்காலத்தில் வெப்பநிலை உயர்வு காரணமாக வேறு பல பாதக விளைவுகளுடன் உள்நாட்டுக் கலகங்களும் இனப்படுகொலைகளும், ஏன் மூன்றாவது உலகப் போரும்கூட மூளலாம் என்ற சாத்தியக் கூறும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. உலகளாவிய வெப்பநிலை உயர்வைத் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயமும் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சந்தைக்கு வந்த சைவ (தாவர) முட்டை!



சைவ பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக கோழி முட்டைக்கு பதிலாக தாவர முட்டை தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது:இது வரை முட்டை சைவ உணவா? அல்லது அசைவ உணவா? என்ற சர்ச்சை இருந்து வருகிறது. எனவே, கோழி முட்டைக்கு பதிலாக தாவரத்தில் இருந்து சைவ முட்டை தயாரிக்கும் பணி நடந்து வந்த நிலையில்அமெரிக்க நிறுவனத்தை சேர்ந்த உணவு பொருள் விஞ்ஞானிகள் முழுக்க தாவரப் பொருள்களை கொண்டு நவீன செயற்கை முட்டையை உருவாக்கி சாதனைப் படைத்து விட்டார்கள். இதை பயறு, பட்டாணி வகைகளை சேர்ந்த 11 சத்துமிக்க பொருள் மற்றும் புளிக்கரைசல் கொண்டு தயாரிக்கிறார்கள்.


sep 14 - artificial  Eggs -

 



தற்போது இந்த செயற்கை தாவர முட்டை அமெரிக்க மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. கோழி முட்டையை விட இதன் விலை 19 சதவீதம் குறைவு என்றும், இதனால் கோழிப்பண்ணை தொழிலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அந்த நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி ஜோஸ் தெட்ரிக் கூறுகிறார்.மேலும்”சைவ பிரியர்கள் முட்டை மற்றும் இறைச்சிக்கு மாற்றான பொருட்களை எதிர்பார்க்கின்றனர். எனவே, அவர்களின் தேவையை நிறைவேற்ற நாங்கள் முயன்று வருகிறோம். தற்போது தூள் வடிவில் முட்டை தயாரித்துள்ளோம். அவை சில பேக்கரிகளில் முட்டைக்கு பதிலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை கோழி முட்டை தரத்தில் அதேபோன்று வழங்க தீவிர முயற்சி செய்துள்ளோம்” எனவும் தெரிவித்தார்.


‘Artificial egg’ made from plants on sale


A radical ‘artificial egg’ backed by Paypal billionaire Peter Thiel and Bill Gates goes on sale in US supermarkets for the first time today.Made from plants, it can replace eggs in everything from cakes to mayonnaise – without a chicken ever coming close to the production process.

அறிவுலக மேதையாகத் திகழ்ந்தவர் அண்ணா : ஜெயலலிதா புகழாரம்!




ஓர் அறிவுலக மேதையாகத் திகழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா புகழாரம் செய்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள மடலில், எண்ணற்ற தமிழர்களின் எண்ணங்களில் நீக்கமற வீற்றிருப்பவரும்; தாய்மொழியாம்  தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவரும்; தனது நாவன்மையாலும், எழுத்துத் திறமையாலும், ஜனநாயகப் பண்பினாலும் தமிழ் நாட்டில் மறுமலர்ச்சியை உருவாக்கியவருமான பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 105-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதிலும், இந்த நன்னாளில் அவருடைய சிந்தனைகளை, பன்முக ஆற்றலை நினைவு கூர்ந்து அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்வதிலும், உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் அளவில்லா ஆனந்தமும், மட்டற்ற மகிழ்ச்சியும் அடைகிறேன்.


இணையற்ற பேச்சாளர்; எழுச்சி மிகு எழுத்தாளர்; திறமையான நிர்வாகி; சிறந்த கவிஞர்; கண்ணியம் மிக்க அரசியல் தலைவர்; மாற்றாரையும் மதிக்கும் மனித நேயப் பண்பாளர்; ஏழைகளின் ஏந்தல் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா என்று சொன்னால் அது மிகையாகாது.

 
சுயமரியாதைச்  சிந்தனைகளை, முற்போக்கு கொள்கைகளை, சீர்திருத்தக் கருத்துகளை தன்னுடைய நாடகங்களின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பரப்பியவர் பேரறிஞர் அண்ணா.


பாமர மக்களும்  புரிந்து கொள்ளும் விதத்தில் பாடல்களை இயற்றியவர் மகாகவி பாரதி என்றால்,  பாமரரையும், படித்தவரையும் ஈர்க்கும் வகையில் மேடைப் பேச்சினை ஒரு கலையாக மேன்மைப்படுத்திவர் நம் பேரறிஞர் அண்ணா.


