.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Tuesday 7 January 2014

பூப்பு நீராட்டு - ஒரு வரலாற்று பார்வை....!



புதிய உலகத்தில்
பெரியமனுசியாய்
கடமைகளுடன்
கால்தடம் பதிக்கிறாய்.
வா.
பெருமையுடனும்
மரியாதையுடனும்
வலிமை பொங்க
நடந்து வா.
இன்று முதல்
நீ -
நம் மக்களின் தாய்.
நம் தேசத்தின் தாய்.



பெண்ணின் பூப்படைதலைப் பெருமையுடன் பாடும் அப்பச்சி (Apache) இனக்குழு மக்களின் பாடல் இது.


பெண் பூப்படைதல் என்பது பல்வேறு இனக்குழு மக்களின் வாழ்க்கையில் கொண்டாட்டத்திற்குரிய சடங்காகவே இருந்து வந்துள்ளது. பூப்பு என்பது தீட்டு, விலக்கு, தீண்டத்தாகதது என்று எதிர்மறையாக நோக்கப்படவில்லை. பூப்பு என்ற சொல் தொடர்ச்சியாக வண்டு நுகர்தல், பிஞ்சு, காய், கனி, என்ற பிம்பங்களை மட்டுமே உருவாக்கி அதன் வழி இனவிருத்திக்கு காரணமான நேர்மறைச் செயலாகவே கருதப்பட்டது. ஆரிய இனப்பண்பாட்டின் தாக்கமும் வைதீகமும் ஆண் சமுதாயமும் கலந்து பெண்ணை அடிமைப்படுத்த முனைந்த காலத்தில் தான் பூப்பு என்ற செயல் "தீட்டாகிப்" போனது.

மனித வரலாற்றில் இனவிருத்தியின் நிலமாக இருந்தப் பெண்ணின் ஆளுமையைக் கண்டு வியந்து அச்சம் கொண்டு அவள் தலைமையை ஏற்றுக்கொண்ட இனக்குழு வாழ்க்கையில் பெண் தெய்வ வழிபாடே இருந்தது என்பதும் இன்றும் சிவப்பு நிறமும் நெற்றியில் இடப்படும் குங்குமச் சிவப்பும் ரத்தப் பலியிடலும் ஆகிய சடங்குகளின் காரணத்தை ஆராயப் புகுந்தால் பூப்பு என்ற சடங்கின் வேர்களை அடையாளம் காண முடியும். நிலமும் நிலம் சார்ந்த மருதமும் இனக்குழு வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றங்களில் குறிப்பிடத்தக்கது.

பெண் -இல்லாள் என்றும் மனைமாட்சி என்றும் மாற்றம் பெற்ற காலம். பூப்பு பெண்ணின் ஆளுமையாக இருந்தது மறைந்து இனவிருத்திக்கான அடையாளமாக மட்டுமே சுருங்கிய காலம்.

ஆண் -பூப்படைதல் சடங்கு

ஆணுக்கான சடங்குகள் அனைத்தும் போர், வேளாண்மை, அரசாட்சி என்று சமூக ஆள்வினைக்கான சடங்குகளாகவும் பெண்ணுக்கான சடங்குகள் அனைத்தும் பாலியல் உடல் சார்ந்தும் அவ்வுடல் பாலுறவு, மகப்பேறு என்று இனவிருத்தி சார்ந்தும் அமைந்ததாக காணப்படுகின்றன. அருந்தா இனக்குழு வாழ்க்கையில் ஆண் பூப்படைதல் சடங்கு கொண்டாடப்பட்டதைக் காணலாம். அதுவரை ஆடையின்றி அலைந்த ஆண்மகன் வயதுக்கு வந்துவிட்டான் என்பதை அறிவிக்கவும் கொண்டாடவும் அவன் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் சடங்கு இது. அக்குழுவின் வயதான முதியவர் இச்சடங்கை நிகழ்த்துவார்.

தன் தலையால் ஆண்மகனின் தலையை மோதி ரத்தம் சிந்த வைப்பார். எறும்பு கடிக்கும் குழிக்குள் அவனை தள்ளி உணவின்றி சில நாட்கள் வைப்பார்கள். வீரமும் வலி பொறுத்தலும் போர் வாழ்க்கையில் ஆணுக்கான அம்சங்களாக இருப்பதால் இச்சடங்கை ஆணின் "மறுபிறப்பு" என்று சொல்கிறார்கள்.

ஆண் பூப்படைதல் சடங்கை "பிணை அறுத்தல்" - க்யா மோட்டு டி செலி (kia motu te sele - to snap the tie) என்றும் பெண் பூப்படைதல் சடங்கை "பாவாடை அணிதல்" ( hakatiti - titi skirt) என்றும் மேற்கத்திய நாடுகளின் இனக்குழு மக்களின் சடங்குகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.

பல்வேறு நாடுகளில் பூப்பு சடங்குகள்:


பெண் கருத்தரிக்கும் தகுதியை அடைந்துவிட்டாள் என்பதற்கான உடற்கூறு அறிகுறியை பூப்படைதல் என்று சொல்வர். பெண்ணுக்கு முதலாவதாக நேரும் இந்தப் பூப்படைதல் நிகழ்ந்த பிறகே அவளுக்குப் பாலியல் சுகம் உண்டாகிறது என்பதில்லை. தனி நபரின் உடல் வளர்ச்சியைப் பொறுத்து பெண்ணின் பூப்புக்கு முன்போ பின்போ அத்தகைய சுகத்தை அவள் உணரலாம். எனவே பூப்பு எனில் பெண் கருத்தரிக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டாள் என்ற அளவில்தான் பொருள் கொள்ள வேண்டும். பெண் பூப்படைதல் சடங்கு பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

ரஷ்யாவில் பெண் பூப்படைந்த உடன் அவள் தாய் பெண்ணின் முகத்தில் ஓங்கி அறைவிடுவாளாம். அவள் அடித்த அடியில் பெண்ணின் கன்னங்கள் சிவந்துவிடுவதை நல்ல அறிகுறியாக நினைக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள்.

நேபாளத்தில் பெண் பூப்படைந்தவுடன் அவளை ஒரு இருட்டறையில் அடைத்து வைக்கிறார்கள். வெளியில் வரவோ சூரிய ஒளியைப் பார்க்கவோ கூடாது. அதன் பின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவள் திருமணத்திற்கு தகுதியுடையவளாகிவிட்டாள் என்பதை உணர்த்தும் வகையில் அவளுக்கும் சூரிய பகவானுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும்.

ஆப்பிரிக்கா சுலு (Zulu) இனத்தில் பெண் பூப்படைந்த நாளில் ஆடு பலியிடுதல் நடக்கும். அந்தப் பெண் அவள் ஒத்தப் பெண்களுடன் காலையில் எழுந்து நதியில் நீராடி வந்தப் பின் அவள் உடல் எங்கும் சிவந்த களிமண்ணைப் பூசுவார்கள். பூப்படைந்த அந்த நாட்களில் சில உணவுகளை அவள் விலக்க வேண்டும். வயதானவர்களும் அவளைப் போல ஏற்கனவே பூப்படைந்தப் பெண்களும் பூப்படைந்தப் பெண்ணின் உடல் மாற்றங்களையும் வாழ்க்கை முறையையும் சொல்லிக் கொடுப்பார்கள்

ஜப்பானில் பெண்ணின் பெருமைக்குரிய சடங்காக பூப்படைதல் நிகழ்வைக் கொண்டாடுகிறார்கள். விருந்துக்கு அழைக்கும் போது விருந்துக்கான காரணத்தைச் சொல்வதில்லை. சிவந்த அரிசியும் பீன்ஸ்சும் நிறைந்த பெரிய தட்டை பூப்படைந்தப் பெண்ணின் முன்னால் வைத்திருப்பதன் மூலம் விருந்துக்கும் கொண்டாட்டத்திற்குமான காரணம் சொல்லப்படும்.

இந்தியாவிலும் பெண் பூப்படைதல் சடங்கு எல்லா இன மக்களிடமும் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இச்சடங்கு இன்றும் கொண்டாடப்படுகிறது. "பூப்பு நன்னீராட்டல்" என்று இச்சடங்கை கொண்டாடும் வழக்கம் இன்றும் தமிழர்கள் வாழ்வில் இடம் பெற்றுள்ளது. இச்சடங்கு குறித்த பதிவுகளை தமிழ்த் திரைப்படங்கள் அளவுக்கு யாரும் பதிவு செய்திருக்க முடியாது! தாய்மாமன் உரிமையிலிருந்து பூப்படைந்தவுடன் பாலியல் உணர்வு ஏற்படுவதாக காட்டப்படும் காட்சிகள் வரை உண்மை, பொய் அனைத்தையும் பூப்பு நன்னீராட்டில் கலந்து காட்டிய பெருமை நம் தமிழ்த் திரைப்படங்களுக்கே உண்டு.

எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க ...!!!!!



எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க ...!!!!!


மனித மனம் எப்போதும் சந்தோஷமாக இருக்கவும்,நிம்மதியாக வாழவுமே விரும்புகிறது.ஆனால் பலருக்கும் அது சாத்தியமாகவே இருப்பதில்லை.வருத்தம்,நோய்,துன்பம் தரும் நிகழ்வுகள் என்று மகிழ்ச்சியை பறிக்கும் எதிரிகள் இருக்கத்தான் செய்கின்றன.அப்படியானால் எப்போதும் சந்தோஷமாக எப்படி இருக்கமுடியும்? சரிதான்.ஒரு முக்கியமான விஷயம் இவை எல்லாம் தினமும் ஏற்படும் ஒரு விஷயமல்ல!


             நெருங்கிய உறவினரின் இழப்பு யாருக்கும் மகிழ்ச்சியை தராதுதான்.அதையே நினைத்துஏன் பல மாதம்,பல ஆண்டுகள் அந்த பாதிப்பிலேயே இருப்பதுதான் பிரச்சினை.இதுபோலவே மற்ற துன்பங்களுக்கும்,கடந்துவிட்ட கஷ்டங்களுக்கும் பொருந்தும்.நம்முடைய சிக்கல் என்பது ஏற்பட்டுவிட்ட பாதிப்பிலிருந்து எவ்வளவு விரைவில் மீண்டுவருகிறோம் என்பதே!


            மனிதனாக நீங்கள் பிறந்துள்ளதற்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும் இல்லையா? உலகம் எதற்காக இருக்கிறது அதை யார் படைத்தார்கள்? மறுபிறவி இருக்கிறதா? இல்லையா? நாம் என்னவாகப்போகிறோம்? இதெல்லாம் விடை இல்லாத கேள்விகள் தான்.ஆனால் நீங்கள் பிறந்துள்ளதன் காரணம் எனக்கு தெரியும்.அது எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு! அதை மற்றவர்களுக்கு பரப்புவதற்கு!


            எப்போதும் அப்படி இருக்க முடிவதில்லை என்பது உண்மைதான்.நூறு சதவீதம் என்பது ஒரு மாயை! அது முழுதும் உண்மையல்ல! அதனால் பெரும்பாலான நேரங்களில் உங்களால் மகிழ்ச்சியுடன் இருக்கமுடியும்.எப்போதும் என்பது அதுதான்.என்னால் முடியவில்லை என்பவர்கள் முதலில் அதைப்பற்றி சிந்திக்க ஆரம்பிக்கவும்.உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக சந்தோஷத்தை தேர்ந்தெடுக்கவும்.


           மகிழ்ச்சிதான் உங்கள் நோக்கமென்று முடிவு செய்துவிட்டால் அதை பெறுவது எளிது.முதலில் நீங்கள் இப்போது சந்தோஷமாக இருக்கிறீர்களா? என்பதை கவனியுங்கள்.இல்லையென்றால் உங்களை சங்கடப்படுத்தும்,கவலைக்குள்ளாக்கும் விஷயம் எது என்று கண்டுபிடிக்கவும்.இப்போதே நீங்கள் பாதி வெற்றியடைந்த்து போலத்தான்.


           உறுத்தும் விஷயத்தைக் கண்டுபிடித்து விட்டாலே அதை தீர்க்கும் வழிகளும் உங்களுக்கு தோன்ற ஆரம்பிக்கும்.இயற்கை அனைவருக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் சக்தியை கொடுத்திருக்கிறது.தீர்க்க முடியாவிட்டால் உறவினரையோ,நண்பர்களையோ,அதற்கென உள்ள நிபுணர்களையோ அணுக வேண்டும்.பிரச்சினை தீர்ந்தால் மகிழ்ச்சிதானே வரும்.


       முக்கியமான விஷயம் உங்களை சுற்றி உள்ள  மற்றவர்கள் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று நினைத்தால் மட்டுமே நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கமுடியும்.நமது பக்கத்தில் நான்குபேர் அழுது கொண்டிருந்தால் உங்கள் மனநிலையும் பாதிக்கவே செய்யும்.அல்லது மற்றவர்கள் கஷ்ட்த்தில் இருக்கும்போது நீங்கள் சிரித்துக் கொண்டிருந்தால் உங்களுக்கு சிகிச்சை தேவை.


           பிரபல பதிவர் ஒருவர் குறிப்பிட்ட சிலரின் பதிவு ஹிட்டாகிவிட்டால் அன்று முழுக்க சாப்பாடு,தூக்கம் எதுவும் இல்லையாம்.இந்த மாதிரி விஷயங்களால் உங்கள் சந்தோஷம் பாதிக்கப்படுவது கஷ்டம்.மகிழ்ச்சி சட்ட்த்துக்கும்,நெறிகளுக்கும் உட்பட்ட பொருள்களில் இருக்கவேண்டும்.நிகழ்காலத்தில் வாழ்வது,தவறுகளை திருத்திக்கொள்வது போன்றவை முக்கியம்.குழந்தையாக இருங்கள் .வாழ்வு எளிதாகும்.

உயிரை உறிஞ்சுகிறதா சினிமா?


என்னிடம் இரண்டு நாய்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு நாய்க்குப் பேராசை, சுயநலம், சந்தேகம், பொறாமை பழிவாங்குவது, மற்றவர்களை அச்சுறுத்துவது போன்ற தீக்குணங்கள் அதிகம். அதற்கு நான் 'ஈவில்' என்று பெயர் வைத்திருந்தேன்.

இன்னொன்று அதற்கு நேர் எதிர். நன்றி , பொறுமை, நட்பு, உதவி செய்யும் மனப்பான்மை இதெல்லாம் அதனிடம் மிகுதி. நான் அதை 'குட்டி' (goodie) என்று அழைப்பேன். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல. ஒன்றை ஒன்று ஜெயிக்கப்பார்க்கும். எப்போதும் போட்டி போட்டுக் கொண்டே இருக்கும்.

இரண்டில் "எது ஜெயிக்கும்?"
"நான் எது ஜெயிக்க வேண்டும் என்று விரும்புகிறேனோ அது ஜெயிக்கும்"
"எப்படி? உங்களுக்கு புரியவில்லையா?
"எதை ஊக்குவிக்கிறேனோ, எதற்கு ஊட்டம் அளித்து வளர்க்கிறேனோ, எதைப் பலப்படுத்துகிறேனோ, அதைப் பொறுத்து அந்த இரண்டு நாய்களில் ஒன்று ஜெயிக்கும்"

நாய்கள் என்று நான் சொல்ல வருவது நம்முடைய மனநிலையைத்தான்....

சரி, நம்முடைய கல்வி முறை, சமகால இலக்கியங்கள், சினிமா இவை எல்லாம் 'குட்டி[Goodie]'க்குத் தீனி போடுகின்றனவா? அல்லது ஈவிலுக்கா[Evil]?

யோசனை மனதைப் பிறாண்டத் துவங்கியது. செய்தித்தாள் படிக்கும் போது மற்ற சிந்தனை கூடாது என்று மனதிடம் சொல்லி வைத்திருக்கிறேன். ஆனால் சிந்தனை என்பது காபி குடிப்பது, குளிப்பது போல ஒரு பழக்கத்தின் காரணமாக நேர்கிற செயலா?
காற்றுப் போல அது நினைத்த நேரத்திற்கு வந்து வருடிக் கொடுக்கும் அல்லது குப்பை சேர்க்கும்.

"சீ! சும்மாயிரு!" என்று ஒரு அதட்டல் போட்டுவிட்டு அடுத்த பக்கத்தைப் புரட்டினேன்.அங்கே என் கண்ணில் பட்டது இந்த செய்தி.

"உயிரை உறிஞ்சுகிறதா சினிமா?"

என்று ஒரு பெரிய கேள்விக் குறியை வீசித் துவங்கியது செய்தி.

