.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 24 August 2013

இளைஞர்களுக்குத் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகள்:-

இன்றைய இளைஞர்கள்:
 
இன்றைய இளைஞர்களுக்குத் திருவள்ளுவர் கூறும் வாழ்வியல் நெறிகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி காரணமாகச் சமுதாய அமைவுகளில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கூட்டுக் குடும்ப அமைப்பு சிதைந்து, தனிக் குடும்ப அமைப்பு மேலோங்கி உள்ளது. பழைய மரபுகளும், சிந்தனைகளும் உடைக்கப்பட்டுப் புதிய சித்தாந்தங்களும், புதிய மரபுகளும் படைக்கப்பட்டுள்ளன.
இவ்விதமான சமுதாயச் சூழ்நிலைகளில்தான் இன்றைய இளைஞர்கள் வளர்கின்றனர். வேலை காரணமாக வெளிநாடுகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் இளைஞர்கள் செல்கின்றனர். பொருள் சம்பாதித்தல் ஒன்றே அவர்கள் வாழ்வின் குறிக்கோளாக மாறி உள்ளது. இதனால் பிற சமூகச் சூழல்களாலும் பாதிப்படைகின்றனர். இவ்விதமான சூழலில் வாழ்கின்ற இருபத்தொன்றாம் நூற்றாண்டு இளைஞர்களுக்கு இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகளை நினைவூட்ட வேண்டிய காலக்கட்டத்தில் நாம் உள்ளோம்.
திருவள்ளுவர் இளைஞர்களுக்குத் தேவையான நெறிகளைச் சுட்டிக்காட்டிச்சென்றுள்ளார். அவர் காட்டும் வாழ்வியல் நெறிகளைக் கீழ்க்காணும் வகையில் நாம் அறிந்து கொள்வோம்.
1. அன்புடைமை
2. பகுத்தறிதல்
3. வாய்மை
4. குற்றங்கடிதல்
5. வினைத் தூய்மை
6. கள்ளுண்ணாமை
7. வெகுளாமை
1. அன்புடைமை
அன்பு என்பது வாழும் உயிர்களுக்குப் பொதுவான ஒன்றாகும். இது இயற்கையான உணர்வுகளில் ஒன்று. அதனால் தான் மனிதப் பிறவி விழுமியது என்று ஆன்றோரால் போற்றப் பெற்றது. அன்பு வழி வாழ்க்கை வேண்டும். அவ்வழியே வளரும் வாழ்க்கை பண்பும் பயனும் உடையதாகும்.
அன்பு உடையவர் பற்றியும், அன்பு இல்லாதவர் பற்றியும் வள்ளுவர் குறிப்பிடும் போது,
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு - - - (குறள். 72)
என்று கூறுகின்றார். அதாவது அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர் எனவும், அன்பு உடையார் தம் உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர் எனவும் குறிப்பிடுகிறார். மற்றொரு குறளில் அன்பின் தன்மையை,
அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு - - - (குறள். 80)
என்று குறிப்பிடுகிறார்.
உடலில் உயிர்நிலை பெறுவது அன்பின் வழிபட்டதேயாகும். ஒருவருக்கு உயிர் இருக்கிறது என்பதற்கு அடையாளமே அவ்வன்புதான். அன்பு இல்லாதவருடைய உடம்பு எலும்பும், தோலும் போர்த்தப்பட்ட உடல் ஆகும். எனவே அன்பைப் பேண வேண்டும் என்பது திருவள்ளுவரின் சீரிய சிந்தனையாகும்.
