.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label மர்மம். Show all posts
Showing posts with label மர்மம். Show all posts

Wednesday 8 January 2014

தொட்டபெட்டாவில் மனிதர்களை கொன்று தின்னும் மர்ம விலங்கு?






நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா மலைச்சரிவில் உள்ள சோலாடா கிராமத்தைச் சேர்ந்த கவிதா (வயது-30), என்ற பெண் அருகிலுள்ள ஆடாசோலை குக்கிராமத்தில் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கிவர் சனிக்கிழமை மாலை நடந்து சென்றபோது வழியில் புதரில் பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார். இவரை இரு சிறுத்தைகள் சேர்ந்து தாக்கியதாக அப்பகுதி மக்களும், புலி தாக்கியிருக்கலாம் என வனத்துறையினரும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தொட்டபெட்டா அருகிலுள்ள சின்கோனா பகுதியை அடுத்த அட்டபெட்டு பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பன் (வயது-58) மர்ம விலங்கால் கொல்லப்பட்டுள்ளார். இவர் திங்கள்கிழமை மாலை அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றவர் இரவு 7 மணி வரை வீடு திரும்பவில்லை.


இதையடுத்து அவரது குடும்பத்தாரும், அருகிலுள்ளோரும் அவரைத் தேடி வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். வனப்பகுதிக்குள் மர்ம வனவிலங்கு ஒரு உடலைக் கடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.  ஆனால்,  சின்னப்பனை தேடிக்கொண்டு தீப்பந்தத்துடன் போன பொதுமக்களின்  சத்தத்தைக் கேட்டவுடன் அவ்விலங்கு தின்றுகொண்டிருந்த உடலை போட்டுவிட்டு புதருக்குள் மறைந்துவிட்டது.


பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது, அது சின்னப்பன் தான் என்பது உறுதியானது. இதுகுறித்த தகவல் வனத்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டது. இறந்த சின்னப்பன் குடும்பத்திற்கு அரசின் உடனடி நிவாரண உதவியாக ரூ. 25,000 வழங்கப்பட்டுள்ளது.


சோலாடா, அட்டபெட்டு பகுதிகளைச் சேர்ந்தவர்களின் உயிரிழப்பிற்குக் காரணமான ஆட்கொல்லி வனவிலங்கு, சிறுத்தையா அல்லது புலியா என்பதில் குழப்பம் உள்ளது. அந்த ஆட்கொல்லி வனவிலங்கை உயிருடன் பிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.


இதன் ஒரு கட்டமாக, முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி வடக்கு மற்றும் தெற்கு வனக்கோட்டங்களிலிருந்து தலா ஒரு கூண்டுகள் கொண்டுவரப்பட்டு, சந்தேகத்திற்கிடமான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.


இந்த 5 இடங்களிலும் இரகசியமாக காமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இனம் காணப்படாத இவ்விலங் கைப் பிடிக்கும் பணியில் 30 பேர் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டபெட்டு முதல் கல்லட்டி பகுதி வரை தொடர் ரோந்துப்பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒலிபெருக்கி மூலம் இப்பகுதிகளில் வனப்பகுதிகளுக்குள் யாரும் அனுமதியின்றி செல்லக் கூடாது என்றும் அறிவித்து வருகின்றனர்.

Tuesday 17 December 2013

ஆஸ்கார் பூனை...



மரணம் ஏற்படுவதை யாராவது முன் கூட்டியே கணித்துக் கூற முடியுமா, அது சாத்தியம் தானா? நிச்சயமாக முடியாது என்பதுதான் நமது பதிலாக இருக்கும். சகலமும் அறிந்த ஜோதிடர்கள் கூட இந்த விஷயத்தில் சற்று தடுமாறத்தான் செய்வர். ஆனால் ஒருவரது மரணத்தை முன் கூட்டியே கணிப்பது மட்டுமல்ல; அவர் இறக்கும் வரை அவர் அருகிலேயே இருந்து அவரை வழியனுப்பி வைத்து விட்டு வருகிறது ஒரு பூனை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. அந்த அமானுஷ்யப் பூனையின் பெயர் ‘ஆஸ்கர்’

அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் உள்ள ஒரு நகரம்தான் ரோடே ஐலண்ட். இங்கு ஸ்டீரே என்ற இடத்திலுள்ள முதிய நோயாளிகளுக்கான மருத்துவ மற்றும் உயர் சிகிச்சைப் பாதுகாப்பு மையம் மிகவும் புகழ் பெற்றது. அல்சீமர், பக்கவாதம், பர்கின்சன் போன்ற பல நோய்களால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்குதான் ஒரு சிறிய குட்டியாக வந்து சேர்ந்தது அமானுஷ்யப் பூனை ஆஸ்கர். முதலில் அதன் செயல்பாடுகளை யாரும் கவனிக்கவில்லை. அது ஒரு சாதாரணப் பூனை என்றே அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் ப்ரௌன் யுனிவர்சிடியைச் சார்ந்த ஆல்பர்ட் மருத்துவப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றுபவரும், அந்த ரோலண்ட் மருத்துவமனையின் மருத்துவர்களில் ஒருவருமான டாக்டர் டேவிட் டோசா, இந்தப் பூனையேச் சற்றே அவதானித்து சில செய்திகளை வெளியிட்ட போதுதான் அனைவரது கவனமும் ஆஸ்கர் மீது திரும்பியது.