ஐ.நா.சபையின் அமைப்பான உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஒர் ஆய்வு, இந்தியாவில் தயாராகும் படங்களில் முக்கால்வாசிப் படங்கள்- துல்லியமாகச் சொல்வதானால் 76 விழுக்காடு- புகைபிடிக்கும் காட்சிகளைக் கொண்டிருக்கின்றன என்று சொல்கிறது. அதிலும் புகழ் பெற்ற, மக்களிடம் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நடிக நடிகையர்கள், உதாரணமாக அமிதாப் பச்சன், ஷாரூக்க்கான், ரஜனிகாந்த் அந்தக் காட்சிகளில் நடிப்பதாகவும் அது கவலைப்படுகிறது. ஒரு நாளைக்கு இந்தியாவில் ஒன்றரைக் கோடி பேர் சினிமாப் பார்க்கிறார்கள், ஆண்டொன்றுக்கு 900 திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன என்று கணக்குச் சொல்லி, சினிமா இந்த அளவிற்குப் பிரபலமாக இருப்பதால் புகை பிடிக்கும் பழக்கமும் வலுவாக வேரூன்றியிருக்கிறது என்று அந்த ஆய்வு ஆதங்கப்படுகிறது.

ஆனால் இவற்றையெல்லாம் விடக் கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியாவில் புகையிலைப் பழக்கம் உள்ள 28 கோடிப் பேரில் 50 லட்சம் பேர் குழந்தைகள்! நாளுக்கு நாள் பதின்ம வயதினர் புகை பிடிப்பது அதிகரித்து வருகிறது, அதற்கு சினிமாக்கள் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அது கருதுகிறது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, கறுப்பு -வெள்ளைக் காலத்தில், ஒரு பாத்திரத்தை வில்லனாகக் காட்ட சிகரெட் பயன்பட்டது. கழுத்தில் கர்சீப், கட்டம் போட்ட சட்டை, கலைந்த தலை, வாயில் புகையும் சிகரெட் இவை இருந்தால், அவர் வில்லன் என்று பார்த்தவுடனேயே ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள். இதன் காரணமாக நிஜ வாழக்கையில் புகை பிடித்த சில நல்லவர்கள் கூட, அதை பகிரங்கமாகச் செய்யத் தயங்கினார்கள். உதாரணம்: காமராஜர். அவருக்குப் புகை பிடிக்கும் பழக்கம் உண்டு. ஆனால் அவர் புகை பிடிப்பது போல் புகைப்படம்  எடுக்கக்கூட அனுமதிக்க மாட்டார்கள்.

எம்.ஜி.ஆர். தனது எந்தத் திரைப்படத்திலும் புகை பிடித்ததில்லை. இமேஜை  பற்றிய கவனம் மட்டுமல்ல இதற்குக் காரணம். அவர் தனது பாத்திரங்கள் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் குறித்தும் அறிந்து வைத்திருந்தார் என்று கருத இடம் இருக்கிறது.

"தைரியமாக  சொல் நீ மனிதன்தானா?
இல்லை நீதான் ஒரு மிருகம், அந்த மதுவில் விழும் நேரம்"

என்று அவர் திரையில் பாடியதைக் கேட்டுத் தற்காலிகமாகக் குடிப்பதை நிறுத்தியவர்கள் உண்டு.

இன்றைய தமிழ் சினிமாவிற்கு, மதுவிற்கு எதிராகவோ, புகைக்கு எதிராகவோ பேசும் தைரியம் கிடையாது. மாறாக அது இன்று புலம்பல் களஞ்சியம்.

 திட்றாங்க, திட்றாங்க, திட்றாங்க, திட்றாங்க,
தம் அடிச்சா திட்றாங்க, தண்ணியடிச்சா திட்றாங்க,
சைட் அடிச்சா திட்றாங்க, ரைட் கொடுத்தா திட்றாங்க,
திட்றாங்க திட்றாங்க, திட்றாங்க, திட்றாங்க,
 டாடியும் மம்மியும் திட்றாங்க'

தீராத தம்மு வேணும்
திட்டாத அப்பு[அப்பா] வேணும்
குறையாத குவாட்டர் வேணும்
கொண்டாட நட்பு வேணும்...


என்று அது அழுது  புலம்புகிறது.பின் இதையெல்லாம் செய்தால் அப்பாவும் அம்மாவும் பூரித்து புளாகாங்கிதம் அடைந்து, உச்சி மோந்து, திருஷ்டி சுத்தி, ஈன்ற பொழுதின் பெரிதுவப்பார்களா?

சரி, மதுவிற்கு எதிராகப் பிரசாரம் செய்த எம்.ஜி.ஆர், ஏன் புகை பிடிப்பதற்கு எதிராகத் திரைப்படத்தில் எந்த பிரசாரமும் செய்யவில்லை? சரித்திரத்தில் விடை காணமுடியாத மில்லியன் டாலர் கேள்விகளில் இதுவும் ஒன்று. அவர் அதைப் பெரிய விஷயமாகக் கருதாமல் இருந்திருக்கலாம். அல்லது அந்தப் பிரசாரம் பலன் தராமல் போய் அது தனது செல்வாக்கிற்கு ஏற்பட்ட வீழ்ச்சியாகக் கருதப்பட்டுவிடும், எதற்கு ரிஸ்க் என்று எண்ணியிருக்கலாம்.

ஆனால் தனது விளம்பர வருமானத்தைப் பெரிதாகக் கருதாமல், சிகரெட் விளம்பரங்களை வெளியிடப்போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்தது ஆனந்த விகடன். அது புகைப்பதற்கு எதிராகக் கொஞ்சநாள் போராட்டமும் நடத்திப் பார்த்தது. ஆனால் பத்திரிகையாளர்களால்- விகடனில் பணியாற்றிய சில பத்திரிகையாளர்களையும் சேர்த்துத்தான் - கை விட முடியாத ஒரு வழக்கமாக இருந்தது புகை பிடிக்கும் பழக்கம்.

நான் குமுதம் ஆசிரியராகப் பணியாற்றியபோது, சென்னைக்கு வந்த அன்னை தெரசாவைப் பேட்டி கண்டு வருமாறு ஒரு நிருபரை அனுப்பியிருந்தேன். அந்த நிருபருக்குப் புகை பிடிக்கும் பழக்கமுண்டு.தெரசா பேட்டிக்கு வரச் சொல்லியிருந்த நேரத்திற்குச் சற்று முன்னதாகவே சென்று விட்ட அவர், காத்திருக்கும் போது போரடித்ததால், புகைபிடிக்க ஆரம்பித்தார்.மூடப்பட்ட ஒரு அறைக்கு முன்னால் வராந்தாவில் அவர்
நின்று புகைத்துக் கொண்டிருந்தார். தெரசா அந்த அறைக்குள்தான் இருக்கிறார், வேறு யாருடனோ பேசிக் கொண்டிருகிறார், நம்முடைய நேரம் வரும் போது நம்மை அழைப்பார்கள், அதற்கு முன்னதாக சிகரெட்டைக் கீழே போட்டுவிட்டு கொஞ்சம் பாக்கை மென்றுவிட்டு உள்ளே போய் விடலாம் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். அவர் நினைத்தது போல் தெரசா அறைக்குள் இல்லை. பேட்டிக்கு சில நிமிடங்கள் முன் தெரசா விறுவிறுவென்று அந்த அறையை நோக்கி வரத் துவங்கினார். வரும் போது அறைவாசலில் புகை பிடித்துக் கொண்டு நின்றிருந்த நிருபரையும் பார்த்து விட்டார்.

நிருபர் உள்ளே அழைக்கப்பட்டார்.அவர் தெரசாவிடம் கேள்விகள் கேட்கும் முன், தெரசா அவரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்." புகை பிடிப்பீர்களா?' என்பது முதல் கேள்வி. கையும் புகையுமாகப் பிடிபட்டபின் இல்லை என்றா சொல்ல முடியும். சரி, புகை பிடிப்பதைப் பற்றி ஏதாவது அறிவுரை சொல்லுவார், அதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடலாம் என்று எண்ணிக் கொண்ட நிருபர், " ஆமாம். பத்துப்பதினைந்து வருடமாகப் புகைக்கிறேன். பழகிப் போய் விட்டது" என்றார்.

தெரசா புகையின் தீமைகள் பற்றி உபதேசம் ஏதும் செய்யவில்லை. மாறாக, "ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் புகைப்பீர்கள்?" என்றார்.
"பத்து அல்லது பனிரெண்டு" என்றார் நிருபர்.
"அதற்கு என்ன செலவாகும்?"
"பத்து பதினைந்து ரூபாய் ஆகும்."
"நீங்கள் புகை பிடிப்பதை நிறுத்திவிட்டு மிச்சமாகும் அந்தத் தொகையை எனக்கு நன்கொடையாகத் தருவீர்களா?" என்றார் தெரசா
நிருபர் இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
"அது ஒன்றும் பெரிய தொகையாக இராது மதர்." என்று நழுவப் பார்த்தார் நிருபர்.
"மாதம் முன்னூறு, நானூறு ரூபாய். அதை வைத்துக் கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு மாதம் முழுக்க இரண்டு வேளை பசியாற்றலாம் தெரியுமா?" என்றார். நிருபர் சங்கடத்தில் நெளிய ஆரம்பித்தார்.


" நான் என்னுடைய பணியைத் துவக்கியபோது என் கையில் இருந்த பணம் வெறும் பத்து ரூபாய். அது ஒரு குஷ்டரோகியை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல உதவியது.அங்கு அவரது ரணங்களைக் கழுவி மருந்திட்டு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார்கள். அது அவரது வாழ்வில் மிகப்பெரிய ஒரு திருப்பம். எல்லோராலும் அருவருப்பாக உணரப்பட்டுக் கவனிப்பாரின்றி தெருவோரமாகக் கிடந்த நம்மையும் கவனிக்க மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டு, அவருக்கு மனிதர்கள் மீது நம்பிக்கை பிறந்தது. அதற்குத் தேவைப்பட்டது வெறும் பத்து ரூபாய்.

சேவை செய்ய அதிகப் பணம் தேவையில்லை. ஆனால் சேவை செய்பவர்களுக்கு ஒவ்வொரு பைசாவும் பெரிய உதவி" என்று சொல்லிய தெரசா, நிருபரிடம், இனிப் புகை பிடிப்பதில்லை, அதற்கு செலவிட்டு வந்த பணத்தை தர்மத்திற்குக் கொடுக்கிறேன் என்று உறுதி வாங்கிக் கொண்டுதான் பேட்டிக்கு சம்மதித்தார்.

தமிழ் சினிமாக்கள் மதர் தெரசா இல்லை.புகை பிடிப்பவர்கள் மனதில் தர்ம சிந்தனையை விதைக்க அவை முன் வரும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் வியாபாரத்தில் செலுத்தும் கவனத்தில் பத்தில் ஒரு பங்கை சமூக நலன்களைப் பேணுவதில் காட்டக் கூடாதா?

திருட்டு விசிடியை எதிர்த்து ஊர்வலம் போகப் போவதாக, முதல்வரை சந்தித்து மனுக் கொடுக்கப் போவதாக தமிழ் சினிமா நட்சத்திரங்கள் அவ்வப்போது சொல்வதுண்டு. வியாபாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள இந்த முயற்சி.

சரி, திருட்டு வி.சி.டி.கள் எங்கிருந்து முளைக்கின்றன? அவை விதை போட்டு விளைவதில்லை. வானத்திலிருந்து குதிப்பதில்லை.சினிமா உலகத்தில் இருந்து சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்களால்தான் உருவாகின்றன. அதற்கு ஏன் வீதியில் இறங்கி ஊர்வலம் போகவேண்டும்? அறைக்குள் உட்கார்ந்து அலசி ஆராய்ந்து முடிவுக்கு வர வேண்டிய விஷயமல்லவா இது? தங்களது பேராசைக்குக் கடிவாளம் போட வேண்டிய விஷயத்திற்கு, ஊராரை ஏன் உசுப்பி விட வேண்டும்?

இந்த விசிடி விஷயத்தில் காட்டுகிற அக்கறையில். பத்தில் ஒரு பங்கை

•இனி  தமிழ்த் திரைப்படங்களில் புகைப் ப்டிக்கும் காட்சிகளைக் காண்பிப்பதில்லை,

•பெண்களைக் கேலி செய்யும் பாடல்களை அனுமதிப்பதில்லை,

•இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவதில்லை,


•ஜாதிப் பெயர் வருவது போலத் தலைப்பு வைப்பதில்லை
என்ற விஷயங்களில் முடிவு எடுப்பதில் காட்டலாமே? இந்த விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஊர்வலம் போகலாமே? கோஷங்கள் எழுப்பலாமே?

'குட்டி'யைத் தூக்கி வைத்துக் கொஞ்சாவிட்டாலும் பரவாயில்லை, ஈவிலுக்குப் போடுகிற ரொட்டியைக் குறைத்துக் கொள்ளலாமே? செய்யுமா திரை உலகம்? அல்லது திரைக்கு வெளியிலும் வேஷம் போடுமா?

Monday 6 January 2014

அழிவுப் பாதையின் உச்சக்கட்டத்தில்!!!



(இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)


மக்களின் பொழுதுபோக்குக்காக ஏற்படுத்தப்பட்ட சாதனங்களில் முதன்மையானதாக தொ(ல்)லைக்காட்சி விளங்குகிறது என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. ஆனால் அதன் மூலம் செய்திகள் உள்ளிட்ட உலக - அறிவியல் – அரசியல் விஷயங்களும் அறிந்து கொள்ளலாம் என்றும், மக்கள் மனங்களை பண்படுத்தும் இது என்று வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில்தான் தண்டனைக்காக அனுப்பப்பட்டு சிறையில் இருக்கும்போது கைதிகள் கூட T.V. பார்க்கலாம் என்று கருத்து கூறப்பட்டு அது ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்டும் வருகிறது.

ஆனால் இன்று நடைமுறையில் இந்த தொலைக்காட்சி சேனல்களில் மக்கள் எந்த நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கிறார்கள்? எந்த சேனல்கள் பெரும்பாலும் ரசித்து மகிழ்கிறார்கள் என்று பார்த்தால், அறிவியல் - அரசியல் கூடிய செய்திகளை விடவும் நாடகங்கள் எனப்படும் மெகா சீரியல்களும் - திரைப்படங்களும் – ஆடல் பாடல் – கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் தான் முன்னணி வகிக்கின்றன. யுக முடிவுக் காலம் வருவதை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் உலகம் அதை எந்தளவுக்கு வரவேற்றுக் கொண்டிருக்கிறது என்று யாரும் பெரிய ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டியதில்லை.

ஆம்! இந்த தொலைக்காட்சிகளின் ஜீவ நாடி திரைப்பட உலகம் இதன்மூலம் உருவாக்கப்படும் படங்கள் – நடிகர்கள் – நடிகைகளின் வாழ்க்கை மக்களை எந்தளவுக்கு அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கிறது? தினமும் செய்தித்தாள்களை புரட்டினால் காதல் ஜோடி தற்கொலை, கள்ளக்காதலர்களின் காமக் களியாட்டங்கள் – வயது வரம்பு தாண்டி காம வெறிக்கு பலியாகும் மாணவர் – இளைஞர்கள்; பணம் செலவுக்கில்லையென்றால் கொலை – கொள்ளை இதுவெல்லாம் யார் கற்றுத் தந்த பாடம்? சினிமா தவிர வேறு யார் இதை இவ்வளவு (கேவலமாக) - வேகமாக கற்றுத் தரமுடியும். காசிற்காக சினிமாவில் நடிக்கும் இவர்கள் நிஜமாக வாழ்பவர்களுக்கு எதைக் கற்றுத் தரமுடியும்? இதைத்தான் நிஜத்தில் மூட்டை தூக்குபவர்களுக்கு கூலி பத்து ரூபாய் என்றால் மூட்டை தூக்குபவதைப் போல் நடிப்பவர்களுக்கு கூலி கோடி ரூபாய். இவர்களை இனம் காட்ட இவர்களின் வாழ்க்கை - குடும்பத்தைப் பாருங்கள். விரல்விட்டு எண்ணிப் பாருங்கள். எத்தனை நடிகர் – நடிகை கைப்பிடித்த ஒரே கணவன் – மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள். எத்தனை நடிகர் – நடிகைகள் லஞ்ச லாவண்யம் பற்றி பேசுபவர்கள் – அதைத் தவறு என்று கூப்பாடு போடுவார்கள் - வெறுமனே தாங்கள் நடிப்பதற்காக லட்சக்கணக்கில் – கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார்களே? அதில் எத்தனை பேர் சரியாக வரிகட்டுகிறார்கள். ஊருக்கு உபதேசம் செய்யும் உத்தமர்கள்(?) கறுப்பு பணம் வாங்காமல் – மது அருந்தாமல் – விபச்சாரம் செய்யாமல் இருப்பவர்கள் யார்? யார்? என்று யாராவது காட்டினால் தெரிந்து கொள்ளலாம். ஆக அழிவுப் பாதையின் திறவுகோலாக அவதரித்துள்ள ஒவ்வொரு மொழியின் – நாட்டின் திரையுலகில் இப்படித்தான் என்பதை யாராவது மறுப்பவர்கள் உண்டா?