2. பகுத்தறிதல்
அறிவுச்சிந்தனை இன்று பல நிலைகளில் மேம்பாடு அடைந்துள்ளது. பல துறைகளில் நாம் முன்னேறி உள்ளோம். திருவள்ளுவர் இந்த அறிவுச் செல்வத்தைக் கண்டடையும் வழிமுறைகளையும் கூறியுள்ளார்.
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு - - - (குறள். 423)
என்றும்,
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு - - - (குறள். 355)
என்றும்,
சென்ற இடத்தான் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு - - - (குறள். 422)
எச்சிந்தனைகளானாலும் அச்சிந்தனைகளின் உண்மைப் பொருளை ஆய்ந்து அறிவதுதான் அறிவு. எனினும் வள்ளுவர் 422 ஆம் குறளில் மனத்தைச் சென்ற இடத்தில் விடாமல் தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும் என்று குறிப்பிடுகிறார். கற்றல் மட்டுமே அறிவு அல்ல. நன்மை, தீமைகளையும் அறிவதே அறிவு என்பதைத் திருவள்ளுவரின் சிந்தனையாய்க் கொள்ளலாம்.
3. வாய்மை
"வாய்மை" இன்று மறைந்து போன ஒன்றாகக் காணப்படுகிறது. வாய்மை மனிதனுக்குத் தேவையான பண்பாக இருந்தாலும் கூட அது பல சமயங்களில் பின்பற்றப்படுவதில்லை. வாய்மையின் தன்மையைத் திருவள்ளுவர்,
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல் - - - (குறள். 291)
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின் - - - (குறள். 292)
என்கிறார்.
அதாவது "வாய்மை" என்பது பிறருக்கு எந்தவிதத் தீங்கும் செய்யாத சொற்களைச் சொல்வதுதான். பொய்யான சொற்களால் நன்மை விளையாது; பொய்யான சொற்களும் குற்றம் தீர்ந்த நன்மையை விளைவிக்குமானால் வாய்மை என்று கருதத்தக்க இடத்தைப் பெறுவனவாம் என்று கூறுகிறார்.
இந்நிலையினைத்தான் வள்ளலார்,
உள்ஒன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவோர்
உறவு கலவாமை வேண்டும்
என்று கூறுகின்றார்.
எனவே வாய்மையை மனித வாழ்வினில் கடைப்பிடித்தால் அது பலவிதமான நன்மையை உண்டாக்க வல்லதாகும்.
4. குற்றங்கடிதல்
ஒருவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் நின்றாலும், தன் உயர்வைத் தானே வியந்து தற்பெருமை கொள்ளக் கூடாது. அது அறிவுக் கண்ணை மறைக்கக் கூடியது. அவ்வாறு மறைத்தால் உண்மை விளங்காமல் போகும். பல தவறுகள் செய்து அழிவு தேடிக் கொள்ள நேரும்.
செய்த குற்றம் சிறிதே ஆனாலும், அதைப் பெரிய குற்றமாகக் கருதி மனம் வருந்துவது சான்றோர் பண்பு. குற்றம் வராமல் காக்கும் ஆற்றல் வளரும். குற்றம் வராமல் காத்துக் கொண்டால், வாழ்க்கைக்குத் தீங்கு நேராது.
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார் - - - (குறள். 433)
5. வினைத்தூய்மை