அப்படி என்னதான் செய்தது ஆஸ்கர்? வழக்கமாக மற்ற பூனைகளைப் போலவே வலம் வரும் ஆஸ்கர், யாராவது ஒருவர் மரணிக்கப் போகிறார் என்று தனது அமானுஷ்ய ஆற்றலால் உணர்ந்து கொண்டால் உடனே அந்த நபரின் படுக்கையறைக்குச் சென்று விடும். அங்கேயே பல மணி நேரம் அமர்ந்திருக்கும். அப்போது அதன் உடல், கண்கள் என அனைத்தும் ஒரு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். அந்த நபர் இறக்கும் வரை காத்திருந்து, அவர் உயிர் பிரிந்ததும் வித்தியாசமான ஒரு குரலை எழுப்பி விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து சென்று விடும்.

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல. நூற்றுக்கணக்கான மரணங்களை முன் கூட்டியே கணித்திருக்கிறது ஆஸ்கர். அதனால் இங்கே தங்கியிருப்பவர்களுக்கு ’ஆஸ்கர் பூனை’ என்றால் ஒருவித அச்சம்.

ஒருவர் இறக்கப் போகிறார் என்பதை உணர்ந்து கொள்ளும் ஆஸ்கர் முதலில் அவரது படுக்கை அருகே சென்று வித்தியாசமான ஒரு ஓசையை எழுப்பும். பின்னர் அங்கேயே அமர்ந்து விடும். அதைக் கண்ட மருத்துவர்களும், செவிலிகளும் எச்சரிக்கை உணர்வை அடைந்து மேல் சிகிச்சைகளுக்கு உடனடியாகத் தயாராகின்றனர். நோயாளின் உறவினர்களும் எச்சரிக்கை அடைந்து, முன்னேற்பாடாகச் செய்ய வேண்டிய செயல்களைச் செய்ய ஆரம்பிக்கின்றனர்.

இங்கு பணியாற்றும் மருத்துவர்களோ அதன் செயல்பாடுகளைக் கண்டு வியப்பதுடன், இது எப்படி சாத்தியம் என்றும் புரியாமல் விழிக்கின்றனர். ஆனால் டேவிட் டோஸா இதுபற்றிக் கூறும் போது, “ ஆஸ்கருக்கு கூடுதல் புலனறிவு மிக அதிகமாக உள்ளது. அதன் சக்தியால், இறப்பிற்கு முன் ஓர் உடலில் ஏற்படும் மிக நுணுக்கமான வேதியியல் மற்றும் உயிரியல் மாற்றங்களை அதனால் எளிதாக உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனால் இறக்கும் நபர் யார் என்பதை முன் கூட்டியே அதனால் கணிக்க முடிறது” என்கிறார்.

”சரி, ஆனால் இறக்கும் நபர் அருகே சென்று ஏன் ஆஸ்கர் அமர வேண்டும். எதற்கு அந்த இறப்பை உற்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும்?” என்ற கேள்விக்கு விடையளிக்க அவரால் முடியவில்லை.

Sunday 15 December 2013

நீ...ண்...ட நாள் கேள்விக்கு விடை...!



முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா?



இதுவரை இதற்கு எவருமே சரியான பதில் அளிக்க முடியாமலிருந்து வந்தது. தற்போது இதற்கு விடை காணப்பட்டுள்ளது.

ஆம், இங்கிலாந்து விஞ்ஞானிகள் இதற்கு விடை கண்டு பிடித்துள்ளனர். அதாவது கோழியில் இருந்துதான் முட்டை வந்தது என்று அவர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்ட், வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றி அண்மையில் ஆய்வு நடத்தினார்கள்.

முட்டையின் செல்களை சூப்பர் கம்பியூட்டர் மூலம் அவர்கள் ஆய்வு செய்தனர். அதில் முட்டையின் செல்கள் 'வோக்லெடின்-17' (ovocleidin (OC-17) என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தமை தெரிய வந்தது.

இந்த 'வோக்லெடின்-17' (ovocleidin (OC-17) செல் கோழியின் உடலில் உள்ளது. இதுவே முட்டையாக மாறி இருக்கிறது.

'வோக்லெடின்-17' புரோட்டின், 'கிறிஸ்டல்', 'நியூகிளீசா'க மாறி தானாக வளர்ச்சி பெற்று முட்டை செல்களாக மாறுவது இதன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது.

எனவே கோழியில் இருந்துதான் முட்டை வந்துள்ளது என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் அறுதியிட்டு உறுதியாகக் கூறுகின்றனர்.

இனிமேல் யாரிடமும் யாரும் "முட்டையில் இருந்து கோழி வந்ததா? கோழியில் இருந்து முட்டை வந்ததா? " என்றெல்லாம் கேட்டு, 'டோச்சர்' பண்ணக்கூடாது. சரிதானா?

