.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label நிகழ்வுகள்!. Show all posts
Showing posts with label நிகழ்வுகள்!. Show all posts

Friday 15 November 2013

துடைக்கும் துண்டு பளிச்சென்று மின்னுவதற்கு, இதோ சில எளிய வழிகள்!!!

அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் துண்டு. இத்தகைய துண்டை புதிதாக வாங்கி, ஒரு மாதத்திற்கு பின் பார்த்தால், அதனை எப்போது வாங்கினோம் என்று யோசிக்கும் வகையில் துண்டில் அழுக்கு மற்றும் கறையானது படிந்திருக்கும். இத்தகைய துண்டானது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதிலும் உடலை துடைக்கப் பயன்படுத்தும் துண்டாகட்டும் அல்லது சமையலறையை சுத்தம் செய்ய பயன்படும் துண்டு ஆகட்டும், எதுவானாலும், இவற்றில் படியும் கறைகள் மற்றும் அழுக்குகளைப் போக்குவது என்பது கடினமான ஒன்று.

அதிலும் அத்தகைய கறைகளைப் போக்க பெரும்பாலானோர் பின்பற்றும் ஒரு செயல் தான், சுடு தண்ணீரில் துண்டை ஊற வைத்து, சோப்பு போட்டு பிரஷ் கொண்டு தேய்த்து துவைப்பது. இருப்பினும், சில நேரங்களில் துண்டில் உள்ள கறைகள் அவ்வளவு எளிதில் நீங்காமல் இருக்கும். அதுமட்டுமின்றி, இவ்வாறு தேய்ப்பதால் துண்டில் இருந்து நூலானது வெளிவர ஆரம்பிக்கும்.
ஆகவே துண்டு பாழாகாமல் இருக்கவும், துண்டில் உள்ள கறைகளை எளிதில் போக்கவும் ஒருசில எளிய வழிகளை கீழே கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதன் படி துண்டை சுத்தம் செய்து பாருங்கள்.

சுடுநீர்

சில நேரங்களில் புதிய துண்டு நீரை உறிஞ்சாமல் இருக்கும். அத்தகைய துண்டை சுடுநீரில் 25 நிமிடம் ஊற வைத்து அலசினால், துண்டு தளர்ந்துவிடும். அதுமட்டுமல்லாமல், அழுக்கு அதிகம் உள்ள துண்டாக இருந்தால், சுடுநீரில் நன்கு ஊற வைத்து, கைகளாலேயே தேய்த்து துவைத்தால், அழுக்கு போவதோடு, துண்டும் பாழாகாமல் இருக்கும்.

  
டிடர்ஜெண்ட்

வேண்டுமெனில், சுடு தண்ணீரில் சோப்புத்தூள் போட்டு கலந்து, அக்கலவையில் துண்டை நன்கு 30 நிமிடம் ஊற வைத்து, இறுதியில் சோப்பு போட்டு நன்கு துவைத்தால், அழுக்கு நீங்கிவிடும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா கொண்டும் துண்டில் உள்ள கறைகளைப் போக்கலாம். அதிலும் நிறம் மாறி உள்ள வெள்ளை நிறத் துண்டை, பேக்கிங் சோடா பயன்படுத்தி துவைத்தால், வெள்ளை நிறத் துண்டை பளிச்சென்று மாற்றலாம்.

வினிகர்

வினிகர் கூட கறைகளைப் போக்க உதவும் ஒரு சூப்பரான பொருள். அதற்கு நீரில் வினிகரை ஊற்றி, அதில் கறையுள்ள துண்டை ஊற வைத்து துவைக்க வேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சையின் நன்மைக்கு அளவே இல்லை. அதிலும் சோப்பு நீரில் சிறிது எலுமிச்சை சாற்றினை கலந்து, கறை படிந்த துண்டை ஊற வைத்து துவைத்தால், கறை நீங்குவதோடு, துண்டும் நல்ல மணத்தோடு இருக்கும்.

உப்பு

பெரும்பாலான மக்கள் வெள்ளை நிற துண்டைத் தான் பயன்படுத்துகிறார்கள். முக்கியமாக வெள்ளை நிற துண்டில் உள்ள கறைகளைப் போக்குவது என்பது கடினம். ஆனால் அந்த வெள்ளைத் துண்டை உப்பு பயன்படுத்தி துவைத்தால், துண்டில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி துண்டு சுத்தமாக இருக்கும்.

ஃபேப்ரிக் சாஃப்ட்னர்

மேற்கூறியவாறெல்லாம் துண்டை துவைத்தப் பின்னர், துண்டில் நல்ல நறுமணம் இருக்க வேண்டுமெனில், துண்டை துவைத்த பின்பு, நீரில் சிறிது ஃபேப்ரிக் சாஃப்னரை கலந்து, அந்த நீரில் துண்டை நனைத்து பிழிந்தால், துண்டு நன்கு மணத்துடன் இருக்கும்.


படித்ததில் பிடித்தது!

                                                  படித்ததில் பிடித்தது

ஒருவர் தனது நண்பர்களுக்கு விருந்து அளித்தார். விருந்தின் முடிவில் ஒரு கேன் நிறைய காபி கொண்டு வந்து வைக்கப்பட்டது.

ஒரு தட்டில் சாதாரண பிளாஸ்டிக் கப்பிலிருந்து கண்ணாடிக் கோப்பை, பீங்கான் கோப்பை, அலங்காரக் கோப்பை என்று விதவிதமான கோப்பைகள் இருந்தன.

விருந்துக்கு வந்த அனைவரும் விலை உயர்ந்த கோப்பைகளை எடுக்கவே முயன்றனர்.விலை குறைந்த பிளாஸ்டிக் கோப்பைகளை யாரும் சீண்டக் கூட இல்லை. விருந்தளித்தவர் சொன்னார் ''எதிலும் சிறப்பையே நாடுவது மனித இயல்பே. ஆனால் உங்களது இப்போதைய தேவை காபிக் கோப்பைகள் அல்ல.நல்ல காபிதான். எந்தக் கோப்பையில் குடித்தாலும் நீங்கள் குடிக்கப் போவது இங்குள்ள ஒரே தரக் காப்பியைத்தான்.

நம் வாழ்க்கையும் அந்தக் காபியைப் போன்றுதான் உள்ளது. அந்தக் காபியை அருந்த உதவும் கோப்பைதான் உங்கள் வேலை, சமூக அந்தஸ்து, செல்வச் செழிப்பு எல்லாம். நீங்கள் உங்கள் கோப்பைகளில் மட்டும் கவனம் செலுத்தி.காபியின் உண்மையான ருசியை ரசிக்கத் தவறி விடுகிறீர்கள். காபியின் ருசியை நாவிற்கும் நாசிக்கும் ஏற்றுங்கள், நண்பர்களே!''

கிரெடிட் கார்டு ஸ்கிம்மிங் (card skimming) என்றால் என்ன?

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் பரவலான பயன்பாட்டினால், பணத்தை கையிலேயே எடுத்துக் கொண்டு அலைய வேண்டிய சிரமம் தவிர்க்கப்பட்டு, தனிமனித வாழ்க்கை முறை எளிமையாக்கப்பட்டிருந்தாலும், அவற்றை மிகக் கவனமாகவும், எச்சரிக்கை உணர்வுடனும் உபயோகிப்பது மிகவும் முக்கியம். இல்லையெனில், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் புகுந்து ஏமாற்றக்கூடிய மோசடிப் பேர்வழிகள் நம் உடைமைகளைக் களவாட நாமே வழியமைத்துக் கொடுத்தது போலாகிவிடும்.

சமீப காலத்தில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் தொடர்புடைய ஏராளமான மோசடி சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இவற்றுள், கார்டு ஸ்கிம்மிங் (card skimming) மோசடி, சர்வசாதாரணமாக அடிக்கடி நிகழும் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கார்டு ஸ்கிம்மிங் என்பது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு காந்தப் பட்டையில் பதிவாகியிருக்கும் தகவல்களை, சட்டத்துக்குப் புறம்பான முறைகளில் அறிந்து கொள்ளும் ஒரு மோசடி செயலாகும். இவ்வாறு சுரண்டியெடுக்கப்படும் தகவல்கள் மற்றொரு வெற்றுக் கார்டுக்கு மாற்றப்பட்டு, விற்பனை மையங்களிலோ அல்லது ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கோ சட்டவிரோதிகளால் உபயோகிக்கப்படுகின்றன.

எவ்வாறு கார்டு ஸ்கிம்மிங் செயல்படுத்தப்படுகிறது?

பொதுவாக, அசல் கார்டு ரீடருக்குப் பதிலாகப் பொருத்தப்படும் போலி ரீடரைக் கொண்டு, தேய்க்கப்படும் கார்டுகளில் இருக்கும் தகவல்களைப் பதிவு செய்து கொள்வதன் மூலம் கார்டு ஸ்கிம்மிங் செயல்படுத்தப்படுகிறது. இத்தகைய போலி ஸ்கிம்மிங் சாதனங்கள், பெரும்பாலும் கையில் பிடித்துக் கொள்ளக்கூடியதான பின்பேட்கள் மற்றும் ஏடிஎம்கள் போன்ற இயந்திரங்களில் பொருத்தப்படுகின்றன. மேலும் ஒற்றையாக, கையடக்கமாக மற்றும் பாண்ட் பாக்கெட்டில் அடங்கி விடக்கூடியதாக இருப்பதனால், இச்சாதனத்தை பல்வேறு இடங்களுக்கும் தூக்கிச் செல்வது மிகவும் எளிது.