திரையுலகம் இப்படி என்றால் சின்னத்திரையுலகம் அழிவுப் பாதையில் ஊன்றுகோளாக உருவெடுத்து விட்டது. ஆபாசங்களை அருவெறுப்பாக கருதாமல் அதை அரங்கேற்றுவதில் ஒவ்வொரு சேனல்களும் நீயா – நானா? என்று போட்டியில் உள்ளன. எத்தனைப் போர்க்குரல்கள் எழுப்பப்பட்டாலும் அதனைக் கண்டு அஞ்சும் மனநிலையில் எந்த T.V. சேனலும் இல்லை. இதனைக் கட்டுப்படுத்தவேண்டிய அரசாங்கம் தமிழில் பேர் வை; உனக்கு வரிச்சலுகை என்கிறது. ஒரே ஒரு பாடல் காட்சிக்கும் – ஒரே ஒரு சணடை காட்சிக்கும் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வரி வெறும் ஊறுகாய் மாதிரிதான். எல்லா மொழிக்காரர்களும் ஒருவேளை அரசாணை கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் அந்தந்த மொழி வெறி அவரவர்களுக்கு.

அரை குறை ஆடையுடன் என்ன? அதுவும் இல்லாமல் காட்சி தர நான் ரெடி: படம் பிடிக்க – ஒளிபரப்ப யார் ரெடி? என்று சினிமா விபச்சாரிகள் கேட்கின்றனர். சினிமாத் துறையையும் – சின்னத்திரை எனப்படும் T.V.   சேனல்களையும் தாண்டி மக்களை அழிவின் பக்கம் அடைப்பவர்கள் செய்தித்தாள்கள் மூலம் T.V.   க்கு விளம்பரம்; T.V. யை ஒரு முறை பார்ப்பதைவிட செய்தித்தாளை பத்திரப்படுத்தி எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்வார்களே! அதற்காக பெரும்பாலான நிறுவனங்கள் இரண்டையும் ஒருங்கேப் பெற்றுள்ளன. அதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் – தனித்தனி செய்தியாளர்கள் தேவையில்லை. அப்புறமென்ன தேசிய வார இதழ்- நாளிதழ் – குடும்ப, வார இதழ் என்று A சர்டிபிகேட் இல்லாமல் கவர்ச்சிப் படங்களை சென்சார் செய்யாமல் வெளியிடும் தைரியம் இந்த குடும்ப(?) இதழ்களுக்குச் சாரும். ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வரும் தினப்பத்திரிகைகளை பார்ப்பவர்களுக்குத் தெரியும். கூச்சப்பட வேண்டி நம்மை நெகிழச் செய்யும் படங்கள் – செய்திகள் தான் எத்தனை எத்தனை? யார் கொடுத்தது இந்த குடும்ப - தேசிய சர்டிபிகேட்,

சீர்கெடுக்கும் சேனல்களுக்கு பண மழை பெய்ய வறட்சி ஏதும் இல்லை. பணம் வெள்ளமும் – பணப் புயலும் போங்கள். நல்ல அமோக விளைச்சல். அதை சாகுபடி செய்ய மடையர்களாய் மக்கள். T.V. யில் வியாபாரம் இல்லாத எந்தப் பொருளையும் யாரும் வாங்காத நிலை அளவுக்கு தயிர் சாதத்திலிருந்து ஊறுகாய், பால், பவுடர், ஷேம்பு, சோப்பு, பிளேடு, அரிசி – எண்ணை – மாவு முதலி இரு சக்கர வாகனங்களிலிருந்து 4 சக்கர வாகனங்கள் வரை எந்த விளம்பரத்தை யார்தான் விட்டு வைத்தார்கள்? – சலூன் கடைக்கு மட்டும்தான் விளம்பரம் இல்லை. எல்லாம் T.V.  மயம்; இல்லை இல்லை எல்லாம் T.V.   மாயம்.

இந்த மூன்றைத் தவிர அடுத்ததாய் மக்களை அழிவின்பால் அறைகூவல் விடுவதாக செல்போன்கள் தயாராகிவிட்டன. பாமரர்களையும் விட்டுவைக்காமல் இந்த செல்போன் சூறாவளி செல் நிறுவனங்களால் சலுகை – மலிவு என்ற கோரப்பிடியில் மக்கள் ஆட்படுத்தப்படுத்தப்படுகின்றனர். பள்ளி- கல்லூரி காலங்களில் கைக்கடியாரம் என்றால் எப்படியிருக்கும் என்று தெரியாமலிருந்த மக்களுக்கு விஞ்ஞானம் - கம்பியூட்டருக்குப்பின் தயாரித்தது தான் செல்ஃபோன். எல்லா தரப்பினரையும் பதம்பார்த்து அழிவின் அடித்தளமாக செல்ஃபூன்கள் விளங்குவதை யாரும் மறுக்க இயலாத பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் நீலப்படங்களைக் கூட இதில் பார்க்கும் வசதியும் உண்டு.

பெரிதான் கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டிருந்தால் கண் கெட்டுவிடும் என்று சொன்னார்கள் – அதையும் தாண்டி புனிதமாக சிறிதே – சிறிதான் இந்த செல்போன்களில் இன்டர்நெட் இணைப்புடன் – F.M. T.V. தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அப்படியென்றால் அதையே உற்றுநோக்கி - இயக்குவதாலும் – படம் பார்ப்பதாலும் கண் என்ன  ஆகும் என்று மெய்ஞானம் தான் பதில் சொல்லவேண்டும்.

ஆச்சரியப்பட வேண்டிய விஞ்ஞான விஷயங்கள் ஆபாச அரங்கேற்றங்களால் கைச்சேதப்பட வைக்கின்றன. எவ்வளவு கஷ்டப்பட்டு முதல் தயாரிப்பை ஒருவன் கண்டுப்பிடித்தவுடனேயே அதைப் போன்ற – அதனைவிட பன்மடங்கு வசதிகளுடன் அடுத்தடுத்தவர்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள். ஒருவர் எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ளவே செல்போன்கள் தயாரிக்கப்ட்டன. ஆனால் இன்று அதன் நிலையை அதிகம் விவரிக்க வேண்டியதில்லை.

அடுத்தபடியாக காமக் களியாட்டங்கள் அரங்கேறும் இடங்களாக சுற்றலாத்தளங்கள். பார்க்குகள் – பீச்சுகள் இடம் பெறுகின்றன. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரண சுற்றுலாத் தளங்களில் எங்கேயாவது ஒரு காதல் ஜோடியை பார்ப்பது அதிசயம்; அதுவும் ஆள் அரவமற்ற ஒதுக்குப் புறங்களில் பயந்து பயந்து பேசிக் கொள்வதை நாம் கண்டோம். ஆனால் இன்றோ சர்வசாதாரணமாக பஸ்களில் – பஸ் நிறுத்தங்களில் ஆரம்பித்து பார்க் – பீச்சுகளில் மற்றும் பொது இடங்களிலும் கூட காதல் – காம லீலைகள ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்து என்று ஆரம்பித்து எழுதக் கூசும் அசிங்கங்கள் நடக்கின்றன. இப்போது நடுநிலையாளர்கள் ஆள் அரவமற்ற இடங்களில் ஒதுங்கிக் கொள்ளும் அவலம் உள்ளது. எனவே இது போன்ற எல்லா அசிங்கங்களுக்கும் மூலகாரணம் சாட்சாத் இந்த சின்னத் திரையும் – திரை உலகமும் தான். இதனைத் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை. வீடு தேடி வரும் இந்த சேலை இந்த அழிவை எதிர்பார்க்கும் உலகத்திற்குத் தேவையா? என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

எல்லாரும் எல்லாமும் பெற அன்பு மட்டுமே போதாது நல்லறிவும் வேண்டும். நல்லறிவும் நம் வீடு தேடி வரும்; வீடு தேடி என்ன நல்ல உள்ளங்களை தேடி நாடி வரும்; அழிவே வீடு தேடி வரும்போது அறிவு வீடு தேடி வராதா என்ன? எனவே உள்ளங்களை சுத்தமாக்கிட நற்போதனை சார்ந்த அறிவை வரவேற்பதை ஒவ்வொரு தனிப்பட்ட மனிதவும் கடமையாக்கிக் கொள்ள வேண்டும்.

வெற்றிக்கான சுருக்கு வழி.





வெற்றிக்கான சுருக்கு வழி.



1.என்னுடைய உறுப்புகள் விலங்குகளின் வழியாகப் படைக்கப்பட்டிருக்கின்றன,மாறாக என்னுடைய எண்ணங்கள் கடவுளின்  படைப்பாற்றல்  வழியாக  .என்னுடைய உறுப்புகளின் வழியாக விலங்குகளின்  குணங்களும் என்னுடைய சிந்தனைகள்  வழியாகக் கடவுளின் படைப்பாற்றலும்.இவை இரண்டின் செயல்களும்  இயற்கையாகவே கடவுளின்  படைப்பாற்றல் வழியில்.உறுப்புக்களின் செயலில்  கடவுளின்  எண்ணத்தைச் செயல் படுத்தும் போது அது கடவுளின் படைப்பாற்றலாகவும் உறுப்புக்களைத் தன்னிச்சையாக விடும் போது  அவை விலங்குப் பண்பையும்  வெளிக்  காட்டுகின்றது.

2.நம்மில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒரு வரலாறு .நாம்  ஒவ்வொருவரும்  வரலாற்றை உருவாக்கும்  நபர்களாக இருப்போம்.நம்முடைய  வாழ்க்கை  ஒரு முடிந்து போன வரலாறாக இல்லாமல்.உலகத்தில் உள்ள எல்லா நற்பண்பாளர்களையும்தனியாக ஒரு தீவில் வைத்து  அங்கு கூட்டம் ஒன்றை நடத்துவோம்,அவர்கள் அங்கு ஒரு குறிப்பிட்ட நாட்கள் தங்கும்படியாகச்  செய்வோம்.அவர்கள் உலக மக்களிடையே உண்மை நிலவ வேண்டும் என்றும் நம்பிக்கை ,அன்பு ,எண்ணத் தூய்மை ஆகியவை நிலவ வேண்டும் என்று பாடுபட்டவர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியாக இருப்பவர்கள் .ஒரு சூழ்நிலையில் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் 100 பேரில் 5 பேருக்கு மட்டுமே தேவையான உணவு மட்டும் கிடைக்கும் படிச் செய்வோம் .

3.அவர்களிடையே ஒரு பெரிய உணவுப் போராட்டத்தை தோற்றுவிப்போம் என்ன நிகழும் அவர்கள் போதித்த கொள்கைகள் அணைத்தையும் அவர்களே மீறும் படியாக ஆகிவிடும்.அப்படி என்றால் எல்லா நல்லவைகளும் போதனைகளும் ஒழுக்கங்களும் எந்த ஒரு தனி  மனிதனுக்கும்பிறப்பின் வழியாகவோ சிந்தனையின் வழியாகவோ  சொந்தமல்ல.யாரும் இயற்கையாக இப்படிப்பட்ட குணங்களோடு இருப்பதில்லை.அவர்கள்  இது நாள் வரை வெளிப்படுத்தியவைகள் எல்லாம்   அவர்களைச் சுற்றியிருந்த சூழ்நிலைகளில்  இருந்து அவர்களுக்குத் தேவையானதை  கிரகித்து  வெளிப்படுத்தியது  தான்.ஆகவே  நாம்  நமக்கு எப்போதெல்லாம்  எதுவெல்லாம்  வேண்டுமோ அப்போதெல்லாம் நமது  தேவைகள்  கொட்டிக்கிடக்கும் சூழ்நிலைகளின் ஊடே செல்வோம் அல்லது அப்படிப்பட்ட சூழ்நிலைகளைப் படைப்போம்  அவற்றைக் கிரகிப்போம் .

4.சூழ்நிலைகளில் நல்லதும் கெட்டதும் இணைந்தும் பிணைந்தும்   நமது  கிரகிப்பிற்காக
அண்டம் முழுவதும்  கொட்டிக்  கிடக்கின்றது.அதனை  எப்படி கிரகிப்பது  என்பது நமது இயற்கை பற்றிய புரிதல்களைப்  பொறுத்தது .உலகின் அந்த நற்பண்பாளர்கள் அந்தத் தீவிற்கு  வருவதற்கு  முன்பாக தாங்கள் கிரகித்து  இருந்த நற்பண்பாளர்கள் என்னும்   சூழ்நிலையைப் போலவும், பின்பு  உணவுக்காகப் போராடும் போது அவர்களால்  கிரகிக்கப்பட  நற்பண்புகள் என்னும் சூழல் அறவே இல்லாதது போலவும்.ஆகையால் சூழ்நிலைகளைப் பார்ப்போம் நாம் கிரகிக்க என்ன இருக்கின்றது என்று நமது அடையாளத்திற்காக.

5.நமது அன்றாட வாழ்க்கையில் மின்சாரத்தால் இயங்கும் மின்விசிறி  ,மின் மோட்டார் ஆகியவற்றைப் பயன் படுத்துகின்றோம் அதில் மின்சாரத்தைச் செலுத்தினால் மின் சக்தி இயங்கு சக்தியாக மாற்றப்படும் அதே போல் மேலே சொன்ன மின் மோட்டாரை நாம் வேறு ஏதாவது ஒரு சக்தியைக் கொண்டு இயக்கினால் அங்கு  இயங்கு சக்தி மின்சக்தியாக மாற்றப்படும் .இது போலத்தான் நமது வாழ்க்கைச் சூழ்நிலைகளும் ரிவர்சு பொசிசனில், எதிர் இயங்கு நிலையில் வைத்துப் பார்க்க வேன்டும்.

6.மனிதன் தனக்கு வேண்டிய வெற்றிகளைக் கிரகிக்க அந்த வெற்றி அடங்கிய சூழ்நிலைகள் வேண்டும்.அல்லது தனது அதே கிரகித்தலை எதிர் நிலையில் வைத்து  வெற்றிக்கான  சூழ்நிலைகளை தனது  மனதில் உருவாக்கி  அதனை  புற உலகிற்கு அனுப்பி   வெற்றியை அடைவதற்கான சூழ்நிலைகளைப் படைக்கலாம்.இந்த  வெளித்தள்ளல் என்னும் சக்தி மூலமாக சூழ்நிலைகளை  வெளித்தள்ளும்  போது  அதன் வெற்றிக்காக எல்லாப்  பொருட்களும் ,மனிதர்களும்  மாறுவார்கள் .

7.வெற்றிகளுக்கான சுருக்க வழி  எதுவும் இல்லை என்றே நாம் கற்பிக்கப்பட்டுள்ளோம்.ஒரு மனிதனின் வெற்றியைத் தொடரும் இன்னொரு மனிதனின் பயணம் தொடர்பவனைப் பொறுத்து ஒரு சுருக்கு வழி தான்.ஏற்கனவே பயணம் செய்தவனின் அலைச்சல்களைப் பின் வருபவன் தொடரத் தேவையில்லை.அதே போல் மனித இனத்தைப் பற்றிய மனிதனின் புரிதல்கள் அவன் பெற இருக்கும் வெற்றிக்கான களங்களையும் ,வழிகளின் நீளத்தையும் சுருங்க வைக்கத்  தான் செய்யும்.மனிதனின் வெற்றிகள்  எதுவும் மனிதன் தொடர்புடையவைகளில் மட்டுமே.

8.படைத்தலும் பயன்படுத்தலும் நம்மிடம் தான் வெற்றியும் வெற்றிக்கான சூழ்நிலைகளும் நாம் தான் என்று  அதனைத் தனித்தனியாகப் பிரித்துப் பார்த்துக் கையாளும் போது எதுவும் எளிதாகின்றது.வெற்றிக்கான சுருக்க வழி ஆகின்றது.இந்த பதிவின் மூலமான புரிதல்களை உணர சுருக்க வழி இதனைப் படித்துப் புரிந்து கொள்வது மட்டுமே.சுருக்க வழிக்குக்கூட ஏதாவது சுருக்க வழிகள் இருக்க வாய்ப்பில்லாமல் இல்லை.

ஜனவரி 6: ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் – சிறப்பு பகிர்வு

 ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம் – சிறப்பு பகிர்வு


ஏ.ஆர்.ரஹ்மான், 1966ஜனவரி 6-ல் சென்னையில் பிறந்தார்.இவரின் அப்பா சேகர், பல்வேறு மலையாள, தமிழ்ப் படங்களின் இசைக் குழுவில் பணிபுரிந்து இருக்கிறார். ரொம்பக் குட்டிப் பையனாக இருக்கும்பொழுதே, அப்பாவின் அருகில் உட்கார்ந்து இசைக் கருவிகள் மற்றும் இசை அமைக்கும் விதம் ஆகியவற்றை அறிந்துகொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது அவர் பெயர் திலீப் குமார்.

அப்பா தனியாக இசை அமைத்த முதல் மலையாளப் படம் வெளிவந்த நாளிலே, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். குடும்பத்தைக் காக்க, பள்ளிப் படிப்பை பாதியில் முடித்துக்கொண்டு, முழு நேரம் இசை உலகிற்குள் நுழைந்தார் ரஹ்மான்.