Saturday 14 December 2013

இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்!!!




மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டது.


1424 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை சாகசப்பயணிகள் விரும்பும் மலையேற்றத்துக்கான ஒரு அற்புதமான வாய்ப்பை தருகிறது.


இந்த அற்புதமான கோட்டையை நோக்கி மேலே ஏறும் பயணமானது சாகச ‘த்ரில்’ விரும்பிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும்.


இதன் அருகிலுள்ள ஹரிஷ்சந்திரகட் சிகரத்தை பயணிகள் தவறவிட்டுவிடக் கூடாது.


இச்சிகரப்பகுதியிலிருந்து ஒரு நாணயத்தை நீங்கள் கீழ் நோக்கி வீசி எறிந்தால் அது புவியீர்ப்பு சக்தியை மீறி மேல் நோக்கி தள்ளப்பட்டு மிதந்து செல்லும் அதிசயத்தை பார்க்கலாம்.


இங்குள்ள புவியியல் அம்சங்களே இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்துகின்றன. அதாவது அரை வட்டப்பாறை அமைப்பும் கீழ் உள்ள பள்ளத்தாக்கில் நிலவும் அதிகபட்ச காற்றழுத்தச்சூழலும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.


ஹரிஷ்சந்திரேஷ்வர் கோயிலுக்கு வலது புறமாக சென்றால் கேதாரேஷ்வர் குகை என்ற மிகப்பெரிய குகையை அடையலாம். இங்கு முழுவதுமாக நீரால் சூழப்பட்ட பெரிய சிவலங்கம் ஒன்று அமைந்திருக்கிறது. 5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றி இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது.


அதோடு இந்த நீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் இதை கடந்து லிங்கத்தை அடைவது சற்று கடினமானது. அதுமட்டுமல்லாமல் மிகப்பெரிய நீர் பிரவாகமே இங்கு ஓடும் என்பதால் மழைக்காலத்தில் இந்தக் குகையை அடைவது முடியாத காரியம். மேலும் சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப்பெற்றுள்ளன.


இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போது 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அந்த நாளில் இந்த உலகமும் அழிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

மனிதர்களை கொல்லும் மர்ம தீவு…!!





திகிலூட்டும் உண்மைகண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் போல பரந்து விரிந்த ஏரி. ஆங்காங்கே மலைகள். பசுமையாக குட்டி குட்டியாக தீவுகள். சுற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராளம் என்றாலும், அங்கு போகும் மனிதர்கள் திடீரென மாயமாகி விடுகிறார்கள்.


இந்த மர்ம தீவு பற்றிய விஷயங்கள் திகிலூட்டுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் என்று பெயர் பெற்ற "துர்கானா ஏரி" கென்யாவில் உள்ளது. ருடால்ப் ஏரி என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட இந்த ஏரிக்கு, பல்வேறு நதிகளில் இருந்து நீர் வருகிறது. இங்கு நிலவும் கடும் வெப்பத்தால், ஒரு பகுதி ஆவியாகிறது.


மீதமுள்ள நீர், அதிக உப்புத் தன்மையுடன் காணப்படுகிறது. கென்யாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடங்களில் ஒன்றாக இந்த பாலைவனக் கடல் திகழ்கிறது. குட்டி குட்டி தீவுகளும், பழமை மாறாத பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறையும் கவர்ந்திழுக்கிறது. இந்த அட்ராக்ஷனோடு நம்மை உறைய வைக்கும் அதிர்ச்சிகளும் உள்ளன.


இங்குள்ள குட்டி தீவுகளில் ஒன்று "என்வைட்டினெட்". இங்கு வாழும் பழங்குடியின மக்கள் பேசும் மொழி சொல். இதன் அர்த்தம் "திரும்ப வராது" என்பதாகும். என்வைட்டினெட் தீவுக்குள் செல்பவர்கள் யாரும் திரும்பி வருவது கிடையாதாம். அறிவியல் ஆராய்ச்சிகளுக்கே சவால் விடும் வகையில் இந்த தீவு உள்ளது.


முன்பொரு காலத்தில் இதில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர் என்றும் மீன் பிடிப்பது, வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது என்றும் பக்கத்துக்கு தீவுகளை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். வியாபாரத்துக்காக பக்கத்து தீவுகளுக்கு வருவார்களாம். ஆனால் ஒரு காலத்துக்கு பிறகு தீவில் இருந்து வெளியே வரும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளனர். ஒரு கட்டத்தில் யாரும் வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர். ஆனால் அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போகவே மர்ம தீவாக மாறியது என்வைட்டினெட்.


கடந்த 1935ம் ஆண்டு ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் பஸ் என்பவர் தன் குழுவினரோடு இந்த தீவு பற்றி ஆய்வுகள் மேற்கொண்டார். என்வைட்டினெட் குட்டித் தீவுக்கு இளம் விஞ்ஞானிகள் மார்டின் ஷெப்லிஸ், பில் டேசன் ஆகியோரை அனுப்பி வைத்தார் விவியன். நாட்கள்தான் போனதே தவிர விஞ்ஞானிகள் திரும்பியபாடில்லை.