செய்கின்ற அல்லது செய்யப் போகின்ற செயல் புகழையும் நன்மையையும் தருமா என்று ஆராய்ந்து செய்ய வேண்டும். எவ்வளவு துன்பப்படுவதாக இருந்தாலும் தெளிந்த அறிவுடையவர்கள் இழிவான செயல்களைச் செய்ய மாட்டார்கள் என்பது வள்ளுவரின் வாக்கு. எனவேதான் அவர்,
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை - - - (குறள். 656)
என்கிறார்.
அதாவது பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன் செய்யக் கூடாது என்கிறார். எனவே வினைதனை மேற்கொள்வோர் இக்குறளினை நினைவில் கொள்ளுதல் நலம் பயக்கும்.
6. கள்ளுண்ணாமை
இன்றைய காலகட்டத்தில் கள் என்ற போதைப் பொருள் நவநாகரீகமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. வள்ளுவர் கள்ளுண்பவர்களின் நிலையைக் கீழ்க்கண்ட வகைகளில் குறிப்பிடுகின்றார்.
1. மதிப்பை இழந்து விடுவார்கள்.
2. பகைவரும் அஞ்சமாட்டார்கள்.
3. சான்றோரின் உறவும் போய்விடும்.
4. மற்றவர்கள் முன்பு குற்றவாளியாக நிற்க நேரிடும்.
மேலும் அவர்,
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி - - - (குறள். 923)
என்ற குறளில் பெற்ற தாயின் முன்பாக மகன் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும். அதனால் அந்த மகனைத் தாய் வெறுத்து ஒதுக்குவாள். அப்படியானால் தாயே வெறுத்து ஒதுக்கும்போது மற்ற சான்றோர்கள் அவனை எப்படி சகித்துக் கொள்வார்கள் எனக் கேட்கிறார். ஆகவே கள்ளுண்ணாமை நன்று என்கிறார் வள்ளுவர்.
7. வெகுளாமை
வலியார் மேல்சினம் பிறப்பது உண்டு; ஆனால் அப்போது அது பலிக்காது. மெலியார் மேல்சினம் பிறந்தால் அது அவர்களை வருத்தும்.
சினம் பலிக்காத வலியார் இடத்தில் மட்டும் சினம் கொள்ளாமல் காத்துக் கொள்வது போதாது. அங்கே சினம் காப்பதும் காவாமையும் ஒன்றுதான். சினம் பலிக்குமிடத்தில் காத்துக் கொள்வோனே சினம் காப்பவன். இது அருளுடையார் செயல் என்பார் திருவள்ளுவர்.
செல்லிடத்துக் காப்பான் சினம்காப்பான்; அல்விடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்? - - - (குறள். 301)
செல்லா இடத்துச் சினம்தீது; செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற - - - (குறள். 302)
சினத்தை விடப் பெரிய பகை வேறு இல்லை. படையிடமிருந்து ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொள்ள விரும்பினால் சினம் வராமல் மனத்தைக் காத்துக் கொள்ள வேண்டும்; காக்கத் தவறினால் சினம் தன்னையே கொன்றுவிடும். ஆகவேதான் சினம் யாரிடம் உள்ளதோ அவர்களையே அழித்துவிடும் என்பது வள்ளுவர் வாக்கு. சினங்கொள்ளாமல் வாழ வழி வகுப்போம்.
எனவே இன்றைய இளைஞர்கள் திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகளைத் தம்முடைய வாழ்வில் பின்பற்றினால் அவர்கள் வாழ்வு மேன்மை அடையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