தமிழில் மட்டுமல்லாமல், அனைவரும் வியக்கும் வகையில் ஆங்கிலத்திலும் திறம்பட பேசக் கூடியவர் பேரறிஞர் அண்ணா. ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவிடம் சென்று because என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வரும் வகையில் வாக்கியம் அமைக்க முடியுமா? என்று கேட்டனர். 

 “No sentence can begin with because, because, because is a conjunction”


என்று உடனடியாக பதில் அளித்தார் பேரறிஞர் அண்ணா.


நாட்டுடமையாக்கப்பட்ட தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் திருவள்ளுவர் படத்தையும், திருக்குறளையும் இடம் பெறச் செய்தவர் பேரறிஞர் அண்ணா, ஒரு முறை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் எழுந்து, 


“யாகாவார் ஆயினும் நாகாக்க; காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”

என்று பேருந்தில் எழுதப்பட்டுள்ள குரல் யாருக்காக? ஓட்டுனருக்காகவா? அல்லது நடத்துனருக்காகவா? அல்லது பயணிகளுக்காகவா? என்று கேட்டார்.  இக்கட்டான சூழ்நிலையில் பேரறிஞர் அண்ணா சிக்கித் தவிக்க வேண்டும் என்பதற்காக கேட்கப்பட்ட கேள்வி இது.


ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்காக அந்தக் குரல் எழுதப்பட்டிருக்கிறது என்று சொன்னால் தொழிலாளர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டும்.  பயணிகளுக்காக என்று சொன்னால் பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாக வேண்டும்.  இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பேரறிஞர் அண்ணா அளித்த பதில் என்ன தெரியுமா?

 "நாக்கு உள்ளவர்கள் எல்லோருக்காகவும் எழுதப்பட்டுள்ளது" 

என்று மிக நுணுக்கமாக பதில் அளித்தார்.  இந்த பதிலைக் கேட்டவுடன் அனைவரும் வியந்தனர். பேரறிஞர் அண்ணாவின் வாதத் திறமைக்கும், சமயோசித தன்மைக்கும், கூர்த்த மதியுடன் பதில் கூறும் அறிவாற்றலுக்கும் இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பேரறிஞர் அண்ணாவின் வாதத் திறமைக்கு இது போன்ற பல சான்றுகளை கூறிக் கொண்டே போகலாம்.


பேரறிஞர் அண்ணா அரசியல் தலைவராக மட்டுமல்லாமல், பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை, நடிப்புத் திறமை என பன்முகங்களைக் கொண்டு ஓர் அறிவுலக மேதையாகத் திகழ்ந்தவர்.  அரசியல் இயக்கத்தை ஒரு குடும்ப உறவாக, அதாவது தலைவர்-தொண்டர் என்ற நிலையை மாற்றி அண்ணன்-தம்பி என்ற உறவை நிலை நாட்டிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா. பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு, அவர் தோற்றுவித்த அரசியல் இயக்கம் குடும்ப இயக்கமாக மாறிவிட்ட நிலையில், பேரறிஞர் அண்ணாவால் நிலைநாட்டப்பட்ட உறவு முறையை கடைபிடித்துக் கொண்டு வரும் ஒரே இயக்கம் அண்ணாவின் இதயக்கனியாம் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கம் "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" தான் என்பதை இந்தத் தருணத்தில் பெருமையுடன் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.


பேரறிஞர் அண்ணாவின் பேச்சு, செயல் என அனைத்திலும் மனித நேயம் குடிகொண்டு இருக்கும்.  பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு தடவை, அமெரிக்க நாட்டு அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தார். அங்கு போய்விட்டு வரும் வழியில் வாடிகன் நகரத்திற்கு சென்று போப் ஆண்டவரை சந்தித்தார்.


போப் ஆண்டவரைச் சந்திக்கின்ற எல்லோரும் அவரிடம் ஏதாவது வரம் கேட்பது வழக்கம்.  அந்த வகையில், பேரறிஞர் அண்ணாவும் வரம் கேட்டார்.  என்ன வரம் கேட்டார் தெரியுமா?


“கோவா நாட்டு விடுதலைக்காகப் போராடிய காரணத்தால் கைது செய்யப்பட்டு போர்ச்சுக்கல் நாட்டுச் சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள ரானடே என்கிற சுதந்திரப் போராட்ட வீரரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கேட்டார்.