இதனால் அதிர்ச்சியடைந்த ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்தே ஆய்வுகளை செய்தனர்.


ஹெலிகாப்டரில் பறந்தபடியே வேவு பார்த்தனர். எந்த தடயமும் கிடைக்கவில்லை. பழங்குடியினர் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்கள் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லவே இல்லை.


இதையடுத்து பக்கத்து தீவுகளில் வசித்தவர்களிடம் தகவல்கள் சேகரித்தார். ‘அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று வரும். அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள். அப்படித்தான் அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள்' என்று பக்கத்து தீவுவாசிகள் கூறினர்.


பிரமாண்ட ஒளி வெள்ளம் எப்படி வருகிறது, அது மனிதர்களை எரித்து விடுகிறதா, அப்படி என்றால் எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே என்ற கேள்விகளுக்கு விவியனுக்கு விடை கிடைக்கவில்லை.


இந்த தீவுக்கும், வேற்றுக் கிரகவாசிகளுக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் ஆராய்ச்சிகள் சூடு பிடித்துள்ளது. இங்குள்ள மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால் மர்ம முடிச்சுகள் எதுவும் இன்னும் அவிழவில்லை

Saturday 7 December 2013

இறந்த நிலையில் கடற்கன்னி - முத்துத்தீவில் மர்மம்!



 அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் ஒரு கடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது.


இங்கிருந்த உல்லாசப் பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியுள்ளனர்.


 இங்கு இன்னும் மறுமம் நிலவுகிறது.


சுற்றுலாக் கம்பனிகள் கூட கவலை மற்றும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் காணப்படுகின்றன.










Monday 2 December 2013

ஏலியன்ஸ் உண்மையா அல்லது பொய்யா ?

வேறு கிரகங்களிலிருந்து நம் பூமிக்கு வரும் மனிதர்களைப் பற்றி பல கதைகளும் ஃபிக்ஸன் மூவிகளும், விஞ்ஞான கட்டுரைகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது. என் சிந்தனையிலும் அப்படி வேற்றுக் கிரகவாசிகள் அடிக்கடி வந்து போவதுண்டு ஆனால் அவர்கள் முற்றிலும் வேறு பட்டவர்கள்.

பொதுவாக வேற்றுக்கிரக வாசிகள் என்றால் பெரிய ஓவல் தலையும் நீல முட்டைக் கண்களும் நீண்டு மெலிந்த கை கால்களும் கொண்டவர்கள். வேறு கிரகங்களிலிருந்து பறக்கும் தட்டு போன்ற வாகனங்களில் வான் வழியே வந்து இறங்குவார்கள் என்று தான் எண்ணுகிறோம். இது முழுக்க ஏதோ ஒரு ஓவியரின் கற்பனை தான்.

வேற்று உயிரினங்கள் மனிதச் சாயலுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. மனித சாயல் வருவதற்கு பூமியின் பல பருவமாற்றங்களை மனிதன் தாண்டி பரிணமத்தின் மூலம் பக்குவப்பட வேண்டியிருந்தது. எனவே இது போன்ற சத்தியக்கூறுகள இன்னொரு கிரக உயிருக்கு அமைவது மிக மிக அபூர்வம்.


வேற்று கிரக வாசிகள் பறக்கும் தட்டு போன்ற வாகனத்தில் வந்து இறங்க வேண்டுமென்றால் அவர்களுக்கு மனிதனைப் போன்ற உருவம் இருக்க வேண்டும். வாகனத்தை கட்டுப்படுத்த கைகள், எங்கே இருக்கிறோம் என்று பார்த்து இறங்க கண்கள், இறங்கி நடந்து வர கால்கள் எல்லாம் மனிதனை போல் அமைய வேண்டும். பறக்கும் தட்டு போன்ற வாகனத்தை வடிவமைக்க இயக்க மனிதனைப் போல் இயந்திர அறிவில் பரிணாமம் பெற்றிருக்க வேண்டும். இதற்கான சாத்தியம் வெகுவாக குறைவு. இதை விட வேறு பயண முறைகளை அவர்கள் உப்யோகிக்கலாம். teleportation என்றெல்லாம் நாமே மாற்று வழிகளை யோசித்துக் கொண்டிருக்கிறோம்.

அயல் உயிரினங்கள் எப்படியெல்லாம் இருக்க வாய்ப்புண்டு என எனக்கு தோன்றுவதை சொல்கிறேன்

கெட்டியான பாறை போல் இருக்கலாம், கூழாங்கல் போல இருக்கலாம். அதனால் தான் காலில் கல் தட்டிவிட்டது என்கிறோமா?

பிசு பிசுவென்று போஸ்டர் ஒட்டும் பசை போல் இருக்கலாம். காலில் அப்படி ஏதாவது அப்படி மிதிபட்டால் ஒருமுறை நன்றாக பரிசோதிது பார்த்து விட்டு கழுவவும்.