தப்பிக்க வழிகள்!!


இத்தகைய மோசடிகளை அறவே தவிர்ப்பது மிகக் கடினமான காரியமே; என்றாலும் கார்டுஹோல்டர்களுக்கு உதவக்கூடிய சில வழிமுறைகளும் இருக்கின்றன. இவற்றைக் கடைபிடிப்பதின் மூலம் இத்தகைய மோசடிகளின் விஸ்தீரணத்தை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும்.


பில்களை நேரடியாக செலுத்துங்கள்


உங்கள் பில்களை செலுத்துவதற்கு, உங்கள் பிளாஸ்டிக் பணக் கார்டுகளை ஏதேனும் சர்வர்களிடம் கொடுத்து விடாமல், நேரடியாக நீங்களே விற்பனை கூடத்திற்கு சென்று கார்டு மூலம் உங்கள் பில்லுக்கான தொகையை செலுத்துங்கள்.


ஏடிஎம் கார்டை பயன்படுத்தும் முறை


எப்போதும் ட்ரான்ஸாக்ஷன் செய்ய முற்படுகையில், உங்கள் கைகளைக் கொண்டு சாதனத்தை நன்கு மூடியுள்ளீர்களா என்பதை முதலில் உறுதிசெய்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், பின்-ஹோல் காமிராக்களோ அல்லது உங்கள் தோள் வழியாக எட்டிப் பார்க்கும் ஸர்ஃபரோ உங்கள் பின் நம்பரைப் பார்த்துக் குறித்துக் கொள்வதை தவிர்க்கலாம்.


எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்


எந்தவொரு வணிக மையத்தின் பேமெண்ட் கவுன்ட்டரில் ஏடிஎம் கார்டை கொடுத்து வாங்கும் போதும் உங்கள் கார்டின் மேல் தனி கவனம் இருக்கட்டும்.



வங்கி ஸ்டேட்மெண்ட்டுகளை சரி பார்த்தல்


கார்டு ஸ்கிம்மிங் மற்றும் அதனை ஒத்த இதர மோசடிகள் அனைத்தும் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவை. கார்டு தொடர்பான ஸ்டேட்மெண்ட்டுகளை சீரான இடைவெளிகளில் சரி பார்ப்பதன் மூலம் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகளை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும்.


போலியான அல்லது சந்தேகத்திற்குரிய ஏடிஎம் நீங்கள் ஏதேனும் போலியான அல்லது சந்தேகத்திற்குரிய ஏடிஎம் அல்லது பின்பேடை எங்கேனும் எதிர்கொள்ள நேர்ந்தால், அதனைப் பற்றி உடனே சம்பந்தப்பட்ட வங்கி அல்லது காவல்துறைக்கு உடனே தெரிவிக்கவும்.


புதிய சிப்- ஏடிஎம் கார்டுகளை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கும் கார்டு ஸ்கிம்மிங் சம்பவங்களை கருத்தில் கொண்டு, ஆர்பிஐ, வர்த்தகத்துறை மற்றும் பொதுத்துறை வங்கிகளை காந்த பட்டை உடைய கார்டுகளுக்குப் பதிலாக கூடுதல் பாதுகாப்புடன் கூடியதான சிப்-அடிப்படையிலான கார்டுகளை நவம்பர் 30, 2013 -க்குள் மாற்றும்படி அறிவுறுத்தி சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. காந்தப் பட்டையை தன் பின்புறத்தில் கொண்டுள்ள, தற்போது புழக்கத்தில் உள்ள பிளாஸ்டிக் கார்டுகளைப் போலல்லாமல், உட்பதிக்கப்பட்ட மைக்ரோபிராசஸர்களைக் கொண்டிருக்கும், இந்த புதிய சிப்-அடிப்படையிலான கார்டுகளை, இயந்திரத்தின் உள்ளே முழுக்க செலுத்திய பின்னரே, எந்த ஒரு ட்ரான்ஸாக்ஷனை செயல்படுத்துவதற்கும், கார்டுஹோல்டர் தன் பாதுகாப்பான 4-இலக்க பின் நம்பரை அழுத்த வேண்டியிருக்கும்.

கூகுள் புரொஜெக்ட் லூன் தொடர்பில் மற்றுமொரு தகவல்!




எந்தவொரு தருணத்திலும் தடங்கலற்ற இணைய சேவையை வழங்கும் முகமாக கூகுள் நிறுவனம் புரொஜெக்ட் லூன் எனும் சேவையை அறிமுகப்படுத்தவிருக்கின்றது.

பறக்கும் பலூன்கள் மூலம் Wi-Fi தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி இணைய இணைப்பினை வழங்குதலே இச்சேவையின் நோக்கமாகும்.

இதேவேளை இச்சேவையில் பங்குகொள்ளும் ஒவ்வொரு பலூனும் 100 நாட்களில் பூமியை 3 தடவைகள் சுற்றிவரும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் குறித்த பலூன்கள் எந்தவொரு காலநிலையையும் தாங்கும் வகையில் பொருத்தமான ஊடகத்தினால் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டி ரெக்ஸ் டைனசோரின் மூதாதை விலங்கு கண்டுபிடிப்பு

 

சுமார் 70 மிலியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கொடூரமான விலங்கான, திரன்னோசோரஸ் ரெக்ஸ் (டி.ரெக்ஸ்) என்ற டைனசோரின் முன்பு வந்த , அதன் உறவு என்று கருதப்படும் மற்றொரு விலங்கை , அமெரிக்காவின் யுட்டா மாகாண விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

யுட்டா மாகாண பல்கலைக்கழகத்தின் , டைனசோர் ஆராய்ச்சியாளர்கள் , இந்த ஜந்து, பரிணாம வளர்ச்சி அடிப்படையில் பார்த்தால், டி-ரெக்ஸின் மாமா-கொள்ளுத்தாத்தாவாக இருக்கவேண்டும் என்றும் அது , பிரபலமாக அறியப்படும் டி.ரெக்ஸ் வாழ்ந்த காலத்துக்கு சுமார் 10 அல்லது 12 மிலியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தது என்று கூறுகிறார்கள்.

லித்ரொனக்ஸ் ஆர்கெஸ்டெஸ் அல்லது கோர் அரசன் என்று அறியப்படும் இந்த விலங்கு, இரண்டு கால்களில் நின்று, பெரும் வாட்களைப் போன்ற பற்களைக் கொண்டிருந்தது என்றும், வேட்டைக்காக நேரடியாக முன்னோக்குப் பார்க்கும் கண்களைக் கொண்டிருந்தது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

சுமார் ஏழரை மீட்டர் நீளம் கொண்ட இந்த விலங்கு அது வாழ்ந்த சூழலில், மிகவும் சக்தி வாய்ந்த ,வேட்டை மிருகமாக இருந்திருக்கும் என்றும் இந்த ஆராய்ச்சிக்குழு கூறுகிறது.

இந்தக் கண்டுபிடிப்பு பழங்கால சுற்றுச்சூழல்கள் குறித்த முக்கிய தகவல்களை வெளிப்படுத்தும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.


மனிதர்களின் முழங்காலில் புதிய தசைநார் கண்டுபிடிப்பு!

 புதிய தசைநார் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது

மனிதர்களின் முழங்கால் பகுதியில் முன்னெப்போதும் அறியப்படாத தசைநார் ஒன்று காணப்படுவதைக் கண்டறிந்துள்ளதாக பெல்ஜியத்தின் முழங்கால் மருத்துவ நிபுணர்கள் அறிவித்திருக்கின்றனர்.
தொடை எலும்புக்கு மேல்புறத்திலிருந்து முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப்பட்ட முன்னங்கால் வரையான பகுதிவரை இந்த தசைநார் அமைந்துள்ளதாக மருத்துவர் க்ளஸ் மற்றும் பேராசிரியர் ஜோஹன் பெல்லெமன்ஸ் ஆகிய மருத்துவ நிபுணர்கள் இருவரும் கண்டறிந்துள்ளனர்.


நாம் நடந்துசெல்லும்போது திடீரென்று திசைமாற்றி கால்களை திருப்பி நகர்த்தும்போது இந்த தசைநார்கள் தான் கால்களுக்கான பாதுகாப்பு அரணாக அமைவதாக இவர்கள் கூறுகிறார்கள்.

இப்படி ஒரு தசைநார் முழங்காலை ஒட்டி அமைந்திருக்கும் என்று நீண்டகாலமாக கருத்துக்கள் இருந்துவந்த போதிலும் இப்போது தான் அதுபற்றிய ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கிறது என்று பிரிட்டனிலுள்ள முழங்கால் சிகிச்சை நிபுணரான ஜோயல் மெல்டன் கூறுகிறார்.

