.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 19 November 2013

பாய் போட்டு படுத்தால் நோய் விட்டுப் போகும்!



படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்' என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.

கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், காய்ச்சல் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் காய்ச்சல் நீங்கும்.

ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும்.
ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை- உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

மலர்ப்படுக்கை- ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.

இரத்தினக் கம்பளம்- நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

முட்டைகோஸ் - மருத்துவ பலன்கள்!

 

இயற்கையின் அருட்கொடைகள் அனைத்தும் மனிதனுக்கு ஏதோ வகையில் பயன்பட்டு வருகிறது. உலகில் மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அதிகம் பயன்படுத்துகிறான்.

மனித இனம் தோன்றிய காலம் முதலே அவர்களுக்கு காய், கொடி, கீரை, பழம் என பல வகைகளில் இயற்கையானது உணவளித்து வருகிறது.

இதையே சித்தர்களும் ஞானிகளும், அன்றாடம் உண்ணும் உணவின் மூலம் எப்படி ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வது என்பதையும், அவற்றை எக்காலங்களில் உண்ணவேண்டும், எப்படி உண்ணவேண்டும் என்பதை தெளிவாகக் கூறியுள்ளனர்.

இப்படி அன்றாட உணவில் நாம் சேர்த்துக்கொள்ளும் காய்கள், கீரைகள், பழங்களின் மருத்துவக் குணங்களை நம் ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். அந்த வகையில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் முட்டைகோஸ் பற்றி தெரிந்து கொள்வோம்.

முட்டை கோஸ் கீரை வகையைச் சேர்ந்தது. இதன் கொழுந்து உருண்டையாகக் காணப்படும். இதனையோ உணவாகப் பயன்படுத்துகிறோம்.

இதில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும். உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது.

முட்டைகோஸின் மேல் பகுதியில் மூடியிருக்கும் முற்றிய காய்ந்த இலைகளை நீக்கிவிட்டு சிறிதாக நறுக்கி பாசிப்பயறுடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம்.

முட்டைகோஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள்

 கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.

மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.

சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.

எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.

நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.

உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.

முட்டைகோஸின் பயன்களை அறிந்து அதனை நம் உணவில் சேர்த்து நீண்ட ஆரோக்கியம் பெறுவோமாக..!

செவ்வாய்க்கு "மாவென்' விண்கலம்: "நாஸா அனுப்பியது"

 

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆராய்வதற்காக மாவென் என்ற விண்கலத்தை அமெரிக்கா திங்கள்கிழமை வெற்றிகரமாகச் செலுத்தியது.

நாஸா அமைப்பினால் உள்ளூர் நேரப்படி மதியம் 1.28 மணிக்கு, அட்லஸ் வி-401 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம் 10 மாதங்கள் பயணித்து செவ்வாயை அடையும். இது குறித்து நாஸா தரைக் கட்டுப்பாட்டு மையம் தெரிவிக்கையில், "விண்கலம் நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது' என்று கூறியுள்ளது.

அடுத்த ஆண்டு (2014) செப்டம்பர் மாதம் செவ்வாயை அடையும் மாவென், அந்த கிரகத்தின் நிலப்பரப்புக்கு 6 ஆயிரம் கி.மீ. உயரத்தில் ஓராண்டுக்கு சுற்றி வரும். எனினும், அது 5 முறை செவ்வாய் நிலப்பரப்புக்கு 125 கி.மீ. தூரம் நெருக்கமாக வந்து, அதன் சூழ்நிலையை ஆராயும். குறிப்பாக, அங்கு தண்ணீர் இல்லாததற்கான காரணம் போன்றவை குறித்து ஆராயப்படும்.