கலர் கூல் ட்ரிங்ஸ் போல் இருக்கலாம், ஜெல்லியாக இருக்கலாம். குடித்தால் வயிற்றை பிராண்டுவது போலிருந்தால் அதற்கு காரணம் பாக்டீரியா. இரும்பு நட்டு போல்டு போல இருக்கலாம், மண் போல இருக்கலாம் தோசை இட்லி போலக்கூட இருக்கலாம்.


புதிய தனிமம்,புதிய கிரகம்,என்றெல்லாம் கூட அறியப்படலாம்.
அலைகளாக,கதிர் வீச்சாக கூட இருக்கலாம்
ஒளியாக ஒரு விசிட் அடித்து விட்டு போகலாம்.
வாயு வடிவத்தில் உலவிக்கொண்டிருக்கலாம். நான்கு பேர் கூடுமிடத்தில் திடீரென கெட்ட நாற்றம் வந்தால் அது ஓர் நபரின் வருகையாகக் கூட இருக்கலாம்.

பூமியில் காணப்படும் எல்லா உயிரினங்களும் கார்பன் எனும் கரிமத்தை அடிப்படையாகக் கொண்டது. இது போல மற்ற தனிமங்களை அடிப்படையாகக் கொண்டு கூட உயிரினங்கள் இருக்கலாம். தங்கம் , தாமிரம், கந்தகம், போன்றவற்றை அடிப்படையாக கொண்டு கூட உயிர்கள் இருக்கலாம்

ஒளியாக ,நெருப்பாக, நீராக எல்லாம் கூட உயிரினங்கள் ஆக்கப்பட்டிருக்கும் சாத்தியம் உண்டு. ஒளியால் படைக்கப்பட்ட வானவர்கள் தினமும் பூமிக்கு வந்து செல்கிறார்கள் என்றும் நெருப்பினால் படைக்கப்பட்ட ஜின்கள் இருப்பதாகவும் குர் ஆன் சத்தியம் செய்து கூறுவதை மறுக்க முடியவில்லை. தினம் எவ்வளவு நட்சத்திர ஒளி பூமியை தொடுகிறது. ஆனால் அதன் மனித வடிவமும் மனிதனோடு இன்டெராக்சனும் உறுத்துகிறது.
பழமையான இந்து மதக் கருத்துகளும் உயிர்கள் எல்லா இடமும் இருக்கின்றது என்று தான் சொல்கின்றன.

அடிப்படை ஆதாரமாக நாம் அணுக்களால் தான் ஆக்கப்பட்டிருக்கிறோம் . அணுக்களுக்கு அடிப்படை எலெக்ட்ரான், புரோட்டான் எனும் சக்திகள் தான். எப்படி அணுக்கள் மூலக்கூறுகளாகி, அமினோ அமிலங்களாகி, செல்களாகி, மனிதனாக பரிணாமம் பெற்றானோ. இதே போல் வேறு கிளைகளிலும் ஏன் பரிணாமம் நிகழ்ந்து நம் கண்முன்னே இருந்தும் நம்மால் உணர முடியாத உயிர்கள் நம்மைச் சுற்றி இருக்கக் கூடாது. வீட்டில் இருக்கும் முதியோர்களை ஓர் உயிர்களாக தெரியாதற்கு பெயர் வேறு,அது திமிர்.

முன்பெல்லாம் ஒரு சினிமா பார்க்க வேண்டுமானால் புரொஜெக்டரில் ஃபிலிம் இட்டு ஓட்ட வேண்டும். பின்னர் வீடியோ கேஸட்டுகளில் வேறு வடிவத்தில் சினிமா பதிவு செய்து காட்டப்பட்டது, பின்னர் சிடி க்கள், டிவிடி க்கள் என வேறு டெக்னாலஜியில் அதே "குலேபகாவலி " காட்டப்பட்டது. இப்போது ஹார்ட் டிஸ்க், ஃபளாஷ் மெமெரியில் divx ,mpeg, vob ஃபைலாக கிடக்கிறது. இணையம் வழி இன்னும் எத்தனையோ வடிவங்களில் எல்லாம் அதே சினிமா வெளிப்படுகிறது. இதே போல் உயிர் என்பது வெறும் ஒரு Data தான் ஒரு software போன்றது. அது இருக்கும் மீடியம் எப்படி வேண்டுமானாலும் இருக்கும் சாத்தியம் உண்டு. மின்சாரம் கண்டுபிடிக்கப் படாமல் இருந்தால் இப்போதைய செல் போன், லேப் டாப் , இணையம் எல்லாம் எந்த வடிவில் இருக்கும் ?