ஆர்கானிக் உணவுப்பொருட்களை பயன்படுத்துங்கள்!

  பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படும் "மால்" கலாசாரத்துக்கு அமெரிக்காவில் கூட மவுசு குறைந்து வருகிறது. ஆனால், நம்மூரில் கொடிகட்டிப்பறக்கிறது. "மால்" கலாசாரம் தவறில்லை தான் ஆனால், சத்தான உணவு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை வாங்கும் நிலை மாறி, பாக்கெட், டப்பா கலாசாரம், உரம் போட்ட காய்கறிகள் என்று நாம் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம். ஆர்கானிக் காய்கறிகள், தானியங்கள், பழங்கள் என்பது பரம்பரையாக நாம் பின்பற்றி வந்ததுதான். நடுவில், உரம் போட்ட சமாச்சாரங்கள் தலைதூக்கி விட்டன. இப்போது மீண்டும் ஆர்கானிக்குக்கு மவுசு திரும்பி விட்டது. ஆர்கானிக் என்பது உரம் போடாத, ரசாயன கலப்பில்லாத உணவுப்பொருட்கள் சார்ந்தது. எது ஆர்கானிக், அதனால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என்று பார்ப்போம்.

உப்பு: 
இப்போது பலரும் பரவலாக பயன்படுத்துவது அயோடின் சத்துள்ள பாக்கெட் உப்புதான். சில ஆண்டுக்கு முன்வரை பயன்படுத்தி வந்த கல் உப்பு நினைவிருக்கிறதா? அதில் உள்ள கனிம சத்துக்கள் பற்றி பலருக்கும் தெரியாது. இதுதான் ஆர்கானிக் உப்பு. உடலில் அயோடின் சத்து தேவைதான். ஆனால், அயோடின் சத்து கிடைக்கும் நிலையில், உப்பு மூலமும் அது சேர்ந்தால் பிரச்சினைதான்.

ரீபைண்ட் ஆயில்: 
செக்கில் ஆட்டிய எண்ணெயை யார் இப்போது பயன்படுத்துகின்றனர். நகரங்களில் எங்குப் பார்த்தாலும் பாக்கெட் உணவு எண்ணெய்தானே.
அப்படியும் செக்கில் ஆட்டியெடுத்த கடலை, நல்லெண்ணெய் இன்னமும் சில இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் எந்த கலப்பும் இல்லாத ஆர்கானிக் எண்ணெய். ரீபைண்ட் என்பது, சூடாக்கி சமப்படுத்துவது. அதனால், வாணலியில் இரண்டாவது முறையாக சூடாக்கப்படுகிறது. இதனால், ரசாயன கலப்பு சேர்கிறது உடலில். இதுதான் நிபுணர்கள் கருத்து.

வெண்ணெய், நெய், வனஸ்பதி: 
வெண்ணெய், நெய், வனஸ்பதி இவை மூன்றுமே கொழுப்பு சார்ந்ததுதான். அதிகம் பயன்படுத்தக்கூடாது. இதனால், கொலஸ்ட்ரால்தான் உடலில் சேரும். மாறாக, ஆர்கானிக் முறையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட ஆலிவ் ஆயில், செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்தான் மிக நல்லது.

உலர்ந்த தானியங்கள்: 
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உலர்ந்த பருப்பு உட்பட தானியங்கள்தான் பயன்படுத்துகிறோம். ஆனால், எந்த கலப்பும், செரிவூட்டலும் இன்றி, இயற்கையாக விளைவித்து எடுக்கப்பட்ட பருப்பு, தானியங்கள்தான் ஆர்கானிக் முறைப்படி நல்லது. நன்கு உலர்ந்த தானியங்களில் கொழுப்புதான் மிஞ்சும். ஆனால், ஆர்கானிக் முறையில் சத்துக்கள் முழுமையாகக் கிடைக்கும்.

பாலிஷ் அரிசி: 
அரிசி சாதம், வெள்ளையாக இருக்க வேண்டும். பழுப்பாக இருந்தால் நகரங்களில் உள்ளவர்களுக்கு பிடிக்காது. ஆனால், புழுங்கல் அரிசி சாதம்தான் மிக நல்லது என்பது இப்போதுதான் பலருக்குத் தெரிய ஆரம்பித்துள்ளது. பாலிஷ் செய்யப்படாத புழுங்கல் அரிசி, முழு கோதுமை ஆகியவற்றில்தான் 100 சதவீத சத்துக்கள் உள்ளன என்பதை மறந்து விடாதீர்கள்.

சந்தை காய்கறி, பழங்கள்: 
உரம், ரசாயன கலப்பு சார்ந்து விளைவிக்கப்பட்ட, செயற்கையாக பெரிதாக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள் கண்களுக்கு கவர்ச்சியாக இருக்கலாம். விலை குறைவாக இருக்கலாம். ஆனால், உடலுக்கு கெடுதல்தான். உரம் கலப்பில்லாத காய்கறிகள், கீரைகள், பழங்கள் மூலம் கிடைக்கும் பலன், மருந்துகளில் கூட கிடையாது.