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக இந்தியா சமீபத்தில் விண்ணில் செலுத்திய மங்கள்யானுக்கு முன்பாக, அமெரிக்காவின் மாவென் விண்கலம் அந்த கிரகத்தை அடைய உள்ளது. முன்னதாக, செவ்வாயின் தரைப்பகுதி தொடர்பான தகவல்களைச் சேகரிக்க அமெரிக்கா அனுப்பிய மார்ஸ் ரோவர் என்ற விண்கலம் கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்தை எட்டி, புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

Monday, 18 November 2013

அது என்ன பன்றி, பசு கதை!


ஒருவன் மிகுந்த செல்வம் கொண்ட பெரிய பணக்காரன்.

அவன் தன் இறப்பிற்குப் பின் தன் சொத்துக்கள் அனைத்தையும் தர்மம் செய்வதாக இருப்பதை அனைவரும் தெரிந்தும், அவனை மக்கள் குறை கூறிக் கொண்டே இருந்தார்கள்.

அதனால் மிகவும் மனமுடைந்த அவன், அதற்கான காரணத்தை அறிய ஒரு ஜென் துறவியை பார்க்கச் சென்றான்.

துறவியைப் பார்த்து அனைத்தையும் கூறி, "எதற்கு?" என்று கேட்டான். அதற்கு குரு அவனிடம் "உனக்கு பன்றி மற்றும் பசுவைப் பற்றி சொல்ல வேண்டும்" என்றார்.

அதற்கு அவன் "அது என்ன பன்றி, பசு கதை, எனக்கு சொல்லுங்கள்" என்று கூறினான். பின் குரு "ஒரு முறை பன்றி பசுவிடம், நீ மக்களுக்கு பால் மட்டும் தான் தருகிறாய், ஆனால் நான் அவர்களுக்கு என் மாமிசத்தையே தருகிறேன். இருப்பினும் மக்கள் உன்னையே புகழக் காரணம் என்ன? என்று வருதத்தோடு கேட்டது.

அதற்கு பசு நான் உயிருடன் இருந்து அவர்களுக்கு தருகிறேன், நீ இறந்து தருகிறாய், அதனால் எதையும் உன்னால் உணர முடியவில்லை என்று சொன்னது." என்று கதையை கூறினார்.

பிறகு குரு அவனிடம் "நீயும் அந்த பன்றியைப் போல் தான், உயிருடன் இருக்கும் போது மக்களுக்கு தானம் செய்து பார், பின் தெரியும்" என்று கூறி மடத்தின் உள்ளே சென்றார்.

இந்த எலிக்கு நம்மை விட வாழ தகுதி இருக்கிறது!



சீனாவில் உள்ள ஹாங்ஷு உயிரியல் பூங்காவில் நடந்த உண்மை சம்பவம்...
உயிரியல் பூங்காவில் பாம்புக்குஇரையாக எலிகளை கொடுப்பது வழக்கம் . இரண்டு மூன்று எலிகளை பாம்பு கூண்டுக்குள் போட்டு விடுவர். வழக்கமாக பாம்பு ஒரு எலியை சாப்பிடும்போது மற்ற எலிகள் ஒளிந்து கொள்ளும். பிறகு அந்த எலிகளையும் பாம்பு பிடித்து உண்ணும்.

ஒருமுறை பாம்புக்கு தீனியாக இரண்டு வெள்ளை எலிகளை போட்டனர்.ஒரு எலியை பாம்பு பிடித்து திண்று கொண்டுஇருக்கும்போது, தன் நண்பன் பாம்பிடம் மாட்டி கொண்டு இருப்பதை பார்த்த இன்னொரு எலி பாம்பை தாக்க ஆரம்பித்தது.ஆனால் அதற்குள் அந்த எலியின் கதை முடிந்து விட்டது.

இதை பார்த்து கொண்டிருந்த உயிரியல் பூங்கா ஊழியர்கள் பாம்பிடம் வீரமாக சண்டையிட்ட எலியை பிடித்து வெளியே விட்டுவிட்டார்கள்.

உண்மையிலேயே அந்த எலிக்கு நம்மை விட வாழ தகுதி இருக்கிறது.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top