மருத்துவ பரிசோதனைக்கான உடல் உறுப்பு தானமாகக் கிடைத்த 41 பேரின் முழங்கால்களை நுண்ணோக்கி கருவி மூலம் ஆராய்ந்துபார்த்த விஞ்ஞானிகள், எல்லா முழங்கால் எலும்புகளில் இந்த தசைநார்கள் காணப்பட்டதை கண்டறிந்துள்ளனர். அதுவும் அவை எல்லாம் ஒரே வடிவமைப்பில் இருப்பதாகவும் இவர்கள் கண்டறிந்தார்கள்.

பொதுவாக விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படக்கூடிய முழங்கால் காயங்களின்போது, அவற்றை சரியாக புரிந்துகொள்ளவும் சிகிச்சை அளிக்கவும் இந்த தசைநாரின் அமைப்பு உதவும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

கால்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், பனிச்சறுக்கல் மற்றும் ஓட்டப் போட்டிகள் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும் வீரர்கள் தங்களின் கால்கள் செல்லும் திசையை திடீரென்று மாற்றும்போதோ நிறுத்தும்போதோ இவ்வாறான முழங்கால் உபாதைகள் ஏற்படுகின்றன.

இவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளால் முன்னேற்றம் ஏற்படுகின்ற போதிலும் 10 முதல் 20 வீதமானோருக்கு முழுமையான குணம் கிடைப்பதில்லை.

கால்களின் முன் பக்கவாட்டில் இருக்கின்ற இந்த தசைநாரில் ஏற்படுகின்ற காயங்களும் அனேகமான முழங்கால் உபாதைகளுக்கு பகுதியளவில் காரணமாகின்றன என்று மருத்துவர் க்ளஸ் மற்றும் பேராசிரியர் ஜோஹன் பெல்லமன்ஸ் நம்புகின்றனர்.

முழங்கால் காயங்களால் பாதிக்கப்படுவோரை குணப்படுத்த இந்த புதிய கண்டுபிடிப்பை எந்தளவுக்கு பயன்படுத்த முடியும் என்று அறிய இன்னும் மேலதிக ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

மாவீரன் சிவாஜியின் பக்தி அடையாளம்!


மாவீரன் சத்ரபதி சிவாஜியின் ஆன்மிகப்பற்று, இந்து சமயத்திற்கு அவர் ஆற்றிய தொண்டு மற்றும் அவர் கட்டிய கோயில் திருப்பணிகள் எல்லாமே  மிகப்பெரியன. மஹாராஷ்டிரா மாநிலம் கொங்கண் கடற்கரையை ஒட்டிய காட்டுப்பகுதியில் சில கோயில்கள் உள்ளன. அவற்றுள் பகவதி தேவி  கோயில், கணபதிதாரி கோயில் மற்றும் சிவாஜி கட்டிய சிவராஜேஸ்வர் கோயில்கள் மிகவும் புகழ்பெற்றவை. கொங்கண் காட்டுப்பகுதியில் உள்ள  சவந்தவாடி என்ற குன்றிலிருந்து உற்பத்தியாகும் நீர், கர்லா என்ற நதி வழியாக தாமாப்பூர் ஏரிக்கு வந்து சேருகிறது.

அந்த ஏரிக்கரையின்மேல் அமைந்துள்ள கோயிலில் பகவதி தேவி தரிசனமளிக்கிறார். அக்கோயிலைச் சுற்றி ஓடுகள் வேயப்பட்டு கேரளபாணியில் கட் டப்பட்ட மண்டபங்கள் உள்ளன. அவை இத்தலத்திற்கு புனிதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காகக் கட்டப்பட்டவை. அங்கிருந்து சிறிது தூரம்  சென்றால் மால்வன் என்ற கோட்டைக்கு அருகில் கணபதிதாரி என்ற இடத்தில் ஒரு கிணற்றில் புனித கங்கை நீர் ஊற்றெடுக்கிறது. அதன் அருகில்  வலது பக்கத்தில் ஒரு துளசிமாடம் உள்ளது.

மாவீரன் சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட பரம்பரை பூசாரிகள், கணபதிதாரி கிணற்றிலிருந்து ஒரு குடம் தண்ணீர் எடுத்துத் தருகிறார்கள்.  அலங்கரிக்கப்பட்ட பாய் மீது அக்குடத்தை வைத்து மலர் மாலை அணிவித்து பக்தர்கள் பூஜை செய்கின்றனர். சம்பந்தப்பட்ட மந்திரங்களை பூசாரி ஓ துகிறார். சந்தன மணம் கமழும் ஊதுவத்தி, ஆரத்தியாக காட்டப்படுகிறது. லட்டு போன்ற இனிப்பு வகைகள் அக்குடத்திற்கு நிவேதனம் செய்யப்பட்டு  பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படுகிறது. ஒரு பெரிய போரில் வெற்றி பெற விரும்பிய மாவீரன் சிவாஜி இங்கு வந்து கங்கா பூஜை செய்து ள்ளார். அவருடைய வேண்டுகோளை ஏற்று கங்கா தேவி அக்கிணற்றுக்குள் வந்ததாகக் கூறப்படுகிறது.

அதன் நினைவாகவே மேற்படி பூஜை. சற்று தூரம் சென்றால், மால்வன்கோட்டைக்கு தெற்குப் பக்கத்தில் மன்னன் சிவாஜி கட்டிய சிவராஜேஸ்வர்  கோயில் உள்ளது. அக்கோயில் முழுவதும் செங்கற்களாலேயே கட்டப்பட்டுள்ளது. சிவாஜி தன் கைகளாலேயே செங்கல் எடுத்து வைத்து, கட்டு மானப்பணிகளைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

கோயில் கருவறையில் காட்சி தரும் சிவராஜேஸ்வர் சிலையின் முகத்திற்கு உலோகக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. அவர் பெரிய மீசையுடன்  கம்பீரமாக போர்வீரனைப் போல் காணப்படுகிறார். முகம் தவிர மற்ற பாகம் முழுவதும் சிவப்புத்துணியால் மறைக்கப்பட்டுள்ளது. இச்சிலையையொட்டி  சிவாஜி பயன்படுத்திய இருமுனைவாள் (தோதார்) வைக்கப்பட்டுள்ளது. கீழே அமர்ந்த நிலையில் உள்ள சிவராஜேஸ்வர் படமும் வைக்கப்பட்டுள்ளது.  இக்கோயிலை சிவாஜி கோயில் என்றும் அழைக்கின்றனர்.

மேலும் அப்பகுதியிலுள்ள கோட்டைகள், கிணறுகள், மதகுகள், எதிரிகளிடமிருந்து தப்பிச் செல்லும் சுரங்கவழிப் பாதைகள், திசை காட்டும் உயரமான  கோபுரங்கள், மணிக்கூண்டுகள் மற்றும் சிவராஜேஸ்வர் கோயில் சுவர்கள் என்று எல்லா இடங்களிலும் சிவாஜியின் வலது கை அடையாளம்  பதிக்கப்பட்டு இன்றும் அப்படியே காணப்படுகிறது. ஒரு முகமதிய வியாபாரி தன் சரக்குகளை கப்பலின் ஏற்றிக் கொண்டு கொங்கண் கடற்கரை  நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று இடி மின்னலுடன் பெருமழை பெய்து பெரும் புயலும் வீசியது.

அதனால் அந்தக் கப்பல் வழிதடுமாறி ஒரு கருப்பு மலையில் மோதிக் கொள்ள இருந்தது. அப்போது அந்த மலையிலிருந்து ஒரு ஒளி தோன்றியது.  அந்த வெளிச்சத்தில் மலைமீது ஒரு மூங்கில் கொட்டகை இருப்பது அந்த வியாபாரியின் கண்களில் பட்டது. பின்னர் இறைவன் அருளால் புயல்  அபாயம் நீங்கியது. அதனால் மகிழ்ந்த வியாபாரி இறைவனுக்கு நன்றி செலுத்த விரும்பி மூங்கிலாலேயே ஒரு சிவபெருமான் உருவத்தைச் செய்து  அந்த மூங்கில் கொட்டகையில் வைத்து வணங்கினார். இன்றும் அந்த மூங்கில் ஆலயம் இந்து-முஸ்லிம் மத நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக  விளங்கிவருகிறது.

மும்பை வந்து விட்டால் இக்கோயில்களுக்குச் செல்ல வசதிகள் உள்ளன. காடுகள் நிறைந்த மலைப்பிரதேசமாக இருப்பதால் வழிகாட்டிகளை அழை த்துச் செல்ல வேண்டும். குறிப்பிட்ட காலங்களில் மட்டும்தான் இங்கு செல்ல முடியும்.

சில நிமிடங்களிலேயே பணம் அனுப்பும் செல்போன் வழி பரிமாற்றம் !


சில நிமிடங்களிலேயே பணம் அனுப்பும், செல்போன் வழியிலான பணப் பரிமாற்றம் என்ற புதிய சேவையை இந்திய தபால் துறை தமிழகத்தில் நாளை அறிமுகம் செய்கிறது.