பால்:
பால் உடலுக்கு நல்லதுதான். ஆனால், நாம் சாப்பிடும் பாலில், கொழுப்புச் சத்து நீக்கப்பட்டதால் பரவாயில்லை. ஆனால், கால்நடைகளில் 90 சதவீதம் உரம், ரசாயன ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பெற்ற நிலையில்தான் உள்ளன என்பது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலே வருத்தத்துடன் கூறியுள்ளது. ஆர்கானிக் வகையில் இப்போது பல வகை மூலிகைகள் வந்துவிட்டன. பாலுடன் இவற்றையும் சாப்பிடலாம்.

கோலா, காபி, டீ:
இயற்கையான காபி, டீ இப்போது கிடைப்பதில்லை. எல்லாமே, உரக்கலப்பு மிக்கதுதான். அதிலும், பாக்கெட் பானங்களில் பெரும்பாலும் உடலுக்கு ஆரோக்கியமில்லாத விஷயங்கள்தான். மூலிகை டீ நல்லது. மூலிகை சார்ந்த பானங்கள் இப்போது உள்ளன. அவற்றை வாங்கி அருந்தலாம்.

சர்க்கரை: 
சர்க்கரைக்கு பதில், வெல்லத்தைப் பயன்படுத்தலாம். காபி, டீ யில் கருப்பட்டி வெல்லம் போட்டு சாப்பிட்டால், உடலுக்கு நல்லது. எந்த கெடுதலும் வராது.

ஆர்கானிக் கோஷம் இன்னும், இந்தியாவில் பெரிய அளவில் எடுபடவில்லை. காரணம், இப்போதுள்ள உணவு பொருட்கள் விலையே விண்ணைத் தொடுகிறது. ஆர்கானிக் சமாச்சாரங்கள் விலை இன்னும் அதிகம். இருந்தாலும், காலப்போக்கில், உரக்கலப்பில்லா உணவுப்பொருட்கள் சாப்பிடும் நிலைக்கு வருவது மட்டும் நிச்சயம்.

'' அம்மா என்றால் அன்பு ''


மாதங்கள் பத்து சுமந்து
உன் கற்பனைகளால்
என்னை செதுக்கிய சிற்பியானாய்...

கருவில் என் பசி தீர்க்க

திகட்டும் பொழுதும்
உணவை உண்டு
என் உயிர் காத்தாய்...

பிறந்தவுடன்

மொழியில்லா என் ஆசைகளை
சிறு அசைவுதனில் புரிந்துகொண்டு
நிறைவேற்றி வைத்தாய்...

விரைவில் நான்

நடை பழக
உன் ஐவிரல் கொண்டு
என் ஒரு விரல் கோர்த்து
பல மைல்கள்
நீயும் நடந்திருப்பாய்...

தலை முடியில்
விரல் வருடி
வலக்கை நீட்டி
என் தலையணை ஆக்கி
வலிகள் தாங்கி
நான் தூங்க விழித்திருப்பாய்...

எனக்கு பசிக்கும் முன்னே

நீ அறிவதால்
பசியை நானோ அறிந்ததில்லை...

குளநீரை கல்லெறிந்து

கலைப்பது போல்
என் தோல்விகளில்
உன் குரல் எறிந்து
என் சோகங்கள்
கலைத்து நிற்ப்பாய்...

எடைதட்டில் உனை அமர்த்தி

உனக்கு சமம் பார்க்க
இவ்வுலகில் ஏதுமில்லை...

இங்கு

உன்னைப்போல்
எந்த தெய்வமும் இல்லை....

தமிழ் ஜோக்ஸ்_பகுதி 2

எனக்கு மொபைல்ல கிரெடிட் ரீசார்ஜ் பண்ணனும்...
மொபைல்ல பண்ண முடியாதுங்க சிம் கார்டுல தான் பண்ண முடியும்...

கழுதைக்கும், மனுஷனுக்கும் என்ன வித்தியாசம்...
கழுதை பேப்பரை சாப்பிடுது...
மனுஷன் பேப்பர் ரோஸ்டை சாப்பிடுறான்.