வேறு உயிர்கள் வானத்திலிருந்து தான் வர வேண்டுமென்பதில்லை. நாமே இன்னும் அறியாத வகையில் இன்னும் பூமியிலே கூட இருக்கலாம். நம்மைச் சுற்றி பல்லாயிரம் வருடங்கள் இருந்தும் "மரத்துக்கும் உயிருண்டு" என்று நிரூபித்துச் சொல்ல ஒரு ஜகதீச சந்திர போஸ் தேவைப்பட்டது. இன்னும் கல்லுக்கும் மண்ணுக்கும், பூமிக்கும் கூட உயிருண்டு என பின்னாளில் உணரப்படலாம். மண்ணின் அம்சம் தானே நம் உடலிலும். பூமியின் எல்லா உயிர்களும் பூமியின் அம்சம் தானே. உயிரற்றதாக கருதப்படும் பூமியில் உயிர் தோன்றுகிறது. உயிருள்ள உடம்பில் ரோமம். நகம் போன்ற உயிரற்றப் பொருள் தோன்றுகிறது. நாம் உண்ணும் உணவில் உள்ள உயிர் பொருள் நம் உடலில் சேர்வதில்லை. அதிலுள்ள உயிரற்ற பொருள் தான் நம் உடலில் சேர்ந்து உயிர் பொருளாகிறது.

பஞ்ச பூதங்கள், வானவர்கள், தேவர்கள், அசுரர்கள் எல்லாம் இப்படிப் பட்ட வேறு உயிர்களுக்கு மனித வடிவம் கொடுத்து புரிந்து கொண்டிருப்பதாலோ என்னவோ?

வேறு உயிரினங்கள் மனித கண்களால் அளக்கக்கூடிய சைசில் இருக்க வேண்டிய அவசியமில்லை. மலையளவாகவோ, வியாழன் கோள் அளவாகவோ, ஏன் சூரியனின் சைசில் கூட இருக்கக் கூடும். அது போல ஒரு பாக்டீரியா, வைரஸை விட சிறிதாகக் கூட இருக்கலாம். அணுக்களுக்குள் கூட குட்டி பிரபஞ்சங்களும் நட்சத்திரங்களும் கிரகங்களும் உயிர்களும் இருக்கக் கூடும். நம் பார்வையின் அறிவின் எல்லைகள் மிகக் குறுகியது. நம் அறிவின் பவுதீக விதிகள் செல்லுபடியாகாத இடத்திலும் வேறு உயிர்கள் இருக்கலாம். இடம், அளவு , காலம் இதெல்லாம் நம் மனதால் அமைக்கப்படும் ஒரு கருத்து அவ்வளவு தான்.பெரிது சிறிது எல்லாம் நமக்கு மட்டும் தான். நீங்கள் சாப்பிடும் போது பல உலகங்களை உள்ளே தள்ளிக் கொண்டிருக்கலாம். சிலர் மில்கிவே , ஆண்ட்ரமீடா போன்ற கேலக்ஸிகளையே டிபன் பண்ணக்கூடும்.

நம்மை போலவே அத்தகைய வேற்று உயிர்களுக்கும் நம்மை அடையாளம் காண்பதில் சிக்கல் இருக்கலாம். வேறு கிரக உயிர்கள் நம்மை தாக்கி அழிப்பது எல்லாம் சினிமாவுக்கு தான் சரி. அவர்கள் தேவையும் நம் தேவையும் ஒன்று என்றால் தான் அந்த நிலை உண்டாகும். அதற்கு அவர்கள் நம்மைப் போல் இருக்க வேண்டும்.

Saturday 30 November 2013

பறக்கும் தட்டு கடற்பரப்பில் வீழ்ந்தமையால் மாரவிலவில் பரபரப்பு!


சிலாபம், மாரவில பிரதேசத்தில் பறக்கும் தட்டு ஒன்று நேற்றிரவு தென்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு மாரவில கடற்பரப்பில் பறக்கும் தட்டொன்று வீழ்ந்த்தாக வெளியான தகவல் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரவு 7.30 அளவில் கடற் பரப்பில் ஒளியொன்று தென்படுவதனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

கடலுக்கு 100 மீற்றர் தொலைவில் நீண்ட நேரத்திற்கு இந்த ஒளி தென்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது, நீல நிறத்திலான ஒளியொன்று தென்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். எதிலிருந்து இந்த ஒளி தோன்றியது என்பதனை பொலிஸாரினாலும் கண்டறிய முடியவில்லை.

இந்த ஒளியை பார்வையிட பிரதேசத்தைச் சேர்ந்த பலர் ஒன்று கூடியிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் 9 மணியளவில் இந்த ஒளி மின்குழில் ஒளி என தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் ஒளி கடலில் விழுந்துள்ளமை எவ்வாறு என்பது பற்றிய தகவல்கள் தெரியவில்லை.

Friday 29 November 2013

விதியா மதியா?

மனிதன் இருக்கிறானே, அவன் மகா சாமர்த்தியசாலி; ஆளப்பிறந்தவன். சாதிக்கப் பிறந்தவன். கடவுளின் படைப்பகளிலேயே மிக உன்னதப் படைப்பு.

ஆறு, மலை, கடல், காடு போன்றவற்றைத்தான் கடவுள் இந்தப் பூமியில் படைத்தார். இவனோ ஆயிரமாயிரம் விஷயங்களைப் படைத்துவிட்டான். இன்னமும் தினம் தினம் புதிதாக எதையாவது படைத்துக்கொண்டே இருக்கிறான்.