 தில்லி, பஞ்சாப், பிகார், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மகாராஷ்டிரம், குஜராத், ஹரியானா, மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட இச் சேவை தற்போது தமிழகத்திலும் நடைமுறைக்கு வருகிறது. தபால் துறையின் தென் மண்டலத்தில் 95 தபால் நிலையங்களிலும், அதில் மதுரை கோட்டத்தில் 32 தபால் நிலையங்களிலும் இச் சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.

 செல்போன் வழி பணப்பரிமாற்ற சேவையைப் பயன்படுத்த விரும்புவோர், இச் சேவை வழங்கும் தபால் நிலையத்தில் பணத்துடன் தங்களது செல்போன் எண்ணையும், பணம் அனுப்ப வேண்டியவரின் முழு முகவரி, செல்போன் எண்ணையும் குறிப்பிட்டு அதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

 பணம் பெறப்பட்ட சில நிமிடங்களிலேயே அதன் விவரம் பணம் அனுப்புவருக்கும், பணம் பெற வேண்டியவருக்கும் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலமாக அனுப்பி வைக்கப்படும். அதில் பணப் பரிமாற்ற குறியீட்டு எண் குறிப்பிடப்பட்டிருக்கும். மேற்படி எஸ்.எம்.எஸ். பெறப்பட்ட நபர், அருகில் உள்ள தபால் நிலையத்தில் பணப் பரிமாற்ற குறியீட்டு எண்ணுடன் கூடிய குறுந்தகவலைக் காண்பித்து பணம் பெற்றுக் கொள்ளலாம். பணம் பெற வேண்டிய நபர் அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் அடையாள அட்டையுடன் சென்று தபால் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு பரிமாற்ற குறியீட்டு எண்ணுடன் வந்துள்ள குறுந்தகவலைக் கொண்டு வருவது அவசியம்.  இப்போது நடைமுறையில் இருக்கும் மணியார்டரில் தபால்காரர் வீட்டுக்கே வந்து பணம் கொடுப்பார். ஆனால், சம்பந்தப்பட்ட நபர் மட்டுமே பணத்தைப் பெற முடியும். தபால்காரருக்கு அன்பளிப்பாக பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.

புதிய சேவையில் குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் பெற்றுக் கொள்ளலாம். அதோடு, பணம் அனுப்பிய சில நிமிடங்களிலேயே பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.  மணியார்டர் அனுப்பும்போது ரூ.100-க்கு ரூ.5 கமிஷன் தொகையாகப் பெறப்படுகிறது. செல்போன் வழி பண பரிமாற்றத்தில் ரூ.1000 முதல் ரூ.1,500 வரை ரூ.40, ரூ.1501 இல் இருந்து ரூ.5 ஆயிரம் வரை ரூ.70, ரூ.5,001 இல் இருந்து ரூ.10 ஆயிரம் வரை ரூ.100 மற்றும் சேவை வரி சேர்த்து கமிஷன் தொகையாக பெறப்படும். இது மணியார்டருக்கான கமிஷன் தொகையைக் காட்டிலும் குறைவாகும்.

 அனுப்பிய தொகையை இரு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட நபர் பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் 15 ஆவது நாள், அனுப்பப்பட்ட தபால் நிலையத்திற்கே பணம் திரும்பச்சென்றுவிடும். பணம் அனுப்பிய நபர் அங்கு சென்று பெற்றுக் கொள்ளலாம்.

 தமிழகத்தில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படும் இச்சேவையை, மதுரையில் அரசரடி, மதுரை, தல்லாகுளம் ஆகிய தலைமை தபால் நிலையங்களிலும், சில குறிப்பிட்ட துணை தபால் நிலையங்களிலும் பெறலாம். இச் சேவை வழங்கப்படும் தபால் நிலையங்களின் விவரத்தை ஜ்ஜ்ஜ்.க்ர்ல்ம்ர்க்ஷண்ப்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 5-வது சுற்றில் ஆனந்துக்கு சவால்


 


உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 5-வது சுற்று வெள்ளிக்கிழமை துவங்குகிறது. இதுவரை நடந்த சுற்றுக்கள் டிராவில் முடிந்த நிலையில், 6-வது மற்றும் 7-வது சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாட உள்ள ஆனந்துக்கு 5-வது சுற்றில் சவால் காத்திருக்கிறது.

சர்வதேச செஸ் கூட்டமைப்பு நடத்தும், உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சென்னையில் நடந்து வருகிறது. இதில், இந்தியாவின் ஆனந்த், நார்வேயின் கார்ல்ùஸன் மோதுகின்றனர். இதுவரை நடந்த நான்கு சுற்றுகளும் டிராவில் முடிவடைந்தன. இதனால் இருவரும் தலா 2 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் சமநிலையில் உள்ளனர்.

முதல் சுற்றில் ஆனந்த் சுதாரித்தார். இரண்டாவது சுற்றில் கார்ல்ùஸன் எழுச்சி பெற்றார். 3-வது சுற்றில் ஆனந்த், கார்ல்ùஸனுக்கு நெருக்கடி கொடுத்தார். 4-வது சுற்றில் மீண்டும் கார்ல்ùஸன் சுதாரித்துக் கொண்டார்.

வியாழக்கிழமை ஓய்வுக்குப் பின்,5-வது சுற்று வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதில் ஆனந்த் கறுப்பு நிறக் காய்களுடனும், கார்ல்ùஸன் வெள்ளை நிறக் காய்களுடன் ஆட உள்ளனர். விதிப்படி, 6-வது மற்றும் 7-வது சுற்றுக்களில் ஆனந்த் வெள்ளை நிறக்காய்களுடன் ஆட உள்ளார்.

வெள்ளை நிறுக் காய்களுடன் விளையாடியபோது இருவரும் திறமையாக செயல்பட்டனர். எனவே, 5-வது சுற்றில் கறுப்புக் காய்களுடன் விளையாடும் ஆனந்துக்கு நெருக்கடி ஏற்படும். 2-வது சுற்றில் காரோ கான் முறையில் அசத்திய கார்ல்ùஸன் அடுத்தடுத்த சுற்றுகளில் பெர்லின், சிசிலியன் மற்றும் ஃபிரெஞ்ச் முறைகளின் மூலம் ஆனந்துக்கு சவால் அளிக்க காத்திருக்கிறார்.

Thursday 14 November 2013

நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் ஆறு விஷயங்கள்!


நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் ஆறு விஷயங்கள்!

1. சாலையில் எச்சில் துப்புதல் :


இதில் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. அது சூவிங் கம் முதல் குட்கா வரை. இவற்றை கணக்கெடுத்தால் நான்கு ஜென்மம் எடுக்கும்.

2. சிக்னலை மீறுவது, தவறான பாதையில் ஓட்டுவது :

இது இந்தியாவை பொறுத்தவரை மிக சர்வ சாதாரணமான விடயம் ஆகிவிட்டது. இவற்றை தடுக்க கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும். தேவையில்லாமல் ஒலி எழுப்புவதுமே தவறான ஒன்று. போக்குவரத்து நெரிசல் தான் இங்கே மோசமான ஒன்று.

3. குப்பைகளை கொட்டுவது :

நம்மவர்களுக்கு அழகான இடத்தை பார்த்தாலே குப்பை கொட்ட தோன்றுகிறது. இதற்க்கு படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடே இல்லை. இதனாலே பல கலைகளையும் நிலைகளையும் இழந்து நிற்கிறோம்.

4. வரிசையை முந்தியடித்தல் :


இந்த இடத்தில வீரத்தை சிலர் தப்பாக புரிந்துவிட்டனர் போலும். எதற்கு எடுத்தாலும் அவசரம், பொறுமை என்பது எள்ளளவும் இங்கே இல்லை. நிற்கிற ஒருவனும் முன்னும் பின்னுமாய் தள்ளிக்கொண்டு தான் நிற்கிறான்.

5. விட்டுகொடுக்காத பழக்கம் :

அனைத்திற்கும் விட்டுகொடுக்க சொல்லவில்லை, சில காரணங்களுக்கு மட்டும் கூட இங்கே இறங்க மறுக்கின்றனர். ஒரு பொது மின்தூக்கியில் ஒரே முறையில் முன்னூறு பேர் ஏற நினைத்தால் அது எங்கனம். அவசர ஊர்தி கூட சாலைகளில் வழிக்காக பிச்சை எடுக்கின்றன.

6. நடுத்தர நிலையை ஏற்றுகொள்வது :


நடுத்தர நிலையில் இருந்து முன்னேற நினைப்பது சரியான விஷயம் தான், ஆனால் அதற்காக இங்கே எவ்வளவு பொய் புரளிகள், பித்தலாட்டங்கள், லஞ்சம், ஊழல்.. இங்கே சகிப்புத்தன்மை தண்ணீரில் கரையும் உப்பு தான். இங்கே உண்மை தொண்டனாய் இருக்க யாருக்கும் ஆசை இல்லை, தலைவன் பதவிக்கே முந்தியடிகின்றனர்.

7. மனிதனை மனிதன் மதிப்பது இல்லை:

நம் மக்களை நாமே மதிக்காத போது எப்படி முன்னேற முடியும். முன்னுக்கு வருபவனை அழிக்க மட்டுமே நினைப்பது.