பேரறிஞர் அண்ணா அவர்களின் இந்த வேண்டுகோள் போப் ஆண்டவரை வியப்படையச் செய்துவிட்டது.  இதுவரை யாரும் இப்படிப்பட்ட ஒரு வரத்தை கேட்கவில்லையே! எங்கோ இருக்கிற ஒருத்தருக்காக சம்பந்தமே இல்லாத இன்னொருவர் வாதாடுகிறாரே! என்ற ஆச்சரியம்  போப் ஆண்டவருக்கு.
பேரறிஞர் அண்ணா கேட்ட அந்த வரம் அளிக்கப்பட்டது.  போர்ச்சுக்கல் சிறையிலே வாடிக் கொண்டிருந்த ரானடே விடுதலையானார். தன்னுடைய விடுதலைக்கு காரணமான பேரறிஞர் அண்ணாவுக்கு நன்றி தெரிவிக்க ரானடே சென்னைக்கு வந்தார். 


ஆனால், அவர் சென்னை வந்து சேருவதற்குள், பேரறிஞர் அண்ணா அவர்கள் இந்த  உலக வாழ்க்கையில் இருந்தே விடுதலை ஆகிவிட்டார். அண்ணாவை ரானடேவால் பார்க்க முடியவில்லை. அவர் பிறந்த மண்ணைத் தொட்டு முத்தமிட்டு கண்ணீரைக் காணிக்கையாக்கி விட்டுச் சென்றார் ரானடே.
இப்படிப்பட்ட மனித நேயம் மிக்க பேரறிஞர் அண்ணா தோற்றுவித்த கட்சி, தீய சக்தியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது. 



மாநில சுயாட்சி, சுயமரியாதைக் கொள்கை ஆகியவற்றுடன் இளைய சமுதாயத்தினரிடையே தமிழ் உணர்வு ஏற்படவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் அகற்றப்படவும், மூடப் பழக்கவழக்கங்கள் அகலவும், தமிழக அரசியலில்  தனிப் பாதையில் நடைபோட்டு, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்டிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.


எந்தக்  கொள்கைகளை முன்வைத்து பேரறிஞர் அண்ணா ஆட்சியைப் பிடித்தாரோ, அந்தக் கொள்கைகளை புறந்தள்ளி விட்டு, தமிழ் நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்து, தன்னலத்திற்காகவும், அரசியலில் தனக்கு எதிராக உள்ளவர்களை அழிப்பதற்காகவும் காங்கிரஸின் காலடியில் சரணாகதி அடைந்திக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி.


தமிழினத் துரோகி, தமிழக மக்கள் நலனை அடகு வைத்து தன்னலத்தை நிறைவேற்றிக் கொள்ளும் மனிதநேயமற்ற சுயநலவாதி தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மக்கள் விரோதப் போக்கை பட்டிதொட்டியெங்கும் பட்டியலிட்டு பரப்புவதோடு, அதிமுக அரசின் இரண்டாண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்று அவற்றை வாக்குகளாக மாற்றி, வருகின்ற நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் தி.மு.க. மண்ணைக் கவ்வும் வகையில் களப் பணியாற்ற வேண்டும் என்று பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்த நாளில், என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளாகிய உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

முட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – திரை விமர்சனம்



தமிழ் சினிமாவின் தரம் இப்போது எங்கே போய் கொண்டிருக்கிறது என்பதே தெரியவில்லை. முன்பெல்லாம் பிரமாண்ட செட் போட்டு படமெடுத்தார்கள்… அதன்பிறகு அவுட்டோர் ஷூட்டிங் என வெளியிடங்களிலும், வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்தினார்கள்… இப்போது ஒரே வீட்டுக்குள் மொத்த படத்தையும் முடித்துக் கொள்கிறார்கள்… இதில் கடைசியாக சொன்ன ரகத்தில்தான் ‘மூடர் கூடம்’ உருவாகியிருக்கிறது.


படத்திற்கு ஏன் அப்படி பெயர் வைத்தார்கள் என்று யோசிப்பவர்கள் படம் பார்த்தால் அட… சரியாகத்தான் பேர் வைத்திருக்கிறார்கள்… ‘மூடர் கூடம்’ என பேர் வைத்து விட்டு அதற்கு கீழே ‘பூஃல்ஸ் கேதரிங்’ என அடைமொழி போட்டிருக்கிறார்கள்.


படமும் முட்டாள்களைப் பற்றியது… என்ன ஒரு கொடுமை என்றால் படம் பார்க்கிறவர்களையும் முட்டாள்களாகவே பாவிக்கிறது..’நாளைய இயக்குனர்’ மூலம் சினிமாவுக்குள் அடி எடுத்து வைத்தவர் என்பதை மறக்காமல் படம் முழுக்க குறும்பட பாதிப்பு… ஒரு சினிமாவுக்கான இலக்கணம் எதுவும் மூடர்கூடத்தில் இல்லை.