எலெக்ட்ரானிக் பொருட்களின் மீது விருப்பம் அதிகம். கணினி பொறியியல் படிக்க வேண்டும் என்பது இளமைக்கால ஆசை. பள்ளிக் கல்வி இல்லாமல் போனாலும், தனது இசைப் புலமையால்… லண்டன் இசைக்கல்லூரியான டிரினிட்டி கல்லூரியின் ஸ்காலர்ஷிப் பெற்றார்.

ஆரம்ப காலங்களில் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று தெரியாத காலங்களில் கார் ஒட்டவும் கற்றுக்கொண்டார். ஒருவேலை இசை கைகொடுக்காவிட்டால் டிரைவர் ஆகிவிடலாம் என்கிற எண்ணம் தான் காரணம்.

“பன்னிரெண்டு வயதில் முதுமையடைந்து விட்டேன் நான் ; இப்பொழுது தான் இளைஞனாகிக் கொண்டிருக்கிறேன் !” என்று பொறுப்புகள் அழுத்திய இளமைக்காலத்தை பற்றி குறிப்பிட்டார்


ஒரு லட்சம் பேர் கொல்கத்தாவில் இவரின் இசை நிகழ்வை காணக்கூடினார்கள். ரங்கீலா படத்தில் இசையமைத்த பொழுது தமிழர்கள் ஹிந்தியில் கோலோச்ச முடியாது என்பதை உடைத்து இவர் பெயர் வந்தாலே கைதட்டி கூத்தாடுகிற மாயத்தை அங்கே செய்தது அவரின் இசை.

இளம் வயதில் ‘சினிமா பாரடைஸோ’ படத்தைப் பார்த்து, அந்தப் படத்தின் இசையைப் போல ஒரே ஒரு படத்திற்காவது இசை அமைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்.

பி.எம்.டபிள்யு கார்களில் விருப்பம் உண்டு. இசையமைப்பதை தாண்டி வீடியோ கேம்ஸ்களில் ஆர்வம் அதிகம்.

தொலைக்காட்சி விளம்பரப் படங்களுக்கு இசை அமைக்க ஆரம்பித்தார். அப்போதுதான், இயக்குனர் மணிரத்னம் மூலம் ‘ரோஜா’ பட வாய்ப்பு வந்தது. அதற்காகக் கிடைத்த சம்பளம் 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே. அந்த பணத்தை சில மணிநேரங்களில் விளம்பரங்களில் ரஹ்மானால் சம்பாதித்திருக்க முடியும் என்றாலும் அற்புதமான வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார்.

சின்ன சின்ன ஆசை பாடலை இசையமைத்து அன்னையிடம் போட்டு காண்பித்தார். அவர் கண்ணீர் விட்டு அழுதார் ,”பிடிக்கலையா அம்மா ?” என்று கேட்டார் ரஹ்மான். பிடிக்கலையா அம்மா ?” என்று ரஹ்மான் அதிர்ந்து கேட்க ,”ரொம்ப நல்லா இருக்கு,என்னமோ பண்ணுது இந்த பாட்டு என்னை எல்லாருக்கும் இது பிடிக்கும் பாரு கண்டிப்பா !”என்று சொன்னார் அவரின் அம்மா“காதல் ரோஜாவே பாட்டை அதிகாலை மூன்று மணிக்கு கேட்டுவிட்டு சவுண்ட் இன்ஜினியர் கண்ணீர் விட்டு அழுதது மறக்கவே முடியாத அனுபவம் ” என்றும் பதிவு செய்திருக்கிறார்.



ரோஜா’ படத்துக்கு இந்தியாவின் சிறந்த இசை அமைப்பாளர் விருதை மத்திய அரசு வழங்கியது. அமெரிக்காவின் டைம் பத்திரிகை, கடந்த நூற்றாண்டின் உலகின் தலை சிறந்த 10 இசைக் கோர்வைகளில் ஒன்றாக ‘ரோஜா’வை அறிவித்தது. ‘மெட்ராஸின் மொசார்ட்’ எனவும் பட்டம் சூட்டியது.

‘பம்பாய்’ படத்தின் பாடல் கேசட்டுகள், அப்போதே 120 லட்சம் பிரதிகள் விற்றன. படத்தின் தீம் இசை, மூன்று வெவ்வேறு படங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சாதனை உலகின் வேறு எந்தப் படத்திற்கும் இல்லை.

1997-ல் இந்தியாவின் விடுதலைப் பொன் விழாவுக்காக உலகப் புகழ் பெற்ற சோனி நிறுவனம், ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது. அப்படி உருவானதுதான் ‘வந்தே மாதரம்’ இசை ஆல்பம்.

ரஹ்மானுக்கு பழையதை மறக்கிற பழக்கம் கிடையாது.எவ்வளவோ முன்னேறினாலும் தான் முதலில் உபயோகித்த கீபோர்டை இன்னமும் வைத்து இருக்கிறார் .இன்னமும் தன் பள்ளிக்கால நண்பர்களை சந்திக்கிற பழக்கம் உண்டு.

இளம் வயதில் வறுமையில் வாடிய நினைவுகளின் அடையாளமாக இன்னமும் தானாக நகைகளை அணிய மாட்டார்

ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுவதற்கு முன் எப்படி உணர்கிறீர்கள் என கேட்டபொழுது “எனக்கொரு அன்னை இருக்கின்றாள்” என்றார்.அதாவது நான் இந்த விருதை வென்றாலும் அல்லது வெல்ல முடியாமல் போய் விட்டாலும் என் அன்னையின் அன்பு மாறப்போவது இல்லை .அது போதும் எனக்கு என்றார் ரஹ்மான்

‘அடுத்து ஆஸ்கர்தான்’ என 10 வருடங்களுக்கு முன்பே இயக்குனர் சுபாஷ் காய் சொன்னார். பிறகு, உலக அளவில் பம்பாய் ட்ரீம்ஸ் எனும் இசை நிகழ்ச்சி, மைக்கேல் ஜாக்சனோடு இணைந்து, ‘மைக்கேல் ஜாக்சன் அண்ட் ஃப்ரெண்ட்ஸ்’, சீன மற்றும் பிரிட்டிஷ் படங்களுக்கு இசை எனப் பல வாய்ப்புகளை வெற்றிகளாக மாற்றினார். அப்படி வந்ததுதான், ‘ஸ்லம்டாக் மில்லியனர்’. ஒரே ஒரு மின் அஞ்சலில் ரஹ்மானை புக் செய்தார், இயக்குனர் டோனி பாயல். ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்கு ஆஸ்கர்கள் குவிய, ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ எனப் பணிவோடு ஆஸ்கர் மேடையில் அன்னைத் தமிழில் பேசினார்.

அமைதி மற்றும் தனிமை விரும்பி. அமைதி ஆழ்மனதின் குரலை இன்னும் தெளிவாக கேட்க வைக்கிறது ; எரிச்சல்படுத்தும் சத்தம் உண்டு செய்யும் பலர் இருக்கும் உலகில் அமைதி தான் ஒரே இன்பம் என்பது ரஹ்மானின் எண்ணம்
‘வெறுப்புக்குப் பதிலாக நான் அன்பு வழியைத் தேர்ந்து எடுத்தேன்’ என்பார். எல்லோரையும் அன்பு செய்யுங்கள் எனும் சூஃபி தத்துவத்தில் ஈடுபாடுகொண்டவர். உலக அமைதிக்காக ‘வி ஆர் தி வேர்ல்டு’ எனும் இசைப் பாடலை மைக்கேல் ஜாக்சன் இசை அமைக்கச் சொன்னார். அந்தப் பாடலைக் கேட்பதற்குள், அவர் மரணமடைந்தது சோகமான நிகழ்வு.

ரஹ்மான் நன்றாக மிமிக்ரி செய்வார், வைரமுத்து போல மிமிக்ரி செய்வதில் விருப்பம் அதிகம். பெரும்பாலும் இரவு நேரங்களில் இசை அமைப்பார். வீட்டில் பிள்ளைகள் தூங்கும் வரை அவர்களோடு இருந்துவிட்டு, பிறகு இசை அமைக்கப்போகிற ஸ்வீட் அப்பா. குழந்தைகள் மீது பெரிய அன்பு. ஒரு சுவாரசியமான செய்தி. இவருக்கும் மகன் அமீனுக்கும் ஒரே தேதியில்தான்
பிறந்த நாள்.

ரஹ்மான் லதா மங்கேஷ்கரின் பெரிய விசிறி. “லதாஜி என்னுடைய இசையமைப்பில் பாடினால் கேட்டுக்கொண்டே இருப்பேன் அது என்னுடைய இசை என்பதற்காக இல்லை ! அவர் பாடியிருக்கிறார் என்பதால் அதில் மூழ்கிப்போவேன்” என்று சொன்னார் இசையை… ஏழை மற்றும் திறமைசாலி மாணவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு, பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக இசைப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். ”இந்தப் பள்ளியில்தான் என் கனவுகள் உள்ளன. இங்கே இருந்து சிறந்த பல இளைஞர்கள் வரவேண்டும் என்பதே என் ஆசை” என்பார்.

வெற்றியை தலைக்கு போகவிடமாட்டார். கொஞ்சம் புகழுடைய சாதாரண ,மனிதன் நான் என்பார். ஈகோ என்பதை ‘edging god out !’ என்று அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்.வெற்றி மட்டுமே படைப்புத்திறனுக்கு காரணமில்லை. இசையின் ஒருமுகம் மற்றும் அதன் மீதான காதல் தான் என்னை செலுத்துகிறது. இறைவனின் எல்லையற்ற கருணையும் நான் இயங்க முக்கிய காரணம் !” என்பது ரஹ்மானின் வாக்குமூலம்...

Sunday 5 January 2014

தோல்விக்கு நன்றி சொல்!



ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் ஏதாவது ஒரு இலக்கை நோக்கியே பயணம் செய்து கொண்டிருக்கிறான். இவை குறுகிய கால இலக்காகவோ அல்லது நீண்ட கால இலக்காகவோ இருக்கலாம். இருந்தபோதிலும், அவற்றிற்கேற்ப அவன் சில இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டியுள்ளது. எனினும் அவற்றில் சிலர் மட்டுமே வெற்றி பெற்று உயர்ந்து நிற்க முடிகிறது. பலர் வெற்றிப்பாதையில் வரும் தடைகளை எண்ணி மனம் துவண்டு தனது குறிக்கோள்களைக் குறுக்கிக் கொள்வது அவர்களின் தன்னம்பிக்கையின்மையையே காட்டுகிறது. எவ்வித தடை வருமாயினும் சிலர் குறிக்கோள்களை விடா முயற்சியுடன் அடைய முனைவதே தன்னம்பிக்கையாகும்.


வெற்றியாளர்களில் இருவகை, ஒன்று வெற்றிக்கான அடிப்படை வசதிகள், அனைத்தும் கொடுக்கப்பட்டவர்கள், மற்றொன்று வெற்றிக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் உருவாக்கி அதில் வெற்றி காண்பவர்கள். இவற்றில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்களே மேலோங்கி நிற்பவர்கள். ஏனென்றால், இவர்களுக்கு எந்த வசதியும் எந்த ஒரு நபரின் உதவியுமின்றி, தனது தன்னம்பிக்கையை மட்டும் மூலதனமாக வைத்துச் செயல்படுவார்கள்.


இதற்கு ஒரு உளவியல் காரணமும் உண்டு. பல சாதனையாளர்கள் தங்கள் கடந்த வாழ்வில் ஒரு வேளை உணவிற்குக் கூட எதுவுமில்லாமல் கஷ்டப்பட்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். உளவியல் ரீதியாகச் சொல்லப்போனால், தேவை என்ற ஒன்று உருவாகும் போது ஏதாவது ஒரு இலக்கை அடைய வேண்டுமென்ற உந்துதல் பிறக்கும், அந்த இலக்கை அடையும் வரை அந்த உந்துதல் நீடிக்கும். இலக்கை அடைந்துவிட்டால் உந்துதலின் வேகம் குறைந்து கடைசியில் நின்று விடும்.


 இது நமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் முதல் வானளாவிய சாதனைகள் வரை இந்த அடிப்படையிலேயே நமது மனம் செயல்பட்டு வருகிறது. தேவை என்ற ஒன்று மட்டும் மீண்டும் மீண்டும் தோன்றக்கூடிய ஒன்று, பிறந்தது முதல் சாகும் வரை ஏதாவது ஒரு தேவை நம்மை ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கிறது. இதனையே Motivational Process என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.


எனவே, தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒவ்வொரு மனிதனும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். நிறைவேறும் வரை போராடிக் கொண்டிருக்கிறான். இந்த இலட்சியப் போராட்டத்தில் சிலர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். பலர், இடர்வரும் தடைகளால் மனம் துவண்டு குறிக்கோளை விட்டுவிடுகிறார்கள். தன்னம்பிக்கை இழந்து, மனச்சோர்வடைந்து “எனது விதி”, “என்னால் இயலாது”, “சூழ்நிலைக்காரணம்” என்றெல்லாம் புலம்பும் குணத்தைக் காணலாம்.


இவை அனைத்திற்கும் காரணம், இலட்யத்தை அடைவதற்கான குணாதிசயங் களை வளர்த்துக் கொள்ளாமையே. அவரவருக் கேற்ப துறையை தேர்ந்தெடுத்துக் கொண்டு அதில் தன்னுடைய முழு ஈடுபாட்டையும், உடல் உழைப்பையும், தன்னம்பிக்கையோடு உட்படுத்தினால் வெற்றி நிச்சயம்.


இவை எல்லாவற்றிற்கும் மேலாக தோல்வியைக் கண்டு துவண்டு போகாத குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு இலட்சியப் பயணத்திலும், தோல்வி யென்பது இல்லாமல் வெற்றி பெற இயலாது. இடைவரும் தடைகளால் தோல்வியும், சரிவும் வரும்போது அவற்றைக் கண்டு மனம் தளரா மலும் தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் மட்டுமே வெற்றி நிச்சயம். வெற்றியாளர்களைப் பட்டியலிட்டால், தோல்வியே அவர்களை உந்திய மாபெரும் சக்தியாக இருந்திருக்கும். அவர்கள், தோல்வியையும், சரிவுகளையும், வெற்றிப்படிகளாகவும், சிறந்த அனுபவங் களாகவே அனுசரித்திருக்கிறார்கள்.

ஆறுதல் சொல்வது எப்படி ?




உங்கள் நண்பரோ மிகவும் நெருங்கியவரோ மனம் உடைந்து போயிருக்கும் நேரத்தில் அல்லது மனம் சோர்வுற்றிருக்கும் போது அவர்களை ஆறுதல் படுத்துவது கொஞ்சம் கஷ்டமான காரியம் தான். அந்த நேரம் என்ன சொல்லித் தேற்றுவது, எப்படி நடந்து கொள்வது என்று நீங்கள் குழம்பிப் போகலாம். நல்ல விதமாக ஒருவரை எப்படித் தேற்றுவது என்று பார்ப்போமா?.

• "அட, என்ன எப்ப பார்த்தாலும் ஒரே கவலையா இருக்கே, கவலையை விட்டுத் தள்ளுப்பா, இதெல்லாம் சகஜம் தான்" என்று கவலையை விடச்சொல்லி உபதேசம் செய்யாதீர்கள். கவலை அல்லது மனச் சோர்வை யாரும் வேண்டுமென்று கட்டிப் பிடித்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். அது அவர்களுக்கு ஏற்படும் உணர்வு, அவர்கள் அனுபவப்படுவது.

காய்ச்சல் தலைவலி போன்ற ஒர் உடல் நலக் குறைவு. அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடப்பவரைப் போய் என்ன கை காலெல்லாம் வீங்கியிருக்கே எல்லாத்தையும் உதறித் தள்ளிவிட்டு எழுந்திரு என்று கூறுவது எவ்வளவு அபத்தம். மனச் சோர்வு என்பது உண்மையிலேயே நோய் தாக்குவதைப் போன்ற ஒரு பாதிப்பு. மனம் உடைந்து போனவர் தன்னைத் தானே உடனே அதிலிருந்து மீண்டு சந்தோசமாக ஆகிவிட முடியாது. காலம் தான் ஆற்ற முடியும். மருத்துவமும் தேவைப்படும்.

• மனம் உடைந்து போயிருப்பவருக்கு தன் துன்பங்களை யாரிடமாவது சொல்லி அழத்தோன்றும். அதைக் கேட்க காதுகள் தான் தேவை. எனவே கேளுங்கள் நன்றாக செவி சாய்த்து கேளுங்கள். அவரது கவலை சிலவேளை உங்களுக்கு அற்பமாக தெரியலாம். அவருக்கு அதன் பாதிப்பு ஆழமாக இருக்கலாம். எனவே எவ்வித அலட்சியமும் காட்டாமல் உண்மையாகவே பரிவோடு அவர் சொல்வதை கேளுங்கள்.