8. ஜாதி வெறி- மத வெறி - இன வெறி:


நம் நாட்டின் சாபக்கேடு என்றே இதனை சொல்லலாம்

சென்னையின் வரலாறு!


சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக  நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று.

17 ஆம்  நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான  கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம். பல விளையாட்டு  அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. சென்னையின் பொருளாதாரம்  பலத்தரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது.

ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. மேலும் ஊர்தி மற்றும் ஊர்திகளின் உதிரிப்பாகங்கள் உற்பத்தியிலும் நாட்டின் 35 விழுக்காடு சென்னையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

வரலாறு

சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.

1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தான் தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது  உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.

சென்னையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள புனித மேரி தேவாலையம் சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. புனித தாமஸ் இங்கு கி.பி. 52 முதல் 70 வரை இங்கு போதித்ததாக  கருதப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர், 1522 ஆம் ஆண்டு சாந்தோம் என்ற பெயரில் ஒரு  துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612 ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது.

1639 ஆம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது. ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. 

சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.
1522 ஆம் ஆண்டில் இங்கு வந்த போத்துக்கீசர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி போத்துக்கீசர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612 ஆம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது.

1688 ஆம் ஆண்டில் சென்னை முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம்  இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்திய குடியிருப்பு பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது. 1746 ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது.

1749 ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இந்தியா  விடுதலை அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

நகரின் பெயரான மதராஸ் 1996 ஆம் ஆண்டு சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது. 1996 ஆம் ஆண்டு தமிழக அரசாங்கம் மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை என மாற்றம் செய்யப்பட்டது.

வெங்கடபதி சகோதரர்களரிடம் இருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தைபிரித்தானியர் வாங்கியதால், தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னப்பட்டணம் என அழைக்கவேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனை சுற்றிய பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுகிறது.

புவியியல்

இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சென்னை, தமிழகத்தின் வடகிழக்கு கோடியில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அருகில் உள்ளது. சென்னை நகரின் கிழக்கில் வங்காள விரிகுடா உள்ளது. சென்னை நகரத்தின் பரப்பளவு 174 கி.மீ. சென்னை மாவட்டமும், திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளும் சென்னை மாநகரப் பகுதிகளாக கருதப்படுகின்றன. சென்னை நகரின் அருகாமையில் மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஸ்ரீஹரிக்கோட்டா ஆகிய ஊர்கள் உள்ளன

கூவம், மற்றும் அடையாறு ஆகிய நதிகள் சென்னை நகரின் வழியாக பாய்கின்றன. புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகளிலிருந்து நகருக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரை  உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை ஆகும். 13 கி.மீ. நீளம் உள்ள இக்கடற்கரை, மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையின் வடகோடியில் கூவம் கடலில் கலக்கும் இடத்திற்கு தெற்கில் உள்ள பகுதி மெரினா கடற்கரை என்றும், அதன் தெற்கில் அடையாறு கடலில் கலக்கும் பகுதிக்கு வடக்கில் உள்ள பகுதி சாந்தோம் கடற்கரை என்றும், அடையாற்றின் தெற்கில் உள்ள பகுதி எலியட் அல்லது பெசன்ட் நகர் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது.

சென்னை நகரின் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை வட சென்னையில் உள்ளன. மத்திய சென்னை, சென்னையின் முக்கியப் பகுதியாகும். தென் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. சென்னை மாநகரின் நிர்வாகம் சென்னை மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது மாநகராட்சியின் தலைவர் மேயர் - சைதை சா. துரைசாமி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சி 1688 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

இது இந்தியாவில் மட்டுமின்றி இங்கிலாந்து அல்லாத காமன் வெல்த் நாடுகளின் மாநகராட்சியைக் காட்டிலும் பழமையானது.
தமிழகத் தலைமைச்செயலகம் இங்கு உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்தது. பின் 13 மார்ச் 2010 அன்று ஓமந்துரார் அரசினர் தோட்டத்தில் 400 கோடிகளுக்கு மேல் செலவில் கட்டப்பட்ட பசுமை கட்டத்தில் மாற்றப்பட்டுள்ளது. இது உலகின் முதல் பசுமை சட்டமன்ற கட்டடமாகும். மேலும் சென்னையில் 18 தமிழக சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

வட சென்னையில் திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி), இராயபுரம் ஆகிய தொகுதிகளும், மத்திய சென்னையில் வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய தொகுதிகளும், தென் சென்னையில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர்,மைலாப்பூர்,வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளும் உள்ளன.

இந்திய பாராளுமன்றத்தின் மூன்று தொகுதிகள் சென்னையில் உள்ளன. அவை வட சென்னை, மத்திய சென்னை , தென் சென்னை ஆகியவை.
தமிழகம், மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் உயர்நீதிமன்றம் சென்னையில் உள்ளது.தமிழகக் காவல் துறையின் பிரிவான சென்னை மாநகரக் காவல்துறை சென்னையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கிறது. சென்னை மாநகர் முப்பத்தாறு காவல் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 121 காவல் நிலையங்கள் சென்னை மாநகரப் பகுதியில் உள்ளன.

பொருளாதாரம்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் முதலே தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாக சென்னை விளங்கி வருகிறது. பல இந்திய நிறுவனங்களின் கிளைகள் சென்னையில் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், தமிழகத்தின் தலைநகராகவும் சென்னை விளங்குவதால், பல தேசிய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் சென்னையில் உள்ளன. 1990களிலிருந்து, சென்னை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.
தென் சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. தரமணியில் உள்ள டைடல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும். மேலும் சில தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் நகரங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இந்தியாவின் வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிறது.

மக்கள்

சென்னையின் மக்கள் தொகை சுமார் 7.45 மில்லியன் ஆகும். ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் விகிதம் உள்ளனர். கல்வியறிவு விகிதம் 80.14%. நகரின் 25 விழுக்காடு மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர். சென்னையில் தமிழ் மொழி பேசுவோரே பெரும்பான்மை, இதைத்தவிர ஆங்கிலம், தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, மார்வாரி, வங்காளி, பஞ்சாபி போன்ற மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. அனால் தமிழிற்கு அடுத்த படியாக, இந்திய மொழிகளில், தெலுங்கே அதிக அளவில் பேசப்படுகிறது.

கலாச்சாரம்

சென்னையில் வாழும் பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சென்னையின் கலாசாரம் விளங்குகிறது. நவீனமும் பாரம்பரியமும் இங்கு கலந்து காணப்படுகிறது. சென்னையில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் முழுவதும் இசைத் திருவிழா இசை ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தினந்தோறும் சென்னையின் பல இடங்களில் கர்நாடக சங்கீத கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. சென்னை அடையாறில் உள்ள கலாக்ஷேத்ராவில் உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்களும் வந்து பரதநாட்டியமும் மற்ற பாரம்பரியக் கலைகளும் பயின்று செல்கின்றனர்.

சென்னையில் கோலிவுட் என்றழைக்கப்படும் தமிழ் திரைப்படத் துறை இந்தியாவில் பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக மிகப் பெரியது. இட்லி, வடை, தோசை போன்ற தென்னிந்திய உணவு வகைகளும், சமீபத்தில் மேற்கத்திய நாகரிகத்தின் பாதிப்பால் பீட்ஸா, பர்கர் போன்ற உணவு வகைகளும் சென்னையில் பிரபலமாய் உள்ளன.

சென்னையில் மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மற்றும் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் போன்ற பல பழங்கால கோயில்கள் உள்ளன. புனித ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் கட்டிடம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் அரசு அருங்காட்சியகம் போன்று ஆங்கிலேயரின் பாதிப்பில் உருவான கட்டடங்களையும் அதிகமாகக் காணலாம். சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியால் பல நவீன கட்டடங்கள் பெருகி வருகின்றன.

போக்குவரத்து

சென்னை விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும் தெற்கு, மற்றும் தென்கிழக்காசியா, வளைகுடா நாடுகள், ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்கு விமானப் போக்குவரத்து உண்டு. சென்னை விமான நிலையம், இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் சரக்கு விமான நிலையமாகும்.
சென்னை துறைமுகம் இந்தியாவில் முக்கிய துறைமுகங்களுள் ஒன்று. மேலும் சென்னையின் வடக்கில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் நிலக்கரி, தாதுக்கள் போன்ற பொருட்களின் போக்குவரத்து நடைபெறுகிறது.

சென்னையில் பறக்கும் ரயில் நிலையம், சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூர் ஆகியவை சென்னையின் இரு முக்கிய ரயில் நிலையங்கள். சென்னை சென்ட்ரல், சென்னையின் வடக்கு, மற்றும் மேற்குப்பகுதிகளுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. சென்னை எழும்பூர், மற்ற தமிழக நகரங்களுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. சென்னை புறநகர் இருப்புவழி மூன்று மார்க்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - தாம்பரம் ஆகியவை. இவை தவிர சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

சென்னை நகரிலிருந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு சென்று வர சாலை வசதிகள் உள்ளன. ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் சென்னை, கொல்கத்தா, பெங்களூர், திருச்சி, பாண்டிச்சேரி, திருவள்ளூர் ஆகிய நகரங்களுடன் இணைக்கின்றன. சென்னை கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும்.