எப்படி?

அவனுடைய அறிவால். அவனுடைய முயற்சியால்.

சரிதானே?

அறிவு

மனிதனின் அறிவு என்பது ஒரு அற்புதமான ஆயுதம். அதைக் கூர்தீட்டுவதைப் பொறுத்தும், பயன்படுத்துவதைப் பெறுவதும், ஒருவருடைய சிறப்பும் செழிப்பும் அமைகிறது
.

முயற்சி


தனது இலக்கை நோக்கி, ஒரு மனிதன் எடுக்கின்ற முயற்சியின் தீவிரமும், தொடர்முயற்சிகளும், விடாமுயற்சிகளும் அவனது வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாத விஷயங்கள்.

வள்ளுவர் சூப்பராக ஒரு போடுபோடுகிறார் பாருங்கள்.

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய் வருத்தக் கூலி தரும்.


இது முடியாது என்று கடவுளே கைவிட்ட காரியமாக இருந்தால்கூட, நீ கைவிட்டு விடாதே. முயன்றுபார். நீ எடுக்கிற முயற்சியின் அளவுக்குத்தகுந்தபடி உனது வெற்றியின் அளவும் அமையும் – என்பதுதானே இதன் பொருள்.

அதாவது உழைப்புக்குத் தகுந்த ஊதியம் (Payment According to performance).

தெய்வத்தை ஒதுக்கி வைக்கிற அளவுக்கு, முயற்சிக்கு முக்கியத்துவம் தருகிறார் வள்ளுவர்.

ஆனால்

இந்தக் கருத்து நூற்றுக்கு நூறு ஒததுக்கொள்ளக கூடியதுதான் என்று நம் உள்ளம் சொன்னாலும்…

உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருக்கும் ஒரு உள்மனம் இலேசாக புருவத்தை உயர்த்துகிறது. என்னவென்று?

அதே திருவள்ளுவர் இன்னொரிடதில் இதற்கு நேர்மாறாக இன்னொரு கருத்தை சொல்லியிருக்கிறாரே, அது கொஞ்சம் இடிக்கிறதே? என்று. அந்தக்குறள் -

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.


இது என்ன சொல்கிறது?

விதியைவிட வலிமயுடையது எது?

எதுவுமில்லை.

அந்த விதியை வெல்வதற்காக என்னதான் வேறு வழிகளில் முயன்று உழைத்தாலும், விதியானது அங்கேயும் வந்து நின்று வென்று காட்டிவிடும்.

இது எப்படி இருக்கிறது?

அந்தக் குறள்படி, முயற்சி, தெய்வத்தால் ஆகாததையும் முடித்துக்கொடுத்து விடும்.

இந்தக் குறள்படி, முயற்சியை முறியடித்துவிட்டு விதி வென்றுவிடும்.

அப்படியென்றால்….

திருவள்ளுவர் நம்மை குழப்புகிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது.

திருவள்ளுவரா குழப்புகிறவர்? மிக மித் தெளிவாக தனது கருத்துக்களை வைப்பவர் அல்லவா அவர். ஆக, நாம்தான் உரிய விதத்திலே புரிந்து கொள்ள வேண்டும்.

எப்படி?

மனிதன் முன்னேற விரும்புகின்றவன். முன்னேறப் பிறந்தவன். முன்னேறியே ஆக வேண்டும். அதற்கு அவன் முதலில் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

அது தன்னம்பிக்கை.

அதோடு மட்டுமல்லாமல், அவன் சோம்பி இருக்கக் கூடாது.

உள்ளம் முழுவதம் தன்னம்பிக்கை இருந்தாலும், உடலிலே சோம்பல் இருந்துவிட்டால ஒன்றையும் சாதிக்க முடியாது. கடுமையாக உழைக்க வேண்டும். எந்த வெற்றியும் வியர்வை சிந்தாமல், விலை கொடுக்காமல் எளிதாக வந்து விடாது.

இந்தக்கருத்தை, மனிதனின் மனதிலே மிக மிக ஆழமாகப் பதிப்பதற்காகத்தான், “தெய்வத்தால் ஆகாது எனினும்” என்ற வார்த்தைகளைப் போட்டு, அந்தக் கருத்துக்கு அதிகபட்ச வலிமையை ஊட்டியிருக்கிறார்.

இதுசரி, பிறகு எதற்கு விதியை விட வலிமையுடையது வேறெதுவும் இல்லை என்ற கருத்தையும் சொல்ல வேண்டும்?

ஏனென்றால்…

மனிதன் மற்ற உயிரினங்களைவிட உயர்ந்தவன். “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்கிறார் அவ்வையார்.

அப்படிப்பட்ட பிறவியை எடுத்தவன், ஐந்தறிவு படைத்த விலங்குகளைப் போல, மிருக குணம் காட்டியா வயிறு வளர்ப்பது? வாழ்ந்து காட்டுவது? வளர்ந்து காட்டுவது? கூடாதல்லவா?