• பொதுவாக உளம் சோர்ந்திருப்பவர்கள் தனிமையை விரும்புவார்கள். தனிமை நிலமையை இன்னும் மோசமாக்கி விடக்கூடும். எனவே அவர்களைக் கொஞ்சம் எதாவது செயல்களில் ஈடுபடத் தூண்டுங்கள். நீங்களும் அவர்களோடு சேர்ந்து செயல் படுங்கள். கவலை தரும் நினைவுகளை கொஞ்ச நேரம் மறந்திருக்க உதவுங்கள்.

• வெளியே எங்காவது காலாற நடந்து விட்டு வரலாம். எப்போதும் ஓரிடத்தில் முடங்கிக் கிடக்காமல், பீச், பார்க் என்று போகலாம். சேர்ந்து பஸ் பயணம் மேற்கொள்ளலாம். புதிய விஷயங்களில் மனம் ஈடுபடும் போது மனம் கவலைகளை சற்று மூலைக்குத் தள்ளி விடும்.

• சுத்தமான ஆடைகள் அணிவது, முடிவெட்டி கொள்வது, தினமும் ஷேவ் செய்து கொள்வது, பிறருடன் பழகுவது போன்றவற்றை தூண்டுங்கள்.

• அவர்களை ஊக்கப்படுத்துங்கள் ஆனால் எதையும் திணிக்காதீர்கள், வற்புறுத்தாதீர்கள், நிர்பந்தப் படுத்தாதீர்கள். அப்படிச் செய்வது அவர்களுக்கிடையே நமக்கு இடைவெளி உண்டாக்கி விடும். நம்மை விட்டு விலகியிருக்கத் தூண்டும். உங்கள் அழைப்பை, ஆறுதலை, ஆலோசனைகளை அவர்கள் ஏற்க மறுத்தால் வற்புறுத்தாதீர்கள். அவர்களுக்கு கொஞ்சம் டைம் கொடுத்து இன்னொரு நாள் மிகவும் தன்மையாய் எடுத்துக் கூறுங்கள்.

• நன்றாக சாப்பிட, நன்றாக தூங்க உதவுங்கள்.

• புகை, போதைப் பொருட்களை நாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

• மனச்சோர்வு அகற்ற நிறைய மருந்துகள் உண்டு. மருத்துவ உதவி எடுத்துக் கொள்ளத் தூண்டுங்கள். சரியான உளவியல் மருத்துவர்களிடம் கூட்டிச்சென்று தக்க ஆலோசனையும் சிகிட்சையும் பெற உதவி செய்யுங்கள்.

• பிரச்சனைகள் ஏதுமற்ற அமைதியான சூழலை உருவாக்கிக் கொடுங்கள். வீட்டில் மேலும் மன அழுத்தங்கள் உருவாக்கும் நிலைமை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

• அவர்களது தினசரி வாழ்க்கையில் ஒரு சிட்டையை, ஒழுங்கை அமைத்துக் கொள்ள உதவுங்கள்.

• கவலைக்குக் காரணத்தை ஞாபகப்படுத்தும் பொருட்கள், இடங்கள், மனிதர்களை விட்டு விலகி இருப்பது கவலையை விரைவில் மறக்க உதவும். கவலையை மறக்க வருந்தி முயற்சிக்கக் கூடாது. நினைவுகளில் இருந்து தானாக கவலை அழிய வேண்டும்.

• மனச் சோர்வு வாழ்க்கையில் நம்பிக்கை இழக்கச் செய்து விடும்.எனவே நம்பிக்கையூட்டுங்கள்.

• எது அவர்கள் மனதை கொஞ்சம் இலேசாக்குகிறதோ அதில் அதிகம் ஈடுபட தூண்டுங்கள். உள்ளத்தை அதிகம் சுறு சுறுப்பாக வைத்திருக்கும் எதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள உதவுங்கள். கம்யூட்டர், இணையம், புதிய நட்பு, கவலை மறக்கச்செய்யும்.

• உலகத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை மனசோர்வு சிதைத்து விடும். காலமும் சரியான சிகிட்ச்சையும் நிச்சயம் அதை மீட்டுத்தரும்.

ஒரு திடீர் மரணமோ, அதிகப்படியான சோகமோ மூளையில் கார்டிகோட்ரோபின் எனும் அமிலத்தை சட்டென சுரக்கவைத்து மூளை முழுவதும் பரப்பி விடுகிறது. இந்த அமிலமே அதிகப்படியான மன அழுத்தத்தையும், தாங்கொண்ணா துயரத்தையும் தருவிக்கிறது என்று அட்லாண்டாவின் எமோரி பல்கலைக்கழக மருத்துவர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர். உறவுகளை இழக்கும் போது உண்டாகும் அதிகப்படியான வலியைக் குறைக்கவும், கடும் துயரத்திலிருந்து விரைவில் மீளும் வழியைக் காட்டவும் இந்த கண்டுபிடிப்பு உதவும்.

துயரங்கள் தவிர்க்க இயலாதவை, அவற்றைத் தாங்கும் மனம் எளிதில் அமைந்து விடுவதில்லை என்பது இழப்பைச் சந்தித்தவர்களால் புரிந்து கொள்ள முடியும். அத்தகைய துயரங்களின் அழுத்தத்தை மருந்து, மாத்திரைகள் வாயிலாக குறைக்க முடியுமெனில் அதுவும் நல்ல செய்தி தான்.

சோர்வை நீக்கும் உணவு வகைகள்:


சோர்வை நீக்கி மூளைக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தருவதற்கு சோளம், புரதம் அதிகம் உள்ள உருளைக்கிழங்கு, ஃபோலிக் அமிலம் உள்ள முட்டை கோஸ், சப்பாத்தி, தயாமின் என்ற வைட்டமின் நிறைந்த கொண்டைக்கடலை, இரும்பு சத்து நிறைந்த பேரீச்சை, மொச்சை, பீட்ரூட் முதலிய உணவுகள் அடிக்கடி உணவில் இடம் பெறச் செய்வது நல்லது.

நீங்கள் நல்ல நுகர்வோரா?




ஒரு பிரபலமான பிஸ்கெட் நிறுவனம். அவர்கள் தயாரித்த 50 கிராம் இருக்க வேண்டிய பிஸ்கெட் பாக்கெட் ஒன்று 36 கிராம்தான் இருந்தது. உடனே நாங்கள் நோட்டீஸ் அனுப்பினோம். உடனே நிறுவனத்தில் இருந்து செட்டில்மென்ட் பேசி முடிக்க வந்தார்கள். நாங்கள் ஒத்துக் கொள்ளாமல் வழக்குத் தொடுத்திருக்கிறோம். ஒரு பிஸ்கெட் பாக்கெட்டில் 14 கிராம் பிஸ்கெட் குறைந்தால் என்ன? பெரிய இழப்பா? என்று கேட்கலாம். ஆனால் அந்த ஒரு பிஸ்கெட் பாக்கெட்டைப் போல அந்தப் பேட்சில் தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிஸ்கெட் பாக்கெட்களும் அதே எடையில்தானே இருந்திருக்கும்? அப்படியானால் அந்த நிறுவனத்துக்கு எவ்வளவு லாபம்? நாடு முழுவதும் உள்ள நுகர்வோர்களுக்கு எவ்வளவு நஷ்டம்? வழக்கு இப்போது நடந்து கொண்டிருக்கிறது.


நாடு முழுக்க அதிக வலைப் பின்னல்களை வைத்திருக்கக் கூடிய தொலைபேசி நிறுவனம் ஒன்று ஒரு நுகர்வோருக்கு இண்டர்நெட் இணைப்பு கொடுக்கிறது. அதற்கு ஒரு மோடம் தேவை. அந்த மோடத்தை வேறு ஒரு நிறுவனம் தயாரிக்க, அதை வாங்கி தொலை பேசி நிறுவனத்தின் ஷோ ரூமில் விற்கிறார்கள். இணைப்பு வாங்கிய நுகர்வோர் இண்டர்நெட்டைப் பயன்படுத்த முடியவில்லை. காரணம் அந்த மோடம் வேலை செய்யவில்லை. அவர் தொலைபேசி நிறுவனத்திடம் கேட்டால் மோடம் தயாரித்த நிறுவனத்தில் கேட்கச் சொல்லியிருக்கிறார்கள். மோடம் தயாரித்த நிறுவனத்தில் கேட்டால் தொலை பேசி நிறுவனத்தில் கேட்கச் சொல்லியிருக்கிறார்கள். இப்படியே அலைந்து திரிந்தாலும் இண்டர் நெட் மட்டும் வேலை செய்யவில்லை. ஆனால் வேலை செய்யாத இண்டர்நெட்டுக்கு 4 மாத பில்லை மட்டும் அனுப்பி வைத்துவிட்டது தொலைபேசி நிறுவனம். அந்த நுகர்வோர் எங்களிடம் வந்தார். வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.


சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்களிடம் நோட்டு புத்தகங்களுக்கு மொத்தமாகப் பணம் வாங்கிக் கொண்டு, நோட்டுப் புத்தகங்களைக் கொடுத்தார்கள்.


ஆனால் அந்த நோட்டுப் புத்தகத்தில் விலை (ஙதட) குறிப்பிடப்படவில்லை. நோட்டின் விலை கூடுதலாக இருக்கட்டும். அல்லது குறைவாக இருக்கட்டும். விலை என்ற ஒன்றைப் போட வேண்டாமா? ஒரு பொருளை வாங்குபவருக்கு அதன் விலை தெரிய வேண்டாமா? இதை எதிர்த்தும் வழக்குப் போட்டிருக்கிறோம்.


ஒருவர் மூட்டு வலி என்று மருத்துவமனைக்குப் போனார். அங்கே டாக்டர்கள் எழுதிக் கொடுத்த மாத்திரையை மருத்துவமனை நடத்தும் மருந்துக் கடையில் வாங்கினார். மாத்திரையை வாங்கிச் சாப்பிட்டதும் முற்றிலும் நடக்கவே முடியாமல் போய்விட்டது. காரணம் என்னவென்று பார்த்தால், காலாவதியான மாத்திரையைக் கொடுத்திருக்கிறார்கள். மருத்துவமனையில் போய்க்கேட்டால் அவரை மிரட்டியிருக்கிறார்கள். அதை எதிர்த்தும் வழக்கு போட்டிருக்கிறோம்.


நீங்கள் பேருந்தில் செல்கிறீர்கள். ஓட்டுநர் நீங்கள் இறங்க வேண்டிய இடத்தில் நிறுத்தாமல், அடுத்த நிறுத்தத்தில் நிறுத்துகிறார். நுகர்வோர் என்ற முறையில் நீங்கள் வழக்குப் போட முடியும். ஆனால் உங்களை அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிட்டதற்கு ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த இடத்தில் தான் பலரும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிப்பார்கள். போக்குவரத்து நிறுவனத்துக்கு உடனே கம்ப்ளெயின்ட் பண்ண வேண்டும். அதை உங்கள் கைபேசியில் இருந்தே பண்ணலாம். அது ஓர் ஆதாரமாக இருக்கும். உங்களுடன் பயணம் செய்த சக பயணி ஒருவரின் துணையை நாடி, அவரைச் சாட்சி சொல்லச் சொல்லலாம். இது போன்ற புகார் தெரிவிக்க வேண்டிய எண்களை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


மருந்து வாங்கும்போது, பில் மறக்காமல் வாங்க வேண்டும். மருந்து காலாவதியானதா என்று பார்க்க வேண்டும். அதைவிட முக்கியமானது, பில்லில் மருந்தின் பெயரை எழுதுவதோடு, அந்த மருந்தின் பேட்ச் எண்ணையும் குறிப்பிடச் சொல்ல வேண்டும். அப்படி ஒரு பில்லை வாங்கிக் கொண்டால், ஏதேனும் பிரச்னை என்றால் உடனே வழக்குப் போட முடியும்.


எந்தப் பொருளை வாங்கினாலும் எப்போதும் பில் வாங்க வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள ஙதட விலைக்கே தருகிறார்களா? என்று பார்க்க வேண்டும். கேரண்டி, வாரண்டி கார்டுகளில் கையெழுத்து இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும். இவை எல்லாம் ஒரு நுகர்வோர் என்ற முறையில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டியவையாகும். அப்போதுதான் நீங்கள் ஒரு நல்ல நுகர்வோராக இருக்க முடியும்.

பாரத ரத்னா நெல்சன் மண்டேலா




இனத்தின் விடுதலைக்காகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, சற்றும் தளராமல் தன் இலட்சியத்தில் வெற்றி பெற்ற போராளி, தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா. சென்ற நூற்றாண்டின் கடைசி அறவழிப் போராளியான அவரை இந்த நூற்றாண்டில் உலகம் இழந்துவிட்டது.

தென்னாப்பிரிக்கா நாட்டின் கேப் மாகாணத்தில் உம்டாடா பகுதியில் உள்ள மெவிசோ கிராமத்தில் 1918-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் நாள் பிறந்தார் நெல்சன் மண்டேலா. அவரது அப்பா, காட்லா. அம்மா, நோஸ்கெனி. பிறந்தபோது அவருக்கு வைக்கப்பட்ட பெயர், ரோபிசலா மண்டேலா. ரோபிசலா என்றால் கலகக்காரர் என்று அர்த்தம். பின்னாளில், அவர் உரிமைகளைப் பெறுவதற்கான கலகத்தில் ஈடுபட்டு உலகத்தின் கவனத்தையே தன் பக்கம் ஈர்த்தார்.

மண்டேலாவின் முன்னோர்கள் அப்பகுதி மக்களின் நிர்வாகத் தலைவராக இருந்தவர்கள். அதனால், ராஜ குடும்பத்திற்கு நெருக்கமானவர்களாக இருந்தனர் மண்டேலா குடும்பத்தினர். ராஜ வம்சத்தினர் கையில் நிலப்பகுதி இருந்தாலும் அவர்களையும் ஒட்டுமொத்த தென்னாப்பிரிக்காவையும் வெள்ளைக்காரர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தனர்.

இந்தியாவிலிருந்து வழக்கறிஞராக தென்னாப்பிரிக் காவுக்குச் சென்ற காந்தியடிகள், அங்கு ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தபோது, அவர் கருப்பு நிறத்தவர் என்பதால் வெள்ளைக்கார டிக்கெட் பரிசோதகர் ஒருவர் காந்தியடிகளை ரயிலிலிருந்து கீழே தள்ளியதையும் இதனையடுத்து நிறவெறிக்கெதிராக காந்தியடிகள் தன்னுடைய சத்யாகிரகப் போராட்டத்தை தென்னாப்பிரிக்காவில் தொடங்கியதையும் அறிவோம். அவருடைய போராட்டத்தினால் தென்னாப்பிரிக்காவில் தொழிலாளர்களாக இருந்த ஆயிரக்கணக்கான இந்திய குடும்பத்தினருக்கு உரிமைகள் கிடைத்தன.

தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் அனுபவித்த கொடுமைகளைவிட அதிகமான கொடுமைகளை அந்நாட்டின் பூர்வகுடிகளான கறுப்பின மக்கள் அனுபவித்து வந்தனர்.  அவர்களை அடிமைகள்போல வெள்ளைக்காரர்கள் நடத்தி வந்தனர். மண்டேலாதான் அவரது குடும்பத்தில் முதன்முதலாக பள்ளிக்குச் சென்று படித்தவர். பள்ளியில் இருந்த ஆசிரியைதான் அவரது பெயருக்கு முன்பாக நெல்சன் என்பதைச் சேர்த்தார்.  அந்நாளில், தென்னாப்பிரிக்க மாணவர்களின் பள்ளிப் பதிவேட்டில் ஆங்கிலப் பெயர் இருக்கவேண்டும் என்கிற ஆதிக்க உத்தரவை வெள்ளைக்காரர்கள் விதித் திருந்தனர். அதனால்தான் மண்டேலாவின் பெயருக்கு முன்பாக நெல்சன் என்ற பெயர் சேர்க்கப்பட்டது. தங்கள் சொந்த அடையாளத்தைப் பெயரில்கூட காப்பாற்ற முடியாதவர்களாக தன் இன மக்கள் இருப்பதை பள்ளிப் பருவத்திலேயே உணர்ந்தார் மண்டேலா.  இரு சகோதரி களுடன் வளர்ந்த மண்டேலா, கிராமப்புறத்தில் கால்நடை களை மேய்ப்பார். சக வயது நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பார். தெம்பு அரண்மனையில் சட்ட-நிர்வாகப் பொறுப்புகளில் ஈடுபடவேண்டும் என்ற ஆர்வம் அவருக் கிருந்ததால், பள்ளிப்படிப்புக்குப் பிறகு தன் ஆர்வத்திற்கேற்ற உயர்படிப்புகளை நாடினார்.