கல்வி

சென்னையில் உள்ள ஐ.ஐ.டியும் அதன் எதிரில் உள்ள அண்ணா பல்கலைக்கழகமும், இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுள் சிலவாகும். இவை தவிர பல தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ளன. வருடந்தோறும் பள்ளி இறுதித் தேர்வுகளில் இந்தியாவிலேயே சென்னை மாணாக்கர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதைக் காணலாம்.

சென்னையில் உள்ள கன்னிமரா பொது நூலகம் தேசிய களஞ்சிய நூலகங்களுள் ஒன்று. இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் ஆகும். இதன் அடிக்கல் 1890-இல் நாட்டப்பட்டு, 1896-இல் துவங்கி வைக்கப்பட்டது; அப்போதைய மதறாஸ் மாநிலத்தின் கவர்னரான கன்னிமரா பிரபுவின் பெயர் இந்நூலகத்திற்கு சூட்டப்பட்டது. செப்டம்பர் 15, 2010 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது; 3.75 இலட்சம் சதுர அடிப் பரப்பில் ஏறத்தாழ 180 கோடி செலவில் கட்டப்பட்டது.

விளையாட்டு

சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் : சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் 50,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இந்திய கிரிக்கெட் அணி இங்கு தான் முதன் முதலாக டெஸ்ட் போட்டியை வென்றது. ஐ.ஐ.டி வளாகத்திலுள்ள கெம்பிளாஸ்ட் கிரிக்கெட் மைதானம் மற்றொரு முக்கிய மைதானம்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் அரங்கத்தில் வருடந்தோறும் ஜனவரி மாதம் சர்வதேச ஏ.டி.பி பந்தயமான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபறுகின்றன. விஜய் அமிர்தராஜ், இராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன் போன்று சர்வதேச போட்டிகளில் முத்திரை பதித்த பல இந்திய ஆட்டக்காரர்கள் சென்னையைச் சேர்ந்தவர்களே.

ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் கால்பந்து, தடகளப்போட்டிகள் போன்றவை நடைபெறுகின்றன. இதன் வளாகத்தில் உள்ள உள்ளக விளையாட்டரங்கில் கூடைப்பந்து, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் போன்ற போட்டிகள் நடத்தும் வசதிகள் உள்ளன. 1996 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது.

எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம் 4000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இது செயற்கை தரை கொண்டது. 1995ஆம் ஆண்டு இங்கு சாம்பியன் கோப்பை பந்தயத்தொடர் நடந்தது. மூன்று கோல்ஃப் விளையாடும் இடங்கள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் மோட்டர் பந்தய போட்டிகள் நடைபெறும் களம் உள்ளது.

உயிரியல் பூங்காக்கள்


கிண்டியில் உள்ள உயிரியல் பூங்காவில் மான்கள், பாம்புகள், ஆமைகள் ஆகியவை உள்ளன. ஆளுனர் வசிக்கும் ராஜ் பவனிலும், அதை ஒட்டியுள்ள ஐ.ஐ.டி வளாகத்திலும் குரங்குகளும் மான்களும் துள்ளி விளையாடுவதைக் காணலாம். வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் சுமார் 80 மிருக வகைகள் உள்ளன. சென்னையின் தெற்கில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முதலைப்பண்ணை உள்ளது. இங்கு முதலைகள், ஆமைகள், பாம்புகள் ஆகியவை வளர்க்கப்படுவதுடன் ஆராய்ச்சியும் நடைபெறுகிறது.

மூளைச்சாவடைந்த கர்பிணியின் வயிற்றில் வளர்ந்த குழந்தை!

 
ஹங்கேரியில் கர்பிணி மூளைச்சாவடைந்த நிலையில், மருத்துவ உபகரணங்களின் உதவியோடு தாய் உயிரோடு இருக்கும் வகையில் கரு, தாயின் வயிற்றிலேயே வளர்க்கப்பட்டு பிரசிவிக்கப்பட்டுள்ளது.

15 வார கர்ப்பிணியாக இருந்த 31 வயது பெண், மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மூளைச் சாவடைந்தார். ஆனால், பரிசோதனையில் அவரது வயிற்றில் இருந்த கரு ஆரோக்கியமாக இருந்தது. அந்த கரு 27 வாரங்கள் வரை தாயின் கருவறையில் இருக்க வேண்டும் என்பதை அறிந்த மருத்துவர்கள், சுமார் 3 மாதங்கள் மருத்துவமனையில் உபகரணங்களின் உதவியோடு தாயை உயிரோடு வைத்திருந்தனர்.

பிறகு, கருவுக்கு 27 வாரங்கள் ஆன நிலையில், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்.

பிறக்கும் போது 1.42 கிலோ எடை இருந்த அந்த ஆண் குழந்தை தற்போது ஆரோக்கியமாக அவர்களது உறவினர்களிடம் வளர்ந்து வருவாதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மரணம் அடைந்த தாயின் உடல் உறுப்புகள் 4 பேருக்கு மறுவாழ்வு அளித்ததாகவும், இதுபோல மருத்துவ உபகரணங்களின் உதவியோடு வாழ்ந்தவர்களின் உடல் உறுப்புகளை பொதுவாக பயன்படுத்த இயலாத நிலையில் இருக்கும், ஆனால், இந்த தாயின் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்ததாகவும் மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

செல்வாக்கான இளைஞர் பட்டியலில் மலாலா, ஒபாமா மகள் தேர்வு!



நியூயார்க்கில் இருந்து வெளிவரும் டைம் இதழ் 2013ம் ஆண்டின் செல்வாக்கு மிகுந்த 16 இளைஞர்கள் பட்டியலை கடந்த செவ்வாய் கிழமை வெளியிட்டுள்ளது.


 இந்த பட்டியலில் ஒபாமா வின் மகள் மாலியா (15), பாகிஸ்தானை சேர்ந்த மலாலா (16) மற்றும் சமூக சேவை, இசை, விளையாட்டு, தொழில்துறை விஞ்ஞானம், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்கள்  இடம்பெற்றுள்ளனர்.


அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மூத்த மகள் மாலியாவின் பேச்சு மற்றும் செயல்பாடு கள் பெரியவர்களின் செயல்பாட்டுக்கு ஒப்பாக அமைந்துள்ளது என்று டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.


மலாலாவை பற்றி கூறுகையில், பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடியவர், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு பயப்படாமல் எதிர்த்து நின்று குரல் கொடுத்தவர் என்று குறிப்பிட்டுள்ளது.


இதைத்தவிர பாடகர்கள் லார்டு (17), ஜஸ்டின் பைபர் (19), ஒலிம்பிக் நீச்சல் வீரர் மிஸ்ஸி பிராங்க்ளின் (19) உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் இளைஞர்கள் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

சச்சின் பற்றி சில சுவாரசியங்களும்!


* சச்சின் தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில், ஒருபோதும் 3வது வீரராக களம் இறங்கியது இல்லை.

* இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மன் மீதான அபிமானத்தால், தன்னுடைய மகனுக்கு அப்பெயரை சேர்த்துக்கு கொண்டார் சச்சின் டெண்டுல்கரின்   தந்தை.

* ஒருமுறை பிரபல குளிர்பான நிறுவனத்தின் விளம்பரத்தில் பேட் பட்டு, பந்து உடைந்து தெரிப்பது போன்ற நடிக்க வேண்டும் என்று சச்சினிடம்   கேட்கப்பட்டது. ஆனால், கிரிக்கெட்டின் மீதுள்ள அபிமானத்தால் தன்னால் அதுபோன்று நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.

* 1990ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்து மும்பை திரும்பியபோது, விமான நிலையத்தில் முதல் முறையாக தன்னுடைய வருங்கால   மனைவி அஞ்சலியை சந்தித்தார்.

* அணியினர் பயணம் செய்யும் பஸ்சில், எப்போதுமே முதல் வரிசையில் இடதுபுறம் உள்ள ஜன்னலோர இருக்கையில்தான் சச்சின் அமர்வார்.

* 1987ம் ஆண்டு இந்தியா - இங்கிலாந்து உலகப்கோப்பை அரையிறுதிப் போட்டியின்போது, பவுண்டரி லைனில் பந்தை எடுத்துப்போடும் சிறுவனாக   சச்சின் இருந்துள்ளார்.

* 2002ல் பெங்களூரில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சச்சின் டெண்டுல்கர் ஸ்டம்பிங் ஆனார். டெஸ்ட் போட்டியில் இதுதான் அவரது   ஒரே ஸ்டம்பிங்காக பதிவாகி உள்ளது.

சிகரத்துக்கு கிடைத்த கவுரவங்கள்!


* சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை தொடர்ந்து, இதன் நினைவு தபால்தலை இன்று வெளியிடப்படுகிறது. இந்தியாவில்   முதல் முறையாக உயிருடன் இருக்கும் நபருக்கு தபால்தலை வெளியிடப்பட்ட பெருமையை பெற்றவர் அன்னை தெரசா மட்டுமே (1980 ஆகஸ்ட்   27).   இதற்கு அடுத்தபடியாக சச்சின் இப்பெருமையை பெறுகிறார்.

* 1999ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதை வென்றார்.
* விஸ்டனின் உலக லெவன் நிரந்தர கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற ஒரே இந்திய வீரர் என்ற பெருமை சச்சினையே சாரும்.

* விமானப்படையின் பின்னணி இல்லாமல், குரூப் கேப்டன் என்ற கவுரவ பதவியை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் சச்சினுக்கே   கிடைத்துள்ளது.

* டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகளுடனான போட்டியில், குறைந்தபட்சம் 2 செஞ்சூரிகளை அடித்த இந்தியர் என்று பெருமை.

* டிவிட்டரில் 10 லட்சம் பாலோயர்களை கொண்டவர் என்ற பெருமை பெற்ற இந்தியர்.

வான்கடே அதிர களமிறங்கினார் சச்சின்!


தனது 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின் களமிறங்கினார். வான்கடே அதிர அவர் களமிறங்கிய காட்சி மெய் சிலிர்க்க வைத்தது. அவர் களமிறங்கிய போது அரங்கம் முழுவதும் ரசிகர்கள் எழுந்து நின்று கை தட்டி சச்சினை உற்சாகப்படுத்தினர். மேற்கு இந்திய தீவு அணி வீரர்களும் ஒன்று சேர்ந்து கைதட்டி சச்சினை வரவேற்றனர். அவர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கி பேட்டிங்கில் அசத்தினார். இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கரின் 200வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இது என்பதால், அவரது சரித்திர சாதனையில் தாங்களும் பங்கு கொண்டதற்கு சாட்சியமாக இருக்க வேண்டும் என்று எண்ணும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் இப்போட்டியை பார்ப்பதற்காக வான்கடேயில் இன்று குவிந்தனர்.

மும்பை வான்கடேவில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்திய தீவு அணி, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் முதல் இன்னிங்சில் 182 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சச்சினின் கடைசி மற்றும் 200வது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய மேற்கு இந்திய தீவு அணி ஓஜா மற்றும் அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 182 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்துவீசிய ஓஜா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

சச்சின் 38 ரன்களுடனும், புஜரா 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சச்சின் சந்தித்த ஒவ்வொரு பந்துகளும் ரசிகர்கள் கர ஒலிகளில் அரங்கமே அதிர்ந்தன. இன்றைய ஆட்டத்தில் 6 பவுண்டரி அடித்து அசத்தினார்.

நாளையும் வான்கடேவில் திருவிழா தான்...

இன்றைய ஆட்ட நேர முடிவில் ஆட்டமிழக்காமல் சச்சின் இருப்பதால் நாளை வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதும் எந்த வித சந்தேகமும் இல்லை.

சதம் அடிப்பாரா சச்சின்

தற்போது சிறப்பாக ஆடி வரும் சச்சின் சதம் அடிக்க வேண்டும் என்று உலக முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். கோடி கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை சச்சின் நாளை நிறைவேற்றார் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேனான சச்சினின் கடைசி ஆட்டம் இன்று ஆரம்பம்!


                                        nov 14 -sachin1_

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் வியாழக்கிழமை தொடங்குகிறது.இது சச்சினுக்கு 200-வது டெஸ்ட் போட்டியாகும். இப்போட்டியுடன் அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். தங்களுள் ஒன்றாகக் கலந்து விட்ட சச்சினை, இப்போட்டியுடன் ஆடுகளங்களில் இனி காண முடியாது என்தே ரசிகர்கள் இப்போதே ஏங்க ஆரம்பித்து விட்டனர்.இந்நிலையில் சச்சினின் தீவிர ரசிகரான மனோஜ் திவாரி என்பவர் பீகாரின் கைமுர் மாவட்டத்தில் உள்ள அட்டர்வாலியா கிராமத்தில் கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கருக்கு கோயில் ஒன்றை கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




கிரிக்கெட் உலகில் சாதனைக்கு மேல் சாதனை படைத்துள்ள, இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இன்று தன்னுடைய கடைசி மற்றும் 200வது டெஸ்ட் போட்டியில் களம் இறங்குகிறார். இத்துடன் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும் அறிவித்துள்ளார்.


சச்சினுக்கு சிறு குழந்தைகள் முதல், வயதான தாத்தாக்கள் வரையில் பெரிய ரசிகர்கள் வட்டாரம் உள்ளது. சினிமா நட்சத்திரங்கள், மிகப்பெரிய வர்த்தகர்கள், அரசியல் தலைவர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், வி.வி.ஐ.பி.க்கள் இதில் உள்ளனர். அவரது ஒவ்வொரு ஆட்டத்தையும் இவர்கள் ரசித்து பார்த்துள்ளனர்.


1989ம் ஆண்டில் முதல் தர போட்டியில் களம் இறங்கிய சச்சின், 24 ஆண்டுகள் கிரிக்கெட்டில் கோலோச்சியுள்ளார். இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டியுடன் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவது, ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், பிராட்மேனுக்கு நிகரான ஒரு ஜாம்பவானின் கடைசி ஆட்டத்தை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் முதல் இதுபற்றி கேள்விப்பட்ட சாதாரண மக்கள் வரையில் ஆர்வமாக உள்ளனர்.
இதன் காரணமாக, வான்கடே மைதானத்தில் இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன.


டிக்கெட்டுகளை விற்ற இணையதளமே முடங்கிப்போகும் அளவுக்கு ரசிகர்கள் அதில் குவிந்தது குறிப்பிடத்தக்கது. போட்டி நடைபெற வான்கடே மைதானத்தை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் சச்சினை வாழ்த்தும் போஸ்டர்களையும், பேனர்களையும் பார்க்க முடிகிறது. மொத்தத்தில் இப்பகுதியே சச்சின் என்ற தனிநபருக்காக விழாக்கோலம் பூண்டுள்ளது என்றால், அது மிகையாகாது.


இன்றைய போட்டியை காண்பதற்காக நண்பர்கள், உறவினர்களை அழைத்து வருவதற்காக சச்சினுக்கு மட்டும் பிரத்யேகமாக 200 டிக்கெட்டுகள் தரப்பட்டுள்ளன. சச்சினின் போட்டியை காண வரும் முக்கியமான விஐபி அவரது தாய் ரஜ்னி. அவரால் நடக்க முடியாது என்பதால், வீல்சேரில் அழைத்து வர சச்சின் ஏற்பாடு செய்துள்ளார்.


கிரிக்கெட் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் பிராட்மேன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபோது, கடைசி போட்டியில் டக் அவுட் ஆனார். அதனால் அவரை வாழ்த்தக்கூட யாரும் அப்போது இல்லை. கலங்கிய கண்களுடன் அவர் மைதானத்தைவிட்டு வெளியேறினார். ஆனால், இப்போது காட்சிகள் மாறிவிட்டது. சச்சினுக்கு பிரியாவிடை கொடுப்பதற்காகவே, வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்து. மேலும், அவர் தன்னுடைய சொந்த மண்ணில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், அவர் 10 ரன்னில் எல்பிடபிள்யூ ஆனார். எனினும், இன்று தொடங்க உள்ள தன்னுடைய கடைசி போட்டியில் அவர் கவனத்துடன் விளையாடி சாதனை படைப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். அதேபோல், முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றதுபோன்று, 2வது டெஸ்டிலும் மாபெரும் வெற்றியை பெற்று அதை சச்சினுக்கு அர்ப்பணிக்க இந்திய அணி வீரர்கள் தயாராகி உள்ளனர். கடந்த 2 நாட்களாக வலைப் பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டனர். இதில் சச்சினுடன், அவரது மகன் அர்ஜுனும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணியை பொருத்தவரையில் இன்றையப் போட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் டெஸ்டில் விளையாடிய வீரர்கள்தான் இதிலும் விளையாட உள்ளனர். ஆனால், முதல் போட்டியில் தங்களை மோசமாக தோற்கடித்ததற்கு பழிக்குப்பழியாக 2வது டெஸ்டில் வெற்றி பெறும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் சச்சினின் தீவிர ரசிகரான மனோஜ் திவாரி என்பவர் பீகாரின் கைமுர் மாவட்டத்தில் உள்ள அட்டர்வாலியா கிராமத்தில் கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கருக்கு கோயில் ஒன்றை கட்டியுள்ளார் என்பதும அதில் கிரிக்கெட் மட்டை மற்றும் பந்துடன் கோபுரத்தின் உச்சி அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே கையில் கிரிக்கெட் மட்டையுடன் சச்சின், தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரின் முழு உயர பளிங்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளதுடன் வரும் ஜனவரி மாதம் இந்த கோயிலை திறக்க திட்டமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலக சதுரங்கம் (செஸ்) - கார்ல்செனின் கை சற்று(4–வது சுற்று) ஓங்கி இருந்தது!