அறிவாளிகள்  என்று யாரைச் சொல்லலாம்...
யாரெல்லாம் பொண்டாட்டி திட்டும் போது சிரிச்சுக்கிட்டே இருக்காங்களோ அவங்க எல்லோரும் தான்..

நான் இருமல் வந்தா உடனே டாக்டர்கிட்டே போய்டுவேன். நீங்க எப்படி?
நான் இருமல் வந்தால், முதல்ல இருமிட்டு அப்புறம் தான் போவேன்.

என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க...
என்னோட வைஃப் ஒரு மாசம் என்கூட பேசமாட்டேன் என்று சொல்லிட்டா.

அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்...
எப்படிங்க...இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே...

பிள்ளையாரும் முருகனும் கம்ப்யூட்டர் கிளாசுக்கு போனாங்க
பிள்ளையாருக்கும், முருகனுக்கும் மார்க்ஸ் குறைஞ்சு போச்சு
என்னாச்சு...
ஏனென்றால்,முருகனோட கம்ப்யூட்டர் மௌஸ் பிள்ளையாரோட மௌஸ் ரெண்டும் சேர்ந்து விளையாடப் போயிட்டுதுகள்...

அவன் எதுக்கு சுடுகாட்டுக்குப் போகும் போது சோப்பு எடுத்திட்டுப் போறான்..
ஹமாம் இருக்கப் பயமேன்..

நான் எப்போதுமே பணம் எதுவும் கையில் அதிகமாக வெச்சிருக்க மாட்டேன்...
அதெப்படி..வெச்சிருக்கணும் என்று ஆசைப்பட்டாலும் கூட வைஃப்கிட்டே கேட்டு வாங்கிக்கட்டிக்கிறதுக்கு உங்க உடம்புல தான் பலம் கிடையாதே...

போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கிறதா சொல்றீங்க, வெயிலைப் பத்தி கவலையே இல்லைங்கறீங்களே, எப்படி?
நான் ஏ.ஸி. ஆச்சே!"

உங்களுக்கு அலர்ஜி நோய் வந்திருக்கு... ஒத்துக்காததை எல்லாம் ஒதுக்கி வைக்கணும்!
அப்படின்னா என் சம்சாரத்தைக் கூடவா டாக்டர்...?

என் மாமியாருக்கு சர்க்கரை வியாதி இருக்கற விஷயம் உனக்கு எப்படித் தெரியும்?
உங்க வீட்ல அடிக்கடி ஸ்வீட் செய்யறதை வச்சுத்தான் சொன்னேன்...!

ஆபீசுக்கு போகும் போது டென்ஷன் படுத்தாதே...
ஏங்க...?அதையே நெனச்சு நெனச்சு, தூக்கமே வர மாட்டேங்குது...!

ஏன் என்னோட கச்சேரிக்கு வராம விட்டுட்டீங்க...
ஸாரி சார்... அன்னைக்கு வீட்லயே தூங்கிட்டேன்!
 
 

~*~கவிதைகள்~*~

~*~கவிதைகள்~*~

ஈகை

 
உண்ணாமல் ஒளித்து வைத்து  
உறங்காமல் விழித்து நின்று
கண்ணாகக் காக்கும் காசு
காக்காது போகும் ஓர்நாள்
மண்ணாகப் போகும் அந்நாள்
மதிக்காதே உலகம் உன்னை
எண்ணத்தில் கொண்டே இஃதை  

என்றைக்கும் இனிதே ஈவாய்!!!


கனியும் காலம்

 
சிற்றுளியால் செதுக்கியதோர் கற்பாறை
கண்கவரும் சிலையாய் நிற்கும்!
பொற்கொடியே புடம்போட்ட தங்கம்தான்

நகையாகிப் பொன்னாய் மின்னும்! 
பெற்றிடலாம் பட்டுவருந் துன்பமதில்
பொறுமையெனும் பெற்றி தன்னை!
கற்றிடுநீ யுன்உழைப்பே வயலிட்ட 

நீராகி கனியும் காலம்...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top