பி.ஏ. பட்டம் பெற்றதுடன், தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரமான ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பும் பயின்றார். கல்லூரி வாழ்க்கையின் போது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் வால்டர் சிசுலுவுடன் மண்டேலாவுக்கு அறிமுகம் ஏற்பட்டது. அதுபோல, கம்யூனிச இயக்கத்தவர்களுடனும் தொடர்பு ஏற்பட்டது. கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்கள், விளாடிமிர் இல்யீச் லெனினின் புரட்சிகர செயல்பாடுகள் அவரைக் கவர்ந்தன. எனினும் தென்னாப்பிரிக்காவில் வர்க்க பேதத்தைவிட நிற-இன பேதமே சிக்கல்களுக்கு காரணமாக இருப்பதாக உணர்ந்த மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர் பிரிவில் இணைந்து உரிமைப் போராட்டங்களில் பங்கேற்றார். கறுப்பின மக்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தது. பொது இடங்களில் வெள்ளை நிறத்தவர் மட்டுமே நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இவற்றையெல்லாம் எதிர்த்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் போராடிவந்தது.

இயக்கப்போராட்டத்தில் இணைந்திருந்த எவிலின் என்ற பெண்ணை 1944-இல் மண்டேலா திருமணம் செய்து கொண்டார். போராட்டக்களங்களில் தொடர்ந்து பங்கேற்றார். 1947-இல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர் பிரிவின் தலைவரானார். பின்னர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவராகவும் இளம் வயதிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டார் மண்டேலா. அவருடைய போராட்டங்கள் காந்தியடிகளைப் போல அறவழியில் அமைந்தன. பெருமளவில் மக்கள் திரண்டனர். இதனால் அவர் மீது தேசத்துரோக சதி குற்றச்சாட்டை சுமத்தி 1956-இல் கைது செய்தது தென்னாப்பிரிக்க வெள்ளை அரசு. நான்காண்டு சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு  அந்த வழக்கை அரசு கைவிட்டது. இதனிடையே, அவருடைய திருமண வாழ்வில் முறிவு ஏற்பட்டது. பின்னர், வின்னி என்பவரை மறுமணம் செய்துகொண்டார்.

1960-ஆம் ஆண்டில் வெள்ளையர்களுக்கு சிறப்பு கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) வழங்க தென்னாப்பிரிக்க வெள்ளை அரசு முடிவு செய்ததை எதிர்த்த கறுப்பின மக்கள் போராட்டம் நடத்தினர். ஷார்ப்வில்லி நகரத்தில் மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 69 பேர் கொல்லப்பட்டனர். இனி, அறவழிப் போராட்டம் பலன் தராது என்ற முடிவுக்கு வந்த மண்டேலா ஆயுதப் போராட்டத்திற்குத் திரும்பினார்.  1961-இல் இனவெறிக்கு எதிரான முதலாவது ஆயுத தாக்குதல் மண்டேலா தலைமையில் நடந்தது.

தென்னாப்பிரிக்க வெள்ளை அரசின் ராணுவ மையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. மண்டேலாவைப் பிடிக்க வெள்ளை அரசு தீவிரமானது. அவர் தலைமறைவானார். அவரைத் தேடுவது என்ற பெயரில் கறுப்பின மக்களைத் துன்புறுத்தியது அமெரிக்கா போன்ற வெளிநாடுகள் மூலமாகவும் நெருக்கடிகள் உருவாயின. மண்டேலா தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார். 1962-ஆம் ஆண்டு அவரது இருப்பிடத்தை, மாறுவேடத்தில் சென்ற காவல் துறையினர் கண்டுபிடித்து கைது செய்தனர். அவர் உள்பட 10 முக்கிய தலைவர்கள் மீது புரட்சி, சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 1963-இல் தொடங்கி 1964 வரை நடந்த இந்த விசாரணையின் முடிவில் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

ராபன் தீவில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டு, பாறைகளை உடைத்தல் போன்ற கடுமையான வேலை களுக்குட்படுத்தப்பட்டார். போராட்டத்தைக் கைவிட்டு, மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்வதாக அரசாங்கம் கூறியது. அதற்கு மண்டேலா மறுத்துவிட்டு சிறைவாசத்தைத் தொடர்ந்தார். 1964-லிருந்து 1982 வரை 18 ஆண்டுகள் அவர் அந்த சிறையில் அடைபட்டிருந்தார். 1982 முதல் போல்ஸ்மோர் சிறையிலும், 1988-லிருந்து விக்டர் வெர்ஸ்டர் சிறையிலும் அடைக்கப் பட்டார். அவர் சிறைப்பட்டிருந்தபோதும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்தன. காந்திய வழியே தனது மக்களுக்கான  சிறந்த போராட்ட வழி என்பதை மண்டேலா உணர்ந்தார். அதன்படியே போராட்டங்கள் தொடர்ந்தன.

மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என உலகநாடுகள் அழுத்தமாகக் குரல் கொடுத்தன. தென்னாப்பிரிக்க வெள்ளை அரசுக்கு நெருக்கடி உருவானது. தென்னாப்பிரிக்க அதிபராக அப்போது          டி கிளார்க் இருந்தார். அவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கினார். இதனைத் தொடர்ந்து 27 ஆண்டுகால சிறைவாசத்துக்குப்பிறகு 1990-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் நாள் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார். தலைப்போராட்டத்தில் இத்தனை ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தலைவர் உலகில் வேறு யாருமில்லை.

1994-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக் காவில் மக்களாட்சி முறையிலான தேர்தல் நடைபெற்றது. அதில் மண்டேலா வெற்றிபெற்று அதிபரானார். முன்னாள் அதிபர் டி கிளார்க்கை துணை அதிபராக பதவியேற்கச் செய்ததுடன், அவரை அதிபர் மாளிகையில் தங்கவும் அனுமதித்தார் மண்டேலா. பகைவருக்கும் அருளும் நெஞ்சம் கொண்ட மண்டேலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இப்பரிசு அவருக்கும் டி கிளார்க்குக்கும் சேர்த்து வழங்கப்பட்டது. இந்திய பிரதமராக வி.பி.சிங் இருந்தபோது நம் நாட்டிற்கு வருகை தந்த நெல்சன் மண்டேலாவுக்கு பாரத ரத்னா விருதும் அளிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்க அதிபரான மண்டேலா அந்நாட்டை வளர்ச்சிப்பாதையை நோக்கி நகர்த்துவதற்கு கடும் சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. அப் பணிகளை மேற்கொண்டார். 1999-இல் மீண்டும் தேர்தல் வந்தபோது, இரண்டாம் முறையாக அதிபராக மாட்டேன் என்று சொல்லி கட்சியின் அடுத்த கட்டத் தலைவர்களுக்கு வழிவிட்டார். இதனிடையே வின்னியுடனான அவருடைய திருமண வாழ்க்கையும் முறிவு ஏற்பட்டு, கிரேசா என்பவரை மணம் செய்துகொண்டார் மண்டேலா.

தென்னாப்பிரிக்க மக்களின் உரிமைகளுக்கான அவருடைய செயல்பாடுகள் தொடர்ந்தன. எனினும் மிக நீண்டகால சிறைவாசம், அங்கு அனுபவித்த சித்ரவதைகள், அதனால் ஏற்பட்ட உடல் உபாதைகள் இவற்றின் காரணமாக மண்டேலாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவர் 2013-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் நாள் மரணமடைந்தார்.
மனிதகுலத்தின் விடுதலைக்கானப் போராட்டங்கள் ஓய்வதில்லை. விடுதலைக்காகப் பாடுபட்டவர்களும் வரலாற்றிலிருந்து அழிவதில்லை.

தடைகளே ஓடி வா!








தடைகளே ஓடி வா!

1.எங்கு தடைகள் உள்ளதோ அந்த இடத்தில் தான் நாம் அடைய வேண்டிய இலக்கு இருக்கின்றது என்று தெரியுமா?.வாழ்க்கையின் பல கட்டங்களில் பல்வேறு சூழ்நிலைகளை நாம் கடந்து வர வேண்டியுள்ளது,நாம் ஒன்றை நடக்கும் என்று எதிர்பார்ப்பது அங்கு நடக்கவில்லை என்றால் அங்கு தடை உள்ளது.தடைகளை கண்டு அணைவரும் கொஞ்சம் கலங்குவது நிஜம்.அந்த தடைகளை எப்படி எதிர் நோக்குவது?


2.தடைகள் என்று நாம் நினைக்கும் எந்த விசயமும் மோசமானதல்ல,தடைகள் தான் வாழ்க்கை,அந்த தடைகளை நாம் எதி நோக்கவில்லை என்றால் வாழ மறுக்கின்றோம் என்றுதான் பொருள்.நமது வாழ்க்கையை நாம் கொஞ்சம் பின்னோக்கி பார்த்தோம் என்றால் எந்தெந்த காலகட்டங்கள் எல்லாம் நாம் கடினமானது என்று அதனை எதிர் நோக்கியிருந்தோமோ, அந்த கால கட்டங்கள் மட்டும் தான் நம் நினைவில் இருக்கும் .


3.நாம் இன்பமான காலங்கள் என்று நினைத்த கால கட்டங்கள் எல்லாம் கால ஓட்டத்தில் மறந்து போகும் .வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொகுப்பு என்பது நம் அணைவருக்கும் தெரியும் .அந்த அனுபவங்களில் எஞ்சி இருப்பது நாம் போராடிய காலங்கள் தான்.சரி இந்த அனுபங்களை எப்படி பெறுவது?தடைகளை எப்படி எதிர் நோக்குவது.


4.நாம் தடைகள் என்று எதை நினைக்கின்றோமோ அதில் தான் நமது வெற்றி புதையல் இருக்கின்றது என்பதை நாம் முதலில் உறுதியாக நம்ப வேண்டும் ,ஏன் என்றால் இது தான் உறுதியான பிரபஞ்சவிதி.தடைகள் ஒரு விசயத்தில் இருக்கின்றது என்றால் ,தடைகளுக்கு அப்பால் உள்ள வெற்றி புதயலை அடைய நாம் நம்மை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது முதல் பாடம்.சரி தகுதி என்றால் என்ன ?தடைகளை மீண்டும் மீண்டும் எதிர்கொள்வது தான் முதல் தகுதி,நாம் தடைகளை கண்டு அஞ்சுவதோ,அதனிடம் இருந்து ஓடி விடுவதோ கூடாது.


5.தைரியமாக தடைகளை அது எப்படி இருந்தாலும் ,நம்மிடம் அதனை எதிர் கொள்ளும் தகுதி இல்லாவிட்டாலும் கூட நாம் எதி கொள்ள கொள்ள அந்த தடைகள் தனக்குள் ஒழித்து வைத்திருக்கும் அந்த ரகசிய வழிகளை நமக்கு உணர்த்தியேதீரும் .எந்த விசயத்திலும் தோல்வியடைந்தவர்கள் தடைகள் உணர்த்தும் பாடங்களை அறியும் முன்பே அதனை விட்டு வெளியேறி விட்டவர்கள்தான்.


6.ஒருவர் நினைக்கிறார் எனக்கு என் வாழ்வில் எந்த தடைகளும் இல்லை என்றால் ,இது தவறு உடனே நீங்கள் உங்களால் முடிந்த வரை நீங்களாகவே சவாலான சூழ்நிலைகள் என்று நீங்கள் நினைக்கும் சூழ்நிலைகளை உருவாக்குங்கள் ,அவைகளை எதிர் கொள்ளுங்கள் வாழ்க்கையை வாழுங்கள் ,இல்லையென்றால் உங்களுக்கு நினைத்துப் பார்க்க கடைசி காலத்தில் மட்டுமல்ல நிகழ்காலத்திலும் வாழ்க்கை என்று ஒன்று இருக்காது.

Saturday 4 January 2014

மரணத்தின் மறுபக்கம்...!




எனக்கும் மரணத்தைப் பற்றிப் படிப்பது என்றால் அலாதிப் பிரியம்.  பிறப்பு இயற்கை என்பது போல இறப்பும் இயற்கையே.  என்னைப் பொறுத்தவரையில், மரணம் என்பது ஒரு மகிழ்ச்சியான விடயமே.  மரணம் என்பது நாம் பிரபஞ்சத்தின் ஒரு நிலையை விடுத்து அடுத்த நிலைக்குச் செல்வதாகும்.  எமது வாழ்வின் விளைவாகவே எமது மரணமும் இருக்கும் என்பது எனது நம்பிக்கை.  எமது வாழ்வில் நாம் செய்யும் நன்மை, தீமைகளிலேயே அது தங்கியிருக்கும்.

  எமது வாழ்வு எப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கிறதோ அதேபோல் மரணத்தின்போதான மரணத்தின் பின்னான அனுபவமும் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருப்பதைக் கட்டுரைகள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.  எமது வாழ்வில் நாம் செய்யாத கடமைகள் இருப்பின், மரணத்தின் பின்பும் நாம் இங்கேயே சுற்றிக் கொண்டிருப்போம் அல்லது மீண்டும் பிறப்பெடுப்போம்.  எமது பிறப்புகளில் நாம் செய்யும் நன்மை, தீமைகள் எமது கடைசிப் பிறப்புவரை தொடரும்.   நாம் பிரபஞ்சத்தின் Cycleஐ முடிக்கும்வரை எமது பிறப்புகளும் தொடரும்.

இந்தப் பிரபஞ்சம் ஐம்பூதங்களாலும் இயக்கப்படுகிறது.  பிரபஞ்சத்திலிருக்கும் ஐம்பூதங்களும் எமது உடலுக்குள்ளும் உள்ளது.  இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு ஐம்பூதங்களால் இயக்கப்படுகிறதோ அதைப்போலவே எமது உடலும் ஐம்பூதங்களால் இயக்கப்படுகிறது.  இவ் ஐம்பூதங்களை எம்மாலும் எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும்.

 இவ் ஐம்பூதங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர்கள்தான் சித்தர்களும் முனிவர்களும்.  சித்தர்கள், முனிவர்கள் உண்மையிலேயே விஞ்ஞானிகள்.  ஆனால், அதனை ஏற்க மறுத்த, விளங்கிக் கொள்ள முடியாத மேற்கத்தேயர்கள் இவர்களின் சித்தாந்தங்களை வேண்டுமென்றே மறைத்தனர், மறுத்தனர்.  எமது சித்தாத்தங்களில் சொல்லாத விடயமே இல்லை என்று சொல்லலாம்.

நாம் வாழ்ந்தாலும் இறந்தாலும் இந்தப் பிரபஞ்சத்திற்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்போம்.  ஆகவே, இறப்பு என்பதும் அதன் பின்னான நிகழ்வுகளும் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியே.  எமது வாழ்விற்கு எவ்வாறு நிகழ்வு நிலைகள் இருக்கின்றனவோ அதேபோல்தான் மரணத்திற்கும் அதற்குப் பின்னரும் உண்டு.

  சுனாமியின்போதும், இயற்கையாக நடைபெறும் அனர்த்தங்களின்போதும் விலங்குகள் தப்பி விடுகின்றன.  மனிதன்தான் அதிகம் இழப்புகளைச் சந்திக்கின்றான்.  இதற்குக் காரணம் நாம் உள்ளுணர்வுகளில் கவனம் செலுத்துவதில்லை.  இவ்வாற்றல்கள் எமக்கு இருப்பதாகவே நாம் நினைப்பதில்லை.  (We don’t sense them). முயற்சி செய்தால் இச்சக்திகளை நாம் மீண்டும் பெறலாம்.

உறவுகளின் இணைப்பை விரிவுபடுத்துவோம்.!



இன்றைய சமுதாயத்தில் எத்தனையோ பேர் தந்தை, தாய், சகோதரர், சகோதரி உறவைத் துறந்து, நட்பை இழந்து, சமுதாயத்தை மறந்து தனிமையாய் வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றனர். இவ்வாறு இருப்பவர்களில் பலர் வாழ்க்கை மீது வெறுப்படைந்து தவறான முடிவுகள் எடுக்கின்றனர். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மனிதன் மனிதனாக இல்லாமல் இருப்பதே முக்கியக் காரணம்.

தந்தை-பிள்ளை உறவு, சகோதரர்கள் உறவு, குடும்ப உறவு என்று உறவுகள் விரிந்து செல்கின்றன. மரபணுத் தொடர்புடைய இவை அனைத்தும் தற்காலத்தில் நன்றாக இருக்கின்றனவா என்று கேட்டால் பெரும்பாலும் இல்லை என்றே

பதில் வரும். இவை தவிர, தொழில்முறை உறவுகளும் உள்ளன. ஆனால், இந்த உறவுகளும் இப்போது பணத்துக்காகவும் பரஸ்பர தேவையின் அடிப்படையிலும் மட்டுமே செயல்பட்டு வருவதே உண்மை.