ஆனால், அதை உணராமல், குறுக்கு வழிகளிலே, தீய வழிகளிலே, மனித நேயத்தை மறந்து, இழி குணத்தை மட்டுமே காட்டி,

“ஜெயித்துக் காட்டுகிறேன் பார்”

“வளர்ந்து காட்டுகிறேன் பார்”


“உயரத்தை அடையாமல் ஓயமாட்டேன் தெரியுமா?”

என்று முயற்சிகளை எடுக்கும்போது கூட அவனது முயற்சிகளுக்கு மதிப்புக்கொடுத்து வெற்றிகள் அவனிடம் வருகின்றன.

ஆனாலும், அவன் செல்லுகின்ற பாதை, நீதி நெறியால், தர்மத்தால், நியாயத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத பாதை என்கிறபோது, அந்த நீதிநெறி, தர்மநெறி நியாயம் எல்லாம் விதி என்ற பெயரில் அவனது வாழ்வில் விளையாடி விடுகிறது.

எப்போதோ அவன், அடுத்தவரின் வாழ்வோடும் வளர்ச்சியோடும் தீய நோக்கத்தோடு விளையாடி, வென்றிருக்கலாம்.

ஆனால், பிறகு எப்போதோ, நல்ல நோக்கத்துக்காக அவன் எடுக்கும் நல்ல முயற்சிகளைக்கூட, விதி முறியடித்து முந்திச் சென்று முதலிடம் பிடித்துவிடுகிறது. கணக்கை நேர் செய்து விடுகிறது.

அதாவது, செய்த வினைகளுக்கு ஏற்பவே, விளைவுகள் நிகழ்கின்றன. வினையை விதைத்தால் வினையை அறுத்துத்தான் ஆகவேண்டும்.

இந்தக் கருத்து காலத்தால் அழியாத கருத்து, வாழ்க்கைத் தத்துவங்களிலேயே வளம் செறிந்த கருத்து. புல்முனை கூட புறக்கணிக்க முடியாத கருத்து.

இப்போது புரியுமே, விதியைவிட வலியது எதுவுமில்லை என்று ஏன் சொன்னார் வள்ளுவர் என்று.

இப்போதும் புரியவில்லையா? இன்னொரு குறளையும் எடுத்து விடுகிறார் பாருங்கள்.

அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்
பிற்பயக்கும் நாற்பா லவை.

என்ன பொருள்?

பிறரை வருத்தப்பட வைத்து ஒருவன் பெற்ற பொருளெல்லாம் அவனை வருத்தப்பட வைத்து, அவனை விட்டுப் போய்விடும். நல்லவழியில் வந்தவைகளோ, கைவிட்டுப் போனாலும், வேறு எந்த விதத்திலாவது நன்மையே தரும்.

சுருக்கமாக

முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, வழியில் குறுக்கிடும் மனிதர்களையும், வாகனங்ளையும் இடித்துத்தள்ளிவிட்டு, மூர்க்க்தனமாக வண்டியை ஒட்டுபவனை, வெற்றி பெற்றவனாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பாராட்டமுடியும்?

நீ முன்னேறு. யார் வேண்டாம் என்றார்கள். ஆனால் அடுத்தவன் வயிற்றில் ஏன் அடிக்கிறாய்? அடுத்தவனை ஏன் மோசம் செய்கிறாய்? நம்பியவனுக்கு ஏன் துரோகம் செய்கிறாய்?

யோசிக்கலாமே?

50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனைமரங்கள் அழிப்பு சர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா?

 

கடந்த 50 ஆண்டுகளில் 25 கோடி பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பனை வீழ்ந்து கருவேல மரங்கள் வாழ்வதே, தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க காரணம் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியுள்ளார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளன. இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால், விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழ்நாடுகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியதாவது:

உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும்  தடை உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்தவரை, பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. தண்ணீர் இல்லாததால், பனை மரங்களை காப்பாற்ற முடியாமல் செங்கல் சூளைக்கும், சுண்ணாம்பு காளவாய்க்கும் எரிபொருளாக வெறும் ரூ.50க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

முன்பு இனிப்புக்கு பனங்கருப்பட்டி, கற்கண்டு மற்றும் பதநீர் போன்றவை பயன்பட்டன. வெள்ளை சர்க்கரை நுகர்வு அதிகரித்ததால், பனைப்பொருட்களின் பயன்பாடு குறைந்து விட்டது. சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க இதுவே காரணம். சீமைக் கருவேல மரங்கள் அதிகரித்ததே, பனை மரங்களின் அழிவுக்கு காரணமாகி விட்டது.

கள், பதநீர், கற்கண்டு, நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு என ஆண்டுதோறும் உணவு கொடுத்து வந்த பனை மரங்களை வெட்டுவதும், அவற்றை தோண்டி எறிவதும் கடும் குற்றத்துக்கு ஒப்பானதுதான். அழிவிலிருந்து காப்பாற்ற பனை மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.  பனை மரங்களை காப்பாற்றவும், பனை பொருட்களின் உற்பத்தி மற்றும் தேவையை பெருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நல்லசாமி கூறியுள்ளார்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top