sep 14 - cine moodar kottam
 


இந்த படத்தை தனது கம்பெனி சார்பில் ‘பசங்க’பாண்டியராஜ் வாங்கி வெளியிடுகிறார்… தனது முதல் படைப்பில் பேசப்பட்ட இயக்குனர் முதல் படைப்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் என பல அடைமொழிகளை சுமக்கிற பாண்டியராஜ் ‘மூடர்கூடம்’ படத்தை வெளியிடுவதன் மூலம் அவரும் சாதாரண சினிமா வியாபாரிதான் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்…


கதை என பார்த்தால் பிழைப்பு தேடி சென்னை வரும் ஒரு இளைஞர்… விபத்தில் தங்கையை காப்பாற்ற மறுக்கும் டாக்டர் மீது ஆசீட் வீசி ஜெயிலுக்கு போய் திரும்பும் ஒரு இளைஞர்… வீட்டிலும், படிக்கிற இடத்திலும் முட்டாள் ஒன்றுக்கும் உதவாதவன் என சொல்வதால் வீட்டை விட்டு ஓடிவரும் ஒரு இளைஞனும்… சூழ்நிலையால் அனாதையான ஒரு இளைஞர் என நால்வரும் ஒரு சூழலில் போலீசில் சிக்கிக் கொள்கிறார்கள்…


அங்கிருந்து வெளியே வரும்போது ஏற்படும் நட்பு எங்கே கொண்டுபோய் விடுகிறது என்பதுதான் கதை.


பிழைப்பு தேடி சென்னைக்கு வரும் இளைஞரின் மாமா வீட்டில் கொள்ளையடிக்க இந்த நால்வர் அணி திட்டமிடுகிறது… அதே மாமா வீட்டில் ஒரு சிடியை தேடி ஒரு திருடன் உள்ளே புகுந்து கொள்கிறான்… இது தெரியாமல் நால்வர் அணி வீட்டுக்குள் புகுந்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் சிறை பிடித்து ஒரு அறைக்குள் அடைக்கிறது…

அங்கே நடக்கும் கலாட்டாக்கள்தான் மொத்த படமும்…

நால்வர் அணிக்கு தனித்தனியாக ஒரு பாட்டும்… ஒரு பிளாஷ்பேக் கதையும் வைத்திருக்கிறார் இயக்குனர் நவீன்… தமிழ் சினிமாவின் சாபக்கேடு படத்தில் நடிக்கிற நாய்க்கு கூட ஒரு பிளாஷ்பேக் கதை சொல்கிறார் இந்த இயக்குனர்… (இது புது டிரண்டு என இதைப்போல பலர் கிளம்புவார்கள் பாருங்கள்)


உச்சபட்ச கொடுமை என்றால் படத்தில் இடம் பெரும் ஒரு பொம்மைக்கு கூட ஒரு பிளாஷ்பேக் வைத்தது இயக்குனரின் ‘டச்’…


ஹீரோயின் ஓவியாவுக்கு பாடல் காட்சியைத்தவிர படம் முழுக்க ஒரே ஒரு கையில்லாத பனியன்… பேன்ட்…தான் காஸ்டியூம்… அதிக பட்சம் ஒரு குளியல் சீனில் பெரிய டர்க்கி டவல் கட்டியிருக்கிறார் ஓவியா… இதை தவிர அவருக்கு பெருசாக எதுவும் சிரமபடவில்லை… அவரும் நடிப்பதற்கு பெருசாக சிரமபடவில்லை…


பரட்டை தலையுடன் சென்ட்ராயன் அலம்பல்கள் ரசனை… இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிற நவீன் படம் முழுக்க ரொம்ப பேசுகிறார்…


பாடல்கள் எதுவும் மனசில் நிற்கவில்லை… நடராஜ் சங்கரனின் பின்னணி இசை படத்துக்கு பல இடங்களில் பலம் சேர்க்கிறது…


படத்தை பார்த்தவர்களுக்கு இப்படியும் போட்டிகள் நடத்தலாம்…


1.படத்தில் மொத்தம் எத்தனை பிளாஷ்பேக் காட்சிகள் வருகின்றன?

2.படத்தில் எத்தனை முறை முட்டாள் என சொல்கிறார்கள்?

3.படத்தில் ஹீரோயின் ஓவியா எத்தனை காஸ்டியூம் பயன்படுத்துகிறார்..?

4.நாய் பாடலில் எத்தனை நாய் குட்டிகள் இருந்தன..?

இப்படி பல கேள்விகளை தயாரித்து பரிசுபோட்டிகள் கூட நடத்தினாலும் ஆச்சர்யமில்லை…

மொத்தத்தில் ‘மூடர்கூடம்’ படம் பார்க்கிறவர்களையும் முட்டாள்களாக்கி தன்னிலை மறக்கச் செய்யும்… தமிழ் சினிமாவின் தரத்தை மறந்து பார்த்தால் இதுபோன்ற படங்களையும் ரசிகர்கள் வரவேற்பார்கள் என்பதுதான் வேதனையான உண்மை..!

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top