முன்பெல்லாம் உறவுகளில் ஏதேனும் நல்ல காரியங்கள் நடந்தாலும், துக்க காரியங்கள் நடந்தாலும் வண்டி கட்டிக் கொண்டு பல கிலோமீட்டர் தூரம் சென்ற காலம் உண்டு. ஆனால், இப்போது ஒருவர் காலமாகிவிட்ட தகவல் கிடைத்தால் “ஆர்ஐபி’ (ரெஸ்ட் இன் பீஸ்) என்று குறுந்தகவல் அனுப்புவதைப் பார்க்கிறோம். பிறந்த நாள் விழா குறித்த தகவல் கிடைத்தால் பலர் தேடிப்பிடித்து “பொம்மை’, “பூங்கொத்து’ படங்களை குறுந்தகவல் செய்தியில் இணைத்து வாழ்த்து அனுப்பிவிட்டு கடமையை முடித்துக் கொள்கின்றனர். இது தொழில்நுட்ப புரட்சியின் விளைவுதான் என்பதை மறுப்பதற்கில்லை.

உறவினர்கள், நண்பர்கள் பேசிக் கொள்வதும் சமீப காலமாக மிகவும் குறைந்து வருகிறது. உறவுகளும், நட்புகளும் இன்பம் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்வது அரிதாகி வருகிறது. இதனால், உறவு, நட்பு வலுவிழந்து விடுகிறது. இது நாளடைவில் தொலைந்தும்விடும்.

தனி மரம் தோப்பாக முடியாது. மனிதனுக்கு உறவுகள் மிகவும் அவசியம். உற்றார், உறவினர்கள் இல்லாமல் வாழ்வு இல்லையே. அப்படிப்பட்ட உறவினர்களும், நண்பர்களும் உண்மையானவர்களாக இருந்தால்தானே மனிதனின் வாழ்வு செழுமை பெறும்.

உறவில் வாழும் போது நல்ல முன்மாதிரியாக இருப்பது மிகவும் அவசியம். நல்லதொரு முன்மாதிரியைக் கொண்டிருக்காததால்தானே இன்றைய இளைஞர்கள் விளையாட்டு, சின்னத்திரை, வெள்ளித்திரை நாயகர்கள், நாயகிகளை தங்களது முன்மாதிரியாகக் கொண்டு மாய உலகில் வாழ்ந்து வாழ்க்கையை வீணாக்குகிறார்கள்.

மேலும், உடன் வாழ்வோர்களின் உறவும் சரிவர இல்லாமல் போவதாலும், நல்ல முன்மாதிரிகள் கிடைக்காமல் இளைஞர்கள் திசை மாறிச் செல்ல நேரிடுகிறது. இதனால், ஒட்டு மொத்த சமுதாயமே ஆரோக்கியமற்ற நிலைக்குத் தள்ளப்படுகிறது.

இன்பத்தை அனுபவிக்க எத்தனை, எத்தனையோ உறவுகள் கூடும். ஆனால், துன்பத்தை பகிர்ந்து கொள்வதற்கு எந்த உறவும் முன்வருவதில்லையே…! அண்ணன், தம்பி உறவுக்கு இலக்கணம் வடித்ததும், துன்பமான நேரத்தில் கை கொடுத்து உதவிய பக்தரை தம்பியாக்கியதும்தான் ராமாயணம் சொல்லும் பாடம். மாமனின் உறவுக்கு கோடிட்ட மகாபாரத்தின் கண்ணன் சொன்ன போதனையான “கீதை’ மனித குலத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

தேசம் மீது பாசம் கொண்ட காந்தியை “தேசத் தந்தை’ என்றுதானே அழைக்கிறோம். நேசம் கொண்ட மாமனிதரை “நேரு மாமா’, அறிவுரை வழங்கிய முதாட்டியை “ஒüவை பாட்டி’ என்கிறோம். அன்புக்கு இலக்கணம் கொடுத்த மாதரசியை “அன்னை தெரசா’ என்றுதானே உலகம் அழைக்கிறது. அருளைப் போதித்துவரும் போதகர்களை “அப்பா’, “சகோதரன்’ என்றே சொல்கிறோம். பணிவிடை செய்யும் பெண்ணை “சகோதரி’ என்கிறோம். இவ்வாறுதான் கற்காலத்திலும், அண்மைக் காலங்களிலும் உறவுகள் விரிந்தன. மனித வாழ்வு சிறக்க, நாடு செழுமை பெற உறவுகள் அவசியமாகிறது.

எனவே, உரசல்களை ஒதுக்கிவைத்துவிட்டு, கோபத்தைக் குறைத்து, நாக்கை அடக்கி, பகைமை பாராட்டாமல், இனிதான வாழ்கைக்கு உத்தரவாதம் தருவதாக ஒவ்வொருவரும் சபதமேற்போம். உறவுகளின் இணைப்பை, தொடர்பை விரிவுபடுத்துவோம்.

Wednesday 1 January 2014

``இன்பமே துன்பம்`` - இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...!




   
இன்பமே துன்பம்:-

நாம் நினைப்பது நடக்கவில்லை. விரும்பியது கிடைக்கவில்லை; சொல்லியவைகளை மற்றவர்கள் செய்து முடிக்கவில்லை. அப்போது உண்டாகும் மனநிலை கோபம், ஏமாற்றம்தான். அதன் தொடர்ச்சியாய் துன்பம். விரும்பிய உணவைச் சாப்பிடுகிறோம். இன்பமாக உள்ளது. அளவு முறை தெரியாமல் சாப்பிட்டால் அஜீர்ணம். வயிற்றுவலி, மலச்சிக்கல் எனத் துன்பப்படுகிறோம். தட்ப வெப்ப நிலை மாறுகிறது! உடல் நலம் குறைகிறது; துன்பமடைகிறோம். மற்றவர்களது பேச்சும், செயலும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத போது பெறும் மனநிலை துன்பம்.

மிக அரிதான ஒரு பொருளைத் தேடிப்பிடித்து, பெரும் விலை கொடுது வாங்கி உபயோகித்து வருவோம். அதுபோன்ற பொருள் திடீரென விலை குறைந்து விட்டால், அடடா நாம் அதிகம் கொடுத்து ஏமாந்து விட்டோமே அவசரப்பட்டு வாங்கிவிட்டோமே? எனப் பலவாறு எண்ணுவோம். வாங்கியபின் இதுவரை அதை உபயோகித்ததை மறந்துவிடுவோம். வைத்திருந்த பணம் அல்லது பொருள் நம்மிடம் வாங்கியவர்கள் அதைத் திருப்பித் தராவிட்டாலும் வருத்தப்பட்டு துன்பமடைகிறோம். பலவிதமான போட்டிகளில் கலந்து கொள்கிறோம். வெற்றி பெற்றால் இன்பம் அடைகிறோம். இல்லையென்றால் துன்பப்படுகிறோம்.

ஆராய்ந்து பார்த்தால் அளவுமுறை அதிகமானால் பெறும் உணர்வே துன்பம் என்று அறியலாம். அளவுக்குள் இருந்தால் இன்பம் சிறு உதாரணம் மூலம் பார்ப்போம். நியாயமான தேவைகளை நிறைவேற்றுமளவு பொருளாதார வசதியுள்ளது. அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றி இன்பம் அடைகிறோம். அளவுக்கு மீறிய சொத்து அல்லது பொருளாதார வசதி உள்ளது என்றால், அவைகளைப் பாதுகாத்தல் ஒருபுறம்; பராமரித்தல் மறுபுறம் என சிரமப்படும் நிலை உண்டாகும். நியாயமான வழிகளில் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை.

பஞ்சாப், ஆந்திரா போன்ற மாநிலங்களில் விமானநிலைய விரிவாக்கத்தால் பல விவசாயிகள் தங்கள் நிலங்களை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்றனர். வங்கியில் டெபாசிட் செய்தால், வரி செலுத்த வேண்டும் என்பதால், வீடுகளிலேயே பல இடங்களில் வைத்து பாதுகாத்தனர். வருமான வரித்துறையினர் சோதனையிட்டு, கண்டுபிடித்து, வரி வசூலித்து, மீதித் தொகையை எப்படி பாதுகாப்பதென ஆலோசனை கூறிய செய்தி நாளிதழ்களில் வந்தது. பணத்தை வீட்டில் வைத்து பாதுகாத்து துன்பமடைந்தனர். பணமும் இருந்தது. பயமும் இருந்தது. நடந்தது நடந்தது தான். ஒரு செயல் செய்கிறோம். அதனால் ஒரு பலன் கிடைக்கிறது. அது நாம் விரும்பியவாறு இருந்தால் மகிழ்கிறோம். இல்லாவிட்டால் வருத்தப்படுகிறோம். இதை நினைவில் கொண்டால் இனிவரும் காலங்களில் செய்யும் இது போன்ற செயல்களில் உஷாராக இருந்து நமக்கு எந்தவிதமான முடிவு வேண்டுமோ அதற்கேற்ப செயல்படுவோம். முன்னர் செய்த செயலையோ அதனால் பெற்றபலனையோ மாற்ற முடியாது. அதை ஒரு படிப்பினையாக கொள்ளலாம். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள், நடந்ததை நினைத்து வருத்தப்பட்டே துன்பம் அடைகிறோம். சுயபச்சாதாபம், கழிவிரக்கம் எனப்பலவாறு இதைக் கூறலாம். இந்த மனநிலை நம் வாழ்க்கையில் தன்னம்பிக்கையைக் குறைப்பதோடு, நம்மையும் பலவீனமாக்கிவிடும். நடந்தவைகள், நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவைகள், நல்லவையாக நடக்கட்டும். எனப் பெரியவர்கள் கூறியதை நினைவில கொள்ள வேண்டும், இல்லாவிட்டால, புலம்பல் மன்னர்களாகி விடுவோம்.

நடந்ததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால், நிகழ்காலத்திலும் வீட்டில் உள்ளோரிடம் சுமூகமான உறவு இருக்காது; ஏதாவது குறை கண்டு எரிந்து விழுவோம். நல்ல கண்ணாடி என்றால் உருவத்தை உள்ளவாறு பிரதிபலிக்கும். தரமில்லாத கண்ணாடி எனில், கோணல் மாணலாக உருவத்தை பிரதிபலிக்கும். ஆக, நாம் நடந்ததை நினைத்து நீண்ட காலம் வருந்தினால் தரமில்லாத மனிதர்களாகிவிடுவோம்.

தரமுள்ள மனிதன்

இதற்கு ஏதேனும் அளவுகோல் உள்ளதா? ஆடு, மாடு போன்றவைகளைச் சந்தைகளில் வாங்குபவர்கள் ஒரு சில சோதனைகளை செய்து திருப்தியடைந்த பின், அதற்கேற்றவாறு விலை கூறி வாங்குவர். அதுபோல, நம் மனித வாழ்வில் ஒவ்வொருவரையும் எப்படித் தரம் பிடிப்பது? திருவள்ளுவர் கை கொடுக்கிறார்.

தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப் படும்.


எச்சம் என்பது நமது வாரிசுகளல்ல. நமக்குப் பின், அதாவது நமது மறைவுக்குப் பின் என்றும் கூறலாம். நம்மிடம் கூறுவதற்கு சங்கடப்பட்டு நாம் ஓரிடத்திலிருந்து அகன்றபின் நம்மைப் பற்றிப் புகழ்ந்தோ, பழித்தோ கூறுவது ஒவ்வொருவரைப் பற்றியும் பலரும் பலவிதமாகக் கணித்து வைத்திருப்பர்.

இவர் கஞ்சன், பரோபகாரி, நியாயமான நபர், அடாவடித்தனத்துக்கு பெயர் பெற்றவர். சோம்பேறி, சிடுமூஞ்சி, சுறுசுறுப்பானவர், நேரம் தவறாதவர், சொன்னதைச் செய்பவர். கறார் மனிதர் எனப்பல பெயர்களை ஒருவரே கூடப் பலரிடம் பெறுமளவு நடவடிக்கைகளை இருக்கும். ஆனாலும் நாம் அதிகம் தொடர்பு கொள்ளும் மனிதர்கள் யார்? நம் குடும்ப உறுப்பினர்களும உடன் வேலை பார்ப்பவர்களும்தானே! இவர்களிடம் நம் அணுகுமுறை, பழக்கம எப்படி உள்ளது என்பதுதான் முக்கியம்.

ஒவ்வொரு பொருளுக்கும் தரத்தை சோதனை செய்து ISI முத்திரை இடுகின்றனர். மனிதனின் தரத்துக்கு சோதனை உண்டா? உண்டு. இதோ தரத்துக்கான சில சோதனைகள்.

திட்டமிட்ட செயல்பாடுகள்
அன்பான அணுகுமுறை
மற்றவர்கட்கு நல்ல முன்மாதிரியாக இருப்பது
அனுசரித்து விட்டுக் கொடுப்பது
பிறர் மனம் புண்படாமல் பேசுதல்
பிறர் தன்னிடம் எப்படி இருக்க வேண்டும்
என எண்ணுகிறாரோ, அதே போல்
மற்றவர்களிடம இருப்பது

இதுபோல் பல கூறலாம்.

தேவை மாற்றம்
மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பார்த்தால், மிருக உணர்வுகளில் இருந்து மனித நேயத்தை உணரவே பெரியோர்கள் தோன்றி உபதேசிக்க வேண்டியிருந்தது என்பதை அறியலாம். அவர்கள் மனிதருள் மாணிக்கமாய் ஒளி வீசுகின்றனர். தம் சேவையில் என்றும் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களது வாழ்க்கைமுறைகளைப் படித்துப் பார்த்தால், அவர்கள் அடைந்த துன்பங்கள், அவர்கள் இந்தச் சமுதாயத்திற்கு ஆற்றிய சேவைகள் போன்றவைகள் தெரியவரும். இவ்வளவு துன்பங்களுக்கிடையிலும், எப்படி அவர்களால் சாதிக்க முடிந்தது என பிரமிப்போம். உடல் குறைபாடுகளுடன் சாதனை புரிந்த ஹெலன் கெல்லர், வறுமையிலும் சாதனை புரிந்த பெர்னாட்ஷா, தாமஸ் ஆல்வா எடிசன் எனப் பலரைக் கூறலாம். நம் வாழ்நாளில் பலரையும் பார்த்திருப்போம்.

எளிமையாக வாழ்ந்து, பொது சொத்துக்கு ஆசைப்படாமல் நல்லாட்சி செய்த கர்மவீரர் காமராஜர், கடும் உழைப்பால் முன்னேறிய G.D. நாயுடு, சமூகத்தால் ஒதுக்கப்பட்ட உடல் ஊனமுற்றோருக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பளித்து அகில உலக அளவில் தங்கள் உறபத்திப் பொருட்களை விநியோகிக்கும் சக்தி மசாலா துரைசாமி சாந்தி போன்ற பலரைக் கூறலாம்.

நமது ஒவ்வொரு எண்ணமும், பேச்சும் செயலும் நம்முள் உறைந்துள்ள இறைநிலையான உள்ளுணர் அறிவால் தரம் பிரித்து நமக்கு அறிவிக்கப்படுகின்றன. அதனை ஏற்று செயல்பட்டால் துன்பமே கிடையாது. ஆனால், குறுகிய நோக்கத்தில், தற்காலிக இன்பத்துக்காக, விரைவில் வசதிகளைப் பெருக்க வேண்டுமென இந்த எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தி செயல்படுகிறோம். அதனால், பலர் உடனே இன்பமும் அடைவர்; ஆனால், அவை நீடித்த இன்பமல்ல. கடுமையான குளிரில் சிறு நெருப்பு கதகதப்பைத் தரும்; நெருப்பு அதிகரித்தால் வெப்பம் தாங்கமுடியாது; ஒரு தொலைவுக்கு அப்புறம் இருப்பதே பாதுகாப்பு. ஆனால், பணம், புகழ், புலன் இன்பம் இவற்றுக்கு நாம் எவ்விதமான தூரத்தையும் நிர்ணயிக்க மறந்து விடுகிறோம்.

தீயவை தீய பயத்தலால், தீயவை தீயினும் அஞ்சப்படும்; அதேபோல், பிறருக்கு துன்பம தரும் செயல்களை மறந்துகூட நினைக்கக்கூடாது. அப்படி எண்ணினாலே, எண்ணியவை அந்தத் துன்பமானது பிடித்துக்கொள்ளும் என பொய்யாமொழி மொழிந்துள்ளதை நினைவில் கொள்ள வேண்டும்.

சில குறிப்புகள்

பெரும்பாலான துன்பங்களுக்கு காரணம்; முழுமையான தகவல் தெரியாமலேயே ஒரு செயலைச் செய்வது; அல்லது பிறருடன் பழகுவது. எனவே, எந்த ஒரு செயலைச் செய்யும் முன்பும், அச்செயலைச் செய்து முடிப்பதற்குத் தேவையான தகவல்கள், இடையில் சந்தேகம் ஏற்பட்டால் நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் போன்றவைகளை அறிந்தபின் செயல்பட்டால் நம் வாழ்க்கை துன்பமில்லாததாக அமையும்.