சென்னையில் நடந்து வரும் உலக சதுரங்க (செஸ்) போட்டியில் ஆனந்த்–கார்ல்சென் இடையிலான 4–வது சுற்றும் ‘டிரா’வில் முடிந்தது.

                                            
உலக சதுரங்கம்
தமிழக அரசின் ஆதரவுடன் நடப்பு சாம்பியன் விசுவநாதன் ஆனந்த் (இந்தியா), உலகின் நம்பர் ஒன் வீரர் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) இடையேயான உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. 12 சுற்று கொண்ட இந்த போட்டியில் 6.5 புள்ளியை எட்டும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை பெறுவர்.

இதில் முதல் 3 சுற்று ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. இந்த நிலையில் 4–வது சுற்று ஆட்டம் நடந்தது. ஆனந்த் வெள்ளை நிற காய்களுடன் ஆட்டத்தை தொடங்கினார். ராஜாவின் முன்னால் உள்ள சிப்பாயை 2 கட்டம் நகர்த்தி ஆட்டத்தை தொடங்கினார். அதாவது ‘ரய் லோபஸ்’ முறையில் ஆனந்த் ஆட்டத்தை ஆரம்பித்தார். அதே பாணியைத்தான் கார்ல்செனும் கடைபிடித்தார்.

தொடக்கம் முதலே இருவரும் அதிரடி காட்டினர். 6–வது நகர்த்தலில் ஆனந்த், எதிராளியின் குதிரையை வெட்டி தனது இரண்டு மந்திரிகளில் ஒன்றை விட்டுக்கொடுத்தார். 8–வது நகர்தலில் ராணியையும் (குயின்) அடிக்கு அடி என்று வெளியேற்றினர்.

18–வது நகர்த்தலில் ஒரு சிப்பாயை விட்டுக்கொடுத்து கார்ல்செனின் மந்திரியை கைப்பற்ற ஆனந்த் முயற்சித்தார். ஆனால் கார்ல்சென் ஆனந்தின் சிப்பாயை விழுங்கியதோடு, சாதுர்யமாக தனது மந்திரியையும் காப்பாற்றிக் கொண்டார். ஆனந்திடம் ஒரு சிப்பாய் குறைவாக இருந்ததால் கார்ல்செனின் கை சற்று ஓங்கியது.

டிரா ஆனது

இதனால் ஆனந்த் நெருக்கடிக்கு தள்ளப்பட்ட போதிலும், அதில் இருந்து தனது அனுபவத்தின் மூலம் சிறப்பாக மீண்டார். கார்ல்செனின் யுக்திகள் அனைத்தையும் முறியடித்தார். இறுதியில் 64–வது நகர்த்தலில் ஆட்டம் டிரா ஆனது. அப்போது ஆனந்திடம் ராஜாவுடன் ஒரு யானையும், கார்ல்செனிடம் ராஜாவுடன் யானை, சிப்பாயும் எஞ்சி இருந்தன. ஏறக்குறைய 6 மணி நேரம் போட்டி நீடித்த போதிலும் இந்த முறையும் முடிவு கிடைக்கவில்லை. டிரா ஆனதால் இருவருக்கும் அரை புள்ளி வீதம் வழங்கப்பட்டது. இருவரும் தற்போது தலா 2 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கிறார்கள்.

‘மை லார்ட்’ சொல்வது தவறா?

நீதிமன்றங்களில் நீதிபதிகளை பார்த்து வக்கீல்கள், ‘மை லார்ட்’ என்று விளிப்பதும், ‘யுவர் லார்ட்ஷிப்’ என்று சொல்வதும் வெள்ளைக்காரன் காலத்து அடிமைத்தனம் என்று கூறி, அதற்கு தடை விதிக்க வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 75 வயது மூத்த வக்கீல் ஷிவ் சாகர் திவாரி தொடர்ந்த இந்த பொது நலன் வழக்கை தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகய் விசாரித்தனர். அவர்கள் கேட்ட கேள்வி, ‘மை லார்ட் என்று அழைக்குமாறு எந்த வக்கீலையும், எந்த நீதிபதியும் கட்டாயப்படுத்துவதில்லையே, பின் எதற்காக தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்பதுதான். அதற்கு திவாரி, ‘சில நீதிபதிகள் தங்களை அப்படி அழைக்காத வக்கீல்களின் வழக்குகளை டிஸ்மிஸ் செய்து விடுகிறார்கள்’ என்று கூறியிருக்கிறார். இதன்பின், நீதிபதி கோகய் இந்த வழக்கு விசாரணையில் இருந்து ஒதுங்கி விட்டதால், வேறொரு பெஞ்சுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

வெள்ளைக்காரர் ஆட்சியின் போது, நமது நீதிமன்றங்களில் வெள்ளைக்காரர் நீதிபதியாக இருந்ததால், அவர்களை இந்திய வக்கீல்கள், ‘மை லார்ட்’ என்று அழைக்க கட்டாயப்படுத்தப்பட்டதாக பலரும் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல. 19ம் நூற்றாண்டிலேயே இங்கிலாந்து நாட்டில் நீதிபதிகளை எல்லோரும் அப்படி அழைப்பது பழக்கமாக இருந்துள்ளது. ஒரு வேளை, எல்லா மதத்திலும் இறைவன் நியாயவானாக உள்ளதால், நீதிபதிகளும் அப்படி நியாயவானாக இருக்க வேண்டுமென்பதை சுட்டிக்காட்டவே ‘லார்ட்’ என்று அழைத்திருக்கலாம்.

இங்கிலாந்து நாட்டில் நீதிமன்றங்களில் இந்த வார்த்தை பயன்படுத்தும் முன்பே, ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலா பயணிகளை கவுரவமாக மதித்து ‘மி லார்ட்’ என்று விளிப்பார்களாம். அதன்பின், பெருமைக்குரியவர்களை ‘மி லார்ட்’ என அழைக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், அது ஆங்கிலத்தில் நுழையும் போது ‘மை லார்ட்’ ஆனதாகவும் சொல்லப்படுவது உண்டு. இதையெல்லாம் பார்க்கும் போது ‘மை லார்ட்’ என்று அழைப்பது அடிமைத்தனத்தின் சின்னமாக தெரியாது. ஆனாலும், இந்த காலத்திற்கு ஏற்ப நீதிபதிகளையும், மற்றவர்களை போல் ‘மிஸ்டர் ஜஸ்டிஸ்’ என அழைக்கலாம்.

 நீதிபதிகளை ‘மை லார்ட்’ என அழைப்பது கட்டாயம் இல்லாத போது, அதற்கு வழக்கு அவசியமா என தலைமை நீதிபதி கேட்டது சரியானதுதான். இந்திய பார் கவுன்சில் ஏற்கனவே 2006ல் ஒரு தீர்மானம் போட்டுள்ளது. நீதிமன்றங்களில், ‘மை லார்ட், யுவர் லார்ட்ஷிப்’ என வக்கீல்கள் அழைக்கத் தேவையில்லை என்பதே அந்த தீர்மானம். வக்கீல்கள் இதை பின்பற்றினாலே போதும்.   

10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் அதிரடி மாற்றம்!



வரும் ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வில் பல்வேறு புதிய மாற்றங்கள் கல்வித்துறை  அறிமுகம் செய்கிறது.

ஒவ்வொரு வருடமும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது.  கடந்த பொதுதேர்வுகளில் தேர்வு எழுத மாணவர்களுக்கு மெயின் சீட் வழங்கப்பட்டது.

மேலும் கூடுதலாக அடிஷனல் ஷீட் வழங்கப்பட்டது. புதிய நடைமுறையில் 12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 40 பக்கங்களும், 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 30 பக்கங்களும் வழங்கப்பட உள்ளது. இவை மொத்தமாக பைண்ட் செய்த கோடிங் ஷீட் பண்டல் முறையில் வழங்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் ஒவ்வொரு அடிஷனல் ஷீட்டிற்கு எழுந்து நிற்க தேவையில்லை.

 தேர்வு எழுதும் மாணவரின் முன் அல்லது பின் அமர்ந்துள்ள மாணவர்கள் அடிஷனல் ஷீட் வாங்கி காப்பி அடிக்கும் நிலை தடுக்கப்படும்.  ஒரு தேர்வு மையத்திற்கு அதிகபட்சமாக 400 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத முடியும். அதற்கு மேல் மாணவர்கள் இருந்தால் அருகில் உள்ள தேர்வு மையத்திற்கு மாற்றப்படுவார்கள் அல்லது அதே பள்ளியில் கூடுதல் மாணவர்களுக்கென மற்றொரு தேர்வு மையம் ஏற்படுத்தப்படும்.

தற்போது, ஒரு அறைக்கு 20 மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு எழுத இடம் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு வினாத்தாள் கட்டிலும் 20 வினாத்தாள்களே மட்டுமே இருக்கும். இதனால் வெளியில் உடைக்கப்பட்டு, வினாத்தாள் வெளியாகிவிடும் என்ற குற்றசாட்டும் எதிர்காலத்தில் நிகழாது. இந்த புதிய நடைமுறைகள் வருகின்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அமல்படுத்தப்படும் என பள்ளி, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top