புதிய நபர்களுடன் பழகும்முன் நம் ஆழ் மனதில் அவர்களுடன் பழகலாமா, வேண்டாமா என ஒரு கேள்வியைப் போட்டு விடை பெற்றபின் பழக்கத்தை நட்பாக மாற்றுவது துன்பம் தராது. தேவையெனில் நம் நலனில் அக்கறையுள்ளவர்களுடன் கலந்து பேசி, கருத்தறிந்து முடிவு செய்யலாம்.

எல்லோரையும், எல்லா நிகழ்வுகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனநிலை பெறவேண்டும். எந்தப் பொது நிகழ்வும் நமக்காக மட்டுமே நடப்பதில்லை. (உ-ம்) மழை, வீட்டுப் பகுதியில் குடிநீர் விநியோகத்தில் தடை, மின்தடை, பஸ் ஓடாத நிலை, விலைவாசி உயர்வு போன்றவை. ஆனால், நம் வீட்டில் மட்டும் தடையென்றால், உடனே செயல்பட்டு, புகார் செய்து சரிசெய்ய வேண்டும். நம் வீட்டுக் குழாய் பழுதானால் நமக்கு மட்டும் குடிநீர் வரவில்லையென்றால், உடனே சரிசெய்ய வேண்டும். பொதுவாக மற்றவர்களை மாற்ற முடியாது. ஆனால், வாழ்க்கை முழுவதும் நம்முடன் இணைந்து பயணிப்போர்களை நமது மனமாற்றத்தால் நாம் விரும்பியவாறு மாற்றமுடியும். அதற்கு அடிப்படைத் தேவை நமது மாற்றமே. இவ்வாறு செயல்பட்டால் இனி, எஞ்சிய காலத்தில் வாழ்க்கையைத துன்பமில்லாமல் வாழ முடியும். இன்பம் பெற தேவையான வசதிகள், அதன் அளவு முறைகள் இயற்கை வழங்கிய வாய்ப்புகளை இனி காண்போம். வாழ்க வளமுடன்!

தோல்வி என்றால்.....?



தோல்வி என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருள் அல்ல:நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்று பொருள்.


தோல்வி என்றால்,நீங்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல: சில பாடங்கள் கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்.


தோல்வி என்றால் நீங்கள் அவமானப்பட்டு விட்டதாகப் பொருள் இல்லை:முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் உள்ளது என்று பொருள்.


தோல்வி என்றால் உங்களிடம் சரக்கு இல்லை என்று பொருள் அல்ல:வேறு உத்திகளைக் கையாள வேண்டிய அவசியத்தை உணர்ந்து விட்டீர்கள் என்று பொருள்.


தோல்வி என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாகப் பொருள் இல்லை:மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பொருள்.


தோல்வி என்றால் விட்டு விட வேண்டும் என்று பொருள் அல்ல:இன்னும் செம்மையாக உழைக்க வேண்டும் என்று பொருள்.


தோல்வி என்றால் உங்களால் அடைய முடியாது என்று பொருள் அல்ல: அடையக் கொஞ்சம் தாமதமாகலாம் என்று பொருள்.


தோல்வி என்றால் கடவுள் உங்களைக் கை விட்டு விட்டார் என்று பொருள் இல்லை:உங்களுக்கு வேறு நல்ல எதிர் காலத்தை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறார் என்று பொருள்.

குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத சில!




1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

Tuesday 31 December 2013

ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது எது?




1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.

2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம்
" இதெல்லாம் எங்க உறுப்படப்போது? " என்பது
போன்றே இருக்கும்.

3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம் , அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.

4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும்
ரசிப்பீர்கள்.

5) உடல் பருமன் ஏறாமல் , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது.

6) தினமும் shave செய்யாவிட்டால் , வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.

7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்.

உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?

9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.

10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ , அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.

11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.

12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.

13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள்.காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் .

14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.

15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.

# எந்த அளவுக்கு துல்லியமாய் எழுதி இருக்கிறேன் என்றுத் தெரியாது.இதைப் படிக்கையில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

தூக்கமும் நீங்களும்...




உலகில் சரிபாதிப் பேர், நிம்மதியான உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இருட்டு- வெளிச்சம், இன்பம்- துன்பம், கஷ்டம்- நஷ்டம், நன்மை- தீமை, சந்தர்ப்பம்- சூழ்நிலை இவற்றோடு சம்பந்தப்பட்டது, தூக்கம். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தூக்கத்தை வரவழைக்க முடியாது.


அதேமாதிரி நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் வருகிற தூக்கத்தை நிறுத்தவும் முடியாது. தூக்கமின்மை, அதாவது போதிய நேரம் தூங்காததை மருத்துவ மொழியில் ‘இன்சோம்னியா’ என்று சொல்கிறார்கள். தூங்கப்போவதற்கு முன்பு தீவிரமான யோசனை, மூளையைக் கசக்கி சிந்திப்பது என்று சொல்வார்களே,


அந்த மாதிரி எண்ணங்கள் உருவாவது, உடலை அதிகமாக வருத்திக்கொள்வது, உடலுக்கு அதிகமாக வேலை கொடுப்பது, தூங்கும் இடம் ஒரு நல்ல சூழ்நிலையில் அமைந்திராமல் இருப்பது, தூங்கும் நேரம் ஒத்துப் போகாமல் இருப்பது, நாள்பட்ட உடல் நோய்கள், தாங்க முடியாத வலி, மன அழுத்தம்,


மன உளைச்சல் இவை அனைத்துமே தூக்கத்தைப் பாதிக்கும். தூக்கத்தை வரவழைக்க பலரும் பலவித முறைகளைக் கையாளுகிறார்கள். சிலர் யோகா செய்கிறார்கள். சிலர் தியானம் பண்ணுகிறார்கள். சிலர் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள்.


சிலர் மது அருந்துகிறார்கள். இப்படி பலவிதமான முறைகளைக் கையாண்டு தூக்கத்தை வரவழைக்கிறார்கள். தூக்கமின்மைக்கும் மதுவுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு. மது அருந்தினால் நல்ல தூக்கம் வரும் என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள்.


தூக்கம் வர வேண்டும் என்பதற்காகவே மதுபானம் அருந்த ஆரம்பித்தவர்கள் நிறைய பேர். ஆரம்பத்தில் மதுபானம் நல்ல தூக்கத்தைத் தருவதைப் போலத் தோன்றினாலும், நாளடைவில் அது தூக்கத்தைக் குலைக்கும். முன்னிரவில் தூக்கத்தை கொடுத்து பின்னிரவில் தூக்கத்தைக் கெடுத்துவிடும் தன்மையுடையது மது பானம்.


மேலும் கண்கள் சுற்றிக்கொண்டே தூங்கும் தூக்கத்தையும் (ஆர்.இ.எம். தூக்கம்) மது குறைத்து விடும். வயதானவர்களுக்கு ஒரு சிறிய சத்தம் கூட தூக்கத்தை கெடுத்துவிடும். அதற்குப் பிறகு தூக்கத்தை வரவழைக்க அவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.


மறுபடியும் தூங்குவதற்கு ரொம்ப நேரம் ஆகும். மனிதனுடைய பழக்கவழக்கங்களை அலசி ஆராய்ந்து பார்த்தால் தூக்கத்தைப் பற்றிய பலவிதமான விஷயங்கள் நமக்குத் தெரியவருகின்றன. செயற்கை வெளிச்சங்கள் அதிகமில்லாத பழைய காலத்தில், சூரியன் மறைந்த கொஞ்ச நேரத்திலேயே தூங்கப் போய்விடுவார்கள்.


ஆனால் இரவில் நிறைய தடவை விழிப்பார்கள். மறுபடியும் தூங்குவார்கள். முன்னிரவில் ஆழ்ந்த தூக்கமும், பின்னிரவில் லேசான தூக்கமும் இவர்களுக்கு இருக்கும். பின் னிரவில் கண்கள் சுற்றும் (ரேபிட் ஐ மூவ்மெண்ட்) தூக்கமும் இவர்களுக்கு இருக்கும். தூங்குகிற நேரத்தில் உடம்பும், மூளையும் வேலை பார்ப்பதில்லை, இரண்டும் ஓய்வெடுக்க ஆரம்பித்து விடும் என்று நீங்கள் நினைக்கலாம்.


இது சரியல்ல. நாம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும், விளையாடிக் கொண்டிருந்தாலும், படித்துக் கொண்டிருந்தாலும் நமது மூளை ‘பிசி’யாக வேலை பார்த்துக் கொண்டு தான் இருக்கும். நமக்கு தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படும் நேரத்தில், மூளையும் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும்.


ஆனால் ஓரளவுதான் மூளை ஓய்வு எடுத்துக் கொள்கிறது. நாம் தூங்கும்போது மூளை அதுபாட்டுக்குச் செயல்பாட்டில் இருக்கிறது. அன்றைய பொழுதுக்கும், அடுத்தடுத்த நாட்களுக்கும் உங்களை தெம்பாக வைக்க, உங்களை தேக ஆரோக்கியத்தோடு உற்சாகமாக வைக்க, உடலுக்குள் என்னென்ன ரசாயன மாற்றங்கள் பண்ண வேண்டுமோ அதையெல்லாம் பண்ணி, உடம்பை மூளை தயாராக வைத்திருக்கிறது.

ஊர்ப் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வருவது....?




பழனி – பஞ்சாமிர்தம்

திருநெல்வேலி – அல்வா

காரைக்குடி – செட்டிநாடு வீடு

கீழக்கரை -லோதல் , வட்டிலப்பம்

பண்ருட்டி – பலாப்பழம்

மணப்பாறை – முறுக்கு

சேலம் – மாம்பழம்

திண்டுக்கல் – பூட்டு

திருப்பூர் – பனியன்

மதுரை – குண்டு மல்லி

சென்னை – மெரினா

சிவகாசி – பட்டாசு

நாமக்கல் – முட்டை

தஞ்சாவூர் – தட்டு

பேரையூர் – பருப்பு சாதம்

நமணசமுத்திரம்- வெள்ளரிக்காய்

பிள்ளையார்பட்டி- அப்பம், மோதகம்

மன்னார்குடி – மதில்

திருவாரூர் – தேர்

கும்பகோணம் – கோவில், வெற்றிலை

திருச்சி – மலைக்கோட்டை

மேட்டூர் – அணைகட்டு

வேலாகண்ணி – மாத கோவில்

சேலம் – இரும்பு

கோவை – பஞ்சு

திருவிடைமருதூர்- தெரு

காஞ்சிபுரம் – பட்டு

குற்றாலம் – அருவி

கொல்லிமலை – தேன்

கோட்டக்கல் – ஆயுர்வேதம்

சிதம்பரம் – ரகசியம்

நீலகிரி – தேயிலை

ராஜபாளையம் – நாய்.

முதுமலை – யானை

கோவில் பட்டி – முறுக்கு

பத்தமடை – பாய்

ஸ்ரீவில்லிபுத்தூர் – பால்கோவா

அலங்காநல்லூர் – ஜல்லிக்கட்டு

திருவண்ணாமலை – தீபம்

வளையப்பட்டி – தவில்

திருச்செந்தூர் – வேல்

கன்னியாகுமரி – வள்ளுவர் சிலை

ஒக்கேனேக்கல் – நீர்வீழ்ச்சி

இராமேஸ்வரம் – பாம்பன் பாலம்

கரூர் – கோரைப்பாய்

ஊத்துக்குளி – வெண்ணெய்.

சென்னிமலை – பெட்சீட்.

குமாரபாளையம் – லுங்கி.

சிவகாசி – லித்தோ பிரஸ்(அச்சகம்), வெடி

ஈரோடு – மஞ்சள்.

காங்கேயம் – காளை மாடு

செஞ்சி – கோட்டை

பாளையங்கோட்டை – சிறைச்சாலை

உடையார்பாளையம் — ஜமீன்,கோயில்

வந்தவாசி -கூரைபாய்

கல்பாக்கம் - அனல் மின் நிலையம்

சிவகாசி - காலண்டர்

நினைவாற்றலை வளர்ப்பது எப்படி?




நினைவாற்றல் பற்றி மனோதத்துவ நிபுணர்கள், மூளை ஆராய்ச்சியாளர்கள், கூறுகிற கருத்து பின்வருமாறு:


“நினைவாற்றல் என்பது ஒரு திறமை. சரியில்லாத நினைவாற்றல் என்ற ஒன்று இல்லை. தக்க பயிற்சிகளின் மூலம் யாரும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முடியும்”.

நினைவாற்றல்நன்றாக இருப்பதற்கு ஆறு முக்கிய கோட்பாடுகள் காரணமாக இருக்கின்றன. அவை;


      1. தன்னம்பிக்கை
      2. ஆர்வம்
      3. செயல் ஊக்கம்
      4. விழிப்புணர்வு
      5. புரிந்துகொள்ளல்
      6. உடல் நலம்.


இவை ஒவ்வொன்றைப் பற்றியும் சிறிது விளக்கமாகப் பார்க்கலாம்.

1. தன்னம்பிக்கை (Self Confidence)


“என்னால் செய்திகளை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். எனது மூளைத்திறன் நன்றாக இருக்கிறது. எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறது” என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். “நான் எப்படித்தான் இவற்றையெல்லாம் படித்து நினைவில் வைக்கப் போகிறேனோ, எனக்கு ஞாபக சக்தியே சற்று குறைவாகத்தான் இருக்கிறது. அடிக்கடி எனக்கு மறந்து போய்விடுகிறது” - என்று தங்களைப் பற்றியே தாங்கள் கொள்கின்ற அவநம்பிக்கையை விட வேண்டும்.

“நினைவாற்றல்” என்பது மூளையின் ஒரு திறமை. அதனை பயன்படுத்தப் பயன்படுத்த, பயிற்சியாலும் முயற்சியாலும் அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ள முடியும். இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக்கொண்டு, நினைவாற்றலை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டால் அற்புத நினைவாற்றல் பெறமுடியும்!

2.ஆர்வம் (Interest)

ஆர்வம் காட்டுகிற விசயங்கள் நினைவில் நன்றாகப் பதியும். இயற்கையாக ஆர்வம் இல்லாவிட்டால் கூட ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு கவனித்தால், பதியவைத்தால் நினைவில் நிற்கும்.

3. செயல் ஊக்கம் (Motivation)


இந்தச் செய்திகளை ஏன் நான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு எவ்வகையில் இது பயன்படும் என்று உங்களோடு இணைத்து தெளிவுபடுத்திக் கொண்டால் செய்திகள் நன்றாகப் பதியும்.

உதாரணத்திற்கு “ஹோட்டல் ரெசிடென்ஸிக்கு நாளை காலை 4 மணிக்கு நீங்கள் வந்தால் உங்களுக்கு 5 லட்ச ரூபாய் கொடுக்கப்படும்” என்று ஒருவர் உங்களிடம் சொன்னால் நீங்கள் மறந்து விடுவீர்களா?

தேவையை, அவசியத்தை நன்றாக உணர்ந்த விசயங்கள் நன்றாகப் பதிகின்றன.

4. விழிப்புணர்வு (Awareness)


மனம் விழிப்பு நிலையில் இருக்கும்பொழுது கவனமும், ஒருமைப்பாடும் மிகச்சிறந்து இருக்கும் விழிப்புணர்வு அதிகரிக்க தியானப் பயிற்சிகளும், யோகாசனப் பயிற்சிகளும் துணைபுரியும்.

உங்களுக்குப் பிடித்த எந்த அமைப்பின் மூலமும் இவற்றைக் கற்று முறைப்படி பயிற்சி செய்தால் மனத் தெளிவும், அமைதியும், விழிப் புணர்வும் பெறலாம். வேதாத்திரி மகரிஷி அவர் களின் பயிற்சிகளும், சமர்ப்பண் - வாழும் கலைப் பயிற்சிகளும், ஈசா யோக மையப் பயிற்சிகளும், ஓசோ ரஜினிஷ் பயிற்சிகளும், கிருஷ்ணமாச்சார்ய யோகமந்திரம் (சென்னை) முதலிய அமைப்பு பயிற்சிகள் விஞ்ஞானப்பூர்வமானதாக அற்புத மானவையாக இருக்கின்றன.

5. புரிந்துகொள்ளல் (Understanding)

புரிந்து கொண்ட விசயங்கள் நினைவில் நன்றாக இருக்கின்றன. புரியாவிட்டால் - தெரியாவிட்டால் கூச்சம், அச்சம், தயக்கம் இல்லாமல் ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? எங்கு? யார்? …………………….. என்று கேள்விகளைக் கேட்டு புரிந்து கொள்ளுங்கள்.

6. உடல் ஆரோக்கியம் (Health)
உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது நினைவாற்றல் நன்றாக இருக்கும். ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு தளர்ந்திருக்கும் நேரத்தில் செய்திகளை நினைவில் வைப்பதே சிரமமாக இருக்கும். ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்த ஓட்டம், காற்றோட்டம் சென்று மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக்கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top